ஏவிஎம்

ஏவிஎம்

ஏ.வி.எம் செட்டியாரை விகடனில் எப்போதோ எடுத்த பேட்டி. நன்றி, விகடன்!

“இந்தத் தொழிலில் நாங்கள் போடுகிற மூலதனத்துக்கும் உழைக்கிற உழைப்புக்கும், படுகிற பாட்டுக்கும் பதிலாக வேறொரு தொழிற்சாலையைத் தொடங்கியிருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும்.”- இப்படிச் சொல்கிறவர் யார்? ஏவி.எம். ஸ்டூடியோ அதிபர் திரு. மெய்யப்பன் அவர்கள்தான்.

“அப்படியானால் இந்தத் தொழிலை விட்டு விடுவதுதானே?” என்று கேட்டால், “எப்படி விட முடியும்? புலியின் வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வாலை விட்டால் திரும்பி நம் மீது பாய்ந்து விடுமோ என்று அஞ்சி, கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதில்லையா? அந்த மாதிரியேதான்” என்கிறார்.

திரு மெய்யப்பன் இத் தொழிலை விரும்பி மேற்கொண்டார் என்பதைக் காட்டிலும், சந்தர்ப்பம் இவரை இழுத்துக்கொண்டது என்று கூறுவதுதான் பொருந்தும்.

இவருடைய தந்தை ஆவிச்சி செட்டியார் காரைக்குடியில் ஒரு ஸ்டோர் வைத்திருந்தார். கிராமபோன் ரிக்கார்டுகள் விற்பனை செய்யும் டீலராகவும் இருந்தார். அவர் தொடங்கிய அந்த ஸ்டோர் ஏவி. அண்ட் ஸன்ஸ் என்ற பெயரில் இப்போதும் நடந்து வருகிறது. கிராமபோன் ரிக்கார்டு வியாபாரத்தை விரிவாகச் செய்யும் நோக்குடன் 1932-ல் சென்னைக்கு வந்த திரு. ஏவி.எம்., நாராயண அய்யங்கார், சிவன் செட்டியார் இவர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு, சரஸ்வதி ஸ்டோர்ஸைத் தொடங்கினார்.

முசிரி சுப்பிரமணிய அய்யர், கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், சுப்பையா பாகவதர் இவர்களுடைய ரிக்கார்டுகளே அந்தக் காலத்தில் பிரசித்தமாயிருந்தன. ‘அதிகமாக விற்பனையான இசைத் தட்டு எது?’ என்று கேட்டதற்கு, “முசிரியின் கர்னாடக இசைத் தட்டுகள் மட்டும் 30,000-க்கு மேல் விற்பனை ஆயின. கர்னாடக இசைத்தட்டு விற்பனையில் அது ஒரு பெரிய ரெக்கார்ட்! ‘டிரியோ டிரியோடேயன்னா’, ‘எட்டுக்குடி வேலனடி’, ‘செந்தூர் வேலாண்டி’ பாட்டெல்லாம் அந்தக் காலத்தில் ரொம்பப் பாப்புலர்!” என்கிறார்.

ரேடியோவும் சினிமாவும் வந்த பிறகு கிராமபோன் ரிக்கார்டுகளுக்கு மவுசு குறைந்துவிட்டதால், மெய்யப்பனின் கவனம் படத் தயாரிப்புத் தொழிலில் திரும்பியது.

சரஸ்வதி டாக்கி புரொடியூஸிங் என்ற பெயரில் ஒரு படக் கம்பெனி யைத் துவக்கினார். அப்போதெல்லாம் சென்னையில் ஸ்டுடியோக்கள் கிடையாதாகையால், கல்கத்தா நியூ தியேட்டர்சுக்குச் சென்று அல்லி அர்ஜுனா என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து முடித்தார். கே.எஸ்.அனந்தநாராயணய்யர் அந்தப் படத்தில் கிருஷ்ணனாகவும், குறத்தியாகவும் நடித்தார்.

‘படம் எப்படி இருந்தது?’ என்று கேட்டதற்கு, “அதை ஏன் கேட்கிறீர்கள்? படம் முழுவதும் எடுத்து விட் டோம். அப்போதெல்லாம் உடனுக்குடன் ரஷ் பார்க்கும் சந்தர்ப்பம் இல்லை. மொத்தமாகப் படத்தைப் போட்டுப் பார்த்தபோது 10,500 அடி கூடத் தேறவில்லை. படத்தில் எல்லோருடைய கண்களும் மூடிக் கிடந்தன. வெயிலில் படம் எடுத்த தால் கூச்சத்தில் கண்களை மூடிக் கொண்டுவிட்டார்கள். எடுக்கிறவர்களுக்கும் வெயில்தானே? நடிக்கிறவர்கள் கண்களை மூடிக் கொண்டிருக்கிறார்களா, திறந்து கொண்டிருக்கிறார்களா என்று பார்க்க முடியவில்லை. அப்புறம் கார்ட்டூன் படங்களைச் சேர்த்துக் காண்பித்து நேரத்தைச் சரிக்கட்டினோம்.” என்றார்.

அல்லி அர்ஜுனாவுக்குப் பிறகு இவர் எடுத்த படம் ரத்னாவளி. நடித்தவர்கள் ரத்னாபாய் – சரஸ்வதிபாய் சகோதரிகள். இந்தச் சகோதரிகளுக்கு 30 நாள் ஷூட்டிங்குக்கு 25,000 ரூபாய் கொடுக்கப்பட்டது. ‘வசூல் எப்படி?’ என்ற நமது கேள்விக்கு, ‘பிரயோஜனமில்லை’ என்பதுதான் அவர் பதில்.

‘இனி சொந்தத்தில் ஸ்டுடியோ இல்லாமல் படம் எடுக்கக் கூடாது. ஸ்டுடியோ ஆரம்பிப்பதாயிருந்தால் அது பங்களூரில்தான் இருக்க வேண்டும். ஸ்டூடியோவுக்கேற்ற சீதோஷ்ண நிலை அங்கேதான் இருக்கிறது’ என்ற முடிவுக்கு வந்தார். அதற்கேற்றாற்போல் ஜயந்திலால் என்பவர் (பூனா பிரபாத் ஸ்டுடியோவுடன் தொடர்பு கொண்டவர்) பங்களூரில் இருந்தார். அவருடைய கூட்டுறவோடும் தம் சகாக்களின் கூட்டுறவோடும் பங்களூரில் பிரகதி என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோவைத் தொடங்க முடிவு செய்தார் ஏவி.எம். வெளி நாட்டிலிருந்து சாதனங்கள் வந்து சேர ஆறு மாத காலம் ஆகும்போல் இருந்ததால், அதற்குள் பூனா சென்று இந்தி நந்தகுமாரைத் தமிழில் எடுக்க முயன்றார்கள். இந்திப் படம் திரையிடப்பட்ட இரண்டு நாளைக்கெல்லாம் வசூல் குறைந்துவிடவே, தமிழை அடியோடு மாற்றி எடுப்பதென முடிவு செய்தனர். இந்தி ஏன் ஓடவில்லை என்று கேட்டால், “கிருஷ்ணலீலா வித்அவுட் கம்சன் என்றால், படம் எப்படி ஓடும்?” என்று திருப்பிக் கேட்கிறார். தமிழ் நந்தகுமாரில் பணம் கிடைத்தது. ஆனால், பங்களூர் பார்ட்னர்கள் தங்கள் பங்கைப் பிரித்துவிட்டதால், ஏவி.எம். பிரகதி ஸ்டுடியோவை பங்களூரில் அமைப்பதற்குப் பதில் சென்னையில் நிறுவ வேண்டியதாயிற்று.

ஒஷியானிக் ஓட்டலுக்கு அருகே யுள்ள விஜயநகரம் பேலஸ்தான் பிரகதி ஸ்டுடியோ இருந்த இடம். வாடகை ரூ.350-தான். பூகைலாஸ், அரிச்சந்திரா, சபாபதி, ஸ்ரீவள்ளி ஆகிய படங்களே ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்டவை.

“சபாபதி ரொம்பத் தமாஷான படம்” என்று நாம் சொன்னபோது, “பூகைலாஸ் எடுத்தது அதைவிட வேடிக்கை” என்றார். “தெலுங்கு பேசும் படம், தமிழ் புரொடியூஸர், இந்தி டைரக்டர், கன்னட ஆர்ட்டிஸ்ட்ஸ்! இதுதான் பூகைலாஸ்!”

1944-ல் ஏவி.எம். டைரக்ஷனில் உருவாக்கப்பட்ட ராஜ யோகி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. வசுந்தராவும் தியாகராஜ பாகவதரும் சேர்ந்து நடித்த முதல் – கடைசிப் படம் அதுதான். பாதியிலேயே நின்று போனதற்குக் காரணம், நட்சத்திரங்கள் ஒத்துழைப்பு இல்லாததுதான்!

ஏவி.எம் தம் சொந்த டைரக்ஷனில் எடுத்த வெற்றிப் படம் ஸ்ரீவள்ளி. டி.ஆர்.மகாலிங்கமும் ருக்மிணியும் இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, ஒருவரை ஒருவர் நிஜ வாழ்க்கையிலும் காதலிக்கத் தொடங்கிவிட்டார்கள். படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் அது. இரண்டாவது காரணம், இந்தப் படத்தில் வந்த யானை. மூன்றாவது காரணம், இயற்கை அழகு மிக்க அவுட்டோர் காட்சிகள்.

1947-ல் உலக யுத்தம் வந்துவிடவே, மின்சார வசதி இல்லாமல், ஸ்டுடியோவை காரைக்குடிக்குக் கொண்டு போக நேர்ந்தது. இடம் மாறிய போது ஸ்டுடியோவின் பெயரும் ஏவி.எம். என்று மாற்றப்பட்டது. தேவகோட்டை ரோடில் ஓர் இடத்தைப் பிடித்து ஐம்பது குடிசைகள் போட்டு, நட்சத்திரங்களை அங்கேயே குடியேற்றி, நாம் இருவர், வேதாள உலகம் போன்ற படங்களை உருவாக்கினார். ராமராஜ்யாவைத் தமிழில் டப் செய்து வெளியிட்டார். பாரதியார் பாடல்களுடன் வெளியான படம் நாம் இருவர். லலிதா-பத்மினி பாம்பாட்டி நடனத்துடன் வெளியானது வேதாள உலகம்.

ரூ.25,000 கொடுத்து பாரதியார் பாடல்களை விலைக்கு வாங்கி வைத்திருந்த உரிமையை, அப்போ தைய முதலமைச்சர் திரு. ஓ.பி. ராமசாமி ரெட்டியாரின் விருப்பத்துக்கிணங்க எவ்விதப் பிரதிப்பயனும் எதிர்பாராமல் பொதுச் சொத்தாக மாற்றிச் சர்க்காரிடம் ஒப்படைத்தார் ஏவி.எம்.

ஏவி.எம். ஸ்டுடியோ கோடம்பாக்கத்துக்குக் குடியேறியது 1948-ல். பராசக்தி, வாழ்க்கை, அந்த நாள் போன்ற படங்கள் உருவானது இங்கேதான்.

‘இந்திப் படம் எடுத்தது எப்போது?’ என்று கேட்டதற்கு, “திரு. வாசன் அவர்கள் இந்தியில் சந்திரலேகா எடுத்து, வட நாட்டில் வெற்றிகரமாக ஓட்டி வழிகாட்டிய பிறகுதான், இந்தி மார்க்கெட்டில் நாங்களும் தைரியமாகப் புகுந்தோம்” என்கிறார் திரு. ஏவி.எம்.

ஏவி.எம். முத்திரையில் எடுக்கப்பட்ட ஹம் பஞ்சி ஏக் டால் கே என்னும், குழந்தைகள் நடித்த இந்திப் படத்துக்குப் பிரதம மந்திரி அவார்ட் கிடைத்தது மட்டுமல்ல; அந்தப் படத்தைப் பார்த்து மகிழ்ந்த நேருஜி ஏவி.எம். அவர்களையும், அந்தக் குழந்தைகளையும் தம் வீட்டுக்கு அழைத்து விருந்தோபசாரமும் செய்தார்.

ஐந்து முறை ஜப்பான் சென்று வந்துள்ள ஏவி.எம்., “அந்த நாட்டுக்கு இணையான இன்னொரு நாட்டைப் பார்த்ததில்லை. நேர்மையும், நாணயமும், உபகார குணமும் அந்த நாட்டின் தனிச் சிறப்பு” என்கிறார்.

ஆவிச்சி உயர்நிலைப் பள்ளி, ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் – இவ்விரண்டும் திரு. மெய்யப்பனின் தர்ம ஸ்தாபனங்கள். இவர் புதிதாகத் தொடங்கியுள்ளது, படங்கள் எடுப்பதற்குத் தேவையான பிலிம் வியாபாரம். பெயர்: ஆர்வோ.

இன்று டாப் டென் தளத்தில் தமிழில் Indie படங்கள் என்று ஒரு போஸ்டை பார்த்தேன். தமிழில் Indie படங்களா என்று ஒரு நிமிஷம் அதிசயப்பட்டேன். சோகம் என்னவென்றால் இதில் நான் அந்த நாளைத் தவிர வேறு படங்கள் பார்த்ததில்லை. அந்த நாள் ஏவிஎம் தயாரிப்பு – அதை எப்படி Indie படம் என்று சொல்கிறாரோ தெரியவில்லை. லிஸ்ட் சவுகரியத்துக்காக கீழே தரப்பட்டிருக்கிறது. படங்களை பற்றி ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.

எஸ் பாலச்சந்தர் – அந்த நாள் தமிழின் சிறந்த படங்களில் ஒன்று. என் விமரிசனம், சாரதாவின் விமர்சனம், படம் வந்தபோது பார்த்த ராஜ்ராஜின் எண்ணங்கள்

கம்யூனிஸ்ட் தோழர்கள் – பாதை தெரியுது பார் பார்க்க வேண்டும் என்று ஆசைதான். பிரிண்ட் இருக்கிறதோ இல்லையோ. சிட்டுக்குருவி பாடுது என்ற அருமையான பாட்டு உண்டு.

ஜெயகாந்தன் – உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், புது செருப்புக் கடிக்கும் எல்லாவற்றையும் பார்க்க ஆசைதான். யாருக்காக அழுதான் சில சீன்கள் மட்டும் பார்த்திருக்கிறேன். பக்ஸ் புரியவில்லை என்று சொல்லி இருந்தான்.

சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் – திக்கற்ற பார்வதி லட்சுமி, ஸ்ரீகாந்த் நடித்தது. ராஜாஜியின் கதை. படித்திருக்கிறேன். எனக்கு கதை அவ்வளவு சுவாரசியப்படவில்லை.

ஜான் ஆபிரகாம் – அக்ரஹாரத்தில் கழுதை நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பிரிண்ட் இருக்கிறதோ இல்லையோ?

ஜுபிட்டர் சின்னதுரை – அரும்புகள் கேள்விப்பட்டது கூட இல்லை.

ஜெயபாரதி – குடிசை கேள்விப்பட்டிருக்கிறேன். ஏதோ அவார்ட் கூட வாங்கியது என்று நினைவு.

நிமல் கோஷ் – சூறாவளி கேள்விப்பட்டது கூட இல்லை.

மௌலி – இவர்கள் வித்தியாசமானவர்கள் நான் படிக்கும் காலத்தில் வந்த படம். அப்போது பார்க்க முடியவில்லை.

கோமல் சுவாமிநாதன் – ஒரு இந்தியக் கனவு & அனல் காற்று ஒரு இந்திய கனவு கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறேன். அனல் காற்று கேள்விப்பட்டது கூட இல்லை.

சந்திரன் – ஹேமாவின் காதலர்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். க்ளப் டான்ஸ் புகழ் அனுராதாதான் ஹீரோயின்.

துரை – ஒரு மனிதன், ஒரு மனைவி கேள்விப்பட்டது கூட இல்லை.

அருண்மொழி – காணிநிலம் கேள்விப்பட்டது கூட இல்லை.

பாபு நந்தன்கோடு – தாகம் பாரதிராஜா இந்த படத்தில் ஒரு உதவி இயக்குனர் என்று கேள்வி. அவ்வளவுதான் தெரியும்.

Parallel சினிமா என்றால் தண்ணீர் தண்ணீர், பசி, அவள் அப்படித்தான், உணர்ச்சிகள், கமல் சுஜாதா இருவரும் செவிட்டு ஊமைகளாக நடிக்கும் ஒரு படம் (ஹிந்தியில் கோஷிஷ்) – ஆஹா, பேர் ஞாபகம் வந்துவிட்டது! உயர்ந்தவர்கள்! – இதெல்லாம் ஏன் விடப்பட்டது என்று தெரியவில்லை.

km_parashakthi
கலைஞர் சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டிருந்த நேரம். சிறந்த தயாரிப்பாளரான ஏ.வி.எம். செட்டியார் கலைஞரின் வசனங்களைத்தான் இந்த படத்தின் துருப்பு சீட்டாக நினைத்திருப்பார். அவரே எதிர்பார்க்காத திருப்பம் சிவாஜி. சூப்பர்ஸ்டார் கலைஞரை விட இந்த படத்தில் தெரிபவர் சிவாஜிதான். இத்தனைக்கும் அவருக்கு கடுமையான போட்டி – எஸ்.எஸ்.ஆர், ஸஹஸ்ரனாமம் ஆகியவர்கள் நடிப்பில் இளைத்தவர்கள் இல்லை. சிவாஜி காட்டிய வேகம், உணர்ச்சிக் கொந்தளிப்பு, குரல் மாடுலேஷன், சிம்மக் குரல், நடனம் (ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே பாட்டை பாருங்கள்) முதல் படத்திலேயே சென்சுரி!

இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று வசனம் பேசி பார்க்காத தமிழ் நடிகர் இல்லை. ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் என்றும் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்றும் பேசுவதை மறக்க முடியாது. அனல் பறக்கும் வசனங்கள், அந்த வசனங்களையும் விஞ்சிய நடிப்பு.

செட்டியாரின் தயக்கத்தை மீறி சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்திய பெருமாளுக்கு தமிழ் சினிமா உலகம் கடமைப்பட்டிருக்கிறது.

நினைவில் நிற்கும் சில வசனங்கள்.
கல்யாணி: இட்லிக் கடையா?
பக்கத்து வீட்டு அக்கா: தமிழ்நாட்டில் தாலி அறுத்தவர்களுக்கு அதுதானே தாசில் உத்யோகம்!

குணசேகரன்: மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கான்
போலீஸ்காரன்: ஏய்
குணசேகரன்: உங்களை சொல்லலைங்க. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன். சென்னை புனிதமான நகரம். இங்கே மனித மிருகம்
போலீஸ்காரன்: சரிதான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்.

பார்க்கில் தூங்கும் குணசேகரனை எழுப்பும் ஆள்: என்னடா? முழிக்கிறே?
குணசேகரன்: பின்ன, தூங்கினவன எழுப்பினா, முழிக்காம என்ன செய்வான்?

பாரதிதாசனின் வசனம் என்று நினைக்கிறேன் – ஓடப்பர் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ!

1952-இல் வந்த படம். ஏ.வி.எம். தயாரிப்பு. பெருமாள் ஒரு பாகஸ்தர். சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., பண்டரிபாய் ஆகியோருக்கு முதல் படம். எஸ்.வி. ஸஹஸ்ரனாமம் ஒரு முக்கிய ரோலில். இதில் அவருக்கு தங்கையாக வருபவர் பேர் மறந்துவிட்டது.ஸ்ரீரஞ்சனி (நன்றி கிருஷ்ணமூர்த்தி!) பின்னாளில் இல்லற ஜோதி படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தார். பிறகு ரத்தக் கண்ணீரில் எம்.ஆர். ராதாவுக்கு ஜோடியாகவும், அறுபதுகளில் நான் படத்தில் முத்துராமனின் வளர்ப்புத் தாயாகவும், மனோகரின் நிஜத் தாயாகவும் நடித்தாராம். (நன்றி, நல்லதந்தி!) வி.கே. ராமசாமி உண்டோ? இசை சுதர்சனம். இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு. அவர்கள் ஏ.வி.எம்முக்குள் நுழைந்தது இந்த படம் மூலமாகத்தான் போலிருக்கிறது. செட்டியார் சொல்வதை இங்கே பாருங்கள்.

கதை தெரிந்ததுதான். ரங்கூனில் மூன்று அண்ணன்கள். கல்யாணி தமிழ் நாட்டில். கல்யாணியின் கல்யாணத்தை பார்க்க ஒரு அண்ணன்தான் வர முடியும் நிலை. சென்னையில் வந்து இறங்கும் சிவாஜி பணத்தை ஒரு நாட்டியக்காரியிடம் இழக்கிறார். கல்யாணியோ கணவனை இழந்து இட்லிக் கடை வைத்து பிழைக்கிறாள். கல்யாணியை கண்டுபிடிக்கும்போது அவள் உன் மாமன் உன்னை சீராட்ட பெரும் பணத்தோடு வருவான் என்று பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாள். பணம் எல்லாம் போய் ஏழை ஆகிவிட்டேன் என்று சொல்ல விரும்பாத சிவாஜி தான்தான் அண்ணன் என்று சொல்லாமல் கிறுக்காக நடித்து அதே நேரத்தில் கல்யாணிக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறார். கல்யாணியை ஒரு பூசாரி படுக்கைக்கு கூப்பிட, கல்யாணி வெறுத்து போய் தன் குழந்தையை காப்பாற்ற முடியாததால் அதை அற்றில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயல, போலீசில் பிடிபடுகிறார். பூசாரியை தாக்கும் சிவாஜியும் போலீசில் பிடிபடுகிறார். பிறகு புகழ் பெற்ற நீதி மன்ற வசனங்கள். நடுவில் அவருக்கு பண்டரிபாயிடம் இட்லி திருட்டு, மற்றும் காதல். பண்டரிபாய்க்கு தன்னிடமிருந்து இட்லி திருடிக் கொண்டு போன அழுக்கான வாலிபன்தான் காதலிக்க கிடைத்தானா என்றெல்லாம் கேட்கக் கூடாது. ரங்கூனிலிருந்து தப்பி வரும் சின்ன அண்ணன் எஸ்.எஸ்.ஆர். காலை இழந்து பிச்சைக்காரனாகி பிச்சைக்காரர்களை ஒன்று சேர்த்து அவர்கள் நல்வாழ்வுக்கு போராடுகிறார். பெரிய அண்ணன் சஹஸ்ரனாமம்தான் கேசை விசாரிக்கும் ஜட்ஜ். பிறகு ஆற்றில் வீசப்பட்ட குழந்தை காப்பாற்றப்பட்டு, எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்!

சிவாஜி ஒரு புயல்தான். அந்த மாதிரி வேகம் உள்ள நடிகரை தமிழ் சினிமா உலகம் அது வரை பார்த்ததில்லை. இதற்கு முன் எனக்கு தெரிந்து ஓரளவாவது வேகம் உள்ள பாத்திரங்கள் அபூர்வம்தான் – சந்திரலேகா ரஞ்சன், வேலைக்காரி கே.ஆர். ராமசாமி, மந்திரி குமாரி எஸ்.ஏ. நடராஜன் மாதிரி. ஹீரோக்கள் எல்லாம் வேறு மாதிரி – ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் இரண்டு நிமிஷம் gap விடும் பாகவதர், மென்மையாக பேசும் டி.ஆர். மகாலிங்கம், எம்.கே. ராதா, எம்ஜிஆர் மாதிரி கத்தி சண்டை வீரர்கள், இவர்கள் நடுவில் ஸ்டைலாக கலைந்த தலையோடும், கவர்ச்சியான புன்னகையோடும், சிம்மக் குரலோடும் அவர் நுழைந்து நேராக டாப்புக்கு போய்விட்டார். அத்துடன் திராவிட இயக்கப் படங்களுக்கு, உணர்ச்சிகரமான வசனம் பேசுவதற்கு, intense நடிப்புக்கு அவர்தான் சரி என்றாகிவிட்டது. டி.ஆர். மகாலிங்கம், கே.ஆர். ராமசாமியின் குறுகிய திரை உலக வாழ்க்கை சடாலென்று இறங்கி விட்டது. என், நன்றாக நடித்த எஸ்.எஸ்.ஆர். சஹஸ்ரனாமம் ஆகியோரையே இந்த படத்தில் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை.

பண்டரிபாய் சின்ன பெண்ணாய், சொப்பு மாதிரி இருப்பார்.

இன்று இந்த படம் முதல் முறையாக பார்ப்பவர்களுக்கு அதே தாக்கம் ஏற்படுமா எனபது எனக்கு சந்தேகம்தான். ஐம்பதுகளில் அது யதார்த்தமான படம் என்றே கருதப்பட்டிருக்கும். இப்போது நாடகத்தன்மை உள்ளது, melodrama என்று சொல்லலாம். melodrama-வின் ஒரு உச்சம் என்று நான் இந்த படத்தை கருதுகிறேன்.

மிகவும் charming, quaint பாட்டுக்கள். சுதர்சனம் கலக்கிவிட்டார்.


அந்த “போறவரே” என்ற வார்த்தையில் இருக்கும் கொஞ்சல் அபாரம். எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரல் பாப்பா மாதிரி இருக்கும் பண்டரிபாய்க்கு நன்றாக பொருந்துகிறது.

ஓ ரசிக்கும் சீமானே வா ஒரு பிரமாதமான பாட்டு. பாடியது, எழுதியது யார்? எழுதியது கலைஞர்தானாம். விவரம் சொன்ன தாசுக்கு நன்றி!

சி.எஸ். ஜெயராமன் பாடும் “தேசம் ஞானம் கல்வி” எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் ஒன்று. உடுமலை நாராயண கவி அருமையாக எழுதி இருப்பார்.
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே
காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே
கட்டி அழும்போதும் தாண்டவக் கோனே – பணப்
பெட்டியிலே கண் வையடா தாண்டவக் கோனே
நல்ல வரிகள்!

அப்புறம் “கா கா கா” – அதற்கு காக்காய் கத்துவதை போலவே பின்னணியில் வயலின் சூப்பர். கலைஞர் எழுதிய பாட்டோ? சி.எஸ். ஜெயராமன் பாடியது.

“நெஞ்சு பொறுக்குதில்லையே” பாரதியார் பாட்டு. சி.எஸ். ஜெயராமன். சுமார்தான்.

இதை தவிர “என் வாழ்விலே ஒளி ஏற்றும்”, “பூ மாலையை புழுதியிலே”, “பொருளே இல்லார்க்கு”, “திராவிட நாடு வாழ்கவே”, “கொஞ்சும் மொழி சொல்லும்”, “பேசியது நானில்லை” என்ற பாட்டுகளும் இருக்கின்றனவாம். நினைவில்லை.

பாட்டுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே கேட்கலாம்.

பிற்காலத்தில் விவேக் அந்த நீதி மன்ற வசனங்களை மாற்றி பேசும் காட்சியும் புகழ் பெற்றது. கீழே அது.

திராவிட இயக்கத்தின் தலை சிறந்த பங்களிப்பு, கலைஞரின் வசனங்கள், சிவாஜி, quaint பாட்டுக்கள் ஆகியவற்றுக்காக இந்த படத்தை சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B grade.

1952-இல் 27 படங்கள் வந்திருக்கின்றன. நான் பார்த்தது பராசக்தி ஒன்றுதான். அதனால் எதை பற்றி எழுதுவது என்று பிரச்சினையே இல்லை. வேறு படங்களை பார்த்திருந்தாலும் பராசக்தியைத்தான் இந்த வருஷத்தின் சிறந்த படம் என்று தேர்ந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

சிவாஜி புயல் மாதிரி உள்ளே நுழைந்திருக்கிறார். பராசக்திக்கு பிறகு அவருக்கு இறங்குமுகம் வர 200 படங்களும், 25 வருஷங்களும் பிடித்திருக்கின்றன. அவர் நடித்த பணம் படமும் இந்த வருஷம்தான் வந்திருக்கிறது.

எம்ஜிஆர் இந்த ஆண்டு ராஜா ராணி படங்களிலிருந்து நகர்ந்து வர முயற்சி செய்திருக்கிறார் போல. என் தங்கை, குமாரி போன்ற கேள்விப்படாத சமூக படங்களில் நடித்திருக்கிறார்.

மற்ற படங்களை பற்றி அதிகம் தெரியவில்லை. அதனால் ஏ.வி.எம். செட்டியார் பராசக்தி பற்றி எழுதியதை கீழே கொடுத்திருக்கிறேன். ஓவர் டு செட்டியார்.

கே.என். ரத்தினம் என்ற நடிகர் கடலூரில் பாய்ஸ் கம்பெனி வைத்து நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். பாவலர் பி.பாலசுந்தரம் என்பவரின் கதையை நாடகமாக நடித்துக் கொண்டிருந்தார்கள்.

“அந்த டிராமாவைப் பார்க்கலாம், வாருங்கள்” என்று பெருமாள் என்னைக் கடலூருக்குக் கூட்டிச் சென்றார். டிராமாவைப் பார்த்தோம். மிக நன்றாக இருந்தது. அந்த நாடகம்தான் பராசக்தி. அந்தக் கதையையே வாங்கித் தரும்படி பெருமாள் கூறினார். பாவலர் பாலசுந்தரத்தை வரவழைத்துப் பேசி, பெருமாளுக்காக அந்தக் கதையை நானே வாங்கினேன்.

அந்தப் படத்தைப் பெருமாளுடன் கூட்டாகச் சேர்ந்து நாங்கள் எடுத்தோம். ஏறக்குறைய ‘ஓர் இரவு’ பாதிக்கு மேல் எடுத்துக் கொண்டிருக்கும்போதே துவங்கிவிட்டோம். ஓர் இரவை நீலகண்டன் சொந்த டைரக்ஷனில் செய்து கொண் டிருந்தார். எம்.வி. ராமன் இந்தி பகார் டைரக்ட் செய்து வந்தார். அப்பொழுதெல்லாம் ஒரு டைரக்டர் இரண்டு படங்களை டைரக்ட் செய்வது என்பது பழக்கத்திற்கு வரவில்லை. ஆகவே, எங்களுடைய புதிய படத்திற்கு யாரை டைரக்டராகப் போடலாம் என்று யோசித்து வந்தோம். கிருஷ்ணன்பஞ்சு என்பவர்கள் நியூட்டோனில் அப்போது படம் எடுத்து வந்தார்கள். திரு அண்ணாதுரை அவர்களுடைய கதையான நல்லதம்பி படம் முடிந்த சமயம். அவர்களைக் கூப்பிட்டு எங்களுக்காக இந்தக் கதையை டைரக்ட் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இருவரும் ஒப்புக் கொண்டார்கள். முதன் முதலாகக் கிருஷ்ணன்-பஞ்சு இருவரும் எங்கள் ஸ்டூடியோவிற்குள் நுழைந்தது இந்தச் சந்தர்ப்பத்தில்தான். அது முதல் ஏறக்குறைய எங்கள் ஸ்தாபனத்துடன் ஒன்றியிருக்கிறார்கள்.

பாவலரிடமிருந்து கதை கிடைத்துவிட்டது. அதற்குரிய வசனங்களை நமது மதிப்பிற்குரிய, தற்போது முதல்வராக விளங்கும் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியை விட்டு எழுதச் சொல்லலாம் என்று பெருமாள் விருப்பம் தெரிவித்தார்.

கலைஞரிடம் கேட்டோம். அவரும் ஒப்புக் கொண்டார்.

டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புதிய பாணியில் வசனங்களைத் தீட்டியிருந்தார்.

அவற்றைக் கணேசன் உச்சரித்த முறை நன்றாக இருந்தது. சொல்லப் போனால் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா ஓர் இரவு படத்திற்கு எழுதியிருந்ததை விடக் கலைஞரின் வசனங்கள் சிறப்பாக இருந்தன.

ஏறக்குறைய ஓர் இரவு கதைக்கு அண்ணாதுரை இங்கே வந்து வசனம் எழுதிக் கொடுத்துக்கொண்டிருந்த சில நாட்களுக்குள்ளேயே கலைஞரும் பராசக்திக்கு வசனம் எழுதித் தர எங்கள் ஸ்டூடியோவுக்கு வந்து போய்க்கொண்டிருந்தார்.

வசனம் எழுதத் துவங்கி விட்டார் கலைஞர்; நடிகர்கள் தேர்வு நடைபெற வேண்டுமே?

அப்போது திரு.கே.ஆர். ராமசாமி வேலைக்காரி, ஓர் இரவு நாடகங்கள் மூலமாக அதிகம் பெயர் பெற்றவராக இருந்தார். ஒரு ஸ்டார் நடிகராகவே விளங்கிவந்தார். எங்களுடைய ஓர் இரவு படத்திலும் நடித்துக்கொண்டிருந்தார்.

பராசக்தியிலும் கே.ஆர்.ராம சாமியையே நடிக்கவைக்கலாம் என்று கூறினேன். ஆனால் என்னுடைய பாகஸ்தரான பெருமாள், “ஒரு புது நடிகரைப் போட்டு எடுக்க வேண்டும். வேலூரில் சக்தி நாடக சபை நடத்தும் சில நாடகங்களைப் பார்த்தேன். ‘நூர்ஜஹான்’ நாடகத்தில் பெண் வேஷம் போட்டுக் கொண்டு கணேசன் என்கிற பையன் எவ்வளவு சிறப்பாக நடிக்கிறான் தெரியுமா? அந்தப் பையனைப் போட்டு இந்தப் பராசக்தியை எடுக்க வேண்டும். நீங்கள் வேண்டுமானால் வேலூருக்குப் போய் ஒருமுறை அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு அப்புறம் சொல்லுங்கள்!” என்றார்.

வேலூரிலிருந்து சக்தி நாடக சபா தங்கள் முகாமைத் திண்டுக்கல்லுக்கு மாற்றிக்கொண்டு விட்டதால் நான் திண்டுக்கல் போய், கணேசன் என்கிற இளைஞனின் நடிப்பைப் பார்த்துவிட்டு வந்தேன்.

“டிராமாவில் நடிப்பது வேறு. இதுவரை கணேசன் எந்த சினிமாவிலும் நடித்ததில்லையே? முதன் முறையாக மெயின் ரோலில் இந்தப் பையனை நடிக்கச் சொல்லி ஃபெயிலியர் ஆகிவிட்டால் என்ன செய்வது? இதுவோ என்னுடன் நீங்கள் கூட்டாகச் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். ரிஸ்க் வேண்டாம்,” என்று சொன்னேன்.

“இல்லை, இல்லை, கணேசனையே நடிக்கச் சொல்லுவோம். பிற்காலத்தில் மிகச் சிறந்த நடிகனாக வருவான் என்றே தோன்றுகிறது. நீங்களே பாருங்கள்,” என்று பெருமாள் சொல்லிவிட்டார். சிறந்த நடிகராக இருந்தும் கணேச னுக்குச் சினிமாவின் போக்கு புது அனுபவமாக இருந்தபடியால் சரியாக வரவில்லை என்று எனக்குத் தோன்றியது. அப்போது கணேசன் மிக ஒல்லியாக இருப்பார். யாருக்குமே ஒரு காரியத்தைச் செய்வதில் ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டால் அதைச் செய்து முடிக்கும் வழியே வேறுதான். தன்னம்பிக்கை வருவதற்கு முன்னால் செய்யும் காரியங்கள் நிச்சயம் நன்றாக அமையாது. ஆரம்பத்தில் கணேசனுக்குத் தன் நடிப்பிலேயே தன்னம்பிக்கை வரவில்லை. போதாக் குறைக்கு எங்களுக்கும் அவருடைய நடிப்பில் நம்பிக்கை இல்லையா? ஆகவே அவர் நடிப்பு எங்களுக்கு அவ்வளவு திருப்தியாக இல்லை.

2000, 3000 அடிகள் வரை எடுத்தாகிவிட்டது. அப்போது நான் மீண்டும் பெருமாளிடம், “விஷப் பரீட்சை வேண்டாம். கே.ஆர்.ராமசாமிக்குப் பெயர் அதிகமாக உள்ளது. அவரையே போட்டு எடுத்து விடலாம்” என்று சொன்னேன்.

பெருமாள் ஒரே பிடிவாதமாக, “இல்லை, கணேசனைப் போட்டுத்தான் எடுக்கவேண்டும். பின்னாடி நன்றாக வரும் பாருங்கள்” என்று கூறிவிட்டார்.படத்தை எடுத்துக்கொண்டு போனோம். ஏறக்குறைய 10,000 அடிகள் வரை சென்று விட்டோம். பத்தாயிரம் அடி என்பது எடிட் செய்யபட்ட லெங்க்த். அதாவது முக்கால் படம். வர வர முதலில் இருந்ததை விடக் கணேசனுடைய நடிப்பு சிறப்பாக வளர்ந்து, படம் முடிவதற்குள் எங்கள் எல்லாருக்குமே மிகவும் திருப்தியாக அமைந்துவிட்டது. பூராப் படம் முடிந்த பிறகு ஆரம்பத்தில் முதலில் எடுத்த எந்தக் காட்சிகளில் அவர் அதிகத் தன்னம்பிக்கையோடு நடிக்கவில்லை என்று எங்களுக்குத் தோன்றியதோ அவற்றை – ஏறக்குறைய 6000, 7000 அடிகளை திரும்பவும் செட்டுக்களைப் போட்டு இரவு பகலாகத் தொடர்ந்தாற்போல் எங்களுடைய ஸ்டுடியோவின் எல்லா ஃப்ளோர்களிலும், எடுத்தோம். மேற்கொண்டு வெளியில் எடுக்க வேண்டிய அவுட்டோர் காட்சிகளையும் ஒரே மூச்சில் சுமார் 15,20 நாட்களில் எடுத்து முடித்தோம்.

இந்தப் படத்திற்குப் பாடல்கள் எழுதியவர் உடுமலை நாராயண கவி. ‘காக்காய் இனம் தன் இனத்தை ஒற்றுமையாகக் கரைந்து அழைத்துச் சேர்ந்து சாப்பிடுகிறது. அதைக் கூட மனிதர்களாகிய நாம் செய்வதில்லை’ என்கிற அற்புதமான கருத்து அமைந்த ‘கா..கா…கா…’ என்று பாட்டை எழுதினார். இந்தப் படத்தின் மூலம் அந்தப் பாட்டு பிரபலமாகியது.’பராசக்தி’ கதை தன் தங்கைக்காக ஓர் அண்ணன் தியாகம் செய்வதைச் சொல்கிறது. தங்கைக்குச் சமூகத்தினர் இழைக்கும் தீங்குகளைக் களையும் முயற்சியில் வெறி பிடித்து, ஆஷாடபூதியாக இருக்கும் பக்தன் ஒருவனைத் தண்டிக்கும்படியான கதையாக இருந்ததால் ஜனங்களுக்கும் மிகவும் பிடித்துவிட்டது.

படம் மிகவும் அருமையாக அமைந்துவிட்டது. டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புதிய பாணியில் வசனங்களைத் தீட்டியிருந்தார். அவற்றைக் கணேசன் உச்சரித்த முறை நன்றாக இருந்தது. சொல்லப் போனால் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா ஓர் இரவு படத்திற்கு எழுதியிருந்ததை விடக் கலைஞரின் வசனங்கள் சிறப்பாக இருந்தன என்று நாங்கள் நினைத்தோம். பொது மக்களும் அவ்வாறே அபிப்பிராயப்பட்டனர்.

கதையின் போக்கு, கலைஞரின் வசனம், கணேசனின் நடிப்பு மூன்றுமாகச் சேர்ந்து பராசக்தி படம் முன்பு நாங்கள் எடுத்த படங்களைக் கூட மிஞ்சும்படி – எங்களுக்கு மகத்தான வெற்றியை அளித்தது. பராசக்தி வெளியானவுடன் ஏகப்பட்ட அபிப்பிராய விரோதங்கள் உண்டாயின. அந்தப் படம் தெய்வத்தை அவமதிப்பதாகச் சிலர் நினைத்து விட்டார்கள். காளியிடம் வந்து சிலர் முறையிடுவதையும், பூசாரியைக் கொலை செய்வதைப் போல உள்ள காட்சிகளினாலும், இந்தப் படத்திற்கு ஒரு எக்ஸ்ட்ரா பப்ளிசிடி கிடைத்துவிட்டது. படத்தை ‘பான்’ செய்யப் போகிறார்கள் என்ற பேச்சுக் கிளம்பவே இன்னும் அதிகமாக ஓடி வசூல் குவிய ஆரம்பித்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் வாசகர்களாகிய உங்களுடன் மனம் திறந்து சில கருத்துக்களைச் சொல்ல விரும்புகிறேன். நம் நாட்டில் – ஏன், நாட்டைவிட இன்னும் ஒருபடி அதிகமாக உண்மையாக என் மனத்தில் உள்ளதைச் சொல்ல வேண்டுமானால் உலகத்திலேயே ஒரு சிறந்த நடிகர் சிவாஜி கணேசன் என்பதுதான் என் தாழ்மையான அபிப்பிராயம். இதில் சிலருக்குக் கருத்து வேற்றுமைகள் கூட இருக்கலாம்.

என் வரையில் ‘நம் தமிழ் நாட்டின் அதிருஷ்டம் சிவாஜி கணேசன் தமிழ் நாட்டில் பிறந்திருக்கிறார். அவருடைய துரதிருஷ்டம் அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை.’ வெளி நாட்டிலிருந்து கலை உலக நண்பர்கள் வரும்போது சிவாஜியை நான் இப்படித்தான் அறிமுகப் படுத்துவது வழக்கம்.

சிவாஜி தம் ஐந்தாவது வயதிலிருந்தே டிராமாக் கம்பெனியில் ‘ஆக்ட்’ பண்ண ஆரம்பித்து விட்டவர். சக்தி நாடக சபை போன்ற சிறந்த நாடகக் கம்பெனியில் நடித்து அனுபவம் பெற்றார். சக்தி கிருஷ்ணசாமி, எஸ்.டி. சுந்தரம் போன்ற வசன கர்த்தாக்களிடம் பயிற்சிபெற்ற அனுபவமும் சிவாஜிக்கு இருக்கிறது. ‘தன் நடிப்புக்கு எல்லையே இல்லை’, என்கிற உணர்வோடு ஒவ்வொரு தடவையும் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து ஒன்றி நடிக்கிறார்.

பராசக்தி படத்தில் நாங்கள் அவரைப் போட்டிருக்காவிட்டாலும் கூட அவர் சிறந்த நடிகராக வந்திருப்பார். கூட இன்னும் ஓர் ஐந்தாறு வருஷம் ஆகியிருக்கும் – அவ்வளவுதான்.

(நன்றி: ஏ.வி.எம். எழுதிய “எனது வாழ்க்கை அனுபவங்கள்’ என்ற நூல். வானதி வெளியீடு.)

oriravu

அண்ணா 1945-இல் எழுதிய நாடகம். திராவிட இயக்கத்தை எதிர்த்த கல்கி கூட இந்த நாடகத்தை பார்த்துவிட்டு இதோ ஒரு பெர்னார்ட் ஷா, இதோ ஒரு இப்சன் என்றெல்லாம் பாராட்டி இருக்கிறார். (இந்த நாடகம் ஷா, இப்சன் தரத்தில் இல்லை என்பது வேறு விஷயம்)

கே.ஆர். ராமசாமி, நாகேஸ்வர ராவ், லலிதா, பாலையா, டி.கே. ஷண்முகம், பி.எஸ். சரோஜா நடித்தது. பி. நீலகண்டன் இயக்கம். சுதர்சனம் இசை. ஏ.வி.எம். தயாரிப்பு.

பாரதிதாசனின் புகழ் பெற்ற “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ” என்ற பாட்டு இந்த படத்தில் இடம் பெற்றது. இது படத்துக்காக எழுதியாதா இல்லை முன்னாலேயே எழுதப்பட்டதா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அருமையான பாட்டு. எம்.எஸ். ராஜேஸ்வரியும் வி.ஜே. வர்மாவும் பாடி இருக்கிறார்கள். யார் இந்த வர்மா? தெலுங்கரா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள். பாட்டை இங்கே காணலாம். காதலர்கள் நெருங்குவதை காட்ட தமிழில் பூக்கள் ஒன்றை ஒன்று நெருங்குவதாக காட்டும் cliche அனேகமாக இந்த பாட்டில்தான் ஆரம்பம் ஆகி இருக்க வேண்டும். அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த cliche-வை பார்ப்பதற்காகவாவது இந்த வீடியோவை கட்டாயம் பாருங்கள்.

மற்றும் ஒரு புகழ் பெற்ற பாட்டு “அய்யா சாமி ஆவோஜி சாமி” அடுத்த வரி அந்த காலத்தில் தமாஷாக இருந்திருக்கும். – “அய்யா வாய்யா, ராய்யா, யூ கம் ஐயா”. என் மாமியார் அவ்வப்போது இந்த வரிகளை முனகி கொண்டே இருப்பார். பத்மினி குறத்தியாக வந்து நடனம் ஆடுவார் என்று நினைவு. இந்த பாட்டை நான் முதலில் ஹிந்தியில்தான் கேட்டேன் – “கோரே கோரே ஓ பாங்கே சோரே” என்ற பாட்டு. நல்ல மெட்டு. ஹிந்தியிலிருந்து தமிழுக்க வந்ததா இல்லை இங்கிருந்து அங்கு போனதா என்று தெரியவில்லை.

ஏ.வி.எம். அண்ணாவிடம் கதையை மாற்றாமல் எடுப்பதாக சொன்னாராம். தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம் என்றார் அண்ணா. திரைப்படத்துக்கு ஏற்றபடி கதையை மாற்றி எழுத வந்த அண்ணா, தனக்கு வெற்றிலை, பாக்கு, ஒரு செம்பில் தண்ணீர், எழுதுவதற்கு மேஜை ஆகியவை மட்டும் போதும் என்றார். நாடகத்தின் பேருக்கேற்ப ஒரே இரவில் முழு திரைக்கதை வசனத்தை அண்ணா எழுதி முடித்துவிட்டார். அதற்கு அவருக்கு 20000 ரூபாய் கொடுக்கப்பட்டதாம்.

எனக்கு வசனங்கள் எல்லாம் பெரிதாக ஞாபகம் இல்லை. ஆனால் நன்றாக இருந்தன்.
மாளிகை வேண்டாம், மாட்டுக் கொட்டகை போதும்.
பட்டுப் பீதாம் பரம் வேண்டாம்; கட்டத் துணி இருந்தால் போதும்.
ஆபரணங்கள் வேண்டாம்; அன்பு காட்டினால் போதும்.
என்பதை இங்கே கண்டுபிடித்தேன். (இங்கே அண்ணாவுக்கு 10000 ரூபாய்தான் கொடுத்தார்கள் என்று எழுதி இருக்கிறார்கள். அண்ணாவின் வளர்ப்பு மகனான டாக்டர் பரிமளம் 20000 என்று எங்கோ எழுதி இருக்கிறார் என்று நினைவு)

கதை perfect-ஆக ஞாபகம் இல்லை. தவறுகளை கண்டுபிடிப்பவர்கள் திருத்துங்கள். டி.கே. ஷண்முகம் ஒரு ஜமீந்தார். அவர் தன் முதல் மனைவியை கொலை செய்து விடுகிறார். அவரது மகளான லலிதாவை மணந்துகொள்ள இந்த விஷயத்தை வைத்து அவரை பாலையா ப்ளாக்மெய்ல் செய்கிறார். லலிதாவுக்கு நாகேஸ்வர ராவுக்கும் காதல். ஒரு நாள் இரவு திருடன் கே.ஆர். ராமசாமி லலிதாவின் அறைக்குள் திருட நுழைகிறார். லலிதா பாலையாவை துரத்த அவரை தன் காதலன் மாதிரி நடிக்க சொல்கிறார். அதை நாகேஸ்வர ராவ் பார்த்து விட, சந்தேகம் எழும்ப, கடைசியில் கே.ஆர். ராமசாமி ஷண்முகத்தின் முதல் மனைவியின் மகன் என்று தெரியவருகிறது. காதலர்கள் ஒன்று சேர, சுபம்!

கே.ஆர். ராமசாமி நன்றாக நடித்திருந்தார். ஆனால் அண்ணாதான் படத்தின் ஹீரோ என்று சொல்ல வேண்டும்.

பார்க்கலாம். திராவிட இயக்கத்தின் இலக்கிய முயற்சிகளில் இது முக்கியமானது, நல்லது. (எனக்கு இதை விட வேலைக்காரி பிடித்திருந்தது.) அதனால் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். Of course, எனக்கு துன்பம் நேர்கையில் பாட்டு ஒன்றே போதும்.

பத்துக்கு 7 மார்க். B grade.

(Manivannan’s reproduction from Kumudam – Promoted to a post)

மணிவண்ணன் Says:
பெப்ரவரி 4, 2009 at 1:31 பிற்பகல் e

நன்றி குமுதம்:

இரும்பு மனசுக்காரர் நாகேஷ் – கலங்கும் கே. பாலசந்தர்

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகர்களில் நாகேஷும் ஒருவர். கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் சந்திரபாபுவிற்குப் பிறகு நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர் நாகேஷ் என்றால் அது மிகையல்ல. எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் தொடங்கிய அவரது கலைப் பயணம், பல பரிமாணங்களைக் கடந்துள்ளது. அவரது `தருமி’ வேடத்தை யாரால் மறக்க முடியும்? பிற்காலத்தில் குணச்சித்திர வேடங்களிலும் வெளுத்துக் கட்டினார்.

நகைச்சுவை நடிகராக வலம் வந்த நாகேஷை, ஹீரோவாகப் போட்டு பல்வேறு நாடகங்களையும் படங்களையும் இயக்கியவர் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர். நாகேஷின் குருநாதராகவும் நல்ல நண்பராகவும் திகழ்ந்த அவரிடம், நாகேஷ் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னோம். தழுதழுத்த குரலில் ஆரம்பித்தார் கே.பி.

“இறந்தவர்களுக்கு, இருப்பவர்கள் செய்யும் சடங்குகளுள் ஒன்று வாய்க்கரிசி போடுவது. அதைச் செய்து அவரை மயானத்தில் தனியே விட்டுவிட்டு வந்து அசை போட்டுப் பார்க்கிறேன்.

ஆரம்ப காலம் தொடங்கி, அண்மையில் பதினைந்து நாட்களுக்கு முன்பு போய் பார்த்துப் பேசிவிட்டு வந்த சம்பவம் வரை ஒவ்வொரு விஷயமும் நினைவுக்கு வந்து நெஞ்சை அடைக்கிறது. ஆத்மார்த்தமாகப் பழகும் அந்த நண்பரை இழந்து மனமொடிந்து போயிருக்கிறேன்.

நான் பத்திரிகைப் பேட்டிக்காகவோ அல்லது ஒப்புக்காகவோ சொல்லவில்லை. நடிப்பில் சிவாஜிக்குப் பிறகு பேர் சொல்லும் பிள்ளையாக இருந்தவர் நாகேஷ். அதிலும் குணச்சித்திரமாகவும் காமெடியாகவும் இணைந்து நடிக்கும் நடிகர், இனிமேல் பிறந்தால் கூட அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். காமெடி டிராக்கில் மட்டும் ஓடிக் கொண்டிருந்த அவரை குணச்சித்திர நடிகனாக்கியது பற்றி நினைத்தால் பல சம்பவங்களைக் கூறத் தோன்றுகிறது.

சின்னச் சின்ன கம்பெனிகள் நடத்தி வந்த சில நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நாகேஷ் பற்றி நண்பர்கள் சிலர் என்னிடம் சிலாக்கியமாகச் சொன்னார்கள். நானும் அரசுப் பணியில் இருந்தபடியே நாடகங்கள் எழுதி இயக்கிக் கொண்டிருந்தபடியால், இயல்பாக ஏற்பட்ட ஆர்வத்தில் நண்பர்கள் கூறிய நாடகத்தையும் நாகேஷையும் பார்க்கப் போனேன்.

அப்படிப் போன ஒரு நாடகத்தில் நாகேஷின் ஆரம்பக் காட்சியே எனக்கு பிரமிப்பு ஏற்படுத்திவிட்டது. அதாவது யாரோ விரட்டி வருவதுபோல பாவனை செய்தபடி, நீளமான சோபா ஒன்றை அனாயாசமாக தாண்டிக் குதித்தபடி வசனம் பேசுவார். அப்போது அவருடைய அங்கஅசைவுகளும் வசன உச்சரிப்புகளும் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. நாடகம் முடிந்ததும் தனியே பார்த்துப் பாராட்டிவிட்டு, `இப்படி நடிப்பது ரிஸ்க் இல்லையா? அடிபட்டால் என்னாகும்?’ என்று அக்கறையுடன் கேட்டேன். அதற்கு நாகேஷ், `அடிபடலாம். அதற்கு பயந்து மெனக்கெடாமல் இருக்கக் கூடாது. ஆல் இன் கேம். அதிலும் நாடகத்திற்கு மற்ற தொழிலில் காட்டும் திறமை மற்றும் அக்கறையைவிட நூறு சதவிகிதம் அதிகம் காட்டினால்தான் ஜெயிக்க முடியும்!’ என்று விளக்கம் சொன்னார்.

அவருடைய நாடகத்தைப் பார்க்கப் போன காலகட்டத்தில் நான் `மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் நடத்திக் கொண்டிருந்தேன். அதைப் பார்க்க வந்த நாகேஷ், என் நாடகத்தை வெகுவாகப் பாராட்டிவிட்டு, மெதுவாக தனக்கும் என் குழுவில் இடம் வேண்டும் என்று கேட்டார். சின்னச் சின்ன கம்பெனிகளில் நடிக்கும் தனக்கு என் அங்கீகாரமும் ஆதரவும் வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசினார். குறைந்தபட்சம் `மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தில் ஒரு கேரக்டர் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டார்.

நான் அவரிடம் `உங்களுக்கான ஒரு ஸ்கிரிப்ட்டைத் தயார் செய்து, அதன் மூலம் உங்களை எங்கள் குழுவில் சேர்க்கிறேன்’ என்றதும், சரி என்று போனவர், மறுநாளே என் அலுவலகம் வந்து தனக்கான ஸ்கிரிப்ட் தயாரா எனக் கேட்டார். இவ்வளவிற்கும் சினிமாவில் தலைகாட்டி பிரபல-மாகிவிட்ட அவர், நிஜமாகவே நாடகங்களில் நடிக்க அதுவும் என் நாடகங்களில் நடிக்கக் காட்டிய ஆர்வம் என்னைப் பெரிதும் ஈர்த்தது.

அதன் விளைவாக தீவிரமாக யோசித்தபோது, நாகேஷின் முகத்தில் இருந்த அம்மைத் தழும்புகளையும் அதனால் நாயகன் படும் மன உளைச்சல்களையும் வைத்து ஒரு கதை பண்ணலாமா என்று நாகேஷிடமே கேட்டேன். இந்த கதைக்களம் அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. உடனே என்னை அடுத்தடுத்து சந்தித்து ஒரு வகையில் நெருக்கடி கொடுத்து தனக்கான அந்த முழுக் கதையையும் உருவாக்க வைத்துவிட்டார். அதுதான் `சர்வர் சுந்தரம்.’

அந்தக் கதை தயாரானதும் தினமும் ரிகர்சல் பார்க்க சின்சியராக ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி சினிமாவில் பிஸியான நிலையிலும் அவருடைய நாடக ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறுகிய காலத்தில் மெனக்கெட்டுத் தயாரித்த `சர்வர் சுந்தரம்’ நாடகத்தை அரங்கேற்றும் நாளன்று என்னை விட டென்ஷனாக இருந்த நாகேஷ் மெதுவாக, `பாலு, இந்த நாடகத்தோட முதல் டயலாக் தவிர மற்றதெல்லாம் மறந்துடுத்தே’ என்றார். ஆனால் நாடகம் தொடங்கியதும் மடமடவென்று டயலாக்குகளை வீசி அசத்திவிட்டார். குறிப்பாக நாயகிக்கு பொக்கே கொடுத்துவிட்டு, பதிலுக்கு குப்பைக் கூடையை எடுத்துப் போகிறேன் என்று கூறியபோது, ஆடியன்ஸ் தட்டிய கைதட்டல்கள் இன்னமும் காதுகளில் ஒலிக்கிறது.

அந்த நாடகத்தின் காட்சி அமைப்புகள் சிறப்பாக இருந்தாலும் நாகேஷின் நடிப்பும் மெருகேற்றியதால் கிடைத்த பாராட்டு ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்தது. இந்த நாடகம் நடக்கவிருந்த ஓரிரு நாளில் எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். அவரிடம் நாடகம் பற்றிக்கூறி அனுமதி வாங்கி வந்து நடித்துவிடும் போக்கும் என்னைக் கவர்ந்தது.

`சர்வர் சுந்தரம்’ நன்றாக போய்க்கொண்டிருந்தாலும் `மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்திலும் தான் பங்குபெற வேண்டும் என்று தொடர்ந்து அடம் பிடித்து வந்தார். அதனால் ஒரு காட்சியில் பேப்பர் போடும் பையன் கேரக்டர் கொடுத்தேன். அதில் வந்தவரை ஆடியன்ஸ் பார்த்து `ஹே, நாகேஷ்’ என்று கத்தினார்கள்.

இதெல்லாம் நடப்பதற்கு முன்பு நானும், நாகேஷும் இணைந்து ஒரு நாடகத்தில் நடித்தோம். முதலாளியாக நானும் வேலைக்காரராக அவரும் நடிக்கும்போது, திடீரென்று இஷ்டத்துக்கு வசனம் பேசி என்னைத் திகைக்க வைத்துவிட்டார். அதிலிருந்து என் நாடகங்களில் இப்படி அதிரடியாக புதிய வசனம் எதுவும் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டுவிட்டேன்.

பிறகு, நான் எழுதிய `நீர்க்குமிழி’ நாடகத்தில் நாகேஷ் புகுந்து கலக்கினார். காமெடியனாக வந்த நாகேஷ், இந்நாடகத்தின் மூலம் பார்வையாளர்களை அழ வைத்துவிட்டார். பலமுறை நானே அவரது நடிப்பைப் பார்த்துக் கண்கலங்கியுள்ளேன்.

அந்த நாடகத்தில் பல பரிமாணங்களைக் காட்டி அசத்திய நாகேஷை மனதில் வைத்து `எதிர்நீச்சல்’ நாடகம் எழுதினேன். அதுபற்றி எதுவும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இப்படிப் போன காலகட்டத்தில் `நீர்க்குமிழி’ நாடகத்தைப் படமாக்கினோம். நாடகத்தில் நடித்தவர்களையே பெரும்பாலும் போட்டு குறைந்த பட்ஜெட்டில் தயாரான அப்படம் நிறைவான வருவாயும், பேரும் கொடுத்தது. குறிப்பாக இப்படம் பற்றி ஏவி.எம். செட்டியாரும், பாரதிராஜாவும் பிரமிப்புடன் பேசினார்கள்.

அதேசமயம் புதிய நாடகமாக `நவக்கிரகம்’ எழுதினேன். அதுதான் என் கடைசி நாடகமாகிவிட்டது. காரணம், நான் உள்பட நாடகத்தில் பங்கேற்ற அனைவரும் சினிமாவில் பிஸியாகிவிட்டதால் நாடகத்திற்குத் தேவையான நேரத்தை எங்களால் ஒதுக்க முடியாமல் போனதுதான்.

ஆனால், சினிமாவில் தனிக் கொடி நாட்டி வெற்றிப் பாதையில் போய்க் கொண்டிருந்த எங்கள் நட்புக்கு யாரோ திருஷ்டி போட்டுவிட்டார்கள். பல ரூபங்களில் வந்த பிரச்னைகளால் பிரிந்துவிட்டோம்.

நாகேஷ் வீட்டில் நடந்த ஒரு துயரச் சம்பவத்தால் தனிமையில் வாழ ஆரம்பித்த நாகேஷை வைத்து `வெள்ளிவிழா’ என்ற படத்திற்கு கால்ஷீட் வாங்கினேன். எனக்குக் கொடுத்த கால்ஷீட் தினத்தன்று எனக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு எம்.ஜி.ஆர். படமொன்றில் நடிக்கப் போயிருந்தார். அந்த விஷயம் தெரிந்து விசாரித்தபோது, அவர் என்னைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் காயத்தையும், ஆறாத வடுவையும் எனக்குள் ஏற்படுத்திவிட்டது. அதில் கோபமடைந்த நான், நாகேஷின் தொடர்பை அறவே துண்டித்துவிட்டு அவருக்காக உருவாக்கிய கேரக்டரில் புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்தினேன். அவர்தான் தேங்காய் சீனிவாசன்.

இந்த `வெள்ளிவிழா’ பட ஷூட்டிங்கின் போது எனக்கு ஹார்ட்-அட்டாக் வந்து நினைவைத் துறந்து பல நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தேன். அப்போது தினமும் நாகேஷ் வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவாராம். பின்னாளில் என் மனைவி சொல்லித் தெரிந்துகொண்ட விஷயமிது.

ஆனாலும் வருத்தம் குறையாத நிலையில், நாகேஷ் உறவே இல்லாமல் ஏழெட்டுப் படங்கள் எடுத்து அதில் பல ஹிட் ஆகின. பட வெற்றிவிழா சிலவற்றில் நாகேஷைப் பார்த்துப் பேச ஆரம்பித்த பிறகு சமரசம் ஆகிவிட்டோம்.

அடுத்து `அபூர்வ ராகங்கள்’ படம் எடுக்கும்போது அதில் கண்டிப்பாக தனக்கு ஒரு ரோல் வேண்டும் என்று உரிமையுடன் கேட்டார் நாகேஷ். அவருக்காகவே டாக்டர் ரோலை உருவாக்கினேன். பிறகு அடுத்தடுத்து எங்கள் நெருக்கம் பலப்பட்டு விட்டது. அதே சமயம் நாகேஷ் பற்றி இன்னொரு விஷயத்தையும் கூற விரும்புகிறேன். என் நாடகங்கள் தொடங்கி கேள்விப்பட்ட அனைத்து நாடகங்களையும், சினிமாக்களையும் பற்றி விலாவாரியாக மணிக்கணக்கில் பேசும் நாகேஷ், தன் குடும்ப விஷயங்களைப் பற்றி ஒருபோதும் பேசியதில்லை. அந்த வகையில் நாகேஷ் இரும்பு மனசுக்காரர் என்றுதான் சொல்வேன். மொத்தத்தில் நாகேஷ் மறைவு நடிப்பிற்கு இழப்பு!” என்று கூறி கண்களைத் துடைத்துக்-கொண்டார் கே.பி.

(Thanks Manivannan)

natarajamநடராஜ முதலியார் பிறந்தது 1885ல். தந்தை சென்னயில் புகழ் பெற்ற மருத்துவர் எம். ஆர். குருசாமி முதலியார்.

கீச்சக வதம் வெளி வந்தாலும் நடராஜ முதலியார் அதை ஊமை படமாகவே (Silent movie) வெளியிட்டார். இவர் இந்த திரைப்படத்திற்கு ரூபாய் 35000 செல்வு செய்தார். 1917ல் 35000 என்பது பெரும் பட்ஜட். முதல் முயற்சி என்பதால் கொஞ்சம் செலவு கையை மீறியிருக்கலாம். 35 நாட்களில் எடுத்துவிட்டதாக ஒரு செய்தி இருக்கிறது. ஜெட் ஸ்பீடு தான்.

நடராஜ முதலியார் இந்த மாதிரி அட்வென்ச்சரில் குதித்தாலும் நிதானமாகவே யோசித்து எடுத்த முடிவாகத்தான் தோன்றுகிறது. அவரது நண்பராகிய நாடகத்தை வளர்க்கப் பாடுபட்ட பம்மல் சம்பந்தம் முதலியாரிடம் ஆலோசனை செய்தார். அந்த காலத்தில் தெரிந்த கதையை வைத்து படம் எடுத்தால் தான் படம் ஓடும் என்று ஒரு எண்ணம் இருந்திருக்கலாம். தெரிந்த கதையை வைத்து படம் எடுக்கச் சொன்ன அவருடைய ஐடியாதான் இந்த திரௌபதி vs கீச்சகன்.

நடராஜ முதலியார் ஒரு பிஸினஸ்மேன். அவருக்கு இந்த கதை, கத்திரிக்காய் எல்லாம் எழுத வராது அல்லது தெரியாது. (ஏதோ நான் இதை எல்லாம் எழுதவதால் எனக்கு இதெல்லாம் நன்றாகத் தெரியும் என நீங்கள் நினைப்பதாக நான் நினைப்பதால் நான் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன். வேண்டாம், உண்மையை சொல்லிவிடாதீர்கள்!). எனவே அவர் சி. ரங்கவடிவேலு என்ற நண்பரை அனுகினார். ரங்கவடிவேலு அப்பொழுது சுகுன விலாஸ் சபா என்ற ஒரு நாடக குழுவை நடத்தி வந்தார். திரைக்கதையை எழுதும் பொறுப்பை அவரிடம் தள்ளிவிட்டார். அவரே நடிகர், நடிகைகளுக்கு கோச்சிங் கொடுத்தார். ரங்கவடிவேலுவை உபயோகப்படுத்திக்கொண்டது ஒரு பிரமாதமான் strategy என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் சுகுன விலாஸ் சபாவை முன்னதாக சம்பந்தம் முதலியார் முன்னதாக வளர்த்து வந்தார். அது ஒரு பெருமை. மேலும் ரங்கவடிவேலுவும் மிகவும் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார். பெரிய  சபை கதையாசிரியரே திரைகதை எழுதினால் மக்கள் கூட்டம் அலை மோதி விடாதா? அது ஒரு வியாபாரத் தந்திரம் தானே? இன்று ஏ.வி.எம் ப்ரொடெக்‌ஷன்ஸ் கூட பாப்புலர் ஆன கலைஞர்களை வைத்து அதை யுக்தியை தானே கடைப்பிடிக்கிறது.

நடராஜ முதலியார் பெங்களூரில் ஒரு labஐ நிறுவினார். வாரம் ஒரு முறை பெங்களூர் சென்று தனது ஃபிலிம் சுருள்களை தயார் செய்வார். இப்படி அவர் அயராது  உழைத்துக் கொண்டிருக்கையில் இரண்டு துயர சம்பவங்கள் அவருடைய திரைப்பட உலக வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. அவர் India film companyஐ விட்டு வேலூரில் சொந்த ஸ்டுடியோ வைத்திருந்தார். அது தீயில் கருகியது. மேலும் அவருடைய மகன் காலமானார். 1923ஆம் வருடத்துடன் அவருடைய திரை சகாப்தம் முடிவடைந்தது.

அவருடைய மற்றத் திரைப்படங்கள்:

திரௌபதி வஸ்திரபரனம் (1917)
மைத்திரேயி விஜயம் (1918)
லவ குசா (1919)
மஹிரவனன் (1919)
மார்க்கண்டேயன் (1919)
கலிங்க மர்தனம் (1920)
ருக்மணி கல்யாணம் (1921)

நக்கீரன் AVM திரைபடஙகளை ஒரு பதிலில் தொகுத்து கொடுத்திருக்கிறார்.  அதை ஒரு பதிவாக ப்ரொமோட் செய்துவிட்டேன். நன்றி நக்கீரன்.

(மணிவண்ணன் மறுபடியும் கொதித்து எழும் வரை AVM பற்றி எழுதிக் கொண்டிருக்கலாம்.  ஆனால் அப்படி போரடிக்கும் வரை எழுதாவிட்டாலும், ஒன்று, இரண்டு பதிவுகளோடு நிறுத்திக் கொள்வோம். )

AVM Anjali
———-

List of AVM movies

Year Film
2009 Vettaikaran-Announced
2008 Ayan -Filming
2007 Sivaji: The Boss
2006 Thirupathi
2004 Perazhagan
2003 Priyamana Thozhi
2002 Anbe Anbe
2002 Gemini
1997 Minsaara Kanavu
1994 sethupathi I.P.S
1993 Yajamaan
1993 Aa Okkati Adakku
1991 Managara Kaval
1990 Bamma Maata Bangaru Baata
1989 Raja Chinna Roja
1987 Samsaaram Oka Chadarangam
1987 Manidhan
1987 Paer Sollum Pillai
1985 Mr Bharath
1984 Nallavanukku Nallavan
1984 Naagu
1984 Munthanai Mudichu
1983 Thongadhae thambi Thongadhae
1983 Paayum Puli
1982 Sakalakala Vallavan
1980 Murattuk Kalai
1980 Punnami Naagu
1973 Jaise Ko Taisa
1972 Akka Thamudu
1972 Dil Ka Raja
1971 Bomma Borusa
1969 Mooga Nomu
1968 Do Kaliyaan
1967 Bhakta Prahlada
1966 Letha Manasulu
1965 Chitti Chellelu
1965 Naadi Aada Janme
1964 Pooja Ke Phool
1963 Penchina Prema
1962 Main Chup Rahungi
1962 Manmauji
1962 Pavithra Prema
1961 Chhaya
1961 Papa Pariharam
1960 Bindya
1960 Kalathur Kannamma
1959 Barkha
1958 Bhookailas
1952 Paraasakthi
1957 Bhabhi
1957 Miss Mary
1956 Bhai-Bhai
1956 Chori Chori
1956 Nagula Chaviti
1955 Vadina
1954 Antha Naal
1953 Jatakaphalam
1953 Ladki
1953 Sangham
1951 Bahar
1949 Jeevitham
1947 Naam Iruvar

From Manivannan:
நன்றாக ஞாபகமில்லை, ஆனால் சிலது ஞாபகம் உள்ளது.
80களில் AVM குடும்பத்தில் பிளவு ஏற்ப்பட்டது, சரவணனும் பாலசுப்பிரமணியனும் ஒரு பக்கமும் குமரனும் தாயாரும் (ராஜேஸ்வரி அம்மாள்) ஒரு பக்கமும் நின்றார்கள். குமரனும் AVM என்னும் பானரில் சில படங்கள் தயாரித்தார். பிரபு நடித்த சூரக்கோட்டை சிங்ககுட்டி முதல் படம் என நினைக்கின்றேன். ரொம்ப நாளைக்கப்புறம் “அஆஇஈ” என்னும் ஒரு படத்தை இப்போது தயாரிக்கிறார்.

1969ல் வந்த படம். AVM ப்ரொடெக்‌ஷன்ஸில் வெளிவந்தது.

நடிகர்கள் AVM ராஜன், நாகையா, கோபாலக்கிருஷ்ணன், சிவக்குமார், சோ, T.R. ராமச்சந்திரன், V.K. ராமசாமி, ஒர் விரல் கிருஷ்ணாராவ்
நடிகைகள் வாணிஸ்ரீ, லக்‌ஷ்மி, SN லக்ஷ்மி, S.சகுந்தலா, மனோரமா, பானுமதி
வசனம் நிர்மலா
ஒளிப்பதிவு தம்பு
பாடல்கள் கண்ணதாசன்
இசை M.S. விஸ்வனாதன்
பின்னணி L.R.ஈஸ்வரி. T.M.S, P.சுசீலா
தயாரிப்பு M.முருகன், M.சரவணன், M.குமரன்
டைரக்‌ஷன் கிருஷ்ணன்-பஞ்சு

நாகையா, மனைவி S.N.லக்‌ஷ்மி இருவருக்கும் கோபாலகிருஷ்ணன், AVM ராஜன், ஊனமுற்ற தங்கை லக்‌ஷ்மி ஆகியோர் வாரிசுகள்.  நாகையாவுக்கு ஃபாக்டரியில் வேலை செய்யும் போது கண் போய்விடுகிறது. அதன் பின் மருமகள் சகுந்தலா கொடுமை படுத்துகிறாள். AVM ராஜன் பொறுப்பு வந்து பாண்ட், ஷர்ட் போட்டுக்கொண்டு கட்டட வேலை செய்யப் போன இடத்தில் வேலையை இன்னொருவருக்கு தியாகம் செய்துவிட்டு தத்துவப் பாடல் ஒன்றை அவிழ்த்துவிடுகிறார். அந்தப் பாடல் ”சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்”.

பின்னர் ராமச்சந்திரன் வாலட்டை கண்டுபிடித்துக்கொடுத்து அவர் மூலமாக டிரைவர் வேலை கண்டுபிடித்துக்கொள்கிறார். எந்த வேலையிலும் நிலைக்காமல் கடைசியில் வாணிஸ்ரீயின் தந்தை வி.கே.ராமசாமி கம்பெனியில் அண்ணன் மேனேஜர், தம்பி குமாஸ்தா.

சோ  VKராமிசாமியை நல்ல மிளகாய் அரைக்கிறார். ராமச்ச்ந்திரனின் மகன் சிவக்குமார் லக்‌ஷ்மியுடன் ஜோடி சேருகிறார்.

அண்ணன் கோபாலகிருஷ்ணன் மனைவி பேச்சைக் கேட்டு குடும்பத்தை கைவிட்ட பிறகு AVM ராஜன் குடும்பத்தை பல கஷ்டங்களுக்கு இடையில் காப்பாற்றுவதுதான் கதை. திரைகதையை நன்றாக சிரத்தை எடுத்து பண்ணியிருக்கிறார்கள் கிருஷ்ணன் பஞ்சு.

“முத்தான ஊர்கோலமோ”, “மோதிரம் போட்டது”, “மலரும் மங்கையும் ஒரு ஜாதி”, “இறைவா உனக்கொரு கேள்வி” என்ற பாடல்கள் சுசீலா பாடுகிறார். ”பொன்னாலே” என்ற பாட்டை வெ.நிர்மலாவிற்க்காக LR ஈஸ்வரி பாடுகிறார். பாடல்கள் ஒன்றும் மனதில் நிற்க்கவில்லை. வார்த்தைகள் பரவாயில்லை

வசனம் நன்றாக இருக்கிறது. நார் பெருமையானதா? பூ பெருமையானதா என்று சோ விளக்குவது இது: “பூ இவ்வளவு தானா?” என்று பூவை அலட்சியம் பண்ணுவார்கள். ஆனால் நாரையோ பெருமையாக மாம”நாரு” என்று பெருமையாக சொல்வார்கள்.

வாணிஸ்ரீ அழகாக இருக்கிறார்.

நல்ல பாசம் நிறைந்த குடும்பக் கதை. ஆனாலும் 19 ரீல் பாசம் கொஞசம் ஓவர் தான்.

கடைசி சீன் ஜோக் – சோ மனம் திருந்துகிறார். அவர் கைவிட்ட பானுமதியிடம் “நான் திருந்திட்டேன்”  என்கிறார். அவர் “அப்படிச் சொல்லாதிர்கள்” என்று சொல்ல,  “இல்லை, அப்படித்தான் சொல்லனும்” என்கிறார் சோ, கடைசி சீன் என்பதை குறிப்பிட்டு.

6/10 மார்க்.

1953இல் வெளிவந்தது. ஒரே நேரத்தில் “லட்கி” என்று ஹிந்தியிலும் வெளிவந்திருக்கிறது. தமிழில் நடித்தவர்கள் ஜெமினி, வீணை எஸ். பாலச்சந்தர், வைஜயந்திமாலா, அஞ்சலி தேவி, எஸ்.வி. சஹஸ்ரனாமம், நாகையா, சாரங்கபாணி, வி.கே. ராமசாமி, பி.டி.சம்பந்தம், ஆர். பாலசுப்ரமணியம் நடித்திருக்கிறார்கள். இசை ஏவிஎம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளர் சுதர்சனம். இயக்குனர் எம்.வி.ராமனா? ஹிந்தி படத்துக்கு அவர்தான். சுமாராகத்தான் ஓடியதாம்.

ஹிந்தியிலும் வைஜயந்திமாலாவும் அஞ்சலி தேவியும்தான். ஜெமினிக்கு பதிலாக பரத் பூஷன். பாலச்சந்தருக்கு பதிலாக கிஷோர் குமார். சாரங்கபாணிக்கு பதிலாக ஓம் பிரகாஷ்.

பாட்டுக்கள் பிரமாதம்! எனக்கு மிகவும் பிடித்தது “சொன்ன சொல்லை மறந்திடலாமா” பாட்டுதான். எம்.எஸ். ராஜேஸ்வரியும் எனக்கு ஞாபகம் இல்லாத இன்னொருவரும் டி.எஸ். பகவதியும் பாடியது. மீண்டும் கேட்டால் ஞாபகம் வந்துவிடும் என்று ஆவலோடு காத்திருந்தேன், சன் டிவிக்காரர்கள் என் ஆசையில் மண்ணை வாரி போட்டுவிட்டார்கள். முன்னால் எழுதிய போஸ்ட்1, போஸ்ட்2 இங்கே. இங்கே கேட்கலாம்.

“பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் கண்ணா” அபாரம். ஏதாவது தமிழ் கீர்த்தனையா? அதில் “பத்து ஜனங்கள் முன்னால்” என்று ஆரம்பித்து விஸ்தாரமாக ஸ்வர ஆலாபனை செய்வதும், அதை வீணையில் திருப்பி வாசிப்பதும் அருமை! பாடியது டி.எஸ். பகவதியாம். எம்எல்வி என்றும் எங்கேயோ படித்தேன். என்னால் இப்போது குரலை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரே ஒரு முறைதானே கேட்டிருக்கிறேன்… எனக்கு கர்நாடக சங்கீதம் எல்லாம் தெரியாது – ஆனால் ராகம் தாளம் எல்லாம் தெரிந்தால்தான் பாட்டை ரசிக்க வேண்டுமா என்ன? ராகம் என்னவென்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்! இந்த பாட்டுக்கு யாரிடமாவது MP3 இருக்கிறதா?

“உல்லாசமாகவே உலகத்தில் வாழவே” – சந்திரபாபு அபூர்வமாக வேறு ஒருவருக்கு குரல் கொடுத்திருக்கிறார். அது ஒரு . “வனஜா கிரிஜா ஜலஜா [ஏதோ ஒரு ஜா] ராகினி ரோஷினி சரசா கிரிஜா ஜலஜா வனஜா மாலினி லோசனி மஞ்சுளபாஷிணி யாரோ ஒரு பெண்மணி அவளே என் கண்மணி” என்று பாடும்போது பிய்த்து உதறுகிறார். (வனஜா கிரிஜா என்று தவறாக எழுதி இருந்ததை திருத்திய ராஜ்ராஜுக்கு நன்றி!) ஸ்விங் இசையை அருமையாக தமிழுக்கு கொண்டுவந்திருக்கிறார். அந்த காலத்து இளைஞர்கள் குஷி மூடில் இருக்கும்போது கண்டிப்பாக பாடியிருப்பார்கள்!

“பாரத நாட்டுக்கிணை பாரத நாடே” நல்ல அழகான செட். பாட்டு கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும், நன்றாக இருக்கிறது.

சாரங்கபாணி செய்யும் கதாகாலட்சேபம் அருமை. “பெண்ணை நம்பாதே” என்று சாரங்கபாணி காலட்சேபம் செய்ய, அவரது மனைவியிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு பெண்ணாக வாக் அவுட் செய்கிறார்கள். ஆனால் சாரங்கபாணியும், பி.டி. சம்பந்தமும் விடாமல் வேகத்துடன் பாடிக்கொண்டே போகிறார்கள். பி.டி. சம்பந்தம் கொஞ்சம் குள்ளம். அவர் ஒரு சேரில் ஏறிக்கொண்டு சாரங்கபாணிக்கு இணையாக பாடுவது அருமை.

“எட்டாத கிளையில் கிட்டாத கனி போல்” ஒரு ஜாலியான feet tapping number. நல்ல சந்தம்.

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்” என்ற பாரதியார் பாட்டு. பாடுவது அபூர்வமாக பாடும் டி.ஏ. மோதி.

“அகில பாரத பெண்கள் திலகமாய்” கேட்கலாம்.

படத்தில் எங்கெல்லாம் டான்ஸ் ஆடமுடியுமோ அங்கெல்லாம் வை. மாலா ஆடிவிடுகிறார். மேடம் ஃப்யூரியுடன் “பாரத நாட்டுக்கிணை” என்று பாடிக்கொண்டே போட்டி டான்ஸ், கிராமீய நடனம் என்று சொல்லி “எட்டாத கிளை மேல்” என்று ஒரு பாட்டு. இதை தவிர குதிரை சவாரி செய்துகொண்டே “அகில பாரத பெண்கள் திலகமாய்”, தோழிகள் இருவரும் சேர்ந்து “சொன்ன சொல்லை மறந்திடலாமா”.

பாட்டும் டான்சும்தான் முக்கியம். கதை எல்லாம் இரண்டாம் பட்சம்தான். கலப்பு மணத்தில் பிறந்த அ. தேவியை ஜெமினி காதலித்து கல்யாணம் செய்துகொள்கிறார். அவரது ஆச்சாரமான அப்பா சாரங்கபாணியின் வற்புறுத்தலாலும், தன் மனைவி மீது ஏற்படும் சந்தேகத்தாலும் ஜெமினி வை. மாலாவை மணந்துகொள்ள சம்மதிக்கிறார். கல்யாண மேடையில் உண்மைகள் வெளிவர, ஜெமினியும் அ. தேவியும் ஒன்று சேர, ஜெமினியின் கஸின் பாலச்சந்தர் வை. மாலாவை மணக்க, சுபம்!

அஞ்சலி தேவியின் குரலில் கொஞ்சம் தெலுங்கு வாடை அடிக்கிறது. அதுவும் சார்மிங்காகத்தான் இருக்கிறது.

சாரங்கபாணி எப்போதுமே அழுத்தி அழுத்தித்தான் பேசுவார். Like rolling the “R”s in English. அது இந்த ரோலுக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது.

ஆர். பாலசுப்ரமணியம் அந்த காலத்து மேஜர் சுந்தரராஜன். எல்லா படத்திலும் அப்பா.

ஜெமினி வை. மாலாவை கல்யாணம் செய்து கொள்ள ஊர்வலமாக வரும்போது வாண வேடிக்கை, யானைகள், குதிரைகள், பூப்பல்லக்கு எல்லாம் அமர்க்களப்படுகிறது! இப்படித்தான் அந்தக் காலத்தில் இருக்குமா என்ன?

ஜெமினி டைட்டிலில் ஆர். கணேஷ்தான். இன்னும் ஜெமினி கணேசன் ஆகவில்லை. டைட்டிலில் வரும் முதல் பேர் சாரங்கபாணி!

பாட்டுக்களுக்காவே பார்க்கலாம். படம் quaint ஆகவும் இருப்பது ஒரு போனஸ். வை. மாலா இன்னொரு போனஸ்! 10க்கு 6.5 மார்க். C+ grade.

பாலச்சந்தருக்கு அப்போதே receding hairline. எனக்கு அதில் ஒரு அல்ப சந்தோஷம்!

அடுத்த பக்கம் »