சிவாஜி பக்கம்


தாய்ப் பக்கம்: ஆளுமைகள்

சிவாஜி கணேசன் பற்றிய பதிவுகள்
      சிவாஜி சகாப்தம் – 1952-இலிருந்து 82 வரை
      திரும்பிப் பார் திரைப்படத்தில் சிவாஜியின் நடிப்பு பற்றி எம்ஜிஆர்
      சிவாஜி பற்றி வைரமுத்து எழுதிய கவிதை
      சிவாஜி பற்றி கண்ணதாசன் எழுதிய கவிதை
      சிவாஜி, எம்ஜிஆர், பாரத் விருது

சிவாஜி நடித்த திரைப்படங்கள் பற்றி விமர்சனங்கள், குறிப்புகள்:
அன்பே ஆருயிரே (Anbe Aaruyire)
அன்பை தேடி (Anbai thedi), அன்பை தேடி பற்றி சாரதா
அந்த நாள் (Andha Naal), அந்த நாள் – சாரதாவின் அறிமுகம், அந்த நாள் ரிலீஸ் ஆனபோது
அன்னையின் ஆணை விகடன் விமர்சனம் (Annaiyin Aanai)
சிரஞ்சீவி (Chiranjeevi)
தெய்வ மகன் (Dheiva Magan) – விகடன் விமர்சனம்
டாக்டர் சிவா (Doctor Siva)
இமயம் (Imayam)
இரும்புத் திரை (Irumbuth Thirai)
கப்பலோட்டிய தமிழன் (Kappalottiya Thamizhan)
குறவஞ்சி (Kuravanji)
மனோகரா(Manohara) , விகடன் விமர்சனம்
மோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai) , ராண்டார்கை குறிப்புகள்
நான் பெற்ற செல்வம் (Naan Petra Selvam)
நவராத்திரி (Navaraatthiri)
ஊட்டி வரை உறவு (Ooty Varai Uravu)
பராசக்தி (Parasakthi), பராசக்தி – நீதிமன்ற வசனம்
ராஜபார்ட் ரங்கதுரை (Rajapart Rangadurai)
சபாஷ் மீனா (Sabash Meena)சந்திரபாபு சபாஷ் மீனா படத்துக்கு புக் ஆன கதை
சுமதி என் சுந்தரி (Sumathi En Sundari)
தங்கப் பதக்கம் (Thangap Pathakkam), விகடன் விமர்சனம்
தில்லானா மோகனாம்பாள் (Thillana Mohanambal), தில்லானா மோகனாம்பாள் விகடன் விமர்சனம், நாதஸ்வரம் வாசித்த எம்.பி.என். சகோதரர்கள்
திரிசூலம் (Thirisoolam)
திரும்பிப் பார் (Thirumbip Paar) , திரும்பி பார் சிவாஜி பற்றி எம்ஜிஆர்

வீரபாண்டிய கட்டபொம்மன் (Veerapandia Kattabomman), விகடன் விமர்சனம்
வியட்நாம் வீடு (Vietnam Veedu), விகடன் விமர்சனம், சாரதா விமர்சனம்

29 Responses to சிவாஜி பக்கம்

  1. விமல் says:

    டி.எம்.எஸ் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? – சிவாஜி
    ————————————————————————–
    ”வியட்நாம் வீடு ‘ சுந்தரத்தின் ‘கௌரவம்’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் ‘ கண்ணா நீயும் நானுமா? என்ற பாடலைப் பாட வந்த போது,

    படத்தின் கதை,அந்தப் பாடலைப் பாடப் போகும் கதா பாத்திரத்தின் குண நலன்கள் ,மற்றும் மனோ பாவம், ஆகியவற்றைப் பற்றி நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தக் கதா பாத்திரமாகவே தம்மையும் மாற்றிக் கொண்டு,

    இன்னும் சொல்லப் போனால் கூடு விட்டுக் கூடு பாய்வது போல அந்தக் கதா பாத்திரத்தின் உடலில் புகுந்து கொண்டு உணர்வு பூர்வமாகப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ்.

    அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக படப் பிடிப்புத் தளத்துக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.

    ‘இன்னும் ஒரு தடவை போடுங்கள்…இன்னும் ஒரு தடவை’…என்று…பல தடவை…திரும்பத் திரும்ப அந்தப் பாடலை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் சிவாஜி.

    இது அங்கிருந்த பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது!

    காரணம், பொதுவாக சிவாஜி ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒரு தடவை அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு தடவை தான் அந்தப் பாடலின் ஒலி நாடாவை ஒலிக்க விடச் சொல்லிக் கேட்பது வழக்கம்.

    ஆனால் இந்தப் பாடலை அவர் பத்துத் தடவைக்கு மேலாக கண்களை மூடிக் கொண்டே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தார்.

    இதை நீண்ட நேரமாகவே கவனித்துக் கொண்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம் நடிகர் திலகதின் அருகே சென்று அவரிடம் மிகவும் பணிவான குரலில் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.

    ‘ஒரு தடவை, அல்லது இரு தடவை பாடலைக் கேட்டு விட்டு உடனே நடிக்க வந்து விடும் நீங்கள் இந்தக் குறிப்பிட்ட பாடலை மட்டும் பத்து தடவைக்கு மேல் திரும்பத் திரும்பக் கேட்பதன் ரகசியம் என்ன?’…

    ‘சுந்தரம்!…டி.எம்.எஸ் அவர்கள் இந்தப் பாடலை, மிகுந்த உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடி இருக்கின்றார்.

    பல்லவியில்…ஒரு விதமான பாவம்..ஆக்ரோஷம்…அடுத்த சரணத்தில்..இன்னொரு விதமான..தொனி.மற்ற சரணத்தில்…இன்னொரு பரிமாணம்…என குரலால் அற்புதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் டி.எம்.எஸ்.

    ஒரே வரியையே இரண்டு இடத்தில் ‘ரிபீட்’ பண்ணும் போது இரண்டு விதமான தொனிகளில் பாடுகிறார்.

    உதாரணமாக ‘ நீயும் நானுமா?’ என்ற வரியை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் ஒவ்வொரு பாவத்தில் அர்த்தத்தில் உச்சரிக்கிறார்.

    இப்படியெல்லாம்..அற்புதமாக அவர் பாடிக் கொடுத்த பாட்டை கவனமாக நான் நடித்துக் கொடுகா விட்டால் இதைப் பாடிய டி.எம்.எஸ் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்றாராம் சிவாஜி.

    நடிகர் திலகத்தின் செய் தொழில் நேர்த்திக்கும்,ஆத்மார்த்தமான தொழில் ஈடுபாட்டுக்கும் ,தன்னடக்கத்திற்கும் ,சக கலைஞர்களின் திறமைகளைப் பகிரங்கமாக மதிக்கும் பரந்த தன்மைக்கும் ஒரு சிலிர்க்க வைக்கும் எடுத்துக் காட்டு.

  2. விமல் says:

    சிவாஜிக்காக முதன் முதலில் எஸ்.பி.பி பாட வந்த போது…
    ——————————————————————————–

    நடிகர் திலகத்திற்காக முதன் முதலாக

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்த போது …

    எனக்காக நீங்கள் குரலை மாற்றிப் பாட வேண்டாம்..

    உங்கள் பாணியிலேயே பாடுங்கள்…

    நடிக்கும் போது உங்கள் குரலுக்கு இசைவாக எனது நடிப்பை அமைத்துக்கொள்கிறேன் என்றாராம் சிவாஜி.

    சிவாஜி சொன்னபடி எஸ்.பி.பி. தமக்கே இயல்பான ‘நளினம் கொஞ்சும்’ நந்தவனக் குரலில் அந்தப் பாடலை மிக சுதந்திர உணர்வோடு பாடினார்.

    பாடல் பிரமாதமாக பதிவானது.

    ஆனால் பாடலைக் கேட்ட போது,

    டி.எம்.எஸ்ஸின் குரலைப் போல இந்த புதிய குரல்… அதுவும் மென்மையான குரல் நடிகர் திலகத்தின் நடிப்போடு இசையுமா?

    என்று சிலர் சந்தேகப் படவும் செய்தனர்.

    ஆனால் அந்தப் பாடல் காட்சி படமாக்கப் பட்ட போது…

    எஸ்.பி.பியின் நளினமான குரலுக்கு ஏற்ப தமது நடையையும் பாவனைகளையும் அசைவுகளையும் குழையக் குழைய வெளிப்படுத்தினார் நடிகர் திலகம்.

    சந்தேகப் பட்டவர்கள் பிரமித்துப் போனார்கள்.

    பிரமிப்பின் மறு பெயர் தானே நடிகர் திலகம் !

    அந்தப் பாடல் …’சுமதி என் சுந்தரி’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசை வார்ப்பில் மலர்ந்த’ பொட்டு வைத்த முகமோ’.

    காலப் புயலில் கலைந்து போகாத பாட்டு தீபங்களில் இன்றும் இளமை ஊஞ்சலாடும் இந்தப் பாடலும்…
    பாடல் காட்சியும் ஒரு வசந்த வரலாறு.

    • Raja says:

      உண்மை தான்…சிவாஜியின் நடை அழகை ரசிப்பவர்கள் இந்த பாடலில் ஒரு புது நடையை பார்க்கலாம்..குனிந்து ஜெயலிதாவின் இடுப்பு அருகில் ஒரு pose கொடுப்பாரே ..அழகு..அத்தனை அழகு

  3. விமல் says:

    ‘செய்வன திருந்தச் செய்’ ….சிவாஜி மாண்பு
    ——————————————————————————-
    நடிகர் திலகம் நடிக்கும் அந்தப் படத்தில் அவர் பாடுவதாக உணர்வு பூர்வமான பாடல் ஒன்று.

    மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வனாதன் அவர்கள் மிகவும் வித்தியாசமாக அந்தப் பாடலுக்கான மெட்டை உருவாக்கினார்.

    டி.எம்.எஸ் பாட வேண்டிய பாடல் அது என்பதால்…அவரிடம் அந்தப் பாடலைப் பாடிக் காட்டினார் மெல்லிசை மன்னர்.

    மெட்டைக் கேட்டுப் பார்த்த போது டி.எம்.எஸ் முகத்தில் திருப்தியின் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

    நான் வழக்கமாகப் பாடும் பாடல்களில் இருந்து இந்தப் பாடலின் மெட்டமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

    அது மட்டுமன்றி….இந்த மெட்டு என் பாணிக்கு ஒத்து வரக் கூடிய விதத்திலும் இல்லை….எனவே…மன்னிக்க வேண்டும் ..இந்தப் பாடலை என்னால் பாட முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் டி.எம்.எஸ்.

    ‘நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது…இது கொஞ்சம் வித்தியாசமான மெட்டுத் தான்…என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்…

    ஆனால்…உங்களுக்கு இருக்கும் அபாரமான இசைப் புலமைக்கும்…குரல் வளத்திற்கும் இந்தப் பாடலை உங்களால் வெகு சிறப்பாகப் பாட முடியும்…

    எனவே நீங்கள் மறுக்காமல் இந்தப் பாடலைப் பாடிக் கொடுக்க வேண்டும் என்று டி.எம்.எஸ்ஸிடம் வேன்டுகோள் விடுத்தார் எம்.எஸ்.வி.

    அப்படியா?..இந்தப் பாடலோடு என்னை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டு இருக்கிறீர்களோ?..என்று மறுபடியும் கொஞ்சம் கோபமாகவே கேட்டார் டி.எம்.எஸ்.

    ஆனால்…எம்.எஸ்.வி…தமது முடிவில் இருந்து பின் வாங்குவதாகத் தெரியவில்லை.

    ‘நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்..இந்தப் பாடலும்..உங்கள் பாடல்களில்…மற்றுமொரு தனித்துவம் பெற்ற பாடலாக மிளிரத் தான் போகிறது…’என்று சொல்லிய எம்.எஸ் வி…டி.எம்.எஸ்ஸை சமாதானம் செய்து அந்தப் பாடலைப் பாட வைத்தார்.

    பாடல் காட்சியில் நடிக்க வந்த நடிகர் திலகத்திடம் அந்தப் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.

    பாடலைக் கேட்ட நடிகர் திலகம்…’உடனடியாக படப் பிடிப்பை ரத்து செய்யுங்கள்.இன்னொரு தினம் இந்தப் பாடல் காட்சிக்கான படப் பிடிப்பை வைத்துக் கொள்ளலாம்…’என்றார்.

    அவரிடம் காரணம் கேட்ட போது அவர் சொன்னார்.

    ‘மிக மிக வித்தியாசமாக இந்தப் பாடலின் மெட்டை உருவாக்கி இருக்கிறார் எம்.எஸ்.வி அவர்கள்.

    டி.எம்.எஸ் மிகவும் அபாரமாக…இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்து இருக்கிறார்.

    இந்தப் பாடலை ஒரு சவாலான பாடலாக நான் கருதுகிறேன்.

    டி.எம்.எஸ்ஸும், எம்.எஸ்.வியும் உயிரைக் கொடுத்து உழைத்த இந்தப் பாடலில் எனது நடிப்பும் உயிரோட்டமாக அமையுமாறு நான் பார்த்துக் கொள்ள வேண்டாமா? அதற்கு எனக்கு அவகாசம் வேண்டும்…அதனால் தான் படப் பிடிப்பை ரத்து செய்யச் சொன்னேன்…என்றாராம் சிவாஜி.

    சொன்னது போலவே…அந்தப் பாடலை பல முறை கேட்டுப் பார்த்து…அந்த மெட்டையும்…டி.எம்.எஸ்ஸின் குரலில் உள்ள பாவங்களையும் நன்கு உள்வாங்கிக் கொண்ட நடிகர் திலகம்…மிக வித்தியாசமாக அந்தப் பாடல் காட்சியை நடித்துக் கொடுத்தார்.

    அந்தப் பாடல் எது என்று கேட்கிறீர்களா?

    ‘சாந்தி ‘ திரைப் படத்தில் இடம் பெற்ற ‘ யார் அந்த நிலவு?…ஏன் இந்தக் கனவு?….

    அந்தக் காலத்துக் கலைஞரகளின் ஆழ்ந்த தொழில் ஈடுபாட்டுக்கும்…..’செய்வன திருந்தச் செய்’ என்கின்ற தொழில் நேர்த்தியை மதிக்கின்ற மாண்புக்கும்…இந்த சம்பவம் ஒரு நல்ல எடுத்துக் காட்டு.

    • சாரதா says:

      டியர் விமல்….

      நடிகர்திலகத்தின் தொழில் நேர்மை பற்றிய முத்தான மூன்று தகவல்களை, கொத்தாக அளித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.

      இன்னும் இதுபோன்ற அபூர்வ தகவல்களை எல்லோரும் அறியத் தாருங்கள்.

      • விமல் says:

        நன்றி சாரதா.

        RV…, முடிந்தால், மேற்கண்ட இந்த மூன்று தகவல்களையும் ஒரு தனி பதிவாக போடுங்கள்.

        அப்போதுதான் எல்லோரும் இதை எளிதில் படிக்க முடியும்.

        நன்றி.

  4. விமல் says:

    சிவாஜி – 25 (நன்றி : ஆனந்த விகடன்)
    __________________________________________________________________________________

    சிவாஜி கணேசன்… இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்…

    சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், ‘இனி இவர்தான் சிவாஜி!’ என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

    நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

    1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த ‘பராசக்தி’யில் ‘குணசேகரன்’ பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

    சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

    கலைஞரை ‘மூனா கானா’, எம்.ஜி.ஆரை ‘அண்ணன்’, ஜெயலலிதாவை ‘அம்மு’ என்றுதான் அழைப்பார்!

    வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

    தன்னை ‘பராசக்தி’ படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!

    திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!

    தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் ‘வணங்காமுடி!’

    சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. ‘மனோகரா’ நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!

    தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!

    சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

    ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!

    விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!

    சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. ‘பராசக்தி’ படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!

    ‘ரத்தத் திலகம்’ படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி – சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு – ஒரு துப்பாக்கி!

    படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!

    சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

    விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!

    தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

    ‘ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி’ என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

    அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

    பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, ‘தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்’ என்று சிவாஜியிடம் சொன்னபோது, ‘டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்’ என்றாராம் தன்னடக்கமாக!

    பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். ‘அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்’ – என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!

    கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!

  5. விமல் says:

    *** RV…, முடிந்தால், இதை ஒரு தனி பதிவாக போடுங்கள். ****

    சிவாஜி தி.மு.கழகத்தில் இருந்து பிரிந்து காங்கிரஸில் சேர்ந்த வரலாறு
    ________________________________________________________________

    இதை பற்றி சிவாஜி சொன்னது :

    1955-ம் ஆண்டு “காவேரி”, “முதல் தேதி”, “உலகம் பலவிதம்”, “மங்கையர் திலகம்”, “கோடீஸ்வரன்”, “கள்வனின் காதலி” ஆகிய 6 படங்களில் சிவாஜி நடித்தார்.

    இவற்றில் “மங்கையர் திலகம்” மிகச்சிறந்த படமாக அமைந்தது. சிவாஜிக்கு சித்தியாக பத்மினி நடித்தார். இருவரும் நடிப்பில் முத்திரை பதித்தனர். குறிப்பாக பத்மினி, தான் சிறந்த குணச்சித்திர நடிகை என்பதை நிரூபித்தார்.

    “கள்வனின் காதலி” கல்கி எழுதிய பிரபல நாவல். இதில் சிவாஜியின் ஜோடியாக பானுமதி நடித்தார். இருவரும் இணைந்து நடித்த முதல் படம் வெற்றி படம். மாறுபட்ட வேடங்களில் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்று சிவாஜி நிரூபித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் இது.

    இந்த சமயத்தில், சிவாஜிகணேசன் திருப்பதி சென்றார். அது, தி.மு.கழகத்தில் புயலை உண்டாக்கியது. திருப்பதிக்குச் சென்றது ஏன் என்பதை பின்னர் சிவாஜி விளக்கினார். அவர் கூறியதாவது : –

    “நான் திராவிடக் கழகத்திலோ, தி.மு.கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி உறுப்பினராக இருந்தது இல்லை. பெரியாருடைய கொள்கைகளையும், அண்ணாவின் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டேன். ஆகையால் அதைப்பிரசாரம் செய்தேன். அந்தக் கொள்கைகளை நான் ஒத்துக்கொண்டேனே தவிர, கட்சி உறுப்பினராக இருந்தது இல்லை.

    எனது குடும்பம் தேச பக்தியுள்ள குடும்பம். நாங்கள் எல்லாம் தேசியவாதிகள். அதோடு நாங்கள் இந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தினர். மேலும், குடும்பத்தில் எல்லோரும் பக்திமிக்கவர்கள். இவை அனைத்தையும் நான் உதறித் தள்ளிவிடவில்லை. சில பகுத்தறிவுக் கொள்கைகள் எனக்கு சரி என்று பட்டது. அந்தக் கருத்துக்களை படங்கள் மூலம் சொன்னேன். அவ்வளவுதான்.

    1956-ல் ஒரு புயல் வந்து, பல இடங்களில் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. “புயல் நிவாரணத்துக்காக எல்லோரும் பணம் வசூலித்துக் கொடுங்கள்” என்று அறிஞர் அண்ணா கூறினார்கள். அப்போது நானும் சென்று வசூல் செய்தேன். விருதுநகரில், தெருவில் சென்று துண்டை விரித்து, பராசக்தி வசனம் பேசி, பணம் வசூல் செய்தேன். நிறைய பணம் சேர்ந்தது. அதைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, படப்பிடிப்புக்காக நான் சேலம் சென்றுவிட்டேன். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

    அப்போது, அதிக அளவில் புயல் நிவாரண நிதி வசூலித்தவர்களுக்கு அண்ணா ஒரு பாராட்டு விழா வைத்தார். சேலத்தில் இருந்த நான், சென்னையில் இருந்த என் தாயாருக்கு டெலிபோன் செய்து, “இன்று விழா நடக்கிறதே! யாராவது எனக்கு அழைப்பு கொடுத்தார்களா?” என்று கேட்டேன். “இல்லை” என்று என் தாயார் கூறினார்கள்.

    உடனே நான் சேலத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 4 மணிக்கெல்லாம் சென்னை வந்துவிட்டேன். விழாவிற்காக என்னை கூப்பிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன். யாரும் என்னைக் கூப்பிடவரவில்லை. மாலை 6 மணி அளவில் தொடங்கிய பாராட்டுக் கூட்டத்தில் முதன் முதலாக எம்.ஜி.ஆரைக் கூட்டிச்சென்று, மேடையில் ஏற்றி கவுரவித்தார்கள். அதிகமாக நிதி வசூலித்தவன் நான்தான். ஆனால், எம்.ஜி.ஆர். அவர்களை அக்கூட்டத்தில் மேடை ஏற்றிப் பாராட்டுகிறார்கள்.

    “எங்கே கணேசன், வரவில்லையா?” என்று அண்ணா அவர்கள் கேட்டிருக்கிறார்கள். “இல்லை; கணேசன், `வரமுடியவில்லை’ என்று சொல்லிவிட்டார் என்று அண்ணாவிடம் சிலர் கூறியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி, என்னை பாதித்தது. பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டேன்.

    அண்ணன் எம்.ஜி.ஆருக்கும், கட்சிக்கும் அப்போது சம்பந்தமே கிடையாது. சின்னப்பிள்ளையில் இருந்து அந்த இயக்கத்தில் ஒட்டிக்கொண்டிருந்தவன் நான். என்னை ஒதுக்கி வைப்பதற்காகத்தான் இவ்வாறு செய்தார்கள். இதுதான் உண்மை. நான் பல நாட்கள் வருத்தமாக இருந்தேன். ஒரு நாள் என் நெருங்கிய நண்பரான இயக்குனர் பீம்சிங் வந்தார். “சிவாஜி! ஏன் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறீர்கள். திருப்பதிக்கு போய் வரலாம், வாருங்கள்” என்று அழைத்தார்.

    நான் கோவிலுக்கு அதிகம் போனதில்லை. ஆனால் பீம்சிங் பிடிவாதமாகக் கூப்பிட்டு, திருப்பதிக்கு அழைத்துச் சென்றுவிட்டார். திருப்பதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு “விஸ்வரூப தரிசனம்” என்று ஒரு தரிசனம் உண்டு. அதைப் பார்த்துவிட்டுத் திரும்பினோம். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, “திருப்பதி கணேசா, கோவிந்தா” என்றெல்லாம் எழுதினார்கள்.

    எனக்கு ஒரு புகலிடம் தேவைப்பட்டது. ஒரு வழிகாட்டியைத் தேடினேன். அப்போது எனக்கு ஒருவர் கிடைத்தார். அவர்தான் பெருந்தலைவர் காமராஜர். அவருடன் சேர்ந்தேன். அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டேன்.

    இந்த நிகழ்ச்சியால், எனது திரைப்பட வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. “திருப்பதி கணேசா, கோவிந்தா” என்று சிலர் கேலி செய்த நேரத்தில், திருப்பதி ஏழுமலையான் கண் விழித்துப் பார்த்து அருள் புரிந்துவிட்டார்.

    இதன் பிறகுதான், நான் ஸ்டூடியோவிலேயே 24 மணி நேரமும் தங்கி, மூன்று ஷிப்டாக வேலை செய்தேன். பெற்றோரை, மனைவியை பார்க்கமுடியவில்லை. குழந்தைகளைப் பார்க்கவில்லை. ஸ்டூடியோவுக்கு உள்ளேயே இருந்தேன். நான் நடித்த படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. மக்கள் பாராட்டைப் பெற்று, விருதுகள் வாங்கித் தந்தன.”

  6. Ganpat says:

    கோவிந்தன்,சிவாஜியை மட்டுமா காப்பாற்றியிருக்கிறார்?தமிழ் சினிமா உலகையே
    காப்பாற்றியிருக்கிறார்!திருநீறு இடாத நடிகர் திலகத்தின் முகத்தை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை
    எழுமலையானுக்கு ஒரு கோவிந்தா! கோவிந்தா!!

  7. விமல் says:

    *** RV…, முடிந்தால், இதை ஒரு தனி பதிவாக போடுங்கள். ****

    வி.சி.கணேசன் “சிவாஜி கணேசன்” ஆக மாறிய
    கதை
    ___________________________________________________________

    திராவிட கழகத்தில் இருந்து தி.மு.கழகம் பிரியாத காலக்கட்டம் அது (1946). சென்னையில் ஏழாவது சுய மரியாதை மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில், பெரியாரும், அண்ணாவும் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.

    மாநாட்டில் நடிப்பதற்காக “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற பெயரில் ஒரு நாடகத்தை அண்ணா எழுதியிருந்தார்.

    இந்த நாடகத்தின் கதைச்சுருக்கம் வருமாறு:-

    சிவாஜி பெரிய மாவீரன்.
    சாதாரணக் குடிமகனாக இருந்து பெரிய மன்னனானவன்.
    அந்நியர் ஆட்சியை எதிர்த்தவன்.
    மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியபோதிலும், அவன் மன்னனாக முடி சூட்டிக் கொள்ள பெரிய எதிர்ப்பு கிளம்புகிறது. காரணம், அவன் கீழ் சாதி! இதனால், காசியில் இருந்து காகப்பட்டர் என்ற பெரிய மதத் தலைவரை அழைத்து வந்து, சிவாஜியை சத்திரியனாக மாற்றுகிறார்கள். அதன்பிறகு தான் அவர் சிம்மாசனம் ஏற, இந்துக்கள் சம்மதிக்கிறார்கள்.

    இப்படி செல்லும் இந்த நாடகத்தில், சிவாஜியாக எம்.ஜி.ஆரும், காகப்பட்டர் வேடத்தில் அண்ணாவும், மற்றொரு முக்கிய வேடத்தில் டி.வி.நாராயணசாமியும் நடிப்பது என்று முடிவாகியது.

    இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர். திரைப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். காங்கிரஸ் அனுதாபியாகவும், பக்தராகவும் இருந்தார். என்ன காரணத்தினாலோ, எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தில் நடிக்கவில்லை. நாடகத்துக்குப் பொறுப்பாளராக இருந்த நடிகர் டி.வி.நாராயணசாமி அண்ணாவை சந்தித்து, எம்.ஜி.ஆர். தன்னால் நடிக்க இயலாது என்று கூறிவிட்டதாக தெரிவித்தார்.

    “திராவிட நாடு” அலுவலகத்தில் தங்கியிருந்த சிவாஜி கணேசன், இதற்குள் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியிருந்தார். சிவாஜியின் நடிப்பாற்றல் பற்றி அண்ணாவும் நன்கு அறிந்திருந்தார்.

    எனவே, சிவாஜியை அழைத்து, “கணேசா! என் நாடகத்தில் நீ சிவாஜி வேடத்தில் நடிக்கிறாயா?” என்று கேட்டார்.

    இதைக்கேட்டு சிவாஜிக்கு இன்ப அதிர்ச்சி! தன் காதுகளையே நம்பமுடியவில்லை. “என்ன அண்ணா சொல்கிறீர்கள்? உங்கள் நாடகத்தில் நான் நடிப்பதா? அதுவும் சிவாஜி வேடத்தில்! என்னால் முடியுமா?” என்றார்.

    “நீ முயற்சி செய்து பார், கணேசா! உன்னால் முடியும்” என்றார், அண்ணா.

    மேலும் அவர் எழுதிய 90 பக்க நாடக வசனங்களை சிவாஜியிடம் கொடுத்து, “நான் வீட்டிற்குச் சென்று வருகிறேன். அதற்குள் இதை நீ படித்து வைத்திரு. எப்படிப் பேசுகிறாய் என்று பார்ப்போம்” என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

    அவர் சிவாஜியிடம் வசனத்தை கொடுத்தபோது பகல் பதினோரு மணி இருக்கும். அண்ணா வீட்டிற்கு சென்று, மாலை ஆறு மணியளவில் திரும்பி, அலுவலகத்திற்கு வந்தார். “கணேசா! வசனத்தைப் படித்தாயா?” என்று கேட்டார்.

    சிவாஜி அவரிடம், “அண்ணா! நீங்கள் இப்படி உட்காருங்கள்!” என்று கூறி, அவர் எழுதிக்கொடுத்த வசனங்களைப் பேசி, அதற்குத் தகுந்தாற்போல் நடித்துக் காண்பித்தார்.

    அண்ணா சிவாஜியை கட்டித்தழுவி “கணேசா! நீ இதை ஏழே மணி நேரத்தில் மனப்பாடம் செய்து விட்டாயே! அரிய சாதனை” என்றார். அண்ணா எழுதிய 90 பக்க வசனத்தை குறுகிய காலத்தில் படித்து, நடித்துக் காட்டினார் என்றால் அதற்கு சிவாஜியிடம் இருந்த கலை ஆர்வமும், மனப்பாடம் செய்வதில் அவருக்கு இருந்த ஆற்றலும்தான் காரணம்.

    திராவிட கழக மாநாட்டில், “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” நாடகம் நடந்தது. இந்த நாடகத்தில் சிவாஜியாக சிவாஜி கணேசனும், காகபட்டர் வேடத்தில் அண்ணாவும் நடித்தனர். 3 மணி நேரம் நடந்த நாடகத்தை, கடைசி வரை இருந்து பார்த்தார், பெரியார்.

    “நான் 10 மாநாடுகளில் சொல்லக்கூடிய கருத்துக்களை இந்த ஒரே நாடகத்தில் சொல்லிவிட்டார், அண்ணா” என்று பாராட்டினார். அத்துடன், “யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக நடித்தானே, அவன் யார்?” என்று கேட்டார்.

    சிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, “இந்தப் பையன்தான். பெயர் கணேசன்” என்று அறிமுகம் செய்து வைத்தனர். “சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய்! இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி!” என்று பெரியார் வாழ்த்தினார்.

    பெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை “வி.சி.கணேசன்” என்று அழைக்கப்பட்டவர், அன்று முதல் “சிவாஜி கணேசன்” ஆனார்.

    “என்னுடைய வாழ்க்கையின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்தது சிவாஜி என்ற பெயர்! ஐயாவையும், அண்ணாவையும், அந்த மாநாட்டையும் நான் என்றுமே மறப்பதில்லை. அதற்குப்பிறகுதான் சாதாரண கணேசன், சிவாஜிகணேசன் ஆனேன். `சிவாஜி’ என்ற பெயர், தந்தை பெரியார் அவர்கள் எனக்குப் போட்டபிச்சை” என்று சிவாஜிகணேசன் தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.

  8. சிவாஜியின் நடிப்புக்கு ஏறக்குறைய சரிசமாய் நடித்து வநதவர் திரு.மேஜர் சுந்தர் ராஜன் அவர்கள். ஆனால் ஏனோ மேஜர் அவர்கள் பிரகாசிக்கவில்லை..அவர் ஓரம் கட்டப்பட்டார் என்பது உண்மையானது..

    • சாரதா says:

      ராஜரிஷி,
      சில மறுப்புக்கள்…

      1) சிவாஜியின் நடிப்புக்கு சரிசமமாக மேஜர் நடித்தார் என்பது சரிதானா?. சிவாஜி நடித்த எல்லா ரோல்களிலும் மேஜர் நடித்திருக்க முடியுமா?. ஒண்ணும் வேண்டாம். தெய்வமகனில் ‘காதல் மலர்க்கூட்டம் என்று’ டூயட் பாடலுக்கு ஜெயலலிதாவுடன், மேஜரை சற்று கற்பனை செய்து பாருங்கள். மேஜர் அற்புதமான நடிகர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எல்லா ரோல்களுக்கும் சூட் ஆகமாட்டார். அதனால்தான், அவரே புத்திசாலித்தனமாக சப்போர்ர்டிங் ரோல்களை தேர்ந்தெடுத்துக்கொண்டு நடித்தார்.

      2) ‘மேஜர் பிரகாசிக்கவில்லை’ என்பது இன்னொரு அபத்தம். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் குணசித்திர நடிகராகவும், ஏழை மற்றும் பணக்கார அப்பாவாகவும், சில படங்களில் வில்லனாகவும் கூட கொடிகட்டிப்பறந்தார்.

      3) ‘ஓரம் கட்டப்பட்டார்’… இதுவும் அபத்தமான குற்றச்சாட்டு. எல்லா கதாநாயகர்களாலும், எல்லா இயக்குனர்களாலும் விரும்பப்பட்ட ஒரு நடிகர் அவர். குறிப்பாக அவர் நடித்த காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் மிகப்பெரும்பாலான படங்களில் வாய்ப்பளிக்கப்பட்டார்.

    • Ganpat says:

      ராஜரிஷி ஜி,

      (மேலும்) சில மறுப்புகள்

      மேஜர் ஹீரோ இனத்தை சேர்ந்தவர் அல்லர்.Basically அவர் ஒரு நாடக நடிகர்

      பிறக்கும்போதே அப்பா வேஷத்திற்கென்றே பிறந்த சிலருள் அவரும் ஒருவர்

      தமிழில் 1930~2010 வரை தனித்தன்மை பெற்ற சினிமா நடிகர்கள்
      சிவாஜி,ரங்கராவ்,M.R.ராதா,ஜெமினி,கமல்ஹாசன் மட்டுமே!

  9. பிங்குபாக்: வி.சி.கணேசன் “சிவாஜி கணேசன்” ஆக மாறிய கதை « அவார்டா கொடுக்கறாங்க?

  10. பிங்குபாக்: சிவாஜி தி.மு.கழகத்தில் இருந்து பிரிந்து காங்கிரஸில் சேர்ந்த வரலாறு « அவார்டா கொடுக்கறாங்க?

  11. BaalHanuman says:

    சிவாஜி THE BOSS (விகடன் பொக்கிஷம்)
    ==========================================
    “சிவாஜி ‘பராசக்தி’யில் நடித்துக்கொண்டிருந்த போதே ‘மனோகரா’ படத் தயாரிப்பு

    வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதற்கு நான் திரைக்கதை வசனம் எழுதிக்கொண்டிருந்தேன்.

    அந்தச் சமயத்தில், ‘மனோகரா’வில் கே.ஆர்.ராமசாமியை மனோகரனாக நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க இயலவில்லை. ‘பராசக்தி’யில் சிவாஜியின் நடிப்பும், வசன உச்சரிப்புகளும் சிறப்பாக இருந்ததைக் கண்கூடாகக் கண்டதனால், சிவாஜியையே மனோகரனாக நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பாளரான ஜூபிடர் சோமுவிடம் சொன்னேன். அதற்கான ஒப்பந்தம் ஒன்றும் போடப்பட்டது. அதற்கிடையே, சிலர் ஜூபிடர் சோமுவிடம் சென்று அவரது மனத்தைக் குழப்பினார்கள். அந்தச் சமயம், ‘பராசக்தி’ 1952 தீபா வளியன்று வெளிவந்தது. சென்னை அசோக் தியேட்டரில் ‘பராசக்தி’ வெளியான அன்றே – முதல் நாள் – அதுவும் மாட்னி காட்சிக்கு நானும் ஜூபிடர் சோமுவும் கிருஷ்ணன் பஞ்சுவுமாகப் போய்ப் பார்த்தோம்.

    படம் முடிந்தது. சிவாஜியின் உணர்ச்சிமிக்க நடிப்பைப் பார்த்துவிட்டு, ‘யார் என்ன சொன்னாலும் சிவாஜி கணேசன் தான் மனோகரனாக நடிக்கிறார்’ என்று மெய்சிலிர்க்கச் சொன்னார் ஜூபிடர் சோமு.”

    – கலைஞர் மு.கருணாநிதி (21.8.88)

    “சிவாஜிகணேசன் ஒரு ‘தெய்வ மலர்’. திரு ‘கல்கி’ அவர்கள் ‘சிவகாமியின் சபத’த்தில் சிவகாமி பற்றி கூறும்போது, ‘அவளும், அவளுடைய கலையும் தெய்வத்திற்கே அர்ப்பணமானவை. மனி தர்களால் தொடமுடியாது’ என்கிறார். நானும் அதையே சொல்கி றேன். திரு. கணேசன் அவர்களின் கலை, தெய்வத்திற்கு அர்ப்பண மானது! நாம் தூரத்தே நின்று ரசிக்கலாம்; ஆனால் அது நமக்கும் அப்பாற்பட்டது. திருஞான சம்பந்தருக்கு பாலூட்டிய தாய், இந்த நடிப்புக் கடலுக்கும் ஒரு துளி ஊட்டியிருப்பாளோ? அதனால்தான் இவர் பேசும்போது தமிழ் அவ்வளவு இனிக்கிறதோ! நான் இவரது நடிப்புத் திறனைக் கண்டு வியக்காத நாளே இல்லை. கோலார் பொன் சுரங்கம் வற்றி விட்டது என்று சொல்கிறார்களே, கிம்பர்லி வைரச் சுரங்கங்கள் வெறுமையாகிவிட்டன என்று சொல்கிறார்களே… இந்த நடிப்புச் சுரங்கம் மட்டும் வற்றுவதில்லையே!

    இந்த உயர்ந்த நடிகரின் வெற்றி இவரது உழைப்பில்தான் இருக்கிறது. ‘தெய்வ மகன்’ படத்தில் மூன்று சிவாஜிகளும் தோன்றும் ஒரு காட்சியை நான் முதன்முறையாகப் பார்த்தபோது, எனக்கே மூன்று தனிப்பட்டவர்கள் நடிப்பதாக ஒரு பிரமை ஏற்பட்டது! அன்று அவர் நடிப்பின் பூரணத் துவத்தைக் கண்டேன். ஆனால் அந்த உயர்ந்தவரிடம்தான் எத்தனைப் பணிவு, எத்தனைப் பண்பு!”

    – டைரக்டர் ஏ.சி.திருலோக்சந்தர் (21.9.69)

    “சிவாஜி கணேசனை நான் மிகவும் மதித்து, போற்றிப் பாதுகாக்கும் காரணம், அவரை எதற்கும் எப்பொழுதும் அணுகி, எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவருக்கு அவ்வளவு விஷயங்கள் தெரியும்! எனக்கு எந்தச் சந்தேகம் வந்தாலும் நான் அவரிடம் சென்றுதான் நிவர்த்தி செய்து கொள்வேன். தீர ஆலோசித்து, பொறுமையாக விஷயத்தை விளக்குவதில் அவருக்கு ஈடு அவரேதான்.

    படப்பிடிப்பு என்று வந்து விட்டால், சிவாஜி காரியத்தில் மிகவும் கண்ணாக இருப்பார். தம்மால் மற்றவர்களுக்கு ஒரு சிறு துன்பம் வருவதையும் சகியார். என் வாழ்வில் இவர் என்றுமே மறக்க முடியாதவர்; மறக்கவும் இயலாதவர்.”

    – நடிகை உஷாநந்தினி (22.7.73)

    “சாதாரணமாக யாருடனாவது பேச ஆரம்பிக்கும்போது, முதலில் அவர்கள் குடும்பத்தைப் பற்றி அக்கறையாக விசாரிப்பார் சிவாஜி.

    மற்றவர்களின் ‘மேனரிஸ’ங்களை உன்னிப்பாகக் கவனித்து வைத்துக்கொள்வார். ஒருவர் சிகரெட் பிடித்தால் கூட எப்படிப் பிடிக்கிறார் என்று பார்த்துக் கொள்வார். ஒரு முறை எந்தெந்தக் குணாதிசயங்கள் உள்ளவர்கள் எப்படி சிகரெட் பிடிப்பார்கள் என்று சுமார் 15 வகையாக சிகரெட் பிடித்துக் காட்டினார்!

    ஷூட்டிங்கில் தன் பாகம் எடுத்து முடிக்கும்வரையில் செட்டை விட்டு வெளியே ஒரு அடிகூடப் போகமாட்டார்.

    “சிவாஜி சார்! நீங்கள் மற்ற நடிகர்களோடு நடித்தால் ஷாட்டில் அவர்களை ஏன் ‘ஓவர் ஷேடோ’ செய்கிறீர்கள்? அவர்கள் அத்தனைக் கஷ்டப்பட்டு நடித்த பிறகு உங்கள் செய்கையால் அது ஒன்றுமில்லாமல் போய் விடுகிறதே!” என்று ஒரு முறை அவரிடம் துடுக்காகக் கேட்டுவிட்டேன்.

    சிவாஜி என்னை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தார். “யூ ஆர் கரெக்ட்! ஆனால், அதென்னவோப்பா…காமிரா முன்னால் நிற்பதை நான் ஒரு பாக்ஸிங் ரிங்கில் நிற்பது போலவே கருதுகிறேன். என்னோடு யார் நின்றாலும் அவர்களை நான் ‘வின்’ பண்ணத்தான் முயலுவேன். எனக்கு அது ஒரு ‘சாலஞ்ச்’ மாதிரி” என்றார்.

    இது போன்ற தர்மசங்கடக் கேள்விகளை இவரிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். இவருக்குக் கோபமே வராது.

    செட்டில் இவரைச் சந்திக்கச் சென்றால், உடனே கூப்பிட்டு விறுவிறு என்று விஷயத்தைப் பேசிப் பத்திரிகையாளர்களை அனுப்பி விடுவார். பத்திரிகை அவசரம் தெரிந்தவர்!”

    – நிருபர் பாலா (16.11.80)

    “இனி நடிகர்களைப் பாராட்டி ஏதாவது பட்டம் கொடுக்க வேண்டுமானால் ‘வி.சி.கணேசன்’ என்ற பட்டத்தைக் கொடுங்கள். அதுதான் மிக உயர்ந்தது!”

    – சத்யராஜ் (12.10.86)

    “‘நான் நடித்துக் கொண்டே சாக வேண்டும்’ என்று அண்ணன் ஏதோ ஒரு பத்திரிகையில் பேட்டி அளித்ததைப் படித்தேன். இதைப் பார்த்துவிட்டு எல்லாருமே ‘நான் நடித்துக்கொண்டே சாக வேண்டும்’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அண்ணன் மட்டும் தான் அப்படிச் சொல்லலாம். அவருக்குத்தான் அந்தத் தகுதி உண்டு. மத்தவங்க நடிக்கறதைப் பார்த்துட்டுத்தான் ஆயிரக்கணக்கான பேர் தினம் தியேட்டர்ல சாவறானே, போதாதா?”

    – நாகேஷ் (12.10.86)

    “‘தேவர்மகன்’ ஷூட்டிங்… அப்ப நான் சினிமாவுக்கு வந்த புதுசுங்கறதால, சூப்பரா நடிக்க ணுங்கற நினைப்புல ஓவர் ஆக்ஷன் பண்ணிடுவேன். அந்தப் படத்தில், கமல்ஹாசனோட அப்பா சிவாஜி சார் இறந்து போகிற ஸீன்! சிவாஜி இறந்து கிடப்பார். பக்கத்தில் குழந்தைகள்… கால்மாட்டில் நானும் சங்கிலி முருகனும். கமல் சார் கொஞ்சம் தூரத்திலிருந்து ஓடி வருவார். எல்லோரும் சேர்ந்து அழணும். கமல் சார் என்னிடம், ‘தத்ரூபமா அழணும்பா’ என்றிருந்தார். ‘ஷாட் ரெடி!’ என்று குரல் கேட்டதுமே… ‘ஐயோ! எங்களை விட்டுப் போயிட்டீங்களேய்யா… ஐயா!’ என்று எட்டுப்பட்டிக்கும் கேட்கிற மாதிரி குய்யோ முறையோ என ஓலமிட்டு அழ ஆரம்பித்தேன். பத்து செகண்ட்கூட ஆகியிருக்காது. ‘கட், கட்’ என்றபடி பிணம் எழுந்துவிட்டது. சிவாஜி சார் தான்! என்னைப் பார்த்து, ‘இங்க வாடா’ என்றார் முறைத்தபடி. நான் பயந்துகொண்டே நெருங்கினேன். ‘நீ ஒருத்தன் அழுதா போதுமா… மத்தவன் யாரும் அழ வேண்டாமா? என் மகனா வர்ற கதாநாயகனே மெதுவா அழறான். நீ ஏண்டா இந்தக் கத்துக் கத்தற? நீ கத்தற கத்தில் உன் உசுரும் போயிடப்போகுது! துண்டை வாயில் வெச்சுக்கிட்டு கமுக்காம விசும்பி அழு, போதும். ஓவர் ஆக்ஷன் பண்ணா உதைபடுவே படுவா!’ என்றார். சிவாஜி சாரைக் கோபப்பட வைத்த எனது அந்த ஓவர் ஆக்ஷனை நினைத்தால், இப்போதும் சிரிப்பு வரும் எனக்கு!”

    – வடிவேலு (9.3.97)

    “மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்று கேட்டால், பாட்டுக்கு மெட்டு என்பது தான் சிறந்தது. அந்தக் காலத்தில் கண்ணதாசனும் மெல்லிசை மன்னரும் அப்படித்தான் செய் தார்கள். ‘புதிய பறவை’யில் ஒரு புதுமை. படத்தில் வரும் ஒரு சோகப் பாட்டுக்கு சிச்சுவேஷ னைச் சொல்லிவிட்டுப் போய்விட் டார் டைரக்டர். கண்ணதாசனால் எவ்வளவோ முயன்றும் பாடல் எழுத முடியவில்லை. ‘நீங்கள் முதலில் மெட்டமையுங்கள். அதற்குப் பாட்டெழுதுகிறேன்’ என்று எம்.எஸ்.வி-யைக் கேட் டார். அவராலும் மெட்டமைக்க முடியவில்லை. இறுதியில் நடிகர் திலகத்தை அழைத்து, ‘இந்த சிச்சு வேஷனுக்கு ஒரு பாடல் வந்தால், நீங்கள் எப்படி நடிப்பீர்கள்?’ என்று கேட்க, அவர் பாடல் வரிகளே இல்லாமல் அற்புதமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்துத்தான் கண்ணதாசன் பாட்டெழுதினார். அந்தப் பாடல் தான் ‘எங்கே நிம்மதி’!”.

    – கவிஞர் வைரமுத்து (4.2.90)

  12. BaalHanuman says:

    பாரதி மணி கூறுகிறார்….

    ஒரு தடவை சிவாஜி கணேசனுடன் தில்லி அசோகா ஹோட்டல் லிஃப்டில் உள்ளே நுழைந்ததும், ‘கண்டுக்கவே மாட்டேங்கிறானே!’ என்று குறைபட்டார். ‘சார், சத்தியமா நீங்க யாருன்னு அவனுக்குத் தெரியாது!’ என்று பதிலளித்தேன். கூட இருந்த அவர் தம்பி V.C. ஷண்முகம் சிரித்தார். அடுத்தமாடியில், ஹிந்திநடிகர் பெயின்ட்டல் உள்ளே நுழைந்தால், ‘ஆயியே ஸாப்’ என்று பல்லிளித்து வரவேற்பான். அவரை அவனுக்குத் தெரியும்.

    சிவாஜி கணேசனுக்குத் தேசியவிருது கிடைக்கவில்லையென்ற குறை நமக்கெல்லாம் உண்டு. நாம் அவர் நடிப்பைப் பல படங்களில் பார்த்துப்பார்த்துப் பழகி, அவர் நடிகர் திலகம் என்று ஒத்துக்கொண்டவர்கள். ஒருமுறை சிவாஜி நடித்து விருதுக்குப்போன ஒரு படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெங்காலி ஜூரி, படம் நடுவில் ‘Atrocious! Kyaa Overacting Hai!’ என்று சொல்லிவிட்டு, மீதிப் படம் பார்க்காமல் வெளியேறியதையும் பார்த்திருக்கிறேன். அவருக்கு சிவாஜியின் மீது தனிப்பட்ட வெறுப்பு இருக்க நியாயமில்லை. என் மனதுக்கு வருத்தமாகத்தான் இருந்தது, என்ன செய்ய? அவர்களுக்கு இவர் நடிப்பு மிகையாகப்படுகிறது!

    We are basically very loud people! எல்லா சென்னைத் தியேட்டர்களிலும், dts/DOLBY உச்சத்தில் இருப்பதே ஒரு சான்று! நம் பார்வை வேறு அவர்கள் பார்வை வேறு. சிவாஜியை மேடையில் வானளாவப் புகழ்ந்து பேசிய பிரபல வடஇந்திய நடிகர்கள் தனிப்பட்ட முறையில் மாறான கருத்துக்கொண்டவர்கள். அது எனக்குத் தெரியும்.

    • சாரதா says:

      உண்மை….

      தமிழ்ப்படங்கள் என்ற குறுகிய எல்லைக்குள்ளேயே நின்றுவிட்டதால், வடநாட்டிலுள்ள ஒரு சாதாரண ‘லிப்ட் பாய்’க்குக்கூட தெரியப்படாத கலைஞராக இருந்ததில் வியப்பில்லை. பெரியவர்கள், விவரம் தெரிந்தவர்கள் மட்டத்தில் அனேகமாக ஒருவேளை தெரிந்திருக்கலாம். (அதுகூட ‘லாம்’ தான். ‘ஆம்’ அல்ல).

      இங்கே தமிழகத்தில் சிவாஜி படம் என்றாலே சற்று மிகைநடிப்புள்ள படங்களை மக்கள் எதிர்பார்த்தார்கள் என்பதற்காக, மத்திய தேர்வுக்குழுவுக்கு அனுப்பும்போதும் அம்மாதிரி படங்களை தேர்வு செய்து அனுப்பியது நம்மவர்கள் தவறாகக்கூட இருக்கலாம். மிகச்சாதாரண நடிப்பைக்கொண்ட ‘எங்க மாமா’ போன்ற படங்களை அனுப்பியிருந்தால் ஒருவேளை அவர்கள் சற்று விரும்பியிருக்க வாய்ப்புண்டு. (அதுவும் கூட ‘லாம்’தான் ‘ஆம்’ அல்ல). உதாரணத்துக்காக மட்டுமே எங்க மாமாவைச்சொன்னேன். மற்றபடி, அது பிரம்மச்சாரி படத்தின் ரீமேக் என்பதால் தேர்வுசெய்யப்பட வாய்பில்லை என்பதே உண்மை.

      மற்றபடி, தேசிய விருதைப்பொறுத்தவரை, அவர்கள் வைத்திருந்த அளவுகோலுக்குத்தகுந்தாற்போல இவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. ஒருமுறை கொடுக்கப்பட்டிருந்தால் அத்தோடு அடங்கிப்போயிருந்திக்க வேண்டிய விஷயம், ஒருமுறைகூட தரப்படாததாலோ என்னவோ, தேசிய விருது பேச்சு வரும்போதெல்லாம் இவர் பெயர் அடிபடுகிறது. ‘பெற்றிருந்தால்’ கிடைத்திருக்காத இம்மாபெரும் பேறு, ‘பெறாத்தகுதியற்றதால்’ காலத்துக்கும் நிலைத்து நின்று விட்டது.

      • BaalHanuman says:

        பாரதி மணி மேலும் கூறுகிறார்….

        எந்த பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், தன் படத்தைத் தேர்வுக்கு அனுப்பினால், அதிர்ஷ்டத்தை நம்பியேயாக வேண்டும். முக்கியமாக மற்ற மாநிலங்களிலிருந்து வேறு நல்ல படங்கள் போகக்கூடாதென்று வேண்டிக்கொள்ளவேண்டும். பல வருடங்களில் மிகக்கடுமையான போட்டி இருக்கும். இன்னும் சில சமயங்களில் யாருக்குக் கொடுப்பது என்று தேடுவார்கள். மஹேஷ் பட்டின் Saaraans-ல் சிறந்த நடிகருக்காக அனுபம் கேர் பரிசீலனை செய்யப்பட்டபோது, வங்காளத்திலிருந்து கடும்போட்டியிருந்தது. நீண்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, அனுபம் கேர் தன் வயதுக்கு மீறிய பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டார் என்பதால் ஜூரிகள் அவருக்குப் பரிந்துரைத்தனர். எனது நண்பர் M.K. ராவ், ‘வேறு போட்டியில்லாததால்தான் தபரென்ன கதெ கன்னடப் படத்தில் நடித்ததற்காக சாருஹாஸனுக்குச் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. அவர் படம் முழுக்க வந்தார். அவருக்கு அதிர்ஷ்டம்” என்று சொல்வார். சிவாஜிக்கு இத்தனை வருடங்கள் கொடுக்கத் தயங்கியதைத் தன்னிடம் கொடுத்துவிட்டார்களேயென்ற சங்கோஜம் அவருக்கு நிச்சயம் இருந்திருக்கும்.

  13. Ganpat says:

    சிவாஜிக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்ற மிக துரதிருஷ்டவசமான விவாதத்தில் மிகுந்த தயக்கத்துடன் கலந்துகொள்கிறேன்.
    சிவாஜி என்னை மன்னிப்பாராக.

    தேசிய விருதுக்கு சிவாஜி கிடைக்கவில்லை என்பதுதான் நிஜம்.

    ஆறு கோடி மக்கள் அங்கீகரரித்த ஒரு மாபெரும் கலைஞனை ஆறு பேர் கொண்ட ஒரு ஜூரிகுழு அங்கீகரிக்காது விட்டதால் குடி முழுகி போக வில்லை.

    மேலும் MGR க்கு அது கொடுக்கப்பட்டபிறகு (அதுவும் ரிக்ஷாக்காரன் படத்திற்கு!) அந்த விருதிற்கு இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் போய்விட்டது

    இதுவரை தேசிய விருது பெற்ற நடிகர்களை ஒரு தடவை உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜி நடித்திருக்கும் ஒரு காட்சியை
    (சௌகார் ஜானகி சிவகுமாருக்கு ‘டோஸ்’ விட்டுக்கொண்டிருக்க,அதை செய்தித்தாளை கையில் வைத்துக்கொண்டு சிவாஜி கவனிக்கும் இடம்;அவர் முகத்தில் தெரியும் நகைசுவை கலந்த ஒரு பரிதாப உணர்வு) நடித்துக்காட்ட சொல்லுங்கள் பார்க்கலாம்!

    சிவாஜியின் மிகப்பெரிய துரதிருஷ்டமும்,
    நாம் பெற்ற மிக பெரிய பேறும் ஒன்றுதான்!
    அதுதான் அவர் தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்து மறைந்தது!

    • saravana says:

      தாங்கள் கூறியது முற்றிலும் சரியே
      இன்றுள்ள எந்த நடிகன் அவருக்கு இணையாக
      நடிக்க இயலும் நமது அதிர்ஷ்டம்
      அவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை
      கிடைத்திருந்தால் அது அவருக்கும் அவரது
      நடிப்புக்கும் நேர்ந்த அவமானம்
      இது அடியேனின் பணிவான கருத்து

  14. BaalHanuman says:

    நண்பர் பரவாசுதேவன் சமீபத்தில் பகிர்ந்து கொண்ட ராஜ நாயஹம் எழுதிய ஒரு பதிவு…

    திருச்சி ஃபெமினா ஹோட்டலில் வரவேற்பாளராக நான் இருந்த போது சிவாஜி கணேசன் அங்கு வந்து தங்கி பின் அறையை காலி செய்வதாக அவர் அறையிலிருந்து தகவல் வந்தது. அவர் கீழே லாபிக்கு வரப்போகிறார் என்ற விஷயம் அங்கு வந்திருந்த பல பேருக்கும் தங்கியிருந்த சில விருந்தாளிகளுக்கும் தெரிந்த உடன் எல்லோரும் அவரை பார்க்கிற ஆவலில் லாபி யில் லிஃப்ட்-ஐ பார்த்துக்கொண்டு அங்கே வேலை பார்த்துகொண்டிருந்த ஊழியர்களும் கூட வந்து நின்று கொண்டார்கள்.

    லிஃப்ட் திறந்தது ,. மனைவி கமலாவுடன் வெளியே வந்த சிவாஜி கணேசனுக்கு அந்த இடத்தில் கூட்டமாக பலரை பார்த்தவுடன் புன்னகையுடன் என்னை பார்த்தார். அந்த இடத்தில் அவர் தான் CENTRE OF ATTRACTION.

    அவரை அனைவரும் ஆர்வத்தோடு பரபரப்போடு கவனிக்கும் போது அவர் ஏதேனும் A CLEVER MANEUVER GIMMICKS செய்தாக வேண்டும்.

    நான் தான் அந்த இடத்தில் அவருக்கு SUPPORTING ACTOR!

    என்னருகில் வந்தார். என் கன்னத்தில் தட்டுவது போல ஒரு நளினமாக அவர் கை வந்தது.

    தொடர்ந்து பெருமிதமாக என்னைப்பார்த்து சிரித்து ‘OK YOUNG MAN ! I AM LEAVING!’

    அவருடைய ஸ்டைல் நடையுடன், மனைவி கமலா பின் வர நடந்து போய் காரில் ஏறினார் .

    அவர் அப்புறம் 9 வருடம் கழித்து இறந்த போது என் காதில் அந்த வார்த்தைகள் அவர் குரலில் ஒலித்தது ..

    OK YOUNG MAN! I AM LEAVING!

    http://rprajanayahem.blogspot.com/2008/08/ok-young-man-i-am-leaving.html

  15. BaalHanuman says:

    அமுதவன் கூறுகிறார்….

    கௌரவிக்கப்பட வேண்டிய எந்தவொரு கலைஞரும் இந்த திராவிட அரசுகளால் சரியான முறையில் கௌரவிக்கப்படவில்லை என்பதற்கு மிக எளிய உதாரணம் மகாகலைஞன் சிவாஜி கணேசன். உலகின் மிகச்சிறந்த கலைஞனாகக் கொண்டாடப்படவேண்டிய சிவாஜி கணேசனுக்குக் கடற்கரையில் ஒரேயொரு சிலை வைத்ததோடு அரசின் கடமை முடிந்துவிடுகிறது.

    கர்நாடகத்தில் பிரபலமாக இருந்த நடிகர் ராஜ்குமாரை இந்த மாநிலம் எப்படிக் கொண்டாடுகின்றது என்பதை யார் வேண்டுமானாலும் கர்நாடகம் வந்து பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். பெங்களூரில் மட்டுமல்ல கர்நாடகம் பூராவிலுமே ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர் பெயரில் நகர்கள்; சாலைகள், பல்வேறு இடங்களில் நினைவுச்சின்னங்கள், விருதுகள்…அவர் படங்கள் இல்லாத தெருக்கள்கூட கிடையாது என்கிற அளவுக்கு அவரைக் கொண்டாடுகிறது கர்நாடகம்.

    ஆனால் திட்டம் போட்டே இங்கே சிவாஜி புறக்கணிக்கப்பட்டார். ஆரம்ப நாட்களிலிருந்தே அவர் தமது திறமையால் மட்டும்தான் நின்றாரே தவிர அவரை உயர்த்திப்பிடிக்க அரசு எதையுமே செய்யவில்லை. அவருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே ஒரு போட்டி ஏற்படுத்தப்பட்டு அந்தப் போட்டியில் சிவாஜி இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு எம்ஜிஆர் முன்னிலைப் படுத்தப்பட்டார். இது வெறும் வணிகப்போட்டி மட்டுமல்ல.இதையும் தாண்டிய அரசியல் வன்மம் அதில் இருந்தது. அரசியலைப் புறந்தள்ளி ஒரு கலைஞனாக சிவாஜி கொண்டாடப்பட்டிருந்தால் இன்றைய அரசியல் சீர்கேடே தமிழகத்திற்கு வந்திருக்காது. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்திருக்க மாட்டார்.

    சிவாஜி எந்தளவு எம்ஜிஆரை வைத்துப் புறக்கணிக்கப்பட்டார் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஒரு படத்திற்காக அந்த வருடத்தின் சிறந்த நடிகராக மத்திய அரசினால் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வந்ததும் அப்போது அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் உடனடியாக டெல்லி அனுப்பப்பட்டு சிவாஜி பெயர் நீக்கப்பட்டு அந்த இடத்தில் ரிக்ஷாக்காரன் என்ற படத்தில் நடித்த எம்ஜிஆர் சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தி. இதனை நெடுஞ்செழியனே சொல்லப்போக “அப்படியானால் அந்தப் பட்டம் எனக்கு வேண்டாம்” என்று ‘ஒன்றும் தெரியாத’ எம்ஜிஆர் அந்தப் பட்டத்தைத் துறந்த கூத்தெல்லாம் நடந்தது.
    சிவாஜிக்கும் கண்ணதாசனுக்கும் அரசு என்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் தெரியாதவரா கலைஞர்? ஆனாலும் அவர்கள் மீதான தனிப்பட்ட கோபதாபங்களை அவர் இன்னமும் மறக்கவில்லை என்பதைத்தான் அவரது மவுனம் காட்டுகிறது. இந்த இரண்டு பேரைப்பற்றிப் பேச வரும்போதெல்லாம் “என் ஆருயிர் நண்பர் சிவாஜி” என்றும் “என் ஆருயிர் நண்பர் கண்ணதாசன்” என்றும் சொல்லி அவர்களைப்பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதோடு தமது கடமை முடிந்தது என்று கலைஞர் கடந்து செல்லக்கூடாது.
    தம்மைப் பற்றி மிக மோசமாக, மிகக் கேவலமாகப் பேசிய எத்தனையோ பேரை மன்னித்து மீண்டும் தமது பக்கத்தில் சேர்த்துக்கொண்டு பதவிகள் கொடுத்து அழகு பார்த்தவர் கலைஞர். நாஞ்சில் மனோகரன், காளிமுத்து என்று எத்தனையோ பேரை உதாரணங்களாகச் சொல்லலாம். சிவாஜி விஷயத்திலும் கண்ணதாசன் விஷயத்திலும் கலைஞர் தமது கோபத்தை உதறித்தள்ள வேண்டும்.

    இல்லாவிட்டால் பின்னர் வரும் அரசுகள் நிச்சயம் காலத்தால் அழியாத இந்த மகா கலைஞர்களைக் கொண்டாடும்பொழுது எத்தனையோ செய்த கலைஞர் ஏன் இதனைச் செய்யவில்லை என்ற கேள்வி நிச்சயம் எழுப்பப்படும்.

    கலைஞரால் ‘என் ஆருயிர் நண்பர்’ என்று புகழப்பட்ட கவியரசருக்கு கலைஞர் ஆட்சியிலிருந்தபோது ஒன்றும் செய்யவில்லை.எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்ததும் கவியரசரைத் தேடிச்சென்று அரசவைக்கவிஞராக நியமித்தார். இத்தனைக்கும் அன்றைக்கு எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் நல்ல நட்பு இல்லை. நீண்ட காலமாக திரைப்படங்களில் கூட கண்ணதாசனைத் தவிர்த்து வாலியையும் புலமைப்பித்தனையும்தாம் பாடல்கள் எழுதவைத்திருந்தார். ஆனாலும் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் சந்தர்ப்பங்களை எம்ஜிஆர் என்றைக்கும் எந்த விஷயத்திலும் கோட்டை விடுவதில்லை. கண்ணதாசனை அரசவைக்கவிஞராக ஆக்கியதில் மட்டுமல்ல, ஈழ விவகாரத்தில் எத்தனையோ குழுக்கள் இருக்க பிரபாகரனைத் தேர்ந்தெடுத்து ஆதரித்ததிலும் எம்ஜிஆர் பாராட்டப்படவேண்டிய முடிவுகளையே மேற்கொண்டார். இதற்குக் காரணம் மக்களின் மதிப்பீடு என்னவோ அதனைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு அவர் செயல்பட்டார் என்பதுதான்.

    http://amudhavan.blogspot.com/2011/02/blog-post.html

  16. BaalHanuman says:

    missed the bus… சிவாஜியின் ஏக்கம்

    ஒவ்வொரு சமூகத்திலும் மகத்தான கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஒன்று; மக்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். இரண்டு; ஆட்சியாளர்களால். ஓயாத அலைகளைப் போலான மனக் குமுறலுடல்களுடனான வாழ்க்கை மெய்யான கலைஞனது. அத்தகைய மாபெரும் கலைஞனான சிவாஜிக்குள்ளும் குமுறல்கள் இருந்துள்ளன. அவரின் மறைவின் போதாவது அவரது மனக்குமுறல்களை வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுவதன் மூலம் இன்னொரு கலைஞனுக்கு இந்த அவலம் நேர விடாமல் தவிர்க்கவே இந்த நேர்காணல் மறு பிரசுரம் செய்யப்படுகிறது….

    ஒரு கலைஞனுக்கு உண்மையான அங்கீகாரம் எனறு எதை நினைக்கிறீர்கள்?
    விருது மட்டும் திறமைக்கான முழு அங்கீகாரம் இல்லையென்றாலும், உரிய காலத்தில் அத்தகைய விருதுகள் கிடைக்காதது நல்ல கலைஞனை மனமுடையச் செய்யும் தானே…உங்கள் விஷயத்தில் எப்படி?

    ஒரு கலைஞனை சிறந்த நடிகராக மக்கள் ஏற்றுக் கொள்ளும் போதுதான் முழுமை அடைகிறான். அதுதான் அங்கீகாரம். தான் ஏற்ற பாத்திரத்தை உணரும் போதுதான் அதில் முழுமையாக ஒரு நடிகன் வெளிப்பட முடியும். அதுதான் அவனுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். எத்தனையோ பேர் நடிக்க வருகிறார்கள். …எல்லோரையுமா சிறந்த நடிகன் என்று மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்?
    அங்கீகாரம் கிடைப்பதற்கும் விருது கிடைப்பதற்கும் சம்பந்தமில்லை. யாரோ ஒருவர் இஷ்டப்பட்டுக் கொடுத்தாத்தான் விருது. அர்ஜுனா விருது, பாரத் விருது போன்றவற்றை பலருக்குக் கொடுத்திருக்கிறார்கள். எல்லாருமா அதற்குத் தகுதியானவர்கள்? ‘லாபி’ செய்து விருது வாங்குகிறார்கள். இன்னும் எப்படியெல்லாமோ நடக்கிறது.
    ஒரு கலைஞனுக்கு விருது என்பது, அவன் வேகமாக வளரும் இளம் வயதில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவன் அதைக் கொண்டாட முடியும். விருது தந்த ஊக்கத்தில் அவன் கூடுதலாகப் பரிமளிப்பான். கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் போன்ற சின்னப் பிள்ளைகளுக்கு விருது கொடுத்தால் அவர்கள் கொண்டாடுவார்கள். நான் இதையெல்லாம் கடந்தவன்.
    ஆனாலும் ஒன்றை நான் சொல்லித்தான் ஆகவேண்டும். உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும் வருத்தமும் என் மனத்தின் ஓரத்தில் விண் விண் என்று இருக்கத்தான் செய்கிறது. நானும் மனுஷன்தானே……இதை மறைத்தால் என்னைவிட அயோக்கியன் யாரும் இருக்க முடியாது.

    பால்கே விருது எப்போதோ உங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும் இவ்வளவு காலம் தாமதமானதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? விருது வழங்குவதில் அரசியல் தலையீடு, பாரபட்சம் இருப்பதாகக் கருதுகிறீர்களா?

    பாரட்சம் இருக்கலாம், அரசியல் தலையீடு இருக்கும் என்று நினைக்கவில்லை. நானும் அரசியலில் இருந்தவன். அப்படிச் சொன்னால் அசிங்கமாக இருக்கும். மேலும் அரசியல் தலையீடு இருக்கிறது என்று சொன்னால் அதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்குமென்று தெரியவில்லை. பால்கே விருது பெரிய விருது. அது ஏன் இத்தனை நாள் எனக்குக் கிடைக்கவில்லையென்று யோசித்துப் பார்த்தபோது…..எனக்குக் கிடைத்த தகவலை உங்களுக்குச் சொல்கிறேன்.
    இந்த விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அந்தக் குழு பரிந்துரைக்கும் பட்டியல் சம்பந்தப்பட்ட அமைச்சருக்குச் செல்கிறது. அவர் ஆசாபாசம் இல்லாதவராக இருந்தால் தகுதியானவருக்குக் கிடைக்கும். இல்லையென்றால் அவர் விரும்பும் நபருக்குத் தான் விருது செல்கிறது. இதுவரைக்கும் இப்படித்தான் நடந்தது என்று – எனக்குத் தெரியாது. தில்லியிலே இருக்கிற சர்க்கார் உத்யோகஸ்தர்கள் சொல்கிறார்கள் எனக்கு இந்த வருடம் விருது கிடைத்ததே… அதுவும் சாதாரணமாகக் கிடைக்கவில்லை… வேறு ஒருவருக்ககுப் போய்விட்டுத்தான் என்னிடம் திரும்பி வந்திருக்கிறது. இதையும் அந்த சர்க்கார் உத்யோகஸ்தர்களே என்னிடம் சொன்னார்கள்.

    உங்களுக்கு செவாலியே விருது அளிப்பதென்று பிரெஞ்சு அரசு முடிவு செய்த பின்னரும் அது தாமதமானதற்கு புதுவை அரசு ஆர்வம் காட்டாததுதான் காரணம் என்று கூறப்படுகிறதே… உண்மையா?

    ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழுதான் செவாலியே விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. கிட்டதட்ட எனது படங்கள் எல்லாவற்றையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். எனக்கு செவாலியே விருது கிடைத்த பிறகுதான் ஹாலிவுட் நடிகர் ஒருவருக்கு இந்த விருது கிடைத்தது.
    அதாவது அவர்கள் முதலில் என்னைத்தான் Recognise செய்திருக்கிறார்கள். தேர்வுக் குழு எனது பெயரை விருதுக்குப் பரிந்துரைத்தவுடன் பிரெஞ்சு அரசாங்கம் புதுவை அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால் புதுவையிலிருந்து பதில் போகவில்லை. புதுவையை ஒருகாலத்திலே பிரெஞ்சு அரசுதானே ஆட்சி செய்தது. பிரெஞ்சுக்காரன் நம்மை ஆட்டிப் படைச்சானே என்ற கோபத்தில் அந்தக் கடுதாசியைத் தூக்கிப் போட்டுட்டாங்க போலிருக்கு.! பிறகு அங்குள்ள இந்திய மக்களிடம் விசாரித்து ஒருவழியாக முடிவு செய்து பிரெஞ் நாட்டுத் தூதர் மூலமாக அந்த விருது என்னிடம் வந்து சேர்ந்தது.
    எனக்கு அந்த விருதைக் கொடுக்க மூன்று வருடங்களாக பிரெஞ்சு அரசாங்கம் முயற்சி செய்திருக்கிறது. அதைக் கழிச்சுக் கட்டிட்டாங்க. அது யாருன்னு, எனக்குத் தெரியாது. ஆனால் புதுவையில்தான் அப்படி நடந்தது என்று தெரிந்துவிட்டது.
    செவாலியே விருது யாருக்கும் எளிதில் கிடைத்துவிடாது. அதிலேயே 1,2,3 என மூன்று வகையான விருதுகள் உண்டு. எனக்குக் கிடைத்தது முதல்தர விருது உண்மையச் சொன்னால் அந்த விருது எவ்வளவு மதிப்ப மிக்கது என்று எனக்கு முதலில் தெரியாது. இங்குள்ளவர்களுக்கு தெரியவில்லை. தெய்வாதீனமாக ஒரு காரியம் நடந்தது.
    சகோதரி நடிகை ராதிகாவின் கணவர் ஒரு வெள்ளைக்காரர். அவர்தான் எனக்கு விருது கிடைத்த விஷயம் தெரிந்தவுடன் ராதிகாவிடம் செவாலியே விருது மிகப் பெரிய விருதாயிற்றே.. அது வந்த பிறகும் சிவாஜியை இன்னும் நீங்க யாரும் கண்டு கொள்ளவில்லையே… என்று கேட்டிருக்கிறார். ராதிகா அதுபற்றி கமல், ரஜினி போன்றவர்களிடம் பேச அதற்குப் பிறகுதான் அந்த விருதின் மதிப்பு பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து தான் ஏ.வி.எம்.சரவணன் மற்றும் நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து பெரிய விழா நடத்தி அந்த விருதை எனக்குத் தந்தார்கள். தில்லியிலுள்ள பிரெஞ்சு தூதர் சென்னை வந்து அந்த விருதை வழங்கினார்.

    இதுவரை நீங்கள் நடித்த பாத்திரங்கள் உங்களுக்கே சவாலாக இருந்த பாத்திரம் எது? உங்களுக்கு முழுத் திருப்தியளித்த படம் எது?
    கப்பலோட்டிய தமிழன்தான் எனக்குச் சவாலாக இருந்த பாத்திரம் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வ.உ.சி-யின் புதல்வர் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு “ஐயாவை நேரில் பார்த்தேன்” என்று சொன்னார். நீங்கள் கேட்டீர்களே…….அங்கீகாரம் எது என்று? இதைவிட ஒரு நடிகனுக்கு பெரிய அங்கீகாரம் எதுவாக இருக்கமுடியும். எனக்கு முழுத் திருப்தியளித்த படம் தெய்வமகன், மூன்று வேடம். சிரமப்பட்டுத்தான் நடித்தேன்.
    கிட்டத்தட்ட 300 படங்களில் நூற்றுக்கணக்கான பாத்திரங்களில் நடித்திருக்கிறீர்கள். குறுகிய இடைவெளிக்குள் ஒரு பாத்திரமாக உங்களை மாற்றிக் கொள்வது typical mental exercise இருந்திருக்குமே…..அதை நிங்கள் சமாளித்தது எப்படி?

    அது ஒன்றும் பெரிய காரியமில்லை. பழக்கத்தில் வருவதுதான். அன்றாடம் நமக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நடிக்கும் பாத்திரம் பற்றி சிந்திக்கவேண்டும். நமக்கு எங்கே ஓய்வு கிடைக்கும்? கழிவறை அல்லது குளியலறை தான். அங்கேதான் யாரும் கதவைத் தட்டி தொந்தரவு செய்யமாட்டார்கள். அந்தச் சமயத்தில் இன்றைக்கு என்ன நடிக்கப் போகிறோம் என்று யோசனை செய்வேன். பிறகு மேக்-அப் போட்டுக் கெண்டிருக்கும்போது…. மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு சற்றே தலைசாய்த்து இருக்கும் போது… இது மாதிரி இடையிடையே கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பாத்திரங்களுக்கு மெருகேற்றுவது எப்படி என்று யோசிப்பேன். இப்படி யோசிப்பவன்தான் நடிகன். இதைவிட்டுவிட்டு எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போறாரு என்கிற பாணியில் வந்தோம் நடிப்பது போல ஏதோ செய்தோம் என்று இருக்கலாமா? நாம் என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்தாலே போதும். கிடைக்கிற அரை மணிநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பாத்திரத்தை முழுமையாகச் செய்யவில்லையென்றால் நீங்க ஏன் நடிகன்னு சொல்றீங்க? அதைவிட தீவட்டின்னு சொல்லுங்க…. என்னைப் பொருத்தவரையில், ஆஸ்திக வார்த்தையில் சொல்வதானால் அது ஒரு வரப்பிரசாதம். சாதாரண வார்த்தையில் நன்றியறிதலோடு சொன்னால் எனக்குக் கிடைத்தது – நல்ல குரு. அவர் தந்த பயிற்சி.

    உங்கள் குரு யார்?

    நடிப்பில் எனக்கு ஒரே ஒரு குரு தான் உண்டு. அவர் சின்ன பொன்னுசாமி படையாச்சி. நான் சிறுவயதில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக் கம்பெனியில்தான் முதலில் சேர்ந்தேன். அங்கே தான் எனது குரு பொன்னுசாமி படையாச்சியும் வேலை செய்தார். இருவர் பெயரும் ஒரே மாதிரி இருந்ததால். முதலாளி பெரிய பொன்னுசாமி என்றும் எங்கள் குரு சின்ன பொன்னுசாமி என்றும் அழைக்கப்பட்டனர். ஏழு வயதிலிருந்து ஐந்தாறு வருஷங்கள் எனக்குப் பயிற்சி தந்தவர் சின்ன பொன்னுசாமி படையாச்சி. மறந்துவிட்டீர்களா, நான் ஒரு பெண் வேஷக்காரன் என்பதை. தலைமைப் பெண் வேஷக்காரன் நான். எங்கள் குருவும் பெண் வேஷக்காரர்தான் பெண் வேஷம் போடும் நடிகன் தான் ஆல் ரவுண்டராக வரமுடியும். முழுமையான நடிகனாகப் பரிமளிக்க முடியும்.

    நீங்கள் அரசியலில் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்திலாவது, எம்.ஜி.ஆர் போல நாமும் நல்ல பாத்திரங்களிலேயே நடிக்கவேண்டும் என்று நினைக்கவில்லையா?

    இல்லை. நடிப்புக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லையென்று நான் நினைத்தேன். ஆனால் சம்பந்தம் உண்டு என மக்கள் நிரூபித்துவிட்டார்கள். அதனால் தான் எம்.ஜி.ஆர் அரசியலில் வெற்றிபெற்றார். He did it. I missed the bus, எனக்கு அரசியல் இரண்டாம்பட்சம்தான் நான் குடிகாரனாக பெண் பித்தனாக, கொலைகாரனாக, ரவுடியாக பல பாத்திரங்களில் நடித்தேன். அதனால்தான் 300 படங்களில் நடிக்க முடிந்தது.
    அரசியலில் இன்று வந்துவிட்டு நாளை போய்விடுவார்கள். எத்தனை பேருக்கு பேர் இருக்கு? செல்லாக் கோபம் பொறுமைக்கு அழகு என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அரசியலில் எனக்குப் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக சீ! இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்வதாகக்கூட வைத்துக் கொள்ளுங்களேன்…
    இந்த இடத்தில் நான் ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். மக்கள் என்னை அரசியல்வாதியாகப் பார்க்க விரும்பவில்லை என்பதைப் பின்னாளில் தான் புரிந்துகொண்டேன். அவர்கள் என்னை நடிகனாக மட்டும்தான் பார்க்க விரும்பியிருக்கிறார்கள். எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்… அத்தனை பேருமா தலைவராக முடிந்தது? சிலபேர் நடிப்பிலே வெற்றி அடையவில்லையென்றால் அரசியல்வாதியாக மாறிவிடுகிறார்கள்.

    இது கடந்த கால அரசியல் பற்றி உங்கள் விமர்சனம் போல் இருக்கிறதே?

    கடந்த கால வரலாற்றை ஏன் சொல்றீங்க…நிகழ்கால, எதிர்கால வரலாற்றைப் பாருங்கள். அதுவும் இப்படித்தான் நடக்கிறது நடக்கப் போகிறது.!

    ஒரு காலத்தில் Over Acting செய்வதாக உங்கள் மீது விமர்சனம் எழுப்பப்பட்டதே…. இப்போது அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    இதயம் பேசுகிறது மணியன்தான் அப்படி எழுதினார். சிவாஜி சகாப்தம் முடிந்துவிட்டது என்று எழுதியதும் அவர்தான். திராவிடப் பாரம்பரியம் பற்றி தப்புத் தப்பாக எழுதியவர்களில் முக்கியமானவர் மணியன். அவருக்கு கலைஞர் தலைமையில் ஒரு பாராட்டுவிழா நடந்தது. அதற்கு மணியனே நேரில் வந்து அழைத்ததால் நானும் சென்றிருந்தேன். எனக்கும் அரசியலுக்கும் சம்பந்ததே இல்லை என்று மணியன் அங்கு பேசினார். நான் பேசும்போது திராவிடப் பாரம்பரியம் பற்றி விமர்சித்து எழுதியவர் இவர்தான். இப்போது அறிவாலயத்தில் கலைஞர் தலைமையில் இவருக்குப் பாராட்டு விழா நடக்கிறது. இதிலிருந்தே அரசியல் தந்திரம் நிறைந்தவர் என்று புரியும் என்று பேசினேன். ஐயய்யோ, நான் அப்படி இல்லை என்று மணியன் புலம்பினார். அது போகட்டும்.
    Bad Actor ஒருவன் இருப்பான். அவனைச் சுற்றி நான்கைந்து எழுத்தாளர்கள் இருப்பார்கள். தன்னுடைய ஆளைப் பெரிய நடிகன் என்று காட்டுவதற்காக, நான்றாக நடிப்பவனை ஓவர் ஆக்டிங் என்று சொல்வார்கள், பொதுவாக நம்ம ஊரில் யாருமே தான் நல்லவன்னு சொல்லமாட்டானே..அடுத்தவனை மட்டம் தட்டினால்தான் தான் நல்லவனாக முடியும் அதுபோலத்தான் இந்த விமர்சனமும் வந்தது.

    உங்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளில் உங்களுக்கு இணையாக நடிப்புத் திறமை வெளிப்படுத்தியவர் யார்?

    நிச்சயமாக பப்பிதான் (பத்மினி), பப்பி சிறந்த நாட்டியக்காரி மட்டுமல்ல. சிறந்த அழகியும்கூட. குணச்சித்திரம், காமெடி, நடனம், what not? எல்லாப் பாத்திரங்களிலும் ஜொலித்த நடிகை She is an all rounder. சின்ன வயதிலிருந்தே நானும் பத்மினியும் பழகி வருகிறோம். We are all intellectual friends. எங்களிடையே தெய்வீக நட்பு உண்டு. உலகிலேயே அதிகப்படங்களில் நடித்த ஒரே ஜோடி என்றால், அது நானும் பத்மினியுமாகத்தான் இருக்கவேண்டும்.

    காமெடி, குணச்சித்திரம் வில்லன் – இவற்றில் ஒரு நடிகனுக்கு கடினமான பாத்திரம் எது?

    காமெடிதான். காமெடி நடிகனைப் போல ஒரு Creator யாரும் கிடையாது. இப்போதுள்ள இலக்கணப்படி புருவத்தைத் தூக்கி ஹா ஹா என்று சிரித்துவிட்டால் வில்லன் என்று சொல்கிறார்கள். கொஞ்சம் அழகா இருந்து. காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு டான்ஸ் ஆடி, இரண்டு குத்துகுத்திட்டா ஹீரோன்னு சொல்கிறார்கள். காமெடி அப்படியில்லை, அந்த வேஷம் கஷ்டமானது. எனக்கு காமெடி நல்லா வரும் ஆனால் கொடுக்கமாட்டாங்க.. வசனம் பேசுவது, ‘எமோஷன்’ எல்லாம் என்னாவது? வைத்திருக்கும் கிளிசரீன் என்னாவது? இதற்கெல்லாம் நான்தானே சார் கிடைத்தேன்… (சிரிக்கிறார்)

    -தமிழ்மகன்
    (1998)

  17. BaalHanuman says:

    ‘நஞ்சுபுரம்’ இயக்குநர் சார்லஸ் கூறுகிறார்…

    சிவாஜி கணேசன்

    தமிழ் சினிமாவின் உச்சங்களில் ஒன்று சிவாஜி கணேசன். அவருடைய பிரதான பலம், உணர்ச்சிகரமான ஏற்றத் தாழ்வுகள் கொண்ட தெளிவான வசன உச்சரிப்பு. அதுதான் அவரை வெற்றிகரமான நாடக நடிகராகவும், முதல் திரைப்படத்திலேயே உச்ச நட்சத்திரமாகவும் ஆக்கியது. ‘பராசக்தி’ என்றவுடன் நினைவுக்கு வருவது அந்த நீதிமன்ற வசனம் தான். அந்தக் காட்சியின் பெரும் பகுதி வசனங்களை ‘உரையாடல்’ என்பதைவிட ‘உரைநிகழ்த்துதல்’ அல்லது ‘உரையாற்றுதல்’ என்றே சொல்லவேண்டும். அந்த வசனம் அளவுக்கே பிரபலமான ‘மனோகரா’ மற்றும் பல படங்களில் சிவாஜி கணேசன் மிகச் சிறந்த உரைநிகழ்த்தல்களைச் செய்திருக்கிறார். படத்துக்குப் படம் அவர் நடிப்பு மெருகேறியிருக்கிறது என்றபோதும், அவருடைய முதல் படத்து கன்னிப் பேச்சை 60 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழகம் நினைவில் வைத்திருக்கிறது, பொதுச் சூழலில் புளங்குகிறது என்பது ஆச்சர்யம்தான்.

    வெறும் மேடைப் பேச்சின் மூலமே அரசியல் நடைபெறும் தமிழகத்தில், இத்தனை உணர்ச்சிகரமான பேச்சாளர் ஏன் அரசியல் மேடைகளில் வெற்றிபெற முடியவில்லை, ஏன் சிவாஜி கணேசன் ஒரு மிதமான அரசியல்வாதியாக நடந்துகொண்டார் என்பது எனக்குப் புரியாத விஷயங்களில் ஒன்று. ஒருவேளை வசனங்களைப் பாடம் செய்து நடிப்பதில்தான் அவருடைய திறமை இருக்கிறது போலும். மேடையில் சுயமாகக் கோர்வையாகப் பேசுபவர்களே பிரச்சாரத்தின் போது கவனத்தை ஈர்க்க முடியும். அரசியலில் சிவாஜி காணாமல் போனாலும், தமிழக மக்கள் அவருக்கு எத்தனைப் பெரிய இடத்தைக் கொடுத்திருந்தார்கள் என்பதை, நான் அவருடைய இறுதி ஊர்வலத்தின் போதுதான் பார்த்தேன். சிவாஜிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான மக்கள் சிறு கிராமங்களிலிருந்து வந்து, கட்டுச் சோறோடு தி.நகர் தெருக்களில் குடும்பம் குடும்பமாக அமர்ந்திருந்த காட்சி இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

  18. BaalHanuman says:

    கணேசன் மறையலாம்; சிவாஜி மறையவில்லை
    –புதுமைத்தேனீ மா. அன்பழகன்

    சரவணா பிலிம்ஸ் அதிபர் ஜி.என்.வேலுமணி தமிழ்ப் படவுலகில் சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற பெரிய நடிகர்களை வைத்து பாலும் பழமும், மாட்டுக்கார வேலனை ஒத்த பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். அதே காலகட்டத்தில் டைரக்டர் பாலசந்தரும் பெரும் நடிகர்கள் இல்லாமல் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தார்.

    வேலுமணிக்கு ஓர் எண்ணம் எழுந்தது. சிறிய நடிகர்களை வைத்தே பாலசந்தரால் சிறந்த படங்களைக் கொடுக்க முடிகிறதென்றால், ஏன் சிவாஜியையும், பாலசந்தரையும் இணைத்து ஒரு படத்தை எடுத்தால், அது எவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுக்கும் என வியாபாரக் கணக்கைப் போட்டார். அதற்கான முயற்சியை எடுத்து இருவரையும் இணைத்தார். அந்தப் படம்தான் ‘எதிரொலி’. அந்தப் படத்தில் பணியாற்றக் கூடிய வாய்ப்பை நான் பெற்றதால்தான் சிவாஜிகணேசனுடன் பழகக் கூடிய, அவரைப் புரிந்து கொள்ளக் கூடிய, அறிந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

    சிவாஜியும், இயக்குநர் சிகரத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற தாகத்தை இப்படத்தின் வாயிலாகத் தணித்துக் கொண்டார். கதையைச் சொல்ல, நடிகர் திலகத்திடம் டைரக்டர் சென்றார். ‘ பாலு! முழுக்கதையையும் ஏன் சொல்றீங்க. தேவையில்லை. சும்மா அவுட் லைன் மட்டும் சொன்னா போதும். உங்களுக்குத் தெரியும் எப்படி ஒரு சிறந்த படத்தை உருவாக்க வேண்டுமென்று. அதில் நீங்கள் வெற்றியும் பெற்று வருகிறீர்கள்; நான் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறேன்’ என்று சுருக்கமாகக் கதையைக் கேட்டுக் கொண்டார்.

    இதில் என்ன சோகம் என்றால் எதிரொலி வணிக ரீதியாகப் பெரிய வெற்றியைத் தரவில்லை. சிவாஜி மக்கள் மனத்தில் நற்பெயருடன் நிலைகொண்ட நடிகர். கதைப்பாத்திரப்படி வழக்குரைஞர்; சந்தர்ப்பத்தால் பெட்டி கைமாறினாலும், அந்தப் பெட்டிக்குள் நிறையப் பணம் இருந்ததை உடையவரைத் தேடி ஏன் இவர் கொடுக்கவில்லை, அல்லது போலீசிடம் ஒப்படைக்கவில்லை? திருடிக்கொள்ள எண்ணி விட்டாரோ? சிவாஜிக்குத் திருடன் பட்டமா? படம் தோல்வி அடைந்து விட்டதற்கு காரணம் அப்படித்தான் சொல்லப் பட்டது.

    பாலசந்தர் பெரிய டைரக்டர் என்கிற பெயர் எடுத்திருந்தாலும், திரைப்படத் திறமையும் அறிவும் நிறைந்து இருந்தாலும் அப்போது தன்னைப் பற்றிக் கொஞ்சம் குறைத்தேதான் மதிப்பிட்டுக்கொள்வார். அந்த ‘காம்ப்ளெக்ஸ்’ அவரிடம் இருந்தது. சிவாஜியா அவர் எவ்வளவு பெரிய நடிகர், அவரிடம் எப்படிப் போய் இந்த இடத்தில் இப்படி நடிக்க வேண்டுமென்று நான் சொல்லிக்கொடுப்பது? அவருக்குத் தெரியாதா என்று நினைத்துக் கொண்டு காட்சியை விளக்கிவிட்டு வந்துவிடுவார். ஒரு டைரக்டரும் கதாநாயகனும் எப்படியெல்லாம் உரையாடு வார்கள், உறவாடுவார்கள்? அப்படிப்பட்ட எந்த நெருக்கமும் இல்லாமலேதான் படப்பிடிப்பு நடக்கும். ஒருபுறம் துரு துருவென்று சிகரெட்டைப் பிடித்துக்கொண்டே டைரக்டர் நிற்பார்.

    காட்சி தயாரானதும்,என்னை டைரக்டர் அழைப்பார்.என்னிடம்தான் அவருக்கு வேண்டிய சிகரெட் இருக்கும். அதற்காகத்தான் அழைக்கிறாரோ என்று சிகரெட்டை எடுப்பேன். இல்லை. ஷாட் ரெடி. நீ போய் சிவாஜியை அழைத்து வா என்பார். நான்தான்உதவி டைரக்டர்களிலேயே வயதிலும் அனுபவத்திலும் இளையவன். ஆகையினால் நான்தான் ஓடும்பிள்ளை. ஒப்பனை அறைக்கு ஓடிப்போய் ‘அண்ணன் ஷாட் ரெடி வரலாம்’ என்பேன். ‘ஏண்டா லேட்?.. வா.. அந்த ‘கோட்’டை எடுத்து மாட்டிவிடு’ என்பார். நானும் அவ்வாறே செய்து அழைத்து வருவேன். தாமதம் என்பது ஐந்து, பத்து நிமிடம்தான்.

    படப்பிடிப்பகத்துக்குள் நுழைந்தவுடன் எல்லோரும் வணக்கம் தெரிவிப்பார்கள். இவரும் பதிலுக்கு முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டே பதிலுக்குக் கனத்த குரலில் வணக்கம் சொல்வார். டைரக்டர் அருகில் வந்து, அன்று எடுக்கப் போகும் காட்சியை விவரிப்பார். உடன் இருக்கும் உதவி டைரக்டர் பாஸ்கரன் சிவாஜி பேசவேண்டிய வசனங்களைச் சொல்வார். நன்றாகக் கேட்டு, மனத்தில் இறுத்திக்கொண்டு மெதுவாகச் சொல்லிப் பார்ப்பார்.

    டைரக்டர், ஸ்டார்ட் கேமிரா சொல்லி ‘ஆக்ஷ்ன் ‘ என்று சொன்னவுடன், எங்கிருந்துதான் வருமோ, அந்த வசன உச்சரிப்பும், அதற்கேற்ற பாவங்களும்? பார்த்துக்கொண்டிருக்கும் போது நமக்குப் புல்லரிக்கும். அவர்தான் சிவாஜி.

    சிவாஜியுடன் பணியாற்றிய போது அவரிடமிருந்து “நேரம் தவறாமை, செய்யும் தொழிலே தெய்வம்” என்கிற அவ்விரு தாரகமந்திரத்தை அறிந்துகொண்டேன். அதை இன்றும் கடைப்பிடித்தும் வருகிறேன். சிங்கப்பூரில் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது நான் சரியான நேரத்திற்குச் சென்று விடுவேன். குறிப்பாக நான் முன்னின்று நடத்தும் எந்த நிகழ்ச்சியானாலும், சரியான நேரத்திற்குத் தொடங்கி, சரியான நேரத்தில் முடித்திடுவேன். அதனால் இப்போது, அன்பழகன் நிகழ்ச்சி என்றால் சிறப்புப் பேச்சாளர் வருவதற்கு ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்கி விடுவார் என சிங்கப்பூர் தமிழ் மக்களே அறிந்து கொண்டனர். அத்துடன் நான் சிங்கையில் வணிகம் செய்யும் போதும் சரியாக விடியல் ஆறு மணிக்கு முன்பே நானே கடையைத் திறந்து விடுவேன். அந்த வியாபார நேரத்தில் யாரேனும் எங்கே அழைத்தாலும் செய்கிற தொழிலை விட்டு விட்டுப் போகமாட்டேன். சிவாஜியிடம் கற்றுக் கொண்ட பாடம் என்னுடைய வாழ்க்கைக்கும் பெரிதும் பயன்பட்டது.

    காலை ஏழு மணி கால்ஷீட் என்றால் பொதுவாக பணியாற்றுபவர்கள் எல்லோரும் ஏறத்தாழ ஏழுமணிபோல்தான் ஸ்டுடியோவிற்கு வந்து சேர்வோம். அதன் பின் ஏற்பாடுகளைக் கவனிப்போம். கேமிராமேனிடம் காட்சியைச் சொல்லி, விளக்குகளை நடிகர்கள் நடமாடும் இடங்களில் பொருத்தச் சொல்வோம். காட்சிக்கேற்ற உடை அணிகலன்கள், ஒப்பனை ஆகியவற்றைச் சம்பந்தப் பட்டவர்களிடம் சொல்வோம். காட்சியில் வைக்க வேண்டிய பொருட்கள், காட்சிக்குத் தேவையான பொருட்களைச் சேகரிப்போம்.
    ‘கண்டினியூட்டி’ என்று சொல்லப்படும் தொடர்ச்சியான முன் காட்சியில் என்றோ ஒரு நாள் அதே நடிகர்கள் நடித்தபோது எடுக்கப்பட்ட படத்தை, தொடர் நடவடிக்கைக்காகப் பார்த்து வைத்துக் கொள்வோம். அதற்குள் டைரக்டர் வந்து விடுவார். அவர் ஒரு முறை எல்லாவற்றையும் சரி பார்ப்பார். தயாரிப்பு நிர்வாகியை அழைத்து நடிகர்கள் வந்துவிட்டார்களா? என்று கேட்பார். நடிகர் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தாலும், “ஆன் தி வே சார் ” என்று பவ்வியமாகப் பதில் சொல்லிவிட்டு நகர்ந்திடுவார். ஆக எப்படிப் பார்த்தாலும் படப்பிடிப்புக் கருவி இயங்கக் கிட்டத்தட்ட ஒன்பது மணியாகிவிடும். இப்படித்தான் பொதுவாக நடக்கும். இதை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு.

    இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய நெருக்கடி நிலை நேரத்தில் அலுவலகங்களில் எல்லாம் சுறுசுறுப்பாகப் பணிகள் நடந்ததுபோல், நடிகர் திலகம் அவர்களின் கால்ஷீட் என்றால் முதல்நாளே சம்பந்தப்பட்ட அனைவரும் பம்பரம்போல் சுழல ஆரம்பித்து விடுவார்கள். இன்னொரு செய்தி என்னவென்றால், மற்றவர்கள் பத்து கால்ஷீட்டுகளில் எடுப்பதை, சிவாஜி படப்பிடிப்பு என்றால் ஏழு கால்ஷீட்டுகளில் முடித்துவிடலாம். அந்த அளவிற்கு வேகமாக நடக்கும்.

    கதாநாயகனான சிவாஜியே முழு ஒப்பனையுடன் ஏழு மணி கால்ஷீட் என்றால் சரியாக ஆறு ஐம்பத்தைந்து மணிக்குத் தயாராய் இருப்பார். இவ்வாறு வேலை செய்யும்போது எவ்வளவு மகிச்சியாகவும், மனநிறைவாகவும் இருக்கும் தெரியுமா? அவருடன் பணியாற்றும் சக நடிகர்களும் கூடப் பயந்து கொண்டு சரியான நேரத்திற்குத் தயாராகி விடுவார்கள். ஆனால் எம் ஜி ஆர் படப்பிடிப்பு என்றால் பதினொரு மணிக்குத்தான் என்பார்கள்.

    பட்டுக்கோட்டையார் பாடி வைத்தாரே ” செய்யும் தொழிலே தெய்வம் ” என்று. அது சிவாஜி அவர்களைப் பார்த்துத்தான் பாடியிருப்பாரோ என்றுகூடத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு கதையின் பாத்திரமாகவே மாறிவிடுவார். காட்சிக்கு ஏற்ற மனநிலையை வரவழைத்துக் கொள்வார். அவர் நடிப்பு மிகையானது என்று வாதிடுவரும் உளர். அது ஓரளவு உண்மையாகவும் இருக்கலாம். இயல்பாக நடிப்பது என்பது ஒன்று. எதையும் மிகைப்படுத்தியே பேசியும், எழுதியும் வரும் நம் நாட்டினர் இப்படி நடித்தால்தான் ‘நடிப்பு’ என்றும் ஒத்துக் கொண்டார்கள். நடிப்பைப் பார்த்து உணர்ச்சி வசப்படுபவர்கள், கண்ணீர் சிந்துபவர்களாலே படம் ஓடியது. சிறந்த நடிகர் என்கிற விருதினை உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் அவருக்கு அளித்தார்கள். நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்திய இன்னொரு நடிகர் இந்தியாவில் இல்லை. சிவாஜி நடித்த படங்களை இந்தியில் மீண்டும் எடுக்க முற்படும் போது, படத்தைப் பார்த்தபின் எத்தனையோ நடிகர்கள், சிவாஜி போல் தன்னால் செய்ய முடியாது என்று பயந்து ஓடிய வரலாறும் உண்டு.

    நடிகர் திலகத்துடன், எதிரொலி படப்பிடிப்பு நேரத்தில் எனக்கு நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்புக் கிட்டியது. காரணம், நான் சிறியவன், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதோடு உறவுக்காரன் என்றுகூட நாங்கள் இருவரும் சொல்லிக் கொள்வோம். உங்களைக் கெடுத்தது டைரக்டர் பீம்சிங்தான் என்பேன். ஏண்டா அப்படிச் சொல்கிறாய்? என்று கேட்பார். ஆமாம். அவர்தானே உங்களைத் திருப்பதிக்கு அழைத்துச் சென்று ஆஸ்திகராக்கினார். எங்கள் இயக்கத்தை விட்டு அதன்பின்தானே விலகினீர்கள். இல்லையென்றால் இன்னும் நெருக்கமாக இருப்போமல்லயா? என்று சிறுவன் என்கிற பாதுகாப்பில் பேசுவேன். சிரித்துக் கொள்வார். அப்படிக் கேட்டதிலிருந்து ” நாத்திகப் பயலே ” என்று செல்லமாகத் தான் என்னை அழைப்பார். அப்படி அவர் என்னை அழைத்தபோது எனக்கு அவரிடம் உள்ள நெருக்கத்தையும் அன்பையும் நினைத்து இன்றும் மகிழ்ச்சியடைகிறேன்.

    கணேசன் நம்மைவிட்டு மறைந்து இருக்கலாம்; ஆனால் சிவாஜி மறையவில்லை, என அவர் மறைந்தபோது சிங்கப்பூரில் நடைபெற்ற இரங்கற் கூட்டத்தில் நான் பாடியது நினைவுக்கு வருகிறது. அதை உங்களோடு இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

  19. baskarasubbu says:

    1. Director 1 Director 2
    2. Paraasakthi பராசக்தி 17.10.1952 Krishnan Panchu
    3. Panam பணம் 27.12.1952 Krishnan, N.S.
    4. Paradesi (telugu) பரதேசி (தெலுங்கு) 14.01.1953 Prasad, L.V.
    5. Poongoathai பூங்கோதை 07.02.1953 Prasad, L.V.
    6. Thirumbi Par திரும்பிப்பார் 10.07.1953 Sundaram, T.R.
    7. Anbu அன்பு 24.07.1953 Natesan
    8. Kangal கண்கள் 05.11.1953 Krishnan Panchu
    9. Bombudu Koduku (telugu) பொம்புடு கொடுகு 13.11.1953 Bhimsingh, A.
    10. Manidanum Mirugamum மனிதனும் மிருகமும் 04.12.1953 Vembu, K. Sundaram, S.D.
    11. Manohara மனோகரா 03.03.1954 Prasad, L.V.
    12. Illara Jyothi இல்லற ஜோதி 09.04.1954 Rao, G.R.
    13. Andha Naal அந்த நாள் 13.04.1954 Balachandar,S.
    14. Kalyaanam Panniyum Brahmachari கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 13.04.1954 Nilakantan, P.
    15. Manohara (Hindi) மனோகரா (ஹிந்தி) 03.06.1954 Prasad, L.V.
    16. Manohara (Telugu) மனோகரா (தெலுங்கு) 03.06.1954 Prasad, L.V.
    17. Thuli Visham துளி விஷம் 30.07.1954 Samy, A.S.A.
    18. Koondukkili கூண்டுக்கிளி 26.08.1954 Ramanna, T.R.
    19. Thookkuthookki தூக்குத்தூக்கி 26.08.1954 Krishnasamy, Rm.
    20. Edirpaaradadu எதிர்பாராதது 09.12.1954 Narayana Murthy, Ch.
    21. Kaaveri காவேரி 13.01.1955 Yoganand, D.
    22. Mudal Thedhi முதல் தேதி 12.03.1955 Nilakantan, P.
    23. Ulagam Pala Vidam உலகம் பல விதம் 14.04.1955 Murugesh, S.A.
    24. Mangaiyar Thilagam மங்காயர் திலகம் 26.08.1955 Prasad, L.V.
    25. Kotteeswaran கோட்டீஸ்வரன் 13.11.1955 Nadkarni, Sundar Rao
    26. Kalvanin Kaadali கள்வனின் காதலி 13.11.1955 Raghavan, V.S.
    27. Naan Petra Selvam நான் பெற்ற செல்வம் 14.01.1956 Somu, K.
    28. Nalla Veedu நல்ல வீடு 14.01.1956 Sinha, J.
    29. Naanae Raaja நானே ராஜா 25.01.1956 Chandiran, R.R.
    30. Thenaali Raaman தெனாலி ராமன் 03.02.1956 Ranga, B.S.
    31. Pennin Perumai பெண்ணின் பெருமை 17.02.1956 Pullaiah, P.
    32. Raaja Raani ராஜா ராணி 25.02.1956 Bhimsingh, A.
    33. Amara Deepam அமர தீபம் 29.06.1956 Prakash Rao, T.
    34. Vaazhvilae Oru Naal வாழ்விலே ஒரு நாள் 21.09.1956 Kasilingam, A.
    35. Rangon Raadha ரங்கூன் ராதா 01.11.1956 Kasilingam, A.
    36. Paraasakthi (Telugu) பராசக்தி (தெலுங்கு) 11.01.1957 Krishnan Panchu
    37. Makkalai Petra Magarasi மக்களைப் பெற்ற மகராசி 27.02.1957 Somu, K.
    38. Vanagaamudi வணங்காமுடி 12.04.1957 Pullaiah, P.
    39. Pudhaiyal புதையல் 10.05.1957 Krishnan Panchu
    40. Manamagan Thevai மணமகன் தேவை 17.05.1957 Ramakrishna
    41. Thangamalai Ragasiyam தங்கமலை ரகசியம் 29.06.1957 Panthulu, B.R.
    42. Raani Lalithaangi ராணி லலிதாங்கி 21.09.1957 Raghunath, T.R.
    43. Ambigapathi அம்பிகாபதி 22.10.1957 Nilakantan, P.
    44. Bhaggiyavathi பாக்கியவதி 27.12.1957 Prasad, L.V.
    45. Bommala Pelli (Telugu) பொம்மல பெள்ளி (தெலுங்கி) 11.01.1958 Krishnasamy, Rm.
    46. Uthama Puthiran உத்தம புத்திரன் 07.02.1958 Prakash Rao, T.
    47. Padhi Bakthi பதிபக்தி 14.03.1958 Bhimsingh, A.
    48. Sampoorna Raamayanam சம்பூர்ண ராமாயணம் 14.04.1958 Somu, K.
    49. Bommai Kalyanam பொம்மை கல்யாணம் 03.05.1958 Krishnasamy, Rm.
    50. Annaiyin Aanai அன்னையின் ஆணை 04.07.1958
    51. Saaranga Daara சாரங்கதாரா 15.08.1958
    52. Sabaash Meena சபாஷ் மீனா 03.10.1958
    53. Kaathavaraayan காத்தவராயன் 07.11.1958
    54. Thanga Padumai தங்க பதுமை 10.01.1959
    55. Naan Sollum Ragasiyam நான் சொல்லும் ரகசியம் 07.03.1959
    56. Veerapandiya Kattabomman வீரபாண்டிய கட்டபொம்மன் 16.05.1959
    57. Maragatham மரகதம் 21.08.1959
    58. Aval Yaar அவள் யார் 30.10.1959
    59. Baaga Pirivinai பாக பிரிவினை 31.10.1959
    60. Irumbu Thirai இரும்புத் திரை 14.01.1960
    61. Kuravanchi குறவஞ்சி 04.03.1960
    62. Deivapiravi தெய்வப் பிறவி 13.04.1960
    63. Raaja Bakthi ராஜ பக்தி 27.05.1960
    64. Padikkada Medhai படிக்காத மேதை 25.06.1960
    65. Paavai Vilakku பாவை விளக்கு 19.10.1960
    66. Petra Manam பெற்ற மனம் 19.10.1960
    67. Vidivelli விடிவெள்ளி 31.12.1960
    68. Paava Mannippu பாவ மன்னிப்பு 16.03.1961
    69. Punar Janmam புனர் ஜென்மம் 21.04.1961
    70. Paasa Malar பாச மலர் 27.05.1961
    71. Ellam Unakkaga எல்லாம் உனக்காக 01.07.1961
    72. Sri Valli ஸ்ரீ வள்லி 01.07.1961
    73. Maruda Naattu Veeran மருத நாட்டு வீரன் 24.08.1961
    74. Paalum Pazhamum பாலும் பழமும் 09.09.1961
    75. Kappalottiya Thamizhan கப்பலோட்டிய தமிழன் 07.11.1961
    76. Parthal Pasi Theerum பார்த்தால் பசி தீரும் 14.01.1962
    77. Nichaya Thaamboolam நிச்சய தாம்பூலம் 09.02.1962
    78. Valar Pirai வளர் பிறை 30.03.1962
    79. Padithaal Mattum Podhuma படித்தால் மட்டும் போதுமா 14.04.1962
    80. Balae Paandiyaa பலே பாண்டியா 26.05.1962
    81. Vadivukku Valaikaappu வடிவுக்கு வளைகாப்பு 07.07.1962
    82. Senthaamarai செந்தாமரை 14.09.1962
    83. Bandha Paasam பந்த பாசம் 27.10.1962
    84. Aalayamani ஆலயமணி 23.11.1962
    85. Sitthoor Raani Padmini சித்தூர் ராணி பத்மினி 09.02.1963
    86. Arivaali அறிவாளி 01.03.1963
    87. Iruvar Ullam இருவர் உள்ளம் 29.03.1963
    88. Naan Vanangum Deivam நான் வணங்கும் தெய்வம் 12.04.1963
    89. Kulamagal Raadhai குலமகள் ராதை 07.06.1963
    90. Paar Magalae Paar பார் மகளே பார் 12.07.1963
    91. Kungumam குங்குமம் 12.08.1963
    92. Ratthathilakam ரத்த திலகம் 14.09.1963
    93. Kalyaaniyin Kanavan கல்யாணியின் கணவன் 20.09.1963
    94. Annai Illam அன்னை இல்லம் 15.11.1963
    95. Karnan கர்ணன் 14.01.1964
    96. Pachai Vilakku பச்சை விளக்கு 03.04.1964
    97. Aandavan Kattalai ஆண்டவன் கட்ட்ளை 12.06.1964
    98. Kai Kodutha Deivam கை கொடுத்த தெய்வம் 18.07.1964
    99. Pudhiya Paravai புதிய பறவை 12.09.1964
    100. Muradan Muthu முரடன் முத்து 03.11.1964
    101. Navaraathiri நவராத்திரி 03.11.1964
    102. Pazhani பழநி 14.01.1965
    103. Anbukkarangal அன்புக் கரங்கள் 19.02.1965
    104. Saanthi சாந்தி 22.04.1965
    105. Thiruvilaiyaadal திருவிளையாடல் 31.07.1965
    106. Neelavaanam நீலவானம் 10.12.1965
    107. Motor Sundaram Pillai மோட்டார் சுந்தரம் பிள்ளை 26.01.1966
    108. Mahaakavi Kaalidas மகாகவி காளிதாஸ் 19.08.1966
    109. Saraswathi Sabadam சரஸ்வதி சபதம் 03.09.1966
    110. Selvam செல்வம் 11.11.1966
    111. Kandhan Karunai கந்தன் கருணை 14.01.1967
    112. Nenjirukkum Varai நெஞ்சிருக்கும் வரை 12.03.1967
    113. Paesum Deivam பேசும் தெய்வம் 14.04.1967
    114. Thangai தங்கை 19.05.1967
    115. Palaadai பாலாடை 16.06.1967
    116. Thiruvarutchelvar திருவருட் செல்வர் 28.07.1967
    117. Iru Malargal இரு மலர்கள் 01.11.1967
    118. Ooty Varai Uravu ஊட்டி வரை உறவு 01.11.1967
    119. Thirumaal Perumai திருமால் பெருமை 16.02.1968
    120. Harischandira ஹரிச்சந்திரா 11.04.1968
    121. Galaatta Kalyaanam கலாட்டா கல்யைணம் 12.04.1968
    122. En Thambi என் தம்பி 07.06.1968
    123. Thillaana Mohanambal தில்லானா மோகனாம்பாள் 22.07.1968
    124. Enga Oor Raaja எங்க ஊர் ராஜா 21.10.1968
    125. Latchumi Kalyaanam லட்சுமி கல்யாணம் 15.11.1968
    126. Uyarndha Manidhan உயர்ந்த மனிதன் 29.11.1968
    127. Anbalippu அன்பளிப்பு 01.01.1969
    128. Thanga Churangam தங்க சுரங்கம் 28.03.1969
    129. Kaaval Deivam காவல் தெய்வம் 01.05.1969
    130. Guru Dhatchinai குரு தட்சணை 14.06.1969
    131. Anjal Petti 520 அஞ்சல் பெட்டி 520 27.06.1969
    132. Nirai Kudam நிறை குடம் 09.08.1969
    133. Deivamagan தெய்வ மகன் 05.09.1969
    134. Thirudan திருடன் 10.10.1969
    135. Sivandha Mann சிவந்த மண் 10.11.1969
    136. Enga Maama எங்க மாமா 14.01.1970
    137. Darthi (Hindi) தர்த்தி (ஹிந்தி) 06.02.1970
    138. Vilaiyaattup Pillai விளையாட்டுப் பிள்ளை 20.02.1970
    139. Viyetnaam Veedu வியட்நாம் வீடு 11.04.1970
    140. Edhiroli எதிரொலி 27.06.1970
    141. Raaman Ethanai Raamanadi ராமன் எத்தனை ராமனடி 15.08.1970
    142. Engirundho Vandhaal எங்கிருந்தோ வந்தாள் 29.10.1970
    143. Sorkkam சொர்க்கம் 29.10.1970
    144. Paadhukaappu பாதுகாப்பு 27.11.1970
    145. Iru Duruvam இரு துருவம் 14.01.1971
    146. Thangaikkaaga தங்கைக்காக 06.02.1971
    147. Arunodhayam அருணோதயம் 05.03.1971
    148. Kulama Gunamaa குலமா குணமா 26.03.1971
    149. Praaptham பிராப்தம் 13.04.1971
    150. Sumathi En Sundari சுமதி என் சுந்தரி 13.04.1971
    151. Savaalae Samaali சவாலே சமாளி 03.07.1971
    152. Thaenum Paalum தேனும் பாலும் 22.07.1971
    153. Moondru Deivangal மூன்று தெய்வங்கள் 15.08.1971
    154. Baabu பாபு 18.10.1971
    155. Raaja ராஜா 26.01.1972
    156. Gnaana Oli ஞான ஒளி 11.03.1972
    157. Pattikkaada Pattanamaa பட்டிக்காடா பட்டணமா 06.05.1972
    158. Dharmam Engey தர்மம் எங்கே 15.07.1972
    159. Thavapudhalvan தவப் புதல்வன் 26.08.1972
    160. Vasantha Maaligai வசந்த மாளிகை 29.09.1972
    161. Needhi நீதி 07.12.1972
    162. Bharatha Vilas பாரத விலாஸ் 24.03.1973
    163. Raja Raja Chozhan ராஜ ராஜ சோழன் 31.03.1973
    164. Ponnoonjal பொன்னூஞ்சல் 15.06.1973
    165. Engal Thanga Raaja எங்கள் தங்க ராஜா 15.07.1973
    166. Gauravam கௌரவம் 25.10.1973
    167. Manidaril Maanikkam மனிதரில் மாணிக்கம் 07.12.1973
    168. Raajapart Rangadurai ராஜபார்ட் ரங்கதுரை 22.12.1973
    169. Sivagaamiyin Selvan சிவகாமியின் செல்வன் 26.01.1974
    170. Thaai தாய் 07.03.1974
    171. Vaani Raani வாணி ராணி 14.04.1974
    172. Thanga Padhakkam தங்க பதக்கம் 01.06.1974
    173. En Magan என் மகன் 21.08.1974
    174. Anbai Thaedi அன்பைத் தேடி 13.11.1974
    175. Manidanum Deivamaagalam மனிதனும் தெய்வமாகலாம் 11.01.1975
    176. Avandaan Manidhan அவன் தான் மனிதன் 11.04.1975
    177. Mannavan Vandhaanadi மன்னவன் வந்தானடி 02.08.1975
    178. Anbae Aaruyirae அன்பே ஆருயிரே 27.09.1975
    179. Dr.Sivaa டாக்டர் சிவா 02.11.1975
    180. Vaira Nenjam வைர நெஞ்சம் 02.11.1975
    181. Paattum Bharathamum பாட்டும் பரதமும் 06.12.1975
    182. Unakkaaga Naan உனக்காக நான் 26.01.1976
    183. Grahapravesam கிரகப் பிரவேசம் 10.04.1976
    184. Sathiyam சத்யம் 06.05.1976
    185. Uthaman உத்தமன் 26.06.1976
    186. Chithra Pournami சித்ரா பௌர்ணமி 22.10.1976
    187. Rojaavin Raaja ரோஜாவின் ராஜா 15.12.1976
    188. Avan Oru Sarithiram அவன் ஒரு சரித்திரம் 14.01.1977
    189. Dheepam தீபம் 26.01.1977
    190. Ilaiya thalaimurai இளைய தலைமுறை 28.05.1977
    191. Naam Pirandha Mann நாம் பிறந்த மண் 07.09.1977
    192. Annan Oru Koyil அண்ணன் ஒரு கோயில் 10.11.1977
    193. Andhamaan Kaadhali அந்தமான் காதலி 26.01.1978
    194. Thiyaagam தியாகம் 04.03.1978
    195. Ennaippol Oruvan என்னைப் போல் ஒருவன் 19.03.1978
    196. Punniya Bhoomi புண்ணிய பூமி 12.05.1978
    197. General Chakkaravarthi ஜெனரல் சக்கரவர்த்தி 16.06.1978
    198. Thacholi Ambu (Malayalam) தச்சோளி அம்பு (மலையாளம்) 27.10.1978
    199. Pilot Premnath பைலட் பிரேம்நாத் 28.10.1978
    200. Justice Gopinath ஜஸ்டிஸ் கோபிநாத் 16.12.1978
    201. Thirisoolam திரிசூலம் 26.01.1979
    202. Kavari Maan கவரி மான் 06.04.1979
    203. Nalladoru Kudumbam நல்லதொரு குடும்பம் 03.05.1979
    204. Imayam இமயம் 21.07.1979
    205. Naan Vaazha Vaippaen நான் வாழ வைப்பேன் 10.08.1979
    206. Pattakkatthi Bhairavan பட்டாக்கத்தி பைரவன் 19.10.1979
    207. Vetrikku Oruvan வெற்றிக்கு ஒருவன் 08.12.1979
    208. Rishimoolam ரிஷிமூலம் 26.01.1980
    209. Dharmaraaja தர்மராஜா 26.04.1980
    210. Yamanukku Yaman யமனுக்கு யமன் 16.05.1980
    211. Rattha Paasam ரத்தபாசம் 14.06.1980
    212. Viswaroopam விஸ்வ ரூபம் 06.11.1980
    213. Mohanapunnagai மோகன புன்னகை 14.01.1981
    214. Satthiya Sundaram சத்திய சுந்தரம் 21.02.1981
    215. Amara Kaaviyam அமர காவியம் 24.04.1981
    216. Kal Thoon கல் தூண் 01.05.1981
    217. Loory Driver Raajaakkannu லாரி டிரைவர் ராஜாக்கண்ணு 03.07.1981
    218. Maadi Veettu Yaezhai மாடி வீட்டு ஏழை 22.08.1981
    219. Keezhvaanam Sivakkum கீழ் வானம் சிவக்கும் 18.10.1981
    220. Hitler Umaanath ஹிட்லர் உமாநாத் 26.01.1982
    221. Oorukku Oru Pillai ஊருக்கு ஒரு பிள்ளை 05.02.1982
    222. Vaa Kannaa Vaa வா கண்ணா வா 06.02.1982
    223. Garudaa Sowkkiyamaa கருடா சௌக்கியமா 25.02.1982
    224. Sangili சங்கிலி 14.04.1982
    225. Vasanthathil Or Naal வசந்தத்தில் ஓர் நாள் 07.05.1982
    226. Theerppu தீர்ப்பு 21.05.1982
    227. Neevuri gappina Nippu (telugu) நீவுரு கப்பின நெப்பு (தெலுங்கு) 24.06.1982 Chandrasekhara Reddy, P.
    228. Thyaagi தியாகி 03.09.1982
    229. Thunai துணை 01.10.1982
    230. Paritchaikku Neramaachu பரீட்சைக்குக நேரமாச்சு 14.11.1982
    231. Oorum Uravum ஊரும் உறவும் 14.11.1982
    232. Nenjangal நெஞ்சங்கள் 10.12.1982
    233. Bejavaada beppuli (Telugu) பெஜவாடா பொப்பிலி (தெலுங்கு) 14.01.1983 Vijayanirmala
    234. Needhipadhi நீதிபதி 26.01.1983
    235. Imaigal இமைகள் 12.04.1983
    236. Sandhippu சந்திப்பு 16.06.1983
    237. Sumangali சுமங்கலி 12.08.1983
    238. Mirudanga Chakkaravarthi மிருதங்க சக்கரவர்த்தி 24.09.1983
    239. Vellai Roja வெள்ளை ரோஜா 01.11.1983
    240. Thiruppam திருப்பம் 14.01.1984
    241. Siranjeevi சிரஞ்சீவி 17.02.1984
    242. Tharaasu தராசு 16.03.1984
    243. Vaazhkkai வாழ்க்கை 14.04.1984
    244. Saritthira Naayakan சரித்திர நாயகன் 26.05.1984
    245. Simma Soppanam சிம்ம சொப்பனம் 30.06.1984
    246. Ezhudaadha Sattangal எழுதாத சட்டங்கள் 15.08.1984
    247. Iru Maedhaigal இரு மேதைகள் 14.09.1984
    248. Dhaavani Kanavugal தாவணி கனவுகள் 14.09.1984
    249. Vamsa Vilakku வம்ச விளக்கு 23.10.1984
    250. Bandham பந்தம் 26.01.1985
    251. Naam Iruvar நாம் இருவர் 08.03.1985
    252. Padikkaada Pannaiyaar படிக்காத பண்ணையார் 23.03.1985
    253. Needhiyin Nizhal நீதியின் நிழல் 13.04.1985
    254. Naermai நேர்மை 03.05.1985
    255. Mudhal Mariyaadhai முதல் மரியாதை 15.08.1985
    256. Raajarishi ராஜரிஷி 20.09.1985
    257. Padikkaadhavan படிக்காதவன் 11.11.1985
    258. Saadhanai சாதனை 10.01.1986
    259. Marumagal மருமகள் 26.01.1986
    260. Aanandakkanneer ஆனந்தக் கண்ணீர் 07.03.1986
    261. Viduthalai விடுதலை 11.04.1986
    262. Thaaikku Oru Thaalaattu தாய்க்கு ஒரு தாலாட்டு 16.07.1986
    263. Latchumi Vandhaachu லட்சுமி வந்தாச்சு 01.11.1986
    264. Mannukkul Vairam மண்ணுக்குள் வைரம் 12.12.1986
    265. Raaja Mariyaadai ராஜ மரியாதை 14.01.1987
    266. Kudumbam Oru Kovil குடும்பம் ஒரு கோவில் 26.01.1987
    267. Muthukkal Moondru முத்துக்கள் மூன்று 06.03.1987
    268. Veerapandiyan வீர பாண்டியன் 14.04.1987
    269. Anbulla Appa அன்புள்ள அப்பா 16.05.1987
    270. Viswanatha Naicker (Telugu) விஸ்வநாத நாயக்கடு (தெலுங்கு) 14.08.1987 Narayana Rao, Dasari
    271. Agni Puthrudu (Telugu) அக்னி புத்ருடு (தெலுங்கு) 27.08.1987 Raghavendra Rao, K.
    272. Krishnan Vandhaan கிருஷ்ணன் வந்தான் 28.08.1987
    273. Jallikkattu ஜல்லிக்கட்டு 28.08.1987
    274. Dhaampathyam தாம்பத்யம் 20.11.1987
    275. En Thamizh En Makkal என் தமிழ் என் மக்கள் 02.09.1988
    276. Pudhiya Vaanam புதிய வானம் 10.12.1988
    277. Gnaana Paravai ஞான பறவை 11.01.1991
    278. Naangal நாங்கள் 13.03.1992
    279. Chinna Marumagal சின்ன மருமகள் 23.05.1992
    280. Mudhal Kural முதல் குரல் 14.08.1992
    281. Daevar Magan தேவர் மகன் 25.10.1992
    282. Paarambariyam பாரம்பர்யம் 13.11.1993
    283. Pasumpon பசும்பொன் 14.04.1995
    284. Once More ஒன்ஸ் மோர் 04.07.1995
    285. Oru Yaathra Mozhi (Malayalam) ஒரு யாத்ரா மொழி (மலையாளம்) 15.08.1997
    286. En Aasa Raasaavae என் ஆச ராசாவே 28.08.1998
    287. Mannavaru Chinnavaru மன்னவரு சின்னவரு 15.01.1999
    288. Padaiyappa படையப்பா 10.04.1999
    289. Poopparikka Varugirom பூப்பறிக்க வருகிறோம் 17.09.1999
    சிறப்புத் தோற்றம்
    290. Marma Veeran (G) மர்மவீரன் 03.08.1956
    291. Thaayaippola Pillai Noolaippola Selai (G) தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை 14.04.1959
    292. Kuzhandaigal Kanda Kudiyarasu (G) குழந்தைகள் கண்ட குடியரசு 29.07.1959
    293. Thaayae Unakkaaga (G) தாயே உனக்காக 26.08.1966
    294. Sinima Paitthiyam (G) சினிமா பைத்தியம் 31.01.1975
    295. Uruvangal Maaralaam (G) உருவங்கள் மாறலாம் 14.01.1983
    296. Natchatthiram (G) நட்சத்திரம் 12.04.1980
    297. Pillalu Thechina Thellalu Raajyam (G) (T) பில்லலு தெச்சின தெல்லலு ராஜ்யம் (தெலுங்கு) 01.07.1960
    298. Ramadasu (G) (T) ராமதாஸு (தெலுங்கு) 23.12.1964 Nagaiah, Chittoor V.
    299. Bangaaru Bapu (G) (T) பங்காரு பாபு (தெலுங்கு) 15.03.1973 Rajendra Prasad, V.B.
    300. Baktha Thukkaaraam (G) (T) பக்த துகாராம் (தெலுங்கு) 05.07.1973 Madhusudhan Rao, V.
    301. Jeevana Theeraalu (G) (T) ஜீவன தீராலு (தெலுங்கு) 12.08.1977 Shekhar, G.C.
    302. Chaanakya Chandragupta (G) (T) சாணக்ட சந்திரகுப்தா (தெலுங்கு) 25.08.1977 Rama Rao, N.T.
    303. School Master (G) (K) ஸ்கூல் மாஸ்டர் (கன்னடம்) 31.01.1958
    304. Makkala Raajya (G) (M) மக்கள ராஜ்ய (மலையாளண்) 05.08.1960
    305. School Master (G) (H) ஸ்கூல் மாஸ்டர் (ஹிந்தி) 03.04.1964

பின்னூட்டமொன்றை இடுக