ரஹ்மானின் சினிமா வரவுக்கு முதல் காரணம் இளையராஜாதான்!


விமல் அனுப்பிய தகவல். அவரே எழுதியதா இல்லை எங்கிருந்தாவது கட் பேஸ்ட் செய்தாரா தெரியவில்லை. அவர் சுட்டி எதுவும் தரவில்லை; ஆனாலும் யாருக்காவது சுட்டியோ, இல்லை ஏதாவது பத்திரிகையில் வந்ததது என்பது தெரிந்தாலோ சொல்லுங்கள், குறைந்தபட்சம் ஒரு acknowledgment ஆவது பதித்துவிடுகிறேன். இது விகடனில் வந்த கட்டுரை என்று இலா தகவல் தருகிறார். அவருக்கும் விகடனுக்கும் நன்றி! ஓவர் டு விமல்!

1989 தீபாவளி சமயம். கவிதாலயா நிறுவனத்திற்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியிருந்தது. காரணம் இசைஞானி இளையராஜா. தன்னுடைய திரையிசைக்காகத்தான் சினிமா ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து குவிகிறார்கள் என்பதில் அசைக்க முடியாத, ஆணித்தரமாக நம்பிக்கை கொண்டிருந்தார் இசைஞானி.

கே.பாலசந்தர்

கே.பாலசந்தர்

புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தினை தீபாவளி ரிலீஸாக கொண்டு வர வேண்டிய சூழலில் இருந்ததால் ‘இயக்குநர் சிகரம்’ கே. பாலசந்தர்
இளையராஜா

இளையராஜா

மிகுந்த பரபரப்பில் இருந்தார். பி்ன்னணி இசைக் கோர்ப்பு மட்டும் முடிந்தால், அடுத்து வெளியீட்டு வேலையில் இறங்கிவிடலாம் என்ற நினைப்பில் இசைஞானிக்காக கவிதாலயா காத்திருந்தது.

அதே நேரம் இசைஞானிக்காக பல திரைப்படங்களின் இசைக் கோர்ப்புகளும் காத்திருந்தன. அவரும் சும்மா இல்லை, கைவசம் 15 திரைப்படங்களை வைத்திருந்தார். ஒரு நாளைக்கு ஒரு திரைப்படத்திற்கென்று கால்ஷீட்டை ஒதுக்கி நோட்ஸ் மட்டும் கொடுத்துவிட்டு, மறுநாள் வேறொரு திரைப்படத்திற்குச் சென்று சளைக்காமல் பணி செய்து கொண்டிருந்தார்.

புதுப்புது அர்த்தங்களில் இசைஞானியின் திரைப்பாடல்கள் அமர்க்களமாக வந்திருக்க, அதே போல் பின்னணி இசையிலும் அமர்க்களப்பட வைக்க வேண்டும் என்பதற்காக இசைஞானியை நேரடியாக இசைக்கோர்ப்புப் பணியில் ஈடுபட வைக்க கவிதாலயா முயற்சி செய்தது. இசைஞானி சிக்கவில்லை. கடும் போராட்டத்திற்குப் பின் அவரிடம் பேசியபோது மிகுந்த கோபப்பட்டுவிட்டாராம்.

ஒரு ஆடியோ கேஸட்டை கொடுத்து, ‘நீங்க கூப்புடுற நேரத்துக்கெல்லாம் என்னால வர முடியாது. நான் வேணும்னா நீங்க வெயிட் பண்ணித்தான் ஆகணும். இல்லைன்னா, நான் ஏற்கெனவே போட்ட டிராக்ஸ் இதுல நிறைய இருக்கு. நீங்களே இருக்குறத பார்த்து போட்டுக்குங்க’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் இசைஞானி.

இதனை மிகப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்ட கவிதாலயா, இனி எந்தத் திரைப்படத்திற்கும் இசைஞானியை அணுகுவதில்லை என்ற முடிவை அப்போதுதான் எடுத்தது.

கோபம்தான். சட்டென்று எழுந்த கோபம். படைப்பாளிகளுக்கு எப்போதுமே ஈகோவும், அதன் பக்கவாத நோயான முன்கோபமும்தான் முதலிடத்தில் இருக்கும். முதலில் வந்தது இசைஞானிக்கு. இது எங்கே போய் முடியும் என்று அப்போது அவருக்கும் தெரியாது. இரண்டாவதாக கோபப்பட்ட இயக்குநர் சிகரத்திற்கும் தெரியாது.

மறு ஆண்டு. மும்பை. தளபதி திரைப்படத்திற்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணியில் ராப்பகலாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார் இசைஞானி. படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களின் இசை, தியேட்டரிலேயே ரசிகர்களை எழுந்து ஆட வைக்கப் போகிறது என்பதை இயக்குநர் மணிரத்னமும், இசைஞானியும் அறிந்ததுதான். அதேபோல் மணிரத்னமும் தான் நினைத்தபடியே பி்ன்னணி இசையும் அதே வேகத்தில், அதே பாணியில் இருக்க வேண்டும் என்று சொல்லி இசைஞானியிடம் வற்புறுத்திக் கொண்டிருந்த நேரம்.

ஏதோ ஒரு மதிய நேரம் என்கிறார்கள். இருவருக்குள்ளும் ஒரு சிறிய வார்த்தை பிரயோகம் எழுந்து, அது மணிரத்னத்தை ஸ்டூடியோவைவிட்டு வெளியேறச் செய்திருக்கிறது. மறுநாள் விடியற்காலையிலேயே தயாரிப்பாளர் ஜி. வெங்கடேஷ்வரன் சென்னையிலிருந்து மும்பைக்கு ஓடோடிப் போய் இருவருக்குமிடையில் சமாதானம் செய்து பார்த்தும், அது முடியாமல் போனது. இங்கேயும் முதலில் கோபம் எழுந்தது இசைஞானியிடமிருந்துதான். நிமிட நேரம் கோபம்தான். தொடர்ந்து எழுந்தது மணிரத்னத்தின் கோபம்.

இந்த முக்கோண முறைப்பு, தமிழ்ச் சினிமாவில் ஒரு புதிய இசைப் புயலை உருவாக்கப் போகிறது என்று மூவருமே அந்த நேரத்தில் நினைத்திருக்க மாட்டார்கள்! ஆனால் உருவாக்கப்பட்டது. அது காலத்தின் கட்டாயம்! இறைவனின் விருப்பமும் இதுவே.

இப்போது மணிரத்னத்திற்கும் இதே எண்ண அலைகள்தான். தன்னால் மறுபடியும் இசைஞானியை வைத்து வேலை வாங்க முடியாது. அல்லது அவரிடம் பணியாற்ற முடியாது என்பதுதான்.

இந்த நேரத்தில்தான் கே.பி. தனது கவிதாலயா நிறுவனத்திற்காக ஒரு படத்தினை இயக்க வேண்டும் என்று கேட்டு மணிரத்னத்தை சந்தித்தார். சந்தித்த நிமிடத்தில் அதனை ஒத்துக் கொண்ட மணிரத்னம் கதையைவிட, இசைக்கு யாரை அணுகுவது என்கிற தேடலில் மூழ்கிப் போனார்.

அவரை எப்போதும் போல் அன்றைக்கும் சந்திக்க வந்த அப்போதைய விளம்பரப்பட இயக்குநரான ராஜீவ் மேனன், ‘இந்த மியூஸிக்கை கேட்டுப் பாருங்க’ என்று சொல்லி ஒரு ஆடியோ கேஸட்டை மணிரத்னத்தின் கையில் திணித்தார். அது ராஜீவ் மேனனின் ஒரு மூன்று நிமிட விளம்பரத்திற்கு ரஹ்மான் போட்டிருந்த இசை. அந்த இசையைக் கேட்டுவிட்டு அதில் ஈர்ப்படைந்த மணிரத்னம், தொடர்ந்து ரஹ்மான் போட்டிருந்த அனைத்து விளம்பர ஜிங்கிள்ஸ்களையும் வாங்கிக் கேட்டுப் பார்த்துவிட்டு, அப்போதே முடிவு செய்து கொண்டார் இவர்தான் தனது அடுத்த இசையமைப்பாளர் என்று.

ஏ.ஆர். ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான்

ஒரு ஆட்டோவில் சாதுவாக வந்திறங்கிய அந்தப் பையனைப் பார்த்து, கவிதாலாயா நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள்கூட நம்பவில்லையாம், இவர்தான் நமது அடுத்தப் படத்தின் இசையமைப்பாளர் என்று.

ஆனால் அலுவலகத்தில் இருந்த ஒருவர் மட்டும் டேப் ரிக்கார்டரில் அந்த இளைஞர் போட்டிருந்த விளம்பர இசையைக் கேட்ட மாத்திரத்தில், சந்தோஷமாக துள்ளிக் குதித்து சம்மதித்தார். அவர் கவிதாலயாவின் தூணாக விளங்கிய திரு.அனந்து. உலக சினிமாவின் சரித்திரத்தையும், கதைகளையும் விரல் நுனியில் வைத்திருந்த அந்த உன்னதப் படைப்பாளி, இந்த இசையமைப்பு வேறு ஒரு ரீதியில் தமிழ்த் திரையுலகைக் கொண்டு போகப் போகிறது என்பதை மிக எளிதாகப் புரிந்து கொண்டு புத்தம் புது இசையமைப்பாளருக்கு முழு ஆதரவு கொடுக்க, சங்கடமில்லாமல், கேள்வி கேட்காமல் கே.பி.யால் இது அங்கீகரிக்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள் இப்போதும் சொல்கிறார்கள் படத்தின் பாடல்களை கேட்கின்றவரையில் யாருக்குமே நம்பிக்கையில்லை என்று!

தளபதி வரையிலும் வாலியுடன் இருந்த நெருக்கத்தை, அப்போதைக்கு முறித்துக் கொண்டு புதிதாக வைரமுத்துவுடன் கூட்டணி வைத்தார் மணிரத்னம். இசை ஒலிப்பதிவு செய்யப்பட்டவுடன் படத்தின் அனைத்துப் பாடல்களுமே இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கப் போகிறது என்பதை கே.பி.யும், வைரமுத்துவும், மணிரத்னமும் உணர்ந்தார்கள்.

ரோஜா திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை சோழா ஹோட்டலில் நடந்தபோது பேசிய கே.பாலசந்தர், “இந்தப் படத்தோட இசையமைப்பாளர் ரஹ்மானை எனக்கு அறிமுகப்படுத்த மணிரத்னம் அழைத்து வந்தபோது, நான் கூட ஏதோ எனக்குத் தெரியாத வேற்று மொழிக்காரரையோ, அல்லது வயதான, திரையுலகம் மறந்து போயிருந்த ஒருத்தரையோ அழைத்து வரப்போகிறார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் வந்தது இந்தச் சின்னப் பையன்தான். ஆனால் படத்தின் இசையைக் கேட்டபோது இது ஒரு புயலாக உருவெடுக்கப் போகிறது என்பதை இப்போது உணர்கிறேன். நிச்சயம் அதுதான் நடக்கப் போகிறது” என்றார். அவருடைய வாக்கு அடுத்த சில வருடங்களில் நிஜமாகவே நடந்துவிட்டது.

வீட்டிலேயே சிறிய அளவில் ஸ்டூடியோ வைத்து அதில் விளம்பரப் படங்களுக்கு இசையமைப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்த ரஹ்மான், தனக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அதற்கான முழுத் திறமையும் அவருக்குள் இருந்து, அதனை கொஞ்சமும் தயக்கமோ, சோம்பேறித்தனமோ இல்லாமல் சரியான சமயத்தில், கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இயக்குநர் சிகரத்தின் நிறுவனம் என்கிற பேனர். மணிரத்னம் என்ற மாபெரும் இயக்குநர். இவர்கள் இருவரின் நேரடி பார்வையில் தன்னை பட்டென்று பற்றிக் கொள்ளும் சூடமாக ஆக்கிக் கொண்டு ஜெயித்தது திறமைதான்.

ராஜீவ் மேனன் மட்டும் அன்றைக்கு அந்தச் சூழலில் ரஹ்மானைப் பற்றிச் சொல்லாமல் இருந்திருந்தால்,

இதன் காரணமாக ரஹ்மான், மணிரத்னம் கண்ணில் படாமல் போய் அவர் தான் ஏற்கெனவே யோசித்து வைத்திருந்த ஹிந்தி இசையமைப்பாளர்களையே அழைத்து வந்திருந்தால்,

இந்த ‘ரோஜா’ வாய்ப்பே ரஹ்மானிடம் சிக்காமல் போயிருந்திருக்கும்.

இதன் பின்னால் அவருக்கு யார் இப்படி ஒரு கோல்டன் சான்ஸை கொடுத்திருப்பார்கள் என்று யோசிக்க முடியவில்லை. ஆனால் ரஹ்மான் சொல்வது போல் இது தெய்வீகச் செயல். கிடைக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது, கிடைத்துவிட்டது.


வேறொரு இயக்குநரால் ரஹ்மான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதை அவரால் பெற்றிருக்க முடியுமா? சின்னச் சின்ன ஆசை உருவாகியிருக்குமா? அது இயக்குநரின் கற்பனையாச்சே! யோசித்தால் நடந்தும் இருக்கலாம், அல்லது நடவாமலும் இருக்கலாம் என்றுதான் என் மனதுக்குத் தோன்றுகிறது.

இந்த நன்றிக் கடனுக்காகத்தான் ஏவிஎம் நிறுவனம், தனது 150-வது படத்திற்கு ரஹ்மானை இசையமைப்பாளராக புக் செய்துவிட்டு, “யாரை இயக்குநராகப் போடலாம்?” என்று கேட்டபோது ரஹ்மான் தயங்காமல் கை காட்டியது ராஜீவ் மேனனை. தயக்கமே இல்லாமல் ஏற்றுக் கொண்டது ஏவிஎம். நன்றிக் கடன் தீர்க்கப்பட்டது. அத்திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று, ரஹ்மானுக்கே விருதுகளை வாரிக் கொடுத்தது.

ரஹ்மானின் திரையுலக வாழ்க்கை நமக்குச் சொல்கின்ற பாடங்கள் நிறைய!

சிந்துபைரவி படத்தின் பாடல்களைப் போல் ஒரு இயக்குநருக்கு கதைக்கேற்ற சிறந்த பாடல்கள் வேறெங்கே கிடைத்திருக்கும்?

தளபதி படத்தின் இசையைப் போல் ஒரு சூப்பர்ஹிட் கமர்ஷியல் படத்தின் தாக்கத்தை யாராவது உருவாக்க முடியும்?

ஆனால் இந்த இரண்டுமே ஒரு நொடியில் உடைந்து போனதே? அதன் பின் இன்றுவரையிலும் அது போன்ற இசை தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைக்கவில்லையே? நாம் நிச்சயம் இழந்திருக்கிறோம்!

ஆனால், ‘எல்லா சோகத்திலும் ஒரு வழி பிறக்கும்’ என்பார்கள். ‘எப்பேர்ப்பட்ட துக்கத்திலும் ஒரு செய்தி கிடைக்கும்’ என்பார்கள். இது இங்கே தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு இசைஞானியால் கிடைத்தது.

இளையராஜா என்ற மனிதரின் ஒரு நிமிட கோபத்தின் விளைவு, இப்போது ஆசியக் கண்டத்துக்கே பெருமை…

இந்தியாவுக்கே சிறப்பு…

தமிழ்த் திரைப்பட உலகத்திற்கே ஒரு மகுடம்…

எல்லாவற்றிலும் ஒரு காரண, காரியம் உண்டு. நம்புங்கள்! எல்லாம் இறைவன் செயலே!

மிஸ்டர். சம்பத்


By ஈ. கோபால்

படம் வெளியான தேதி: 13.4.1972,

நடிகர்கள் : சோ, முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், பூர்ணம் விசுவநாதன், நீலு, மாலி,  வெண்ணீராடை  மூர்த்தி, செந்தாமரை மற்றும் பலர்…
நடிகைகள்: ஜெயா, மனோரமா, சுகுமாரி, தேவகி, புஷ்பா, ராமலக்ஷ்மி மற்றும் பலர்
திரைக்கதை, வசனம், இயக்கம் : சோ,

மூலக்கதை : ஆர்.எம்.நாராயண்,

பாடல்கள் :கவிஞர் வாலி
பின்னனிப்பாடகர்கள் : டி.எம்.சௌந்தரராஜன், எம்.எஸ்.விசுவநாதன் (title song), எஸ்.பி.பாலசுப்ரமண்யம், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, மனோரமா
இசை: எம்.எஸ்.விசுவநாதன்

தன் தந்தையின் சாவுக்குக்காரணமான ‘நேர்மை’யும், அவரின் ஈமச்சடங்குக்கு பணமில்லாமல் பட்ட வேதனைகளையும் பார்த்து, மனது மாறி இனி ஒருபோதும் உண்மையைச் சொல்லி வாழ்வதில்லை என்று சபதமேற்று, பொய்யை ஒரு தொழிலாகவே செய்து வாழ்வு நடத்தும் கதாநாயகனாக வலம் வருகிறார் சோ.

இவரின் நண்பரும், பள்ளிப்பருவ தோழரான மேஜர் சுந்தர்ராஜனை தற்செயலாக ரயில் பயணத்தில் சந்திக்கிறார்.  டிக்கட் பரிசோதகரிடம் தன் சித்தப்பாதான் ரயில்வேயில் ‘ஜெனரல் மேனேஜர்’ என்று கூறி தான் பயணச்சீட்டு எடுக்காத்தை மறைத்து தப்பிக்கிறார்.  நேர்மையானவரும், எதிலுமே ஒரு வித தர்மத்தை
கடைபிடிப்பவருமான மேஜருக்கு சோவின் செயல் அருவெறுப்பைத்தருகிறது.  சோ செய்வது முற்றிலும் தவறு என்று வாதிடுகிறார். அவரின் தந்தையின் பண்பாட்டை கடைபிடிக்குமாறு அறிவுரை கூறுகிறார்.

இதை பொருட்படுத்தாத சோ, நேர்மை, தர்மம் என்பதெல்லாம் ஒரு ‘புருடா’ என்றும், அது இக்காலத்தில் சோறு போடாதென்றும் மறுத்துக்கூறி, தன்னுடைய இப்பழக்கத்தை மாற்றப்போவதில்லை என்கிறார்.  இருவருக்கும் ஒரு எழுதாப் பந்தயம் போட்டுக்கொள்கிறார்கள்.  மேஜரோ, ‘காலம் ஒரு நாள் உனக்கு பாடம்
புகட்டும்போது நான் சொன்னது உண்மை என்று நீ அறிவாய்” என்று கூறி ஒருவேளை ஏதாவது ஒரு நிகழ்வில் சோ பிடிக்கப்பட நேர்ந்தாலும், காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறி விடைபெறுகிறார்.

மேஜர் தன் கொள்கையில் வெற்றி பெற்றாரா, சோ வெற்றி பெற்றாரா என்பது மீதிக்கதை. ஒரு சின்ன சூட்கேஸ், ஒரு வெத்தலைப்பொட்டி, ஜிப்பா, ஜொலிக்கும் மூக்குக்கண்ணாடி, நக்கல் கலந்த முகபாவமும் அதனால் பிறக்கும் பேச்சு — இதுதான் இவரது மூலதனம். சூழ்நிலைக்கு தகுந்தவாறு பொய்சொல்வது, லாவகமாக அத்தருணத்தை தனது வெற்றியாக்கிக்கொள்வதும் சிரித்துக்கொண்டே காரியத்தை
சாதிப்பதும், குறுகிய நேரத்தில் ஒருவருடைய பலகீனத்தை கணித்து அவர்களை மடக்குவதையும் அநாசயமாக செய்திருக்கிறார் சோ.   நம்மிடம் உள்ள மிகப்பெரிய பலகீனமான சினிமா என்ற போதையை வைத்தே காயை நகர்த்துகிறார்.  இப்பொறியில் மாட்டும், மனோரமா, பூர்ணம் விசுவநாதன், மாலி, வீட்டு உரிமையாளர் நீலு, மரச்சாமான் விற்பனையாளர், என்று அனைவரையும் மிளகாய் அரைப்பது சிரிப்பை
மூட்டுகிறது. ஏதாவது ஒரு எண்ணை சுழற்றி, நடிகையிடம் பேசுவது போல் பாவ்லா காட்ட, ஒரு முறை பயில்வானுக்கு அந்த ஃபோன் போக, அவனோ இவன் யாரென்று கண்டுபிடித்து அங்கு வர, இவர் நீலுவை மாட்டிவிட்டு தப்பிப்பது நல்ல நகைச்சுவை.  வாடகை கொடுக்காமல், காசில்லாமல் வாய் ஜாலத்தை ஒன்றே வைத்து படத்தை ஓட்டுவது சோவின் சாதுர்யம்.

இவரின் பாச்சா முத்துராமனிடம் பலிக்காமல், மனோரமாவை பேச்சில் மயக்கி விழவைப்பது சுவையான பகுதி. இதில் மனோரமா இவர் மேல் காதல் வயப்பட்டு, இவரின் கடின வேலையை சுலபமாக்க, மற்றவர்களும் வலையில் விழுகிறார்கள். சினிமாவினால் ஈர்க்கப்படும் நான்குபேரை வைத்துக் கொண்டு கதையை நகர்த்தியிருப்பது அலுப்பை சில சமயம் தந்தாலும், காட்சிகளில் நகைச்சுவை
இருப்பதால் அறுக்கவில்லை.  கடைசியில் இவர் சொல்லும் வசனம் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறது ..…. ”எங்கப்பா செத்துப்போனப்ப கார்யத்துக்கே காசு இல்லாம போச்சு, நான் செத்துப்போனா எனக்கு கார்யம் பண்ண மனுஷனே இல்லாம போய்டுவா போலிருக்கு”.

இப்படத்தில் வெண்ணீராடை மூர்த்தி எப்போது வருகிறார் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, அவரின் பெயர் தலைப்பில் இருக்கிறது.  முத்துராமன் கோபக்கார, கண்டிப்பான இயக்குனராக நடித்துள்ளார்,
படப்பிடிப்பில் நடிக்கும் நடிகையையே இவர் காதலிப்பது அவ்வளவாக காட்சிக்குப்பொருந்தி வரவில்லை.  இவரின் பாத்திரம் அவ்வளவாக எடுபடவில்லை. கதாநாயகி ஜெயா ஒரு பாட்டுக்கு வந்து போகிறார். மீதி காட்சிகளில் மனோரமாவின் தோளிலேயே தொத்திக்கொண்டு போகிறார்.  மனோரமா ப்ரமாதம், இவரின்
பேச்சும், ஏற்ற இறக்கமும், வசன நடையை கையாளும்போது செலுத்தும் நடிப்பும் – இவரை மிஞ்ச இவரால்தான் முடியும்.  பயங்கர ‘timing’. படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் எப்போதும் திண்று கொண்டிருப்பதும், அழைப்பு பத்திரிகை கொடுக்க வந்த சுகுமாரி, மற்றும் நண்பிகளை தவறாக புரிந்துகொண்டு வாங்கு வாங்கு என்று வாங்குவதும் ரசிக்கவைக்கிறது.

மூன்று பாடல்களும் அருமை, “ஹரே ராம ஹரே கிருஷ்ணா” (எம்.எஸ்.வி), ”ஆரம்பம் ஆவது உன்னிடம் தான்” எஸ்.பி.பி, சுசீலா மற்றும், ‘அலங்காரம் எதற்கடி’ (டி.எம்.எஸ் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி/மனோரமா).

இது ஒரு கருப்பு வெள்ளைப்படம், முக்கால்வாசி ‘செட்’டிலேயே எடுக்கப்பட்டுள்ளது.  பல காட்சிகள் நாடகத்தனமாக உள்ளது. வசனங்கள் எல்லா சோ படம் போலவும் தத்துவத்தை தூக்கலாக வைத்துள்ளதும் யதார்த்தமாக உள்ளது.

இப்படம் வந்து அவ்வளவாக ஓடவில்லை என்கிறான்  என் நண்பன்.  தெரியவில்லை. இப்படத்தின் பிரதி எங்கும் கிடைக்காது, ஒருவேளை மலேசியா, சிங்கப்பூரில் கிடைக்கலாம், இந்தியாவில் இல்லை. சிறந்த படம், நல்ல பொழு்துபோக்குப் படம்  பாருங்கள்.

நூத்துக்கு நூறு


திருப்பி கொஞ்சம் விமர்சனங்களை ஆரம்பிக்கலாம் என்று பார்க்கிறேன்.

நூத்துக்கு நூறு கொஞ்சம் புத்திசாலித்தனமான படம். அன்றைக்கு புத்திசாலித்தனமாகத் தெரிந்த முடிச்சு, காட்சி அமைப்பு இன்றைக்கும் புத்திசாலித்தனமாக இருப்பதில்லைதான், ஆனாலும் ஒரிஜினல் எண்ணம் தெளிவாகத் தெரிகிறது, பாராட்ட வேண்டிய முயற்சி.

ராஷோமான், அந்த நாள் மாதிரி காட்சி அமைப்பு. ஒரு சம்பவம் இப்படி நடந்தது என்று ஒருவர் ஃப்ளாஷ்பாக்காக சொல்வார்; இல்லை இப்படித்தான் நடந்தது என்று அடுத்தவர் சொல்வார். காமெரா கோணம் விரிந்துகொண்டே போய் இன்னும் இன்னும் காட்சிகள் தெரிவது போல ஒரு உணர்வு.

கல்லூரியில் பாப்புலர் ப்ரொஃபசர் ஜெய்ஷங்கர். ஆங்கிலோ-இந்தியர் வி.எஸ். ராகவன் வீட்டில் வாடகைக்கு இருக்கிறார். ராகவனோடு நல்ல உறவு. தன் மாணவன் நாகேஷின் சகோதரி லக்ஷ்மியோடு நிச்சயதார்த்தம் ஆகிறது. திடீரென்று அவர் மீது ஒருவர் மாற்றி பெண்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மாணவி ஸ்ரீவித்யா ஜெய் தன்னை கெடுக்க முயன்றார் என்று குற்றம் சாட்டுகிறார். இன்னொரு மாணவி தனக்கு அவர் லவ் லெட்டர் கொடுத்தார் என்கிறார். வி.எஸ். ராகவனின் மகள் விஜயலலிதா ஜெய்தான் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா என்கிறார். ஜெய் கைது செய்யப்படுகிறார். பிறகு?

பழைய படம், எல்லாரும் பார்த்திருப்பார்கள். அதனால் சஸ்பென்ஸ் எல்லாம் வைக்க வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். கதையின் முக்கியமான முடிச்சு – தன்னை கெடுக்க முயலும் ப்ரொஃபசரிடமிருந்து தப்பி ஓடும் பெண் பாடப்புத்தகங்களையும் பையையும் கவனமாக எடுத்துக் கொண்டு போகமாட்டாள் என்ற பாயின்ட் – நன்றாக வந்திருக்கிறது. அதில் நான் மிகவும் ரசித்தது இயக்குனரின், அன்றைய ரசிகர்களின் tacit முடிவு – அப்படி புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்தாள் என்று பெண்ணின் அம்மா உண்மையைத்தான் சொல்வாள், பொய் சாட்சி சொல்லமாட்டாள் என்பதுதான். கதாபாத்திரங்கள் பொதுவாக உண்மையைத்தான் சொல்வார்கள் என்பது அன்றைக்கு ஒரு unspoken assumption ஆக இருந்திருக்கிறது.

ஜெய் நன்றாக நடித்திருக்கிறார். அதுவும் ஸ்ரீவித்யா என்ன நடந்தது என்று சொல்லும்போது ஃப்ளாஷ்பாக்கில் அவர் விடும் ரொமாண்டிக் லுக்கும், தானே விவரிக்கும்போது அவர் முகத்தில் காட்டும் கண்டிப்பும் நல்ல கான்ட்ராஸ்ட். நாகேஷை மாணவனாக ஒத்துக் கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான். கொஞ்சம் மிகை நடிப்புதான். ஆனால் போலீஸ் அதிகாரி ஸ்ரீகாந்த் அவரை விசாரிக்கும்போது அவர் பேசுவது நன்றாக இருக்கும். காலேஜ் பிரின்சிபால் ஜெமினி கணேசன் சின்ன ரோலில் திறமையாக நடித்திருப்பார். வி.எஸ். ராகவனுக்கு over the top ரோல். சிவாஜி சாயல் அடிக்கிறது. அது சரி, இன்றைக்கும் கூட சிவாஜி சாயல் இல்லாத நடிப்பைப் பார்ப்பது கஷ்டம்தான்.

சில வசனங்களில் புத்திசாலித்தனம் தெரிகிறது. ஜெய் மீது எல்லாரும் குறை சொல்லும்போது நாகேஷ் வெள்ளை சுவரில் ஒரு கறுப்புப் புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். கறுப்புப் புள்ளி என்று சஹஸ்ரநாமம் சொன்னதும் இவ்வளவு பெரிய வெள்ளைச் சுவர் தெரியவில்லையா என்பார்.

சில இடங்களில் இயக்குனர் கோட்டை விடுகிறார். ஜெய் ஸ்ரீவித்யா தன் மேல் ஆசைப்படுகிறார் என்ற உண்மையை முதலில் சொல்லமாட்டார். ஏனென்றால் அது வெளியே தெரிந்தால் அவளை எல்லாரும் கேவலமாகப் பார்ப்பார்கள் என்பார். ஆனால் அவரே இதை எல்லாருக்கும் தெரியப்படுத்துகிறேன் என்று ஸ்ரீவித்யாவை மிரட்டுவார். அதனால்தான் ஸ்ரீவித்யா பொய்யாக அவர் மேல் பழி போடுவதே!

1970-இல் வந்த படம். ஜெய், லக்ஷ்மி, நாகேஷ், வி.எஸ். ராகவன், விஜயலலிதா, ஜெமினி, ஸ்ரீகாந்த் தவிர எஸ்.வி. சஹஸ்ரநாமம், வி. கோபாலகிருஷ்ணன், நீலு, ஒய்.ஜி. மகேந்திரன் (முதல் படம்), மனோகர், சுகுமாரி, எஸ்.என். லட்சுமி முகங்கள் தெரிகிறது. ஒரு சின்ன அம்மா ரோலில் வருவது ஜெயந்தி மாதிரி இருக்கிறது, ஆனால் 70-இலேயே ஜெயந்திக்கு அம்மா ரோலா என்று சந்தேகமாக இருக்கிறது. கதை வசனம் இயக்கம் பாலச்சந்தர். பாடல்கள் வாலி என்று நினைக்கிறேன். இசை வி. குமார்.

படத்தில் இரண்டு ஹிட் பாட்டுகள் – நான் உன்னை மாற்றிப் பாடுகிறேன் ஒன்று. அதுவும் மூன்று முறை வரும். ஒரு முறை விஜயலலிதா முதலில் விவரிக்கும் கோணத்தில், ஒரு முறை ஜெய்யின் கோணத்தில், இன்னொரு முறை முழு உண்மையாக. இப்போது கூட புத்திசாலித்தனமான காட்சியாகத்தான் தெரிகிறது.

இன்னொன்று நித்தம் நித்தம் ஒரு புத்தம் புது சுகம். இதுவும் அன்றைக்கு புதுமையான முறையில் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. Silhoutte உத்தி நன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பாட்டில் இருக்கும் துள்ளலும் பொருத்தமாக இருக்கிறது.

பூலோகமா என்று தொடங்கும் ஒரு நாடகப் பாட்டு ஒன்று. நாகேஷ் சத்தியவான் சாவித்திரி நாடகம் போடுகிறார். பிரமாதம் என்று சொல்வதற்கில்லை, ஆனால் பார்க்கலாம், கேட்கலாம்.

உங்களில் ஒருவன் நான் என்று இன்னொரு பாட்டு. மறந்துவிடலாம்.

சுருக்கமாக பாலச்சந்தரின் சிறந்த படங்களில் ஒன்று. பார்க்கலாம். பத்துக்கு ஏழு மார்க். பி க்ரேட்.

உலகம் சுற்றும் பன்!


தகவல் தந்த ஸ்ரீனிவாசுக்கு நன்றி!

உலகம் சுற்றும் வாலிபன் படம் ரெடியாயிட்டிருந்த நேரம். பல பரபரப்புகளுக்கு நடுவுல எம்ஜியார் படத்தை ஆரம்பிச்சிருந்தார்.

பாட்டு எழுத கவிஞர் வாலியை கூப்பிட்டிருக்காங்க. வாலி வழக்கம் போல வார்த்தைகளால ஜாலம் காட்ட, எம்ஜியாருக்கு ரொம்ப சந்தோஷம்.

அமர்க்களமான ட்யூனோட வாலியோட வரிகளும் சேர, ரெக்கார்டிங் முடிஞ்சுது.

பல பிரச்னைங்க இருந்தாலும், எப்படியோ கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்கு போய் ஷூட்டிங்க முடிச்சுட்டு வந்தார் தலைவர்.

எடிட்டிங் முடிஞ்சு, இறுதி கட்ட வேலைங்க எல்லாம் முடிச்சு படம் கிட்டத்தட்ட ரெடி.

படத்துல இருக்க அத்தனை பாட்டும் சூப்பர் ஹிட்டாகும்னு எம்ஜியார் கூட இருந்தவங்க கிட்ட சொல்லிட்டிருந்தார்.

எம்ஜியாருக்கு வாலி ரொம்ப செல்லம். “என்ன ஆண்டவரே”ன்னு தான் கூப்பிடுவார். சரி, வாலியைக் கொஞ்சம் வெறுப்பேத்தலாம்னு, எம்ஜியார் வாலிய கூப்பிட்டு, “இந்த படத்துல பாட்டு எல்லாம் நல்லா வந்திருக்கு. ஆனா உங்க பேரை நான் டைட்டில்ல போட போறதில்லை” அப்டீன்னாராம்.

வாலி சிரிச்சுகிட்டே கம்முனு இருந்திருக்கார்.

“அட, நிஜமாதான் சொல்றேன். உங்க பேர் வராது.”

“என் பேரை போடாம உங்களால படத்தை ரிலீஸ் பண்ண முடியாது.”

“அப்டியா? நான் ரிலீஸ் பண்ணிட்டா?”

“எப்டிங்க ரிலீஸ் பண்ணுவீங்க? படத்தோட பேரு ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இதுல ‘வாலி’ங்கறத எடுத்துட்டா ‘உலகம் சுற்றும் பன்’ ஆயிடும். மக்கள் திலகம் நடிக்கும் ‘உலகம் சுற்றும் பன்’ அப்டீனா போஸ்டர் ஒட்டுவீங்க?”

எம்ஜியார் பலமாக சிரிச்சுகிட்டே வாலியை முதுகில் தட்டி, கட்டி பிடிச்சுகிட்டாராம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

நாகேஷ்–25


அனுப்பிய விமலுக்கும், விகடனுக்கும் நன்றி!

நாகேஷ் மாறும் உடல் மொழி, ஏறி இறங்கும் குரல் ஜாலம், தமிழர்களில் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம், ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழிந்தவர்!

  1. பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராக பணியாற்ற், குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்.
  2. பெற்றோர் கிருஷ்ணராவ் – ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன் பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்ல பெயர் – குண்டப்பா.
  3. பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!
  4. இளம் வயதில் வீட்டில் கோபித்துக் கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர் ரேடியோ கடை ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!
  5. முதன் முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார் அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!
  6. கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்த மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலர வைத்து அவரது நடிப்பில் வெளிச்சம்!
  7. ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால் தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!
  8. இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ்பாபு, ராஜேஷ்பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!
  9. முதல் படம் `தாமரைக்குளம்’ ஷூட்டிங்கின் போது சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர். ராதாவிடம் மனம் வெதும்பி நடந்தைச் சொன்னார் இவர். `மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்… கவலைப்படாம நடி’ என்றாராம் ராதா!
  10. `அபூர்வ ராகங்கள்’ படத்தில் இவருக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் கண்ணதாசன், அவரிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் நாகேஷ் கவிதை கேட்ட இவர், `அதான்யா கண்ணதாசன்’ என்று சொல்லிவிட்டு, `பீஸ் எவ்வளவு?’ என்பார். `இதுதான்யா ஃபீஸ்’ என்பார் கண்ணதாசன்!
  11. முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை, யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் `நாகேஷ் பாணி’ என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!
  12. எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!
  13. திருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி. நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்!
  14. நகைச்சுவையில் மட்டுமல்ல: `நீர்க் குமிழி’ குணச்சித்திரம், `சர்வர் சுந்தரம்’ ஹீரோ, `அபூர்வ சகோதரர்கள்’-ல் வில்லன், ‘மகளிர் மட்டும்’ பிணம் என்று வெளுத்துக் கட்டியவர்!
  15. `அபூர்வ ராகங்கள்’ ஷூட்டிங், பாலசந்தர் ஆக்‌ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ் கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, `சியர்ஸ்’ என்று சொல்ல, படம் பார்த்தவர்கள் பாரட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்சுக்கு இது ஒரு சாம்பிள்!
  16. இவரை எப்போதும் `டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்.
  17. டைரக்‌ஷன் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை. `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்‌ஷனில் வெளிவந்த திரைப்படம்.
  18. பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், `எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே’ என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!
  19. `சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்’ என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி.
  20. `நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ண்ணாக அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக் கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்’ என்று சொன்னவர் கமலஹாசன்.
  21. பஞ்சதந்திரம்’ ஷூட்டிங், உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், `கோழி இன்னும் சாகலையாப்பா?’
  22. `தசாவதாரம்’ கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம் `என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured–டா கமல்!’
  23. தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்.
  24. இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது- செப்டம்பர் 27, 1933 –ல். மறைந்தது ஜனவரி 31, 2009 –ல்.
  25. 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாகேஷ் பக்கம்

பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல்


சிந்துபைரவி திரைப்படத்திலிருந்து மஹாகணபதிம் பாட்டு (ஜேசுதாஸ், இளையராஜா, முத்துசாமி தீட்சிதர் கிருதி, நாட்டை ராகம்)

சும்மா ஜாலிக்காக அன்னை ஓர் ஆலயம் படத்திலிருந்து அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே பாட்டு (எஸ்பிபி, சுசீலா, இளையராஜா, வாலி – நன்றி, சாரதா!)

தொகுக்கப்பட்ட பக்கம்: பாட்டுகள்

எங்க வீட்டுப் பிள்ளை


எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படங்கள் என்று ஒரு ஆறேழு தேறும். ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா, நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், அலிபாபாவும் 40 திருடர்களும் இந்த மாதிரி. பர்ஃபெக்ட் மசாலா. எம்ஜிஆருக்கு ஏற்ற கதை. இன்னும் பார்க்கக்கூடிய படங்கள்.

படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆர் சாட்டையை கையில் எடுத்துக் கொண்டு நான் ஆணையிட்டால் என்று பாட்டு பாடிக் கொண்டே நம்பியாரை விளாசும் காட்சியில் நமக்கும் நம்பியாரை விளாச வேண்டும் என்று தோன்றுகிறது. அதுதான் எம்ஜிஆரின் வெற்றி. இந்த திரைக்கதையின் வெற்றி. இந்த படத்தின் ஹைலைட்டே அந்த காட்சிதான்.

ஹிந்தியில் திலிப் குமார் நடித்து ராம் அவுர் ஷ்யாம் என்றும் தெலுங்கில் என்.டி. ராமராவ் நடித்து ராமுடு பீமுடு என்றும் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆனது. எனக்கு பிடித்தது தமிழ்தான். தெலுங்கும் பரவாயில்லை. ஆனால் ஹிந்தி பிடிக்கவில்லை. திலிப் குமார் ஒரு மாஸ் ஹீரோ இல்லை.

1965-இல் வந்த படம். எம்ஜிஆர், சரோஜா தேவி, நம்பியார், பண்டரிபாய், நாகேஷ், தங்கவேலு, மனோரமா, ரங்காராவ் நடித்தது. இன்னொரு ஹீரோயின் யார் என்று தெரியவில்லை ரத்னா என்று டோண்டு ராகவன் தகவல் தருகிறார். இவர் தொழிலாளி படத்திலும் எம்ஜிஆருக்கு ஜோடியாம். சுரேஷ் இவர் பின்னாளில் இதயக்கனி படத்திலும் நீங்க நல்லாயிருக்கோணும் பாட்டிற்கு ஆடி இருக்கிறார் என்று குறிப்பிடுகிறார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. வசனம் சக்தி கிருஷ்ணசாமியோ? விஜயா ஃபில்ம்ஸ்(நாகி ரெட்டி) தயாரிப்பு.

படம் ஒரு தங்கச் சுரங்கம்தான். அந்த ஓட்டம் ஓடியது. இன்றைக்கும் ரீ-ரிலீஸ் செய்தால் நன்றாக ஓடும் என்று நினைக்கிறேன். ஹிந்தி, தெலுங்கிலும் நன்றாக ஓடியது.

கதை வழக்கமான இரட்டையர்கள், ஆள் மாறாட்ட கதைதான். நம்பியார் ஒரு எம்ஜிஆரை கோழையாக, படிக்காதவனாக வளர்க்கிறார். அவரை மாப்பிள்ளை பார்க்க வரும் சரோஜா தேவி இந்த தத்தியை மணக்க முடியாது என்று மறுத்து விடுகிறார். அக்காவிடமும் அக்கா பெண்ணிடமும் மிகவும் பாசம் இருந்தாலும், அடி தாங்க முடியாமல் எம்ஜிஆர் வீட்டை விட்டு ஓடி விடுகிறார். கொஞ்சம் முரடனாக வளரும் இன்னொரு எம்ஜிஆர் சரோஜா தேவியின் கைப்பையை திருடனிடமிருந்து மீட்டுக் கொடுக்கிறார். சரோஜா தேவி மனம் மாறி எம்ஜிஆருடன் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நீ வர வேண்டும் என்று டூயட் எல்லாம் பாடுகிறார். கோழை எம்ஜிஆர் இடத்துக்கு போகும் இவர் நம்பியாரை சாட்டையால் அடித்து நான் ஆணையிட்டால் என்று பாட்டெல்லாம் பாடி வீட்டையும் ஆலையையும் ஒழுங்கு செய்கிறார். இதற்கிடையில் வழக்கமான ஆள் மாறாட்ட குழப்பம் எல்லாம் நடந்து, இவர்கள் சகோதரர்கள் என்று தெரிந்து, நம்பியார் வழக்கம் போல கடைசி காட்சியில் மனம் திருந்தி, சுபம்!

திரைக்கதை நன்றாக அமைக்கப்பட்டிருந்தது. முரடன் எம்ஜிஆர் ஹோட்டலில் ஒரு வெட்டு வெட்டிவிட்டு பிள்ளை கொடுக்காமல் நழுவிவிட, அங்கே வரும் கோழை எம்ஜிஆர் இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு எல்லாத்துக்கும் பில் அழும் இடம், எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா என்று கோழை எம்ஜிஆர் அப்பா அம்மா படத்தை பார்த்து அழ, வீரன் எம்ஜிஆர் என் இல்லை, நான் இருக்கிறேன் என்று அடுத்த சீனில் என்ட்ரி கொடுப்பது, ஸ்டண்ட் செய்ய சொன்னால் எம்ஜிஆர் ஹீரோவை துவைத்து எடுப்பது, சரோஜா தேவி ரங்காராவை கலாய்ப்பது, ரங்காராவ் ஒன்றும் தெரியாதவர் போல தலையாட்டுவது, வீரன் எம்ஜிஆர் சமையல்காரனை அடிப்பது, தங்கவேலு-நாகேஷ் கூத்துகள், நாகேஷின் ஸ்பூனரிசங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

எம்ஜிஆர் கலக்கிவிட்டார். அவருக்கென்றே அமைக்கப்பட்ட அருமையான திரைக்கதை. அவருக்கேற்ற வில்லன் நம்பியார். அவருடைய நம்பர் ஒன் ஹீரோயின் சரோஜா தேவி. அப்பா ரோலுக்கென்றே அவதாரம் எடுத்த ரங்காராவ். நல்ல நகைச்சுவை டீம். அற்புதமான இசை. அவருடைய இமேஜுக்கு ஏற்ற மாதிரி பாட்டு எழுதும் வாலி. பெரிய தயாரிப்பாளர். படம் பிரமாதம்!

நான் ஆணையிட்டால் பாட்டு படமாக்கப்பட்ட விதம் பிரமாதம். பார்க்க வேண்டிய பாட்டு இது. எம்ஜிஆருக்கென்றே எழுதப்பட்ட வரிகள். வீடியோ கிடைக்கவில்லையே!

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே, நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், மலருக்கு தென்றல் பகையானால் ஆகிய பாட்டுகள்தான் இப்போது நினைவுக்கு வருகின்றன. காலேஜ் நாட்களில் “அவன் காதலுக்கு பின்னால கல்யாணம் என்றே கையடிச்சான்” என்ற வரிகளை கேட்டு சிரி சிரி என்று சிரித்திருக்கிறோம். வாலிக்கு குசும்பு அதிகம்.

பாட்டுகளை இங்கே கேட்கலாம். இங்கே பார்த்த பிறகு பெண் போனால், கண்களும் காவடி சிந்தாகட்டும் ஆகிய பாட்டுகளும் நினைவுக்கு வருகின்றன.

பொதுவாக பாட்டுகளின் தரம் ஒரு எம்ஜிஆர் படத்தில் இருப்பதை விட கொஞ்சம் மட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நான் ஆணையிட்டால் பாட்டு கேட்க மட்டும் இல்லை, பார்க்கவும்தான். அதில் எம்ஜிஆர் மாடி மேல் ஏறுவதும், உடனே இறங்குவதும், ட்விஸ்ட் ஆடுவதும் – பார்ப்பவர்களுக்கு நம்மை காப்பாற்ற ஒரு தலைவன் வந்துவிட்டான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். அதே போல் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாட்டில் அவர் அப்படி ஸ்டைலாக பார்ப்பதும் ஆடுவதும் அபாரம்.

எம்ஜிஆரின் சிறந்த படங்களில் ஒன்று. பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B grade.

நான் கடவுள் (Naan Kadavul)


naankadavul

2009 ஜனவரியில் வந்தது. கரம் மசாலா. ஒரு வித்தியாசம். பல படங்களில் சாதாரண மனிதர்களுக்கு கொடுமை இழைக்கப்படும். “இந்த அநியாயத்த தட்டி கேக்க யாருமேயில்லையா?” என்று ஒரு பெண் கதறுவார். “என்னம்மா, என்ன அநியாயம்?” என்று ஸ்டைலாக ஹீரோ ரஜனிகாந்த் தட்டிக் கேட்க வருவார். பிறகென்ன? டிஷ்யும், டிஷ்யும் தான். அநியாயம் நியாமாகும். எல்லோரும் சந்தோஷமாக சிரிப்பார்கள். அநியாயம் நடந்தால் காப்பாற்றுவதற்கு ரஜனிகாந்த் இருக்கிறார் என்று நிம்மதியாக வீட்டிற்கு போய் தூங்குவார்கள். இதிலும் அநியாயம் இழைக்கப்படுகிறது. தட்டிக் கேட்கப்படுகிறது. ஹீரோ பரிதாபமான பெண்ணைக் கொல்வது நியாயமா? இறுதி விகாரக் காட்சிகளை பார்த்து நிம்மதியாக தூங்கமுடியாதென நினைக்கிறேன்.

டைரக்டர் பாலா இந்த படத்தை மூன்று வருடங்களாக எடுத்தாராம். பொதுவாக சினிமா எடுக்கும் பொழுது எப்பொழுது ப்ராஜெக்ட் முடியும் என்று தவிப்பார்கள். ஹாலிவுட்டில் மூன்று வருடம் என்பது ஒரு பெரிய விஷயமில்லை. தமிழில் இது பெரிய விஷயம்தான். கஷ்டப்பட்டிருப்பது சில காட்சிகளில் தெரிகிறது.

மனித மாமிசம் சாப்பிடும் (cannibal) அஹோரிகளை காசி பயணத்தின் போது பார்த்திருக்கிறார் பாலா. அஹோரி உடலின் ஒரு பகுதியை சாப்பிட்டால் அந்த உடலின் சொந்தக்காரர் (அல்லது சொந்தக்காரராக இருந்தவர்) சொர்க்கத்துக்கு செல்வார்களாம். உங்களுக்கு சொர்க்கத்துக்கு போகவேண்டுமா? இறுதி காலத்தில் காசிக்கு போங்கள். ஆனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் தான் சொர்க்கத்திற்கு டிக்கட். ஏனென்றால் அஹோரி எல்லாருடைய உடலிலிருந்தும் சாப்பிடுவதில்லயாம். இவர்கள் புகைப்பது கஞ்சா, சாப்பிடுவது நரமாமிசம். (குடிப்பது இரத்தமா?) ஆச்சரியம் தான்.

அஹோரிகள் உலகத்திற்கும் ஜெயமோகனின் ஏழாம் உலகம் கதையில் வரும் பிச்சைக்காரர்கள் உலகத்திற்கும் ஒரு இணைப்பு ஏற்படுத்தி ஒருவாறு சமாளித்திருக்கிறார் பாலா.

அஜித் நடிப்பதாக இருந்தது ஏதோ பிரச்சனைகளால் மாற்றப்பட்டு ஆர்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடைய மேக்கப் கொஞ்சம் நம்மை கஷ்டப்படுத்துகிறது. பத்மாசனமும், சிரசாசனமும் சேர்ந்தவாறு செய்கிறார்.

கதாநாயகி பூஜா பாராட்டப் படவேண்டியவர். திறமையான நடிப்பும் இருக்கிறது. மிகுந்த சகிப்புத் தன்மையும் இருக்கிறது. படம் முழுவதும் ஒரு லென்ஸை கண்ணில் ஒட்டிக் கொண்டு குருட்டுப் பிச்சைக்காரியாக விழுந்து எழுந்து நடித்திருக்கிறார். நன்றாக வேலை வாங்கியிருக்கிறார்கள். ஆர்யாவும், பூஜாவும் இணைந்து நடிக்கும் நான்காவது திரைப்படம் இது.

கிட்டத்தட்ட 450 ஊணமுற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பிச்சைக்கார கும்பலாக நடித்திருக்கிறார்கள். அவர்களைப் பார்ப்பதற்கு கொஞ்சம் மனதை திடப்படுத்திக் கொள்ளவேண்டும். மற்றப்படி அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதால் அந்தக் கஷ்டம் நம்மை தாக்காமல் ஒரளவு காப்பாற்றுகிறது.

காஞ்சிபுரம், தேனி, பழனி போன்ற இடங்களில் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. பிச்சைக்காரர்களின் ஹெட்குவாட்டர்ஸாக ஒரு பங்கர் வருகிறது. அது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.

ஆர்தர் வில்சன் படப்பிடிப்பு. சிங்கம் புலி (இப்படி ஒரு பெயர்), ராசய்யா கண்ணன், ஆச்சார்யா ரவி ஆகிய மூன்று உதவி டைரக்டர்கள் பாலாவுடன் சேர்ந்து உயிரை விட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் வசனங்கள் எழுதியிருக்கிறார். வாலி – பாடல்கள், இளையராஜா – இசை, உத்தம் சிங் – ரீரிக்கார்டிங், சூப்பர் சுப்பராயன் – சண்டைப் பயிற்சி.

”இதோ எந்தன் தெய்வம்” போன்ற இனிமையான பழைய பாடல்களை கேட்க முடிகிறது. படத்தின் ஒரிஜினல் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. இதில் ஒரு சமஸ்கிருத பாடல் வேறு. நல்ல அர்த்தமுள்ள பாடலாக இருக்கவேண்டும் – சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கு.

காவல்நிலையத்தில் ”எம்ஜியார்”, ”சிவாஜி”, ”ரஜனிகாந்த்” எல்லோரும் வந்து நடிப்பது நல்ல பொழுதுபோக்கு அம்சம்.

”கருணைக் கொலை” மூலம் அஹோரி ஆர்யா, பூஜாவிற்கு இன்னல்களிலிருந்து விடுதலை கொடுக்கிறார். கொலைதான் கருணையான முறையில் இல்லை. பூஜாவே அப்படி ஒரு முடிவு தனக்கு வரும் என்று எதிர்ப்பார்த்திருக்கமாட்டார். பத்துக்கு 6.5

ஆயிரத்தில் ஒருவன்


எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படம் இதுதான்.

1965இல் வந்த படம். எம்ஜிஆர், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், மனோகர், ராமதாஸ், எல். விஜயலக்ஷ்மி நடிப்பு. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்து இசை அமைத்த கடைசி படம். பி.ஆர். பந்துலு சிவாஜியுடன் முறைத்துக் கொண்டு எம்ஜிஆர் பக்கம் வந்து எடுத்த முதல் படம். அவரேதான் இயக்கம் என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லைநண்பர் ராஜு உறுதி செய்கிறார். பிற்காலத்தில் கலைஞர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது சினிமா ஷூட்டிங்கில் இருந்தவர்தான் எம்ஜிஆர் என்று தாக்குவார் – அந்த சினிமா ஷூட்டிங் இதுதான்.

கலர் படங்கள் அபூர்வமாகவே வந்த காலத்தில் வந்த கலர் படம். கலர் மேக்கப் ரொம்ப கோரமாக இருக்காது (சரோஜாதேவி, எங்க வீட்டுப் பிள்ளை, enough said) எட்டு மணி மணியான பாட்டுகள். ராஜா ராணி சாகசக் கதைகளில் எம்ஜிஆரை அடிக்க ஆளில்லை என்று நிரூபித்த படம்.

ரஃபேல் சபாடினி என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் எழுதிய ஒரு புகழ் பெற்ற நாவலின் பெயர் காப்டன் ப்ளட் (Captain Blood). அந்தக் காலத்தில் மேற்கிந்திய தீவுகளில் இருந்த ஒரு பிரபலமான கொள்ளைக்காரனான சர் ஹென்றி மார்கனின் வாழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. பிற்காலத்தில் மார்கன் மேற்கிந்திய தீவுகளின் கவர்னர் ஆனார். இந்த நாவல் எர்ரால் ஃப்ளின் நடித்து திரைப்படமாக முப்பதுகளில் வந்தது. எம்ஜிஆரின் ஆதர்ச நடிகர்கள் டக்ளஸ் ஃபேர்பாங்க்சும் எர்ரால் ஃப்ளின்னும்தான். சபாடினியின் இன்னொரு புத்தகமான சீ ஹாக் (Sea Hawk)புத்தகத்திலிருந்து சில சீன்களை எடுத்து – – குறிப்பாக ஜெயலலிதாவை ஏலம் விடும் சீன், அவர் ஆடாமல் ஆடுகிறேன் என்று பாடுவார் அந்த சீன் – இந்த புத்தகத்துடன் சேர்த்து உருவாக்கப்பட்ட திரைக்கதைதான் ஆயிரத்தில் ஒருவன்.

எம்ஜிஆர் ஒரு டாக்டர். சர்வாதிகாரி மனோகரை எதிர்க்கும் புரட்சியாளர்களுக்கு தன் தொழில் தர்மப்படி சிகிச்சை அளிப்பார். அதற்காக அடிமையாக ராமதாசின் தீவில் விற்கப்படுவார். அங்கே சென்று நாம் அடிமையாகவே இருக்க வேண்டியதுதானா என்று கேட்கும் தோழர்களுக்கு ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே, நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே என்று ஆறுதல் சொல்வார். நடுவில் தன்னை சைட் அடிக்கும் ஜெவை பற்றி மாளிகையில் அவள் வீடு, மரக்கிளையில் ஏன் கூடு, இதில் நான் அந்த மான் நெஞ்சில் வாழுவதெங்கே கூறு என்று பாடுவார். கொள்ளை அடிக்க வரும் நம்பியாருடன் போராடினால் சுதந்திரம் தருகிறேன் என்று சொல்லும் ராமதாசை நம்பி நம்பியாரை விரட்டுவார். ஏமாற்ற நினைக்கும் ராமதாசிடமிருந்து தப்பி நம்பியாரின் கப்பலில் போவார். நம்பியாரின் ப்ளாக்மெயிலால் கொள்ளைக்காரனாக மாறுவார். ஆனால் கொள்ளைக்காரர்களிடமிருந்துதான் கொள்ளை அடிப்பார். ஜெவின் கப்பலை கைப்பற்றுவார். ஜெவை விரும்பும் நம்பியாரிடமிருந்து அவரை காப்பாற்ற தன் அடிமையாக்கிக் கொள்வார். பிறகு அவரை மணப்பார். நம்பியாரிடமிருந்து தப்ப முயற்சி செய்யும்போது நம்பியாருடன் ஒரு சூப்பர் கத்தி சண்டை போட்டு பிறகு அதோ அந்த பறவை என்று பாட்டு பாடி, மனோகரின் கப்பலுடன் சண்டை போட்டு, மனோகரை சாவிலிருந்து காப்பற்றி, மனோகர் தரும் ராஜ பதவியை நிராகரித்து டாக்டராகவே வாழ்வார்.

அவரல்லவோ சூப்பர்மான்? ரஜினியும், விஜயும் எந்த காலத்திலும் அவருக்கு ஈடாக முடியாது.

அருமையான ஆர்ட் டைரக்ஷன். காட்சிகள் மிகவும் ரிச்சாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கப்பல் காட்சிகள் நம்மை இன்னும் அசத்துகின்றன. பந்துலு பணத்தை தண்ணீராகத்தான் செலவழித்திருக்கிறார்.

எம்ஜிஆர், நம்பியார், ஜெ, ராமதாஸ் ஆகியோருக்கு நல்ல வேஷப் பொருத்தம். சரோஜா தேவியின் கொஞ்சல் பாணியிலிருந்து விடுதலை! நாகேஷ் ராமதாஸ் காட்சிகளில் சிரிக்கலாம்.

நம்பியாரிடமிருந்து ஜெவை ஒரு பெட்டியில் வைத்து கடத்தி செல்ல, நம்பியார் அந்த பெட்டியில் தன் வாளை செருகும் காட்சி அருமையானது. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்று பாடும் போது தியேட்டரில் உற்சாகம் பிய்த்துக்கொண்டு கிளம்பும்.

ராமதாஸ் பேசும் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய்தான் காது வரை இருக்கிறது” என்ற வசனம் எங்கள் வட்டத்தில் ரொம்ப ஃபேமஸ்!

கண்ணதாசனும் வாலியும் போட்டி போட்டுக்கொண்டு அருமையான பாட்டுகளை எழுதி இருக்கிறார்கள். கண்ணதாசன் “அதோ அந்தப் பறவை“, “நாணமோ” பாட்டுகளை எழுதினால், வாலி “பருவம் எனது பாடல்“, “ஆடாமல் ஆடுகிறேன்“, “ஏன் என்ற கேள்வி“, “ஓடும் மேகங்களே“, “உன்னை நான் சந்தித்தேன்” போன்ற பாட்டுகளில் அசத்தி இருக்கிறார்.

எனது ஃபேவரிட் அதோ அந்த பறவைதான். எல்லாருக்குமே அதுதான் ஃபேவரிட். பாட்டும், கப்பலில் எம்ஜிஆரும் ஜெவும் ஓடி ஆடி பாடுவதும் பிரமாதம்.

எனக்கு பிடித்த அடுத்த பாட்டு ஏன் என்ற கேள்விதான். அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆரும் அவர் தோழர்களும் வட்டமாக படுத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கும் காட்சி பார்க்க பிரமாதமாக இருக்கும்.

ஓடும் மேகங்களேவுக்கு மூன்றாவது இடம். நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் என்ற வரிகள் மிக அருமை. படத்தின் டைட்டிலை வேறு அர்த்தத்தில் வாலி உபயோகித்திருப்பார். வார்த்தைகள் வருவதற்கு முன் அருமையான இசை.

ஒரே ஒரு டூயட் – நாணமோ. நல்ல பாட்டு.

ஜெவுக்கு மூன்று சோலோ பாட்டுகள். பருவம் எனது பாடல், உன்னை நான் சந்தித்தேன், ஆடாமல் ஆடுகிறேன் என்று. நன்றாக, அந்த காலத்துக்கு கவர்ச்சியாக ஆடியிருப்பார்.

இன்னும் ஒரு பாட்டு இருக்கிறதோ? சரியாக நினைவு வரவில்லை.

பாட்டுகளை இங்கே கேட்கலாம்.

சிறந்த பொழுதுபோக்கு படம். கட்டாயம் பாருங்கள். 10க்கு 8 மார்க். A- grade.

வாங்க, ”காப்பி” சாப்பிடலாம் II


சண்டை போட யாரும் வராததால் சரி நானும் பக்சுமே கொஞ்சம் அடித்துக் கொள்கிறோம்.

பக்ஸ் ஒரு அடாவடி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார். அதை முதலில் பார்ப்போம்.
விக்ரமை விட நெஞ்சில் ஓர் ஆலயம் நன்றாகவே இருக்கிறது. அதனால் சுஜாதா நெஞ்சில் ஓர் ஆலயத்தை குறை சொல்லக் கூடாது..
இருந்து விட்டு போகட்டுமே? அதனால் என்ன? சுஜாதா எப்போதாவது விக்ரம் நெஞ்சில் ஓர் ஆலயத்தை விட சூப்பர் என்று எழுதி இருக்கிறாரா என்ன? பக்ஸ் இங்கே சொல்லாமல் சொல்வது என்ன – விக்ரம் மாதிரி ஒரு மசாலா படத்தில் பங்கேற்ற சுஜாதாவுக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என்பதுதான். அப்படி பார்த்தால் படமே எடுக்காத எங்களுக்கு தேன் கிண்ணம் சொத்தை, நாலும் தெரிந்தவன் சொதப்பல் என்று எழுத என்ன அருகதை இருக்கிறது? மனைவியிடம் மட்டுமே நடிக்கும் எங்களுக்கு சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று சொல்லும் யோக்யதை எங்கிருந்து வரும்? விட்டால் எல்லா விமர்சகர்களும் படம் எடுக்க வேண்டி வரும் போலிருக்கிறதே!

பக்ஸ் 3 அடாவடி ஸ்டேட்மெண்ட்களை குறிப்பிடுகிறார்.
1. இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை.
இதை இப்படி பார்க்க வேண்டும். நெஞ்சில் ஓர் ஆலயம் உலகத் தரம் வாய்ந்த படம் இல்லை. அதை தமிழின் தலை சிறந்த படம் என்று சொன்னால், we are setting the bar too low. இதுதான் அவர் சொல்வதற்கு அர்த்தம் என்று நினைக்கிறேன்.

2. ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.
நாம் சாதாரணமாக ஸ்ரீதரை ராம நாராயணன், ஜம்பு புகழ் கர்ணன் ஆகியோரோடு ஒப்பிட்டு ஆஹா பெரிய ஜீனியஸ் என்கிறோம். அவர் அந்த கட்டுரையில் சத்யஜித் ரே எப்படி படம் எடுப்பார் என்று பேசுகிறார். (நான் அந்த பத்திகளை என் ஒரிஜினல் போஸ்டில் கொடுக்கவில்லை). கே.எஸ்.ஜிக்கும் கர்ணனுக்கும் உள்ள இடைவெளி ரேக்கும் கே.எஸ்.ஜிக்கும் இருக்கத்தான் செய்கிறது.

3. கண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார்.
சினிமா பாட்டுகளில் என்ன ராமாயணமா எழுத முடியும்? சுஜாதா ஆங்கில இசை படங்களிலோ, ஆபெராக்களிலோ என்ன காவிய நயம் ததும்பும் வரிகளை பார்த்திருக்கிறாரா? கண்ணதாசனும் வாலியும் கிடைத்த ஃபார்மட்டில் அருமையாக எழுதி இருக்கிறார்கள். சுஜாதாவுக்கு சினிமா பாட்டுகளின் constraints புரியவில்லை என்று நினைக்கிறேன்.