நாகேஷ்–25
செப்டம்பர் 30, 2010 7 மறுமொழிகள்
அனுப்பிய விமலுக்கும், விகடனுக்கும் நன்றி!
நாகேஷ் மாறும் உடல் மொழி, ஏறி இறங்கும் குரல் ஜாலம், தமிழர்களில் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம், ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழிந்தவர்!
- பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராக பணியாற்ற், குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்.
- பெற்றோர் கிருஷ்ணராவ் – ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன் பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்ல பெயர் – குண்டப்பா.
- பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!
- இளம் வயதில் வீட்டில் கோபித்துக் கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர் ரேடியோ கடை ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!
- முதன் முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார் அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!
- கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்த மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலர வைத்து அவரது நடிப்பில் வெளிச்சம்!
- ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால் தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!
- இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ்பாபு, ராஜேஷ்பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!
- முதல் படம் `தாமரைக்குளம்’ ஷூட்டிங்கின் போது சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர். ராதாவிடம் மனம் வெதும்பி நடந்தைச் சொன்னார் இவர். `மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்… கவலைப்படாம நடி’ என்றாராம் ராதா!
- `அபூர்வ ராகங்கள்’ படத்தில் இவருக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் கண்ணதாசன், அவரிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் நாகேஷ் கவிதை கேட்ட இவர், `அதான்யா கண்ணதாசன்’ என்று சொல்லிவிட்டு, `பீஸ் எவ்வளவு?’ என்பார். `இதுதான்யா ஃபீஸ்’ என்பார் கண்ணதாசன்!
- முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை, யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் `நாகேஷ் பாணி’ என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!
- எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!
- திருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி. நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்!
- நகைச்சுவையில் மட்டுமல்ல: `நீர்க் குமிழி’ குணச்சித்திரம், `சர்வர் சுந்தரம்’ ஹீரோ, `அபூர்வ சகோதரர்கள்’-ல் வில்லன், ‘மகளிர் மட்டும்’ பிணம் என்று வெளுத்துக் கட்டியவர்!
- `அபூர்வ ராகங்கள்’ ஷூட்டிங், பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ் கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, `சியர்ஸ்’ என்று சொல்ல, படம் பார்த்தவர்கள் பாரட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்சுக்கு இது ஒரு சாம்பிள்!
- இவரை எப்போதும் `டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்.
- டைரக்ஷன் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை. `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்.
- பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், `எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே’ என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!
- `சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்’ என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி.
- `நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ண்ணாக அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக் கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்’ என்று சொன்னவர் கமலஹாசன்.
- ‘பஞ்சதந்திரம்’ ஷூட்டிங், உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், `கோழி இன்னும் சாகலையாப்பா?’
- `தசாவதாரம்’ கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம் `என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured–டா கமல்!’
- தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்.
- இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது- செப்டம்பர் 27, 1933 –ல். மறைந்தது ஜனவரி 31, 2009 –ல்.
- 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை!
தொகுக்கப்பட்ட பக்கம்: நாகேஷ் பக்கம்
நல்லதந்தி கூறுகிறார்….
தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் திரு.நாகேஷ் .
அவரது நினைவாக அவர் அளித்த பழைய பேட்டி!. 1974-ல் வந்தது!
”உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்காக அயல் நாடுகளுக்கு நாங்கள் புறப்பட்ட நேரத்தில் எங்களுக்கு அது என்ன கதை.. நமக்கென்ன பாத்திரம் என்று எதுவும் தெரியாது. எம்ஜிஆர் விளக்கமாக கதையைச் சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரும் ஏதும் சொல்லவில்லை.
நமெக்கேன் கவலை அவர் சொல்கிறபடி நடித்துக் கொடுப்போம் என்று எண்ணிக் கொண்டு என் குழுவினரோடு அரட்டை அடிக்க ஆரம்பித்தேன்,
ஜப்பான் நாட்டை அடைந்ததும் நாகேஷ் இன்னின்ன காட்சிகளை இப்படி இப்படி படமாக்கிக் கொள்ளுங்கள் என பூரண சுதந்திரம் கொடுத்தார்.காமிராமேனுடன் என் சம்பந்தப்பட்ட தனிக் காட்சிகளை இஷ்டப்படி படமாக்கினேன். முக்கியமாக நாங்கள் கருதிய இடங்களில் படமெடுத்த பிறகு அந்த விவரத்தை எம்ஜிஆரிடம் கூறிவிடுவேன்.
எம்ஜிஆர்,தன் சம்பந்தப் பட்ட காட்சிகளையும்,பாடல் காட்சிகளையும் படமாக்கினார். ஒரு பாடல் காட்சியில் தாடியுடனும், மற்றொரு படல் காட்சியில் தாடியில்லாமலும் நடித்துப் படமாக்கினார்.எனக்கு அது புரியவில்லை….என்ன சார் மாறுவேட ‘காதல் பாட்டா’ என்றேன்.அவர் சிரித்துக் கொண்டாரே தவிர விளக்கம் தரவில்லை.
மாலையில் படப்பிடிப்பு முடிந்ததும் அப்பாடி என்று ஹோட்டலுக்கு திரும்புவோம். அறைக்குள் வந்ததும் முதல் காரியமாக அயல் நாட்டு விஸ்கி பாட்டிலை எடுத்துக் கொண்டு விடுவேன். அப்புறமென்ன ஒரே குடிதான் ..தமாஷ்தான் (எம்ஜிஆருக்குத் இது தெரியாதபடி நடந்து கொள்வோம்!)
நாங்கள் இப்படி தமாஷாக் கூத்தடிப்போம், ஆனால் எம்ஜிஆர் ஹோட்டலில் தங்காமல் ஊரைச்சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிடுவார்.. தீடீரென்று இரவு பத்து மணிக்கு வருவார்… புறப்படுங்கள் ஒரு அருமையான லொகேஷனைப் பார்த்து விட்டு வந்திருக்கிறேன்..அங்கு படமெடுக்க வேண்டும் என்று துரிதப் படுத்துவார்…
விஸ்கி வாடையை பாடுபட்டு மறைத்து விட்டு படப்பிடிப்புக்கு புறப்படுவோம். தெருக்களில் எங்களைக் கண்டபடி சுற்ற்ச் சொல்லி படம் எடுப்பார். எதற்கென்று எங்களுக்குப் புரியாது.வில்லன் தேடுகிறான் அவனிடமிருந்து தப்பிக்க ஓடு என்பார் சந்திரகலாவிடம். அவர் அப்ப்டி மறைந்து மறைந்து வீதிகளில் செல்வதை படமாக்குவார்.
என்ன கதை,இங்கு ஏன் வில்லன் வந்தான், கதாநாயகியை ஏன் துரத்துகிறான், அவளிடம் உள்ள இரகசியம் என்ன….எதுவும் எங்களுக்குத் புரியாது. ‘ஏன் சார் உங்களுக்கு இரட்டை வேடமா? என்று ஒரு நாள் கேட்டேன்….அதற்கும் சிரிப்புதான் பதில்.
நமது டோண்டு ராகவன் கூறுகிறார்….
உலகம் சுற்றும் வாலிபனில் ஒரு காட்சி, கூர்ந்து பார்த்தால் புலப்படும். ஓரிடத்தில் தானியங்கி walkway ஒன்றின் மீது ஒரு பக்கமாக பார்த்தபடி எம்ஜிஆர் செல்ல, தூரத்தில் மறுபக்கத்திலிருந்து நாகேஷ் அவரைக் கூப்பிடுவார். நடுவில் கண்ணாடிச்சுவர் இருந்ததால் எம்ஜிஆருக்கு இது காது கேட்காது கதைப்படி.
ஆனால் அந்தோ, ஒரு ஜப்பானியர் (படப்பிடிப்புக்கு சம்பந்தமில்லாதவர்) எம்ஜிஆரை தட்டி அவர் கவனத்தைத் திருப்ப முயற்சி செய்வார். எம்ஜிஆரா கொக்கா, மனிதர் அசையவே மாட்டாரே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஸ்ரீனிவாஸ், நாகேஷ் +உ.சு. வாலிபன் விவரங்களுக்கு நன்றி! சுட்டியும் தர முடியுமா?
இதோ நீங்கள் கேட்ட சுட்டி….
http://thanthii.blogspot.com/2009/02/blog-post.html
மாடி வீட்டு மாது ‘ஹீரோ’ எனக்கு மிகவும் பிடிக்கும். இவரைப் பல படங்களில் ஹீரோ அல்லது அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது பாலச்சந்தர் என்று நினைக்கிறேன்
விருட்சம், ஆம், பாலச்சந்தர் அறுபதுகளில் நாகேஷை முக்கியமான ரோல்களுக்கு, ஹீரோவாக பயன்படுத்தினார்.
கதையவே மாத்திட்டேன் போல இருக்கே. அது மாடி வீட்டு மாது அல்ல மாடிப் படி மாது
நல்லதந்தி தளத்திலிருந்து சுட்டி தந்தற்கு நன்றி, ஸ்ரீனிவாஸ்!