கூட்டாஞ்சோறு எங்களுடைய இன்னொரு ப்ளாக். இங்கே சினிமாவைத் தவிர என்ன வேண்டுமானாலும் எழுதுவோம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் திடீரென்று கொஞ்ச நாள் ஒன்றும் எழுதாமலும் இருப்போம்.

மேஜர் சந்திரகாந்தாக மேஜர்

மேஜர் சந்திரகாந்தாக மேஜர்

விகடனுக்கு மேஜர் அளித்த பேட்டி. நன்றி விகடன்!

அப்பா வேடத்தில் நடிப்பது பற்றி நான் கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை. கதாநாயகனாக நடிப்பதில் கிடைக்கும் புகழும் பெருமையும் அப்பா வேடத்திற்குக் கிடைக்காது என்ற அச்சம் எனக்கு இருந்தது. சர்வர் சுந்தரம் படத்தில் அப்பா வேடத்தில் நடிப்பதற்காக எனக்கு அழைப்பு வந்தது. முன்னுக்கு வரத் துடித்த எனக்கு அப்பா வேடத்தை ஏற்கலாமா, வேண்டாமா என்ற நினைப்பு. அப்போது, டைரக்டர் கே.சி.கே., “அப்பா வேடம் ஏற்பதில் தயக்கம் காட்டாதே! இப்போதுள்ள நிலையில் இந்த வேடத்திற்குதான் அதிகம் போட்டியில்லை. கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றால், நிறைய போட்டிகள் இருக்கிறது. அப்பா வேடத்திற்கு என்ன குறைச்சல்? உன் உடலமைப்புக்குப் பணக்கார அப்பா வேடம்தான் கிடைக்கும். அழகான டிரஸ் இருக்கும். ஏதாவது ஒரு காட்சியில் அழ வேண்டியிருக்கும். குறைந்த கால்ஷீட்தான். சண்டைக் காட்சிகள் இருக்காது. தயங்காமல் ஒப்புக் கொள்” என்றார்.

அன்று ஆரம்பித்த அப்பா வேடம்தான். கதாநாயகனாக நடிக்க வந்த எனக்கு அப்பா வேடம் கிடைத்ததும் ஒருவகை அனுபவம்தான்.

நான் நடித்த முதல் படம் பட்டினத்தார், அதில் எனக்கு ராஜா வேடம். படப்பிடிப்பின் போது ராஜாக்கள் போடும் செருப்பு இல்லாததால், எங்கெங்கோ தேடி செருப்பைக் கொண்டு வந்தார்கள். அது என் காலுக்குப் பெரிதாக இருந்தது. காலுக்குத் தகுந்தபடி செருப்பை வெட்டி, என்னை நடிக்கச் செய்தார்கள்.

என் முதல் படத்திலேயே ஒரு அனுபவத்தைத் தெரிந்து கொண்டேன். காட்சியில் எந்த ஒரு குறை வந்தாலும், ஆரம்ப நிலையிலுள்ள நடிகனைத்தான் வந்து சேரும் என்பதுதான் அது.

நாடகத்தில் எவ்வளவுதான் சிறந்த முறையில் முக பாவம் காட்டினாலும், சினிமாவில் பாராட்டுப் பெறுவது போல் நாடகத்தில் பெற முடியாது என்பதை நாணல் படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். திரைப்படத்தில் ஒரு சிறிய கண்ணசைவைக் கூட குளோஸ் அப் மூலம் காட்டிப் பாராட்டுதலைப் பெற முடியும்.

மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் நடிப்பதற்காக வாசன் என்னை அழைத்திருந்தார். வேடத்தைப் பற்றி என்னிடம் சொன்னார். “என் பாத்திரம் மிகச் சிறியதாக இருக்கிறது. பல படங்களில் பெரிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்” என்றேன்.

அதற்கு வாசன், “மீதிப் படங்களைப் பார்த்துவிட்டு, இப்படத்தில் நடிக்க உன்னை நான் அழைக்கவில்லை. வாழ்க்கைப் படகு படத் தில் வக்கீல் வேடத்தில் நடித்தபோது உன் நடிப்பை எடை போட்டுவிட்டேன். இந்தப் படத்தில் நீ நடிப்பது சிறிய பாத்திரமானாலும் சிவாஜியுடன் நடிக்கப் போகிறாய். உனக்கு அது மேலும் பெயரைக் கொடுக்கும். பேசாமல் நடி!” என்றார். படம் முடிந்து திரையிடப்பட்டதும், ‘சிவாஜியுடன் சிறப்பாக நடித்த நடிகர் யார்?’ என்ற கேள்வி படம் பார்த்தவர்களின் மனதில் எழுந்தது. அப்பொழுது வாசன் சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு மீண்டும் நினைவுக்கு வந்தன. என்னால் மறக்கமுடியாத அனுபவங்களில் இதுவும் ஒன்று.

நான் கதாநாயகனாக நடித்த படம் மேஜர் சந்திரகாந்த். ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் என்னை “இன்னும் ஒரு படத்தில்கூட கதாநாயகனாக ஏன் நடிக்கவில்லை?” என்று கேட்கிறார்கள். தமிழ்த்திரை உலகத்தில் யார் கதாநாயகியுடன் டூயட் பாடி, கடைசியில் மணந்து கொள்கிறானோ, அவனே கதாநாயகன் என்று ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.

தெய்வ மகன் படத்தின் மூலம் நான் சிறந்த நடிகன் என்ற தமிழக அரசின் பரிசைப் பெற்றேன். அந்தப் படத்தில்தான் சிவாஜியோடு போட்டி போட்டுக்கொண்டு சிறப்பாக நடித்தேன் என்ற ஏகோபித்த பாராட்டுதல் கிடைத்தது. என்னை ஊக்குவித்த அப்படத்தின் டைரக்டர் திரிலோகசந்தரை என்னால் மறக்க முடியாது.

நான்கு படங்களில் நான் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடித்திருந்தாலும் ரிக்ஷாக்காரன் படத்தின் மூலம்தான் எம்.ஜி.ஆர். ரசிகர்களிடம் ‘சுந்தர்ராஜனும் நடிக்கிறார்’ என்ற பாராட்டைப் பெற்றேன். இந்த அனுபவம் என்னால் மறக்க முடியாதவற்றில் ஒன்று.

மேஜர் திறமை வாய்ந்த நடிகர்தான். அதுவும் ஒரு கண்டிப்பான மூத்தவர் ரோல் அவருக்காகவே படைக்கப்பட்டது. அவரது ஆஜானுபாகுவான தோற்றம், குரல் அவருக்கு ப்ளஸ் பாயிண்ட்கள். ஆனால் மேஜர் சந்திரகாந்தில் முறுக்கிய உடலை, முறைத்த கண்ணை, அவர் கடைசி வரைக்கும் இளக்கவே இல்லை. அந்த டெம்ப்ளேட்டையே பல படங்களில் – நீர்க்குமிழி, மோட்டார் சுந்தரம் பிள்ளை, எதிர் நீச்சல், நவக்ரஹம், தெய்வ மகன், ஞான ஒளி – அவர் திருப்பி திருப்பி பயன்படுத்தினார். அவரது இயக்குனர்களும் பெரும்பாலும் அதைத்தான் கேட்டார்கள், அதனால் அவர் மீதுதான் தவறு என்று சொல்ல முடியாது. பல படங்களில் மிகை நடிப்பு வேறு. ஒரு திறமை வாய்ந்த இயக்குனர் இல்லை என்றால் அவரது மிகை நடிப்பை கட்டுக்குள் வைக்க முடியாது.காலம் போக போக he just sleepwalked through his roles. அவரது ரோல்களுக்கும் காலம் செல்ல செல்ல ஸ்கோப் குறைந்து கொண்டே போனது.

அவரை நன்றாக பயன்படுத்தியவர் பாலச்சந்தர்தான். எழுபதுகளில் ஏனோ அவர் பாலச்சந்தர் படங்களில் நடிப்பது நின்று போனது.

பின்னாளில் இயக்குனராகவும் ஓரளவு வெற்றி பெற்றார். அது அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ். கல் தூண் நன்றாக ஓடியது. ஒரு பத்து பதினைந்து படங்களை இயக்கி இருப்பார். அந்த ஒரு நிமிடம், இன்று நீ நாளை நான் ஆகிய படங்கள் நினைவு வருகின்றன.

நல்ல நாடகங்களை போட்டார். ஞான ஒளி, கல் தூண் போன்றவை அவர் அரங்கேற்றியவைதான். அவரது நாடகங்கள் சென்னை சபா சர்க்யூட்டுக்கு வெளியேயும் வெற்றி பெற்றன.

ஒரு திறமை வாய்ந்த நடிகர் ஒரு டெம்ப்ளேட்டுக்குள் அடங்கிப் போனது துரதிருஷ்டம்.

அந்த நாள் ஞாபகம் வீடியோ தேடி பார்த்தேன், கிடைக்கவில்லை. வரவு எட்டணா பாட்டு

மேஜரின் நடிப்பு மிக நன்றாக இருந்த படங்கள்:
மேஜர் சந்திரகாந்த்
நீர்க்குமிழி
பாமா விஜயம்
எதிர் நீச்சல்
நவக்ரஹம்
ஞான ஒளி
உயர்ந்த மனிதன்
அபூர்வ ராகங்கள்

நினைவு வருவது அவ்வளவுதான். நீங்களும் உங்களுக்கு பிடித்த படங்களை சொல்லுங்களேன்!

மேஜர் குறிப்பிடும் டைரக்டர் கே.சி.கே. யார்? யாருக்காவது தெரிகிறதா?

தொடர்புடைய பிற பதிவுகள்:
மேஜர் சந்திரகாந்த்
மோட்டார் சுந்தரம் பிள்ளை
நீர்க்குமிழி
எதிர் நீச்சல்
நவக்ரஹம்

avargal

1977ல் வந்தது.

அவர்கள் மூன்று ஆண்கள், ஒரு பெண். ஆண்கள் – ரஜினி காந்த், ரவிகுமார், கமல்ஹாசன். பெண் – சுஜாதா.மூவரும் சுஜாதாவுடன் தொடர்புடையவர்கள். ரஜினிகாந்த் சாடிஸ மனப்போக்குடைய மாஜிக் கணவன். ரவிகுமார் மென்மையான மனப்போக்கு கொண்ட மாஜிக் காதலன். கமல் அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் கேரள “அசடு”.

வீட்டில் மனைவிடம் குத்தல், குதர்க்க வார்த்தைகள், மற்றும் சுடுசொற்கள் பேசும் ஈவிறக்கமற்ற கே.ராமனாதன் (ரஜினி), பம்பாய் அலுவலகத்தின் ஏரியா மானேஜர். அவர் திருமணம் செய்வது மனைவியை கொடுமைப்படுத்தவே என்பது போல் சித்தரிப்பது சிறிது உதைக்கிறது. ஏற்கனவே ஒருவரை நேசித்தபெண் என்று தெரிந்தே அனுபாமாவை திருமணம் செய்துகொள்கிறார்.பின் ஏன் கொடுமைப்படுத்துகிறார் என்பது பாலசந்தருக்கே வெளிச்சம். ரஜனி வழக்கமான ஸ்டைலுடன் அசத்துகிறார். வில்லன் ரோல், காமடி ரோல் இவை இரண்டிலும் ரஜினி சோடை போனதில்லை. இதிலும் அப்படித்தான். கதாபாத்திரத்தின் மேல் வெறுப்பை மிக அற்புதமாக வரவழைத்திருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு. (என் மனைவிக்கு மிஸ்டர். ராமனாதன் மேல் வந்த ஆத்திரத்தைப் பார்த்து அதை ஊர்ஜிடப்படுத்த முடிந்தது.) சட்டரீதியாக விவாகரத்து பெற்று, மன ரீதியாக ஜீவனாம்ஸமும் வேண்டாம் என்று அனு கூறிவிட, ராமனாதன் சந்தோஷமாக தன் வழியே போவதை விட்டு விட்டு தன் ஜென்மத்தின் தலையாய குறிக்கோள் அனுவை மாஜிக் காதலனுடன் சேர விடாமல் இருப்பதே என்று கங்கனம் கட்டுவது திரைக்கதையில் பெரிய ஓட்டை.

பரணியை (ரவிக்குமார்) ஏதோ வேறு ஒரு திரைப்படத்தில் பார்த்திருக்கிறேன். சட்டென்று நினைவிற்கு வரவில்லை. பாவமான முகத்தை வைத்துக் கொண்டு ஒரு ஜெண்டில்மேன் ஆக வந்து போகிறார். அவர் முக்கிய கேள்விகளுக்கு சிம்பாலிக்காகவே பதில் சொல்வதில் (டெலிபோன் மூலமாக, அனுவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்பதை ஷேவ் செய்து கொண்டு வருவது மூலம் சொல்வது)பாலசந்தருக்கே உரித்தான டச் தெரிகிறது. மாஜிக் கணவன் மீண்டும் வரும் பொழுது தான் ஒதுங்கிக் கொள்வது பரணிக் கேரக்டருக்கு மேலும் மெருகு சேர்க்கிறது. புல்லாங்குழல் ஊதும் பொழுது ஒருவித போஸில் நிற்பது கொடுமையாக இருக்கிறது. பிங் பாங் விளையாடுவதைப் பார்க்கும் பொழுது இவர் நிஜமாகவே இது நிறைய விளையாடியிருப்பார் என்று தோன்றுகிறது. அருமையான் ஸ்மாஷ் ஸ்டைல்கள். எதிரில் ரஜினி கொடுமையாக விளையாடிக் கொண்டிருப்பார்.

ஜனார்த்தன் – சுருக்கமாக ஜானி சீனியர் – கமல்; ஜானி ஜூனியர் – கமலின் பொம்மையும், வெண்டிரிலோக்விஸமும். ஜானி ஜூனியர் பாலசந்தர் முத்திரை. சீனியர் எப்படா அனு மெட்ராஸ் வருவார் என்று காத்திருந்தவர் போல் உதவுகிறார். மனைவியை ஸ்டவ் பலியாக்கியது முதல் கும்மிடி அடுப்பு தான் உபயோகப்படுத்துவதாக கூறுகிறார். சொதப்பல். திருவனந்தபுரம் புறப்படும் அனுவிடம் தன் காதலுக்கு சாதகமாக பதில் வந்துவிடாதா என்று கடைசிவரை ட்ரெயின் ஜன்னலில் தோன்றி தோன்றி மறைவது அருமையான சீன். அழுத்தக்கார அனு பதிலே பேசாமல் ஏமாற்றிவிடுகிறார். ஆனால் மிகவும் பிராக்டிகல். ஜூனியர் மூலமாக தன் காதலை வெளிப்படுத்தியும் திரைக்கதையின் வசதிக்காக அனு புரிந்துகொள்ளாமல் இருந்துவிடுவது பரணியுடன் மறைமுகமாகவே அதாவது சிம்பாலிக்காகவே சம்பாஷனை செய்யும் அனு காரக்டருக்கு பொருந்தவில்லை. அப்பாவி ஜானி சீனியர் ரோலில் கமல் அலட்சியமாக ஜமாய்த்திருக்கிறார்.

அனுபாமா (சுஜாதா) மிகுந்த புத்திசாலியாக அறிமுகப்படுத்தப்படுகிறார். பின் உண்மையில் ஒரு முட்டாள் பெண் என்று ராமனாதனின் அம்மா எல்லோருக்கும் புரிய (?) வைத்துவிடுகிறார். முற்போக்கிற்கும், பாரம்பரியத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு முட்டாள் என்ற பெயர் பொருத்தம் நியாயம் அளிக்காது. எதற்க்கும் அழாத அனு கடைசியில் தன் சுகங்களை துறந்து தன்னுடன் திருவனந்தபுரம் கிளம்பிவிடும் மாமியாரின் மேன்மையான, மென்மையான குணத்த்திற்கு அணையை உடைத்து விடுகிறார்.

ராமனாதனின் அம்மா – (யாரிவர்? – லீலாவதி என்று பெயர் பார்த்தேன்)  குற்ற உணர்ச்சி மிக்க மாமியார். மகன் செய்யும் கொடுமைகளுக்கு இவர் வேலைக்கார ஆயாவாக வந்து பிராயசித்தம் செய்துகொள்கிறார். பாத்திரம் கற்பனைக்கு நன்றாக இருக்கிறது.பெண்களை நிச்சயம் கவரும். ஆமாம். எல்லாருக்கும் தலை சிறந்த மாமியார் கிடைப்பது என்பது கற்பனையுடன் நின்று விடுகிறது.

கே.பாலச்சந்தரின் டிலெம்மா இதுவே. சட்டபூர்வமாக விவாக ரத்து ஆன பெண், மத பூர்வமாக திருமணத்தின் போது கணவனால் கட்டப்பட்ட தாலியை என்ன செய்யவேண்டும்? போனால் போகட்டும் என்று கழுத்திலேயே விட்டுவிடுவதா? மறுமணத்திற்கு இடைஞ்சல் கொடுக்குமே? கடைசியில் கோவில் உண்டியலில் விடைப் பெற்றுவிடுகிறார்.

”இப்படிஓர் தாலாட்டு”, ”ஜூனியர் ஜூனியர், இரு மனம்” மற்றும் “காற்றுக்கென்ன வேலி” பாடல்கள் கேட்கும் படியாக இருக்கிறது.  அனைத்துப் பாடல்களையும் SPB, S.ஜானகி மட்டுமே பாடியிருக்கிறார்கள்.  M.S. விஸ்வனாதன் இசை.

பாலச்சந்தர் கிளாசிக்.

10க்கு 6.

பாஸ்டன் பாலாவுக்கு மீண்டும் நன்றி!

அஞ்சும் ராஜாபலியின் லிஸ்டும் என் குறிப்புகளும். அஞ்சும் ராஜாபலி யார்? யாருக்கு தெரியும்? பாஸ்டன் பாலா சொன்னால்தான் உண்டு. வர வர யார் லிஸ்ட் போட்டாலும் அதை பற்றி எழுதிவிடுகிறேன்!

அனேகமாக திரைக்கதை ஆசிரியர் என்று நினைக்கிறேன். அவரது எல்லா குறிப்புகளும் திரைக்கதையை பற்றி பேசுகின்றன.

1. சைனாடௌன் (Chinatown) – ஜாக் நிக்கல்சன் நடித்த புகழ் பெற்ற படம். எனக்கு பெரிதாக பிடிக்கவில்லை.

2. காசாப்ளாங்கா (Casablanca) – மிக அருமையான காதல் படங்களில் ஒன்று. பார்க்க வேண்டிய படம்.

3. 12 ஆங்ரி மென் (12 Angry Men) – நல்ல படம். ஹென்றி ஃபோண்டா அருமையாக நடித்திருப்பார்.

4. இட்’ஸ் எ வொண்டர்ஃபுல் லைஃப் (It’s a Wonderful Life) – ஒவ்வொரு கிருஸ்துமஸ்போதும் அமெரிக்க டிவியில் போட்டுவிடுவார்கள். சுமாரான படம்தான். இது வரைக்கும் நான் அங்கும் இங்குமாகத்தான் பார்த்திருக்கிறேன், முழுதாக உட்கார்ந்து பார்க்கவில்லை.

5. ஃப்யுஜிடிவ் (Fugitive) – ஹாரிசன் ஃபோர்ட் நடித்த த்ரில்லர் படம். இதெல்லாம் பார்த்து மறந்துவிடும் படங்கள்தான்.

6. விட்னஸ் (Witness) – பார்த்ததில்லை.

7. ஜோடியாக் (Zodiac) – பார்த்ததில்லை.

8. அமோறேஸ் பெர்ரோஸ் (Amores Perros) – பார்த்ததில்லை

9. சில்ரன் ஆஃப் ஹெவன் (Children of Heaven) – டிவிடி எடுத்து வைத்திருக்கிறேன், பார்க்க வேண்டும்.

10. எடர்னல் சன்ஷைன் ஆஃப் த ஸ்பாட்லெஸ் மைண்ட் (Eternal Sunshine of the Spotless Mind) – பார்த்ததில்லை.

11. பிக் ஃபிஷ் (Big Fish) – பார்த்ததில்லை

12. ஸ்வீட் சிக்ஸ்டீன் (Sweet Sixteen) – பார்த்ததில்லை

13. டெட் கல் (Dead Girl) – பார்த்ததில்லை

14. மெஷினிஸ்ட் (Machinist) – பார்த்ததில்லை

15. க்ரோநிகாஸ் (Cronicas) – பார்த்ததில்லை

16. நோ மேன்’ஸ் லாண்ட் (No Man’s Land) – பார்த்ததில்லை.

17. அமேடியஸ் (Amadeus) – நல்ல படம். இசை மேதை மொசார்ட்டை பற்றியது.

18. வெர்டிக்ட் (Verdict) – பார்த்ததில்லை

19. பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ் (Battle of Algiers) – பார்த்ததில்லை.

20. தீவார் – மிக நல்ல படம். அருமையான திரைக்கதை, நல்ல நடிப்பு. க்ளிஷேக்களை வைத்தே நல்ல படத்தை உருவாக முடியும், திரைக்கதைதான் தேவை என்பது இந்த படத்தை பார்த்தல் புரிந்து கொள்ளலாம்.

21. ஆக்ரோஷ் – பார்த்ததில்லை.

22. ஜோ ஜீதா வொஹி சிக்கந்தர் – நல்ல படம். பார்க்கலாம்.

இவரை பற்றி சூர்யா எழுதியதை இந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் எங்கேயோ ஒரு வரி சுலபமாக மிஸ் செய்துவிடலாம். மிஸ் செய்யாமல் கட்டாயமாக சூர்யா எழுதி இருப்பதை படியுங்கள், you will enjoy it!

இந்த தளத்தில் சாதாரணமாக நான் “புது” படங்களை பற்றி எழுதுவதில்லைதான். தங்கர் பச்சானின் எழுத்துகளை பற்றி கூட்டாஞ்சோறு தளத்தில் எழுதினேன், சரி அவர் படங்களை பற்றி இங்கே எழுதுவோமே என்றுதான்.

தங்கர் பச்சான் இயக்கிய படங்களில் நான் சொல்ல மறந்த கதை, அழகி, பள்ளிக்கூடம் ஆகியவற்றை பார்த்திருக்கிறேன். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, ஒன்பது ரூபாய் நோட்டு பார்த்ததில்லை.

நான் பார்த்த படங்களில் வரும் மனிதர்கள் – குறிப்பாக இந்த சைடி காரக்டர்களில் வருபவர்கள் – உண்மையான, நகமும் சதையும் உள்ள மனிதர்களாக தெரிகிறார்கள். தமிழ் சினிமாவில் இது பெரிய விஷயம். ஒரே காரக்டரை திருப்பி திருப்பி பல படங்களில் செய்பவர்கள் அதிகம் இங்கே. நம்பியார், மேஜர், ரங்காராவ், எம்.ஆர். ராதா, கே.ஆர். விஜயா, மனோகர், டெல்லி கணேஷ், பூர்ணம், வடிவேலு, விஜய் போன்றவர்கள் மிக தெளிவாக தெரிபவர்கள். திறமை இருந்தாலும் வீனடிக்கப்படுவார்கள்.

சொல்ல மறந்த கதைதான் எனக்கு மிகவும் பிடித்த படம். தொய்வில்லாமல், நம்பகத்தன்மை உள்ள காரக்டர்கள். ஏழை மாப்பிள்ளையாக பிடித்தால், முதலில் வேலை வேலை என்று கத்தினாலும், வீட்டோடு இருந்து சொத்தை பார்த்துக் கொள்வான் என்று நம்பும் கொஞ்சம் திமிர் உள்ள மாமனார், வேலைக்கு போய் தன் காலில் நிற்க வேண்டும் என்று துடிக்கும் மாப்பிள்ளை, இதை பற்றி எல்லாம் பெரிதாக யோசிக்காத, ஆனால் எல்லாம் சுமுகமாக முடிய வேண்டும் என்று நினைக்கும் மனைவி, மாப்பிள்ளையின் தம்பி, மச்சினி, அப்பா, அம்மா, வேலைக்காரப் பெண், மாமியார், குடும்ப நண்பர் ஜனகராஜ், மேலதிகாரி மணிவண்ணன் குடும்பம் எல்லாருமே மிக நன்றாக சித்தரிக்கப்பட்டிருந்தார்கள். பொருந்தாத ஒரே பாத்திரம் புஷ்பவனம் குப்புசாமிதான். அவரை பார்த்தால் கஷ்டப்படுகிற மாதிரியா தெரிகிறது?

சேரனுக்கு மிக பொருத்தமான ரோல். நன்றாக நடித்திருந்தார். பிரமிட் நடராஜன் கலக்கிவிட்டார். ரதி, தம்பியாக வருபவர், மச்சினியாக வருபவர், ஜனகராஜ், அப்பாவாக வருபவர் எல்லாருமே நன்றாக நடித்திருந்தார்கள். புதுமையான கதை இல்லைதான், ஆனால் தொய்வில்லாத திரைக்கதை. சிறு கோபங்கள் மெதுவாக பெரிதாக வெடிப்பது நன்றாக வந்திருக்கும்.

அழகி பெரிதாக பேசப்பட்டது. பேசப்பட்ட அளவுக்கு அதில் விஷயமில்லை. சிறு வயது காதல் நன்றாக வந்திருக்கும். பார்த்திபன் நந்திதா தாசை பார்த்து வருத்தப்படுவது நன்றாக வந்திருக்கும். பண்ருட்டி நண்பர்கள் பலாப்பழத்தை தூக்கிக்கொண்டு வருவது, பேசுவது எல்லாம் நன்றாக இருக்கும். ஆனால் தேவயானி மாதிரி ஒரு பேக்கு மனைவி எங்கே பார்க்க முடியும்? அவருக்கு பார்த்திபனுக்கும், நந்திதாவுக்கும் நடுவே உள்ள உறவு புரிவதே இல்லையாம். ஆனால் above average தமிழ் படம் என்பது உண்மைதான்.

பள்ளிக்கூடம் ஒரு mixed bag. நம் ஒவ்வொருவருக்கும் உள்ள நாஸ்டால்ஜியாவை நன்றாக பயன்படுத்தி இருப்பார். பள்ளி, கல்லூரி நட்பு இப்போதைக்கு இருக்கும் பணம், அந்தஸ்து ஆகியவற்றை வைத்து மாறுவதில்லை என்பது உண்மையோ பொய்யோ – அப்படித்தான் நினைக்க நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அது இங்கே நன்றாக வெளிப்பட்டிருக்கும். ஆனால் ஸ்ரேயா ரெட்டி சீன்கள் எல்லாமே வேஸ்ட். அப்புறம் பிரசன்னா நரேன் (திருத்திய நல்லதந்திக்கு நன்றி!) சுபம் போடுவதற்காக திடீரென்று மனம் மாறி சிநேகாவை கல்யாணம் செய்து கொள்வது கொஞ்சம் ஃபாஸ்டாக நடந்து விடுகிறது.

தங்கர் பச்சான் உலகின் தலை சிறந்த டைரக்டர்களில் ஒருவர் இல்லைதான். தமிழில் கூட தலை சிறந்த டைரக்டர் இல்லைதான். ஆனால் அவரது படங்கள் above average ஆக இருக்கின்றன. அவரது படங்களில் வரும் மனிதர்கள் கார்ட்போர்ட் கட்அவுட்களாக இல்லை. வட மாவட்டங்களின் பின்புலம் அவரது படங்களில் நன்றாக வெளிப்படுகிறது. இவை அத்தனையும் நல்ல விஷயங்கள், அதனாலேயே பார்க்கலாம்.

போன பதிவு ஏவிஎம் செட்டியார் அளித்த ஒரு பழைய பேட்டி. செட்டியார் பற்றி நானும் ஏதாவது எழுதலாம் என்று பார்த்தேன், எனக்கு தயாரிப்பாளர்களை பற்றி அவ்வளவாக தெரியாது. அதே நேரத்தில் நண்பர் சூர்யா தன் தளத்தில் சாண்டோ சின்னப்பா தேவரை பற்றி ஒரு அருமையான பதிவு போட்டிருப்பதை பார்த்தேன். சரி, தயாரிப்பாளர்களை பற்றி பொதுவாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ் தயாரிப்பாளர்களில் எஸ்.எஸ். வாசன், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம், செட்டியார், தேவர் நான்கு பேரும் பல வருஷம் கொடி கட்டி பறந்தவர்கள்.

ஏவிஎம் இத்தனை வருஷம் கழித்தும் நன்றாக இருப்பது பெரிய விஷயம். செட்டியார் நடுவில் ஒரு பத்து வருஷம் படமே வேண்டாம் என்று இருந்ததாகவும், அவர் இறந்த பிறகுதான் சரவணன் மீண்டும் முரட்டுக் காளை படத்துடன் அடுத்த இன்னிங்க்சை ஆரம்பித்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கென்னவோ இருந்தபோதுதான் என்று தோன்றுகிறது. நாற்பதுகளின் பிற்பகுதியிலிருந்து அறுபதுகளின் முற்பாதி வரைக்கும் பல நல்ல படங்கள் வந்தன. சபாபதி, நாம் இருவர், ஓரிரவு, வாழ்க்கை, பராசக்தி, பெண், அந்த நாள், நானும் ஒரு பெண், அன்னை, மேஜர் சந்திரகாந்த் ஆகியவை குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை. சரவணன் வந்த பிறகு மசாலா படங்கள்தான் வருகின்றன.

எஸ்.எஸ். வாசன் ஒரு பத்து வருஷம் கொடி கட்டி பறந்தார். மங்கம்மா சபதம், சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், அவ்வையார் எல்லாம் பெரும் வெற்றி. நாற்பதுகளிலேயே கோடீஸ்வரர் ஆகிவிட்டார். அவருக்கு அப்புறம் படம் எடுப்பதில் இண்டரஸ்ட் போய்விட்டது என்று நினைக்கிறேன். இரும்புத் திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஒளி விளக்கு மாதிரி படங்கள் வந்தாலும், ஜெமினி ஃபில்ம்ஸ் அறுபதுகளிலேயே அமுங்கிவிட்டது.

டி.ஆர். சுந்தரம் பெரிய ஆள். பாரதிதாசன், எம்ஜிஆர், கலைஞர், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் எல்லாரும் அவரிடத்தில் வேலை செய்திருக்கிறார்கள். மந்திரி குமாரி, திரும்பிப் பார், அலி பாபாவும் நாற்பது திருடர்களும் மாதிரி படங்களை எடுத்திருக்கிறார். ஆனால் அறுபதுகளில் வல்லவன் சீரிஸ் – வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன் மாதிரி – படங்கள் மட்டுமே எடுத்தது ஏன் என்று தெரியவில்லை.

இவர்கள் எல்லாம் கொடி கட்டி பறந்தாலும், நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வட்டத்தில் name recognition இருந்த ஒரே தயாரிப்பாளர் தேவர்தான். தேவரின் மிருகப் படங்கள் எங்கள் வட்டத்தில் பெரிய ஹிட். புலியையும், சிங்கத்தையும், யானையையும் நாங்கள் வேட்டைக்காரன் மாதிரி ஏதாவது படத்தில் பார்த்தால்தான் உண்டு. (உயிர் காலேஜ் எல்லாம் போனதில்லை.)

தேவர் படங்கள் எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய காவியங்கள் இல்லை. அவருடைய ஆடியன்சுக்கு மன அளவில் ஒரு எட்டு வயதுதான் இருக்கும். எம்ஜிஆர், முருகன், மிருகங்கள் இவற்றை வைத்தே காலத்தை ஓட்டியவர். ஆனால் ஒரு நாளும் படம் பார்ப்பார்களை ஏமாற்றியதில்லை. அவர் கடை சமாசாரம் எப்படி இருக்கும் என்பது தெள்ளத்தெளிவாக இருந்தது. அது பிடிக்காதவர்கள் போக வேண்டாம்!

எம்ஜிஆரை வைத்து அதிக படங்கள் எடுத்தவர் அவர்தான் என்று நினைக்கிறேன். எதுவும் எம்ஜிஆரின் சிறந்த படங்கள் லிஸ்டில் கூட வராது. வேட்டைக்காரன், நல்ல நேரம், தேர் திருவிழா, முகராசி இந்த மாதிரி படங்கள் நினைவு வருகின்றன. வேட்டைக்காரன், நல்ல நேரம் இரண்டும் பிரமாதமாக ஓடியன. இந்த நாலு படமும் தண்டம், இப்போது வேறு எதுவும் நினைவு வரவில்லை. எம்ஜிஆருக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்தது. இருவரும் ஒருவரால் ஒருவர் வளர்ந்தவர்கள். எம்ஜிஆர் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரால் இனி பேச முடியுமா, அவருக்கு இனி மேல் சினிமா வாழ்க்கை இருக்கிறதா என்று எல்லாரும் சந்தேகப்பட்டார்களாம். இவர் எம்ஜிஆரை பார்க்கப் போனாராம். போனவர் அடுத்த படம் நடிக்க வேண்டும் என்று ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தாராம்!

அவருக்கென்று ஒரு ஆஸ்தான டீம் இருந்தது. கே.வி. மகாதேவன், எம்.ஏ. திருமுகம், தூயவன், ஆரூர் தாஸ், நாகேஷ், மேஜர், அசோகன் இல்லாமல் அவர் சாதாரணமாக படம் எடுப்பதில்லை.

ஆங்கிலமும் தெரியாமல், ஹிந்தியும் தெரியாமல், ஹிந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தார்.

அவருடைய படங்களில் தெய்வம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியது. படம் நன்றாக இருக்கும் என்று இல்லை, தண்டம்தான். ஆனால் கோவில்களின் அந்த கால நிலையை ஒரு டாக்குமெண்டரி போல நன்றாக எடுத்திருப்பார்.

இவர்களைத் தவிரவும் பல தயாரிப்பாளர்கள் குறிப்பிட வேண்டியவர்கள். சிவாஜி, எம்ஜிஆர் புகழிலே கொஞ்சம் மங்கி தெரியும் பந்துலு, ஜூபிடர் சோமு, பக்ஷிராஜா ஃபில்ம்ஸ் ஸ்ரீராமுலு நாயுடு, தமிழில் பல வெற்றி படங்கள் எடுத்தாலும் தெலுங்கு கம்பெனியான விஜயா பிக்சர்ஸ் நாகி ரெட்டி, எம்ஜிஆர், சிவாஜி, கலைஞர், பி.எஸ். வீரப்பா, முரசொலி மாறன், ஸ்ரீதர், ஜி.என். வேலுமணி, ஏ.பி. நாகராஜன், பாலச்சந்தர் படங்களை தயாரித்த கலாகேந்த்ரா, பாலாஜி, பிற்காலத்தில் ஜீவி, ஆர்.பி. சௌத்ரி, கமல், கோவைத் தம்பி, பிரகாஷ் ராஜ், என்று சொல்லி கொண்டே போகலாம். ஆனால் இவர்களில் பலருக்கும் வேறு முக்கியமான முகங்கள் இருந்தன – எம்ஜிஆரை தயாரிப்பாளர் என்றா நினைவு வைத்துக் கொள்கிறோம்? அப்படி இல்லாதவர்கள் பலரும் நிலைத்து நிற்கவில்லை.

இன்றைக்கு இவர்களுக்கு சமமாக சொல்லக் கூடிய கோலிவுட் பாதுஷாக்கள் இருக்கிறார்களா? உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்!

தேவரை பற்றி சாரதா இன்னும் விவரங்கள் தருகிறார்.

மேலும் சில படங்கள்: தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், குடும்பத் தலைவன், தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், தொழிலாளி, கன்னித் தாய், தனிப் பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, காதல் வாகனம் ப்ளஸ் நீங்கள் சொன்ன படங்கள் நாலு. இவற்றில் சில மட்டும் 100 நாட்கள் என்ற எல்லைக்கோட்டைத் தொட்டன. பெரும்பாலானவை 50-ஐக்கூட கடக்கவில்லை. அவர் தன் வாழ்நாளில் தமிழில் கண்ட ஒரே வெள்ளிவிழாப்படம் ஆட்டுக்கார அலமேலு மட்டும்தான். சில படங்கள் பெயரை மட்டும் மாற்றி விட்டுப் பார்த்தால் ஒரே மாதிரி இருக்கும். திருக்குறள் மாதிரி இரண்டு வரிக் கதைகளைத்தான் படமாக எடுப்பார். தேவர் படத்தின் கதையை ஒரு பஸ் டிக்கட்டின் பின்பக்கம் எழுதிவிடலாம் என்று கோலிவுட்டில் ஒரு வாசகம் உண்டு.

ஜெய்சங்கரை வைத்து கெட்டிக்காரன், நேர்வழி போன்ற குப்பைப் படங்களையும், அக்கா தங்கை, பெண் தெய்வம், மாணவன் போன்ற நல்ல படங்களையும் எடுத்தவர். ரவிச்சந்திரனை வைத்து மகராசி என்ற படத்தையும் எடுத்தார். சிவகுமாரை கதாநாயனாக வைத்து ஆட்டுக்கார அலமேலு, வெள்ளிக்கிழமை விரதம், (பழைய) ஸ்ரீகாந்தை நாயகனாகவும் பிரமீளாவை நாயகியாகவும் போட்டு கோமாதா என் குல மாதா ஆகிய வெற்றிப்படங்களை எடுத்தார். இடையிடையே எ.வி.எம்.ராஜனை வைத்து துணைவன், தெய்வம், திருவருள் என் பக்திப்படங்களின் பக்கமும் தலைநீட்டினார்.

ரஜினியை வைத்து தாய்மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம், தாய் வீடு மற்றும் கமலை வைத்து தாயில்லாமல் நானில்லை (எத்தனை தாய்கள்), ராம் லக்ஷ்மண் போன்றவை அவர் மறைவுக்குப்பின் அவரது வாரிசுகளால் தயாரிக்கப்பட்டவை. கடைசியாக ஆனந்த பாபுவை வைத்து தர்மம் என்ற படம் எடுக்கப்போக, படம் அட்டர் ஃப்ளாப். தேறவேயில்லை. தேவர் பிலிம்ஸ் அத்துடன் நொடித்துப்போனது. இதனிடையே வாரிசுகளுக்குள் பாகப்பிரிவினை தலைதூக்க தேவர் பிலிம்ஸ் மற்றும் தண்டாயுதபாணி பிலிம்ஸ் மூடுவிழா கொண்டாடியது.

சின்னப்பா தேவர் யாரையும் எளிதில் நம்பி விடுவார். யாரும் அவரை சுலபமாக ஏமாற்றிவிடலாம். கே.வி.மகாதேவன் கூட வெறும் நாலு மெட்டுக்களை வைத்துக்கொண்டு அவருக்கு நாற்பது பாட்டுக்கள் போட்டுக்கொடுத்து விடுவார். தேவரின் நல்ல மனதுக்கு அவை பாப்புலராகிவிடும். இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ் ஜோடியை கண்ணதாசன் தேவருக்கு அறிமுகப்படுத்த, தேவர் அவர்களுக்கு படங்களில் வாய்ப்புக்கொடுத்ததால், படங்களில் டைட்டில்களில் ‘கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்’ என்று போட்டு தங்கள் நன்றியை காணிக்கையாக்கினர்.

எனக்கு தேவர் எடுத்த எம்ஜிஆர் படங்கள் பெரிய ஹிட்கள் என்று நினைவு. என் impression டெண்டு கோட்டையில் இருந்த ரெஸ்பான்சை பார்த்து ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் சாரதா என்னை விட விஷயம் தெரிந்தவர். ஞாபகம் வராத எம்ஜியார் படங்களின் பேரை எடுத்து தந்த சாரதாவுக்கு நன்றி! எனக்கு அசோகன் அண்ணனாக வரும் படம் (தாய்க்கு தலை மகன்), அசோகன் ஒரு மாஸ்க் போட்டுக்கொண்டு வரும் படம் (தர்மம் தலை காக்கும்) என்றுதான் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. எம்ஜிஆர் ஒரு படத்தில் பறந்து கூட போவார் என்று ஞாபகம். என்ன படமோ தெரியவில்லை.

சாரதா சொல்வது போல பாட்டுகள் – எம்ஜிஆர் படத்தில் கூட – பிரமாதமாக இருக்காது. சூர்யா சொல்வது போல மூன்று மாதத்தில் படம் எடுப்பதால் இருக்கலாம்.

ஞாபகம் வரும் இன்னும் சில படங்கள் – நீல மலை திருடன் (ரஞ்சன்), சொர்க்கம் நரகம், இளஞ்ஜோடிகள், தர்மத்தின் தலைவன். கோமாதா என் குல மாதா ஹிந்தியிலும் காய் அவுர் கௌரி என்று வந்தது.

ஏவிஎம்

ஏவிஎம்

ஏ.வி.எம் செட்டியாரை விகடனில் எப்போதோ எடுத்த பேட்டி. நன்றி, விகடன்!

“இந்தத் தொழிலில் நாங்கள் போடுகிற மூலதனத்துக்கும் உழைக்கிற உழைப்புக்கும், படுகிற பாட்டுக்கும் பதிலாக வேறொரு தொழிற்சாலையைத் தொடங்கியிருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும்.”- இப்படிச் சொல்கிறவர் யார்? ஏவி.எம். ஸ்டூடியோ அதிபர் திரு. மெய்யப்பன் அவர்கள்தான்.

“அப்படியானால் இந்தத் தொழிலை விட்டு விடுவதுதானே?” என்று கேட்டால், “எப்படி விட முடியும்? புலியின் வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வாலை விட்டால் திரும்பி நம் மீது பாய்ந்து விடுமோ என்று அஞ்சி, கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதில்லையா? அந்த மாதிரியேதான்” என்கிறார்.

திரு மெய்யப்பன் இத் தொழிலை விரும்பி மேற்கொண்டார் என்பதைக் காட்டிலும், சந்தர்ப்பம் இவரை இழுத்துக்கொண்டது என்று கூறுவதுதான் பொருந்தும்.

இவருடைய தந்தை ஆவிச்சி செட்டியார் காரைக்குடியில் ஒரு ஸ்டோர் வைத்திருந்தார். கிராமபோன் ரிக்கார்டுகள் விற்பனை செய்யும் டீலராகவும் இருந்தார். அவர் தொடங்கிய அந்த ஸ்டோர் ஏவி. அண்ட் ஸன்ஸ் என்ற பெயரில் இப்போதும் நடந்து வருகிறது. கிராமபோன் ரிக்கார்டு வியாபாரத்தை விரிவாகச் செய்யும் நோக்குடன் 1932-ல் சென்னைக்கு வந்த திரு. ஏவி.எம்., நாராயண அய்யங்கார், சிவன் செட்டியார் இவர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு, சரஸ்வதி ஸ்டோர்ஸைத் தொடங்கினார்.

முசிரி சுப்பிரமணிய அய்யர், கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், சுப்பையா பாகவதர் இவர்களுடைய ரிக்கார்டுகளே அந்தக் காலத்தில் பிரசித்தமாயிருந்தன. ‘அதிகமாக விற்பனையான இசைத் தட்டு எது?’ என்று கேட்டதற்கு, “முசிரியின் கர்னாடக இசைத் தட்டுகள் மட்டும் 30,000-க்கு மேல் விற்பனை ஆயின. கர்னாடக இசைத்தட்டு விற்பனையில் அது ஒரு பெரிய ரெக்கார்ட்! ‘டிரியோ டிரியோடேயன்னா’, ‘எட்டுக்குடி வேலனடி’, ‘செந்தூர் வேலாண்டி’ பாட்டெல்லாம் அந்தக் காலத்தில் ரொம்பப் பாப்புலர்!” என்கிறார்.

ரேடியோவும் சினிமாவும் வந்த பிறகு கிராமபோன் ரிக்கார்டுகளுக்கு மவுசு குறைந்துவிட்டதால், மெய்யப்பனின் கவனம் படத் தயாரிப்புத் தொழிலில் திரும்பியது.

சரஸ்வதி டாக்கி புரொடியூஸிங் என்ற பெயரில் ஒரு படக் கம்பெனி யைத் துவக்கினார். அப்போதெல்லாம் சென்னையில் ஸ்டுடியோக்கள் கிடையாதாகையால், கல்கத்தா நியூ தியேட்டர்சுக்குச் சென்று அல்லி அர்ஜுனா என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து முடித்தார். கே.எஸ்.அனந்தநாராயணய்யர் அந்தப் படத்தில் கிருஷ்ணனாகவும், குறத்தியாகவும் நடித்தார்.

‘படம் எப்படி இருந்தது?’ என்று கேட்டதற்கு, “அதை ஏன் கேட்கிறீர்கள்? படம் முழுவதும் எடுத்து விட் டோம். அப்போதெல்லாம் உடனுக்குடன் ரஷ் பார்க்கும் சந்தர்ப்பம் இல்லை. மொத்தமாகப் படத்தைப் போட்டுப் பார்த்தபோது 10,500 அடி கூடத் தேறவில்லை. படத்தில் எல்லோருடைய கண்களும் மூடிக் கிடந்தன. வெயிலில் படம் எடுத்த தால் கூச்சத்தில் கண்களை மூடிக் கொண்டுவிட்டார்கள். எடுக்கிறவர்களுக்கும் வெயில்தானே? நடிக்கிறவர்கள் கண்களை மூடிக் கொண்டிருக்கிறார்களா, திறந்து கொண்டிருக்கிறார்களா என்று பார்க்க முடியவில்லை. அப்புறம் கார்ட்டூன் படங்களைச் சேர்த்துக் காண்பித்து நேரத்தைச் சரிக்கட்டினோம்.” என்றார்.

அல்லி அர்ஜுனாவுக்குப் பிறகு இவர் எடுத்த படம் ரத்னாவளி. நடித்தவர்கள் ரத்னாபாய் – சரஸ்வதிபாய் சகோதரிகள். இந்தச் சகோதரிகளுக்கு 30 நாள் ஷூட்டிங்குக்கு 25,000 ரூபாய் கொடுக்கப்பட்டது. ‘வசூல் எப்படி?’ என்ற நமது கேள்விக்கு, ‘பிரயோஜனமில்லை’ என்பதுதான் அவர் பதில்.

‘இனி சொந்தத்தில் ஸ்டுடியோ இல்லாமல் படம் எடுக்கக் கூடாது. ஸ்டுடியோ ஆரம்பிப்பதாயிருந்தால் அது பங்களூரில்தான் இருக்க வேண்டும். ஸ்டூடியோவுக்கேற்ற சீதோஷ்ண நிலை அங்கேதான் இருக்கிறது’ என்ற முடிவுக்கு வந்தார். அதற்கேற்றாற்போல் ஜயந்திலால் என்பவர் (பூனா பிரபாத் ஸ்டுடியோவுடன் தொடர்பு கொண்டவர்) பங்களூரில் இருந்தார். அவருடைய கூட்டுறவோடும் தம் சகாக்களின் கூட்டுறவோடும் பங்களூரில் பிரகதி என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோவைத் தொடங்க முடிவு செய்தார் ஏவி.எம். வெளி நாட்டிலிருந்து சாதனங்கள் வந்து சேர ஆறு மாத காலம் ஆகும்போல் இருந்ததால், அதற்குள் பூனா சென்று இந்தி நந்தகுமாரைத் தமிழில் எடுக்க முயன்றார்கள். இந்திப் படம் திரையிடப்பட்ட இரண்டு நாளைக்கெல்லாம் வசூல் குறைந்துவிடவே, தமிழை அடியோடு மாற்றி எடுப்பதென முடிவு செய்தனர். இந்தி ஏன் ஓடவில்லை என்று கேட்டால், “கிருஷ்ணலீலா வித்அவுட் கம்சன் என்றால், படம் எப்படி ஓடும்?” என்று திருப்பிக் கேட்கிறார். தமிழ் நந்தகுமாரில் பணம் கிடைத்தது. ஆனால், பங்களூர் பார்ட்னர்கள் தங்கள் பங்கைப் பிரித்துவிட்டதால், ஏவி.எம். பிரகதி ஸ்டுடியோவை பங்களூரில் அமைப்பதற்குப் பதில் சென்னையில் நிறுவ வேண்டியதாயிற்று.

ஒஷியானிக் ஓட்டலுக்கு அருகே யுள்ள விஜயநகரம் பேலஸ்தான் பிரகதி ஸ்டுடியோ இருந்த இடம். வாடகை ரூ.350-தான். பூகைலாஸ், அரிச்சந்திரா, சபாபதி, ஸ்ரீவள்ளி ஆகிய படங்களே ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்டவை.

“சபாபதி ரொம்பத் தமாஷான படம்” என்று நாம் சொன்னபோது, “பூகைலாஸ் எடுத்தது அதைவிட வேடிக்கை” என்றார். “தெலுங்கு பேசும் படம், தமிழ் புரொடியூஸர், இந்தி டைரக்டர், கன்னட ஆர்ட்டிஸ்ட்ஸ்! இதுதான் பூகைலாஸ்!”

1944-ல் ஏவி.எம். டைரக்ஷனில் உருவாக்கப்பட்ட ராஜ யோகி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. வசுந்தராவும் தியாகராஜ பாகவதரும் சேர்ந்து நடித்த முதல் – கடைசிப் படம் அதுதான். பாதியிலேயே நின்று போனதற்குக் காரணம், நட்சத்திரங்கள் ஒத்துழைப்பு இல்லாததுதான்!

ஏவி.எம் தம் சொந்த டைரக்ஷனில் எடுத்த வெற்றிப் படம் ஸ்ரீவள்ளி. டி.ஆர்.மகாலிங்கமும் ருக்மிணியும் இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, ஒருவரை ஒருவர் நிஜ வாழ்க்கையிலும் காதலிக்கத் தொடங்கிவிட்டார்கள். படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் அது. இரண்டாவது காரணம், இந்தப் படத்தில் வந்த யானை. மூன்றாவது காரணம், இயற்கை அழகு மிக்க அவுட்டோர் காட்சிகள்.

1947-ல் உலக யுத்தம் வந்துவிடவே, மின்சார வசதி இல்லாமல், ஸ்டுடியோவை காரைக்குடிக்குக் கொண்டு போக நேர்ந்தது. இடம் மாறிய போது ஸ்டுடியோவின் பெயரும் ஏவி.எம். என்று மாற்றப்பட்டது. தேவகோட்டை ரோடில் ஓர் இடத்தைப் பிடித்து ஐம்பது குடிசைகள் போட்டு, நட்சத்திரங்களை அங்கேயே குடியேற்றி, நாம் இருவர், வேதாள உலகம் போன்ற படங்களை உருவாக்கினார். ராமராஜ்யாவைத் தமிழில் டப் செய்து வெளியிட்டார். பாரதியார் பாடல்களுடன் வெளியான படம் நாம் இருவர். லலிதா-பத்மினி பாம்பாட்டி நடனத்துடன் வெளியானது வேதாள உலகம்.

ரூ.25,000 கொடுத்து பாரதியார் பாடல்களை விலைக்கு வாங்கி வைத்திருந்த உரிமையை, அப்போ தைய முதலமைச்சர் திரு. ஓ.பி. ராமசாமி ரெட்டியாரின் விருப்பத்துக்கிணங்க எவ்விதப் பிரதிப்பயனும் எதிர்பாராமல் பொதுச் சொத்தாக மாற்றிச் சர்க்காரிடம் ஒப்படைத்தார் ஏவி.எம்.

ஏவி.எம். ஸ்டுடியோ கோடம்பாக்கத்துக்குக் குடியேறியது 1948-ல். பராசக்தி, வாழ்க்கை, அந்த நாள் போன்ற படங்கள் உருவானது இங்கேதான்.

‘இந்திப் படம் எடுத்தது எப்போது?’ என்று கேட்டதற்கு, “திரு. வாசன் அவர்கள் இந்தியில் சந்திரலேகா எடுத்து, வட நாட்டில் வெற்றிகரமாக ஓட்டி வழிகாட்டிய பிறகுதான், இந்தி மார்க்கெட்டில் நாங்களும் தைரியமாகப் புகுந்தோம்” என்கிறார் திரு. ஏவி.எம்.

ஏவி.எம். முத்திரையில் எடுக்கப்பட்ட ஹம் பஞ்சி ஏக் டால் கே என்னும், குழந்தைகள் நடித்த இந்திப் படத்துக்குப் பிரதம மந்திரி அவார்ட் கிடைத்தது மட்டுமல்ல; அந்தப் படத்தைப் பார்த்து மகிழ்ந்த நேருஜி ஏவி.எம். அவர்களையும், அந்தக் குழந்தைகளையும் தம் வீட்டுக்கு அழைத்து விருந்தோபசாரமும் செய்தார்.

ஐந்து முறை ஜப்பான் சென்று வந்துள்ள ஏவி.எம்., “அந்த நாட்டுக்கு இணையான இன்னொரு நாட்டைப் பார்த்ததில்லை. நேர்மையும், நாணயமும், உபகார குணமும் அந்த நாட்டின் தனிச் சிறப்பு” என்கிறார்.

ஆவிச்சி உயர்நிலைப் பள்ளி, ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் – இவ்விரண்டும் திரு. மெய்யப்பனின் தர்ம ஸ்தாபனங்கள். இவர் புதிதாகத் தொடங்கியுள்ளது, படங்கள் எடுப்பதற்குத் தேவையான பிலிம் வியாபாரம். பெயர்: ஆர்வோ.

படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனத்தை இங்கே காணலாம்.

அறுபதுகளில் நல்ல கதை என்று கருதப்பட்டிருக்கும். படம் 75-இல்தான் வந்தது. எம்ஜிஆர், நம்பியார், அசோகன், லதா, மஞ்சுளா, ஊர்வசி சாரதா நடித்தது. எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் நீலகண்டன் இயக்கியது. எம்எஸ்வி இசை. ஹிந்தியில் ராஜேஷ் கன்னா நடித்து சச்சா ஜூட்டா என்று வந்தது.

மேக்கப்போ, காமெராவோ, இல்லை ரொம்ப நாள் தயாரிப்பில் இருந்த படமோ, எம்ஜிஆரிடம் இந்த படத்தில் கொஞ்சம் துள்ளலும் இளமையும் தெரிகிறது. இதற்கு முன்னால் வந்த உரிமைக்குரல், ஊருக்கு உழைப்பவன், இன்று போல் என்றும் வாழ்க மாதிரி பல படங்களில் அவர் முகத்தில் வயதாகிவிட்டது நன்றாக தெரியும்.

இரண்டு எம்ஜிஆர். ஒருவன் நொண்டி தங்கை சாரதாவுக்கு கல்யாணம் செய்ய சென்னைக்கு வரும் பாண்ட் மாஸ்டர். இன்னொருவன் திருடன். போலீஸ் அதிகாரி மஞ்சுளா, திருடனின் அசிஸ்டன்ட் லதா இருவரும் ஜோடி. இருவரும் அந்த காலத்துக்கு எக்கச்சக்க கவர்ச்சி. கெட்ட எம்ஜிஆரிடம் ஒரு மருந்து – சாப்பிட்டால் எல்லாரும் அப்படியே சிலை மாதிரி நின்றுவிடுவார்கள். சின்ன பையனாக இருந்தபோது இந்த சீன மிக த்ரில்லிங்காக இருந்தது. வழக்கம் போல ஆள் மாறாட்டம், நல்ல எம்ஜிஆரை கெட்ட எம்ஜிஆர் ப்ளாக்மெய்ல் செய்து தன்னை போல நடிக்க வைக்கிறார். கடைசியில் அவருக்கு தண்டனை, ஜோடிகள் இணைகின்றன, சாரதா போலீஸ் அதிகாரி நம்பியாரை கல்யாணம் செய்து கொள்கிறார், சுபம்!

படம் வேஸ்ட். பார்க்க வேண்டும் என்றால் சிக்கென்று இருக்கும் மஞ்சுளா, கொழுக் மொழுக் லதாவுக்காகத்தான். தானே தானே தன்னான்த்தானா, ஒருவர மீது ஒருவர் சாய்ந்து பாட்டுகளில் மஞ்சுளா கலக்குவார். இன்னும் இரண்டு பாட்டுகள் – பூ மழை தூவி, கண்ணை நம்பாதே. பாட்டுகள் பரவாயில்லை. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அழகான காஷ்மீரில் எடுக்கப்பட்டது.

பத்துக்கு ஆறு மார்க். அதுவும் மஞ்சுளா,லதா, பாட்டுகள், காஷ்மீருக்காகத்தான். C- grade.

விகடனில் படம் வெளியானபோது வந்த விமர்சனம். (ஜனவரி 6, 1975) நன்றி, விகடன்!

உருவத்தில் தன்னைப் போல் இருக்கும் நாட்டுப்புற பாண்ட் மாஸ்டரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்றபடி ஆட்டி வைக்கும் வைரக் கொள்ளைக்காரன், அவன் சுய உருவத்தைப் புரிந்து கொள்ளாமல் சொன்னதை அநாயாசமாகச் செய்து முடிக்கும் அசட்டு பாண்ட் மாஸ்டர் என முரணான இரண்டு பாத்திரங்கள். இரண்டு பேருக்கும் இரண்டு கதாநாயகிகள், ஒரு தங்கை, போலீஸ் அதிகாரிகள். இத்தனை பேர் போதாதா, நினைத்ததை முடிப்பதற்கு?

வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, இயற்கையாக நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அசட்டுத்தனம், ஆவேசம், காதல், பாசம் அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதற்கு வைரக் கொள்ளைக்காரன் ரஞ்சித்தை விட பாண்ட் மாஸ்டர் சுந்தரத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரண்டு பேரும் கடைசியில் மோதிக் கொள்ளும்போது பொறி பறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அலட்சியமாக அவர்கள் மோதிக் கொள்வது கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொள்ளைக்காரன் யார் என்பதை நிரூபிக்கும் நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி, வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த நல்ல திருப்பம்.

லதாவுக்கும் மஞ்சுளாவுக்கும் மிதமான பாத்திரங்கள். நெருக்கமான காட்சிகளில் இருவருமே பின்வாங்கவில்லை. சி.ஐ.டி. அதிகாரியான மஞ்சுளாவின் மாத்திரை சமாசாரம் மணியான நகைச்சுவைக் கட்டம். சாரதாவிடம் பாசத்தைப் பிழிந்தெடுத்துத் தரும் துடிப்பான நடிப்பு! ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா? நம்பியாருக்கும் அசோகனுக்கும் போலீஸ் அதிகாரிகளாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது.

பாடல்களில் இனிமை ‘பூ மழை தூவு’கிறது. வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் கேமரா வெகு கவர்ச்சியாக இயங்கியிருக்கிறது. டைரக்டர் நீலகண்டன் அவர்களின் சாமர்த்தியம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. சபாஷ்!

நிறைவான பொழுதுபோக்கு.

mj

60, 70களில் ராக், பாப் உலகத்தின் மன்னனாக ஜொலித்த எல்விஸ் ப்ரெஸ்லி மறைவின் பிறகு வெறுமையை உணர்ந்தது ரசிகர் கூட்டம். அப்பொழுது அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் ”இனி பாப் உலகத்திற்கு மன்னர் கிடையாது” என்பதுதான். ”இனி இது போன்று ஒருவர் பிறக்கமாட்டார்” என்று பல விசிறிகள் சோகமானார்கள். அவர்களுக்குத் தெரியாதது பாப் உலக்த்திற்கு அடுத்த மன்னர் ஏற்கனவே அவதரித்துவிட்டார் என்பதுதான். அந்த மன்னர் MJ எனப்படும் மைக்கேல் ஜாக்‌ஸன்.

எனக்கு மைக்கேல் பற்றி முதன் முதலாகத் தெரியவந்தது அவருடைய ”திரில்லர்” (Thriller) ஆல்பம் வெளிவந்த புதிதில் தான்.

அந்தச் சம்பவம் நேற்று நடந்த மாதிரி எனக்குத் தெளிவாக நினைவிருக்கிறது. சேலம் அரசுப் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த கால்ம். (பழைய) பஸ் ஸ்டாண்டில் வருடத்திற்கு ஒரு முறை எக்ஸிபிஷன் போட்டுவிடுவார்கள். நாங்களும் போவோம். அப்படித்தான் 1983ல் நான் நண்பர்களுடன் போனேன். ஒரு இடத்தில் ஒரு டிவியில் மைக்கேல் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் “It’s close to midnight and something evil lurking in the dark” என்று கதறிக்கொண்டே ஆடிக்கொண்டிருந்தார். அப்படியே அசந்து போய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். அன்றிலிருந்து மைக்கேலுக்கு மேலும் ஒரு ரசிகர் கிடைத்தார்.

மைக்கேலின் தனித் தன்மை அவருடைய சிக்கலான டான்ஸ் மூவ்மண்ட்ஸ். அதனால் தான் அவர் மிக மிகப் பிரபலமானார். பில்லி ஜீன் என்ற பாடலில் அவருடைய அனைத்து டான்ஸ் திறமைகளும் வெளிப்படும். அது நமது கண்களுக்கு பெரிய விருந்து.

Billy Jean – Another version (கட்டாயம் பாருங்கள்)

ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த பில் பெய்லியின் பேக் ஸ்லைடை மைக்கேல் பிரபலம் அடையச் செய்தார். மூன்வாக்கர் என்று பெயர் பெற்ற இந்த நடன அமைப்பு மைக்கேல் ஆடும் பொழுது மயங்காதவர் மிகக் குறைவே. இந்தப் பாடலில் டர்ன் வாக், 4 கார்னர் வாக், ஃப்லோட் வாக், ரோபோ வாக் அனைத்தும் ஆடி பிரமிக்க வைப்பார். மனிதர்களை திகைக்கவைக்கும் ஃபுட்வொர்க்கை கொண்டிருக்கிறார்.

இவரது பாடல்களில் இன்னொரு சிறபபு அமசம் அனேகப் பாடல்களில் ஒரு தீம் வைத்து விடுவார். மிக பாப்புலரான் “Beat It” (என் மனைவியின் ஃபேவரைட்) எனப்படும் பாடலில் காங்க்ஸ்டர்களை வைத்து ஒரு கதை சொல்லியிருப்பார்.

திரில்லர் பாடலில் ”Night of the Living Dead” திரைப்படம் போன்று ஒரு காட்சியமைப்பு. எனக்குப் பிடித்த இன்னொரு மெலடியான பாடல் “Say, Say, Say” என்ற பால் மெக்கார்ட்னியுடன் அமைந்தப் பாடல். பிதாமகன் படத்தில் நடிகர் சூர்யா மருந்து விற்று எமாற்றுவது போல் பாலும், மைக்கேலும் ஊர் ஊராக சென்று எமாற்றுவார்கள். இனிமையான பாடல்.

டிரம்ஸ் இசையில் வித்தியாசமான அவுட் டோர் செட்டிங்கில்  “They don’t care about us”  கேட்க், பார்க்கவேண்டிய ஒன்று.

மைக்கேல் ப்ராடிஜி என்று சொல்வது எள்ளளவும் மிகையாகாது. மோ டவுன் ரிக்கார்ட்ஸுடன் சேர்ந்து “ஜேக்ஸ்ன் 5” ட்ரூப் மூலமாக வழங்கிய “I will be there” (Acapella தான் கிடைத்தது – accompanimentடுடன் கிடைத்தால் update  செய்கிறேன் ) என்ற பாடலில் அந்த வயதிலேயே அவருக்கிருந்த தன்னம்பிக்கையையும், டான்ஸ் மூவ்மெண்ட்ஸையும் பார்த்தால் இது தெளிவாகதப் புரியும்.

”Black or White”ல் இன்னோவேட்டீவாக பரதநாட்டியத்துடன் தனது டான்ஸை மெர்ஜ் செய்ய முனைந்திருப்பார்.

இதை இன்னும் கொஞ்சம் எலாபரேட்டாக செய்திருந்தால் இந்தியாவில் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்திருக்கும். பொதுவாக சில  கிழக்கத்திய வித்வான்கள் மேற்கத்திய வித்வான்களுடன் (கடம் சங்கரும் கிட்டார் மெக்லாலினும் கொடுத்தது போல்) சேர்ந்து இசை விருந்து கொடுப்பார்கள். நாட்டியத்தில் இது புதியது.

ஜேனட் ஜாக்‌ஸனுடன் சேர்ந்து அளித்த ஸ்கிரீம் (Scream) ஒரு பெயிலியர். கிட்டதட்ட 7 மில்லியன் டாலர்களை செலவு செய்திருக்கிறார். ஆனால் தேறவில்லை.

இவர் குழப்பமான மனிதர். இவரது போதை மருந்துகள் உபயோகம், குழந்தைகள் பாலுறவு, குழந்தைகள் வளர்ப்பபதில் கவனக்குறைவு, விவாகரத்து என்று பல பிரச்சனைகளில் சிக்கியவர். தெளிவற்ற பணம் கையாளும் முறை என்றும் கூறுவர். 100 மில்லியன் திரில்லர் ஆல்பம் விற்றப்பிறகும், கடைசியில் பண நெருக்கடியில் கஷ்டப்பட்டதாகக் கூறுவார்கள். மேலும் அழகாக இருந்த தன்னை நிறமாற்றம் கருதி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விகாரமாக ஆக்கிக் கொண்டார்.

என் தந்தை எல்விஸ் ப்ரெஸ்லியின் காலத்தில் வளர்ந்து வந்தார், அவருடைய விசிறியாக இருந்தார். அவருடைய ரசிகத்தன்மையெல்லாம் மிகவும் சட்டிலாக(subtle) த்தான் இருக்கும். என்னிடம் எப்பொழுதாவது எல்விஸை பற்றிக் கூறுவார். அவ்வளவுதான். நான் MJ கால்த்தில் வளர்ந்து வந்தவன். ஆனால் என் ரசனை என் தந்தையுடன் ஒப்பிடும்பொழுது கொஞசம் தூக்கல். நான் ஒரு மோனோ டேப் ரிக்கார்டரின் மூலமாக மைக்கேலின் “Don’t stop till you get enough” ஐ டேப் தேயும் வரை கேட்டிருக்கிறேன்.

என் பெண்ணிற்கோ ஜஸ்டின் டிம்பர்லேக் போன்றோர்கள் பாப் கிங்காக தோன்றலாம்.

எனக்கு MJ ஒரு ப்ராடிஜி, ஜீனியஸ், பிரில்லியண்ட்.  அமேரிக்க கலாச்சாரத்தின் ஒரு பகுதி. பாவம் போய்விட்டார்.

அடுத்த பக்கம் »