நீதிபதி
ஜனவரி 17, 2011 6 மறுமொழிகள்
நீதிபதி என்ற படம் கொஞ்ச நாள் முன் விஜய் டிவியில் வந்தது. இது சிவாஜி நடித்த படம் இல்லை. 1955-ஆம் ஆண்டு வந்த படம். கே.ஆர். ராமசாமி, ஜெமினி கணேசன், எஸ்.வி. சஹஸ்ரநாமம், டி.எஸ். பாலையா, எம்.என். ராஜம், ராஜசுலோச்சனா என்று கொஞ்சம் தெரிந்த முகங்கள். தெரியாத பல முகங்களும் உண்டு. இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி. இயக்கம் ஏ.எஸ்.ஏ. சாமி.
நான் பழைய தமிழ் படம்+பாட்டு பைத்தியம்தான். தியாகராஜ பாகவதர் பாட்டைக் கூட விரும்பிக் கேட்பேன். ஆனால் நடிப்பிசைப் புலவர் என்றெல்லாம் புகழப்படும் கே.ஆர். ராமசாமி பாடிய ஒரு பாட்டைக் கூட நான் கேட்டதில்லை. இந்தப் படத்தில்தான் முதல் முறையாக கேட்டேன். நாடகங்களுக்கு ஏற்ற குரல். மைக்கே தேவை இல்லை. ஓங்கி ஒலிக்கும், ஆனால் இயற்கையான குரல். இருந்தாலும் இந்தப் படத்தில் பாட்டுகள் எல்லாம் (பறக்குது பார் பொறி பறக்குது பார், ஜிலுஜிலுவென ஜொலிக்கும் மிட்டாய்) சுமார்தான்.
சம்பிரதாயமான மெலோட்ராமா கதைதான். சஹஸ்ரநாமம் செத்துப் போன அண்ணனின் சொத்தை எல்லாம் அபகரித்துக் கொண்டு அண்ணிக்கு நாமம் போட்கிறார். அண்ணி இடுப்பில் ஒன்று, வயிற்றில் ஒன்றோடு உயிருக்கு பயந்து ஓடிவிடுகிறார். ஒரு சர்ச்சில் தஞ்சம் அடைகிறார். முதல் பையன் – கே.ஆர். ராமசாமி – நம்பிக்கையான பழைய வேலைக்காரனிடம் ஒரு உடன்பிறவா தங்கையோடு வளர்கிறான். சஹஸ்ரநாமத்தின் ஆட்களின் சூழ்ச்சியால் அண்ணி ஜெயிலுக்குப் போகிறார். இரண்டாவது பையன் – ஜெமினி – சர்ச்சில் வளர்ந்து பெரிய வக்கீல் ஆகிவிடுகிறான். சஹஸ்ரநாமம் கே.ஆர். ராமசாமியின் தங்கையிடம் தவறாக நடக்க முயற்சி செய்ய, அவள் இறந்துவிடுகிறாள். கே.ஆர்.ஆர். சஹஸ்ரநாமத்தைப் பழி வாங்க வரும்போது ஏற்படும் சண்டையில் சஹஸ்ரநாமம் தற்செயலாக தன் ஆசைநாயகி எம்.என். ராஜத்தை கொன்றுவிடுகிறார். பழி கே.ஆர்.ஆர். பேரில். போலீஸ் கான்ஸ்டபிள் பாலையா கே.ஆர்.ஆரைத் தேடி அலைகிறார். ஜெயிலிலிருந்து வந்த அம்மா ஜெமினியைப் பார்க்க இருவருக்கும் நடுவில் வழக்கமான இனம் புரியாத பாசம். அம்மாவுக்கும் கே.ஆர்.ஆருக்கும் அதே இனம் புரியாத பாசம். ஜெமினியின் மனைவி ராஜசுலோச்சனாவைக் காப்பாற்ற கே.ஆர்.ஆர். சஹஸ்ரநாமத்தை கொன்றுவிடுகிறார். இதற்குள் நீதிபதி (பின்னே! டைட்டில் வரவேண்டாமா?) ஆகிவிடும் ஜெமினி அண்ணன் என்று தெரிந்தும் தண்டனை அளிக்கிறார்.
என்னைக் கவர்ந்த பகுதி தப்பி ஓடும் கே.ஆர்.ஆர். ஒரு நாடகம் ஆடும் சீன்தான். பின்பாட்டுக்காரர் ஸ்வரம் இழுக்க கே.ஆர்.ஆர். கடுப்பாகி அவர் அருகே நின்று கொண்டு இன்னும் ஸ்வரம் இழுப்பதென்ன, அவர் காலை முழங்கால் வரை தூக்கி தூக்கி நடப்பதென்ன, அவ்வப்போது கைக்குட்டையை வைத்து விசிறிக் கொள்வதென்ன, கோவலன் நாடகத்தில் நாயகி பசும்பாலில் டிகாக்ஷனைக் கலந்து காப்பி தாங்கடி என்று பாடுவதென்ன, மிகவும் அருமையாக இருந்தது.
நாடகத்தில் பின்பாட்டு பாடுபவர் குண்டு கல்யாணம் போலவே இருக்கிறார். அதே மாதிரி முகம், அதே மாதிரி உடல். குண்டு கல்யாணத்தின் அப்பாவும் நடிகரா?
எல். விஜயலட்சுமி அப்போது ரொம்பவும் சின்னப் பெண் போலிருக்கிறது. ஒரு டான்ஸ் ஆடிவிட்டுப் போகிறார்.
கே.ஆர்.ஆர். நாடக நடிகர் என்றும் ஜெமினி அடுத்த ஜெனரேஷன் சினிமா நடிகர் என்றும் தெளிவாகத் தெரிகிறது.
என் போன்ற சினிமாப் பைத்தியங்கள் தவிர மற்றவர்கள் தவிர்க்கலாம்.
நாடகத்தில் பின்பாட்டு பாடுபவர் குண்டு கல்யாணம் போலவே இருக்கிறார். அதே மாதிரி முகம், அதே மாதிரி உடல். குண்டு கல்யாணத்தின் அப்பாவும் நடிகரா?
ஆம் அவர் பெயர் குண்டு கருப்பையா
சகஸ்ரநாமம் இப்படிபட்ட ரோலில் கூட நடித்திருக்கிறாரா?
அந்த ஆள் குண்டு கல்யாணத்தின் அப்பா என்று முடிவுக்கே வந்துட்ட போலிருக்கு
நீதிபதி (1955) பார்த்திராத படம் மட்டுமல்ல, கேள்விப்பட்டிராத படமும் கூட என்றுதான் முதலில் நினைத்தேன். நீதிபதி (1983) மட்டும்தான் இதுவரை தெரிந்திருந்தது. இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று பார்த்ததும், எம்.எஸ்.வி.யின் ‘மூவி லிஸ்ட்டை’ப் பார்த்தபோது, அதில் இப்படப்பெயர் இடம்பெற்றிருக்கிறது.
ஆனால் நீங்கள் கதையை விவரித்திருப்பதைப் படித்தபோதுதான், இந்தக் காட்சிகள் எல்லாம் ஏற்கெனவே பரிச்சயம் ஆனவைபோல் தோன்றுகின்றனவே என்று, இருக்கின்ற கொஞ்சம் மூளையைக் கசக்கி யோசித்ததில், எப்போதோ ஒருமுறை நள்ளிரவு (தூங்கிட்டா அந்த மனுஷன் வந்து ‘பெல்’ அடிச்சிக்கிட்டு நிற்பாரே என்ப்தால், சோபாவில் அமர்ந்தபடி) தொலைக்காட்சியில், டைட்டிலைத் தவறவிட்டுவிட்டாலும், என்ன படம் என்று தெரியாமலே, கால் தூக்கமும் முக்கால் விழிப்புமாக பார்த்து, அப்படியும் படம் முடியாமலேயே போய்ப்படுத்து விட்ட படத்தின் பெயர்தான் ‘நீதிபதி’யா? என்று தெளிவடைந்தேன். ஒழுங்கான நேரத்தில் ஒளிபரப்பப் பட்டிருந்தால், முழுவதும் பார்த்திருக்கக்கூடிய சுவாரஸ்யமான கதைதான். (என்ன செய்வது, அந்தக்காலத்தில் அவ்வளவுதான். மேடை நாடகத்தைக் கேமராவில் பிடித்து தந்துகொண்டிருந்தார்கள். அவையும் ரசிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இல்லாவிட்டால், சைக்கிளில் போகும் தூரத்தில் மெரீனா கடற்கரையை வைத்துக்கொண்டு, வாகினி ஸ்டுடியோவில் கடற்கரை செட் போட்டு நம்மை நோகடித்திருப்பார்களா?).
எல்.விஜயலட்சுமி 60-களின் மத்தியில் வந்தவர் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் 55-லேயே தலைகாட்டியிருக்கிறார் என்பதையும் உங்கள் விமர்சனம் தெளிவுபடுத்துகிறது. புகழுச்சியிலிருக்கும்போதே திரையுலகுக்கு ‘பை பை’ சொன்னதோடு, அதன்பின்னர் திரைப்படங்களில் தன் போட்டோ கூட வந்துவிடாமல் பார்த்துக்கொண்ட தைரியசாலி. (பின்னே? அமெரிக்க ‘தொழிலதிபர்களை (???????)’ மணந்துகொண்டு போன பலர், சில காலம் கழித்து ‘அம்மா, அக்கா’ போன்ற அவதாரங்கள் எடுத்து வந்து மீண்டும் பெட்டியை நிறைப்பதைப் பார்க்கிறோமே).
மீண்டும் ஒருமுறை ஒழுங்கான நேரத்தில் ஒளிபரப்பானால் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். அதுதான் ‘நம்மைப்போன்ற’ சினிமா பைத்தியங்கள் பார்க்கலாம் என்று சர்டிபிகேட் கொடுத்துவிட்டீர்களே.
நீங்கள் குறிப்பிடுவது குண்டுகல்யாணத்தின் அப்பா குண்டு கருப்பையா என்று நினைக்கிறேன். அவர் பல பழய படங்களில் நடித்துள்ளார். இப்படத்தை பற்றிய தகவல்கள் புதிதாக இருந்தது. (1983) வந்ட்த சிவாஜி நீதிபதி தான் என்னிடம் உள்ளது.
Gopal
Is int Gundu Karuppaiah, the villan/henchman in lots of M.G.R movies -seen in the company of Justin etc? (for example in “parakkum paavai”-the knife throwing black guy!)
raju-dubai
ராஜு,
நீங்கள் குறிப்பிடும் நடிகரின் பெயர் குண்டுமணி. அவர்தான் எம்.ஜி.ஆர்.படங்களில் ‘எஸ் பாஸ்’ கையாளாக வருபவர். பல்லாண்டு வாழ்க படத்தின் ஆறு வில்லன்களில் (கைதிகளில்) ஒருவராக நடித்தவர்.
ஆனால் நீதிபதி படத்தில் வருபவர் குண்டு கருப்பையா. இன்றைய குண்டு கல்யாணத்தின் அப்பா. அவரும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். உதாரணமாக, நிச்சயதாம்பூலம் படத்தில் ‘ஆண்டவன் படைச்சான்’ பாடலில் ஜீப் அருகே ஓடி வருபவர்.