நீதிபதி

நீதிபதி என்ற படம் கொஞ்ச நாள் முன் விஜய் டிவியில் வந்தது. இது சிவாஜி நடித்த படம் இல்லை. 1955-ஆம் ஆண்டு வந்த படம். கே.ஆர். ராமசாமி, ஜெமினி கணேசன், எஸ்.வி. சஹஸ்ரநாமம், டி.எஸ். பாலையா, எம்.என். ராஜம், ராஜசுலோச்சனா என்று கொஞ்சம் தெரிந்த முகங்கள். தெரியாத பல முகங்களும் உண்டு. இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி. இயக்கம் ஏ.எஸ்.ஏ. சாமி.

நான் பழைய தமிழ் படம்+பாட்டு பைத்தியம்தான். தியாகராஜ பாகவதர் பாட்டைக் கூட விரும்பிக் கேட்பேன். ஆனால் நடிப்பிசைப் புலவர் என்றெல்லாம் புகழப்படும் கே.ஆர். ராமசாமி பாடிய ஒரு பாட்டைக் கூட நான் கேட்டதில்லை. இந்தப் படத்தில்தான் முதல் முறையாக கேட்டேன். நாடகங்களுக்கு ஏற்ற குரல். மைக்கே தேவை இல்லை. ஓங்கி ஒலிக்கும், ஆனால் இயற்கையான குரல். இருந்தாலும் இந்தப் படத்தில் பாட்டுகள் எல்லாம் (பறக்குது பார் பொறி பறக்குது பார், ஜிலுஜிலுவென ஜொலிக்கும் மிட்டாய்) சுமார்தான்.

சம்பிரதாயமான மெலோட்ராமா கதைதான். சஹஸ்ரநாமம் செத்துப் போன அண்ணனின் சொத்தை எல்லாம் அபகரித்துக் கொண்டு அண்ணிக்கு நாமம் போட்கிறார். அண்ணி இடுப்பில் ஒன்று, வயிற்றில் ஒன்றோடு உயிருக்கு பயந்து ஓடிவிடுகிறார். ஒரு சர்ச்சில் தஞ்சம் அடைகிறார். முதல் பையன் – கே.ஆர். ராமசாமி – நம்பிக்கையான பழைய வேலைக்காரனிடம் ஒரு உடன்பிறவா தங்கையோடு வளர்கிறான். சஹஸ்ரநாமத்தின் ஆட்களின் சூழ்ச்சியால் அண்ணி ஜெயிலுக்குப் போகிறார். இரண்டாவது பையன் – ஜெமினி – சர்ச்சில் வளர்ந்து பெரிய வக்கீல் ஆகிவிடுகிறான். சஹஸ்ரநாமம் கே.ஆர். ராமசாமியின் தங்கையிடம் தவறாக நடக்க முயற்சி செய்ய, அவள் இறந்துவிடுகிறாள். கே.ஆர்.ஆர். சஹஸ்ரநாமத்தைப் பழி வாங்க வரும்போது ஏற்படும் சண்டையில் சஹஸ்ரநாமம் தற்செயலாக தன் ஆசைநாயகி எம்.என். ராஜத்தை கொன்றுவிடுகிறார். பழி கே.ஆர்.ஆர். பேரில். போலீஸ் கான்ஸ்டபிள் பாலையா கே.ஆர்.ஆரைத் தேடி அலைகிறார். ஜெயிலிலிருந்து வந்த அம்மா ஜெமினியைப் பார்க்க இருவருக்கும் நடுவில் வழக்கமான இனம் புரியாத பாசம். அம்மாவுக்கும் கே.ஆர்.ஆருக்கும் அதே இனம் புரியாத பாசம். ஜெமினியின் மனைவி ராஜசுலோச்சனாவைக் காப்பாற்ற கே.ஆர்.ஆர். சஹஸ்ரநாமத்தை கொன்றுவிடுகிறார். இதற்குள் நீதிபதி (பின்னே! டைட்டில் வரவேண்டாமா?) ஆகிவிடும் ஜெமினி அண்ணன் என்று தெரிந்தும் தண்டனை அளிக்கிறார்.

என்னைக் கவர்ந்த பகுதி தப்பி ஓடும் கே.ஆர்.ஆர். ஒரு நாடகம் ஆடும் சீன்தான். பின்பாட்டுக்காரர் ஸ்வரம் இழுக்க கே.ஆர்.ஆர். கடுப்பாகி அவர் அருகே நின்று கொண்டு இன்னும் ஸ்வரம் இழுப்பதென்ன, அவர் காலை முழங்கால் வரை தூக்கி தூக்கி நடப்பதென்ன, அவ்வப்போது கைக்குட்டையை வைத்து விசிறிக் கொள்வதென்ன, கோவலன் நாடகத்தில் நாயகி பசும்பாலில் டிகாக்ஷனைக் கலந்து காப்பி தாங்கடி என்று பாடுவதென்ன, மிகவும் அருமையாக இருந்தது.

நாடகத்தில் பின்பாட்டு பாடுபவர் குண்டு கல்யாணம் போலவே இருக்கிறார். அதே மாதிரி முகம், அதே மாதிரி உடல். குண்டு கல்யாணத்தின் அப்பாவும் நடிகரா?

எல். விஜயலட்சுமி அப்போது ரொம்பவும் சின்னப் பெண் போலிருக்கிறது. ஒரு டான்ஸ் ஆடிவிட்டுப் போகிறார்.

கே.ஆர்.ஆர். நாடக நடிகர் என்றும் ஜெமினி அடுத்த ஜெனரேஷன் சினிமா நடிகர் என்றும் தெளிவாகத் தெரிகிறது.

என் போன்ற சினிமாப் பைத்தியங்கள் தவிர மற்றவர்கள் தவிர்க்கலாம்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 45 other followers