நந்தனார்
ஏப்ரல் 14, 2010 3 பின்னூட்டங்கள்
நான் பார்த்த மிக பழைய தமிழ் படங்களில் நந்தனாரும் ஒன்று. பழைய படங்கள் பிரின்ட் கிடைப்பதே அபூர்வம். இந்த வீடியோ நன்றாகவே இருந்தது. ராண்டார்கை தன் பத்தி ஒன்றில் இது 2008இல் Vintage Heritage அமைப்பு திரையிட்டதாகவும் நல்ல கூட்டம் வந்ததாகவும் வேறு சொல்கிறார். இந்த அமைப்பு பற்றி அதிகம் தெரியவில்லை, ஆனால் அவர்களுக்கு ஒரு ஜே!
இது தண்டபாணி தேசிகர் நடித்த படம். ஜெமினி வெளியீடு. செருகளத்தூர் சாமா, சுந்தரிபாய் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. (சேக்கிழாரின் கதையில் ஆண்டையான வேதியர் எல்லாம் கிடையாதாம். அது கோபால கிருஷ்ண பாரதியார் சேர்த்த மசாலாவாம்.) எஸ்.எஸ். வாசன் தயாரிப்பு. இசை எம்.டி. பார்த்தசாரதி மற்றும் எஸ். ராஜேஸ்வர ராவ். படம் வந்தது 1942 என்று ராண்டார்கை சொல்கிறார். 1941ஓ என்றோ எனக்கு கொஞ்சம் சந்தேகம். நான் பார்த்த படங்களில் மிக பழையது இதுவா சபாபதியா என்று எனக்கு தெரியவில்லை. சபாபதி 1941 என்று நிச்சயமாக தெரியும்.
நந்தனார் கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான். “இழிகுலத்தவரான” நந்தனுக்கு தில்லை சென்று நடராஜனை தரிசிக்க வேண்டும் என்று ஆசை. அவருடைய ஆண்டையான வேதியரிடம் சொல்லவே பயம். இதற்கு நடுவில் திருப்புன்கூரில் கோவிலுக்கு வெளியே நின்றாவது தரிசனம் செய்யலாம் என்றால் நந்தி மறைக்கிறது. கடைசியில் சிவபெருமானே சற்றே விலகி இரும் பிள்ளாய் சந்நிதானம் மறைக்குதாம் என்று நந்தியிடம் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வேதியரிடம் பித்தம் தெளிய மருந்தான அந்த சிதம்பரத்துக்கு போக வேண்டும் சொன்னால் அவர் சிதம்பர தரிசனமோ அது உனக்கு அடுக்குமோ என்று கேட்கிறார். நாளைக்கு போ நாளைக்கு போ என்று தட்டி கழிக்கிறார். கடைசியில் என் நாற்பது வேலி நிலத்திலும் நீ ஒருவனே உழுது பயிர் செய்தால் போகலாம் என்று சொல்கிறார். நந்தன் சோர்ந்து உட்கார்ந்து அரகர ஜகதீசா என்று பாட, ராவோடு ராவாக சிவபெருமான் பூத கணங்களை வைத்து வேலையை செய்துவிடுகிறார். வேதியர் நந்தனின் பெருமையை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அனுப்பி வைக்கிறார். நந்தன் அங்கே தீயில் குளித்து ஆலய தரிசனம் செய்கிறார்.
தண்டபாணி தேசிகரும் செருகளத்தூர் சாமாவும் கொடுத்த வேலையை நன்றாக செய்திருக்கிறார்கள். அறுவடை செய்யும் ட்ரிக் ஷாட் அந்த காலத்தில் பேசப்பட்ட ஒன்றாம். ஆனால் படம் பார்ப்பதென்றால் பாட்டுகளுக்காகத்தான். பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குதாம், அய்யே மெத்தக் கடினம், சிதம்பர தரிசனமோ, சிவலோகனாதனைக் கண்டு சேவித்திடுவோம், பிறவா வரம் தாரும், என்னப்பனல்லவா என் தாயுமல்லவா, காமம் அகற்றிய, காண வேண்டாமோ, வருகலாமோ, அரகர ஜகதீசா என்ற பாட்டுகள் மிக அருமையானவை. முக்கால்வாசி கோபால கிருஷ்ண பாரதியார் எழுதியவைதான். மிச்சம் பாபநாசம் சிவன் எழுதியவை. யூட்யூபில் பல வீடியோக்கள் கிடைக்கின்றன.
என்னப்பனல்லவா என் தாயுமல்லவா
காமம் அகற்றிய நேயன் அவன்
காண வேண்டாமோ
அய்யே மெத்தக் கடினம்
வருகலாமோ
அரகர ஜகதீசா
வழி மறைத்திருக்கிது
நான் மிகவும் ஆச்சரியப்பட்ட ஒரு விஷயம் – ஒரு சேரி சீனில் பிற்காலத்தில் “மல்லு வெட்டி மடிச்சுக் கட்டும் மச்சான் ஒரு மயிலக் காளை” என்ற பாட்டின் மெட்டு அப்படியே பின்னணி இசையாக வரும்! அசந்துவிட்டேன்! ஷங்கர் கணேஷ் எங்கிருந்தெல்லாம் பாட்டை எடுக்கிறார்கள்!
பாட்டுகளுக்காக பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஆறு மார்க். C grade.
தொகுக்கப்பட்ட பக்கம்: அவார்டா கொடுக்கறாங்க–>படங்களின் பட்டியல்
தொடர்புடைய பதிவுகள்:
ராண்டார்கை நந்தனார் பற்றி எழுதிய பத்தி
ராண்டார்கை தேசிகரைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரை
அண்மைய பின்னூட்டங்கள்