வழக்கம் போல பாஸ்டன் பாலா லிஸ்ட் கொடுத்திருக்கிறார், வழக்கம் போல என் ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள். ஆனால் எனக்கு திரைக்கதையை குறிப்பாக ரசிக்க தெரியுமா என்பது எனக்கே சந்தேகம்தான்.
1. என்னதான் முடிவு திரைக்கதை+இயக்கம் கே எஸ் கோபாலகிருஷ்ணன் – பார்த்ததில்லை.
2. சாது மிரண்டால் திரைக்கதை+இயக்கம் திருமலை/மகாலிங்கம் – எனக்கு ஒன்றும் சிறப்பாக தெரியவில்லை.
3. காவல் தெய்வம் திரைக்கதை, இயக்கம் ஜெயகாந்தன், கே. விஜயன் – பார்த்ததில்லை.
4. யாருக்காக அழுதான் திரைக்கதை+இயக்கம் ஜெயகாந்தன் – மங்கலாகத்தான் நினைவிருக்கிறது. வித்தியாசமான கதை.
5. அவர்கள் திரைக்கதை+இயக்கம் கே. பாலச்சந்தர் – நல்ல திரைக்கதை. முழு விமர்சனம் இங்கே.
6. மன்மத லீலை திரைக்கதை+இயக்கம் கே. பாலச்சந்தர் – எனக்கு ஒன்றும் சிறப்பாக தெரியவில்லை.
7. அவள் அப்படித்தான் திரைக்கதை+இயக்கம் அனந்து, ருத்ரையா – பார்த்ததில்லை.
8. நாயகன் திரைக்கதை+இயக்கம் மணிரத்னம் – நல்ல திரைக்கதை.
9. கல்லுக்குள் ஈரம் திரைக்கதை, இயக்கம் செல்வராஜ், பாரதிராஜா – மிக வித்தியாசமான, நல்ல திரைக்கதை. மெதுவாக போவதுதான் ஒரே பிரச்சினை. ஓடாதது துரதிருஷ்டம்தான்.
9. தேவர் மகன் திரைக்கதை, இயக்கம் கமல்ஹாசன், பரதன் – புத்திசாலித்தனமான திரைக்கதை. பாத்திரங்கள் நன்றாக செதுக்கப்பட்டிருக்கும்.
10. மகாநதி திரைக்கதை+இயக்கம் கமலஹாஸன், சந்தானபாரதி – உலகத்தில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் கதாநாயகன் தலையில் விடிவது சிவாஜியோடு போய்விடவில்லை. இருந்தாலும் சுவாரசியமான திரைக்கதை. கல்கத்தா போவது, சிறைச்சாலை காட்சிகள், விவசாய வாழ்க்கை எல்லாம் நன்றாக வந்திருக்கும்.
11 .அலைபாயுதே திரைக்கதை+இயக்கம் மணிரத்னம் – புத்திசாலித்தனமான திரைக்கதை.
12. ஹே ராம் திரைக்கதை+இயக்கம் கமல்ஹாஸன் – நல்ல திரைக்கதை.
13 . அன்பே சிவம் திரைக்கதை, இயக்கம் கமல், சி. சுந்தர் – மிக நல்ல திரைக்கதை. கடைசி முடிவுதான் – மாதவன் கிரணை திருமணம் செய்து கொள்வது – கொஞ்சம் செயற்கையாக இருக்கும்.
14. மும்பை எக்ஸ்பிரஸ் திரைக்கதை, இயக்கம் கமல், சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் – நல்ல திரைக்கதை. ஓடாதது துரதிருஷ்டம்.
15. விருமாண்டி திரைக்கதை+இயக்கம் கமல் – கமலுக்கு ராஷோமொன் மாதிரி படம் எடுக்க ஆசை. எப்படி முடிப்பது என்றுதான் தெரியவில்லை. ஆனால் நல்ல திரைக்கதை.
16 . பருத்திவீரன் திரைக்கதை+இயக்கம் அமீர் – ஹைப் இருக்கும் அளவுக்கு கதை இல்லை.
கிட்டத்தட்ட பாதி கமல் எழுதிய திரைக்கதைகள். அப்புறம் பாலச்சந்தர், ஜெயகாந்தன் என்று usual suspects. அமீர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், செல்வராஜ் (பாரதிராஜா) என்று சிலர். ஸ்ரீதர், பாலு மகேந்திரா யாரையும் காணோம்.
தொடர்புடைய பதிவுகள்
அவர்கள் பட விமர்சனம்
செப்டம்பர் 18, 2009 at 2:06 பிற்பகல்
#14 & #15 – திரைக்கதை ஒழுங்காக இருந்திருந்தால் வென்றிருக்கும்
செப்டம்பர் 18, 2009 at 5:48 பிற்பகல்
இந்தியாவிலேயே சிறந்த திரைக்கதையாளர் பாக்யராஜ் என்று சொல்லப்படுகிறதே.அவரை விட்டு விட்டதேன்?
செப்டம்பர் 19, 2009 at 5:21 மு.பகல்
‘மகாநதி’ கிருஷ்ணசாமிக்கு அப்படியொன்றும் உலகத்திலுள்ள கஷ்ட்டங்களும் வருவதாக காட்டப்படவில்லை. அவரது வாழ்க்கையில் ஏற்படும் கஷ்ட்டங்கள்தான் காண்பிக்கப்படுகின்றன. அதுபோல சிவாஜியின் எந்தப்படத்திலும் உலக கஷ்ட்டங்கள் அனைத்தும் அவருக்கு வருவதாக காண்பிக்கப்படவில்லை. அப்படீன்னா, உலகத்தில் கஷ்ட்டப்படுபவர்களே இல்லையா?. கதாநாயகனின் சிரமங்களைக்காட்டுவது தவறான விஷயமா?. உலகத்தில் எல்லோருமா வில்லனுடன் சிரித்துக்கொண்டே சண்டைபோட்டு, கதாநாயகியின் இடுப்பைத்தடவி டூயட் பாடிக்கொண்டிருக்கிறார்கள்?. அப்படிப்பார்த்தால் எம்.ஜி.ஆர்.கூடத்தான், உலகத்தில் அனைவரது கஷ்ட்டங்களையும் தீர்த்து வைக்கும் ஒரே ஆபத்பாந்தவனாக வருவார். (படு செயற்கை). (ம்காநதியில் சிவாஜி இழுக்கப்படும்போது, எம்.ஜி.ஆரும் இழுக்கப்படுவதில் தவறில்லை).
நீங்கள் சொன்ன மகாநதியின் சிறப்பம்சங்கள் உண்மையில் அருமையானவை. இப்படத்துகு முன்வரை சிறைச்சாலை என்றால், பிரதான கதவில் இருக்கும் சிறிய கதவைத் திறந்துகொண்டு கதாநாயகன் விடுதலையாகி வருவார். அல்லது கைதிகள் அலுமினிய சாப்பாட்டுத்தட்டில் தாளம் போட்டுக்கொண்டு, ஜெயிலரை சுற்றிப் பாட்டுப்பாடுவார்கள். இப்படித்தான் காண்பிக்கப்பட்டன. முதல் முறையாக, ‘சிறைக்குள் இவ்வளவு கொடுமைகள் நடக்கின்றனவா’ என்று அதிர்ச்சியடைய வைத்த படம் மகாநதி.
அதுபோலவே கல்கத்தா காட்சி. கதாநாயகன் பறந்து பறந்து சண்டைபோட்டு தன் மகளைக்காப்பாற்றிக் கொண்டு வருவதாக காட்டியிருந்தால், படம் அரபிக்கடலின் ஆழத்தில் விழுந்திருக்கும். அங்கிருப்பவர்களிடம் கெஞ்சி, மண்டியிட்டு, விலைமாதர்கள் இடும் பிச்சைக்காசில் மகளைக்காப்பாற்றி வருவதாகக் காட்டியதால்தான், எவரெஸ்ட்டின் உச்சியைத்தொட்டது.
பாலுமகேந்திராவின் படம் எதையும் குறிப்பிடவில்லை என்றீர்கள். பாலுமகேந்திரா ஒரு அற்புதமான ஒளிப்பதிவாளர். அவ்வளவுதான். மற்றபடி அற்புதமான இயக்குனர் எல்லாம் இல்லை. அவரது மூடுபனி, மூன்றாம் பிறை, ரெட்டைவால் குருவி எல்லாம் ஆங்கிலப்படங்களின் தாக்கங்கள். ஒளிப்பதிவாள்ராக இருந்து இயக்குனரானதில் பாலுமகேந்திராவைவிட தங்கர்பச்சன் ஒருபடி மேலாகத்தெரிகிறார்.
மன்மத லீலையைச் சேர்த்தது ஏன் என்று எனக்கும் புரியவில்லை. அபூர்வராகங்களுக்கு பதிலாக மாற்றிச்சொல்லிவிட்டாரா?.
விருமாண்டியில் அளவுக்கு மீறிய வன்முறை, அரிவாள் கலாச்சாரம், ரத்தக்களரி.
செப்டம்பர் 19, 2009 at 6:13 மு.பகல்
சாரதா,
ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த பக்கம் வந்திருக்கீங்க. சந்தோஷமா இருக்கு. என்னங்க சிவாஜியை ஏதாவது சொன்னாதான் தலையை காமிப்பீங்களா?
மகாநதியில் எல்லா கஷ்டமும் கமல் தலையில்தான் விடிகிறது என்பதில் எனக்கு மாற்றம் இல்லை. பாருங்க, அவர் மாட்டிக்கிட்டு ஜெயிலுக்கு போறார். சரி அதான் கதை. அப்புறம் அவர் பொண்ணு சோனா கச்சிக்கு போவுது. சரி. பாட்டி எதுக்கு சாவறாங்க? பையன் எதுக்கு காணாம போறான்? எல்லாரும் ஐயோ பாவம் கிருஷ்ணசாமின்னு சொல்லிக்கிட்டே இருக்கனும்காரத்துக்காகத்தான்! பாச மலர்ல சிவாஜிக்கு கண்ணு போவது மாதிரிதான். வெளி நாட்டுக்கு போன எம்.என்.ராஜம் புருஷன் என்ன ஆனான்னு ஒரு அஞ்சு வருஷம் கண்டுக்காம இருந்துட்டு சிவாஜி செத்த பிறகு வந்து அழற மாதிரிதான். சிவாஜிக்கு அப்படி ஒரு அறுபதுகளில் ஆரம்பித்து அப்படி ஒரு phase இருந்தது நீங்க எவ்வளவுதான் மறுத்தாலும் உண்மைதான். மோட்டார் சுந்தரம் பிள்ளையில அவர் சொல்ற வசனம் மறக்க முடியாதது – சவுகாருக்கு பத்து குழந்தை, மனிமாலாவுக்கு நாலோ என்னவோ – அவர் சொல்லுவார் 25 வருஷமா நரக வேதனைப்படறேன்னு! இருவர் உள்ளத்துல இவருக்கு எதிரா அப்பா ரங்காராவே வாதாடுவார் – அப்பதானே இவர் என் கல்லறையில் ஒரு பூ வையுங்கல்னு வசனம் பேசலாம்! தவப்புதல்வன்ல மாலைக்கண்ணுன்னு சொன்ன அம்மா உயிர் போயிடும்! அப்புறம் எம்ஜிஆர் படக் கதைகள் மிக தட்டையானவை, செயற்கையானவை, ஏதோ சின்னப் பிள்ளைக்கு கதை சொல்ற மாதிரி இருக்கும் என்ற விஷயம் ஊரறிந்தது. அவருக்கு ஒரு ஆறேழு நல்ல படம் தேறினால் ஜாஸ்தி. சிவாஜி நடித்த பல படங்கள் மிக தட்டையானவை, செயற்கையானவை என்பதைத்தான் நீங்க ஒத்துக்கொள்ள மறுக்கிறீங்க.
சிவாஜிக்கு ஆனா ஒரு இருபது இருபத்தைந்து படம் தேறும்கரதையும் நான் வெளிப்படையா சொல்லிடறேன்.
பாலு மகேந்திராவின் வீடு,சந்தியா ராகம் இரண்டும் எனக்கு ஒரிஜினலாகவும் நல்ல படங்களாகவும் தெரிந்தது. பாலச்சந்தருக்கு நான் நிழல் நிஜமாகிறது, மேஜர் சந்திரகாந்த், பாமா விஜயம் மாதிரி படங்களை நல்ல திரைக்கதை உள்ளவையாக சொல்வேன். பாக்யராஜுக்கு முந்தானை முடிச்சு. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
சண்டை போடவாவது அடிக்கடி வாங்க! We all miss you!
செப்டம்பர் 19, 2009 at 12:40 பிற்பகல்
டியர் RV…
நான் ரொம்ப நாளைக்கப்புறம் இந்தப்பக்கம் வந்திருக்கேன் என்று சொல்வது ரொம்ப தப்பு. நான் அடிக்கடி வந்து பார்ப்பேன். ‘ப்ளாக்’க்கில் எந்த புதிய போஸ்ட்டும் இல்லாமல் காய்ந்துபோய் கிடக்கும். நீங்களே ரொம்ப நாளைக்கப்புறம் இப்போதானே தலை காட்டறீங்க. (நீங்க வரமுடியாத காரணம், நீங்க ஏற்கெனவே சொல்லியிருப்பதால் விட்டு விடுவோம்).
மற்றபடி, நானோ மற்றவர்களோ குறை சொன்னபிறகுதான், எம்.ஜி.ஆரைப்பற்றிப் பேசுவீங்க. ஆனால் சிவாஜியை தேவையில்லாமல் எல்லா இடத்திலும் வம்புக்கு இழுப்பீங்க. நீங்க குறிப்பிட்டிருக்கும் படங்கள் அத்தனையும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெரும் வெற்றியடைந்தவை. அப்படிப்பார்த்தால், இம்மாதிரி குறைகள் சிவாஜி படத்தில் மட்டுமல்ல, அப்போது வந்த ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., கே.எஸ்.ஜி., என்று எல்லோருடைய படங்களிலும்தான். ஆனால் நீங்கள் வம்புக்கு இழுப்பது சிவாஜியை மட்டும்தான். (மனதில் பெரிய பாரத்தை சுமந்துகொண்டு சொல்ல முடியாமல் அல்லாடிக்கொண்டிருப்பவருக்கு, குழந்தைகளே பிறக்கக்கூடாது என்று எந்த சம்பந்தமும் இல்லையே).
மகாநதியை எடுத்துக்கொள்ளுங்கள். குடும்பத்தலைவன் ஜெயிலுக்குப்போய்விட்டான். வருமானத்துக்கும் வழியில்லை. வயதான மாமியாரும், இரண்டு குழந்தைகளும் என்னாவார்கள்?. அதிலும் வில்லனாக வருபவன் ஒரு பெண்பித்தன். மொட்டுக்களை கசக்கி எறியும் காமுகன். இந்நிலையில் குடும்பம் சிதறித்தானே போகும்?. அந்தக்கஷ்டத்தைக்கூட காட்டவில்லையென்றால் பின்னர் கதை எப்படி போகும்?.
உங்கள் கணக்குப்படி ஏழெட்டு நல்ல படங்களை மட்டுமே தந்த எம்.ஜி.ஆரும், இருபத்தைந்து நல்ல படங்களை மட்டுமே தந்த சிவாஜியும் தான் இன்றைக்கும் தமிழ்ப்பட உலகின் அடையாளங்களாக (icon) போற்றப்படுகிறார்கள் என்பதிலிருந்தே உங்கள் கணக்கு தப்பு என்று தோன்றவில்லையா?.
செப்டம்பர் 19, 2009 at 1:47 பிற்பகல்
டியர் RV…
நீங்கள் ‘நல்ல திரைக்கதை’ என்று பாராட்டியிருக்கும் நாயகனில் உள்ள சில ஓட்டைகளைப் பார்ப்போமா.
ஒருவர் ஆறுவருஷம் புத்தகத்தில் இந்தி படிப்பதைவிட ஆறு மாதம் பம்பாயில் தங்கியிருந்தால், நன்றாக இந்தி பேசுவார் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் எட்டு வயதிலேயே தூத்துக்குடியிலிருந்து பம்பாய்க்கு ஓடிப்போன வேலு நாயக்கர் மட்டும், கடைசிவரை இந்தி பேசத்தெரியாமல் விழிப்பாராம்… நல்ல கதையா இருக்கே.
Horbour Kings என்று பெயர்பெற்ற ரெட்டியும், கோலியும் கூட கொண்டுவரமுடியாமல் கப்பலில் இருக்கும் கள்ளக்கடத்தல் சரக்குகளை, நாயக்கர் சர்வசாதாரணமாக, இளையராஜாவின் ‘ஓடுற நரியில ஒரு நரி கள்ள நரிதான் கச்சும் கச்சும்’ பாட்டையும் குயிலியின் டான்ஸையும் ரசித்துக்கொண்டே போய் கொண்டு வந்துவிடுவாராம். தகவல் கிடைத்தும் படகுக்கு வரும் கஸ்டம்ஸ் அதிகாரிகள், ‘தேவையில்லாமல் எதுக்கு நாலைந்து கயிறுகள் கடலுக்குள் தொங்கிக்கொண்டிருக்கின்றன?’ என்று சந்தேகப்படாமல் போய்விடுவார்களாம்… நல்ல கதையா இருக்கே.
பம்பாயில் நடக்கும் எல்லா விஷயங்களும் உடனுக்குடன் தெரிய வரும் வேலுநாயக்கருக்கு, தன் மகன் சூர்யா இறந்துபோய், அவன் உடல் தன் வீட்டுக்கூடத்தில் கிடத்தப்பட்டு, மும்பையில் இருக்கும் எல்லோருக்கும் தகவல் தெரிந்து அவர்களெல்லாம் வந்தபின்னும் கூட வீட்டுக்குள் இருக்கும் இவருக்கு மட்டும் தெரியாதாம்… நல்ல கதையா இருக்கே.
(தேடிப்பிடித்தால் இம்மாதிரி குறைகள் நிறைய மாட்டும்)
சாதாரண படமென்றால், இம்மாதிரி குறைகள் இருக்கலாம். ஆனால் ‘தமிழில் இம்மாதிரி படமே வந்ததில்லை ஆகா.. ஊகூ..’ என்று தலையில் வைத்துக் கொண்டாடப்படும் ஒரு படம், இதுபோன்ற சர்ச்சைகளுகெல்லாம் அப்பாற்பட்டு இருக்க வேண்டும்.
செப்டம்பர் 19, 2009 at 8:01 பிற்பகல்
[...] [...]