1952-இல் 27 படங்கள் வந்திருக்கின்றன. நான் பார்த்தது பராசக்தி ஒன்றுதான். அதனால் எதை பற்றி எழுதுவது என்று பிரச்சினையே இல்லை. வேறு படங்களை பார்த்திருந்தாலும் பராசக்தியைத்தான் இந்த வருஷத்தின் சிறந்த படம் என்று தேர்ந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.
சிவாஜி புயல் மாதிரி உள்ளே நுழைந்திருக்கிறார். பராசக்திக்கு பிறகு அவருக்கு இறங்குமுகம் வர 200 படங்களும், 25 வருஷங்களும் பிடித்திருக்கின்றன. அவர் நடித்த பணம் படமும் இந்த வருஷம்தான் வந்திருக்கிறது.
எம்ஜிஆர் இந்த ஆண்டு ராஜா ராணி படங்களிலிருந்து நகர்ந்து வர முயற்சி செய்திருக்கிறார் போல. என் தங்கை, குமாரி போன்ற கேள்விப்படாத சமூக படங்களில் நடித்திருக்கிறார்.
மற்ற படங்களை பற்றி அதிகம் தெரியவில்லை. அதனால் ஏ.வி.எம். செட்டியார் பராசக்தி பற்றி எழுதியதை கீழே கொடுத்திருக்கிறேன். ஓவர் டு செட்டியார்.
கே.என். ரத்தினம் என்ற நடிகர் கடலூரில் பாய்ஸ் கம்பெனி வைத்து நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். பாவலர் பி.பாலசுந்தரம் என்பவரின் கதையை நாடகமாக நடித்துக் கொண்டிருந்தார்கள்.
“அந்த டிராமாவைப் பார்க்கலாம், வாருங்கள்” என்று பெருமாள் என்னைக் கடலூருக்குக் கூட்டிச் சென்றார். டிராமாவைப் பார்த்தோம். மிக நன்றாக இருந்தது. அந்த நாடகம்தான் பராசக்தி. அந்தக் கதையையே வாங்கித் தரும்படி பெருமாள் கூறினார். பாவலர் பாலசுந்தரத்தை வரவழைத்துப் பேசி, பெருமாளுக்காக அந்தக் கதையை நானே வாங்கினேன்.
அந்தப் படத்தைப் பெருமாளுடன் கூட்டாகச் சேர்ந்து நாங்கள் எடுத்தோம். ஏறக்குறைய ‘ஓர் இரவு’ பாதிக்கு மேல் எடுத்துக் கொண்டிருக்கும்போதே துவங்கிவிட்டோம். ஓர் இரவை நீலகண்டன் சொந்த டைரக்ஷனில் செய்து கொண் டிருந்தார். எம்.வி. ராமன் இந்தி பகார் டைரக்ட் செய்து வந்தார். அப்பொழுதெல்லாம் ஒரு டைரக்டர் இரண்டு படங்களை டைரக்ட் செய்வது என்பது பழக்கத்திற்கு வரவில்லை. ஆகவே, எங்களுடைய புதிய படத்திற்கு யாரை டைரக்டராகப் போடலாம் என்று யோசித்து வந்தோம். கிருஷ்ணன்பஞ்சு என்பவர்கள் நியூட்டோனில் அப்போது படம் எடுத்து வந்தார்கள். திரு அண்ணாதுரை அவர்களுடைய கதையான நல்லதம்பி படம் முடிந்த சமயம். அவர்களைக் கூப்பிட்டு எங்களுக்காக இந்தக் கதையை டைரக்ட் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இருவரும் ஒப்புக் கொண்டார்கள். முதன் முதலாகக் கிருஷ்ணன்-பஞ்சு இருவரும் எங்கள் ஸ்டூடியோவிற்குள் நுழைந்தது இந்தச் சந்தர்ப்பத்தில்தான். அது முதல் ஏறக்குறைய எங்கள் ஸ்தாபனத்துடன் ஒன்றியிருக்கிறார்கள்.
பாவலரிடமிருந்து கதை கிடைத்துவிட்டது. அதற்குரிய வசனங்களை நமது மதிப்பிற்குரிய, தற்போது முதல்வராக விளங்கும் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியை விட்டு எழுதச் சொல்லலாம் என்று பெருமாள் விருப்பம் தெரிவித்தார்.
கலைஞரிடம் கேட்டோம். அவரும் ஒப்புக் கொண்டார்.
டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புதிய பாணியில் வசனங்களைத் தீட்டியிருந்தார்.
அவற்றைக் கணேசன் உச்சரித்த முறை நன்றாக இருந்தது. சொல்லப் போனால் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா ஓர் இரவு படத்திற்கு எழுதியிருந்ததை விடக் கலைஞரின் வசனங்கள் சிறப்பாக இருந்தன.
ஏறக்குறைய ஓர் இரவு கதைக்கு அண்ணாதுரை இங்கே வந்து வசனம் எழுதிக் கொடுத்துக்கொண்டிருந்த சில நாட்களுக்குள்ளேயே கலைஞரும் பராசக்திக்கு வசனம் எழுதித் தர எங்கள் ஸ்டூடியோவுக்கு வந்து போய்க்கொண்டிருந்தார்.
வசனம் எழுதத் துவங்கி விட்டார் கலைஞர்; நடிகர்கள் தேர்வு நடைபெற வேண்டுமே?
அப்போது திரு.கே.ஆர். ராமசாமி வேலைக்காரி, ஓர் இரவு நாடகங்கள் மூலமாக அதிகம் பெயர் பெற்றவராக இருந்தார். ஒரு ஸ்டார் நடிகராகவே விளங்கிவந்தார். எங்களுடைய ஓர் இரவு படத்திலும் நடித்துக்கொண்டிருந்தார்.
பராசக்தியிலும் கே.ஆர்.ராம சாமியையே நடிக்கவைக்கலாம் என்று கூறினேன். ஆனால் என்னுடைய பாகஸ்தரான பெருமாள், “ஒரு புது நடிகரைப் போட்டு எடுக்க வேண்டும். வேலூரில் சக்தி நாடக சபை நடத்தும் சில நாடகங்களைப் பார்த்தேன். ‘நூர்ஜஹான்’ நாடகத்தில் பெண் வேஷம் போட்டுக் கொண்டு கணேசன் என்கிற பையன் எவ்வளவு சிறப்பாக நடிக்கிறான் தெரியுமா? அந்தப் பையனைப் போட்டு இந்தப் பராசக்தியை எடுக்க வேண்டும். நீங்கள் வேண்டுமானால் வேலூருக்குப் போய் ஒருமுறை அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு அப்புறம் சொல்லுங்கள்!” என்றார்.
வேலூரிலிருந்து சக்தி நாடக சபா தங்கள் முகாமைத் திண்டுக்கல்லுக்கு மாற்றிக்கொண்டு விட்டதால் நான் திண்டுக்கல் போய், கணேசன் என்கிற இளைஞனின் நடிப்பைப் பார்த்துவிட்டு வந்தேன்.
“டிராமாவில் நடிப்பது வேறு. இதுவரை கணேசன் எந்த சினிமாவிலும் நடித்ததில்லையே? முதன் முறையாக மெயின் ரோலில் இந்தப் பையனை நடிக்கச் சொல்லி ஃபெயிலியர் ஆகிவிட்டால் என்ன செய்வது? இதுவோ என்னுடன் நீங்கள் கூட்டாகச் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். ரிஸ்க் வேண்டாம்,” என்று சொன்னேன்.
“இல்லை, இல்லை, கணேசனையே நடிக்கச் சொல்லுவோம். பிற்காலத்தில் மிகச் சிறந்த நடிகனாக வருவான் என்றே தோன்றுகிறது. நீங்களே பாருங்கள்,” என்று பெருமாள் சொல்லிவிட்டார். சிறந்த நடிகராக இருந்தும் கணேச னுக்குச் சினிமாவின் போக்கு புது அனுபவமாக இருந்தபடியால் சரியாக வரவில்லை என்று எனக்குத் தோன்றியது. அப்போது கணேசன் மிக ஒல்லியாக இருப்பார். யாருக்குமே ஒரு காரியத்தைச் செய்வதில் ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டால் அதைச் செய்து முடிக்கும் வழியே வேறுதான். தன்னம்பிக்கை வருவதற்கு முன்னால் செய்யும் காரியங்கள் நிச்சயம் நன்றாக அமையாது. ஆரம்பத்தில் கணேசனுக்குத் தன் நடிப்பிலேயே தன்னம்பிக்கை வரவில்லை. போதாக் குறைக்கு எங்களுக்கும் அவருடைய நடிப்பில் நம்பிக்கை இல்லையா? ஆகவே அவர் நடிப்பு எங்களுக்கு அவ்வளவு திருப்தியாக இல்லை.
2000, 3000 அடிகள் வரை எடுத்தாகிவிட்டது. அப்போது நான் மீண்டும் பெருமாளிடம், “விஷப் பரீட்சை வேண்டாம். கே.ஆர்.ராமசாமிக்குப் பெயர் அதிகமாக உள்ளது. அவரையே போட்டு எடுத்து விடலாம்” என்று சொன்னேன்.
பெருமாள் ஒரே பிடிவாதமாக, “இல்லை, கணேசனைப் போட்டுத்தான் எடுக்கவேண்டும். பின்னாடி நன்றாக வரும் பாருங்கள்” என்று கூறிவிட்டார்.படத்தை எடுத்துக்கொண்டு போனோம். ஏறக்குறைய 10,000 அடிகள் வரை சென்று விட்டோம். பத்தாயிரம் அடி என்பது எடிட் செய்யபட்ட லெங்க்த். அதாவது முக்கால் படம். வர வர முதலில் இருந்ததை விடக் கணேசனுடைய நடிப்பு சிறப்பாக வளர்ந்து, படம் முடிவதற்குள் எங்கள் எல்லாருக்குமே மிகவும் திருப்தியாக அமைந்துவிட்டது. பூராப் படம் முடிந்த பிறகு ஆரம்பத்தில் முதலில் எடுத்த எந்தக் காட்சிகளில் அவர் அதிகத் தன்னம்பிக்கையோடு நடிக்கவில்லை என்று எங்களுக்குத் தோன்றியதோ அவற்றை – ஏறக்குறைய 6000, 7000 அடிகளை திரும்பவும் செட்டுக்களைப் போட்டு இரவு பகலாகத் தொடர்ந்தாற்போல் எங்களுடைய ஸ்டுடியோவின் எல்லா ஃப்ளோர்களிலும், எடுத்தோம். மேற்கொண்டு வெளியில் எடுக்க வேண்டிய அவுட்டோர் காட்சிகளையும் ஒரே மூச்சில் சுமார் 15,20 நாட்களில் எடுத்து முடித்தோம்.
இந்தப் படத்திற்குப் பாடல்கள் எழுதியவர் உடுமலை நாராயண கவி. ‘காக்காய் இனம் தன் இனத்தை ஒற்றுமையாகக் கரைந்து அழைத்துச் சேர்ந்து சாப்பிடுகிறது. அதைக் கூட மனிதர்களாகிய நாம் செய்வதில்லை’ என்கிற அற்புதமான கருத்து அமைந்த ‘கா..கா…கா…’ என்று பாட்டை எழுதினார். இந்தப் படத்தின் மூலம் அந்தப் பாட்டு பிரபலமாகியது.’பராசக்தி’ கதை தன் தங்கைக்காக ஓர் அண்ணன் தியாகம் செய்வதைச் சொல்கிறது. தங்கைக்குச் சமூகத்தினர் இழைக்கும் தீங்குகளைக் களையும் முயற்சியில் வெறி பிடித்து, ஆஷாடபூதியாக இருக்கும் பக்தன் ஒருவனைத் தண்டிக்கும்படியான கதையாக இருந்ததால் ஜனங்களுக்கும் மிகவும் பிடித்துவிட்டது.
படம் மிகவும் அருமையாக அமைந்துவிட்டது. டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புதிய பாணியில் வசனங்களைத் தீட்டியிருந்தார். அவற்றைக் கணேசன் உச்சரித்த முறை நன்றாக இருந்தது. சொல்லப் போனால் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா ஓர் இரவு படத்திற்கு எழுதியிருந்ததை விடக் கலைஞரின் வசனங்கள் சிறப்பாக இருந்தன என்று நாங்கள் நினைத்தோம். பொது மக்களும் அவ்வாறே அபிப்பிராயப்பட்டனர்.
கதையின் போக்கு, கலைஞரின் வசனம், கணேசனின் நடிப்பு மூன்றுமாகச் சேர்ந்து பராசக்தி படம் முன்பு நாங்கள் எடுத்த படங்களைக் கூட மிஞ்சும்படி – எங்களுக்கு மகத்தான வெற்றியை அளித்தது. பராசக்தி வெளியானவுடன் ஏகப்பட்ட அபிப்பிராய விரோதங்கள் உண்டாயின. அந்தப் படம் தெய்வத்தை அவமதிப்பதாகச் சிலர் நினைத்து விட்டார்கள். காளியிடம் வந்து சிலர் முறையிடுவதையும், பூசாரியைக் கொலை செய்வதைப் போல உள்ள காட்சிகளினாலும், இந்தப் படத்திற்கு ஒரு எக்ஸ்ட்ரா பப்ளிசிடி கிடைத்துவிட்டது. படத்தை ‘பான்’ செய்யப் போகிறார்கள் என்ற பேச்சுக் கிளம்பவே இன்னும் அதிகமாக ஓடி வசூல் குவிய ஆரம்பித்தது.
இந்தச் சந்தர்ப்பத்தில் வாசகர்களாகிய உங்களுடன் மனம் திறந்து சில கருத்துக்களைச் சொல்ல விரும்புகிறேன். நம் நாட்டில் – ஏன், நாட்டைவிட இன்னும் ஒருபடி அதிகமாக உண்மையாக என் மனத்தில் உள்ளதைச் சொல்ல வேண்டுமானால் உலகத்திலேயே ஒரு சிறந்த நடிகர் சிவாஜி கணேசன் என்பதுதான் என் தாழ்மையான அபிப்பிராயம். இதில் சிலருக்குக் கருத்து வேற்றுமைகள் கூட இருக்கலாம்.
என் வரையில் ‘நம் தமிழ் நாட்டின் அதிருஷ்டம் சிவாஜி கணேசன் தமிழ் நாட்டில் பிறந்திருக்கிறார். அவருடைய துரதிருஷ்டம் அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை.’ வெளி நாட்டிலிருந்து கலை உலக நண்பர்கள் வரும்போது சிவாஜியை நான் இப்படித்தான் அறிமுகப் படுத்துவது வழக்கம்.
சிவாஜி தம் ஐந்தாவது வயதிலிருந்தே டிராமாக் கம்பெனியில் ‘ஆக்ட்’ பண்ண ஆரம்பித்து விட்டவர். சக்தி நாடக சபை போன்ற சிறந்த நாடகக் கம்பெனியில் நடித்து அனுபவம் பெற்றார். சக்தி கிருஷ்ணசாமி, எஸ்.டி. சுந்தரம் போன்ற வசன கர்த்தாக்களிடம் பயிற்சிபெற்ற அனுபவமும் சிவாஜிக்கு இருக்கிறது. ‘தன் நடிப்புக்கு எல்லையே இல்லை’, என்கிற உணர்வோடு ஒவ்வொரு தடவையும் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து ஒன்றி நடிக்கிறார்.
பராசக்தி படத்தில் நாங்கள் அவரைப் போட்டிருக்காவிட்டாலும் கூட அவர் சிறந்த நடிகராக வந்திருப்பார். கூட இன்னும் ஓர் ஐந்தாறு வருஷம் ஆகியிருக்கும் – அவ்வளவுதான்.
(நன்றி: ஏ.வி.எம். எழுதிய “எனது வாழ்க்கை அனுபவங்கள்’ என்ற நூல். வானதி வெளியீடு.)
அண்மைய பின்னூட்டங்கள்