இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!

பாலகுமாரன் பிரபலமாக ஆரம்பித்திருந்த நேரத்தில் முந்தானை முடிச்சு கதை டிஸ்கஷனில் பங்கேற்றிருக்கிறார். அப்போதிலிருந்து அவருக்கு சினிமாவில் நுழைய ஆசை. கூடவே ஒரு தயக்கம். அப்புறம் நுழைந்துவிட்டார். அந்த அனுபவங்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் சிறு memoir-தான் இந்த புத்தகம்.

முதல் முதலாக பாக்யராஜ் அவருக்கு அறுபது ரூபாய் ஃபீஸ் கொடுத்திருக்கிறார். இது எண்பதுகளின் முற்பாதியில். அப்போது பாக்யராஜுக்கு ஜி.எம். குமாரும் லிவிங்ஸ்டனும் உதவியாளர்கள். பாக்யராஜ் இவரையும் வந்து சேருங்கள் என்று கூப்பிட்டிருக்கிறார். குறைந்த சம்பளம், கொஞ்சம் பயம் – அதனால் பாலா மறுத்துவிட்டார். பிறகு மு. முடிச்சு படம் பார்த்தபிறகு கமல், சிவகுமார், சுகாசினி, பாலு மகேந்திரா எல்லாரிடமும் அறிவுரை கேட்டிருக்கிறார். யாரும் வா என்று சொல்லவில்லை. சிவகுமார் இவரை நீங்கள் ஏற்கனவே சபல கேஸ், இங்கே தப்பு பண்ண நிறைய சான்ஸ் என்று இடித்திருக்கிறார். சுகாசினி மூன்று வருஷத்துக்கு ஒரு முறை ஏதாவது தப்பு பண்ண வேண்டும் என்று விரதமா என்று கேட்டிருக்கிறார். கோபம், ஒரு கை பார்க்கிறேன் என்று இறங்கி இருக்கிறார். அப்போது கமல் வரவேற்றாராம்! முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும், யாரிடம் யோசனை கேட்கக்கூடாது என்று சொன்னாராம்!

சிந்துபைரவி படத்தில் உதவி இயக்குனர். வசந்த் இன்னொரு உதவி இயக்குனர். அனந்த் தலைமை நிர்வாகி மாதிரி. இவர் ஆஃபீஸ் போவது போல ஒன்பது மணி வாக்கில் போக நான்காவது நாள் அனந்து பிடித்து எகிறி இருக்கிறார். சிவகுமாரிடம் பொரும, அவர் “சவுகரியமா வளர்ந்துட்டீரு ஓய்!” என்று கமென்ட் விட்டிருக்கிறார். அப்புறம் பாலகுமாரன் கொஞ்சம் கொஞ்சமாக நெளிவு சுளிவுகளை புரிந்துகொண்டிருக்கிறார்.

சினிமாவின் சில முகங்களைப் பற்றி – இளையராஜாவின் “கர்வம்”, பாலச்சந்தரின் கோபம்+அன்பு, ஒரு டீமாக வேலை செய்வது என்று வெளியே தெரியாத முகங்களைப் பற்றி நன்றாக எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்: பாலகுமாரனும் சினிமாவும் – அருன்மொழிவர்மனின் பதிவு

Follow

Get every new post delivered to your Inbox.

Join 45 other followers