நேற்று வீட்டில் புரட்சி வெடித்தது. படத்தைப் போட்ட ஐந்தாவது நிமிஷத்தில் என் மனைவி “நாகேஷ்தான் heroவா? இது உங்களுக்கே அடுக்குமா?” என்று சொல்லி ரிமோட்டை வெற்றிகரமாக கைப்பற்றினாள். என் பெண்களோ Hannah Montanaவில் முழுகி இருந்தனர். அதுவும் என் 4 வயதுப் பெண்ணுக்கு ஒரு boss fixation உண்டு. அவளிடம் நான் தெரியாத்தனமாக “You are my boss” என்று சாயங்காலம்தான் சொல்லி இருந்தேன். “If I am the boss, I get to watch my TV, daddy!” என் எடை பலம், அவர்கள் குரல் பலத்தையும் கண் பலத்தையும், எல்லாவற்றையும் விட முக்கியமாக என் மனைவியின் பக்க பலத்தையும் ஜெயிக்க முடியவில்லை.
ஒன்றரை மணி நேரத்துக்கு பின்னால்தான் என்னால் பார்க்க முடிந்தது. பாதிக்கு பிறகு பார்ப்பது ரொம்ப கொடுமை – அரை மணி கஷ்டப்பட்டு பார்த்தேன், அவ்வளவுதான். அதனால் இன்று விமரிசனம் எழுதமுடியவில்லை. பார்த்த வேறு யாராவது எழுதுங்களேன்! நடுவில் ஒரு படத்தை விட்டுவிடுவதற்கு என்னவோ போல் இருக்கிறது. ப்ளீஸ்!
இந்த படத்தைப் பற்றி எனக்கு தெரிந்த சில விவரங்கள். 1972இல் வந்தது. இதே கதையை 1981இல் “எல்லாம் இன்ப மயம்” என்று கமல், ஜெய்ஷங்கர் நடிக்க பஞ்சு அருணாசலம் எடுத்தாராம். 1970களின் முற்பாதியில் சித்ரமகால் குழுவினர் (சித்ரமகால் கிருஷ்ணமூர்தி, பஞ்சு அருணாசலம்) லோ பட்ஜெட் நகைச்சுவை படங்கள் சிலவற்றை எடுத்தனர். சாதாரணமாக நாகேஷ்தான் கதநாயகன். விஜயலலிதா கதாநாயகி. எம்.ஆர்.ஆர். வாசு, வி.கே. ராமசாமி, தேங்காய், சுருளிராஜன் பொன்ற நகைச்சுவை நடிகர் பட்டாளமே நடிக்கும். (இதில் சச்சுவும் இருந்தார்). இந்தப் படம் லாபம் பார்த்திருக்கும் போலிருக்கிறது. இதைப் போலவே இந்த கோஷ்டி எடுத்த இன்னொரு (சகிக்க முடியாத) நகைச்சுவை படம் “தேன் கிண்ணம்“. (அதுவும் இந்த ப்ரோகிராமில் திரையிடப்பட்டது. அதையும் நான் பாதி படம்தான் பார்த்தேன். அதில் முன் பாதிக்கு பிறகு ஓடிவிட்டேன், இதில் பின் பாதி). விஜயலலிதாவின் கவர்ச்சியையும் நம்பி இந்த படங்கள் எடுக்கப்பட்டன. (அந்தக் காலத்து கவர்ச்சி – டைட்டான பான்ட் போட்டுக்கொண்டு வருவார், அவ்வளவுதான். இதை நம்பி யாரும் இந்தப் படங்களை பார்க்காதீர்கள்). 1973இல் வந்த “கல்யாணமாம் கல்யாணம்”உம் இந்த கோஷ்டிதான் எடுத்தது என்று நினைவு.
இசை அமைத்தவர் தாராபுரம் சுந்தரராஜன். இந்தப் படத்தில் “டிங்டாங் டிங்டாங் டிங்கியாலோ” என்ற ஒரு க்ளப் டான்ஸ் பாட்டை கேட்டிருக்கிறேன்.
தாராபுரம் சுந்தரராஜனுக்கு அதிர்ஷ்டம் கட்டை. நல்ல குரல், ஆனால் வெற்றி பெற முடியவில்லை. நாகேஷும் தாராபுரத்துக்காரர்தான். நாகேஷின் சிபாரிசோடு திரைப்படங்களில் பின்னணி பாடகராக நுழைய முயன்றார். எனக்குத் தெரிந்து அவர் பாடிய ஒரே வெற்றிப் பாட்டு “செல்வம்” படத்தில் இடம் பெற்ற “உனக்காகவா நான் எனக்காகவா”தான். ஜமுனா ராணியுடன் இணைந்து பாடியது. “ஆயிரம் பொய்” விமரிசனத்தில் நானும் tfmpage.காமிலிருந்து கட்-பேஸ்ட் பண்ணி இருந்தேன் – “தமிழ் விடு தூது முன்னாலே” என்று மனோரமாவுடன் ஒரு பாட்டு பாடி இருந்தார். “திருமலை தென்குமரி” படத்தில் “அழகே தமிழே நீ வாழ்க” என்ற பாட்டை பலரோடு இணைந்து பாடி இருக்கிறாராம். அந்தப் பாட்டில் சீர்காழியின் கம்பீரமான குரல் மற்ற எல்லார் குரலையும் டாமினேட் செய்துவிடுகிறது, இவர் குரல் என் நினைவில் கேட்கவில்லை. 1979இல் நீச்சல் குளம் என்ற படத்துக்கும் இசை அமைத்தாராம், அந்தப் படத்தில் “ஆடிப் பதினெட்டு” என்று எஸ். ஜானகி பாடும் பாட்டு நினைவிருக்கிறது. முறைப்படி இசை பயின்ற அவர் சென்னை இசைக் கல்லூரியிலும் பணி புரிந்தாராம். 1999இல் இறந்துவிட்டார்.
“உனக்காகவா எனக்காகவா” பாட்டை இங்கே கேட்கலாம்.
மீண்டும் கேட்டுக்கொள்ளுகிறேன், ப்ளீஸ், யாராவது விமரிசனம் எழுதுங்களேன்!
அக்டோபர் 11, 2008 at 12:14 பிற்பகல்
ஹி..ஹி..
உங்க அளவுக்கு வராது.. இருந்தாலும் கொஞ்சம் முயற்சி செய்யறேன்.
முதலாளியால் ஜெயிலுக்கு அனுப்பப்படும் அப்பாவி ஹீரோ (அப்பாவியை வச்சுகிட்டு காரியத்தை சாதிக்காம ஏன் ஜெயிலுக்கு அனுப்பறானுக மட முதலாளிகள்?) திரும்பி (வெவரமா) வந்து முதலாளிக்கு குடைச்சல் கொடுக்கும் கதை. (கொஞ்சம் கதை, நிறைய கவர்ச்சி..[வேறொரு வார்த்தை எழுத எண்ணி தவிர்த்துவிட்டேன்] லீலான்னு ஒரு பொண்ணு.. {தமிழ்வாணனின் காதலிக்க வாங்க.. தேவரின் கெட்டிக்காரன் போன்ற படங்களில் நடிச்சிருக்கு.. போணியாகாத பொண்ணு .. பாவம். குரு படத்தில் சைடு வில்லி.. கடைசி காட்சியில் ஸ்ரீதேவியோடு ஃபைட் போடும்} தேங்காயின் மனைவியா வந்து பொடவையைத் தவிர மத்த எல்லா ட்ரெஸ்ஸும் போட்டுகிட்டு தரை டிக்கெட்டை வாழவைக்கும்)
ஒவ்வொரு தடவையும் வில்லனுக்கு குடைச்சல் கொடுத்துட்டு, போன் பண்ணி, “ஹலோ பார்ட்னர்..!”ன்னு ஆரம்பிச்சு நாகேஷ் டயலாக் பேசி டைட்டிலை நியாயப்படுத்துவார். வில்லனின் சன் தேங்காய்.. தத்தி.. அசடு என்பதால் மட்டுமல்ல.. தண்ணியடிச்சுட்டு தத்தி தத்திதான் தவழ்வார்.
ஹ்ம்ம்ம்ம் .. என்னவோ நெனச்சு எடுத்து எப்படியோ முடிஞ்ச படம்.. என் விமர்சனத்தைப் போல..!
போஸ்டர்களின் கைங்கர்யத்தால் படுதோல்வி.. ( நான் 4 தடவை பார்த்துட்டேன்.. இருந்தும் கதையைக் கவனிக்கல..சாரி..!)
அக்டோபர் 13, 2008 at 1:46 மு.பகல்
ராஜா,
இதை ஒரு போஸ்டா போடலாம்னு நினைக்கறேன், சரிதானே?
நவம்பர் 8, 2008 at 4:57 மு.பகல்
தாராளமா போடுங்க பாஸ்..!