மனோகரா
மார்ச் 30, 2009 17 பின்னூட்டங்கள்
மனோகராதான் வசனங்களின் உச்சக் கட்டம் என்று நினைக்கிறேன். தீ பறக்கும் வசனங்கள், அதை உணர்ச்சி பொங்க பேசும் சிவாஜி இது இரண்டே போதும். ஆனால் அதற்கும் மேலாக சிவாஜிக்கே சவால் விட்ட கண்ணாம்பா, பிய்த்து உதறிய டி.ஆர். ராஜகுமாரி, மெலோட்ராமாவை அருமையாக வெளிப்படுத்தும் காட்சிகள் – பொறுத்தது போதும், பொங்கி எழு என்ற கண்ணாம்பாவின் கட்டளை ஒன்றே போதும் – , அருமையாக நடித்த சதாசிவ ராவ் (மன்னர்), பழி வாங்கும் முஸ்தஃபா (வசந்த சேனையின் முதல் கணவன்), ஓவர் த டாப் வில்லன் எஸ்.ஏ. நடராஜன் என்று நல்ல பாத்திரங்கள், அருவம் கிருவம் என்று தந்திரக் காட்சிகள் என்று பல அருமையான விஷயங்களை கலந்து ஒரு சூப்பர் டூப்பர் படத்தை உருவாக்கிவிட்டார்கள்.
மனோகராவை நான் முதலில் பார்த்தது டெண்டு கொட்டாயில்தான். பத்து வயதிருக்கலாம். அது வரை நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகன். எம்ஜிஆர் சண்டை போடுவார், சிவாஜி அழுவார் என்ற ஒரு சிம்பிள் பிம்பம் இருந்த காலம் அது. முதல் காட்சியில் அருவம் என்ற போதே ஆ என்று பார்க்க ஆரம்பித்தேன். அதற்கு பிறகு வசந்த சேனையின் முதல் கணவன் போடும் நாடகம், வ. சேனை கண்ணாம்பாவுக்கு பழி ஏற்படுத்த செய்யும் சதி எல்லாமே த்ரில்லிங் ஆக இருந்தது. ஆனால் மனோகரன் அரச சபைக்கு வரும் காட்சிதான் என்னை சிவாஜி ரசிகனாக மாற்றியது. அடுத்த நாலைந்து வருஷம் சிவாஜி தும்மினாலும் என்ன நடிப்பு என்று சொல்லிக் கொண்டிருந்தேன். உண்மையில் ஓரிரு நிமிஷங்களுக்கு அப்புறம் சிவாஜி என்ன சொல்கிறார் என்று கூட தெரியவில்லை. அந்த காட்சியில் அவர் பேசும் வசனங்கள் கலைஞரின் மாஸ்டர்பீஸ், சிவாஜி என்ன அற்புதமாக வசனம் பேசுகிறார் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அவர் ஒன்றுமே பேசி இருக்காவிட்டாலும் அவரது வேகம், உணர்ச்சிகளை காட்டும் விதம் இவை மட்டுமே போதும் அந்த காட்சிக்கு. வசனங்கள் சூப்பர்தான், ஆனால் சிவாஜியின் பெருமை அவர் நடிப்பினால்தான், அந்த வசனங்களால் அல்ல.
பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகம். ஹாம்லெட் நாடகத்திலிருந்து நாடகத்துக்குள் நாடகம் என்ற ஒரு ஐடியாவை எடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. மிச்சம் எல்லாம் அவரது சுய கற்பனையாகத்தான் இருந்திருக்க வேண்டும். இது ஏன் நல்ல நாடகம் என்று குறிப்பிட்டு பேசப்படவில்லை என்று தெரியவில்லை. சாரங்கதாரா, பாணபுரத்து வீரன், ஜெனோவா, ஞான சவுந்தரி, தூக்குத் தூக்கி போன்ற நாடகங்களை விட நல்ல கதை இருக்கிறது. ஒரு வேளை முதலியார் எழுதிய நாடகம் கொஞ்சம் போர், அதனால் அப்படியே திரைப்படம் ஆக்கப்படவில்லையோ என்னவோ? முதல் கணவன் ஆவியாக சித்தரிக்கப்பட்டதாகவும், பகுத்தறிவு தாக்கத்தால் கலைஞர் அதை அருவம் ஆக ஆகியதாகவும் எங்கோ படித்த ஞாபகம் இருக்கிறது.
முதலியார் இந்த நாடகத்தை 1936-இல் படமாக இயக்கி இருக்கிறாராம். அது படு தோல்வியாம்.
கலைஞரின் மாஸ்டர்பீஸ் இதுதான். இதை விட சிறப்பான வசனங்களை அவர் எழுதியதில்லை, இனி மேல் யாரும் எழுதப் போவதுமில்லை. மொழியை ஒரு bludgeon ஆக பயன்படுத்தி இருக்கிறார்.
1954-இல் வந்த படம். ஜூபிடர் தயாரிப்பு என்று நினைக்கிறேன். எல்.வி. பிரசாத் இயக்கம். சிவாஜியை தவிர, கண்ணாம்பா, டி.ஆர். ராஜகுமாரி, எஸ்எஸ்ஆர் (மனோகரனின் நண்பன் ராஜப்ரியன்), சதாசிவ ராவ்(மனோகரனின் அப்பா), முஸ்தஃபா (வசந்த சேனையின் முதல் கணவன்), காகா ராதாகிருஷ்ணன் (வசந்த சேனையின் மகன்), கிரிஜா (மனோகரனின் மனைவி), ஜாவர் சீதாராமன் (அமைச்சர்), எஸ்.ஏ. நடராஜன் (சேர மன்னன்) ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இசை எஸ்.வி. வெங்கட்ராமன். ஜி. ராமநாதன் என்று நினைவு.
வசந்த சேனை தன் கணவனுக்கு விஷம் வைத்துவிட்டு மன்னரை மயக்கி தன் பிடிக்குள் வைத்திருக்கிறாள். இதனால் மனம் நொந்த மனோகரனும் அவர் அம்மாவும் விலகி வாழ்கிறார்கள். முதல் கணவன் இறக்கவில்லை, ஏதோ ஆராய்ச்சி செய்து தான் யார் கண்ணிலும் தெரியாமல் இருக்க ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறான். மனோகரன் நடுவில் பாண்டிய நாட்டை வென்று, பாண்டிய இளவரசியை மணக்கிறார். அவர் ஒரு கட்டத்தில் வ. சேனையை அவமதிக்க, வ. சேனை மன்னரை மனோகரனின் தாய் தவறான உறவு வைத்திருப்பதாக நம்ப வைக்கிறாள். அப்போதுதான் அந்த ராஜ சபை சீன். மனோகரனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மனோகரனின் தாயும் மனைவியும் சிறையில். ஆனாலும் வ. சேனையின் மகனான வசந்தனுக்கு இளவரசு பட்டம் கட்ட மன்னர் மறுக்கிறார். சேர மன்னனுடன் வ. சேனை சதி செய்து மன்னரை சிறையில் அடைக்கிறாள். மனோகரன் தப்பி மாறு வேஷத்தில் அரண்மனைக்கு வருகிறான், மாட்டிக் கொள்கிறான். அவனை கட்டிப் போட்டுவிட்டு, அவன் சின்னக் குழந்தையை கொலை செய்வதற்கு முன் வழக்கம் போல கெக்கே பிக்கே என்று வில்லன் எஸ்.ஏ. நடராஜன் சிரிக்க, கண்ணாம்பா பொறுத்தது போதும் பொங்கி எழு என்று ஆணை இடுகிறாள். மனோகரன் கட்டி இருக்கும் சங்கிலிகளை உடைத்து விட்டு சண்டை போடுகிறார். அவருக்கு அருவமான முதல் கணவனும் உதவுகிறான். வெற்றி! பிறகு அருவமான கணவன் வ. சேனையை தன் குகைக்கு அழைத்துப் போய் துடிக்க துடிக்க கொல்கிறான். பிறகு எல்லாரும் ஒன்று சேர்ந்து, சுபம்!
ஒரு சாகசக் கதை என்ற அளவில் இந்த கதை வெற்றி. இதில் எவ்வளவு தூரம் முதலியாரின் ஒரிஜினல் கற்பனை, எவ்வளவு தூரம் கலைஞர் சேர்த்த மசாலா என்று தெரியவில்லை.
வசனங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். வீடியோ கிடைத்தால் நன்றாக இருக்கும், தேடிப் பார்த்தேன், தென்படவில்லை. கிடைத்த ஒரு excerpt இங்கே.
புருஷோத்தமரே! புரட்டுக்காரியின் உருட்டு விழியில் உலகத்தைக் காண்பவரே! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம்பரையில் மாசாக வந்தவரே! மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே! குளிர் நிலவைக் கொள்ளிக்கட்டையெனக் கூறிய குருடரே! என் தாய் அன்பின் பிறப்பிடம், அற நெறியின் இருப்பிடம், கருணை வடிவம், கற்பின் திருவுருவம், மாசற்ற மாணிக்கம், மாற்றுக் குறையாத தங்கம். அவர்களை அவதூறு கூறிய அங்கங்களை பிளந்தெறிவேன். இந்த துரோகப் பேச்சுக்கும் உம்மைத் தூண்டிவிட்ட துரோகியின் உடலை துண்டாடுவேன். துணிவிருந்தால், தோளில் வலுவிருந்தால், எடுத்துக் கொள்ளும் உமது வாளை. தடுத்துக் கொள்ளும் உமது சாவை. தைரியமில்லாவிட்டால், தளுக்குக்காரியின் குலுக்குச் சிரிப்பிலே நீர் கோழையாகிவிட்டிருந்தால், ஓடி விடும். புறநானூற்றின் பெருமையை மூட வந்த புழுதிக் காற்றே! புறமுதுகு காட்டி ஓடும்! கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே! கால் பிடரியில் இடிபட ஓடும்! ஓடும்! ஓலமிட்டு ஓடும்! ஓலமிட்டு ஓடும்! ஓங்காரக் கூச்சலிட்டு ஓடும்! ஏன், அவமானமாக இருக்கிறதா? என் அன்னையை தூஷித்த சின்னஞ்சிறு புழுவே, ஏன் சிலையாக மாறிவிட்டீர்? ஏ ராஜ விக்ரகமே! பழி வாங்கும் பக்தன் பூஜை செய்ய வந்திருக்கிறான். அப்படியே நில்லும்! அசையாமல் நில்லும்! இந்த சித்து வேலைக்காரியின் ரத்தத்தைக் கொண்டு உமக்கு அபிஷேகம் செய்கிறேன். இந்த நாசக்காரியின் நரம்புகளால் உமக்கு மாலை சூட்டுகிறேன். முல்லைச் சிரிப்பென புகழ்வீரே, மோக போதையில்! அந்தப் பல்லை எடுத்து உமக்கு அர்ச்சனை செய்கிறேன்.
கலைஞரின் வசனங்களை பலர் திறமையாக பேசக் கூடியவர்கள்தான். எஸ்.எஸ்.ஆர், கே.ஆர். ராமசாமி, ஏன் எம்ஜிஆர் கூட அப்போது பேசி இருக்கலாம். ஆனால் சிவாஜி மாதிரி யாரும் பேசி இருக்க முடியாது.
சிவாஜிக்கே சவால் விட்ட நடிகை கண்ணாம்பா. சிவாஜியே கண்ணாம்பா என்னை பொறுத்தது போதும் என்ற ஒரே வசனத்தை வைத்துக் கொண்டு என்னை தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்று சொல்வாராம். மனோகரா நாடகத்தில் சிவாஜி கண்ணாம்பா ரோலில் நடித்திருக்கிறாராம்.
கண்ணாம்பா இதற்கு பிறகு typecast ஆனது ஒரு துரதிருஷ்டம். மக்களை பெற்ற மகராசி, உத்தம புத்திரன் ஆகிய படங்களில் இதே ஸ்டைலில் நடிப்பார். கண்ணாம்பாவுக்கே இந்த நிலை என்றால் சிவாஜியை பற்றி சொல்லவே வேண்டாம். ஐம்பதுகளின் பிற்பாதியில் அவர் பல படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசி நடித்தால் போதும், அங்கங்கே பொங்கி எழுந்தால் போதும் என்று ஒரு தவறான கணக்கு போட ஆரம்பித்தார். படங்கள் அந்த பொங்கி எழும் சீன்களை சுற்றி அமைக்கப் பட்டன. (குறவஞ்சி, வணங்காமுடி ஆகியவை நினைவுக்கு வருகின்றன)
டி.ஆர். ராஜகுமாரி கலக்கி விட்டார். அலட்டிக் கொள்ளாமல் அற்புதமாக நடித்திருப்பார். அவர் இன்னும் நிறைய நடித்திருக்கலாம்.
எஸ்.எஸ்.ஆரின் நடிப்பு பலரால் சிலாகிக்கப்பட்டது. நன்றாக நடித்திருந்தார், ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றும் இல்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. மன்னராக நடித்த சதாசிவ ராவ், வ. சேனையின் கணவனாக வந்த முஸ்தஃபா, ஆகியோரின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது.
இசை ஒன்றும் சுகம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வசந்த விழா, வசந்த திருவிழா என்ற ஒரே பாட்டுதான் கொஞ்சம் மங்கலாக ஞாபகம் இருக்கிறது. வடிவேல் முருகன் “சிங்காரப் பைங்கிளியே பேசு” என்ற பாட்டையும், “சந்தேகம் இல்லே” என்ற பாட்டையும் நினைவூட்டுகிறார்.
கட்டாயம் பாருங்கள். பத்துக்கு எட்டு மார்க். A- grade.
அண்மைய பின்னூட்டங்கள்