
1977ல் வந்தது.
அவர்கள் மூன்று ஆண்கள், ஒரு பெண். ஆண்கள் – ரஜினி காந்த், ரவிகுமார், கமல்ஹாசன். பெண் – சுஜாதா.மூவரும் சுஜாதாவுடன் தொடர்புடையவர்கள். ரஜினிகாந்த் சாடிஸ மனப்போக்குடைய மாஜிக் கணவன். ரவிகுமார் மென்மையான மனப்போக்கு கொண்ட மாஜிக் காதலன். கமல் அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் கேரள “அசடு”.
வீட்டில் மனைவிடம் குத்தல், குதர்க்க வார்த்தைகள், மற்றும் சுடுசொற்கள் பேசும் ஈவிறக்கமற்ற கே.ராமனாதன் (ரஜினி), பம்பாய் அலுவலகத்தின் ஏரியா மானேஜர். அவர் திருமணம் செய்வது மனைவியை கொடுமைப்படுத்தவே என்பது போல் சித்தரிப்பது சிறிது உதைக்கிறது. ஏற்கனவே ஒருவரை நேசித்தபெண் என்று தெரிந்தே அனுபாமாவை திருமணம் செய்துகொள்கிறார்.பின் ஏன் கொடுமைப்படுத்துகிறார் என்பது பாலசந்தருக்கே வெளிச்சம். ரஜனி வழக்கமான ஸ்டைலுடன் அசத்துகிறார். வில்லன் ரோல், காமடி ரோல் இவை இரண்டிலும் ரஜினி சோடை போனதில்லை. இதிலும் அப்படித்தான். கதாபாத்திரத்தின் மேல் வெறுப்பை மிக அற்புதமாக வரவழைத்திருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு. (என் மனைவிக்கு மிஸ்டர். ராமனாதன் மேல் வந்த ஆத்திரத்தைப் பார்த்து அதை ஊர்ஜிடப்படுத்த முடிந்தது.) சட்டரீதியாக விவாகரத்து பெற்று, மன ரீதியாக ஜீவனாம்ஸமும் வேண்டாம் என்று அனு கூறிவிட, ராமனாதன் சந்தோஷமாக தன் வழியே போவதை விட்டு விட்டு தன் ஜென்மத்தின் தலையாய குறிக்கோள் அனுவை மாஜிக் காதலனுடன் சேர விடாமல் இருப்பதே என்று கங்கனம் கட்டுவது திரைக்கதையில் பெரிய ஓட்டை.
பரணியை (ரவிக்குமார்) ஏதோ வேறு ஒரு திரைப்படத்தில் பார்த்திருக்கிறேன். சட்டென்று நினைவிற்கு வரவில்லை. பாவமான முகத்தை வைத்துக் கொண்டு ஒரு ஜெண்டில்மேன் ஆக வந்து போகிறார். அவர் முக்கிய கேள்விகளுக்கு சிம்பாலிக்காகவே பதில் சொல்வதில் (டெலிபோன் மூலமாக, அனுவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்பதை ஷேவ் செய்து கொண்டு வருவது மூலம் சொல்வது)பாலசந்தருக்கே உரித்தான டச் தெரிகிறது. மாஜிக் கணவன் மீண்டும் வரும் பொழுது தான் ஒதுங்கிக் கொள்வது பரணிக் கேரக்டருக்கு மேலும் மெருகு சேர்க்கிறது. புல்லாங்குழல் ஊதும் பொழுது ஒருவித போஸில் நிற்பது கொடுமையாக இருக்கிறது. பிங் பாங் விளையாடுவதைப் பார்க்கும் பொழுது இவர் நிஜமாகவே இது நிறைய விளையாடியிருப்பார் என்று தோன்றுகிறது. அருமையான் ஸ்மாஷ் ஸ்டைல்கள். எதிரில் ரஜினி கொடுமையாக விளையாடிக் கொண்டிருப்பார்.
ஜனார்த்தன் – சுருக்கமாக ஜானி சீனியர் – கமல்; ஜானி ஜூனியர் – கமலின் பொம்மையும், வெண்டிரிலோக்விஸமும். ஜானி ஜூனியர் பாலசந்தர் முத்திரை. சீனியர் எப்படா அனு மெட்ராஸ் வருவார் என்று காத்திருந்தவர் போல் உதவுகிறார். மனைவியை ஸ்டவ் பலியாக்கியது முதல் கும்மிடி அடுப்பு தான் உபயோகப்படுத்துவதாக கூறுகிறார். சொதப்பல். திருவனந்தபுரம் புறப்படும் அனுவிடம் தன் காதலுக்கு சாதகமாக பதில் வந்துவிடாதா என்று கடைசிவரை ட்ரெயின் ஜன்னலில் தோன்றி தோன்றி மறைவது அருமையான சீன். அழுத்தக்கார அனு பதிலே பேசாமல் ஏமாற்றிவிடுகிறார். ஆனால் மிகவும் பிராக்டிகல். ஜூனியர் மூலமாக தன் காதலை வெளிப்படுத்தியும் திரைக்கதையின் வசதிக்காக அனு புரிந்துகொள்ளாமல் இருந்துவிடுவது பரணியுடன் மறைமுகமாகவே அதாவது சிம்பாலிக்காகவே சம்பாஷனை செய்யும் அனு காரக்டருக்கு பொருந்தவில்லை. அப்பாவி ஜானி சீனியர் ரோலில் கமல் அலட்சியமாக ஜமாய்த்திருக்கிறார்.
அனுபாமா (சுஜாதா) மிகுந்த புத்திசாலியாக அறிமுகப்படுத்தப்படுகிறார். பின் உண்மையில் ஒரு முட்டாள் பெண் என்று ராமனாதனின் அம்மா எல்லோருக்கும் புரிய (?) வைத்துவிடுகிறார். முற்போக்கிற்கும், பாரம்பரியத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு முட்டாள் என்ற பெயர் பொருத்தம் நியாயம் அளிக்காது. எதற்க்கும் அழாத அனு கடைசியில் தன் சுகங்களை துறந்து தன்னுடன் திருவனந்தபுரம் கிளம்பிவிடும் மாமியாரின் மேன்மையான, மென்மையான குணத்த்திற்கு அணையை உடைத்து விடுகிறார்.
ராமனாதனின் அம்மா – (யாரிவர்? – லீலாவதி என்று பெயர் பார்த்தேன்) குற்ற உணர்ச்சி மிக்க மாமியார். மகன் செய்யும் கொடுமைகளுக்கு இவர் வேலைக்கார ஆயாவாக வந்து பிராயசித்தம் செய்துகொள்கிறார். பாத்திரம் கற்பனைக்கு நன்றாக இருக்கிறது.பெண்களை நிச்சயம் கவரும். ஆமாம். எல்லாருக்கும் தலை சிறந்த மாமியார் கிடைப்பது என்பது கற்பனையுடன் நின்று விடுகிறது.
கே.பாலச்சந்தரின் டிலெம்மா இதுவே. சட்டபூர்வமாக விவாக ரத்து ஆன பெண், மத பூர்வமாக திருமணத்தின் போது கணவனால் கட்டப்பட்ட தாலியை என்ன செய்யவேண்டும்? போனால் போகட்டும் என்று கழுத்திலேயே விட்டுவிடுவதா? மறுமணத்திற்கு இடைஞ்சல் கொடுக்குமே? கடைசியில் கோவில் உண்டியலில் விடைப் பெற்றுவிடுகிறார்.
”இப்படிஓர் தாலாட்டு”, ”ஜூனியர் ஜூனியர், இரு மனம்” மற்றும் “காற்றுக்கென்ன வேலி” பாடல்கள் கேட்கும் படியாக இருக்கிறது. அனைத்துப் பாடல்களையும் SPB, S.ஜானகி மட்டுமே பாடியிருக்கிறார்கள். M.S. விஸ்வனாதன் இசை.
பாலச்சந்தர் கிளாசிக்.
10க்கு 6.
ஜூலை 11, 2009 at 1:43 மு.பகல்
இரவிக்குமார், தமிழ்ப்படங்களில் அதிகமாக நடித்தில்லை. ஐ.வி.சசி இயக்கிய ‘பகலில் ஒரு இரவு’ என்றப்படத்தில் ஒரு பிரதான பாத்திரத்தில் நடித்து இருந்தார். விஜயகுமார், ஸ்ரீதேவி நடித்த அந்தப் படத்தில் இளையராஜா கலக்கி இருப்பார். இளமை என்னும் பூங்காற்று என்ற பாடல் இடம் பெற்றது இந்தப் படத்தில்தான்!. ஸ்ரீதேவியின் மினி ஸ்கர்ட் ஸ்டில் இன்னும் பல பேரின் கண்ணுக்குள் இருக்கும். நீங்கள் படிக்கிற காலத்தில் “விக்டோரியா” தியேட்டர் பக்கம் ஒதுங்கி இருந்தால் இரவிக்குமாரின் எதாவது ஒரு மளையாளப் படத்தைப் பார்த்து இருக்கலாம்!
)
நீங்கள் குறிப்பிட்ட இராமநாதனின் அம்மாவாக நடித்த நடிகை கன்னடத்தில் பிரபலமானவர். தமிழில் பாலசந்தரின் படங்களில் மட்டும் அதிகமாக நடித்து இருக்கிறார். அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், மனதில் உறுதி வேண்டும் போன்ற படங்களில்!. இவர் இளமையாக இருந்த காலத்தில் தமிழில் நடித்தபடம் (எனக்குத் தெரிந்து) சுமைதாங்கி!. இதில் முத்துராமனின் மனைவியாக வருவார். நினைவு படுத்திப் பாருங்கள்!
ஜூலை 11, 2009 at 5:38 மு.பகல்
ரவிக்குமார் தமிழின் தலை சிறந்த தொ.கா. தொடரான ‘சித்தி’யில் நடித்திருந்தார். பின்னர் ஒருசமயம் ‘இளமை என்னும் பூங்காற்று’ பாடலை பார்த்து இவரா இப்படின்னு நினைக்கவைத்து விட்டார்.
பாலசந்தர் அவர்களது படங்களின் பாடல்கள் மிகவும் அருமையாக அமைந்திருக்கும். காரணம் படத்தில் சரியான இடத்தில் சரியான வரிகளுடன் பாடல் இடம் அமைந்திருக்கும். தெய்வம் தந்த வீடு, இலக்கணம் மாறுதோ இன்னும் ஏராளம்
ஜூலை 12, 2009 at 8:40 மு.பகல்
Yes,Leelavathi is from Kannada films,she has acted with Dr. Raj Kumar in several kannada movies. had a sister by name mynavathi.
Our friend Mr. Nallathanthi is right. she was the silently suffering “anni” in sumaithangi.
raajoo
ஜூலை 12, 2009 at 9:50 மு.பகல்
//had a sister by name mynavathi//
இராஜகோபாலன் சார்!. மைனாவதி திருமதி. பண்டரிபாயின் தங்கை!
ஜூலை 12, 2009 at 10:12 மு.பகல்
You are right.Arrvakkkolarail vanda tavaru!the names,leelavathy and mynavathy were rhymingly nice!
ஜூலை 12, 2009 at 9:16 மு.பகல்
ரவிக்குமார் நடித்த இன்னொரு தமிழ்த்திரைப்படம் ஜெய்சங்கர், சீமா, கே.ஆர்.விஜயா நடித்த ‘ஒரே வானம் ஒரே பூமி’ (நினைவிருக்கிறதா?. அமெரிக்காவில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம்). அதில் நடிகை விதுபாலாவின் (எழுத்துப்பிழையில்லை. சரியான பெயர் அதுதான்) ஜோடியாக வருவார். இவர் நடிகை சுமித்ராவின் முதல் கணவர் (இப்போதும் அவர்தானா?. விவாகரத்தானதாக சின்ன நினைவு).
அவர் சித்தி சீரியலில் மட்டுமல்ல, ராதிகாவின் ‘செல்வி’ மற்றும் ‘அரசி’ சீரியல்களிலும் நடித்திருக்கிறார். (ராதிகாவின் வளர்ப்புத்தந்தை).
ஜூலை 12, 2009 at 4:22 பிற்பகல்
நல்லதந்தி, நித்தில், ஆம் அவர் நடித்த பகலில் ஒரு இரவு. நினைவி படுத்தியதற்கு நன்றி.
ராஜகோபால், நன்றி.
சாரதா, நன்றி. ஒரே வானம் ஒரே பூமி நினைவு இருக்கிறது. அமெரிக்காவில் எடுத்த்து என்பதை தவிர அந்த வயதிலேயே (சினிமா என்று எதை போட்டாலும் பார்க்கும் வயதிலேயே) பார்க்கமுடியவில்லை.
ரவிக்குமாருக்கு இவவளவு தமிழ் ப்ரெசென்ஸ் இருக்கிறது என்பது ஆச்சரியமாக் இருக்கிறது.
ஜூலை 13, 2009 at 7:05 மு.பகல்
தகவல் களஞ்சியமாக இருக்கிறது.
அனைவருக்கும் நன்றி..