ஆலயம் – பழைய தமிழ் திரைப்படம்
ஜனவரி 14, 2024 பின்னூட்டமொன்றை இடுக
ஆலயம் (1967) 1967-க்கான சிறந்த தமிழ் திரைப்படம் விருது பெற்றது.
பிலஹரி எழுதிய நெஞ்சே நீ வாழ்க நாடகம்தான் மூலம். இயக்குனர்கள் பீம்சிங்கின் சீடர்களான திருமலை-மகாலிங்கம். மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், வி.கே. ராமசாமி, மனோரமா, ஸ்ரீகாந்த், சோ ராமசாமி, ஏ. கருணாநிதி, டைப்பிஸ்ட் கோபு, பக்கோடா காதர் நடித்திருக்கிறார்கள். டி.கே. ராமமூர்த்தி இசை.
1967-க்கு நல்ல திரைப்படம்தான். வழக்கமான காதல் மோதல் பாசம் குடும்பம் என்ற கருக்களிலிருந்து விலகி இருப்பதாலேயே தனியாக நிற்கிறது. இன்று கொஞ்சம் வயதாகிவிட்டாலும் பார்க்கலாம்.
எளிய கதைதான். மேஜர் அப்பழுக்கற்ற நேர்மையாளர், அதனால் அலுவலகத்திலும் சரி, ஊரிலும் சரி நிறைய மரியாதை. மேஜருக்கு 5000 ரூபாய் லஞ்சம் தர வருபவரை மேஜர் விரட்டிவிடுகிறார். ஆனால் மேஜரின் மாப்பிள்ளைக்கு திடீரென்று பண நெருக்கடி. நாலு மணிக்குள் 5000 ரூபாய் புரட்டாவிட்டால் சிறை செல்ல வேண்டியதுதான். மேஜர் என்ன செய்யப் போகிறார்?
முதலில் தன் மீது எக்கச்சக்க மரியாதை வைத்திருக்கும் முதலாளி ஸ்ரீகாந்திடம் கடன் கேட்க முயற்சிக்கிறார். ஆனால் ஸ்ரீகாந்த் இவர் வாயைத் திறக்கும் முன் தற்செயலாக நாளை வருமான வரி கட்ட 10000 ரூபாயை எப்படியாவது புரட்ட வேண்டும் என்கிறார். லஞ்சம் வாங்கிக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கிறார். ஸ்ரீகாந்த் மேஜரின் நேர்மையை புகழ்ந்து பேசுவதை கேட்கிறார், மனம் மாறுகிறார். நண்பர் ஒருவர் மகள் கல்யாணத்துக்காக கடன் வாங்கிய 5000 ரூபாயை இவரிடம் கொடுத்து எனக்கு வங்கி கணக்கு இல்லை, இரண்டு மாதம் கழித்து வாங்கிக் கொள்கிறேன் என்று இவரிடம் கொடுத்து வைக்கிறார். ஒரு உத்தரவாதமும் இல்லாமல் பணத்தை கொடுத்திருக்கிறாயே முட்டாளே என்று இன்னொரு அலுவலக குமாஸ்தா பேச அலுவலக பியூன் நாகேஷ் யாரை சந்தேகப்படுகிறாய் என்று கத்துகிறார்.
யாராவது என்னை அயோக்கியன் என்று சொல்லிவிட மாட்டார்களா, என் மீது நம்பிக்கை வைக்காமல் இருக்கமாட்டார்களா, அப்படி இருந்தால் என் மனத்தடைகள் நீங்கி நண்பனை ஏமாற்றுவேன் இல்லாவிட்டால் லஞ்சம் வாங்குவேன் என்று மேஜர் தவிக்கிறார். ஆனால் கடைசியில் மன உறுதி பெறுகிறார்; லஞ்சம் வாங்கலாம் என்று நினைத்தற்காக வேலையை ராஜினாமா செய்கிறார். மாப்பிள்ளையின் நெருக்கடி அதிர்ஷ்டவசமாக நீங்கிவிட, மேஜர் நிம்மதியில் இறந்தே போகிறார்.
மேஜரின் சிக்கல் சிறப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது. மெலோட்ராமா குறைவு. மேஜர் பிறழ முயற்சிப்பதும், ஆனால் அவரால் முடியாமல் போவதும் நன்றாக வந்திருக்கிறது. ஓரளவு டென்ஷன் குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
திரைப்படத்தின் பலவீனம் அதன் சபா நாடகத்தன்மை. நகைச்சுவை வலிந்து புகுத்தப்பட்டிருக்கிறது. அலுவலகத்தில் வேலையைப் பார்க்காமல் ஸ்ரீராமஜயம் எழுதும் வி.கே. ராமசாமி, பத்திரிகைகளுக்கு கதை எழுதும் ஒரு குமாஸ்தா, மனோரமாவை சைட்டடிக்கும் சோ, மனோரமா-நாகேஷ் காதல் என்பதெல்லாம் கதையின் டென்ஷனை குறைக்கிறது. உதாரணத்துக்கு ஒரு நகைச்சுவைக் காட்சியில் வி.கே. ராமசாமியின் துணிகளை அலுவலகத்துக்கு எடுத்து வரும் வண்ணான். வண்ணானாக வருபவர் நன்றாகவே நடித்திருக்கிறார், கழுதையை ஹூம் என்று விரட்டிக் கொண்டே இருப்பது இயல்பாக இருக்கிறது, ஆனால் காட்சி செயற்கையாக இருக்கிறது.
டைப்பிஸ்ட் கோபுவுக்கு இதுதான் முதல் திரைப்படம். (நாணல் என்றும் எங்கோ படித்திருக்கிறேன்.) அலுவலகத்தில் டைப்பிஸ்ட். நாடகத்திலும் அவருக்கு இதே பாத்திரம்தான். நாடகத்தில் அவருக்கு வசனமே கிடையாதாம். திரைப்படத்தில் ஒரே ஒரு வசனம் பேசுகிறார். அப்படி இருந்தும் நாடகத்தில் நினைவில் நிற்கும்படி நடித்ததால்தான் டைப்பிஸ்ட் கோபு என்று அழைக்கப்பட்டாரம்.
பாடல்கள் எதுவும் நினைவில் நிற்கவில்லை.
வித்தியாசமான கதை மற்றும் மேஜர், ஏ. கருணாநிதி நடிப்புக்காக நூற்றுக்கு 65 மதிப்பெண் தருகிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் திரைப்படங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்