நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வீட்டில் ஒரு பெரிய வால்வ் ரேடியோ இருந்தது. நான், என் தங்கைகள், அம்மா எல்லாருக்கும் சினிமா பாட்டில் ஆர்வமும் இருந்தது. ஆனால் வீட்டில் அப்பாவும் இருந்தார்.

எப்போதாவது செய்திகள், கர்நாடக இசை கச்சேரிகள், ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிச்சித்திரங்கள், சிறுவர் சோலை என்று ஒரு ப்ரோக்ராம், நாடகங்கள், அவ்வளவுதான். சென்னை-1 கேட்கலாம். விவித்பாரதி எல்லாம் தீண்டத் தகாத ஸ்டேஷன்கள்.

என் அப்பா நடுவில் ஒரு வருஷம் தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலை செய்தார். வீட்டில் அம்மா, நான், என் இரண்டு தங்கைகள் அவ்வளவுதான். எங்களுக்கு குளிர் விட்டுப் போயிற்று. வீட்டில் எப்போதும் சினிமா பாட்டுதான். ஒன்றும் இல்லாவிட்டால் விவித்பாரதியில் விளம்பரங்கள் கேட்போம். :-) அப்பா திரும்பி வந்தும் எங்களை கண்டுகொள்ளவில்லை.

நினைவெல்லாம் நித்யா வந்த போதுதான் எனக்கு பழைய பாட்டு பைத்தியம். வீட்டில் டேப் எல்லாம் கிடையாது, அதனால் அப்போதெல்லாம் ராத்திரி பத்து மணிக்கு சென்னை-1இல் போடும் பழைய பாட்டுகளை கேட்டுக்கொண்டு மொட்டை மாடியில் ஒரு நாற்பது வாட் பல்ப் வெளிச்சத்தில் எதையாவது படித்துக்கொண்டும், நட்சத்திரங்கள் உதிப்பதையும் மறைவதையும் பார்த்துக்கொண்டும் பொழுதை ஓட்டுவேன். இசையில் நாம் புதிதாக ஒன்றை கேட்டு “அட” என்று வியந்துவிட்டால் – அதுவும் இளமைப் பருவத்தில் வியந்துவிட்டால் – அது நம்முடன் எல்லா காலமும் இருக்கும். நாம் கண்டுபிடித்த இசை அல்லவா அது? எனக்கு அப்போது அதில் ஒரு பெருமை, கர்வம், அடுத்தவர்களின் ரசனையை மட்டம் தட்டி என் ரசனைதான் சிறந்தது என்று சொல்ல விரும்பும் வேகம் எல்லாம் இருந்தது. அதுவும் எப்போது விவித்பாரதி அலறும் வீட்டில் புது பாட்டு கேட்டுக்கொண்டே அவற்றை ரசிப்பவர்களை மனதில் ஒரு அலட்சியத்தோடு பார்ப்பேன். இளைய ராஜா எல்லாரையும் மயக்கினாலும், ஜி. ராமநாதன் மாதிரி வருமா, விஸ்வநாதன் ராமமூர்த்தி மாதிரி வருமா என்றெல்லாம் சொல்லிக்கொண்டு என் ரசனை யாருக்கு வரும் என்ற கர்வத்தோடு அலைவேன்.

அந்த நேரத்திலும் சில புதிய பாட்டுகள் முதல் முறை கேட்ட போதே அசத்தின. என்னால் கூட புது பாட்டுகள் அந்த காலத்து பாட்டுகள் போல வராது என்று சொல்ல முடியவில்லை. “இது ஒரு பொன் மாலை பொழுது”, “என் இனிய பொன் நிலாவே”, “பனி விழும் மலர் வனம்” இந்த மூன்றும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை.

ஞாபகத்திலிருந்து:

பனி விழும் மலர் வனம் – உன்
பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனி மரம்

பனி விழும் மலர் வனம் – உன்
பார்வை ஒரு வரம்
ஹே ஹே இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனி மரம்

சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர் மாலை
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்

பனி விழும் மலர் வனம் – உன்
பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனி மரம்

காமன் கோவில் சிறைவாசம்
காலை எழுந்தால் பரிகாசம்
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளி விடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர் விடும்
கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்

பனி விழும் மலர் வனம் – உன்
பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனி மரம்

பனி விழும் மலர் வனம்
பனி விழும் மலர் வனம்
பனி விழும் மலர் வனம்

வைரமுத்து இதற்கு முன் நல்ல பாட்டுகள் எழுதி இருந்தாலும் இதற்கு பின்தான் அவரது பாட்டுகளை கவனிக்க ஆரம்பித்தேன். I thought he was pretentious, but was capable of turning in a good lyric. Still think the same.

படம் வந்த போது பாட்டு மட்டும் கேட்டால் போதும் என்ற நினைப்பில் பார்க்கவில்லை. சில சமயம் டிவியில் இந்த பாட்டுகளை பார்க்கும்போது குறிப்பாக கார்த்திக் ஜிஜி டான்ஸை பார்க்கும்போது நான் அந்த வயதில் புத்திசாலிதான் என்று தோன்றுகிறது. இப்போது முரளி எழுதிய போஸ்டை படித்த பிறகுதான் படத்தை பார்க்க வேண்டும் போலிருக்கிறது. எல்லாருக்கும் வயது ஆக ஆக புத்திசாலித்தனம் அதிகரிக்கும். எனக்கு ரிவர்ஸில் போகிறதே…