தெய்வத்திருமகள்

By Eshwar Gopal

 

நடிப்பு: விக்ரம், அனுஷ்கா ஷெட்டி, அமலா பால், பேபி சாரா, நாசர், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர்.

மனதில் ஆறுவயது நிறம்பிய, மனவளர்ச்சி குன்றிய ஒரு மனிதனின் மனைவி குழந்தையை பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்து விட, அக்குழந்தையை வளர்க்க அவர் படும் கஷ்டங்களும், அதே நேரத்தில் அக்குழந்தையின் அன்பினால் நிறப்பப்பட்ட அவனது வாழ்க்கையில் நடக்கும் ஒரு திருப்பத்தை, அவன் கதாநாயகியுடைய உதவியினால் எப்படி அடைகிறான், என்பதையும் கூறும் காவியம்.

படம் என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. இப்படம் “I am sam” என்ற ஆங்கிலப் படத்தின் தமிழாக்கம் என்றாலும், இயக்குனர் விஜயின் முயற்சி பாரட்டப்படவேண்டும். வித்தியாசமான படங்களை கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருப்பது தமிழ் திரைக்கு நல்லது. விக்ரம் நடிப்பில் பின்னி பெடல் எடுத்துள்ளார். மனைவி இறந்த்து கூட தெரியாமல், குழந்தை போல் ஏற்றுக்கொள்ளும்போதும், குழந்தையின் பிரிவை தாங்கமுடியாமல் ஏங்குவதும், கடைசியில் நீதிமன்றத்தில் குழந்தையுடன் பேசும் சந்தேக மொழியிலும் நடிப்பில் தங்கத்தின் விலை போல் எகிறுகிறார்.

அனுஷ்காவை – “இப்படத்தில் உனக்கு வேலையே மற்றபடம் போல் இல்லை” என்று சொல்லி ஒப்பந்தப் படுத்தியிருப்பார் போல இயக்குனர். எதார்த்தமான நடிப்பில் மிளிர்கிறார். தமிழ் படத்துக்கே உரிய சாபக்கேடு போல், கதாநாயகனோடு ஒரு கற்பனைப்பாட்டை பாடி கதையின் ஓட்டத்தை தடுக்கிறார். அதெப்படி, யதார்த்தமாக நாயகன், அதுவும் மனநலம் குன்றியவர், பயத்தில் அவரை அணைத்துக்கொள்ளும்போது இவரக்கு பாடல் வருகிறது? இக்காட்சி வரும்போது இயக்குனர் பக்கத்து கடைக்கு டீ குடிக்க போய்விட்டார் போல.

அமலா பால் வந்து போகிறார். வெறும் காந்தக்கண்களை வைத்து ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறார் போல அம்மனி. அந்த பாரதிராஜா காலம் மலையேறிவிட்டது என்பதை புரிந்து நடிப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே. முதலில் குழந்தையை கொஞ்சி மனதில் இடம் பிடிப்பது, குழந்தை யார் என்று தெரிந்து தன் பண்பை மாற்றுவதும், மனிதனின் இயல்பை வெளிக்கொணர்ந்துள்ளார்.

ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவிற்கு பாடல்கள் இல்லையெனினும், பின்னனி இசையை பட ஓட்டத்தில் நன்றாக ஒட்டவைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். முதல் பாடல் பழைய பாடலின் பிரதி (என் நண்பன் கூறியது). நீரவ் ஷாவின் புகைப்படக்கருவி பாயை சுருட்டி விரிப்பதைப்போல் ஊட்டியின் புற அழகை பிடித்து நம் முன்னே கொட்டிவிடுகிறது.

சந்தானம் சிரிப்புக் காட்சிகள் அசிங்கம் இல்லாமல் இருக்கிறது. அதுவே பெரிய முன்னேற்றம்தான். சிரிப்புக் காட்சிகளுக்கு முதல் மூலதனம் ‘துல்லியமான, துரிதமான நேரம்’. இதை இன்னும் கொஞ்சம் கூட்டவேண்டும். காட்சிகளில் ஒரு 2/3 வினாடி தாமதமாக வருவதை தவிர்க்கவேண்டும். பழைய நாகேஷ் படத்தை பார்த்து ‘துரித நேரத்தை’ அவர் எப்படி அனாசயமாக கையாண்டார் என்று சந்தானம் கற்றுக்கொள்ளலாமே.

படத்தின் மிகப்பெரிய தொய்வு, இடைவேளிக்கு முன்பு ஜவ்வாக இழுக்கிறது. சில சமயத்தில் இது ஒரு ‘கலைப்படமோ’ என்று எண்ணத்தோன்றுகிறது. அந்த காக்காய் வடை காட்சி தேவையில்லாமல் இழுக்கப்பட்டதோடு இல்லாமல், அறுவையாகவும் உள்ளது. அதேபோல், விக்ரமை கடத்தி வருவது, அவர் போய் மருந்து வாங்கி வருவது, அதனால், நாசருக்கு ஒரு இரக்கம் வருவது, அனுஷ்காவின் கனவுப் பாட்டு – போன்ற காட்சிகளை ஜவ்வை நம் கையில் திணித்து நாள் முழுக்க இழுக்கவேண்டும் என்று இயக்குனர் தண்டனை கொடுப்பது கொடுமை. படம் 3 மணித்துளிகள் ஓடுவது சற்று சலிப்பை தருகிறது.

குழந்தை சாராவின் அற்புதமான நடிப்பு நம்மை ஈர்க்கிறது. சாதாரணமாக அப்பாவின் மேல் பெண் குழந்தைகளுக்கும், அம்மாவின் மேல் ஆண்குழந்தைகளுக்கும் நல்ல பாசம் இருக்கும், தன் அப்பா அசாதாரணமான செயல்பாட்டை உடையவர் என்று தெரிந்தும், அவர் மேல் ஒரு அபரிதமான அன்பை பொழிவதும், விளையாடிவிட்டு அப்பா தூங்கும்போது அவருக்கு முத்தம் கொடுப்பதும், நிலாவை பார்த்து அப்பாவிடம் பேசுவதும், அமலாவிடம் “நீ அப்பா கூட இருக்கலாம், நான் இருக்கக்கூடாதா”? என்று வினவும்போதும், நீதிமன்றத்தில் சைகையில் அப்பாவிடம் கோவித்துக்கொள்ளுவதும் – நடிக்கவைத்த இயக்குனரையும் சேர்த்து பாராட்டத்தோன்றுகிறது.

மனநிலை குன்றியவராக நடித்த விக்ரம் தமிழ் திரைக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். நீளத்தை குறைத்து, படத்தின் கோர்வையை நீரோட்டம் போல் விருவிருப்பாக சொல்லியிருந்தால் இன்னும் ஜொலிப்பாக வந்திருக்கும்.

முன்பெல்லாம், தமிழ் திரையில் படத்தின் பெயர் வரும்படி ஒரு வசனத்துடன் படத்தை முடிப்பார்கள். இப்பொழுதெல்லாம் அதேபோல் இல்லை ஆதலின், அதன் தாக்கம் இருக்கும்படி கவனித்துக் கொள்கிறார்கள். நம் இயக்குனரும் அதற்கு சளைத்தவரல்ல, படத்தில் எல்லோரும் எதற்காக உழைக்கிறார்களோ அந்த எண்ணத்தையே தவிடு பொடியாக்கி, விழலுக்கு இறைத்த நீர் போல் ஒரு உச்சக்கட்டகாட்சியை திணித்ததன் மூலம் படத்தின் ஆதிக்கத்தை கெடுத்து சப்பென்று ஆக்கிவிட்டார். கடைசி காட்சி ‘கண்ணைவிற்று சித்திரம் வாங்கியது’ போல் உள்ளது. இவ்வளவு நேரம் குழந்தைத்தனமாக நடித்த கதாநாயகன், தெளிவாக ஒரு முடிவை எடுத்துவிட்டு விலகுவது சொல்லவந்த கருத்தை நீர்த்துப்போகச் செய்துவிட்டது.

குடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 45 other followers