நாம் இருவர் – விகடன் விமர்சனம்
ஒக்ரோபர் 25, 2010 4 பின்னூட்டங்கள்
விகடனில் ஏவி.எம்மின் நாம் இருவர் படம் வந்தபோது எழுதப்பட்ட விமர்சனத்திலிருந்து ஒரு பகுதி… நன்றி, விகடன்!
ஆடல் பாடல் நல்ல பொழுதுபோக்கு
படங்களைத் தயாரித்து விடலாம். நூற்றுக்கணக்கில் கூடத் தயாரித்துவிடலாம். ஆனால், படிக்காத பாமரர்கள் மட்டுமின்றி, படித்த அறிவாளிகளும் கண்டு வியக்கும் முறையில் கலை நுணுக்கங்கள் நிறைந்த நல்ல படங்களாகத் தயாரிப்பது சிரமம். இந்தச் சிரமமான காரியத்தில் ஏவி.எம். புரொடக்ஷன்ஸார் பாராட்டக் கூடிய அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். அதற்கு ஓர் அத்தாட்சியாக இருக்கிறது ‘நாம் இருவர்’.
எடுத்ததுமே நம்மைக் கவர்ந்து விடுகிறது, நடிகர்களின் வேஷப் பொருத்தம். அந்தந்த பாத்திரங்களுக்கு மிகவும் ஏற்ற நடிகர்களாகவே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அநேக படங்களில் காண்பிக்கப்படுவது போல் ’40 வயது வாலிபனும்’, ’35 வயதுப் பருவ மங்கையும்’ காதல் புரியவில்லை இப்படத்தில். உண்மையிலேயே இளம் வயதுள்ள டி.ஆர். மகாலிங்கமும், டி.ஏ. ஜெயலட்சுமியும் காதலர்களாகக் காட்சியளிக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது நமது உள்ளம் அப்படியே அவர்களோடு ஒன்றுபட்டு விடுகிறது. மீசை நரைத்தும் ஆசை நரைக்காத தந்தையின் பாகத்தில் கே. சாரங்கபாணி நடிக்கிறார். பல சமூகப் படங்களில் நடித்துள்ள பி.ஆர்.பந்துலு உத்தம அண்ணனாக வருகிறார். அசட்டு ஞானோதயத்தின் பாகத்தை ஹாஸ்ய நடிகர் டி.ஆர். ராமச்சந்திரன் ஏற்று நடிக்கிறார். மற்ற நடிகர்கள் நாம் இருவர் நாடகத்தில் திறமையுடன் நடித்து அனுபவம் பெற்றவர்கள்.
நல்லதொரு பொழுதுபோக்காக இருப்பதற்குப் படத்தில் ஆடலும் பாடலும் ரொம்ப அவசியம் என்பதை உணர்ந்துள்ள ஏவி.எம். புரொடக்ஷன்ஸார் கண்ணுக்கினிய ஆடல்களையும் காதுக்கினிய பாடல்களையும் அமைத்திருக்கிறார்கள். ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே‘ முதலிய பாரதியாரின் தேசிய கீதங்களை ஸ்ரீமதி டி.கே. பட்டம்மாள் அழகாகப் பாடியிருப்பதும், அந்தப் பாட்டுக்களுக்கு சிறுமி கமலா அபிநயம் பிடித்து அற்புதமாக ஆடியிருப்பதும், மனதை வசீகரிக்கக் கூடிய நல்ல அம்சங்கள். டி.ஆர்.மகாலிங்கம் பாடியிருக்கும் பாட்டுக்களும் படத்திற்கு ஒரு விசேஷ கவர்ச்சியை அளிக்கின்றன. சில பாட்டுக்கள், காலஞ்சென்ற கிட்டப்பாவின் பாட்டுக்களை ஞாபகப்படுத்துவதால், அவை கேட்போரைப் பரவசப்படுத்துகின்றன.
மகான் காந்தி மகான் என்ற பாட்டுக்கு “சிறுமி” கமலா இங்கே ஆடுகிறார்.
‘ஜே ஹிந்த்’, ‘மகாத்மா காந்திக்கு ஜே!’ முதலிய தேசிய கோஷங்களும், தேச பக்தர்களின் உருவப் படங்களும், அங்கங்கே சில சம்பாஷணைகளில் வரும் கருத்துக்களும் இக்கால மக்களின் மனப்போக்குக்கு ஏற்றவைகளாக இருப்பதால், படத்தின் வெற்றிக்கு அவை பெரிதும் உதவியாக இருக்கின்றன என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.
இன்னும் சிலாகிப்பதற்கு இப்படத்தில் எவ்வளவோ நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஒரே பேபி கமலாவை வைத்துக் கொண்டு, இரண்டு பேபி கமலாக்கள் நடனம் செய்வதாகக் காண்பித்திருக்கும் காமிராக்காரரின் திறமையைப் பாராட்டலாம். பாத்திரங்களுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவாறு சம்பாஷணைகளை இயற்றிக் கொடுத்திருக்கும் கதாசிரியர் ஸ்ரீ ப. நீலகண்டனின் திறமையையும் பாராட்டலாம்.
சென்ற உலக யுத்தத்தில் ஹிட்லர் பிரயோகித்த ‘வி-டூ’ என்ற ஆயுதம் அதன் வேகத்திற்குப் பிரசித்தி பெற்றது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தப் பெயரே இப்படத்தின் ஆங்கிலப் பெயராக அமைந்திருப்பதனாலோ என்னவோ, படம் ஆரம்பம் முதல் கடைசி வரையில் விறுவிறுப்பும் வேகமும் உள்ளதாக இருக்கிறது. படத்தில் அலுப்புத் தட்டும் இடமே இல்லை!
ஸ்ரீ ஏவி.எம். செட்டியார் அவர்களின் திறமையில் நமக்கு அதிக நம்பிக்கை ஏற்படுகிறது. வசதிகள் நிறைய ஏற்படும்போது, இதை விடப் பன்மடங்கு மேம்பட்ட படங்களை அவரால் தயாரித்துத் தமிழ்நாட்டுக்கு அளிக்க முடியும் என்பதில் நமக்குச் சந்தேகமே இல்லை.
தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்
தொடர்புடைய சுட்டி: மாலை மலரில் இந்த படம் உருவான கதை
அண்மைய பின்னூட்டங்கள்