நாகேஷ் பற்றி கமல்
பெப்ரவரி 4, 2009 6 மறுமொழிகள்
விகடனுக்கு நன்றி!
நாகேஷ்…
தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான் களில் முக்கியமான பெயர்!
எல்லோரையும் திகட்டத் திகட்டச் சிரிக்கவைத்த நாகேஷ், ஜனவரி 31-ம் தேதி மாரடைப்பால் காலமாகி, அத்தனை பேரையும் கண்ணீர் சிந்தவைத்துவிட்டார்.
ஒரு காமெடியன் ஹீரோவாகி, ‘சர்வர் சுந்தரம்’, ‘எதிர்நீச்சல்’, ‘நீர்க்குமிழி’, ‘அனுபவி ராஜா அனுபவி’ என்று தொடர்ந்து ஜெயித்த முதல் நடிகர் நாகேஷ்!
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற ஹீரோக்களுக்காகப் படப்பிடிப்பில் நெடுநேரம் காத்திருந்த நகைச்சுவை நடிகர்களுக்கிடையே… அந்த மாபெரும் ஜாம்பவான்களே நாகேஷின் நேரத்துக்காகக் காத்திருந்த சந்தர்ப்பங்களும் உண்டு.
கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் அடையாறில் உள்ள தன்னுடைய கடைசிமகன்ராஜேஷ் பாபு வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார் நாகேஷ். மறைவுச் செய்தி கேட்டு, அவருடைய உடலுக்கு ரஜினி யுடன் அஞ்சலி செலுத்த வந்த கமல்… நெடுநேரம் நாகேஷின் வீட்டிலேயே சோகம் அப்பிய முகத்தோடு காணப்பட்டார்.
கமலிடம் சிறிதுநேரம் பேசியபோது நாகேஷ் பற்றிய தன் நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார்.
”நடிப்பைப் பொறுத்தவரை என்னுடைய ஆதர்சபுருஷர்களின் பட்டியலில் சிவாஜி, நாகேஷ் இருவரும் முக்கியமானவர்கள். சிவாஜியின் இறப்பு எனக்குள் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதோ… அதே போல், நாகேஷின் மரணமும் என்னை நிலைகுலைய வைத்திருக்கிறது. நாகேஷை ‘வாடா… போடா’ என்று வாஞ்சையாக அழைக்கும் உரிமை படைத்த ஒரே நபர் கவிஞர் வாலி. அவரிடம் கேட்டால், ‘நாகேஷ் நினைத்தால் என்னைப் போல் பாடலை எளிதாக எழுதிவிடுவான்’ என்கிறார். நாகேஷை நாயகனாக்கி அழகுபார்த்த என் குருநாதர் பாலசந்தரிடம் பேசினால், ‘திரைப்படத்தை இயக்குவது நாகேஷ§க்கு கம்பசூத்திரமல்ல’ என்று புகழ்கிறார். பல்துறையில் உள்ள வித்தகர்களாலும் நாகேஷின் புத்திசாலித்தனம் பிரமிக்கப்படுகிறது.
பொதுவாக என்னுடைய அலுவலகத்தில் யாருடைய போட்டோவையும் மாட்டி வைக்கும் பழக்கமில்லை. குறிப்பாக, நான் யாருடனாவது சேர்ந்திருக்கும் படங்கள் இருப்பதில்லை, நாகேஷ§டன் நான் சேர்ந்து நிற்கும் ஒரேயரு புகைப்படத்தைத் தவிர! அந்த போட்டோவில் நாகேஷ் என்கிற மகாகலைஞனை அணுஅணுவாக ரசித்து சிலாகித்து நிற்கும் ரசிகன் மனோபாவத்தோடு தான் நான் நிற்கிறேன். திரையுலகில் நாகேஷின் நடிப்பை ரசிப்பவர்கள் அனை வரும் ஒருங்கிணைந்து ‘ஃபேன் கிளப்’ ஒன்று ஆரம்பித்திருந்தால், அதற்கு அன்று முதல் இன்று வரை நான்தான் தலைவராக இருந்திருப்பேன். இதில் மாற்றுக் கருத்து இல்லை.
நகைச்சுவை என்பது நாகேஷின் ரத்தத்தில் கலந்தது. ஒரு படப்பிடிப்பின் இடைவேளை யில், மதிய உணவின்போது சிக்கன் லெக் பீஸை தட்டில் வேகமாகத் தட்டினேன். அதைப் பார்த்த நாகேஷ், ‘ஏம்ப்பா, அதான் ஏற்கெனவே கோழி செத்துடுச்சே… அதையேன் மறுபடியும் மறுபடியும் அடிச்சு சாகடிக்கிறே…’ என்று
சொல்ல… யூனிட்டே கொல்லென்று சிரித்தது. அது மாதிரி இன்னொரு முறை பாழடைந்த வீடு ஒன்றில் ஷ¨ட்டிங். மோட்டு வளையத்தில் ஒட்டடை அதிகமாக இருந்தது. அதைப் பார்த்த ஒருவர், ‘அந்த ஒட்டடைய அடிங்கப்பா…’ என்று சொல்ல… அங்கிருந்த நாகேஷ், ‘ஒட்டடைய அடிச்சா… பாவம் அது விழுந்துடும்…’ என்றார். ‘அடிச்சா கீழ விழத்தானே செய் யும்’ என்று அந்த நபர் பதிலுரைக்க… ‘ஒட்டடைய சொல்லலை. வீடே விழுந் துடும்… ஏன்னா, வீட்டுல ஒட்டடை ஒட்டிக்கிட்டு இல்லை. வீடே ஒட்டடை பலத் துலதான் விழாம இருக்கு…’ என்று துளிகூட சிரிக்காமல் சொல்லி, அந்த இடத்தையே கலகலப்பாக்கினார்.

அடிக்கடி நகைச்சுவைக் கதை சொல்வதிலும் அவர் வல்லவர். ‘ஆறு வயதுச் சிறு வனுடைய அப்பா இறந்து விடுகிறார். அவருடைய திவசத்தின்போது மகன் சோற்றைப் பிண்டமாகப் பிடித்து வைக்கிறான். அதைப் பார்த்த அவன் அம்மா ‘ஐயோ, என்மகன் என்ன அழகா பிண்டத்தைப் பிடிச்சு வைக்கிறான். இதைப் பார்க்கறதுக்கு அவங்க அப்பா இல்லியே…’ என்று புலம்பினார்’ என்று சொன்னார் நாகேஷ். நான் தயாரித்த ‘மகளிர் மட்டும்’ படத்தில் ‘உயிரோட்டம்’ மிகுந்த பிணமாக பிரமாதமாக நடித்திருப்பார் நாகேஷ். இதோ, இங்கே கண்ணாடிப் பெட்டிக்குள் பிரேதமாகக் கிடத்தப்பட்டிருக்கிறார். இதுவும் படப்பிடிப்பில் நடக்கும் ஒரு காட்சியாக இருக்கக்கூடாதா என்று மனசு அடித்துக்கொள்கிறது…” என்றார் கலங்கிய விழிகளுடன் கமல்.
”ஆடி அடங்கும் வாழ்க்கையடா!” என்று பாடிய நாகேஷை, கண்ணாடிப் பெட்டிக்குள் நெருங்கிப் பார்த்தோம். கமல் உணர்வு நமக்குள்ளும் அப்படியே வியாபித்தது.
| பொதுவாக சினிமா நடிகர்கள் சொந்த வாழ்க்கையில் சரிவை சந்தித்தால், அதிலிருந்து மீள்வது அபூர்வம். உதாரணத்துக்கு, எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கிய பிறகு, தங்கள் கலை உலக செல்வாக்கை முற்றிலும் இழந்தனர். ஆனால், இதேபோல தன் உறவினர் ஒருவரின் கொலை வழக்கில் சிக்கினார் நாகேஷ். ஆனால், அதற்கெல்லாம் அவர் கிஞ்சித்தும் துவளவில்லை. அதிலிருந்து முற்றிலும் மீண்டு, முன்பைக் காட்டிலும் நிறைய படங்களில் உத்வேகத்துடன் நடித்து, கடைசிவரையில் மாறாப் புகழுடன் வாழ்ந்து காட்டினார். |
அண்மைய மறுமொழிகள்