ஆர்வி விமர்சனம் – முகம்மது பின் துக்ளக்
ஜூன் 19, 2009 9 பின்னூட்டங்கள்
வழக்கம் போலவே விகடன் விமர்சனத்தை போட்டதும் என் விமர்சனம் தொடர்கிறது.
சோவின் நாடக பங்களிப்பு குறைத்து மதிக்கப்படுவது. அவர் பெர்னார்ட் ஷாவோ இப்சனோ இல்லைதான். ஆனால் கிரேக்க காமெடி நாடக ஆசிரியர் என்று கொண்டாடப்படும் அரிஸ்டோஃபநஸ் அளவுக்காவது மதிக்கலாம். அவரது சடையர் மிகவும் topical ஆனது. பத்து வருஷம் போனால் பல நுண்ணிய விஷயங்கள் அந்த கால கட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கே மட்டுமே புரியும். அவர்களுக்கே மறந்து போய்விடலாம். உதாரணமாக சர்க்கார் புகுந்த வீடு என்ற “நாவலில்” கந்தசாமியும் ராகவையரும் நாராயணசாமி நாயுடுவிடம் தங்களுக்கு இருக்கும் மளிகை பால் கடனை எப்படி அடைப்பது என்று யோசனை கேட்கப் போவார்கள். அவர் “என்னது கொடுத்த கடனை அடைக்கறதா? நீங்கள்ளாம் எம்ஜிஆர் ஆளுங்களா?” என்று பொங்கி எழுவார். அவர் எண்பதுகளின் ஆரம்பத்தில் எம்ஜிஆர் அரசு விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று போராடியவர். எம்ஜிஆர் முடியாது என்று ரொம்ப நாள் மறுத்தார். அன்று படித்தவுடன் குபீர் சிரிப்பு கிளம்பியது. இன்று எத்தனை பேருக்கு இது புரியும்?
நல்ல வேளையாக அவர் இந்த நாடகத்தில் இந்திரா காந்தி, ராஜாஜி, கலைஞர், கம்யூனிஸ்டுகள் போன்றவர்களை கிண்டல் செய்கிறார். அதனால் இந்த நாடகத்து ஜோக்குகள் சுலபமாக புரியும். நாடகம் வந்தபோது தி.மு.க., முக்கியமாக கலைஞர் பயங்கர கடுப்பாகிவிட்டார் என்றும், நானே அறிவாளி என்று சோவை கிண்டல் செய்து ஒரு நாடகம் எழுதி அரங்கேற்றினார் என்றும் சொல்வார்கள்.
என்னடா நாடகம் பற்றியே எழுதுகிறானே என்று பார்க்கிறீர்களா? சோவின் சினிமாக்கள் எல்லாமே அவர் நாடகங்களை வீடியோ எடுத்த மாதிரிதான் இருக்கும். படமே பார்க்க வேண்டாம். ஒலிச்சித்திரம் கேட்டால் போதும். படத்தின் உயிரே வசனம்தான். படம் நகர்வதும் வசனங்கள் மூலம்தான். உண்மையை சொல்லப் போனால் நாடகம் இந்த சினிமாவை விட பெட்டர். அதனால்தான் நாடகத்தை பற்றியே இது வரை பேசிக் கொண்டிருக்கிறேன்.
1971-இல் வந்த படம். சோவை தவிர எனக்கு தெரிந்த முகங்கள் கொஞ்சம்தான். மனோரமா, சுகுமாரி, நீலு, வெ.ஆ. மூர்த்தி அவ்வளவுதான். அதுவும் மூர்த்தி ஒரு ஐடம் நம்பருக்கு வந்து பாட்டு பாடிவிட்டு போய்விடுவார். சோவே இயக்கிய படம். டைரக்ஷன் கற்றுக்கொள்ள முயற்சி என்று டைட்டிலில் போட்டிருப்பார். இசை எம்எஸ்வி.
சினிமா வரவிடாமல் கலைஞரும் எம்ஜிஆரும் தடுக்க முயற்சி செய்தார்களாம். எம் எஸ்வி இசை அமைக்கக் கூடாது என்று பிரஷர் கொடுத்தார்களாம். எம்எஸ்வி நீங்கள் சோவை கிண்டல் செய்து படம் எடுங்கள் நான் அதற்கும் இசை அமைத்து தருகிறேன் என்று சொல்லிவிட்டாராம்.
தெரிந்த கதைதான். சரித்திர ஆராய்ச்சியாளர் துக்ளக், இபின் பதூதா ஆகியோரின் உடல்களை கண்டெடுக்கிறார். அவர்கள் இன்னும் இறக்கவில்லை, ஒரு மாதிரி கோமாவில் இருக்கிறார்கள். விழித்து எழுந்த பின் துக்ளக் எம்.பி. எலெக்ஷனில் நின்று ஜெயிக்கிறார். கட்சிக்கு வரும் எல்லா எம்.பி.க்கும் மந்திரி பதவி என்று அறிவிக்கிறார். 400 எம்.பி.க்கு மேல் இவர் கட்சிக்கு தாவுகிறார்கள். அதில் ஒருவரை உதவி பிரதமராக போகிறார் என்று வதந்தி வந்ததும் அந்த ஒருவரைத் தவிர எல்லாரும் கட்சியை விட்டு போய்விடுகிறார்கள். கட்சிக்கு வரும் எல்லா எம்.பி.க்கும் உதவி பிரதமர் பதவி என்று அறிவிக்கிறார். 450-க்கும் மேல் உதவி பிரதமர்கள். நாட்டின் பிரச்சினைகளுக்கு நூதனமான தீர்வுகள் – ஆட்சி மொழி ஹிந்தியா, ஆங்கிலமா? இரண்டுமில்லை, பாரசீகம். லஞ்சத்தை ஒழிக்க லஞ்சத்தை சட்ட ரீதியாக்கி வெளிப்படையாக ரேட் போடுகிறார். கடைசியில் பார்த்தால் துக்ளக், பதூதா இருவரும் நாட்டில் அரசியல் கேலிக்கூத்தாகிவிட்டது என்று காண்பிக்க வேஷம் போட்டிருக்கும் இளைஞர்கள். ஆனால் இப்போது துக்ளக்குக்கு பதவி ஆசை வந்துவிட்டது. பதூதாவை தந்திரமாக கொன்றுவிடுகிறார். பதவியில் நீடிக்கிறார்.
சோ சும்மா புகுந்து விளையாடுகிறார். அவருக்கேற்ற ரோல். ஒரு கிறுக்குத்தனம் தெரியும். அவர் ஒரு மாதிரி குதித்து குதித்து நடப்பது பிரமாதம். கொஞ்சம் நாடகத்தனத்துடன் நீண்ட வசனம் பேசலாம். You can roll the Rs. இந்த ரோலுக்கு எல்லாம் பொருந்தி வரும்.
வசனமோ! மனிதருக்கு கிண்டல் ரத்தத்தில் ஊறி இருக்கிறது. அதுவும் கலைஞர் மாதிரி பேசுபவர் அசத்திவிட்டார். கொஞ்சம் கட்டை குரலில் அருமையாக பேசுவார். ராஜாஜி மாதிரி வருபவர் ஒரு பொதுக் கூட்டத்தில் சொல்வார் – “உங்களுக்கு எது நல்லதுன்னு உங்களுக்கு தெரியாது, எனக்குதான் தெரியும்!” பிரதமர் துக்ளக் அமைச்சரவை கூட்டத்தில் சொல்வார் – “அடுத்த மாதம் நான் அமேரிக்கா போகிறேன்!”, “எதுக்கு?” “நான் அமேரிக்கா பார்க்க வேண்டாமா?” துக்ளக் பதூதாவிடம் அசன் ஷாவை அறிமுகப்படுத்துவார் – “இவன்தான் இந்த நாட்டின் முதல் தர முட்டாள்! மற்றவர்கள் எல்லாம் இரண்டாம் தர முட்டாள்கள், அவர்களை உனக்கு அறிமுகப்பட்டுத்த வேண்டியதில்லை!”
துக்ளக்கும் பதூதாவும் பேசிக் கொள்ளும் ஆரம்பக் காட்சியை இங்கே தவறாமல் பாருங்கள்.
காட்சியின் தொடர்ச்சி இங்கே.
அல்லா அல்லா, பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை பூமியில் கண்டது இங்கு என்று இரண்டு பாட்டுகள் ஞாபகம் வருகிறது.
தமிழின் மிக அபூர்வமான சடையர் படம். அருமையான வசனங்கள். நல்ல நகைச்சுவை. சோவின், பதூதாவாக வருபவரின், சுகுமாரியின் நல்ல நடிப்பு. பத்துக்கு 7.5 மார்க். கட்டாயமாக பாருங்கள்.
உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்
உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது
இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html
இந்தப் படத்தில் பதுதாவாக வருபவர், நாடக நடிகர் பீலி சிவம். இவர் சில திரைப் படங்களிலும் தோன்றி இருகிறார். இப்போது டிவி சீரியல்களில் இவரைப் பார்க்க முடிகிறது.
சோவின் திரைப்பட வாழ்க்கையில் இந்தப் படம் ஒரு மாஸ்டர் பீஸ்!. இதையடுத்து, தேன்கிண்ணம், நினைவில் நின்றவள், பொம்மலாட்டம் போன்ற படங்களைச் சொல்லலாம்!.தங்கப்பதக்கம், ரோஜாவின் ராஜா போன்றவைகள் பிற்காலத்தில் வந்தவைகளில் சோவின் நகைச்சுவையை நினைவு கூறும் படங்கள்.
இந்தப் படத்தில் சுகுமாரியின் கணவராக, பேராசிரியர் வேடத்தில் தோன்றும் தாடி வைத்த நபர், சோ வின் உடன்பிறப்பான(சொந்த) அம்பி என்கிற இராஜகோபால்!. இவரும் சோ வின் சில டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார்.
நல்லதம்பி தேன்மழையை குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். சோவின் தங்கபதக்கம் காமெடி நினைவில் இருக்கிறது. யாராவது ரோஜாவின் ராஜா பற்றி எழுதுங்கள்.
தற்போது ஜெயா tv இல “எங்கே பிராமணன்” ஒளிபரப்பாகிறது. 80 களில் “doordharshan” இல சோவின் “சரஸ்வதி சபதம்” ஒளிபரப்பானது. cinema பற்றி ஒரு satire . நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டே இருக்கலாம்.
//நல்லதம்பி தேன்மழையை குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.//
ஆமாம்.. தேன்மழைதான்! :). ரோஜாவின் ராஜாவில் சோ இரட்டை வேடம் தாங்கி இருந்தார். தந்தையும், மகனும் என்று நினைக்கிறேன். அதில் மனைவி மனோரமா தன் கணவர் சோவை அடையாளம் காண எம்ஜிஆர் குல்லாவைப் போட வைப்பது போன்ற காமெடிகள் அந்த சின்ன வயதில் என்னைச் சிரிக்க வைத்தன்.
நல்லதந்தி/தாஸ்,
மறுமொழிக்கு நன்றி!
நல்லதந்தி, தகவல்களுக்கு நன்றி! பதிவில் சேர்த்துவிடுகிறேன்.
நான் ரோ. ராஜா பார்த்ததில்லை. தேன் மழை, பொம்மலாட்டம், நினைவில் நின்றவள் எல்லாம் சிறு வயதில் பார்த்தது.
ஆனால் உண்மையே உன் விலை என்ன நல்ல படம் என்று நினைவிருக்கிறது. அசோகன், முத்துராமன் எல்லாரும் மிக நன்றாக நடித்திருப்பார்கள். யாருக்கும் வெட்கமில்லை பார்த்ததில்லை, ஆனால் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். மிஸ்டர் சம்பத் என்பது நல்ல படமாம்.
தேன்மழை நாகேஷூம் இன்னொருவரும் நண்பர்களாக நடித்த படமா?
முகமது பின் துக்ளக்கில் ஒரு காட்சி: ”அவனை கல்லால் அடிக்காதீர்கள்” என்று சோ கூற மக்கள் எல்லோரும் கல்லால் அடிப்பார்கள். மா பிகேவியரை நன்றாக அறிந்திருந்தார்.
பிங்குபாக்: காத்தவராயன் நாடகம் | சிலிகான் ஷெல்ஃப்