நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்

இரண்டு வாரமாக இந்த பாட்டுதான் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது.

நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்
உன் வளை கொஞ்சும் கரம் மீது பரிசென்ன தந்தார்
உன் மலர்க்கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்

பாடும்போதே சுகமாக இருக்கிறது!

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என்ற வரிகளில் குறை காணலாம். அதுதான் முகத்தை மூடியாயிற்றே, அப்புறம் என்ன பயம்? ஆனாலும் பொன்வண்டொன்று என்று ஆரம்பிக்கும் படிமம் அழகாக இருக்கிறது!

காட்சி இன்று செயற்கையாக இருக்கிறது. அதுவும் ஜெய்ஷங்கர் காட்டும் ஸ்டைலும் எல். விஜயலக்ஷ்மியின் முக பாவமும் கொஞ்சம் outdated-தான். ஆனால் ஜெய் அணிந்திருக்கும் உடை இன்றைய ஃபாஷனுக்கு சரியாக இருக்கும்!

திரைப்படம் இரு வல்லவர்கள். பாடியவர்கள் டிஎம்எஸ், சுசீலா. எழுதியது யார்? இசை வேதாவா? 1966 -இல் வந்த திரைப்படம். ஜெய் ஹீரோ, மனோகர் ஆன்டி-ஹீரோ. இரு வல்லவர்கள் ஐந்து வருஷம் கழித்து ஹிந்தியில் ஹாத் கி சஃபாய் என்ற பேரில் வந்தது. ஜெய் ரோலில் ரந்தீர் கபூரும் மனோகர் ரோலில் வினோத் கன்னாவும் நடித்தார்கள். கிட்டத்தட்ட பத்து வருஷம் கழித்து அதை ரீமேக் புகழ் பாலாஜி சவால் என்று தமிழில் எடுத்தார். இரு வல்லவர்கள் படத்தில் ஹீரோவாக நடித்த ஜெய்தான் சவாலில் ஆன்டி-ஹீரோ ரோலில் நடித்தார். கமல் ஒரிஜினல் ஜெய் ரோலில்!

Follow

Get every new post delivered to your Inbox.

Join 45 other followers