தெய்வச்செயல்


எம்ஜிஆர் நடித்து தேவர் தயாரித்த நல்ல நேரம் பார்த்திருப்பீர்கள். நல்ல நேரம் ராஜேஷ் கன்னா நடித்து தேவர் தயாரித்த ஹாத்தி மேரா சாத்தி படத்தை தழுவி எடுக்கப்பட்டது. ஹாத்தி மேரா சாத்தியின் மூலம்? தெய்வச்செயல் என்ற இன்னொரு தேவர் படம்தான்!

இதில் ஹீரோ மேஜர் சுந்தரராஜன்தான். அவருக்கு வழக்கம் போல அப்பா வேஷம்தான். நல்ல நேரம் எம்ஜிஆர் மாதிரியே எப்போதும் டக்சீடோ இல்லாவிட்டால் ஃபுல் சூட்டில் இருக்கிறார். (படத்தில் போஸ்ட் மாஸ்டர் கூட ஃ புல் சூட்டில்தான் தபால் ஆஃபீசுக்கு வருகிறார்) அதே மாதிரி நாலு யானை வளர்க்கிறார். அவருக்கு ரொம்ப விருப்பமான யானை பேர் ராமு. அடுத்த யானையின் பேர் அதே மாதிரி சோமு. எம்ஜிஆர் மாதிரியே இவரும் நொடித்துப் போய் பிறகு யானையை வைத்து வித்தை காட்டி அந்தப் பணத்தில் ஒரு zoo வைத்து பணக்காரர் ஆகிறார். பையன் முத்துராமன் பாரதியை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். பாரதிக்கு யானையைப் பார்த்து பயந்துபோய் கருச்சிதைவு. அப்புறம் யானை இருக்கும் இடத்தில் நான் இருக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க, ராமு தன் உயிரை தியாகம் செய்ய, எல்லாரும் இணைந்து சுபம்!

கதை நடிகர்களையோ இசையையோ நம்பி எடுக்கப்படவில்லை. முற்றிலும் முற்றிலும் மிருகங்களை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது. யானை அபிஷேகம் செய்கிறது, டாக்டரை கூட்டி வருகிறது (அதுவும் வாசலில் இருக்கும் போர்டைப் படித்து இது வக்கீல், இது ஆடிட்டர், இதுதான் டாக்டர் என்றெல்லாம் புரிந்துகொள்கிறது) பூ கொண்டுவந்து கொடுக்கிறது (நல்ல நேரத்தில் தலை கூட வாரிவிடும்). ஒரு நீர்யானைக்கும் பெரிய ரோல் உண்டு. அவ்வப்போது அது வாயை திறப்பதை க்ளோசப்பில் வேறு காட்டுகிறார்கள். தேவரின் கணிப்பு சரிதான், இந்த காட்சிகள் மட்டுமே படத்தை வெற்றி பெற செய்ய அந்தக் காலத்தில் வாய்ப்பு உண்டுதான். ஆனால் ஸ்டார் வால்யூ இல்லாததால் படம் தோற்றுப் போனது. கதையிலிருந்து மற்ற மிருகங்களை விளக்கினார், ஸ்டார்களை சேர்த்தார், படம் ஹிந்தியிலும் தமிழிலும் பிய்த்துக்கொண்டு ஓடியது.

67-இல் வந்த படம். மேஜர், முத்துராமன், பாரதி தவிர ஐ.எஸ்.ஆர்., சுந்தரிபாய், ராமதாஸ் நடித்திருக்கிறார்கள். தேவருக்கும் ஒரு சின்ன ரோல் உண்டு. யாரோ திவாகர் என்பவர் இசை அமைத்திருக்கிறார். கதை தேவருடையதுதானாம். இயக்கம் எம்.ஜி. பாலு.

பாட்டுகள் ஒன்றும் சுகப்படவில்லை. வீடியோ, ஆடியோ, ஸ்டில் எதுவும் கிடைக்கவில்லை.

நல்ல நேரத்திலேயே யானையைத் தவிர வேறொன்றும் இல்லை. இதில் நீர்யானையைத் தவிர வேறொன்றும் இல்லை.

தர்மம் எங்கே?


சிவாஜியின் சொந்தப் படம் போலிருக்கிறது. சிவாஜி, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ், நம்பியார், குமாரி பத்மினி, ராமதாஸ், செந்தாமரை நடித்தது. இசை எம்எஸ்வி. வசனம் சக்தி கிருஷ்ணசாமி. இயக்கம் திருலோகச்சந்தர். 1972-இல் வந்திருக்கிறது.

ஒரு கற்பனை நாட்டில் படம் நடக்கிறது. நம்பியார் கொடுமைக்கார ராஜப் பிரதிநிதி. (ராஜாவை கடைசி வரைக்கும் காணவில்லை.) சிவாஜி கொஞ்சம் அப்பாவி கிராமத்தான். ஊர்க்காரர்கள் ராணுவத்தின் கொடுமையைப் பற்றி நம்பியாரிடம் முறையிடப் போகும்போது சிவாஜியையும் கூட்டிக் கொண்டு போகிறார்கள். நம்பியார் என்ன சாட்சி என்று கேட்க, எல்லாரும் பயப்படுகிறார்கள். சிவாஜி முன் வந்து நான் சாட்சி சொல்கிறேன், என் கண்ணால் பார்த்தேன் என்கிறார். நம்பியார் எல்லாரையும் சரி போங்கள் என்று விரட்டிவிட்டு சிவாஜியை அப்புறம் கைது செய்கிறார். சிவாஜி தப்பிக்கிறார். ஜெயலலிதா காப்பாற்றுகிறார். ஜெ இருக்கும் நாடோடி கும்பல் அவருக்கு ஆதரவு தருகிறது. மைத்துனர் முத்துராமன் அவரோடு சேர்ந்துகொள்கிறார். கலகம், புரட்சி, சிவாஜி நம்பியாரை விரட்டிவிட்டு புது ராஜபிரதிநிதி ஆகிறார். தனக்குப் பதவி தரவில்லை என்ற கோபத்தில் முத்துராமன் சிவாஜிக்கு எதிராக கிளம்புகிறார். கடைசியில் அவர் வேறு வழியில்லாமல் மனம் திருந்தி, க்ளைமாக்சுக்காக செஞ்சி போய் சண்டை போட்டு, சுபம்!

மூன்று விஷயங்கள் நன்றாக இருந்தன.

சிவாஜி ராணுவத்தின் கொடுமையைப் பற்றி சாட்சி சொல்ல வரும்போது நம்பியார் என்ன ரியாக்ஷன் காட்டுகிறாரோ அதே ரியாக்ஷன் சிவாஜி முத்துராமனின் கழகத்தைப் பற்றி ஒருவன் சாட்சி சொல்லும்போதும். பதவி மனிதனை மாற்றுகிறது என்று அருமையாக டெவலப் செய்திருக்கலாம். ஆனால் எழுபதுகளில் சிவாஜி நெகடிவ் ரோல்களைத் தவிர்த்தார். ரொம்ப நல்லவராகத்தான் வருவார். அதனால் ஒரு சீனோடு இது முடிந்துவிடுகிறது. இருந்தாலும் திரைக்கதை எழுதியவருக்கு ஒரு சபாஷ்!

முத்துராமன் தூக்குமேடையில் இருக்கும்போது மனோகரா ஸ்டைலில் சிவாஜி வசனம் பேசுகிறார். நல்ல வசனங்கள். சக்தி கிருஷ்ணசாமிக்கு ஒரு சபாஷ்!

சுதந்திர பூமியில் பல வகை ஜனங்களும் என்ற பாடல் அருமை. அருமையான சந்தம். எழுதிய கண்ணதாசன், இசை அமைத்த எம்எஸ்வி, பாடிய டிஎம்எஸ், சிவாஜியின் முதுகில் ஒரு பெரிய பூக்கூடையை வைத்து வித்தியாசமாக படமேடுத்திருந்த ஒளிப்பதிவாளர்+இயக்குனர்+உடை இன் சார்ஜ் எல்லாருக்கும் ஒரு சபாஷ்! சாரதா, நீங்கள் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஓபனிங் சாங் என்று இந்த காலத்தில் வருவதை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள். இவ்வளவு நல்ல பாட்டுக்கு ஆடியோ வீடியோ எதுவும் கிடைக்கவில்லை.

இதைத் தவிர பள்ளியறையில் வந்த புள்ளி மயிலே என்ற கொஞ்சம் பிரபலமான பாட்டு ரிச்சாக படமாக்கப்பட்டிருக்கிறது.

மற்றபடி படத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நாகேஷ் காமெடி, சண்டைக் காட்சிகள் எதுவும் தேறவில்லை. நம்பியார் வழக்கம் போல கையைப் பிசைகிறார். அம்மாவாக வருபவர் உருகி உருகி வசனம் பேசுகிறார். சிவாஜி அங்கங்கே ஓவர் ஆக்டிங் செய்கிறார். எல்லாரும் ஹிப்பி ஸ்டைலில் வருகிறார்கள்.

சிவாஜி ரசிகர்கள் நிச்சயமாக பார்க்கலாம். மற்றவர்களுக்கு கொஞ்சம் சினிமா பைத்தியம் இருக்க வேண்டும்.

கொடி மலர்


1966ல் ஸ்ரீதர் டைரக்‌ஷனில் வந்த திரைப்படம்.  கதை மாந்தர்களைக் காட்டிலும் கதையை நம்பி எடுக்கப்பட்டத் திரைப்படம். ஸ்ரீதர் பொதுவாகவே அப்படித்தானே. அவருடைய அத்தியாயத்தின் கடைசி பக்கங்களில் சில திரைப்படங்கள் இந்த இலக்கணத்தைப் பின்பற்றாமல் போனாலும்  அதற்கு முன்னர் வந்த திரைப்படங்களின் தரத்தை நாம் எப்படி சீர்தூக்கிப் பார்த்தாலும் சோடை போனதில்லை. கொடி மலர் அப்படிபட்ட தரமான ஒரு திரைப்படம்.

பிரபல நடிகர்கள் – முத்துராமன், ஏவிஎம் ராஜன், நாகேஷ்

பிரபல நடிகைகள் – காஞ்சனா, விஜயகுமாரி, எஸ்.என். பார்வதி, (முத்துராமனின் தாய் காரக்டரரில் நடித்தவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் முக்கிய ரோல். பிற்சேர்க்கை – எம்.வி.ராஜம்மா  – நன்றி அப்துல்)

இசை – எம்.எஸ்.விஸ்வனாதன் பாடல்கள் – கண்ணதாசன்

டைரக்‌ஷன் – C.V.ஸ்ரீதர்

சமூக மாற்றத்தின் விளம்பில் அகப்பட்டுக்கொள்ளும் குடும்பங்கள் எது சரி, எது தவறு, ஏற்றுக் கொள்வதா, ஏற்க மறுக்கவேண்டுமா என்று தடுமாறுகிறார்கள். குடுமபத்தில் சிலர் மற்றங்களை ஏற்றுக் கொள்வதும், சிலர் ஏற்க மறுப்பதும் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இந்தப் பிரச்சனையை படம் பிடித்துக் காட்டும் ஒரு முயற்சியை கொடிமலிர்ல் ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார்.

முத்துராமன் அண்ணன். ஏவிஎம் ராஜன் தம்பி. இருவரும் இரு துருவங்கள். ஏவிஎம் ராஜன் கல்லூரியில் படித்து முடித்து வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது ”மாற்றம்” எனும் முன்னேற்றக் கொள்கைகளுடன் நுழைகிறார். பழமைவாதங்களில் மூழ்கியிருக்கும் தாயுடன் போராட்டம் துவங்குகிறது. மிகுந்த வசதி படைத்தவர்களாயினும் இளைய மகனின் மோட்டார் சைக்கிளையே தேவையற்ற ஒரு பொருளாக கருதுகிறார் தாய். அனாவசிய பண விரயம் என்று கருதுகிறார். தன்னிடம் அனுமதி வாங்காமல் மகன் த்ன்னிச்சையாக செயல்படுவதும் மரபிலிருந்து விலகிச்செல்வதும் தாய்க்கு ஒரு சுமையாகத் தெரிகிறது.  மகனோ தாயிடம் மரியாதையாகவும், அன்புடன் இருக்கவேண்டும், ஆனால் தன் வாழ்க்கை தனது, அதில் முடிவுகள் தனதாகவே இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் உறுதியாக இருக்கிறார். இதனால் மகனுக்கும் தாய்க்கும் இடைவெளி பெரிதாக உருவாகிவிடுகிறது. அதனால் தாயும் இளைய மகன் நம் கை அடக்கத்தில் இல்லை என்பதை மனதளவில் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் மகன் தன்னைவிட்டுப் போய்விடுவானோ என்ற பயம் இருப்பதால் அவன் வழியில் குறுக்கிடாமலும், மகன் சற்றே ஓங்கிப் பேசினால் பயந்து விடுவதும் இயல்ப்பாகிப் போகிறது.

மூத்த மகன் முத்துராமன். மூத்த மகன் இன்னொரு துருவம். அம்மா மேல் பக்தியே வைத்திருக்கிறார். அம்மா சிறிது மனம் கோணல் அடந்தாலும் துடித்து விடுகிறார். அம்மாவுக்கும் மகன் கையடக்கமாக இருப்பதில் பரம திருப்தி. தம்பியை பல முறை அம்மாவுக்காக கண்டித்தாலும், தம்பியின் மேலும் மிக பாசமாக உள்ளவர். தமபியைப் போல் அல்லாம்ல் மாமாவிடமும் மிகுந்த மரியாதையுடையவர். வீட்டிலேயே வளர்ந்து அம்மா வா என்றால் வருவதும், போ என்றால் போவதுமாக அம்மாவின் நிழலாக இருப்பவர்.

தாய் மாமா நாகேஷ். அவருக்கு அக்காவை விட்டால் பூவாவுக்கு வழியில்லை. இடமும் கிடையாது. அக்காவை காக்கா பிடித்துக் கொண்டும், அக்கா கொடுக்கும் இடத்தினால் கணக்கராக இருந்து வீட்டிலும், வயலிலும் எல்லோரையும் வேலை வாங்குவதும், அக்கா மகன்களையும், அக்காவையுமே தன் சொந்தங்களாகவும் கொண்டிருக்கிறார். தன் பாச்சா இளைய மகனிடம் பலிக்காவிட்டாலும் துணிச்சலாக அக்காவுக்காக பரிந்து இளைய மகனிடம் மோதிக் கொண்டு காலம் தள்ளுகிறார்.

பைக்கில் கிராம்ங்களை வலம் வருகையில் இயற்க்கையிலேயே துணிச்சலான காஞ்சனாவை சந்திக்கிறார் இளைய மகன். காதல் மலர்கிறது. விஜயகுமாரி காஞ்சனாவின் அக்கா. ஊமைப்பெண். இவர்கள் தந்தை பரம் ஏழை. தாய் எஸ்.என்.பார்வதி. ஊமையானாதால் மூத்த மகளை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் வெதும்புகிறார் தந்தை. ஊமைப் பெண்ணை தன் அசட்டு மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார் பஞ்சாயத்து தலைவர்.  காஞ்சனாவின் துணிச்சலாலும், மதி நுட்பத்தாலும் குடுமபம் ஒருவாறு தாக்குப்பிடிக்கிறது. மூத்த மகளுக்கு திருமணம் ஆகாது என்று நினைத்து இளைய மகளுக்குத் திருமணம் செய்யத் தயாராகிறார்கள் பெற்றோர்கள்.

முத்துராமனுக்கு மனம் செய்ய தாய் தயாராகிறார். திருமணம் நடை பெறவிருக்கும் சமயத்தில் தாய் உடல் நலம் குன்றுகிறது. அதனால் தாய் மாமா தலைமையில் சகோதரர் இருவரும் செல்கிறார்கள். மனப்பெண் காஞ்சனா. அதே முகூர்த்தத்தில் விஜயகுமாரி பஞ்சாயத்து தலைவரின் அழுத்தம் தாங்க முடியாமல் அவரின் அசட்டு மகனுக்கு மணம் செய்யத் தயாராகிறார்கள். ஏவிஎம் ராஜனும் காஞ்சனாவும் பரிதவிக்கிறார்கள்.

இந்த இடத்தில் சினிமாத்தனம் புகுந்து விடுகிறது. விஜயகுமரி கிணத்தில் குதிக்க முத்துராமன் காப்பாற்ற பெருந்தன்மையுடம் ஊமைப்பெண்ணை மனம் செய்து கொள்கிறார். அனால் தாய் வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. தாய்க்கு எதிராகப் பேசி பழக்கமில்லாத மகன் விஜயகுமாரியை அவர் வீட்டிற்கே அனுப்பிவிடுகிறார் மகன்.

அதன் பிறகு ஏவிஎம் ராஜன் காஞ்சனா திருமணம் நடக்கிறதா, முத்துராமன் விஜயகுமாரியுடன் சேருகிறாரா? என்பதயெல்லாம் வெள்ளித்திரையில காண வாருங்கள் என்று கமர்சியல் தான் போடமுடியும். கதையை கொடுத்துவிட்டேன் (அப்படியெல்லாம் இல்லாமலேயே) என்று ஒரு வாசகர் கொந்தளித்துவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். உங்களுக்கு எங்கேயாவது டிவிடி கிடைக்கமலா போய்விடும்?

”மௌணமே பார்வையாய்” என்று பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடும் பாட்டு பெரிய ஹிட். எம்.எஸ்.வியின் இசையில் அருமையாக இருக்கிறது.

அம்மா கேரக்டர் யாரென்று கண்டு பிடித்து கூறுபவர்களுக்கு நூறு கைத்தட்டல்கள் இனாம்.

நூற்றுக்கு அறுபத்தைந்து மதிப்பெண்கள்.

மயங்குகிறாள் ஒரு மாது (1975)


By E. Gopal

படம் வெளியான தேதி: 30.5.1975,

நடிகர்கள் : முத்துராமன், விஜயகுமார், தேங்காய் சீனிவாசன், அசோகன், செந்தாமரை நடிகைகள்: சுஜாதா, ஃபடாபட் ஜயலக்ஷ்மி, எம்.என்.ராஜம், காந்திமதி, புஷ்பா பின்னணி பாயிருப்பவர்கள் : கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணிஜயராம் பின்னணி இசை: விஜய பாஸ்கர் பாடியவர்கள் : கே.ஜெ.யேசுதாஸ், தயாரிப்பு: பாஸ்கர்
வசனம்: பஞ்சுஅருணாசலம்
திரைக்கதை, வசனம், இயக்கம் : எஸ்.பி.முத்துராமன்

மாத்திரையடக்க கதை

மனச்சஞ்சலத்தால் சற்று வழிமாறிப்போகும் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த ஒரு பெண், குடும்பவாழ்க்கையில் சந்திக்கும் பதற்றங்களும், சவால்களையும் பரபரப்பான பிண்ணனியில் விளக்கியிருக்கும் படம் “மயங்குகிறாள் ஒரு மாது”.

கதைச்சுருக்கம்

கல்லூரியில் படித்துக்கொண்டு, தங்கும் விடுதியில் பெண்தோழிகளுடன் தங்கியிருக்கிறார் சுஜாதா.  இவரின் அறைநண்பியான ஃபடாபட் ஜயலட்சுமி மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்கிறார். படிக்கற காலத்தில் படிக்க வேண்டும், மற்ற சஞ்சலங்களில் மனதைச்செலுத்தி விடக்கூடாதென்று நினைக்கிறார். இக்கருத்தை உடைக்க முற்பட்டு சுஜாதாவின் மனதில் சலனத்தை ஏற்படுத்துகிறார்கள் தோழிகள். உணர்ச்சிகளை தூண்டும் புத்தகங்களைக் கொடுத்தும், திரைப்படத்திற்கு திருட்டுத்தனமாக கூட்டிப்போயும் அவர் மனதில் பாதையைப்போடுகிறார்கள். இதனால் ஏற்படும் கருத்துவேறுபாடில் சுஜாதாவை, ஃபடாபட் அடித்துவிட, இருவருக்கும் மனதில் பிளவு ஏற்பட்டு பேச்சுவார்த்தை நின்று போகிறது. பருவக்கோளாறினால் ஏற்படும் மயக்கம் ஒருபுறம் தள்ள, உடம்பு என்ற நெருப்பு மனதை வினாடியில் சாம்பலாக்க, காதல் என்ற பல்லக்கு பயணிக்கத்தொடங்குகிறது.

விஜயகுமாரின் அப்பா (செந்தாமரை) ஒரு  பெண் சபலஸ்தர், பணக்காரர்.  இவர் பெண்கள் கூட குஜாலாக இருக்கும்போது தெரியாமல் புகைப்படம் எடுத்து அதைகாட்டி மிரட்டுகிறார் புகைப்படக்கலைஞரும் எப்படியும் பணத்தை சம்பாதிக்கத்துடிக்கும் தேங்காய் சீனிவாசன். விஜயகுமார் தேங்காயின் மகன், சுஜாதாவின்மேல் காதல்வயப்பட்டு அவர் பின்னால் சுற்றுகிறார்.  ஆரம்பத்தில் நிராகரிக்கும் சுஜாதா, இன்னபிற பருவக்கோளாறுகளும் சேர்த்து உந்த, விரித்த வலையில் சிக்குகிறார்.  விஜயகுமாரின் பங்களாக்கு போகும் ஒருமுறை தன்னை மறந்த நிலையில் இருவரும் தவறு செய்ய, பேயரைந்தவர்போல் விடுதிக்கு வருகிறார்.  வருத்தம் தெரிவிக்கும் விஜயகுமார், கல்யாணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுக்கிறார். இந்நிகழ்ச்சிக்குப் பின் இவரின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் வர, சந்தேகிக்கிறார் ஃபடாபட்.  மறுநாளிலிருந்து விஜயகுமாரை காணாமல் தேட, ஒரு வண்டி அமர்த்திக்கொண்டு அவரின் இருப்பிட்த்திற்கே போக, அங்கோ, காவலர்கள் அவரையும், அவர் அப்பாவையும் கடத்தல் காரணமாக கைது பண்ணி ஜீப்பில் ஏற்றிக்கொண்டுபோகிறார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள ஒரே வழி, விஷம் குடிப்பதுதான் என்று முடிவு செய்து – அதையும் செய்கிறார். இவர் மயங்கி விழ, ஃபடாபட் ஓடிப்போய் விடுதியின் மருத்துவரான எம்.என்.ராஜத்தை கூட்டி வந்து சிகிச்சை அளிக்கிறார்.  இவரின் விஷத்தை குடலிலிருந்து எடுத்த மருத்துவர், இவர் கர்ப்பமாக இருப்பதாகவும், உள் இறங்கிய விஷம் அதை முறித்துவிட்டது என்றும் – இவ்விஷயம் யாருக்கும் தெரியவேண்டாமென்றும், அதனால் சுஜாதாவின் வருங்காலம் பாதிக்கப்படலாம் என்றும் ஃபடாபட்டிடம் உறுதி வாங்கிக்கொள்கிறார். ஒருமுறை ஒன்றுகூடிய உடன் கர்ப்பமாகத்தான் வேண்டும், புற்று நோய் வந்தால் சாகத்தான் வேண்டும், இரண்டு மனைவி இருந்தால் ஒரு மனைவி சாகத்தான் வேண்டும் (அ) அப்புறம் போய்விடவேண்டும், வில்லன் கடைசி காட்சிகளில் இறக்கத்தான் வேண்டும், கடத்தல்காரன் பணத்தை சுருட்டிக்கொண்டு சிங்கப்பூருக்கு கப்பலில் (இதில் கடவுச்சீட்டும், பயணச்சீட்டும் வேறு
இருக்கும்) தப்பிக்க ஒரு அதிரடி திட்டம் இருக்கத்தான் வேண்டும், மனைவியை விட்டு ஓடிவிட்டால், கடைசி காட்சியில் சேரும்போது மனைவி கணவன் காலில் விழத்தான் வேண்டும் – இது போன்ற மாற்றமுடியாத, மாற்ற விரும்பும் ஆனால் மாற்றக்கூடாதென்ற ஊறிப்போன தமிழ்பட தலைவிதிகள் இதிலும் உண்டு.

அவர் நலனையே கருதும், ஃபடாபட், எல்லாவற்றையும் மறக்க ஆதரவளித்து, கல்லூரி நாட்கள் முடிந்தவுடன் பிரிந்து செல்கிறார்கள்.  சுஜாதாவின் தந்தையான அசோகன், தன் மனைவி உயிருடன் இல்லாத காரணத்தினால், அவருக்கு சீக்கிரமாக கல்யாணம் செய்து வைக்க முற்படுகிறார். முத்துராமனும் அவர் அக்காவும் பெண்பார்க்க வருகிறார்கள்.

அவர் அக்காவாக வரும் எம்.என்.ராஜத்தை கண்டு அதிரிச்சியை உள்வாங்கும் நாயகி, தனியே அவரை கூட்டிப்போய், இக்கல்யாணத்தை எப்படியாவது நிறுத்துமாறு மன்றாடுகிறார்.  “வாழ்க்கையில் அப்படிப்பார்த்தால் யாரும் உயிருடனே இருக்க முடியாது” என்று வாதிடும் ராஜம், அவரின் குணத்திற்குத்தான் பண்ணிக்கொள்வதாகவும், நடத்தையை பார்த்து அல்ல என்றும், தனக்கு இதில் பரிபூரண சம்மதம் என்றும் கூறி சம்மதிக்க வைக்கிறார்.  முதல் இரவில், முத்துராமனும், தனக்கும் ஒரு காதலி இருந்த்தாகவும், கல்யாணம் கைகூடவில்லை என்றும் கூற, சற்று ஆறுதலடைகிறார்.

இதற்க்குப்பின், இனிமையாக பயணம் செய்யும் வாழ்க்கை, ஒரு குழந்தை பிறந்து வளர, திடீரென்று புடவைக்கடையில் ஃபடாபட்டை சந்திக்கும் போது பாதை மாறுகிறது.  அவரின் கணவர்தான் தேங்காய்.  ஏற்கனவே இருவரின் மனைவியும் நண்பிகளாதலால், குடும்ப நண்பர்கள் ஆகிறார்கள்.  ஒரு நாள் தேங்காய், தனிமையில் இருக்கும் சுஜாதாவிடம் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கொடுக்க, அதை பார்த்துக்கொண்டு வரும் நாயகிக்கு – அவரும், விஜயகுமாரும் கூடியபோது எடுக்கப்பட்டபடங்களையும் இடைச்செருகல் செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பின் தேங்காய், ஒரு பெரிய பணமுடிப்பு கொடுத்தால் இதன் மூலச்சுருளை கொடுத்துவிடுவதாகவும், அப்பணமுடிப்பை எப்படி அவர் கணவர் செய்யும் தொழிலிலிருந்து அவர் அறியாமல் எடுக்கக் முடியும் என்ற லாவகத்தை  கற்றுக்கொடுப்பதாகவும் கூறி, அவகாசமும் கொடுத்துச்செல்கிறார்.

இவ்வதிரிச்சியிலிருந்து மீள்வதற்குள், மாலை, அவர் கணவரோ, புதிதாக ஒரு ஓட்டுனரை நியமித் திருப்பதாகக்கூறி விஜயகுமாரை கொண்டு நிறுத்துகிறார்.
கள் குடித்த குரங்காக தலை சுற்றுகிறது நாயகிக்கு.

இச்சுழலிலிருந்து அவர் எப்படி மீண்டார், தேங்காயை எப்படி சமாளித்தார், முன்னாள் காதலனை எப்படி தவிர்த்தார், கணவனுக்கு குட்டு வெளிப்பட்ட்தா என்பதை வெள்ளித்திரையில் காண்க.

மொத்தக்கருத்து

ஆரம்பம்முதலே கல்லூரி மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட படமோ என்று நினைக்கத்தோன்றும் காட்சிகள் வேகவேகமாக மாறி குடும்பத்துக்குள் புகுந்து சுவை கூட்டுகிறது.  திரைக்கதையை நம் கலாசாரக் கண்ணோட்டத்தில் எடுத்திருக்கிறார்கள்.  பிற்பாதியில் ஒருவித சோர்வு ஏற்பட்டு, கதை இப்படித்தான் பயணிக்கும் என்று தோன்றிவிடுவது எதிர்பாராத திருப்பங்களை மனதில் ஏற்படுத்த வில்லை.  ஆனாலும்,  சிறு சிறு பாத்திரங்கள் மூலம் எல்லோருடைய படைப்பும் நிறைவைத்தருகிறது.  ஆரம்பக் காட்சிகளில் புஷ்பாவின் உடையலங்காரம் அப்போதிருந்த நாகரீகத்தை காட்டுவதாக இருந்தாலும், கல்லூரி இளைஞர்களை திருப்திப்படுத்தும் நோக்கோடு எடுத்திருப்பது தெரிகிறது.

நடிகர்கள்

ஃபடாபட் ஜயலட்சுமி, எம்.என்.ராஜம், தேங்காய், முத்துராமன், விஜயகுமார் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே தேய்த்திருக்கிறார்கள். சுஜாதாவிற்கு நிறைவான பாத்திரம்.
நன்றாகச்செய்துள்ளார். ஃபடாபட்டின் பாத்திரம் ‘அவள் ஒரு தொடர்கதை’யில் சமூகச்சங்கிலிகளை அறுப்பதாக இருந்தது. இங்கு அதற்கு நேர்மார். எக்காரணம் கொண்டும் ஊறிவிட்ட கோட்பாடுகளை அறுக்கக்கூடாதென்று கூறும் பாத்திரம்.
சுஜாதாவின் உற்ற தோழியாகவும், அவரை காட்டிக்கொடுக்கூடாதென்று நினைக்கும் உன்னதமான பாத்திரத்தில் மிளிர்கிறார். விஜயகுமார் அமைதியாக வந்து போகிறார். தேங்காய்க்கு என்னவோ வில்லத்தனம் அவ்வளவாக இப்படத்தில் பொருந்தவில்லை. ஃபடாபட் தன்னை மாய்த்துக்கொள்வதாக கூறுவது, பின் தேங்காய் திருந்துவது எல்லாம் தமிழ்படத்திற்கென்று காலில் போட்ட சங்கிலிகள்.
செந்தாமரையும், அசோகனும் வந்து போகிறார்கள்.  சிறு பாதிரங்கள் நிறைவாகச்செய்திருக்கிறார்கள்.

இசை

இசை இப்படத்திற்கு ஒரு மிகப்பெரிய பலம். விஜயபாஸ்கர் அவர்களின் இசை மிகவும் மெச்சத்தகுந்த வகையில் போடப்பட்டிருக்கிறது.  “சுகம் ஆயிரம்”, “வரவேண்டும் வாழ்க்கையில்”, “சம்சாரம் என்பது வீணை”, “ஒரு புறம் வேடன், ஒருபுறம் நாகம்” போன்ற இன்றும் பிரபலமாக உள்ள பாடல்களை தன் இனிய இசை மூலம் அள்ளித்தெளித்திருக்கிறார். இவர் ஒரு கன்னட இசையமைப்பாளர், இருப்பினும், ஹிந்தி, மற்றும் எல்லா தெற்கு மாநில மொழிகளிலும் இசைகோர்த்திருக்கிறார். இவரின் இசை எனக்குப்பிடித்தமான ஒன்று.  பல அதிரடி வெற்றி இசை கொடுத்திருக்கிறார். எம்.எஸ்.வி. என்ற புயல் காற்றில் அவ்வளவாக அறியப்படாதவர், இருப்பினும் அற்புதமான இசை வித்தகர்.  சில ஆண்டுகளுக்கு முன்தான் காலமானார். இவரின் மற்ற சில படங்கள்:
தெய்வக்குழந்தை (முதல்படம்), தப்புத்தாளங்கள், ஆடுபுலிஆட்டம், உங்கள் விருப்பம், சௌந்தர்யமே வருக வருக, எங்கம்மா சபதம், யாருக்கு மாப்பிள்ளை யாரோ, பேர் சொல்ல ஒரு பிள்ளை.

பஞ்சுஅருணாசலத்தின் வசனங்களும் கூர்மை, கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகளும் இதம் சேர்ப்பவை.  பஞ்சு அருணாசலமும் பாட்டெழுகியிருக்கிறார்.  பாபுவின் புகைப்பட காட்சிகள் மனதை கொள்ளைகொள்வதோடு, புதுக்கோணப் பரிமாணங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் நல்லதொரு படம் கொடுதிருக்கிறார்.

இப்படம் வந்து ஓடியதா என்று தெரியவில்லை, நான் படித்துக்கொண்டிருக்கும்போது வெளிவந்து, படம் பார்க்க வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. அதற்குப்பின் 25 வருடம் கழித்து இப்போதுதான் பார்த்தேன்.

பாட்டிற்காகவும், அறுவையாக இல்லாத திரைக்கதைக்காகவும் நீங்கள் பார்க்கலாமே! இப்படத்தின் பிரதி இப்போது இந்தியாவில், சென்னையில், சங்கரா ஹாலில் கிடைக்கிறது. முதலில் கிடைக்காமல்  நானும் அசோக்கும் சிரமப்பட்டுத் தேடி எடுத்தோம்.

மிஸ்டர். சம்பத்


By ஈ. கோபால்

படம் வெளியான தேதி: 13.4.1972,

நடிகர்கள் : சோ, முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், பூர்ணம் விசுவநாதன், நீலு, மாலி,  வெண்ணீராடை  மூர்த்தி, செந்தாமரை மற்றும் பலர்…
நடிகைகள்: ஜெயா, மனோரமா, சுகுமாரி, தேவகி, புஷ்பா, ராமலக்ஷ்மி மற்றும் பலர்
திரைக்கதை, வசனம், இயக்கம் : சோ,

மூலக்கதை : ஆர்.எம்.நாராயண்,

பாடல்கள் :கவிஞர் வாலி
பின்னனிப்பாடகர்கள் : டி.எம்.சௌந்தரராஜன், எம்.எஸ்.விசுவநாதன் (title song), எஸ்.பி.பாலசுப்ரமண்யம், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, மனோரமா
இசை: எம்.எஸ்.விசுவநாதன்

தன் தந்தையின் சாவுக்குக்காரணமான ‘நேர்மை’யும், அவரின் ஈமச்சடங்குக்கு பணமில்லாமல் பட்ட வேதனைகளையும் பார்த்து, மனது மாறி இனி ஒருபோதும் உண்மையைச் சொல்லி வாழ்வதில்லை என்று சபதமேற்று, பொய்யை ஒரு தொழிலாகவே செய்து வாழ்வு நடத்தும் கதாநாயகனாக வலம் வருகிறார் சோ.

இவரின் நண்பரும், பள்ளிப்பருவ தோழரான மேஜர் சுந்தர்ராஜனை தற்செயலாக ரயில் பயணத்தில் சந்திக்கிறார்.  டிக்கட் பரிசோதகரிடம் தன் சித்தப்பாதான் ரயில்வேயில் ‘ஜெனரல் மேனேஜர்’ என்று கூறி தான் பயணச்சீட்டு எடுக்காத்தை மறைத்து தப்பிக்கிறார்.  நேர்மையானவரும், எதிலுமே ஒரு வித தர்மத்தை
கடைபிடிப்பவருமான மேஜருக்கு சோவின் செயல் அருவெறுப்பைத்தருகிறது.  சோ செய்வது முற்றிலும் தவறு என்று வாதிடுகிறார். அவரின் தந்தையின் பண்பாட்டை கடைபிடிக்குமாறு அறிவுரை கூறுகிறார்.

இதை பொருட்படுத்தாத சோ, நேர்மை, தர்மம் என்பதெல்லாம் ஒரு ‘புருடா’ என்றும், அது இக்காலத்தில் சோறு போடாதென்றும் மறுத்துக்கூறி, தன்னுடைய இப்பழக்கத்தை மாற்றப்போவதில்லை என்கிறார்.  இருவருக்கும் ஒரு எழுதாப் பந்தயம் போட்டுக்கொள்கிறார்கள்.  மேஜரோ, ‘காலம் ஒரு நாள் உனக்கு பாடம்
புகட்டும்போது நான் சொன்னது உண்மை என்று நீ அறிவாய்” என்று கூறி ஒருவேளை ஏதாவது ஒரு நிகழ்வில் சோ பிடிக்கப்பட நேர்ந்தாலும், காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறி விடைபெறுகிறார்.

மேஜர் தன் கொள்கையில் வெற்றி பெற்றாரா, சோ வெற்றி பெற்றாரா என்பது மீதிக்கதை. ஒரு சின்ன சூட்கேஸ், ஒரு வெத்தலைப்பொட்டி, ஜிப்பா, ஜொலிக்கும் மூக்குக்கண்ணாடி, நக்கல் கலந்த முகபாவமும் அதனால் பிறக்கும் பேச்சு — இதுதான் இவரது மூலதனம். சூழ்நிலைக்கு தகுந்தவாறு பொய்சொல்வது, லாவகமாக அத்தருணத்தை தனது வெற்றியாக்கிக்கொள்வதும் சிரித்துக்கொண்டே காரியத்தை
சாதிப்பதும், குறுகிய நேரத்தில் ஒருவருடைய பலகீனத்தை கணித்து அவர்களை மடக்குவதையும் அநாசயமாக செய்திருக்கிறார் சோ.   நம்மிடம் உள்ள மிகப்பெரிய பலகீனமான சினிமா என்ற போதையை வைத்தே காயை நகர்த்துகிறார்.  இப்பொறியில் மாட்டும், மனோரமா, பூர்ணம் விசுவநாதன், மாலி, வீட்டு உரிமையாளர் நீலு, மரச்சாமான் விற்பனையாளர், என்று அனைவரையும் மிளகாய் அரைப்பது சிரிப்பை
மூட்டுகிறது. ஏதாவது ஒரு எண்ணை சுழற்றி, நடிகையிடம் பேசுவது போல் பாவ்லா காட்ட, ஒரு முறை பயில்வானுக்கு அந்த ஃபோன் போக, அவனோ இவன் யாரென்று கண்டுபிடித்து அங்கு வர, இவர் நீலுவை மாட்டிவிட்டு தப்பிப்பது நல்ல நகைச்சுவை.  வாடகை கொடுக்காமல், காசில்லாமல் வாய் ஜாலத்தை ஒன்றே வைத்து படத்தை ஓட்டுவது சோவின் சாதுர்யம்.

இவரின் பாச்சா முத்துராமனிடம் பலிக்காமல், மனோரமாவை பேச்சில் மயக்கி விழவைப்பது சுவையான பகுதி. இதில் மனோரமா இவர் மேல் காதல் வயப்பட்டு, இவரின் கடின வேலையை சுலபமாக்க, மற்றவர்களும் வலையில் விழுகிறார்கள். சினிமாவினால் ஈர்க்கப்படும் நான்குபேரை வைத்துக் கொண்டு கதையை நகர்த்தியிருப்பது அலுப்பை சில சமயம் தந்தாலும், காட்சிகளில் நகைச்சுவை
இருப்பதால் அறுக்கவில்லை.  கடைசியில் இவர் சொல்லும் வசனம் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறது ..…. ”எங்கப்பா செத்துப்போனப்ப கார்யத்துக்கே காசு இல்லாம போச்சு, நான் செத்துப்போனா எனக்கு கார்யம் பண்ண மனுஷனே இல்லாம போய்டுவா போலிருக்கு”.

இப்படத்தில் வெண்ணீராடை மூர்த்தி எப்போது வருகிறார் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, அவரின் பெயர் தலைப்பில் இருக்கிறது.  முத்துராமன் கோபக்கார, கண்டிப்பான இயக்குனராக நடித்துள்ளார்,
படப்பிடிப்பில் நடிக்கும் நடிகையையே இவர் காதலிப்பது அவ்வளவாக காட்சிக்குப்பொருந்தி வரவில்லை.  இவரின் பாத்திரம் அவ்வளவாக எடுபடவில்லை. கதாநாயகி ஜெயா ஒரு பாட்டுக்கு வந்து போகிறார். மீதி காட்சிகளில் மனோரமாவின் தோளிலேயே தொத்திக்கொண்டு போகிறார்.  மனோரமா ப்ரமாதம், இவரின்
பேச்சும், ஏற்ற இறக்கமும், வசன நடையை கையாளும்போது செலுத்தும் நடிப்பும் – இவரை மிஞ்ச இவரால்தான் முடியும்.  பயங்கர ‘timing’. படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் எப்போதும் திண்று கொண்டிருப்பதும், அழைப்பு பத்திரிகை கொடுக்க வந்த சுகுமாரி, மற்றும் நண்பிகளை தவறாக புரிந்துகொண்டு வாங்கு வாங்கு என்று வாங்குவதும் ரசிக்கவைக்கிறது.

மூன்று பாடல்களும் அருமை, “ஹரே ராம ஹரே கிருஷ்ணா” (எம்.எஸ்.வி), ”ஆரம்பம் ஆவது உன்னிடம் தான்” எஸ்.பி.பி, சுசீலா மற்றும், ‘அலங்காரம் எதற்கடி’ (டி.எம்.எஸ் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி/மனோரமா).

இது ஒரு கருப்பு வெள்ளைப்படம், முக்கால்வாசி ‘செட்’டிலேயே எடுக்கப்பட்டுள்ளது.  பல காட்சிகள் நாடகத்தனமாக உள்ளது. வசனங்கள் எல்லா சோ படம் போலவும் தத்துவத்தை தூக்கலாக வைத்துள்ளதும் யதார்த்தமாக உள்ளது.

இப்படம் வந்து அவ்வளவாக ஓடவில்லை என்கிறான்  என் நண்பன்.  தெரியவில்லை. இப்படத்தின் பிரதி எங்கும் கிடைக்காது, ஒருவேளை மலேசியா, சிங்கப்பூரில் கிடைக்கலாம், இந்தியாவில் இல்லை. சிறந்த படம், நல்ல பொழு்துபோக்குப் படம்  பாருங்கள்.

கலைக்கோவில்


By E. Gopal
திரைப்பட விமர்சனம் – கலைக்கோவில் (kalai kovil)

படம் வெளியான தேதி: 25.9.1964,

நடிகர்கள் : எஸ்.வி.சுப்பையா, முத்துராமன், நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன், வி.எஸ்.ராகவன்
நடிகைகள்:
சந்த்ரகாந்தா, ராஜ்ஸ்ரீ, ஜெயந்தி, எஸ்.என்.லக்ஷ்மி
பின்னனி வீணை இசை: சிட்டிபாபு
பாடியவர்கள் : டி.எம்.எஸ், பாலமுரளிகிருஷ்ணா, எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா
திரைக்கதை, வசனம், இயக்கம்: ஸ்ரீதர்.சி.வி.
தயாரிப்பு : எம்.எஸ்.விசுவநாதன் – கங்கா (கலை இயக்குனர்)

இசை: எம்.எஸ்.விசுவநாதன்-ராமமூர்த்தி

இப்படத்தைப் பற்றிய நுணுக்கமான, சங்கீதத் தகவல்களை அள்ளித்தெளித்ததற்கும்,  இப்படத்தை பற்றிய அறிய தகவல்களைத்தந்து, அதனை பார்க்கத்தூண்டிய நண்பர் அசோக்கிற்கு நன்றி.

தன் வீணை வித்வத்தால் புகழின் உச்சிக்குப்போகும் வித்வான் தனக்கு ஏற்படும் துரோகத்தால் எப்படி வீழ்ந்து மடிகிறார் என்பதே கதை.  ஆரம்பத்திலேயே அற்புதமான கச்சேரியுடன் தொடங்கும் பகுதியில் எஸ்.வி.சுப்பையா வீணை வித்வானாகவே மாறிவிடுகிறார்.  பின் இசையில் வீணைவாசித்திருப்பவர் சிட்டி பாபு.  மிகவும் ரம்மியமாகவும், லயத்துடனும் படமாக்கப்பட்டுள்ளது.

எஸ்.வி.சுப்பையா பிரம்மசாரி. மிகப்பெரிய நாணிலம் போற்றும் வீணை வித்வான்.  தன் அக்காள் (எஸ்.என்.லக்ஷ்மி), மற்றும் அவர் மகள் (சந்த்ரகாந்தா)வுடன் மகிழ்ச்சியாக வசித்துவருகிறார். கச்சேரி முடிந்த கையோடு, தன் நன்றியை கடவுளுக்கு தெரிவிக்க கோவிலுக்கு சென்று வரும் போது வெளியில் முத்துராமன் 2 நாட்களாக பசியினால் மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்து அவரை தன் காரில் ஏற்றி, வீட்டிற்கு கொண்டுவந்து, ஊணும் உடையும் கொடுத்து பேணுகிறார்.  அவர் கூடவே வசிக்கும் முத்துராமன், காலப்போக்கில் வீணையை கற்றுக்கொண்டு கலையில் தேர்ச்சி பெறுகிறார்.  வாரிசு இல்லாத எஸ்.வி.யோ இவரை தன் மகனாகவே சுவீகரித்து தன் இசைக்கும் இவர்தான் வாரிசு என்று போற்றி வளர்க்கிறார். முத்துராமனின் அரங்கேற்றம் நடக்கிறது, எல்லோரும் எஸ்.விக்கு இதை விட ஒரு வாரிசு கிடைக்காது என்று பாராட்டுகிறார்கள்.

இதனிடையில், எஸ்.வி.சுப்பையாவின் அக்காள் மகளும் அவருக்கு பணிவிடை செய்து அங்கேயே வளர்ந்துவரும் முத்துராமனுக்கும் காதல் பற்றிக்கொள்கிறது.  இருவரையும் தனிமையில் காணும் எஸ்.வி., அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து அவ்வாறே செய்கிறார்.

பிரபல நாட்டியக்காரியான (ரஜ்யஸ்ரீ), முத்துராமனின் வீணை இசைக்கு அடிமையாகிறார்.  அவரின் காரியதரசியிடம் (வி.கோபாலகிருஷ்ணன்) தம்வீட்டிற்கு எப்பாடியாவது முத்துராமனை சாப்பாட்டிற்கு அழைக்க வேண்டும் என்று கூறுகிறார்.  அவரும் சபாக்களில் கச்சேரி பிடித்துத்தருபவரும், சபா ஒருங்கிணைப்பாளரான  சுப்புவிடம் (நாகேஷ்) தன் கோரிக்கையை முன்வைக்கிறார்.  இது ஒன்றும் பெரிய காரியமில்லை என்று திருமணமான கையோடு – தம்பதிகளை ராஜ்ஸ்ரீ வீட்டிற்கு சாப்பாட்டு விருந்துக்கு அழைக்கிறார்.  அவர்களும் வந்து கௌரவிக்கிறார்கள்.  யாருக்கும் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் – முத்துராமனை ஒரு அரை மணித்துளிகள் வீணை வாசிக்க வேண்டுமென்று கேட்கிறார் ராஜ்யஸ்ரீ.  தன் மனைவியை தயக்கத்துடன் பார்த்தபடியே, வீணை கொண்டுவரவில்லை என்று கூற, அவரிடம் ஒரு வீணை இருப்பதாக எடுத்து வந்து வாசிக்குமாறு வற்புறுத்துகிறார்.  அவர் வாசிக்கிறார், வாசித்துக்கொண்டிருக்கும்போதே, எல்லொரும் புருவத்தை உயர்த்தும் வண்ணம், ராஜ்யஸ்ரீ வீணை வாசிப்பில் மயங்கி ஆடத்தொடங்கி, பாட்டும் பாடுகிறார் (தேவியர் இருவர் – ராகம் – ஷண்முகப்ரியா), இப்பாட்டில் உள்ள வரிகள், மிகவும் சச்சரவாக பிண்ணப்பட்டிருக்கவே, சந்தேகம் உணர்ச்சிகளில் குழைந்து முகத்தில் பீறிட, பாட்டை நிறுத்தச்சொல்லுமாறு கத்துகிறார் சந்த்ரகாந்தா.  முதல் முறை அவருக்கு எங்கே தன் கணவர் பாதை மாறிபோய்விடுவாரோ என்று பலவீன ரேகைகள் முகத்திலும், உள்ளத்திலும் இரட்டை குதிரை சவாரி செய்கின்றன. இந்நிகழ்சியிலிருந்து அவர்கள் சற்று இளைப்பாற, சுற்றுலா கிளம்பிப்போகிறார்கள்.
இதற்கிடையே – தனக்கு எல்லாத்திறமைகள் இருந்தும் ஏன் சபாக்களில் கச்சேரி கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் நீறுபூத்த நெருப்பாக மனதில் புகையை மூட்ட, அதை சுப்புவின் காதுகளில் போட்டு விளக்கம் கேட்க, அவரோ எல்லாம் நேரம்தான் காரணம், திறமை இருந்தாலும், ஒரு வீட்டில் இரு வித்வான் இருந்தால் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும், பெரியவர் இருக்கும் வரை இவர் குட்டிக்கரணம் போட்டாலும் கிடைப்பது கடினம் என்று மனதில் ஏற்பட்ட புகையில் சாம்பிராணையை தூவ – புகை, பகையாக மாறி நெருப்பாக நாக்கின் வழி எட்டிப்பார்க்கிறது.

ஒரு முறை எஸ்.வி.சு. ஒப்புக்கொண்ட கச்சேரிக்கு தன் உடல் நிலையை காரணம் காட்டி ரத்து செய்யச்சொல்லும் போது – அக்கச்சேரி வாய்ப்பை ஏன் தனக்கு கொடுக்கச்சொல்லி கோரிக்கை வைக்க, அவரோ முகமலர்ந்து அதற்கென்னா, “பேஷா செய்துடலாம்” என்று சபா ஒருங்கிணைப்பாளரிடம் இக்கருத்தை மையப்படுத்த, அவரோ மிகவும் கண்டிப்பாக,  ”நடந்தால் உங்கள் கச்சேரி, இல்லையேல் நிகழ்ச்சி ரத்து” என்று கூற – இப்போது முத்துராமனின் உடம்பின் எல்லாப்பாகத்திலும் தீ ஜுவாலை பரவுகிறது.

தன்னுடைய ஆதங்கத்தைத்தீர்க்க வடிகால் தேடி, சுப்பு, ரஜ்யஸ்ரீ கூட்டுக்குழுவினரிடம் போய் கொட்ட – அவர்கள் இவருக்கு குடியையும் பழக்கி தவறான பாதைக்கு போக அடித்தளமிடுகிறார்கள். ஒரு நாள் பூஜை நடக்கும்போது எஸ்.வி. வீணை வாசித்துக்கொண்டிருக்கும்போது அங்கு ஒரு முடிவோடு வரும் முத்துராமன், எஸ்.வி.யிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார். அந்த வரம் தன் வாழ்கையையே பிறட்டிப்போடப்போவது என்பதை அறியாமல், அது என்ன கோரிக்கையானாலும், தான் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கிறார்.  “இனிமேல் நீங்கள் வீணையை வாசிக்க்க்கூடாது” என்று சத்தியம் செய்யச்சொல்கிறார். எமாற்றமோ, கோபமோ இல்லாமல் அத்ர்ச்சியை மட்டும் தன்னுள் இறக்கிக்கொண்டு, சமாளித்து அவ்வாறே செய்து கொடுக்கிறார்.

எந்த ஒரு நாதத்தை தன் மூச்சாக கொண்டு வசித்து வந்தாரோ, அதுவே இல்லாத போது அதன் நினைவு வந்து  வாட்டுவதால் இனி அங்கிருப்பது சரியில்லை என்று, கடிதம் எழுதிவிட்டு, கோவில் மண்டபத்திற்கே – எங்கு முத்துராமனை கண்டு, தூக்கிவந்தாரோ – அங்கேயே வந்து வாழ ஆரம்பிக்கிறார்.  முத்துராமனும் இந்த அதிர்ச்சியை மறைக்க, ராஜ்யஸ்ரீ கும்பலுடன் சேர்ந்து நேரத்தைப்போக்கி, குடித்து கெடுகிறார்.  குடியை விடாவிட்டாலும், கச்சேரியால் புகழின் உச்சியை அடைகிறார். எஸ்.வி-யோ பிச்சைக்காரனை போல் வாழ்கிறார். பாதி நேரம் நாட்டியக்காரியினூடேயே வசிக்கும் முத்துராமனால் வீட்டிற்க்கு வருவதைத்தவிர்க்கிறார். இதனால், வீடும் களையிழந்து, அவர் மனைவியும் பலாக்காணம் பாடிக்கொண்டு ஓட்டுகிறார்.

இங்கு தான் இயக்குனர் பெரிய ரம்பத்தை எடுத்து நம் கழுத்தில் வைக்கிறார். இதுவரை நன்றாக போய்க்கொண்டிருந்த கதையை ஜவ்வு போல் இழுத்து அறுக்கிறார்.  ஒருபுரம் முத்துராமனின் வரட்டு கௌரவம், ஒரு புரம் எஸ்.வி.சுப்பையாவின் பிடிவாதம், இரண்டுக்கும் நடுவில் சந்த்ரகாந்தாவின் அழுகுரல் – மூன்றும் மிளகாயை அரைத்து புண்ணில் தடவுகிறது. முத்துராமனின் ஈகோவால் எல்லாம் சீரழிந்து, பின் கடைசியில் பக்கவாதம் வந்து பாதிக்கப்படுகிறார். முத்துராமனுக்கு பக்கவாதம் வந்த பின்தான் நமக்கு பக்காவாக பாதம் நகர்கிறது. கடைசியில், வரட்டுப்பிடிவாதத்தில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே உச்சக்கட்டம்.

முத்துராமனின் வெறுப்பு, எஸ்.வி-யின் சோகம் ததும்பும் முகம், சந்த்ரகாந்தா எப்போதும் கண்களில் வாசிக்கும் ஜலதரங்கம் எல்லாம் பிற்பகுதியில் நம்மை அவர்களிடம் பரிவை ஏற்படுத்துவதற்குப்பதிலாக, எரிச்சலையே ஏற்படுத்துகிறது. கடைசிசொதப்பலால் ஒருவேளை இப்படம் தோல்வியைச் சந்தித்ததோ தெரியவில்லை.

எஸ்.வி.சுப்பையா-வின் நடிப்பு நிறைவைத்தருகிறது.  முத்துராமன், சந்த்ரகாந்தா, ராஜ்யஸ்ரீ, நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தம்தம் பாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.  முதலில் விறுவிறுப்பாக போகும் படத்தில், முத்துராமன்மேல் இனம்புரியாத கோபம் வருவது திரைக்கதைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

நாகேஷ் பிச்சு உதறுகிறார்.  சபா ஒருங்கிணைப்பாளராகவும், ஜெயந்தியின் கணவராகவும் ஜமாய்க்கிறார்.  ராஜ்யஸ்ரீயால் கைவிடப்பட்ட முத்துராமன், குடிப்பதற்க்கு நாகேஷின் உறவை தேர்ந்தெடுக்க, அவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ஜெயந்தியை வாரு வாரு என்று வாருவது பிரமாதமான நகைச்சுவை.

இசையைப் பற்றி சொல்லவில்லையென்றால் முழுமை பெறாது.  மிகவும் அற்புதமான மெட்டுக்கள், தேன்சுவையை பாடல்கள் மூலம் தந்த இரட்டையர் பாராட்டுக்குறியவர்களே.  பாலமுரளியின் “தங்கரதம் வந்தது” (ஆபோகி ராகம்….) “நான் உன்னை சேர்ந்த”, தேவியர் இருவர் முருகனுக்கு (ஷண்முகப்ப்ரியா), மேற்கத்திய பாணியில் முள்ளில் ரோஜா ஆகியவை அருமை.
இப்படம் சிந்துபைரவிக்கு முன்னோடியாக்க்கருதப்படுகிறது.  படம் வந்து ஒருவாரத்தில் படுதோல்வி அடைந்தது. இப்படத்தின் பிரதியை எல்லா இடத்திலும் தேடினோம்.  சென்னை, மதுரை என்று – கிடைக்கவில்லை.  சென்னையில் சங்கரா ஹாலில் (ஏவிஎம்) முக்கால்வாசி படங்கள் கிடைக்கும், ஆனால் இங்கும் இல்லை.  அங்கு இருக்கும் பொறுப்பாளர் கருணாகரன் இப்படம் இந்தியாவில் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.  இப்படம் எம்.எஸ்.வியின் சொந்தப்படமாதலால், தோல்வியுற்றபோது, பிரதியை எங்கோ தூக்கி போட்டுவிட்டார் போலும். மலேசியா, சிங்கப்பூரில் விசிடி பதிப்பு கிடைக்கிறது. இந்தியாவில் எனக்குத்தெரிந்து கிடைக்கவில்லை. சிறந்த படம்– அருமையான பாட்டிற்காகவும், முன் திரைக்கதைக்காகவும் பார்க்கலாம்.

காற்றினிலே வரும் கீதம் – விகடன் விமர்சனம்


எழுபதுகளின் பிற்பாதியில் விகடனில் சினிமாக்களுக்கு மார்க் போட ஆரம்பித்தார்கள். அப்போது அது ஒரு புதுமையாக இருந்தது. ஏதாவது ஒரு படம் போகலாம் என்றால் விகடனில் எந்த படத்துக்கு மார்க் அதிகம் என்று ஒரு நிமிஷமாவது யோசித்துத்தான் போவோம். மார்க் போடப்பட்டதால் படங்களை ஒப்பிடுவது மிக சுலபமாக இருந்தது.

இன்றும் நினைவு இருக்கும் ஒரு விஷயம் – அண்ணன் ஒரு கோவில் படத்துக்கு நடிப்புக்கு மார்க் போட்டது. சாதாரணமாக முக்கிய நடிகர்களின் நடிப்புக்கு தனித்தனியாக மார்க் போட்டு அதற்கு ஒரு சராசரி எடுத்துப் போடுவார்கள். அ.ஒ. கோவிலுக்கு நடிப்பு என்று நாலு பேருக்கு மார்க் போட்டிருந்தார்கள். இப்படி இருந்தது.
சிவாஜி – 70%
சிவாஜி – 70%
சிவாஜி – 70%
சிவாஜி – 70%

படத்தின் dominant performance சிவாஜிதான் என்று அழகாக சொல்லி இருந்தார்கள்.

கஞ்சத்தனமாகத்தான் மார்க் போடுவார்கள். எந்த படத்துக்கும் அறுபது மார்க் கூட போட்டதாக நினைவில்லை. முள்ளும் மலரும் மட்டும்தான் அறுபதை தாண்டியது என்று நினைக்கிறேன்.

விமல் அப்படி வந்த ஒரு விமர்சனத்தை ஸ்கான் செய்து அனுப்பி இருக்கிறார். இவர் இதை எல்லாம் எங்கே பிடிக்கிறாரோ தெரியவில்லை! விகடனுக்கும் விமலுக்கும் நன்றி!

காற்றினிலே வரும் கீதம் 78-இலோ என்னவோ வந்தது என்று நினைக்கிறேன். பஞ்சு அருணாசலம் கதை வசனம். எஸ்.பி. முத்துராமன் இயக்கம். இளையராஜா இசை. முத்துராமன் ஹீரோ, கவிதா நாயகி. ராஜு இது கவிதாவின் முதல் படம் என்று தகவல் தருகிறார். படம் ஓடவில்லையோ?

பாட்டெல்லாம் கொஞ்ச நாளைக்கு ஹிட் ஆனது என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு இப்போது எந்த பாட்டும் நினைவில்லை. நினைவிருப்பவர்கள் சொல்லலாம். விமல் பாட்டுகளின் லிஸ்டை தந்திருக்கிறார் –

  1. கண்டேன் எங்கும் (வாணி ஜெயராம் பாடியது)
  2. கண்டேன் எங்கும் (எஸ். ஜானகி பாடியது) – இந்த பாட்டை இங்கே டவுன்லோட் செய்யலாம்.
  3. சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் தையரே தையா (ஜெயச்சந்திரன் பாடியது)
  4. ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் (ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகி பாடியது)

நண்பர் சிமுலேஷன் சித்திரச் செவ்வானம் பாட்டுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். (பாட்டுதான், வீடியோ இல்லை, பாட்டு பூராவும் இளையராஜா ஃபோட்டோ காட்டுகிறார்கள்.) அது சாவித்திரி (அபூர்வ) ராகத்தில் அமைந்த பாட்டாம். வெகு சில சினிமாப் பாட்டுக்களே இந்த ராகத்தில் உள்ளனவாம். என்னென்ன பாட்டுகள் என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த சுட்டியைப் பார்க்கவும்.

விமலுக்கு கண்டேன் எங்கும் பாட்டு மிகவும் பிடிக்கும் போலிருக்கிறது. பாட்டின் வரிகளையும் தந்திருக்கிறார்.

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்

தொட்டுத்தொட்டு பேசும் தென்றல்
தொட்டில்கட்டி ஆடும் உள்ளம்
தொட்டுத்தொட்டு பேசும் தென்றல்
தொட்டில்கட்டி ஆடும் உள்ளம்
காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே
அள்ளிக்கொள்ள மன்னன் எங்கே
நினைத்தேனே அழைத்தேனே
வருவாய் அன்பே என்று இங்கே இன்று

அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

வனக்கிளியே ஏக்கம் ஏனோ
கருங்குயிலே மோகம் தானோ
தூக்கமும் இல்லை துவளுது முல்லை
தழுவிடத்தானே தவிக்குது பிள்ளை
பனி வாடை விலகாதோ
நினைத்தால் சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்

கள்ளமில்லை கபடமில்லை
காவலுக்கு யாரும் இல்லை
யார் வருவாரோ கனிகளும் பழுத்ததம்மா
கொடி மொட்டு மலர்ந்ததம்மா
என் வீடு இது தானே
எங்கும் எந்தன் உள்ளம் சொந்தம் கொள்ளும்

அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், விகடன் விமர்சனங்கள்

தொடர்புடைய சுட்டிகள்: சாவித்திரி ராக சினிமாப் பாட்டுகள்

துலாபாரம் – Thulabaram (1969)


1969ல் வெளி வந்தது. 1968ல் மலையாளத்திலும் வந்திருக்கிறது. ஏ.வின்செண்ட் இயக்கத்தில், அடூர் பஷி , பிரேம் நசீர், சுகுமாரன் நாயர், ஷீலா (வத்சலாவாக), மற்றும் சாரதா நடித்திருக்கிறார்கள். சாரதாவுக்கு 3 ஊர்வசி விருது கிடைத்ததாக செய்தி.

நடிகர்கள் – AVM ராஜன், மேஜர் சுந்தர்ராஜன், பாலையா, நாகேஷ், முத்துராமன் வி.எஸ்.ராகவன், சுருளிராஜன், என்னெத்தெ கன்னெய்யா, கரிகோல்ராஜ், பீலி சிவம், செந்தாமரை
நடிகைகள் – காஞ்சனா, சாரதா, S.N.லக்‌ஷ்மி, காந்திமதி
பாடல்கள் – கண்ணதாசன்
இசை – தேவராஜன்
டைரக்‌ஷ்ன் – ராமன்னா

வத்சலா (காஞ்சனா)வக்கீல். மூன்று கொலைகள் செய்த தோழிக்கே அதிக பட்சம் தண்டனை வாங்கி கொடுக்க முயல்வது மூலம் காட்சி தொடங்குகிறது. எதனால் என்பது தான் கதை. பிளாஷ்பாக். சத்திய மூர்த்தி (மேஜர்) விஜயாவின் (சாரதா) அப்பா.  சத்தியத்தையும்,  தர்மத்தையும் கடைபிடிப்பவர்.பாபு (முத்துராமன்), விஜயா, வத்சலா ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். பாபுவுக்கும்,
விஜயாவுக்குமிடையில் அன்பு மலர்கிறது. (அல்லது எல்லோரும் அப்படி நினைக்கிறார்கள்) சத்திய மூர்த்தி இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்த பேஷண்ட்.  நீதி தன் பக்கமிருப்பதால் கோர்ட்டில் தன் வீட்டை பாலசுந்தரத்திடமிருந்து (ராகவன்) மீட்பதற்கு கேஸ் நடத்தினார்.  வக்கீல் சம்பந்தம் (பாலையா) தன் கட்சிக்காரர் சத்தியமூர்த்திக்கு நியாயமான முறையில் வழக்காடாததால் கேஸ் தோற்றுவிடுகிறது.  வீடு போய்விடுகிறது. சத்தியமூர்த்தியும், விஜயாவும் தெருவுக்கு வந்து விடுகிறார்கள். எவ்வளவோ முயன்றும் ஒன்றும் பண்ணமுடியாத நிலைமையில் மூன்றாவது முறை அட்டாக் வந்து விஜயாவை தனியாக ராமுவிடம்( ஏவிஎம் ராஜன்) விட்டு விட்டு போய்விடுகிறார். பாபு கைவிட்டு விட ராமு கைகொடுக்கிறார்.

வறுமையில் வாடுகிறார்கள். ராமுவும் தொழிற்சங்க ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு முதலாளி ராகவனிடம் மோதி உயிரையும், குடும்பத்தையும் தனியாக விட்டு விடுகிறார்.  சோகம் கூரையை பிய்க்கிறது.  அதற்க்கு பிறகாவது கடவுள் கூரை பிய்ந்த அந்த் ஓட்டை வழியாக சந்தோஷத்தை பொழிகிறாரா? பொதுவாக விஜய் படங்களாக இருந்தால் ஃபார்முலா படி இந்த இடத்தில் ஒரு பாட்டு ஆரம்பித்து அது முடிவதற்குள் விஜய் கோடீஸ்வர விஜயாகி, சுபம என்று நம்மை சந்தோஷமாக் வீட்டுக்கு அனுப்பி வைப்பர்கள். ஆனால் இது விஜய் படமில்லை. (விஜயா படம்) பிய்ந்த கூரை வழியாக விஜயாவுக்கு மேலும் மேலும் சோக மழையை அனுப்பி வைத்து தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிறார் கடவுள். என்னவோ விஜயாவை ஒழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டது போல் விடமாட்டேன் என்று அடம்பிடித்து ஒரு வழியாக குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்து, அதிலும் திருப்ப்தி அடையாமல் விஜயாவை கொலைகாரியாக்கிவிட்டு ஒரு வழியாக திருப்தி அடைகிறார். சுபத்திற்கு பதில் விதி ஸ்டைலாக வீரப்பா சிரிப்பு சிரிக்கிறது. அப்பப்பா! சாரதாவை எத்தனை பேர்தான் கைவிடுகிறார்கள், கடவுளையும் சேர்த்து!

சாரதா (சில சமயங்களில் சிவாஜி போல் உணர்ச்சி வசப்பட்டாலும்) பரவாயில்லை. மிகையோ என்று சந்தேகப்படும் அளவிற்கு நடிக்கிறாரே தவிர, மிகை என்று உறுதியாக கூற முடியாத நடிப்பு. காஞ்சனாவிற்கு ரோல் இன்னும் கொடுத்திருக்கலாம். பாலையாவுடன் மோதும் காட்சிகள் பலம். வசனங்களை இன்னும் ஆழத்திற்கு சென்று மேலும் பலப்படுத்தியிருக்கலாம்.நியாய அநியாய தர்கத்திற்கு அருமையான வாய்ப்பு. நழுவவிட்டு விட்டது போலிருக்கிறது. சாரதவின் காரக்டர் மூலம் கதை இவ்வளவு சீரியஸாக ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, அவரது ஏமாற்றத்திற்கு ஒருவகையில் காரணமான முத்துராமன் சர்வ காஷுவலாக அந்த ஆங்கிலோ இந்திய கல்லூரி மாணவியைப் பார்த்து “ஹாய்” என்று சொல்லி பின்னால் போவது காரக்டரை வலுப்படுத்துகிறது, தெளிவு படுத்துகிறது.சிலர், தங்களால் பிற சிலரின் வாழ்க்கையே அழிந்து போகியிருக்கிறது என்ற எண்ணமோ குற்ற உணர்ச்சியோ எதுவும்  தெரியாமல் பவணி வருவார்கள் என்ற உலக யதார்தத்தை வெளிப்படுத்தும் பாபுவின் காரக்டரில் வழக்கம் போல் முத்துராமன் வெளுத்து வாங்குகிறார்.ஏமாற்றம் அளித்த காரக்டர் மேஜர் சுந்தர்ராஜன். எவ்வளவோ திறமை அவரிடமிருந்தும் இருந்தும், நன்றாக உபயோக படுத்திக்கொள்ளாமல் வேஸ்ட் பண்ணிவிட்டார்களே!

”சிரிப்போ இல்லை நடிப்போ” – பாடல் பரவாயில்லை – ”சங்கம் வளர்த்த தமிழ்” – தமிழின் பெருமையை பாடுகிறது. ”காற்றினிலே, பெரும் காற்றினிலே” ஜேசுதாஸின் குரலில் சோகத்தை புழிகிறது. ”பூஞ்சிட்டு கன்னத்தில்” பாட்டு இனிமை.

முடிவு இன்றைக்கும் விவாதத்திற்கு உரியதே. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஆர்வி, சாரதா நல்ல கருத்துக்கள் வைத்திருப்பார்கள்.

10க்கு 6.5

பணமா பாசமா – ஆர்வியின் விமர்சனம்


அறுபதுகளில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ஒரு நட்சத்திர இயக்குனர். சாரதா, கற்பகம், கை கொடுத்த தெய்வம் மாதிரி பல படங்கள். ஸ்ரீதர், பீம்சிங், ஏ.பி. நாகராஜன், இளம் கே. பாலசந்தர் எல்லாரும் ஓரளவு middle-of-the-road படம் எடுத்தார்கள். கே.எஸ்.ஜி செண்டிமெண்ட் படங்கள் எடுத்தார். Subtlety எல்லாம் எதிர்பார்க்க முடியாது. படம் பொதுவாக வசனங்கள் மூலம்தான் நகரும். ஆனால் பாத்திரங்கள் ஓரளவு நம்பகத் தன்மை உடையவையாக இருக்கும். அப்படி நம்பகத் தன்மை இல்லாவிட்டாலும் சுவாரசியமாகவாவது இருக்கும். கற்பகத்தில் அபூர்வமான மாமனார்-மருமகன் உறவு உண்டு; அதே நேரத்தில் சாவித்திரி, கே.ஆர். விஜயா, முத்துராமன், எம்.ஆர். ராதா எல்லாருக்கும் ஸ்டீரியோடைப் ரோல். சாரதாவில் அந்த காலத்துக்கு அதிர்ச்சியான கதை. கை கொடுத்த தெய்வத்தில் எங்கேயும் இல்லாத உலக மகா பேக்கு சாவித்திரி (அந்த ரோலில் அவர் புகுந்து விளையாடினார் என்பது வேறு விஷயம்). சின்னஞ்சிறு உலகத்தில் முற்பாதியில் பொய்யே சொல்லாத ஜெமினி, பிற்பாதியில் பொய் மட்டுமே சொல்வார். முற்பாதியில் சிரிக்கத் தெரியாத நாகேஷ் பிற்பாதியில் சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக் கொண்டிருப்பேன் என்று பாட்டு பாடுவார். இந்த மாதிரி ஆட்களையும் மாற்றங்களையும் சினிமாவில்தான் பார்க்க முடியும். ஆனால் நம்பகத் தன்மை எப்படியோ, சுவாரசியமான பாத்திரங்கள். ஷெர்லாக் ஹோம்ஸின் நம்பகத் தன்மை குறைவுதான், ஆனால் என்ன?

பணமா பாசமாவில் எஸ். வரலக்ஷ்மியும் டி.கே. பகவதியும் கே.எஸ்.ஜியின் பலம் பலவீனம் இரண்டும் தெரிகிறது. பகவதி underplay செய்கிறார். அலட்டிக் கொள்ளவில்லை. அவர் பாத்திரம் வரலக்ஷ்மியின் பாத்திரத்துக்கு counterpoint – அதனால் முழு நம்பகத் தன்மை இல்லை. ஆனால் நல்ல படைப்பு. வரலக்ஷ்மி மறு துருவம். ஸ்டீரியோடைப் ரோல், cliche – மிகை நடிப்பில் அவர் எங்கியோ போயிட்டார். ஸ்டேடஸ் பார்க்கும் அம்மா ரோல் (இதே மாதிரி பூவா தலையா படத்திலும்) ஆனால் சுவாரசியமான பாத்திரப் படைப்பு.

தெரிந்த கதைதான் – பணக்கார வரலக்ஷ்மி, அவர் சொன்னதுதான் வீட்டில் சட்டம். அப்பா பகவதியின் வார்த்தை எடுபடாது. மகன் நாகேஷ் சினிமா விதிப்படி ஏழைப் பெண், எத்தனையோ பாத்தியே இம்மாம் பெரிசு பாத்தியா என்று பாட்டு பாடி எலந்தப்பயம் விற்கும் விஜயநிர்மலாவை லவ்வுகிறார். மகள் சரோஜா தேவி ஏழை ஓவியர் ஜெமினியை லவ்வுகிறார். வித விதமாய் சூடிதார் போட்டு வந்து அவர் முனனால் நிற்கிறார். ஜெமினி அவரை திரும்பிப் பார்ப்பதில்லை. ஒரு நாள் ஜெமினி புடவை, பூ, புஸ்பம் என்று வசனம் பேசுவதை கேட்டுவிட்டு புடவையோடு வந்து ஜெமினிக்கு நூல் விடுகிறார். காதல் மன்னனோடு கல்யாணம், அம்மா வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். நாகேஷ் இதுதான் சாக்கு என்று விஜயநிர்மலாவை மணந்து வீட்டுக்கு கொண்டு வருகிறார். வரலக்ஷ்மியின் பாச்சா வி. நிர்மலாவிடம் பலிக்கவில்லை. நாகேஷும் வி. நிர்மலாவும் வாழைத்தண்டு போல உடம்பு அலேக் அலேக் என்று இன்னொரு டூயட் பாடுகிறார்கள். தீபாவளி வருகிறது. அம்மா ஏழை மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் காஸ்ட்லி புடவை அனுப்புகிறார். மகளோ நூல் புடவை திருப்பி அனுப்புகிறார். அம்மா முழ நீளம் வசனம் பேசிவிட்டு சரி வந்த புடவையை எதற்கு விடவேண்டும் என்று அதையும் கட்டிக் கொண்டு மகளை பார்க்க போக, எல்லாரும் ஒன்று சேர்ந்து, சுபம்!

கதை ஒன்றும் பிரமாதம் இல்லை. ஆனால் க்ளைமாக்ஸ் நன்றாக அமைந்திருந்தது. அப்பா அம்மா அனுப்பிய புடவையுடன் ஏழை மகளை பார்க்கப் போவது, மகள் நூல் புடவை அனுப்புவது, அம்மா அந்த புடவையைக் கட்டிக் கொண்டு மகளை பார்க்கப் போவது எல்லாம் நல்ல சீன்கள்.

பகவதி நன்றாக நடித்திருப்பார். எஸ். வரலட்சுமிக்கு இந்த மாதிரி ரோல் எல்லாம் ரொம்ப சுலபம். ஊதி தள்ளிவிடுகிறார். இயக்குனரின் திறமை கடைசி சீன்களில் வெளிப்படுகிறது. ஜெமினி வந்து போகிறார். சரோஜா தேவி வழக்கம் போல கொஞ்சல்ஸ். கடைசி சீன்களில் மட்டும்தான் அவருக்கு வேலை. நாகேஷுக்கும், வி. நிர்மலாவுக்கும் பெரிய வேலை இல்லை.

கண்ணதாசன் பல முறை எலந்தப்பயம் பாட்டு எழுதியதற்காக தன்னைத் தானே நொந்து கொண்டிருக்கிறார். தமிழ் மக்களின் ரசனை எவ்வளவு மட்டம் என்று எழுதி இருக்கிறார். வரிகள் எப்படியோ, பாட்டுக்கு நல்ல பீட்! ஜவஹர் சொல்வது போல எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் இந்த பாட்டுக்கு மிக அற்புதமாக பொருந்துகிறது, படம் வெற்றி பெற இந்த பாட்டும் ஒரு முக்கிய காரணம். யூட்யூப் லிங்க் கீழே.

நினைவிருக்கும் இன்னொரு பாட்டு வாழைத்தண்டு போல உடம்பு அலேக்! நாகேஷைப் பார்த்து கொத்தவரங்கா போல உடம்பு அலேக் என்று பாடுவது வெகு பொருத்தம்! ஏ.எல். ராகவனின் குரல் நாகேஷுக்கு பொருந்தும். யூட்யூப் லிங்க் கீழே.

மாறியது நெஞ்சம் என்ற நல்ல மெலடி பாட்டும் உண்டு. யூட்யூப் லிங்க் கீழே.

மெல்ல மெல்ல மெல்ல என் மேனி நடுங்குது மெல்ல பாட்டும் இந்த படத்தில்தான் போலிருக்கிறது. அதுவும் நல்ல பாட்டுதான்.

1968 இல் வந்த படம். ஜெமினி கணேசன், சரோஜா தேவி, நாகேஷ், விஜயநிர்மலா, பகவதி நடித்திருக்கிறார்கள். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கம். இசை யார்? எம்.எஸ்.வி.யா, மாமா கே.வி. மகாதேவனா? மாமாதான்.

பார்க்கலாம். கடைசி சீன்களுக்காக, பாட்டுகளுக்காக, ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி என்பதற்காக. பத்துக்கு ஆறு மார்க். C+ grade.

தொடர்புடைய பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்: பணமா பாசமா விகடன் விமர்சனம்

மகேஷ், சரண்யா, மற்றும் பலர்


உங்களுக்கு ஓ. ஹென்றியின் கதைகள் பிடிக்குமா? கடைசியில் ஒரு ட்விஸ்ட் இருக்கும். இந்த படம் பார்க்கும் போது எனக்கு ஓ. ஹென்றி ஞாபகம் வந்தது. இந்த ஸ்டைலில் படங்கள் வருவது மிக அபூர்வம். அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் இந்த படத்தை சிபாரிசு செய்கிறேன்.

எனக்கு ஓ. ஹென்றி ஸ்டைலில் கதை உள்ள படமாக இப்போது ஞாபகம் வருவது சோ திரைக்கதை எழுதி, சிவாஜி, வாணிஸ்ரீ, முத்துராமன் நடித்து முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கிய நிறைகுடம் என்ற ஒரே படம்தான். (விளக்கே நீ தந்த ஒளி நானே என்ற நல்ல பாட்டு உண்டு)

இயக்குனர் பி. வாசுவின் மகனான ஷக்தி, சந்தியா, சரண்யா மோகன், சந்தானம், ஸ்ரீநாத், கல்யாண மாலை மோகன், கீர்த்தி சாவ்லா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இசை வித்யாசாகர். இயக்கம் பி.வி. ரவி.

மூன்று பாட்டுகள் எனக்கு பிடித்திருந்தன. தஜம் தஜ்ஜம் இனிமையான பாட்டு. விழியில் விழியில் ஒரு நேர்காணல் சண் டிவியில் சில முறை பார்த்திருக்கிறேன். வரிகளின் இடையில் வரும் இசை அருமையாக இருந்தது. காட்சியும் நன்றாக இருக்கும். என்ன, தமிழ் சினிமா இலக்கணப்படி பனி இருந்தாலும் ஹீரோயினுக்கு ஸ்லீவ்லெஸ் டிரஸ்தான். என் பாடல் காலம் உள்ள காலம் வரை என்ற பாட்டு ஒரு peppy song.

கதைதான் படத்தின் ப்ளஸ் பாயின்ட். சென்னையிலிருந்து திரும்பும் ஷக்தியின் காதல் கதையை கூட்டுக் குடும்பத்தில் உள்ள எல்லாரும் ஒவ்வொருவராக வந்து கேட்டுக் கொள்கிறார்கள். தங்கை சரண்யாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையின் குடும்பமும் அன்பாக இருக்கிறார்கள். ஆனால் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. கடைசியில் ஷக்தி மாப்பிள்ளையின் தங்கைக்கு தாலி கட்டினால்தான் சரண்யாவுக்கு கல்யாணம் ஆகும் நிலைமை. குடும்பத்தில் எல்லாரும் எடுத்து சொல்லியும் ஷக்தி மறுக்கிறார். கல்யாணம் நின்று விடுகிறது. ஏன் என்பதுதான் ட்விஸ்ட்.

பாசமான, வசதியான குடும்பங்கள். ஒவ்வொருவராக வந்து எனக்கு மட்டும் ஏன் உன் காதல் கதையை சொல்லவில்லை என்று கேட்பது நன்றாக இருந்தது. காமெடி என்று பெரிதாக இல்லை. இந்த மாதிரி படத்துக்கு காமெடி மிக அவசியம். குடும்பத்தோடு தைரியமாக பார்க்கலாம். ஆபாசம், அரிவாள் எதுவும் இல்லை. என்ன ட்விஸ்ட் வரும் வரை பெரிய சுவாரசியமும் இல்லை. ட்விஸ்டுக்கு பிறக்கும் கதையை யானை பொம்மை வரை இழுத்ததும், போலிசை இவ்வளவு கேனையனாக காண்பித்ததும் திரைக்கதையில் ஓட்டைதான்.

சரண்யா பார்க்க அழகாக இருக்கிறார். சந்தியா ஓவர் கொஞ்சல். இந்த படத்துக்கு ஒரு பெரிய ஹீரோ இருந்தால் படம் இன்னும் நன்றாக ஓடி இருக்கலாம்.

10க்கு 6.5 மார்க். C+ grade. டைம் பாஸ், பார்க்கலாம்.