சாவித்ரி – அந்த கால அரிய புகைப்படங்கள் 1
ஆகஸ்ட் 30, 2010 4 மறுமொழிகள்
விமல் இப்படி ஒரு ஃபோட்டோ சீரிஸ் ஆரம்பிக்கலாமே என்று சொன்னார். நான் அன்றும் இன்றும் சீரிஸில் மிச்ச எல்லாவற்றையும் (இன்னும் கூட வரும்) போட்டுவிட்டு இங்கே வரவே இத்தனை நாளாகிவிட்டது. இந்த சீரிசை அவர் தொடர்வாரா என்று தெரியாது.
தொகுக்கப்பட்ட பக்கம்: இப்போதைக்கு ஆளுமைகள்–>அன்றும் இன்றும்

கடைசி போட்டோவில் உள்ள சாவித்திரியை பார்த்தால் மிகவும் பரிதாபமாக உள்ளது.
இதை பற்றி ஒரு பிரபல எழுத்தாளர் சிவசங்கரி எழுதியுள்ளது……..
—-
அன்று…
அப்போது எனக்கு என்ன வயசிருக்கும்?
பத்து..? பதினொன்று..?
என் ஸ்நேகிதிக்கும் எனக்கும் ரொம்ப நாட்களாக ஒரு ஆசை… குண்டு முகமும்,
வண்டுக் கண்களும், ஈர உதடுகளும், அருமையான நடிப்புமாய் இருக்கும் சாவித்திரியை
எப்படியாவது நேரில் பார்த்து ஒரு சில வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று!
எங்கு பார்ப்பது? எப்படிப் பேசுவது?
”பாண்டிபஜார் ராஜகுமாரி தியேட்டருக்குப் பக்கத்துலதானாம் சாவித்திரி வீடு.”
தெருப் பெயர், வீட்டு நம்பர் தெரியாது. யாரையாவது நிறுத்தி ‘நடிகை சாவித்திரி
வீடு எது?’ என்று கேட்கக் கூச்சம். தணிகாசலம் செட்டி தெரு, டாக்டர் சிங்காரவேலு தெரு
என்று ஒவ்வொன்றாகப் புகுந்து புறப்பட்டோம். பெரிசாய்க் காணப்பட்ட வீடுகளின் முன் நின்று, சாவித்திரியின் முகம் தெரிகிறதா என்று தேடினோம்.
எங்கள் அதிர்ஷ்டம்… மாரீஸ் மைனர் காரை தானே ஓட்டிக்கொண்டு சாவித்திரி எங்களைக் கடந்து சென்றார். ஓட்டமும் நடையுமாக அந்த வண்டியைத் தொடர்ந்தோம். நல்லவேளையாக, நாலாவது வீட்டு காம்பவுண்டுக்குள் அந்தக் கார் நுழைந்துவிட்டது.
பொசு பொசுவென்று மூச்சுவிட்டுக்கொண்டு, கேட்டைத் தாண்டி, போர்ட்டிகோவில் நின்றோம்.
”எவரும்மா அதி?” – தெலுங்கில் ஒரு பெரியவரின் வினவல்.
”சாவித்திரியைப் பார்க்கணும்.”
”அதெல்லாம் முடியாது. அவங்க வீட்டுல இல்லே!”
”இப்பப் பார்த்தோமே, தானே வண்டியை ஓட்டிண்டு வந்தாங்களே..!”
”அது சாவித்திரி இல்லே, அவங்க அக்கா! போங்க, போங்க..!”
மனுஷர் பொய் சொன்னதும் எங்களுக்கு அழுகையே வந்துவிட்டது. ஆனால், அடுத்த
நிமிஷம்… யார் செய்த புண்ணியமோ, சாவித்திரியே வாசலுக்கு வந்து விட்டார்.
மேக்கப் போட்ட முகம்; கோடு போட்ட ஷிபானோ ஏதோ… மெல்லிய புடவை; திலகம்;
சிரிப்பு; அழகு.
”யாரும்மா?”
”நாங்க உங்க ஃபேன்ஸ். ரொம்ப நேரமா வெயில்ல காத்திட்டிருக்கோம்.”
”அப்படியா? ஷூட்டிங்லேர்ந்து நேரா இப்பதான் வரேன். சாப்டுட்டுத் திரும்பப்
போகணும். சொல்லுங்க, என்ன வேணும்?”
”ஆட்டோகிராப்…”
”அவ்வளவுதானே… கொடுங்க.”
நீட்டிய புத்தகத்தை மாரீஸ் மைனர் கார் மேல் வைத்து ‘சாவித்திரி’ என்று இடது
கையால் கையெழுத்துப் போட்டார்.
கிட்டத்தில் – ரொம்பக்கிட்டத்தில், அவர் சேலை நம் மேல் படுமளவுக்குக் கிட்டத்தில் நின்று பார்த்தபோது பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
நாங்கள் ”மனம்போல மாங்கல்யத்தில் உங்க நடிப்பு பிரமாதம்” என்று சொல்லவும்,
அவர் சிரித்தார். ”தாங்க்ஸ்” என்றார்.
அந்தச் சிரிப்பும் குரலும் ரொம்ப நாட்களுக்கு மனசில் பசுமையாக இருந்தது நிஜம்.
இன்று…
சாவித்திரி உடம்பு சரியில்லாமல் படுத்து ஒரு வருஷமாகிவிட்டது!
அண்ணா நகர்; சின்ன வீடு; வாசலில் பழசாகி, உதிரும் நிலையில் ஒரு
தென்னங்கீற்றுப் பந்தல்.
நுழைந்ததும் ஒரு ஹால்.
மேஜை மேல் – ஒருக்களித்து உட்கார்ந்து, தலையை மேலே நிமிர்த்தி, கூலிங்கிளாஸ்,
பூப்போட்ட சேலையில் அழகாய்க் காட்சி தரும் சாவித்திரியின் படம். ஈரம்
பளபளக்கும் உதடுகளோடு சிரிக்கும் சாவித்திரியின் இன்னொரு ஓவியம்! மங்கி,
பாலீஷ் இழந்த கேடயங்கள் ஓரிரண்டு…
கிழிந்த அழுக்கு சோபாக்கள், காற்றில் ஆடும் பழைய கர்ட்டன்கள், சொறி பிடித்த
வெள்ளை நாய் ஒன்று….
முன்கூட்டியே தெரிவித்துவிட்டுச் சென்றதால் மகன் சதீஷூம், உறவினர்
வெங்கடரத்தினம் பாபுவும் வரவேற்று அமரச் சொன்னார்கள்.
”அம்மகாருவைப் பார்க்கிறீங்களா?”
உள்ளே இன்னொரு அறைக்குள் நுழைகிறோம்.
படுக்கையில் எலும்புச்சுருளாக அவர். ரொம்ப சூம்பிப் போன கை, கால்கள்…
கறுத்துப்போன தோல்… மூன்று வயசுப் பிள்ளையின் வளர்த்தி. மூடின கண்கள்;
மூக்கிலிருந்து ஓடும் ரப்பர் குழாய்; மழமழவென்று வாரி இரட்டைப் பின்னலாகப்
பின்னி, மடித்துக் கட்டப்பட்ட முடி; சிவப்புப் பொட்டு.
”அம்மகாரு ச்சூடு… அம்மகாரு இக்கட ச்சூடு! மீ ப்ரெண்ட் ஒச்சுண்டாரு…
ச்சூடும்மா” என்று நர்ஸூம் பாபுவும் குனிந்து குரல் கொடுக்க, சாவித்திரி
மெதுவாகக் கண்களைத் திறக்கிறார்.
உள்ளுக்குள் என்னமோ வேதனை இருக்கிற தினுசில் கைகளை இப்படியும், அப்படியும்
சுழற்றுகிறார்; மஞ்சள் ஏறிப்போன பற்களை ‘நக் நக்’ கென்று கடிக்கிறார்; அரை
நிமிஷம் என்னை உறுத்துப் பார்க்கிறார். திரும்ப கண்களை மூடி, அமைதியாகிறார்.
ஹோ… சாவித்திரியா! இவரா!
நவரசங்களையும் விழியோரத்தில் நிறுத்தி, உதட்டசைவால் அனைவரையும் ஆக்கிரமித்து,
நடிகையர் திலகம் என்ற பட்டப் பெயரோடு பவனி வந்த சாவித்திரி இவரா?
இல்லை, இல்லை… நம்பமாட்டேன்! சத்தியம் பண்ணினாலும் இது சாவித்திரி என்று
ஒப்புக் கொள்ளமாட்டேன்.
கண்ணில் ஊறிவிட்ட ஜலத்தைச் சமாளிப்பதற்காகத் தலையைக் குனிந்து கொள்கிறேன்.
கவனத்தை அறையின் மற்ற விவரங்களில் செலுத்துகிறேன்.
ஒரு பக்கமாய் ஸ்டெரலைஸ் செய்யும் பாத்திரம்… ஒரு மேஜையில் காம்ப்ளான்,
ப்ரொடீனெக்ஸ், மருந்துகள்… உடம்புப் புண்களைத் தவிர்க்க ‘ஆல்ஃபாபெட்’ என்ற
படுக்கையை உபயோகிக்கிறார்கள்.
இது குமிழ் குமிழான ரப்பராலான படுக்கை. மின்சாரத்தில் இயங்கி, சிறு அலைகளை
உண்டாக்குவதன் மூலம் காற்றோட்டத்தை உண்டாக்கி, நோயாளியின் உடம்பை
ரணத்திலிருந்து காக்கிறது.
”இந்தப் படுக்கை இல்லேன்னா அம்மகாரு நிலைமை மோசமா ஆகி யிருக்கும்…”
இதைத் தவிர டானிக், மருந்து வகையறா… முழு நேர நர்ஸ் ஒருவர்…
சாவித்திரிக்கு பெங்களூரில் கோமா வந்தபோது அதை முதலில் பார்த்த நபர் சாவித்திரியின் பதினாறு வயசு மகன் சதீஷ் தான்.
”ஒரு வாரமா ராப்பகலா ஷூட்டிங் இருந்ததால, அம்மா இன்ஸூலின் போட்டுக்காம
விட்டுட்டாங்க. பெங்களூர் போன அன்னிக்கு ராத்திரி வெறும் வயித்தோட இஞ்ஜெக்ஷன்
போட்டுக்கிட்டுப் படுத்துட்டாங்க. மூணு மணி சுமாருக்கு நான் பாத்ரூம் போக
எழுந்தப்ப அம்மா வாயில நுரையோட, நினைவிழந்து படுத்திருந்தாங்க. இதுக்கு முன்னால இரண்டு மூணு தடவை அம்மாவுக்கு ‘கோமா’ வந்து, உடனே கவனிச்சதுலே சரியாயிருக்கு. இந்த முறைதான் ஏனோ இப்படிப் பெரிசா படுத்துட்டாங்க” என்கிறார்.
நாலு பேராய், பத்துப் பேராய் சாவித்திரி
அபிமானிகள் யார் யாரோ வந்து, ஜன்னல்
வழியாக சாவித்திரியைப் பார்த்து விட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
இத்தனை பேரின் அன்புக்கும் பரிவுக்கும் பிரார்த்தனைக்கும் பலன் இருக்கவேண்டும்.
தனித்துத் தவிக்கும் பிள்ளைக்காகவாவது சாவித்திரி மயக்கத்திலிருந்து மீண்டு
வரவேண்டும்.
** சிவசங்கரி **
—-
அப்போது நடந்த இந்த நிகழ்வுகளை இப்போது படித்தாலும் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
விமல், இதை ஒரு பதிவாக போடலாம் என்று இருக்கிறேன்.
ஆஹா.
நன்றி
saw a duet by savithri and gemini ganesan – veeesum thendralile pesum vennilave (ghantasala/susila) movie not known recently and happened to see her foto a few days before her death. felt extremely sad seeing the difference.
dr. subramanian.