சில நேரங்களில் சில மனிதர்கள் – ஆர்வியின் விமர்சனம்


பணமா பாசமா படம்தான் அடுத்தபடி லிஸ்டில் இருந்தது. ஆனால் சில நேரங்களில் சில மனிதர்களுக்கு கட்சி மாறிவிட்டேன்.

இந்த படம் முதல் முறை பார்த்தபோது நான் டீனேஜர். எனக்கு அப்போது படம் பிடித்திருந்தது. அந்தக் காலத்தில் இந்த கதைக்கும் சினிமாவுக்கும் இருந்த ஷாக் வால்யூவும் அதற்கு ஒரு காரணம். கெட்டுப் போன பெண், அதுவும் அய்யராத்துப் பெண், ஒய்ஜிபி “You can only be a concubine” அப்படின்னு சொல்றார்டா, கான்குபைன் அப்படின்னா வப்பாட்டிடா என்ற கண்டுபிடிப்புகள், என்னடா குளிச்சா எல்லாம் சரியாயிடுமா என்ற விவாதங்கள், இவளும் இஷ்டப்பட்டுதானே போனா என்ற யோசனைகள் எல்லாம் இன்னும் நினைவிருக்கிறது. கெட்டுப் போன பெண்கள், பெண்ணாசை பிடித்த கனவான்கள் எல்லாம் அப்போது திரைப்படங்களில் சர்வசாதாரணம். ஆனால் ஒரு எம்ஜிஆர் படத்தில் அசோகனை அப்படி பார்க்கும்போது இது சும்மா ஜுஜுபி என்று நன்றாகத் தெரியும். இது என்னவோ பக்கத்து வீட்டு பெரிய மனுஷனைப் பார்ப்பது போல, நாலு வீடு தள்ளி இருக்கும் ஒரு ஒண்டுக்குடித்தனத்து பெண்ணைப் பற்றி வம்பு பேசுவது போல (அந்த காலத்துக்கு) ரியலிஸ்டிக்காக இருந்தது.

லக்ஷ்மியின் நடிப்பு மிகவும் அபாரமாக இருந்தது. எனக்கு பக்ஸ் டெலிஃபோனில் பேசும்போது ஏன் அழ வேண்டும் என்று கேட்பதில் இசைவில்லை. அந்தக் கட்டத்தில் அழுகை வரத்தான் வரும் என்று தோன்றுகிறது. இதற்கு பிறகுதான் அவரை பொம்பளை சிவாஜி என்று அழைக்க ஆரம்பித்தார்கள் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீகாந்த், ஒய்ஜிபி, நாகேஷ், சுந்தரிபாய் எல்லாருமே நன்றாக நடித்திருந்தார்கள். சுந்தரிபாய்க்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடைத்ததே இல்லை. ஒரு சராசரி பிராமண பாட்டியை கண் முன் கொண்டு வந்திருப்பார். ரயில் எஞ்சின் மாதிரி புகை விடறான் என்று ஸ்ரீகாந்தைப் பற்றி சொல்வதும், தலையை மொட்டை அடித்துக் கொண்டு வருவதும் நல்ல சீன்கள்.

இரண்டாவது முறை பார்த்தபோது இது சினிமா மாதிரியே இல்லையே, நாடகம் மாதிரி இருக்கிறதே என்று தோன்றியது. பீம்சிங் கதையை விஷுவலாக மாற்ற முயற்சியே செய்யவில்லை. நாவலை அப்படியே எடுத்திருக்கிறார். இதற்கு சினிமா எதற்கு, புத்தகத்தையே படிக்கலாமே? அடிப்படையில் கதை வலுவானது, அதனால்தான் வீக்கான திரைக்கதையையும் தாண்டி படம் நிற்கிறது.

இரண்டு விஷுவல் சீன்கள் இப்போது நினைவு வருகின்றன. நாகேஷ் கண்டதை சொல்லுகிறேன் பாட்டின் இறுதியில் அவரது பேப்பர்கள் பறக்கும், அவர் அதை எல்லாம் பிடிக்க படாத பாடு படுவார். கடைசியில் மிஞ்சும் ஒரு பேப்பரும் பறக்கும், அவர் அதற்கு அப்போது கூலாக டாட்டா காட்டுவார். லக்ஷ்மி, ஸ்ரீகாந்த், ஸ்ரீகாந்தின் மகள் எல்லோரும் வாக்கிங் போவார்கள், அப்போது பகோடா காதர் (பகோடா காதர் கொஞ்சம் குண்டு) நடந்து வருவார், அவரைப் பார்த்து நடக்க முடியாமல் நடக்கும் ஸ்ரீகாந்த் நீ கூடவா என்று ஆசுவாசப் பெருமூச்சு விடுவார்.

கண்டதை சொல்லுகிறேன் மிக நல்ல பாட்டு. நல்ல வரிகள். எம்எஸ்வியின் குரல் பாட்டுக்கு நன்றாக பொருந்துகிறது.

இது நல்ல படம், அதற்கு காரணம் ஜெயகாந்தன், பீம்சிங் இல்லை. நல்ல நடிப்பு. லக்ஷ்மி, ஸ்ரீகாந்த், சுந்தரிபாய் மூவரும் அசத்தினார்கள். பத்துக்கு எட்டு மார்க். A- grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்: பக்ஸின் விமர்சனம்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

12 Responses to சில நேரங்களில் சில மனிதர்கள் – ஆர்வியின் விமர்சனம்

  1. சாரதா says:

    ஆர்.வி. & பக்ஸ், ரெண்டுபேருமே ரொம்ப நல்ல அலசியிருக்கீங்க. என்னுடைய அலசல் என்று பெரிய போஸ்ட் போடுவதைவிட, இதோ என்னுடைய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ விமர்சனத்துக்கான லிங்க்:

    http://www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=13689&postdays=0&postorder=asc&start=30

  2. rinks says:

    //இது நல்ல படம், அதற்கு காரணம் ஜெயகாந்தன், பீம்சிங் இல்லை. நல்ல நடிப்பு. //
    Say the story was directed by someone like KSG, Muktha or SPM? Do you think the movie would have been even half decent?

    Bhimsingh deserves to be commended for extracting such a realistic performance from the cast particularly from Lakshmi. I have never found her acting to be decent before SNSM. Well, I won’t say my opinion about Lakshmi completely changed after watching the movie. I don’t obviously consider her to be a great actress. But SNSM was definitely a milestone in her career. ‘Oru Nadigai Nadagam Paarkiral’ with the same team is also definitely worth a watch!

  3. RV says:

    சாரதா,

    உங்கள் மறுமொழியை பார்த்தது ரொம்ப சந்தோஷம். அதை விட உங்கள் forumhub போஸ்டிங்கை பார்த்தது பெரிய சந்தோஷம். நீங்கள் இப்போதெல்லாம் எங்கே எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

    உங்களிடம் ஒரு வேண்டுகோள் – நீங்கள் forumhub-இல் எழுதி இருப்பதை ஒரு போஸ்டாக இங்கே போடலாமா? எனக்கு பொதுவாக அந்த மாதிரி thread -ஐ படிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.

    ரிங்க்ஸ், பீம்சிங் மீது எனக்கு விமர்சனம்தான். ஜேகேயின் புத்தகங்கள் சாதாரணமாக பேசி பேசித்தான் முன் நகர்கின்றன. சினிமா விஷுவல் மீடியம் – அங்கே காட்சிகளால் அல்லவா அதை நகர்த்த வேண்டும்? நடிகை நாடகமும் பார்க்க வேண்டும். சாரதாவின் விமர்சனம் ஆர்வத்தை தூண்டுகிறது.

  4. சாரதா says:

    டியர் RV

    என்னுடைய ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’ பதிவை இங்கு ஒரு போஸ்ட்டாகப் போடலாமா என்று கேட்டிருக்கிறீர்கள். போடுங்கள். I am really honoured. என்னுடைய கருத்துக்கள் நிறையப்பேரிடம் சென்று சேர வேண்டும் என்பதுதான் என் ஆவல். அதற்கு உங்கள் தளமும் ஒரு வழியாக இருக்கட்டும்.

    இன்னொரு விஷயம், அதே forumhub தளத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் thread-கள் எழுதியுள்ளேன். சமயம் வாய்க்கும்போது படியுங்கள்.
    நன்றியுடன்… சாரூ…

  5. RV says:

    சாரதா,
    நன்றி, போட்டுவிடுகிறோம்!

    ஸ்ரீகாந்த் thread -ஐ படிக்கும்போது ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் பற்றி thread இருக்கிறது என்று தெரிந்துகொண்டேன். ஆனால் thread எங்கே என்றுதான் கண்டுபிடிக்க முடியவில்லை. URL கொடுத்தால் உதவியாக இருக்கும்.

  6. சாரதா says:

    இதோ
    ‘மக்கள் கலைஞர்’ ஜெய்சங்கர்:

    http://www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=13518

    ‘கலை நிலவு’ ரவிச்சந்திரன்:

    http://www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=13618

  7. RV says:

    சாரதா,

    பார்த்தேன், மிக அருமையான திரிகள். அவ்வப்போது அங்கிருந்து கொஞ்சம் இங்கே எடுத்துப் போடலாம் என்றிருக்கிறேன். 🙂 (மாட்னீங்களா?)

  8. gk says:

    dear rv

    like u am also interested in the movies released between 1965 to 1980. If possible please write about durai’s “oru veedu iru ulagam” different thought about remarriage. will u please help how to type tamil words

  9. பிங்குபாக்: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் « சிலிகான் ஷெல்ஃப்

  10. பிங்குபாக்: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் | சிலிகான் ஷெல்ஃப்

RV -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி