எம்ஜிஆர் படங்கள் சில பர்ஃபெக்டாக வந்து விடுகின்றன. பொதுவாக அவர் படங்களில் காணப்படும் சின்னப் பிள்ளைத்தனமான கதை, செயற்கையான திரைக்கதை எல்லாவற்றையும் மீறி அவரது இமேஜுக்கு மிக பொருத்தமாக எல்லாம் அமைந்துவிடுகின்றன. அவருக்கு இப்படி ஒரு பத்து படம் தேறினால் ஜாஸ்தி. அந்த டாப் டென்னில் நாடோடி மன்னன் டாப்பில் இருக்கிறது.

எம்ஜிஆரின் பொதுவான பலங்கள் என்று பார்த்தால் பாட்டுகள்; அருமையான தயாரிப்பு; சண்டைக் காட்சிகள், குறிப்பாக கத்தி சண்டை காட்சிகள், சிலம்ப சண்டை காட்சிகள்; அழகான ஹீரோயின்கள். சில சமயம் நல்ல பொழுதுபோக்கு கதை, நல்ல நகைச்சுவை அமைந்துவிடும். இந்த படத்தில் மிக பிரமாதமான பாட்டுகள்; காசை தண்ணீர் போல செலவழித்து எடுக்கப்பட்ட படம்; அவருக்கு இணையாக திரையில் சண்டை போடக்கூடிய நம்பியார், வீரப்பா என்று இரண்டு வில்லன்கள்; பானுமதி, சரோஜா தேவி என்று இரண்டு ஹீரோயின்கள்; நன்றாக எழுதப்பட்ட திரைக்கதை, வசனம். நகைச்சுவைதான் சரியில்லை. சந்திரபாபுவை விட எம்ஜிஆர் பானுமதி ஜெயிலில் சந்திக்கும் காட்சியே கொஞ்சம் புன்முறுவலை வரவழைக்கும்.

1958-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்த படம். அவரே இயக்கம். எம்ஜிஆர், பானுமதி, சரோஜா தேவி, சந்திரபாபு, வீரப்பா, நம்பியார், சக்ரபாணி, ஜி. சகுந்தலா (மந்திரி குமாரியில் எம்ஜிஆருக்கு ஜோடி; இதில் சந்திரபாபுவுக்கு ஜோடி!) என்று ஒரு நட்சத்திரக் கூட்டம். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை. எல்லா பாட்டும் பட்டுக்கோட்டையா என்று தெரியவில்லை, ஆனால் பட்டுக்கோட்டை நிறைய பாட்டுகளை எழுதி இருக்கிறார்.

கதை தெரியாதவர்கள் தமிழ் கூறும் நல்லுலகத்தில் குறைவு. Prisoner of Zenda கதைதான் inspiration . நாடோடி எம்ஜிஆர் ஜெயிலில் தூங்காதே தம்பி என்று பாட்டு பாடுகிறார். பானுமதியின் குரல் மட்டுமே கேட்கும். பானுமதி தான் கிழவி என்று சொல்லி அவரை ஏமாற்றுகிறார். பிறகு இருவரும் ஒன்றாக செல்ல சம்மதமா, உமக்கு சம்மதமா என்று பானுமதி பாட்டிலேயே கேட்டு அடுத்த நாட்டுக்கு செல்கிறார்கள். அங்கே வாரிசு பிரச்சினை. மன்னன் எம்ஜிஆர்தான் வாரிசு என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் ராஜகுரு வீரப்பா, சதிகார சக்ரபாணி, பிரபு பிங்கலன் (நம்பியார்) யாருக்கும் இது பிடிக்கவில்லை. சதி நடக்கிறது. மன்னன் எம்ஜிஆரும் நாடோடியும் சந்திக்கிறார்கள். மன்னன் எம்ஜிஆர் மயக்கம் அடைகிறார். நேரம் தவறிவிடக்கூடாது என்பதற்காக நாடோடி எம்ஜிஆர் மன்னனாக பதவி ஏற்கிறார். காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்று பாடும் பானுமதி மனம் குளிர புதிய சட்டங்களை கொண்டு வருகிறார். மன்னன் எம்ஜிஆரை வீரப்பா தன் தீவுக்கு கடத்தி சென்று விடுகிறார். நடுவில் பானுமதி இறந்துவிட, எம்ஜிஆர் வழக்கம் போல முகத்தை மூடிக்கொண்டு அழ, ஹீரோயின் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக வீரப்பாவின் தீவுக்குப் போய், மானத் தேடி மச்சான் வரப் போறான் என்று பாடும் சரோஜா தேவியை பார்த்து, காதலித்து, சண்டை போட்டு, மன்னனை மீட்டு, சுபம்!

வசனங்கள் அருமை. வீரப்பா கேட்பார் – சரிதான்! நாட்டில் பணக்காரர்களே இருக்ககூடாது போல! எம்ஜிஆரின் பதில் – இல்லை, ஏழைகளே இருக்கக்கூடாது! வீரப்பா அவர் ட்ரேட்மார்க் சிரிப்போடு தான் மகள் போல் வளர்த்த சரோஜா தேவியிடம் சொல்வார் – ரத்னா, அப்பா என்று அழைக்காதே, அத்தான் என்று அழை!

படம் எம்ஜிஆருடையது. படத்தில் அவர் பூராவும் வியாபித்திருக்கிறார். மிச்ச எல்லாருமே டம்மிதான் – பானுமதி மட்டும் கொஞ்சம் ஈடு கொடுக்கிறார். வீரப்பாவுக்கு அவ்வப்போது அவரது ட்ரேட்மார்க் சிரிப்பு, சண்டை போடுங்கள், போதும் என்று சொல்லி இருக்கிறார்கள். அவருக்கு அது கை வந்த கலை. நம்பியாருக்கு ஸ்கோப் இல்லை. ஆனால் கடைசியில் அவர் எம்ஜிஆருடம் கடற்கரையில் மோதும் சண்டை பிரமாதம். சந்திரபாபு வேஸ்ட். இரண்டு பாட்டு பாடிவிட்டு போகிறார். விகடன் அவர் முட்டை தின்று கோழியை துப்பும் காட்சியை சிலாகிக்கிறது. இதெல்லாம் ஒரு காமெடியா? சரோஜா தேவிக்கு சும்மா கொஞ்சம் வெட்கப்பட்டு, சிரித்து, பாம்பைக் கண்டு பயந்து எம்ஜிஆர் மேல் ஒட்டிக்கொண்டு, ரவிக்கையை கழற்றி முதுகை காட்டி (அப்போதுதான் அவர் காணாமல் போன இளவரசி என்று மச்சத்தை பார்த்து எம்ஜிஆர் கண்டுபிடிக்க முடியும்.) கடைசியில் எம்ஜிஆர் அவரை மீட்க வரும்போது வீர மாமுகம் தெரியுதே அது வெற்றி புன்னகை புரியுதே என்று பாடினால் போதும். சக்ரபாணி எந்த படத்திலும் நன்றாக நடித்து நான் பார்த்ததில்லை. சொந்தப் படத்திலும் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. தேறுவது பானுமதி ஒருவர்தான். எம்ஜிஆரை தான் கிழவி என்று சொல்லி கலாய்ப்பதாகட்டும், காடு விளைஞ்சென்ன மச்சான் என்று கேட்பதாகட்டும், நன்றாக ஈடு கொடுத்து நடிக்கிறார். அவர் சரோஜா தேவி போல சம்பிரதாயமான தமிழ் ஹீரோயின் இல்லை, பாம்பு வந்தால் எம்ஜிஆர்தான் பயந்து அவர் மேல் ஒட்டிக்கொள்ள வேண்டும். பார்வையிலேயே தைரியத்தை காட்டுகிறார். ஸ்டீரியோடைப் நாயகியாக அவர் இல்லாமல் இருப்பது பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.

எம்ஜிஆருக்கு அடுத்தபடி படத்தை வியாபிப்பவர் சுப்பையா நாயுடு. என்ன மணி மணியான பாட்டுகள்!

காடு விளைஞ்சென்ன மச்சான்தான் படத்தில் டாப். என்ன அருமையான வரிகள்! சும்மா கிடந்த நிலத்தை கொத்தி சோம்பலில்லாம பாடுபட்டு என்று ஆரம்பிக்கும்போதே களை கட்டிவிடுகிறது. நாட்டுப்புற மெட்டின் இனிமையே தனிதான். பட்டுக்கோட்டை கலக்குகிறார்!

மானைத் தேடி மச்சான் வரப் போறான் கலக்கலான இன்னொரு பாட்டு. Feet tapping number!

தூங்காதே தம்பி தூங்காதே புகழ் பெற்ற பாட்டு. நல்ல வரிகள். பட்டுக்கோட்டை புகுந்து விளையாடுகிறார். கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் – அருமை!

அவ்வளவாக தெரியாத இன்னொரு பாட்டு சம்மதமா உமக்கு சம்மதமா. பானுமதி மிக அருமையாக பாடி இருப்பார்.

சாதாரணமாக சீர்காழியின் குரல் எம்ஜிஆருக்கு பொருந்தவே பொருந்தாது. ஆனால் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா பாட்டில் மிக நன்றாக பொருந்தி இருக்கும். அது என்ன மாயமோ தெரியவில்லை.

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே ஹை பிச்சில் (லீலாவா?) பாடும்போது அம்மாடி, பாத்தும்மா என்றுஒரு பயம் வரும்!

சந்திரபாபுவுக்கு தடுக்காதே என்னை தடுக்காதே என்று ஒரு பாட்டு.

படத்தின் மூன்றாவது ஹீரோ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான். மனிதர் பிரமாத ஃபார்மில் இருந்திருக்கிறார்.

பாட்டுகள் இணையத்தில் எங்கே கிடைக்கும் என்று தேட நேரமில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்!

எம்ஜிஆர் கணக்கு பார்க்காமல் பணத்தை செலவழித்திருக்கிறார். மாளிகைகள், தீவு, கழுகு குகை, இடிந்து விழும் பாலம், குகையில் தண்ணீர் நிரம்பும் காட்சி என்று மிக அருமையாக செட் போட்டிருக்கிறார். செலவழிந்த பணத்தைப் பற்றி “ஓடினால் மன்னன், இல்லாவிட்டால் நாடோடி” என்று சொன்னாராம். படம் ஓடிவிட்டது. அவரும் தமிழ் நாட்டுக்கே மன்னர் ஆகிவிட்டார்.

தமிழின் மிக சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் ஒன்று. கட்டாயமாக paarungaL என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு 7.5 மார்க். A- grade.

தொடர்புடைய பதிவுகள்:
விகடன் விமர்சனம்

நாடோடி மன்னன் வந்தபோது (7-9-58) விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்! அடுத்த இன்ஸ்டால்மென்டில் என் விமர்சனம்.

முனுசாமி – மாணிக்கம்

மாணி: அண்ணே, உடனே எனக்கு ஒரு பெண் பார்க்கணும் அண்ணே!

முனு: எதுக்கடா?

மாணி: கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாச் செலவையும் சர்க்காரே ஏத்துக்கிறாங்களாம்.

முனு: அப்படின்னா எனக்கும் ஒண்ணு பாருடா தம்பி! ஆமா, இந்தச் சட்டம் நம்ம ஊர்லே எப்ப வந்தது?

மாணி: நாடோடி மன்னன் ராஜாங்கத்திலே, நல்ல நல்ல சட்டமெல்லாம் செய்யறாங்க அண்ணே!

முனு: அடடே! படம் பார்த்துட்டியா? எப்படி இருக்கு?

மாணி: பாதி படம் கறுப்பிலே எடுத்திருக்காங்க; மீதி கலர்லே எடுத்திருக்காங்க.

முனு: ரொம்பப் பெரிய படமாமே?

மாணி: நீளத்திலே மட்டுமில்லே, தரத்திலேயும் அப்படித்தான். நாலு வருசமா எடுத்திருக்காங்க. இரண்டு எம். ஜி. ஆர். வராங்க! அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா? கை தட்டித் தட்டி வலி கண்டு போச்சு அண்ணே!

முனு: எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாரு?

மாணி: எம்.ஜி.ஆர். – பானுமதி; எம்.ஜி.ஆர். – எம்.என். ராஜம்; எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி. அப்புறம், எம்.ஜி.ஆர். – எம்.ஜி.ஆர்.! என்னா த்ரில்லு! என்னா ஸ்டன்ட்டு! ஒரு சீன்லே எம்.ஜி.ஆர். ஒரு பாலத்தையே ஒரு கையாலே இழுத்துப் பிடிச்சு விழாம நிறுத்தறாருன்னா பார்த்துக்க!

முனு: கத்திச் சண்டை உண்டா?

மாணி: இது என்ன கேள்வி அண்ணே? கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே! கடற்கரையிலே எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போடறாங்க, அந்தக் கடலே கலங்குது. அதுக்கே துட்டு கொடுத்துடலாம். அப்புறம், வீரப்பாவோடயும் ஒரு சண்டை போடறாரு!

முனு: டிரிக் ஷாட்டெல்லாம் எப்படி?

மாணி: காமரா வேலை ரொம்ப நல்லாருக்கு. கன்னித் தீவு, கழுகு குகை, நீர்வீழ்ச்சி… அந்த வெள்ளம் ஒண்ணு போதும் அண்ணே. பாக்கிறப்போ கண்ணுக்குள்ளே ஜில் ஜில்லுங்குது! கனவு சீன், காதல் காட்சி, குரூப் டான்ஸ் எல்லாத்திலேயும் கலர் அள்ளிக்கிட்டுப் போகுது.

முனு: காமிக் இருக்குதா?

மாணி: எம்ஜியாரும் பானுமதியும் முதல்லே மீட் பண்றதே காமிக்தான். சந்திரபாபு ஒரு கூடை முட்டைகளை உடைச்சுத் தின்னுகிட்டேயிருக்காரு. அப்புறம், அவர் வாயிலேருந்து ஒரு கோழிக்குஞ்சு வருது. நம்ம வாயிலேருந்து சிரிப்பு வருது. டான்ஸ் பண்றாரு பாரு, அற்புதமா இருக்குது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாட்டெல்லாம் நல்லா இருக்குது. ஆனா என்ன… கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, காசுக்குத்தான் நஷ்டம்!

முனு: என்ன தம்பி சொல்றே?

மாணி: ஆமாண்ணே! ஒரு வாட்டி பார்த்துட்டா மறுபடி மறுபடி பார்க்கச் சொல்லுமே!

கொல்லப்புடி மாருதி ராவ் தனக்கு பிடித்த தெலுங்கு படங்களை பற்றி இங்கே சொல்கிறார். கொல்லப்புடி தெலுங்கு நடிகர், எழுத்தாளர். சாஹித்ய அகாடெமி விருது எல்லாம் வாங்கி இருக்கிறார். நம்மூர் டெல்லி கணேஷ் மாதிரி stature உள்ள தெலுங்கு நடிகர்.

அவரது லிஸ்டும் என் குறிப்புகளும்:

  • யோகி வேமனா: நான் பார்த்ததில்லை. நாகையா, எம்.வி. ராஜம்மா நடித்து, கே.வி. ரெட்டி இயக்கியது. கே.வி. ரெட்டி பெரிய இயக்குனர் – புகழ் பெற்ற மாயா பஜார், பாதாள பைரவி ஆகியவை இவர் இயக்கியவைதான். விஜயா (வாகினி) ஸ்டுடியோஸ் தயாரிப்பு. வேமனா புகழ் பெற்ற தெலுங்கு கவிஞர் – நம் அவ்வையார் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
  • லைலா மஜ்னு: – நான் பார்த்ததில்லை. நாகேஸ்வர ராவ், பானுமதி நடித்து, சி.ஆர். சுப்பராமன் இசையில், பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது.
  • சவுகாரு: நான் பார்த்ததில்லை. என்.டி. ராமராவ், ஸௌகார் ஜானகி நடித்து எல்.வி. பிரசாத் இயக்கியது. விஜயா ஸ்டுடியோஸ் தயாரிப்பு. ஸௌகார் ஜானகிக்கு உள்ள அடைமொழி இந்த படத்திலிருந்து வந்ததுதான். அவரது முதல் படம். எல்.வி. பிரசாத் முதல் தமிழ் படமான காளிதாசிலும், முதல் தெலுங்கு படமான நடித்திருக்கிறார். கமலஹாசனின் ராஜ பார்வை படத்தில் மாதவிக்கு தாத்தாவாக நடிப்பார். மனோகரா, இருவர் உள்ளம், மிஸ்ஸியம்மா ஆகிய படங்களை இயக்கியவர் இவரே.
  • தீக்ஷா – ஜி. வரலக்ஷ்மி, யாரோ ராம்கோபால் நடித்து, ஆத்ரேயா பாடல்களுடன், கே.எஸ். பிரகாஷ் ராவ் இயக்கியதாம். கேள்விப்பட்டது கூட இல்லை.
  • தேவதாஸ்: ஏ.என்.ஆர்., சாவித்ரி, சி.ஆர். சுப்பராமன் இசை, வேதாந்தம் ராகவையா இயக்கம். இதுதான் எல்லாவற்றிலும் சிறந்த தேவதாஸ் என்று கருதப்படுகிறது – குறைந்த பட்சம் தெலுங்கர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். ஓ ஓ ஓ தேவதாஸ் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
  • மல்லேஸ்வரி: பிரமாதமான படம். கிருஷ்ண தேவராயர் ஒரு இரவு பானுமதி தன காதலனிடம் தான் ராணி போல வாழ வேண்டும் என்று சொல்வதை கேட்கிறார். அவளை தனது அந்தப்புரத்துக்கு கூட்டி வருகிறார். ஏ.என்.ஆர்., என்.டி.ஆர். நடித்து, எஸ். ராஜேஸ்வர ராவ் இசையில் பி.என். ரெட்டி இயக்கியது.
  • விப்ரநாராயணா: தொண்டரடிபொடி ஆழ்வாரின் கதை. ஏ.என்.ஆர்., பானுமதி நடித்து, பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது. இசை எஸ். ராஜேஸ்வர ராவ். பார்த்ததில்லை.
  • மாயாபஜார்: அருமையான படம். சாவித்ரி, ரங்காராவ் இருவருக்காக மட்டுமே பார்க்கலாம். இசையில் கண்டசாலா, எஸ். ராஜேஸ்வர ராவ் கலக்கி இருப்பார்கள். என்.டி.ஆர்., ஏ.என்.ஆர். வேறு. என்.டி.ஆர். இந்த மாதிரி படங்களால்தான் தெலுங்கர்களின் கண்ணில் தேவுடுவாகவே மாறிவிட்டார். இயக்கம் கே.வி. ரெட்டி. தயாரிப்பு விஜயா ஸ்டுடியோஸ்.
  • மூக மனசுலு: ஏ.என்.ஆர., சாவித்ரி. பார்த்ததில்லை.
  • மனுஷுலு மாறாலி: சாரதா நடித்தது. பார்த்ததில்லை.
  • பிரதிகடனா:விஜயசாந்தி நடித்து கிருஷ்ணா இயக்கியது. பார்த்ததில்லை.
  • சங்கராபரணம்: எனக்கு கர்நாடக சங்கீதத்தை கேட்டால் ஓட வேண்டாம் என்று தைரியம் கொடுத்த படம். முதன் முதலாக ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்த படம். (க்ரோம்பேட் வெற்றி தியேட்டரில் 2.10 பைசா டிக்கெட்டை இரண்டரை ரூபாய்க்கு வாங்கினோம்) பாட்டுகள் மிக அருமையாக இருந்தன. கவர்ச்சி நடனம் இல்லாவிட்டால் படம் வேஸ்ட் என்று நினைத்த ஸ்கூல் நாட்களிலேயே இந்த படம் எங்கள் செட்டுக்கு பிடித்திருந்தது. கே.வி. மகாதேவன், எஸ்பிபி, மஞ்சு பார்கவி எல்லாரும் கலக்கிவிட்டார்கள். சோமயாஜுலு, கே. விஸ்வநாத் இருவருக்கு இதுதான் மாஸ்டர்பீஸ்.
  • சுவாதி முத்யம்:தமிழர்களுக்கு தெரிந்த படம்தான். கமல் “நடிப்பதற்காக” எடுக்கப்பட்ட படம். பார்க்கலாம், ஆனால் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ராதிகா ஹீரோயின், கே. விஸ்வநாத் இயக்கம். வடபத்ர சாயிக்கு பாட்டில் இழையோடும் சோகம் மிக நன்றாக இருக்கும். இசை யார், இளையராஜாவா?
  • ஓசே ராமுலம்மா: தாசரி நாராயண ராவ் இயக்கி நடித்தது. விஜயசாந்தியும் உண்டு. பார்த்ததில்லை.
  • அயித்தே: நீல்காந்தம் என்பவர் இயக்கிய நியூ வேவ் சினிமாவாம். கேள்விப்பட்டதில்லை.
  • ஷிவா: ராம் கோபால் வர்மாவின் முதல் படம். நாகார்ஜுன், அமலா நடித்தது, இளையராஜா இசை. இது வெளியானபோது நான் செகந்தராபாதில் வாழ்ந்தேன். பெரிய தாக்கத்தை உருவாக்கியது. ஒரு cult film என்றே சொல்லலாம். இன்று யோசித்துப் பார்த்தால் அப்போது புதுமையாக இருந்த திரைக்கதைதான் காரணம் என்று தோன்றுகிறது. மிகவும் taut ஆன, நம்பகத்தன்மை நிறைந்த காலேஜ் காட்சிகள். ரவுடி ரகுவரன், அரசியல்வாதி கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மிக லாஜிகலாக யோசித்தார்கள்.
  • இவற்றுள் யோகி வேமனா, தேவதாஸ், மல்லேஸ்வரி, விப்ரநாராயணா, மாயாபஜார், லைலா மஜ்னு, சவுகாரு, சங்கராபரணம் போன்றவற்றை க்ளாசிக்குகள் என்று சொல்லலாம். நான் பார்த்தவற்றில் மல்லேஸ்வரி, மாயாபஜார், சங்கராபரணம், ஷிவா ஆகியவற்றை சிபாரிசு செய்வேன். நான் சிபாரிசு செய்யும் மற்ற படங்கள்: குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா, கீதாஞ்சலி. மாயாபஜார், குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா ஆகியவற்றை 20 வருஷங்களுக்கு முன் செகந்தராபாதில் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம் – தியேட்டர் பாதி நிறைந்திருக்கும், பார்ப்பவர்கள் மிகவும் என்ஜாய் செய்து பார்ப்பார்கள். (அதே போல் பழைய ஹிந்தி படங்களை ஹைதராபாத் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம். பார்ப்பவர்கள் உண்மையில் என்ஜாய் செய்வார்கள். சி.ஐ.டி. படத்தில் வஹீதா ரெஹ்மான் கஹி பே நிகாஹென் கஹி பே நிஷானா என்று பாடிக் கொண்டு வரும்போது தியேட்டர் கூட சேர்ந்து ஆடியது.)

    bhanumathi

    ஒரு ஓசி போஸ்ட் போட்டுக் கொள்கிறேன். தன் திரை உலக வாழ்வை பற்றி பானுமதி விகடனில் சொன்னது. நன்றி, விகடன்!

    பானுமதி நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அன்னை. அதைப் பற்றி எழுதியதை இங்கே காணலாம்.

    நான் நடிக்க வந்து 46 வருஷம் ஆகுது. எங்கப்பாவோட இன்ட்ரஸ்ட், எனக்கிருந்த மியூசிக் இன்ட்ரஸ்டாலதான் நான் சினிமாவுக்கே வந்தேன்.

    நான் 39, 40-ல்தான் இந்த சினிமா ஃபீல்டுக்கு வந்தேன். முதல் படம் வரவிக்ரம் தெலுங்குல. அப்போ எங்கப்பாவோட நண்பர் சி.புல்லய்யா, எங்காப்பாகிட்ட வந்து என்னை நடிக்கக் கூப்பிட்டார். அந்தப் படத்துல நிறையப் பாட்டு இருக்குன்னு சொன்னார். எங்கப்பா சங்கீதப் பைத்தியம். கச்சேரி பண்ணா ஒரு ஊர்லதான் கேக்க முடியும். ஆனா, சினிமாவில் பாடினா, எல்லோரும் கேக்க முடியுமேனு சினிமாவில் நடிக்கறதுக்கு என்னை கல்கத்தாவுக்கு அழைச்சுக்கிட்டுப் போனாரு.

    அப்போ நான் அழுதேன். ஏன்னா, அந்தக் காலத்தில சினிமாவில் நடிக்கறவங்களை சொஸைட்டில கொஞ்சம் கேவலமா பார்ப்பாங்க. இப்போ மாதிரி இல்ல. இப்போ எல்லோருமே சினிமாவில நடிக்கலாம்னு இருக்கு. அப்போ சினிமாவில் நடிச்சா கல்யாணம் ஆகறது கூட கஷ்டம்னு இருந்தது. எங்கப்பா சொன்னாரு – “எந்த ஃபீல்டுதான் ஒழுங்கா இருக்கு? எந்த ஃபீல்டா இருந்தாலும் நாம நடந்துக்கற முறைலதான் இருக்கு. உன்னை நான் என் கண் இமை மாதிரி காப்பாத்துவேன்”னு சேலன்ஞ் பண்ணினாரு. எங்கப்பாவுக்கு ரொம்ப வில் பவர்! அதுதான் பின்னால எனக்கு வந்தது. அவர் போட்ட அந்த உறுதியான அஸ்திவாரத்தினாலதான் என்னால் எல்.ஐ.சி. பில்டிங் அளவுக்கு வாழ்க்கையிலே உயர முடிஞ்சுது.

    அந்தக் காலத்துல, லவ் ஸீன்னா ஹீரோவும் ஹீரோயினும் கையைப் புடிச்சுக்கிட்டு ஹாய்யா நடப்பாங்க. தோள்ல சாஞ்சுக்குவாங்க. இதுக்கு மேல லவ் ஸீன்ஸ் எப்படி எடுக்கணும்னு அப்ப தெரியாது. படத்துக்காக அக்ரிமென்ட் போடும் போதே “ஹீரோ என் கையைப் பிடிக்கக்கூடாது. தோள்ல சாயக்கூடாது”ன்னெல்லாம் எங்கப்பா கண்டிஷன் போட்டாரு. இப்போ எடுக்கற லவ் ஸீன் எல்லாம் பாத்தா, கண்ணு சுத்தறது. (ஆர்வி: இது 85, 86-ஆம் வருஷத்தில்)

    ஆடம்பரங்களோ, சினிமா ஸ்டார்ங்கிற ஜிகுபிகுவோ எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. எங்கப்பா எனக்குக் கொடுத்த ட்ரெயினிங் அந்த மாதிரி! என்னை நான் ஒரு நடுத்தர குடும்பத்துப் பெண்ணாத்தான் எப்போதும் நினைச்சுக்கறேன். அதானாலதான் இன்னும் எங்க வீடு மத்த வீடுகள் மாதிரி சாதாரணமாத்தான் இருக்கும். ஒரு சினிமா ஸ்டார் வீடுங்கற மாதிரி ஒரு ஆடம்பர அமைப்பைப் பார்க்க முடியாது. இதை நான் பெருமையாவே சொல்லிக்கறேன்.

    41-ல மெட்ராஸூக்கு வந் தோம். பக்திமாலானு ஒரு படம். வட நாட்டுக்காரர் ஒருத்தர் எடுத்தாரு. அதுல மீராபாய் மாதிரி கேரக்டர். அந்தப் படத்துக்காகத்தான் நான் மொதல்ல டான்ஸ் கத்துக்க வேண்டி வந்தது. அதுவரைக்கும் எனக்கு டான்ஸே தெரியாது. அந்தப் படத்துல நான் டான்ஸ் நல்லா பண்ணலை. அதானலயே அந்தப் படத்தைப் பார்க்க எனக்கே பிடிக்காது.

    அதுக்கப்புறம் கிருஷ்ண ப்ரேமம். அதை ராமகிருஷ்ண ப்ரேமம்னுகூடச் சொல்லலாம். ஏன்னா, அதிலதான் என் கணவரா வரப்போறவர் அசோசியேட் டைரக்டரா இருந்தாரு. அப்போ என் கல்யாணப் பேச்சு வந்தது. நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு என் சிஸ்டர் மூலமா சொன்னேன். அவர் பேசறது எந்த மொழி, என்ன சாதின்னு கூட எனக்குச் சரியாத் தெரியாது.

    எங்கப்பா கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாரு. 1943-ல டவுன்ல, வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்துல எங்க கல்யாணம் நடந்தது. அதுக்கப்புறம் சினிமாவில் நடிக்கக் கூடாதுன்னு ரெண்டு பேருமா சேர்ந்து முடிவெடுத்தோம்.

    கல்யாணத்துக்குப் பிறகு ஆறு மாசம் வீட்டுலேயே சமைச்சுக்கிட்டிருந்தேன். பி.என்.ரெட்டி வந்து சொர்க்க சீமாவில் நடிக்கக் கூப்பிட்டாரு. என் கணவர் அனுப்பமாட்டேன்னு சொன்ன பிறகும் அவரை கம்ப்பெல் பண்ணி, சம்மதிக்க வெச்சு, என்னை நடிக்க வெச்சாரு.

    படவுலகிலே எனக்குக் கோபக்காரி, ரொம்ப ஸ்ட்ரிக்டுன்னு பட்டப் பேரு உண்டு. எல்லா ஹீரோவும் என்கிட்ட நெருங்கப் பயப்படுவாங்க. ஏன், எம்.ஜி.ஆர்., சிவாஜி கூட என்கிட்ட ஒரு மரியாதையோட தூரத்திலதான் இருப்பாங்க. அப்பத்தான் மொதல் தடவையா எம்.ஜி.ஆர். என்னை அம்மானு கூப்பிட ஆரம்பிச்சாரு. அதிலேர்ந்து நான் என்னை விடப் பெரியவங்களுக்கும் அம்மா ஆயிட்டேன். 30 வயசிலியே! சரி, இதுவும் ரொம்ப சௌகரியமா போச்சுனு நெனைச்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் சிவாஜியும் என்னை அம்மானு கூப்பிட ஆரம்பிச்சாரு.

    நான் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துல நடிக்கும்போது, சிவாஜி ஷூட்டிங்குக்கு வந்திருந்தாரு. அப்போ, இந்தம்மாவோட ஒரு படம் நான் ஆக்ட் பண்ணா நல்லாயிருக்குமேனு காமிராமேன் டபிள்யூ.ஆர். சுப்பாராவ்கிட்ட சொன்னாரு. உடனே கள்வனின் காதலி புக் ஆச்சு. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரங்காராவ்னு என் கூட நடிச்சவங்கள்லாம் நல்ல ஆர்டிஸ்ட்டா இருந்தாங்க.

    58-லே எனக்குக் கலைமாமணி பட்டம் கொடுக்கணும்னு வந்தாங்க. அப்ப நான் அதனோட மதிப்பு தெரியாம, அதெல்லாம் வயசானவங்களுக்குதான் கொடுப்பாங்கனு சொல்லி, அந்த விழாவுக்குப் போகலை. ஆனா, அப்ப அப்படி செஞ்சதுக்கு இப்போ கூட ஃபீல் பண்றேன். அந்தம்மாவுக்கு இன்னும் கலைமாமணி பட்டம் கொடுக்கலையானு எம்.ஜி.ஆர். இப்போ கேட்டாராம். உடனே, ஒரு டைரக்டரா எனக்குக் கலைமாமணி பட்டம் கொடுத்துட்டாங்க. சரி, சரி என்னை மன்னிச்சுக்குங்கோ. இதுக்கு மேலே நான் இன்னிக்குப் பேசக் கூடாது. உபவாசம்!

    அலி பாபாவும் 40 திருடர்களும்

    அலி பாபாவும் 40 திருடர்களும்

    மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் சாகசக் கதைப் பிரியர் போலிருக்கிறது. அவர் ஆயிரத்தோர் இரவுகளிலிருந்து இந்த கதையை பிடித்திருக்கிறார். அருமையான த்ரில்லிங் கதை. கதை தெரியாதவர்கள் பார்த்தால் உண்மையிலேயே திருப்தி அடைவார்கள். மாஸ் ஹீரோவாகிக் கொண்டிருக்கும் எம்ஜிஆர், வீரப்பா, பானுமதி. ஒரு பிரமாதமான குகை. ஒன்பது முத்தான பாட்டுகள். பைசா வசூல்.
    1956-இல் வந்த படம். எம்ஜிஆர், பானுமதி, பி.எஸ். வீரப்பா, எம்.ஜி.சக்ரபாணி, சாரங்கபாணி, எம்.என். ராஜம், தங்கவேலு, ஓ.ஏ.கே. தேவர் நடித்தது. பின்னாளில் புதிய வார்ப்புகளில் தொடங்கி ஒரு ரவுண்ட் வந்த கே.கே. சவுந்தரும் ஒரு சிறு ரோலில் வருவார். இசை எஸ். தக்ஷிணாமூர்த்தி. பாடல்கள் மருதகாசி. இயக்கம் டி.ஆர். சுந்தரம்.

    தெரிந்த கதைதான். பணக்கார அண்ணன் காசிம் (சக்ரபாணி) மனைவி பேச்சை கேட்டு தம்பி அலி பாபா (எம்ஜிஆர்), அம்மா, தங்கை எம்.என். ராஜத்தை விரட்டி விடுவார். அலி பாபா விறகு வெட்டி பிழைப்பார். அழகான பொண்ணுதான் என்று பாட்டு பாடி பிழைப்பு நடத்தும் மார்ஜியானாவையும் (பானுமதி) அவருக்கு டோலக் வாசிக்கும் சாரங்கபானியையும் முரடர்களிடமிருந்து காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருவார். மீண்டும் ஒரு நாள் விறகு வெட்ட காட்டுக்கு போகும்போது 40 திருடர்களையும், அவர்களது ரகசிய குகையையும் பார்ப்பார். அவர்கள் போனதும் குகைக்குள் நுழைந்து கொஞ்சம் செல்வத்தை அள்ளிக் கொண்டு வருவார். தங்கக் காசுகளை என்ன முடியாது, அளக்கவோ வீட்டில் ஒன்றுமில்லை. அண்ணன் வீட்டிலிருந்து ஒரு மரக்காலை இரவலாக வாங்கி வருவார். ஏழைகளான இவர்கள் எதை அளக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள அண்ணி மரக்காலின் அடியில் கொஞ்சம் புளியை ஒட்டி அனுப்புவார். புளியோடு ஒரு தங்கக் காசு போகும். அதைப் பார்த்து தங்கக் காசுகளை மரக்காலில் அளக்கும் அளவுக்கு இவர்களுக்கு எப்படி பணம் வந்தது என்று தெரிந்து கொள்ள அலி பாபாவுக்கு காசிம் ஒரு விருந்து கொடுப்பார். அலி பாபாவை மிகவும் வற்புறுத்தி ரகசியத்தை தெரிந்து கொள்ளும் காசிம் குகைக்கு போவார். ஆனால் வெளியே வரும் கட்டளை மறந்து விடும். திருடர்கள் அவரைக் கொன்று அவர் பிணத்தை துண்டுகளாக வெட்டி குகையில் ஒரு எச்சரிக்கையாக மாட்டி வைப்பார்கள். காசிம் திரும்பி வராததால் அலி பாபா குகைக்கு செல்வார். பிணத்தை கொண்டு வருவார். யாருக்கும் விஷயம் தெரியாமல் இருக்க தையல்கார தங்கவேலுவை அழைத்து பிணத்தை தைக்க சொல்வார் மார்ஜியானா. பிணம் காணமல் போனதால் ரகசியம் தெரிந்த மனிதரை திருடர்கள் தேடுவார்கள். அவர்கள் தந்திரத்தை மார்ஜியானா முறியடிப்பார். கடைசியில் வீரப்பா தங்கவேலு மூலமாக வீட்டை தெரிந்து கொள்வார். அங்கே மாறு வேஷத்தில் வருவார். ஆனால் மார்ஜியானா அவரை அடையாளம் கண்டு கொள்வார். எண்ணை பீப்பாய்களில் இருக்கும் திருடர்களை கொன்று ஆற்றில் வீசி விடுவார். வீரப்பா மார்ஜியானவை கடத்தி செல்ல, அலி பாபா அவரை பின் தொடர்ந்து குகைக்கு செல்ல, அங்கே ஒரு த்ரில்லிங் சண்டைக்கு பின் அலி பாபா வீரப்பாவை கொன்று, மார்ஜியானாவை மணந்து, சுபம்!

    ஒரிஜினல் கதையிலிருந்து சில மாறுதல்கள் இருக்கின்றன. மார்ஜியானா ஒரிஜினலாக அலி பாபாவின் அடிமைப் பெண். அவளது திறமையை மெச்சி அலி பாபா அவரை தன் அண்ணன் மகனுக்கு மனம் செய்து வைப்பார்.

    இந்த படத்தில் நடிப்பு கிடிப்பு என்பதெலாம் பெரிய விஷயம் இல்லை. ஆனால் திரைக் கதை நன்றாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அந்த குகை அற்புதம்! அதை திறக்க ஒரு பெரிய செக்கு மாதிரி ஒன்று சுழல்வதும், உள்ளே கொதிக்கும் நீருக்கு மேல் உள்ள குறுகலான பாலமும், அற்புதமான செட். வீரப்பா மிக பொருத்தமான casting. பானுமதி, எம்ஜிஆர் கூடத்தான். அதற்காகவே பாருங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் காண்பியுங்கள்.

    பாட்டுகள் இந்த படத்தின் ஒரு பெரிய பலம். பாட்டுகள் கொஞ்சம் quaint ஆக இருக்கும். மருதகாசியின் வரிகள் மிக நன்றாக இருக்கும். என்ன அதிர்ஷ்டமோ எல்லாமே யூட்யூபில் இருக்கின்றன. நிறைய குத்துப் பாடல்கள்தான். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, எஸ்.சி. கிருஷ்ணன், ஜமுனா ராணி பாடிய சின்னஞ்சிறு பூவே எந்தன் சீனா கல்கண்டே பாட்டுதான். கீழே காணலாம்.

    அழகான பொண்ணுதான் பாட்டு மிக பிரபலமானது.

    மாசிலா உண்மைக் காதலே குத்துப் பாட்டு இல்லை. :-) படத்தில் மிக புகழ் பெற்ற பாட்டு இதுதான் என்று நினைக்கிறேன். ஏ.எம். ராஜா அபூர்வமாக எம்ஜிஆருக்கு குரல் கொடுத்திருக்கிறார்.

    சலாம் பாபு பாட்டுக்கு ஆடுவது வஹீதா ரெஹ்மான்! அந்த காலத்து ஐட்டம் நம்பர் போல. வஹீதா ரெஹ்மான் இன்னும் பிரபலம் ஆகாத காலம் என்று நினைக்கிறேன். சமீபத்தில் திருடா திருடி படத்தில் இந்த பாட்டையே வண்டார் குழலி வண்டார் குழலி என்று காப்பி அடித்திருந்தார்கள்.

    மற்ற பாட்டுகள் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. ஆனால் எனக்கு பிடிக்கும்.

    உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தங்கவேலு மேல் படமாக்கப்பட்டது. சமீபத்தில் ஜெயம்கொண்டான் படத்தில் இதை ரீமிக்ஸ் செய்திருந்தார்கள்.

    நம்ம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு ஒரு நல்ல குத்துப் பாட்டு.

    உன்னை விட மாட்டேன், என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டைக்குத்தான், அமீர் பூபதி ஆகியவை சுமாரான பாட்டுகள். இவற்றுக்கும் யூட்யூபில் வீடியோக்கள் இருக்கின்றன. இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

    நல்ல சாகசக் கதை, அருமையான செட்கள், பாட்டுகள், டான்ஸ்கள் ஆகியவற்றுக்காக பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். மொத்தத்தில் பத்துக்கு ஏழு மார்க். B grade.

    31 படங்கள் வந்திருக்கின்றன. நான் பெண்ணின் பெருமை 1955-இல் வந்தது என்று நினைத்தேன், ஆனால் தமிழ் விக்கிபீடியா 1956 என்று சொல்கிறது. நான் பார்க்க விரும்புபவை குல தெய்வம், சதாரம், தாய்க்கு பின் தாரம், பெண்ணின் பெருமை, ராஜா ராணி. பார்த்தவை அமர தீபம், தெனாலி ராமன், பாச வலை, மதுரை வீரன், ரங்கூன் ராதா. எனக்கு அலிபாபாவும் நாற்பது திருடர்களும் இந்த வருஷம்தான் வந்தது என்று ஞாபகம்.

    பெண்ணின் பெருமை, குல தெய்வம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, இருந்தாலும் ஏனோ பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை. பெண்ணின் பெருமையில் ஒரு பாட்டை இங்கே காணலாம். சதாரம் புகழ் பெற்ற நாடகம் என்று கேள்வி. நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே என்ற பாட்டு இந்த படத்தில்தான். தாய்க்கு பின் தாரம் எம்ஜிஆர் நடித்து வெற்றி பெற்ற முதல் சமூகப் படம். தேவர் ஃபில்ம்ஸ் தயாரிப்பு. ஆனால் அதற்கு பிறகும் எம்ஜிஆர் திருடாதே (1961) வரும் வரைக்கும் சமூகப் படங்கள் பக்கம் போகவில்லை, ஏனென்று தெரியவில்லை. ஆஹா நம்மாசை நிறைவேறுமா என்ற அருமையான பாட்டு இந்த படத்தில்தான். பாட்டை இங்கே கேட்கலாம். ராஜா ராணியில் சிவாஜி பல ஓரங்க நாடகங்களில் கலக்குவார் என்று கேள்வி. ஒரு காட்சி கீழே.

    அமர தீபம் நன்றாக ஓடியது. முக்கோணக் காதல் கதை. ஸ்ரீதர் அப்போதே தன் கை வேலையை ஆரம்பித்துவிட்டார். இப்போது ரசிக்காது. சிவாஜி அழகாகவே இருப்பார். பத்மினி, சாவித்ரி இருவரும் நாயகிகள். அருமையான பாட்டுகள். தேனுண்ணும் வண்டு, ஜாலிலோ ஜிம்கானா, நாடோடி கூட்டம் நாங்க தில்லாலங்கடி லேலே, இதெல்லாம் ஞாபகம் வருகிறது. தேனுண்ணும் வண்டு மிக அற்புதமான பாட்டு. இசை சலபதி ராவ்.

    தெனாலி ராமன் போர் அடித்தது. சிவாஜிதான் தெ. ராமன். என்.டி.ஆர். கிருஷ்ணதேவராயரோ?

    பாச வலை அனேகமாக எம்.கே. ராதா ஹீரோவாக நடித்த கடைசி படமாக இருக்கும். போர். அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை, லொள் லொள் லொள் போன்ற ஹிட் பாட்டுகள் உடையது.

    மதுரை வீரன் எம்ஜிஆரை மிகவும் மேலே ஏற்றியது. பானுமதி, பத்மினி இருவரும் நாயகிகள். இன்றும் எம்ஜிஆர் ரசிகர்களால் விரும்பப்படும் படங்களில் ஒன்று. ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா (தீன கருணாகரனே நடராஜா மெட்டேதான்), ஆடல் காணீரோ, நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே மறக்க முடியாத பாட்டுகள். மற்ற பாட்டுகள் நினைவு வரவில்லை. பாட்டுகளை இங்கே கேட்கலாம். ஏச்சுப் பிழைக்கும் பாட்டுக்கு எம்ஜிஆர் நன்றாக டான்ஸ் ஆடுவார். ஆடல் காணீரோ பாட்டு கீழே.

    ரங்கூன் ராதாதான் திராவிட இயக்கத் தாக்கம் உள்ள கடைசி படம் என்று நினைக்கிறேன். நாவலை கொஞ்சம் bowdlerize பண்ணி இருப்பார்கள். சிவாஜி நன்றாக நடித்திருப்பார். தலை வாரி பூச்சூடி உன்னை என்ற பாரதிதாசன் பாட்டு இந்த படத்திலா? சரியாக நினைவில்லை. இதை பற்றி ராண்டார்கை எழுதிய ஒரு கட்டுரை இங்கே.

    எல்லாவற்றிலும் எனக்கு பிடித்தது அலிபாபாதான். என் பெண்கள் கூட ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன். என்றாவது வீடியோ கொண்டுவந்து காட்ட வேண்டும். அதைப் பற்றி அடுத்த பதிவில்.

    ஜுரம் வந்து இந்த சீரிஸில் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. மீண்டும் தொடர்கிறேன்.

    1955-இல் 34 படங்கள் வந்திருக்கின்றன. நான் பார்த்தவை கணவனே கண் கண்ட தெய்வம், குலேபகாவலி, மாமன் மகள், மிஸ்ஸியம்மா இவைதான். பார்க்க விரும்புபவை கள்வனின் காதலி, டவுன் பஸ், டாக்டர் சாவித்ரி (வாதம் வம்பு செய்யக் கூடாது பாட்டுக்காக), மகேஸ்வரி, மங்கையர் திலகம், பெண்ணின் பெருமை, முதல் தேதி, கோமதியின் காதலன்.

    சிவாஜிக்கு நிறைய படங்கள் – உலகம் பல விதம், கள்வனின் காதலி, காவேரி, கோடீஸ்வரன், மங்கையர் திலகம், பெண்ணின் பெருமை, முதல் தேதி. எம்ஜிஆருக்கு குலேபகாவலி மட்டும்தான் போல. ஜெமினி பெரிய ஹீரோவாக ஆரம்பித்துவிட்டார். மாமன் மகள், பெண்ணின் பெருமை, கணவனே கண் கண்ட தெய்வம், குண சுந்தரி, மகேஸ்வரி, நீதிபதி ஆகிய படங்கள் அவருக்கு.

    கள்வனின் காதலி சுவாரசியமாக செல்லும் ஒரு நாவல். எப்படி படம் ஆக்கி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆவல். சிவாஜி, பானுமதி, சாரங்கபாணி நடித்தது. வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு என்ற அருமையான பாட்டு உண்டு. யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.

    டவுன் பஸ் பற்றி ஒன்றும் தெரியாது – ஆனால் நல்ல பாட்டுகள் நிறைய உண்டு. கே.வி. மஹாதேவன் இசை. சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா, பொன்னான வாழ்வே மண்ணாகிப் போனால் ஆகிய பாட்டுகளை இங்கே கேட்கலாம்.

    டாக்டர் சாவித்ரி பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அதில் என்.எஸ்.கே. பாடும் வாதம் வம்பு செய்யக் கூடாது பாட்டு எனக்கு பிடிக்கும். அதிலும் இரண்டு வரிகள்:
    அம்பது ரூபா சம்பளக்காரன் பொண்டாட்டி – தினம்
    ஒம்பது முறை காப்பி குடிப்பது அநீதி!

    சின்ன வயதில் விழுந்து விழுந்து சிரிப்போம். யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.

    மகேஸ்வரி தெலுங்கில் மல்லேஸ்வரி என்று வெளிவந்தது. தெலுங்கில் இது ஒரு க்ளாசிக் படம். எனக்கு தெரிந்த ஒரு தெலுங்கு மாமியால் தெலுங்கில் இந்த படம் பார்த்து ரசித்திருக்கிறேன். கிருஷ்ண தேவராயர் இரவில் நகர்வலம் போகும்போது ஒரு காதலி தன் காதலனிடம் தான் ராணியாக வாழ வேண்டும் என்று சொல்வதை கேட்கிறார். உடனே தான் மணந்து கொள்வதாக அந்த பெண்ணை அந்தப்புரத்துக்கு அழைத்து வந்துவிடுகிறார். காதலனை பிரிந்து தவிக்கும் காதலியாக சாவித்ரி, ராஜாவாக என்.டி.ஆர்., காதலனாக ஏ.என்.ஆர். நடித்த படம். தமிழில் ஏ.என்.ஆருக்கு பதில் ஜெமினி.

    மங்கையர் திலகம் சிவாஜி படம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. இருந்தாலும் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை. பெண்ணின் பெருமையும் அப்படித்தான். முதல் தேதி சிவாஜி படம். ஒன்ணிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் என்ற என்.எஸ்.கே. பாட்டு பிரபலம். யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.

    கோமதியின் காதலன் தேவன் எழுதிய நாவல். எப்படி படமாக்கி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆவல்.

    கணவனே கண் கண்ட தெய்வம் நல்ல பாட்டுகள் – உன்னை கண் தேடுதே, அன்பில் மலர்ந்த நல் ரோஜா, எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவது ஏனோ- நிறைய உடையது. பாட்டுகளை இங்கே கேட்கலாம். அஞ்சலி தேவி மாய மந்திரம் நிறைந்த ஒரு சீரிஸ் படங்களை - மணாளனே மங்கையின் பாக்யம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் மாதிரி – ஜெமினி ஹீரோ, தன் கணவர் ஆதி நாராயண ராவ் இசை, மாயாஜால காட்சிகள் இவற்றை வைத்து எடுத்தார். இதுதான் முதல் என்று நினைக்கிறேன். இந்த படங்களை இன்று பார்ப்பது கஷ்டம்.

    குலேபகாவலி எம்ஜிஆரை இன்னும் மேலே ஏற்றியது. சொக்கா போட்ட நவாபு, மயக்கும் மாலை பொழுதே நீ போ போ போன்ற இனிமையான பாடல்களை கொண்டது. பாட்டுகளை இங்கே கேட்கலாம். ஏதோ அரேபிய கர்ண பரம்பரை கதை போல தெரிகிறது. குல்-எ-பகாவலி என்றால் ஹிந்தியில் பூந்தோட்ட சொந்தக்காரி என்று பொருளோ?

    மாமன் மகள் ஜெமினி, சந்திரபாபு நடித்தது. ஜெமினிக்கு வெற்றிப்படம் என்று நினைக்கிறேன். மரண கடிப் படம். கோவா மாம்பழமே என்று சந்திரபாபு பாடும் ஒரு பாட்டு கொஞ்சம் சுமாராக இருக்கும்.

    இந்த வருஷம் வந்த படங்களில் எனக்கு பிடித்தது மிஸ்ஸியம்மாதான். அதை பற்றி அடுத்த பதிவில்.

    1953-இல் 36 படங்கள் வந்திருக்கின்றன என்று தமிழ் சினிமா சைட் சொல்கிறது. நான் பார்த்தது வழக்கம் போல மிகக் குறைவுதான். அவ்வையார், திரும்பிப் பார் இரண்டுதான் நினைவில் இருக்கின்றன. சின்ன வயதில் டெண்டு கோட்டையில் பானுமதி நடித்து இயக்கிய சண்டி ராணி (வான் மீதிலே இன்பத் தேன் மாரி தூவுதே என்ற இனிமையான பாடல் கொண்ட பாட்டு), ஜெனோவா என்ற எம்ஜிஆர் படம் பார்த்திருக்கிறேன். அப்போதே அது இரண்டும் கடி படம் என்று தோன்றியது. ஜெனோவா எம்ஜிஆர் நாயகனாக நடித்திருந்தாலும் எம்ஜிஆர் படம் அல்ல. இவற்றைத் தவிர தேவதாஸ் படமும் மங்கலாக நினைவு இருக்கிறது.

    பார்க்க விரும்பும் படங்கள் இருக்கின்றன. தலையாயது மனம் போல் மாங்கல்யம். ஜெமினி, சாவித்ரி நடித்தது. சாவித்ரியின் முதல் படமோ? மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய் என்ற அருமையான பாட்டு இதில் வருவதுதான். அந்த ஒரு பாட்டுக்காகவே இந்த படம் பார்க்க ஆசை.

    சாண்டில்யன் கதை வசனம் எழுதி நாகையா நடித்த என் வீடு என்ற படத்தையும் பார்க்க ஆசை. சாண்டில்யன் இந்த படத்தை பற்றி நிறைய பீற்றி கொண்டிருக்கிறார். அனேகமாக பிரிண்டே இருக்காது என்று நினைக்கிறேன். சாண்டில்யனும் நாகையாவும் நெருங்கிய நண்பர்கள் போலிருக்கிறது. நாகையாவை பற்றி அவர் தனது memoirs-களில் – போராட்டங்கள் என்ற புத்தகம் – புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

    ஏ.பி. நாகராஜன் நடித்த நால்வர் என்ற படத்தை பார்க்கவும ஆசை. இதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

    மனிதன் டி.கே. ஷண்முகம் தனது நாடகம் ஒன்றை படமாக்கியதாம். அகலிகை கதைதான் inspiration ஆக இருந்திருக்கும் போலிருக்கிறது. கணவனை விட்டு நெடு நாட்களாக பிரிந்திருக்கும் மனைவி, வேறு ஒருவனுடன் கூடுகிறாள். கணவன் விஷயம் தெரிந்தும் அவளை ஏற்றுக் கொள்கிறான். பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

    எம்ஜிஆருக்கு இந்த வருஷம் இரண்டு படம். அவரும், பி.எஸ். வீரப்பாவும், கலைஞரும் பார்ட்னர்களாக சேர்ந்து தயாரித்த நாம் ஒன்று, ஜெனோவா இன்னொன்று. ஜெனோவா ஓடியதாம். நாம் ஓடவில்லையாம்.

    சிவாஜிக்கும் 1952-இல் புயல் போல நுழைந்தும், அடுத்த வருஷமே சொல்லிக் கொள்கிற மாதிரி படம் எதுவும் இல்லை. அன்பு, பூங்கோதை என்று இரண்டு. மனிதனும் மிருகமும் கூட சிவாஜி படமோ?

    திரும்பிப் பார், அவ்வையார், தேவதாஸ் மூன்றும் குறிப்பிட வேண்டிய படங்கள்தாம்.

    தேவதாஸ் எப்படி ஓடியது என்று எனக்கு இன்னும் புரியவில்லை. அது மெலொட்ராமாவின் தோல்வி என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஆனால் அந்த நாவல் மிக வெற்றி பெற்றது. படம் எந்த மொழியில் எடுத்தாலும் பிய்த்துக் கொண்டு ஓடியது. அதை புரிந்து கொள்ள நான் அந்த கால கட்டத்தில் பிறந்திருக்க வேண்டும் போல. ஆனால் “ஓ, ஓ, ஓ, தேவதாஸ்” பாட்டு கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

    அவ்வையார் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் அதில் கதை என்று ஒன்றுமே இல்லை. பல கர்ண பரம்பரைக் கதைகளை ஒன்றாக இணைத்து படம் எடுத்துவிட்டார்கள். ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடுவார். பின்னால் ஏதோ ஒரு கர்ண பரம்பரை கதையில் குலத்தளவே ஆகுமாம் குணம் என்றும் பாடுவார். கே.பி. சுந்தராம்பாள் அந்த ரோலுக்கு மிக பொருத்தமாக இருந்தார். அவரது மணியான குரலும் அருமையாக பொருந்தியது.

    மிச்சம் இருக்கும் திரும்பிப் பார்தான் எனக்கு இந்த வருடம் வந்த சிறந்த படம். அதுவும் மிக அற்புதம் என்றெல்லாம் இல்லை, இந்த வருஷம் வந்த படங்களில் சிறந்தது, அவ்வளவுதான்.

    கணையாழி இன்னும் வருகிறதா என்று தெரியாது. ஆனால் சுஜாதா எழுதிய “கணையாழியின் கடைசி பக்கங்கள்’ இந்த காலத்து ப்ளாக்களின் முன்னோடி. சுருக்கமாக (எப்பவுமே வார்த்தைகளை வீணடிக்க மாட்டார்), சுவாரசியமாக எழுதப்பட்டவை. கணையாழி களஞ்சியம் என்ற தொகுப்பில் சில கடைசி பக்கங்களை படித்தேன். ஒன்று சினிமா பற்றியது.

    இதை எழுதும்போது சுஜாதா டெல்லியில் இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் பழைய படங்கள்தான் டெல்லிக்கு வரும்போல. இதை முழுவதுமாக இங்கே தரப்போவதில்லை. சில பகுதிகள் மட்டும்.

    சுஜாதா நல்லபடியாக சொன்ன படங்கள் இவை.

    அன்னை – பானுமதியின் நடிப்பை சிலாகித்திருக்கிறார். சில சமயங்களில் கண்ணீர் வந்ததாம். ஆனால் கூட இருக்கும் எல்லாரும், குறிப்பாக இளம் நடிகர்கள் (பெயர் குறிப்பிடவில்லை, ஹரிநாத் ராஜாவும் சச்சுவும் என்று நினைக்கிறேன்) சொதப்பிவிட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார். பானுமதியை தவிர எனக்கு கண்ணில் தெரிந்த நடிகர்கள் ரங்காராவும் (பரவாயில்லை), ஸௌகாரும் (ஓவர் ஆக்டிங்) மட்டும்தான். இவர் கண்ணில் எல்லாரும் பட்டிருக்கிறார்கள்.

    பாலச்சந்தரின் அந்த நாள், இது நிஜமா – அந்த நாள் பற்றி சாரதாவின் கருத்துகள் இங்கே, ராஜ்ராஜின் கருத்துகள் இங்கே, எனது கருத்துகள் இங்கே. இது நிஜமா கல்யாணராமனின் inspiration என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    பாதை தெரியுது பார், உன்னை போல் ஒருவன் – நான் இரண்டையும் பார்த்ததில்லை. இதை எல்லாம் போட்டிருக்கக்கூடாதா?

    நாலு வேலி நிலம் – இது படமாக வந்ததே தெரியாது. தி. ஜானகிராமனின் கதை. பாட்டுகள் இதை கெடுக்கின்றன என்று சொல்லி இருக்கிறார்.

    குமார ராஜா – சில பகுதிகள் நன்றாக இருக்கின்றன என்று சொல்லி இருக்கிறார். எனக்கு தெரிந்த ஒரே விஷயம் சந்திரபாபு பாடிய “ஒண்ணுமே புரியலே உலகத்திலே” பாட்டு மட்டும்தான். பார்த்ததில்லை.

    அவருக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் பிடிக்கவில்லை. இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை என்று எழுதி இருக்கிறார். நான் பார்த்து பல வருஷம் இருக்கும், பார்த்த போது படம் பிடித்துத்தான் இருந்தது.

    வாலி மீது பாய்ந்திருக்கிறார். கண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார். வாலி கேட்டால் கண்ணதாசனை காப்பி அடிப்பதில் எனக்கு பெருமைதான் என்று சொல்லி இருப்பார்.

    சிவாஜி மீது ஏகமாக பாய்ந்திருக்கிறார். verbatim ஆக – “இவர் முக்கால் வாசிப் படங்களில் கேவிக் கேவி அழுகிறார். பின்னால் தாடி வளர்க்கிறார். அல்லது கை கால் கண் பார்வை ஏதாவது ஒன்று இழக்கிறார். இப்படி இல்லாத படங்கள் மிக சிலவே!…”

    ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.

    கே. பாலச்சந்தரை பற்றி குறிப்பிடவில்லை. அதனால் அனேகமாக இது அறுபதுகளின் இறுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது என் யூகம்தான், எழுதப்பட்ட தேதி புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. அப்பவே சிவாஜியை பற்றி இப்படி எழுத ஆரம்பித்துவிட்டார்களா?

    பானுமதியின் மாஸ்டர்பீஸ். அவருக்காகவே எழுதப்பட்ட திரைக்கதையில் அவர் பிய்த்து உதறி இருக்கிறார். அவருக்கு இந்த படத்துக்கு தேசிய அளவில் சிறந்த நடிகை விருது கிடைத்தது. இதற்கு பிறகும் அவர் இரண்டு சிறந்த நடிகை விருதுகளை பெற்றிருக்கிறார்

    1962இல் வந்த படம். வழக்கம் போல டைட்டில்களை மிஸ் செய்துவிட்டேன். அடையாளம் தெரிந்தது ஸௌகார், ரங்காராவ், முத்தையா (வேறொரு படத்தில் இவர் யாரென்று சொன்ன சாரதாவுக்கு நன்றி), சச்சு, சந்திரபாபு. ஏவிஎம் படம். இசை சுதர்சனம். இயக்கம் ஏவிஎம்மின் ஆஸ்தான இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சுவா? பஞ்சு. அனேகமாக தெலுங்கிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். நாயகன் பேர் ஹரிநாத் ராஜா. தெலுங்கு நடிகர் என்று நினைக்கிறேன், யாரோ தெரியவில்லை. (பானுமதியின் மகனாக நடிக்க முதலில் ஜெய்ஷங்கரைத்தான் மேக்கப் டெஸ்ட் செய்து பார்த்தார்களாம். அவருக்கு சிறிய கண்கள் என்று அவரை நிராகரித்துவிட்டார்களாம்.)

    ஒரு வங்காள மொழி நாடகம்தான் மூலக்கதை. ஹிந்தியில் மாய ம்ருகா என்று படமாக எடுக்கப்பட்டது. ஏவிஎம் செட்டியார் பார்த்தது நாடகமா இல்லை ஹிந்தி படமா என்று தெரியாது. ஆனால் இதை திரைக்கதையாகும் முயற்சியில் பானுமதிக்கும் பங்கு உண்டு என்று கேள்வி. பானுமதிக்கு மூலக்கதையில் வந்த பாத்திரம் கொஞ்சம் அசடாக இருக்கிறார் என்று தோன்றியதாம். அதனால் அவர் பாத்திரத்தை கொஞ்சம் மாற்றினாராம்.

    தமிழ் படங்களில் சாதாரணமாக நல்லவர்களில் ஒரு குறையும் இருக்காது. கெட்டவர்களோ வடிகட்டின கெட்டவர்கள் – மருந்துக்கு கூட ஒரு நல்ல குணம் இருக்காது. இந்த படம் ஒரு அதிசயமான விதிவிலக்கு. ஒரு குறை உள்ள பாத்திரம், அதுவும் பெண் பாத்திரம்தான் கதாநாயகி. பானுமதி நாம் பார்க்கக்கூடிய ஒரு பாத்திரம். அவரது இன்செக்யுரிடியினால் அவர் செய்யும் தவறுகள் ரியலிஸ்டிக்காக சித்தரிக்கப்படுகின்றன. அவருக்கு அந்தஸ்து முக்கியம். ஆனால் எல்லா படங்களிலும் வருவது போல அவர் அந்தஸ்துக்காக வாழும் ஒரு கார்ட்டூன் காரக்டர் அல்லர். அதனால்தான் கதையும், அதனால் படமும் நன்றாக இருக்கிறது.

    நல்ல முடிச்சு உள்ள கதை. பணக்கார குடும்பத்தில் பிறந்த பானுமதி, அவரது தங்கை ஸௌகார். ஸௌகார் ஏழை முத்தையாவை கல்யாணம் செய்துகொள்வதால் சிரமப்படுகிறார். குழந்தை இல்லாத தன் அக்காவுக்கு தன் குழ்ந்தையை கொடுக்கிறார். பதில் உதவி என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அக்காவிடம் பண உதவி பெற்றுக் கொண்டு வெளி நாடு போய்விடுகிறார். பானுமதி பையனை உயிருக்கு உயிராக வளர்க்கிறார். அடி மனதில் எப்போதாவது பையன் தன்னை பெரியம்மா என்று சொல்லிவிடுவானோ என்ற பயம் இருக்கிறது. இருபது வருஷம் கழித்து ஸௌகாரும் முத்தையாவும் ஏழையாகவே திரும்பிவரும்போது, தங்கை மேல் உள்ள பாசத்தை பையன் தன் நிஜ அம்மாவுடன் போய்விடுவானோ என்ற பயம் வென்றுவிடுகிறது. மகனும் தங்கையும் சந்திக்கக்கூடாது என்று முயற்சி செய்கிறார். தற்செயலாக அவர்கள் சந்தித்துவிட, பானுமதியின் பயம் அதிகரிக்கிறது. முத்தையா இறந்துவிட, ஸௌகார் அழுதுகொண்டே இருக்க, பையனுக்கு உண்மை தெரிந்து பெரியம்மா என்றே கூப்பிட்டுவிடுகிறான். வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறான். கடைசியில் பானுமதி ஸௌகாரிடம் இவன் நம் பிள்ளை என்று சொல்ல, சுபம்!

    இது பானுமதியின் படம். மற்ற எல்லாரும் பானுமதிக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கத்தான். ரங்காராவ் நன்றாக நடித்திருக்கிறார். பானுமதி பல காட்சிகளில் கலக்குகிறார். குறிப்பாக தன் மகன் அடிபட்டு படுத்திருக்கும்போது சரக் சரக் என்று சத்தத்தோடு நடந்து வரும் நர்சை ஒரு அடி போடும் காட்சி பிரமாதம். ஸ்லீவ்லெஸ் ரவிக்கையோடு வரும் தன் prospective மருமகளிடம் “அவசரமா வந்ததால ரவிக்கை போடாம வந்துட்டா போலிருக்கு” என்று சொல்லும் இடம் அபாரம். தங்கையை நடத்தும் விதம் தவறு என்று தெரிந்தும் ரங்காராவிடம் இந்த ஒரு விஷயத்தை விட்டுடுங்க என்று சொல்லும் இடம், தங்கையை கண்டு கண் கலங்கும் இடம், எல்லாரும் என்னைத்தான் சொல்வீங்க என்று புலம்புவது – சும்மா புகுந்து விளையாடிவிட்டார்.

    மிச்ச எல்லாரும் டம்மிதான். ஆனால் ஹீரோ பார்க்க நன்றாக இருக்கிறார்.

    படம் முக்கால்வாசி முடிந்த பிறகுதான் ஒரே வீட்டில் வசிக்கும், தன்னை ஒரு தலையாக காதலிக்கும் சந்திரபாபுவை பார்த்து சச்சு அண்ணா என்று சொல்கிறார். அது வரைக்கும் எப்படி கூப்பிட்டார் என்று தெரியவில்லை. பஞ்சதந்திரம் படத்தில் தேவயானி சிம்ரன் சந்தேகப்பட்டு திட்டிவிட்டு போனதும் கமலை பார்த்து “ராமண்ணா ராமண்ணா” என்பார். கமல் “கரெக்டா அவ போனப்புறம் சொல்லு!” என்பார். அதுதான் ஞாபகம் வந்தது!

    பாட்டுகள் எழுதி இருப்பது கண்ணதாசன். சந்திரபாபு பாடும் “புத்தி உள்ள மனிதரெல்லாம்”, பி.பி.எஸ்., சுசீலா பாடும் “அழகிய மிதிலை நகரினிலே”, சுசீலா பாடும் “பக் பக் பக் பக் பக்கும் பக்கும் மாடப்புறா”, பானுமதியே பாடும் “பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று” எல்லாமே நல்ல பாட்டுகள். எனக்கு எப்போதுமே சந்திரபாபு பாட்டுக்கள் என்றால் ஒரு மயக்கம் உண்டு. இதில் அவர் கலக்கிவிடுவார். “அழகிய மிதிலை நகரினிலே” பாட்டில் “பருவத்து பெண்கள் தனித்திருந்தால்” என்று ஆரம்பித்து, “ஆஹா, ஓஹோ” என்று பி.பி.எஸ். பாடுவதும், “ம்ஹ்ம்ம்” என்று சுசீலா முறைப்பதும் அருமை! “பக்கும் பக்கும் மாடப்புறா” பாட்டுக்கு சந்திரபாபு என்ன ஜோராக டான்ஸ் ஆடுகிறார்! பானுமதியின் குரலில் கொஞ்சம் தெலுங்கு வாடை உண்டு. அது அவரது குரலுக்கு ஒரு special charmஐ கொடுக்கிறது.

    “அழகிய மிதிலை நகரினிலே”, “புத்தி உள்ள மனிதரெல்லாம்” பாட்டுகளை இங்கே கேட்கலாம்.

    பானுமதிக்காக பாருங்கள். 10க்கு 7 மார்க். B grade.

    அடுத்த பக்கம் »