சக்கரம்: பழைய திரைப்படம்


இந்தத் தளத்தில் பழைய திரைப்படங்களைப் பற்றித்தான் எழுதுவேன். வாரம் ஒரு பதிவாவது எழுத வேண்டும் என்று எண்ணம். ஆனால் பழைய படம் ஒன்றைப் பார்த்து கொஞ்ச நாளாகிவிட்டதால் தாமதமாக பதிவு வருகிறது.

சக்கரம் படத்தைப் பற்றிய எனது ஒரே நினைவு – அதில் “காசேதான் கடவுளப்பா” என்ற பிரபலமான பாடல் உண்டு.

நான் ஏ.வி.எம். ராஜன் நடித்த படங்களை பொதுவாக ரசிப்பதில்லை. அவர் சிவாஜியின் சுமாரான நகல் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. (இத்தனைக்கும் “என்னதான் முடிவு” எனக்குப் பிடித்த திரைப்படங்களில் ஒன்று.) அதனால் பழைய திரைப்படங்களை விரும்பிப் பார்த்தாலும் இதைத் தவிர்த்தே வந்திருக்கிறேன்.

கடைசியாக ஒரு வழியாகப் பார்த்தேன். வழக்கமான காட்சிகள் உண்டுதான் என்றாலும் தமிழுக்கு வித்தியாசமான படம்தான். வழக்கமான காதல், குடும்பம், பாசம் என்று இல்லாமல் இருப்பதே கொஞ்சம் refreshing ஆக இருக்கிறது. ராஜனின் பாத்திரமும் நடிப்பும் நன்றாகவே வந்திருக்கின்றன. அவருக்கு “வில்லன்” பாத்திரம்தான் என்றாலும் அவர்தான் நாயகன், ஜெமினி கணேசன் சும்மா ஒப்புக்கு சப்பாணிதான்.

1968-இல் வந்த திரைப்படம். ஜெமினி, ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா, சௌகார் ஜானகி, நாகேஷ், மனோரமா, மேஜர் சுந்தரராஜன், எம்.ஆர்.ஆர். வாசு, ஓ.ஏ.கே. தேவர், வி.எஸ். ராகவன் என்று பலரும் நடித்திருக்கிறார்கள். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை. திரைக்கதை, இயக்கம் ஏ. காசிலிங்கம்.

எளிய கதைதான். ஜம்பு (ராஜன்) மைசூர் காடுகளில் வாழும் நல்ல மனம் படைத்த கொள்ளைக்காரன். திருடும் பணத்தை ஏழைகளுக்கு கொடுத்துவிடுகிறான். பண்ணையார் (வி.எஸ். ராகவன்) வீட்டில் திருடப் போகும்போது அங்கு பிரசவ வலியால் துடிக்கும் பண்ணையார் பெண்ணைக் காப்பாற்றி அவளை தங்கையாக ஏற்றுக் கொள்கிறான். பணக்காரப் பையனோடு காதல் தோற்றுவிடும் என்பதால் தற்கொலை செய்து கொள்ளப் போகும் பாபுவின் (ஜெமினி) தங்கையைக் காப்பாற்றுகிறான். ஜம்புவை பிடித்துக் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று அரசு அறிவித்திருக்கிறது.

பாபுவின் தங்கை காதலிப்பது அவனது எஜமானி அம்மாளின் (சௌகார்) பையனை. சௌகார் வசதி படைத்த குடும்பத்தவர்தான், ஆனால் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறார். 50000 ரூபாய் கொடுத்தால் உன் தங்கையை மருமகளாக ஏற்கிறேன் என்கிறார்.

பாபு ஜம்புவைப் பிடித்துக் கொடுத்து லட்ச ரூபாய் பரிசை வெல்லலாம் என்று கிளம்புகிறான். அவனுக்கு துணையாக அவன் காதலி (நிர்மலா); மற்றும் காடுகளைப் பற்றி நன்கு அறிந்த வழிகாட்டி (நாகேஷ்), கத்தி வீசும் நிபுணன் (ஓ.ஏ.கே. தேவர்), வர்மக்கலை நிபுணன் (வாசு), கயிறு வீசும் நிபுணன் ஒருவன் சம்பளம் பேசி சேர்ந்து கொள்கிறார்கள். ஜம்புவின் தோழர்களை இந்த நிபுணர்கள் கொன்றுவிட, பாபு ஜம்புவை சண்டை போட்டு தோற்கடிக்கிறான். ஜம்பு பாபுவிடம் சரண், தப்பி ஓடமாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறான்.

லட்ச ரூபாய் பரிசு, தங்களுக்கு நூறுகளில்தான் சம்பளம் என்று உணரும் தோழர்கள் பணத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள். ஜம்புவின் தங்கைதான் நாகேஷின் மனைவி (மனோரமா). அண்ணனைப் பிடித்துக் கொடுத்தால் லட்ச ரூபாய் பரிசு என்றதும் பிடித்துக் கொடுக்க அவளும் தயாராக இருக்கிறாள். ராஜன் பணத்துக்கு முன் நட்பும் உறவும் ஒரு பொருட்டில்லை என்று காசேதான் கடவுளப்பா என்று பாட்டு பாடுகிறார். கடைசியில் சௌகார்தான் ராஜனின் மனைவி வேறு. சௌகார் தற்கொலை செய்து கொள்ள, பத்தினிக்கு பணம் தூசு என்று வசனம் பேசிவிட்டு ராஜனும் தற்கொலை. பணம் தேவையில்லை என்று எல்லாரும் மறுக்கிறார்கள்.

தமிழ் திரைப்படங்களில் எதிர்பார்க்கக் கூடிய திருப்பங்கள், twists எல்லாம் உண்டுதான். ஆனால் கதைக்களம் வித்தியாசமாக இருப்பதால் திரைப்படம் பிழைக்கிறது. ராஜன் நன்றாகவே நடித்திருக்கிறார். ஜெமினியும் நாகேஷும் தண்டத்துக்கு வந்து போகிறார்கள். நாகேஷுக்காக படம் கொஞ்சம் ஓடலாம் என்ற காலம். நிர்மலா அதை விட தண்டம்.

பழைய படம் விரும்பிகள் பார்க்கலாம். பத்துக்கு 6.5 மதிப்பெண். C+ grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: யூட்யூபில் திரைப்படம்

 

பாபு – விகடன் விமர்சனம்


நன்றி, விகடன்!

‘நடிப்பினால் ஒரு காவியமே படைத்திருக்கிறார்’ என்று சொல்வது கூட சிவாஜியின் அற்புதமான நடிப்புக்குப் போதுமான பாராட்டாக இருக்க முடியாது. அப்படி ஓர் அருமையான நடிப்பு!

ரிக்ஷாவின் கைப்பிடியைக் காலால் உதைத்து, லாகவமாகக் கையில் பிடித்துக்கொண்டு, துள்ளி ஓடும் இளமைத் துடிப்புள்ள ரிக்ஷாக்காரனாகத் தோன்றுவது முதல், கூனிக் குறுகி முதுமையடைந்து, ரிக்ஷாவைத் தூக்க முடியாத முதுமை வரை, ஒவ்வொரு நிலையிலும் சிவாஜியின் நடிப்பில் முத்திரை பதிகிறது.

பணக்கார சமதர்மவாதியான பாலாஜியின் பரிவைப் பார்த்து விட்டு, ”நீங்க எலெக்ஷனுக்குத்தானே நிற்கப் போறீங்க?” என்று கேட்கும் அப்பாவித்தனம்; நொடித்துப் போன ஜானகி குடும்பத்துக்குக் காவல் நாயாகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் விசுவாசம் – இப்படிப் பல காட்சிகள் குறிப்பிடத் தக்கவை.

சிவாஜி-விஜயஸ்ரீயின் காதலில், கதை ஜிலுஜிலுப்பாக ஆரம்பிக்கிற ஜோர் பிரமாதமாக இருக்கிறது.

பாபுவின் லட்சியப்படி நிர்மலா, பட்டம் வாங்கியதோடு கதையை முடித்திருக்கலாம். அதற்கு மேலும் கதையை நீட்டியிருக்க வேண்டுமா?

பணக்காரத் தம்பதியாக வரும் பாலாஜி-சௌகார் ஜானகி, குழந்தை மூவரும் நெஞ்சையள்ளும் பாத்திரங்கள். பாலாஜி வெகு அநாயாசமாகவும் அழகாகவும் நடித்துப் பெயரைத் தட்டிக் கொள்கிறார். குழந்தை பிச்சையெடுத்துவிட்டு அழும்போது இளகாத நெஞ்சமும் இளகும். சோதனையால் நிலை தடுமாறி குன்றிப் போன உயர் குலப் பெண்மணி ஒருவரின் தவிப்பு, தயக்கம் அத்தனையையும் உருக்கமாகச் சித்திரித்திருக்கிறார், சௌகார் ஜானகி.

படத்துக்குக் கவர்ச்சியூட்ட வேண்டிய பொறுப்பை சிவகுமார்-நிர்மலா ஜோடியிடம் விட்டிருக்கிறார்கள். மினி டிராயரைப் போட்டுக் கொண்டும், மழையினால் உடை, உடம்பில் ஒட்ட நனைந்து கொண்டும் நிர்மலா அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முயன்றிருப்பதில் குறையில்லை. ஆனால், சிவகுமார்-நிர்மலா காதலை விட நம் மனத்தில் சுவையூட்டியது ஆரம்பத்தில் மின்னல் போல் தோன்றி மறைந்த சிவாஜி-விஜயஸ்ரீ காதல் காட்சிதான்.

கஞ்சி வரதப்பா‘ பாட்டுக்கு ஏற்ப புன்னகை சிந்த, சாப்பாட்டுக் கூடையுடன் ஒயிலாக இடையை அசைத்து, விஜயஸ்ரீ நடந்து வரும் அழகில் சிருங்காரம் சொட்டுகிறது. முயன்றால் கதாநாயகி அந்தஸ்துக்கு சிறப்பாகத் தேறிவிடக் கூடிய நளினமும் அழகும் இவரிடம் பொருந்தியிருக்கின்றன.

சிவாஜியின் நடிப்பு என்ற தங்க விளக்கு இருக்கிறது; ஆனால் கதை என்ற திரி சரியாக இல்லையே!

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்

தெலுங்கு படங்கள்


கொல்லப்புடி மாருதி ராவ் தனக்கு பிடித்த தெலுங்கு படங்களை பற்றி இங்கே சொல்கிறார். கொல்லப்புடி தெலுங்கு நடிகர், எழுத்தாளர். சாஹித்ய அகாடெமி விருது எல்லாம் வாங்கி இருக்கிறார். நம்மூர் டெல்லி கணேஷ் மாதிரி stature உள்ள தெலுங்கு நடிகர்.

அவரது லிஸ்டும் என் குறிப்புகளும்:

  • யோகி வேமனா: நான் பார்த்ததில்லை. நாகையா, எம்.வி. ராஜம்மா நடித்து, கே.வி. ரெட்டி இயக்கியது. கே.வி. ரெட்டி பெரிய இயக்குனர் – புகழ் பெற்ற மாயா பஜார், பாதாள பைரவி ஆகியவை இவர் இயக்கியவைதான். விஜயா (வாகினி) ஸ்டுடியோஸ் தயாரிப்பு. வேமனா புகழ் பெற்ற தெலுங்கு கவிஞர் – நம் அவ்வையார் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
  • லைலா மஜ்னு: – நான் பார்த்ததில்லை. நாகேஸ்வர ராவ், பானுமதி நடித்து, சி.ஆர். சுப்பராமன் இசையில், பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது.
  • சவுகாரு: நான் பார்த்ததில்லை. என்.டி. ராமராவ், ஸௌகார் ஜானகி நடித்து எல்.வி. பிரசாத் இயக்கியது. விஜயா ஸ்டுடியோஸ் தயாரிப்பு. ஸௌகார் ஜானகிக்கு உள்ள அடைமொழி இந்த படத்திலிருந்து வந்ததுதான். அவரது முதல் படம். எல்.வி. பிரசாத் முதல் தமிழ் படமான காளிதாசிலும், முதல் தெலுங்கு படமான நடித்திருக்கிறார். கமலஹாசனின் ராஜ பார்வை படத்தில் மாதவிக்கு தாத்தாவாக நடிப்பார். மனோகரா, இருவர் உள்ளம், மிஸ்ஸியம்மா ஆகிய படங்களை இயக்கியவர் இவரே.
  • தீக்ஷா – ஜி. வரலக்ஷ்மி, யாரோ ராம்கோபால் நடித்து, ஆத்ரேயா பாடல்களுடன், கே.எஸ். பிரகாஷ் ராவ் இயக்கியதாம். கேள்விப்பட்டது கூட இல்லை.
  • தேவதாஸ்: ஏ.என்.ஆர்., சாவித்ரி, சி.ஆர். சுப்பராமன் இசை, வேதாந்தம் ராகவையா இயக்கம். இதுதான் எல்லாவற்றிலும் சிறந்த தேவதாஸ் என்று கருதப்படுகிறது – குறைந்த பட்சம் தெலுங்கர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். ஓ ஓ ஓ தேவதாஸ் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
  • மல்லேஸ்வரி: பிரமாதமான படம். கிருஷ்ண தேவராயர் ஒரு இரவு பானுமதி தன காதலனிடம் தான் ராணி போல வாழ வேண்டும் என்று சொல்வதை கேட்கிறார். அவளை தனது அந்தப்புரத்துக்கு கூட்டி வருகிறார். ஏ.என்.ஆர்., என்.டி.ஆர். நடித்து, எஸ். ராஜேஸ்வர ராவ் இசையில் பி.என். ரெட்டி இயக்கியது.
  • விப்ரநாராயணா: தொண்டரடிபொடி ஆழ்வாரின் கதை. ஏ.என்.ஆர்., பானுமதி நடித்து, பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது. இசை எஸ். ராஜேஸ்வர ராவ். பார்த்ததில்லை.
  • மாயாபஜார்: அருமையான படம். சாவித்ரி, ரங்காராவ் இருவருக்காக மட்டுமே பார்க்கலாம். இசையில் கண்டசாலா, எஸ். ராஜேஸ்வர ராவ் கலக்கி இருப்பார்கள். என்.டி.ஆர்., ஏ.என்.ஆர். வேறு. என்.டி.ஆர். இந்த மாதிரி படங்களால்தான் தெலுங்கர்களின் கண்ணில் தேவுடுவாகவே மாறிவிட்டார். இயக்கம் கே.வி. ரெட்டி. தயாரிப்பு விஜயா ஸ்டுடியோஸ்.
  • மூக மனசுலு: ஏ.என்.ஆர., சாவித்ரி. பார்த்ததில்லை.
  • மனுஷுலு மாறாலி: சாரதா நடித்தது. பார்த்ததில்லை.
  • பிரதிகடனா:விஜயசாந்தி நடித்து கிருஷ்ணா இயக்கியது. பார்த்ததில்லை.
  • சங்கராபரணம்: எனக்கு கர்நாடக சங்கீதத்தை கேட்டால் ஓட வேண்டாம் என்று தைரியம் கொடுத்த படம். முதன் முதலாக ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்த படம். (க்ரோம்பேட் வெற்றி தியேட்டரில் 2.10 பைசா டிக்கெட்டை இரண்டரை ரூபாய்க்கு வாங்கினோம்) பாட்டுகள் மிக அருமையாக இருந்தன. கவர்ச்சி நடனம் இல்லாவிட்டால் படம் வேஸ்ட் என்று நினைத்த ஸ்கூல் நாட்களிலேயே இந்த படம் எங்கள் செட்டுக்கு பிடித்திருந்தது. கே.வி. மகாதேவன், எஸ்பிபி, மஞ்சு பார்கவி எல்லாரும் கலக்கிவிட்டார்கள். சோமயாஜுலு, கே. விஸ்வநாத் இருவருக்கு இதுதான் மாஸ்டர்பீஸ்.
  • சுவாதி முத்யம்:தமிழர்களுக்கு தெரிந்த படம்தான். கமல் “நடிப்பதற்காக” எடுக்கப்பட்ட படம். பார்க்கலாம், ஆனால் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ராதிகா ஹீரோயின், கே. விஸ்வநாத் இயக்கம். வடபத்ர சாயிக்கு பாட்டில் இழையோடும் சோகம் மிக நன்றாக இருக்கும். இசை யார், இளையராஜாவா?
  • ஓசே ராமுலம்மா: தாசரி நாராயண ராவ் இயக்கி நடித்தது. விஜயசாந்தியும் உண்டு. பார்த்ததில்லை.
  • அயித்தே: நீல்காந்தம் என்பவர் இயக்கிய நியூ வேவ் சினிமாவாம். கேள்விப்பட்டதில்லை.
  • ஷிவா: ராம் கோபால் வர்மாவின் முதல் படம். நாகார்ஜுன், அமலா நடித்தது, இளையராஜா இசை. இது வெளியானபோது நான் செகந்தராபாதில் வாழ்ந்தேன். பெரிய தாக்கத்தை உருவாக்கியது. ஒரு cult film என்றே சொல்லலாம். இன்று யோசித்துப் பார்த்தால் அப்போது புதுமையாக இருந்த திரைக்கதைதான் காரணம் என்று தோன்றுகிறது. மிகவும் taut ஆன, நம்பகத்தன்மை நிறைந்த காலேஜ் காட்சிகள். ரவுடி ரகுவரன், அரசியல்வாதி கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மிக லாஜிகலாக யோசித்தார்கள்.
  • இவற்றுள் யோகி வேமனா, தேவதாஸ், மல்லேஸ்வரி, விப்ரநாராயணா, மாயாபஜார், லைலா மஜ்னு, சவுகாரு, சங்கராபரணம் போன்றவற்றை க்ளாசிக்குகள் என்று சொல்லலாம். நான் பார்த்தவற்றில் மல்லேஸ்வரி, மாயாபஜார், சங்கராபரணம், ஷிவா ஆகியவற்றை சிபாரிசு செய்வேன். நான் சிபாரிசு செய்யும் மற்ற படங்கள்: குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா, கீதாஞ்சலி. மாயாபஜார், குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா ஆகியவற்றை 20 வருஷங்களுக்கு முன் செகந்தராபாதில் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம் – தியேட்டர் பாதி நிறைந்திருக்கும், பார்ப்பவர்கள் மிகவும் என்ஜாய் செய்து பார்ப்பார்கள். (அதே போல் பழைய ஹிந்தி படங்களை ஹைதராபாத் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம். பார்ப்பவர்கள் உண்மையில் என்ஜாய் செய்வார்கள். சி.ஐ.டி. படத்தில் வஹீதா ரெஹ்மான் கஹி பே நிகாஹென் கஹி பே நிஷானா என்று பாடிக் கொண்டு வரும்போது தியேட்டர் கூட சேர்ந்து ஆடியது.)

    எதிர் நீச்சல்


    விகடனின் ஒரிஜினல் விமர்சனம் – 29-12-1968இல் வந்தது.

    சினிமா விமர்சனம்: எதிர் நீச்சல்

    மாடிப்படி மாது பட்டு மாமி கிட்டு மாமா நாயர்…

    இவர்களெல்லாம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர்கள். ‘எதிர் நீச்சல்’ நாடகத்தின் மூலம் அறிமுகமான இந்தக் கதாபாத்திரங்கள், ஏதோ நம்முடன் நடமாடும் பாத்திரங்களோ என்ற உணர்வை ஏற்படுத்திவிட் டன.

    நாடக உலகில் கொடி கட்டிப் பறந்த இவர்கள், இப்போது திரை உலகில் வீர நடை போடுகின்றனர்.

    மத்தியத் தரக் குடும்பத்தின் சூழலில் பின்னப்பட்ட இந்தக் கதையில், நவரசங்களும் இருக்கின்றன. இந்தப் படத்தைப் பார்க்கும்போது, பல இடங்களில் சிரிக்கிறோம்; பல இடங்களில் கண்கலங்குகிறோம்.

    மாடிப்படி மாதுவுக்காக, சபாபதி தன் வீட்டு வாசலிலேயே தட்டேந்தி நிற்கும் போதும், நாயர் தன் கடிகாரத்தை மாதுவின் கையில் கட்டி அவனை இறுகத் தழுவிக் கொள்ளும்போதும் கலங்கும் நாம், கால் உடைந்து பரீட்சை எழுத முடியாமல் வீடு திரும்பிய மாதுவை, சபாபதி தோளில் தூக்கிக்கொண்டு போகும்போது, சோகத்தையும் மீறி ஒரு நிறைவைப் பெறுகிறோம்

    இந்தப் படத்தில் நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர்.

    குறிப்பாக, நாகேஷ் மாதுவாகவே மாறிவிடுகிறார். நகைச் சுவையில் தேர்ந்த நடிகர்கள் எந்தப் பாத்திரத்தையும் சிறப்புற நடிக்கமுடியும் என்பதற்கு, ஒவ்வொரு காட்சியிலும் சான்று கூறிக் கொண்டிருக்கிறார் நாகேஷ்.

    சுந்தரராஜன் அதே மிடுக்கு; அதே சிறப்பு!

    கிட்டு மாமாவாக ஸ்ரீகாந்தும், பட்டு மாமியாக சௌகார் ஜானகியும் வெளுத்து வாங்குகின்றனர். ஜானகிக்குத்தான் அந்த மடிசார் என்னமாகப் பொருந்துகிறது!

    நாயர் வேஷத்தை முத்துராமன் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அசல் நாயர்தான். அவர் பேசுவது மலை யாளம்தான்; ஆனால், எவ்வளவு சுலபமாகப் புரிகிறது, தெரியுமா?

    பயித்தியக்காரப் பெண்ணாக வரும் ஜெயந்தி, பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன், பளிச்சென்றும் பேசி நடித்திருக்கிறார். அசட்டு மாதுவை அவர் பார்க்கும் அந்தப் பார்வை இருக்கிறதே, அது ஒன்று போதும்!

    படம் முழுவதும் வசனத்தில் நகைச்சுவையுடன் ஒரு கருத்தாழத்தையும் காண முடிகிறது. இது பால சந்தருக்குக் கை வந்த ஒரு கலை! சிரிக்க வைப்பதுடன், சிந்திக்கவும் வைக்கிறார் இந்த இளம் டைரக் டர்.

    நாடகங்கள் மூலம்தான் நல்ல நடிகர்கள் உருவாக முடியும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. அதே போல், சிறந்த நாடகங்கள் நல்ல திரைப் படங்களையும் உருவாக்கும் என்பதற்கு, எதிர் நீச்சல் சிறந்ததோர் உதாரணம்!

    நீர்க்குமிழி


    நீர்க்குமிழி படத்துக்கு விகடனின் ஒரிஜினல் விமர்சனம். நன்றி, விகடன்!

    சினிமா விமர்சனம்: நீர்க்குமிழி – விமர்சனம் வந்த நாள், 11-14-1965

    நர்ஸிங் ஹோமின் ஒரு வார்டு.அங்கே மூன்று கட்டில்கள். சாவை எதிர்நோக்கி இருக்கும் ஒரு கான்ஸர் நோயாளி; கால் எலும்பு முறிந்து படுத்திருக்கும் ஒரு கால் பந்தாட்ட வீரர்; வயிற்று வலிக்காரர் ஒருவர். இவர்களைத் தவிர பிரதம டாக்டர், அவருடைய உதவியாளரான ஒரு லேடி டாக்டர் (பிரதம டாக்டரின் மகள்), ஒரு நர்ஸ், நோயாளிகளைக் காண வரும் சில விசிட்டர்கள். இவர்கள்தான் கதாபாத்திரங்கள். லேடி டாக்டருக்கு விளையாட்டு வீரர் மீது காதல்; பிரதம டாக்டருக்கோ மகள் பெரிய டாக்டராக மேல்நாடு சென்று படித்து வரவேண்டும்; காதல், திருமணம் போன்ற பந்தங்களில் சிக்கி விடக்கூடாது என்று ஆசை. இந்த ஆசைகளின் மோதலில் கதை வளர் கிறது. இந்தக் காதல் வளர தனது கோமாளித்தனத்தின் மூலமே உதவும் அந்த கான்ஸர் நோயாளி இறுதியில் சிரித்துக்கொண்டே சாகிறார். அவர் சாவுக்குத் தானே காரணம் என்று எண்ணிக் காதலைத் துறக்கிறாள் லேடி டாக்டர்.

    சேகர் – சந்தர்

    சேகர்: இது நாடகமாக வந்ததே, பார்த்தாயா சந்தர்?

    சந்தர்: இல்லை. ஆனால், என் னைப் போல் அந்த நாடகத்தைப் பார்க்காதவர்களும் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது படம். நாகேஷின் நடிப்பு மிகப் பிரமாதம். காமெடி ரோல் மட்டும் அல்ல, சீரியஸ் ரோலிலும் தன்னால் மிகச் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை சர்வர் சுந்தரத்திற்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டிவிட்டார்.

    சேகர்: அவருடைய ஒவ்வொரு டயலாகை யும் ஜனங்கள் எப்படி ரசித்தார்கள் பார்த் தாயா?

    சந்தர்: அதிலும் கடைசி காட்சிகளில் அவர் சொன்ன கருத்துக்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அது வசன கர்த்தாவின் திறமை. இரு பொருள்பட மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் பாலசந்தர். சரி, சௌகார் ஜானகி எப்படி?

    சேகர்: அடக்கமான, சிறப்பான நடிப்பு. அவருக்கு ஈடு கொடுத்து நன்றாக நடித்திருக்கிறார் கோபால கிருஷ்ணன்.

    சந்தர்: கடைசியில் டாக்டரின் மகள் தன் காதலைத் துறப்பது குழப்பத்தின் எல்லை. கான்ஸர் நோயாளியின் சாவுக்கும் அவள் காதலுக்கும் சம்பந்தமே இல்லை.

    சேகர்: இப்படி ஒரு சில குறைகள் இருந்தாலும், நாகேஷூக்காக ஒரு முறை இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

    ஒளி விளக்கு (Oli Vilakku)


    விகடனுக்கு நன்றி! படம் வந்தபோது(1968) எழுதப்பட்ட விமர்சனம்.

    புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தை, பல்வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஓர் இடத்தில் கூடி, விமர்சித்தார்கள். அந்த விமர்சன உரையாடலில் பங்கு பெற்றவர்கள்…

    1. திரு. கே.திரவியம், ஐ.ஏ.எஸ்.
    2. திருமதி லீலா திரவியம், குடும்பத் தலைவி.
    3. திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர், ஓரியன்டல் மெர்க்கன்டைல் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், சென்னை.
    4. திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தலைவி.
    5. திருமதி குப்பம்மாள், தமிழ் வளர்ச்சித் துறை.
    6. திரு. ஏ.ஆர்.ரங்கநாதன். ஏ.ஸி. கல்லூரி மாணவர், சென்னை.
    7. திரு. ஆர்.சீனிவாசன், ஆசிரியர், வழுத்தூர்.

    திரவியம்: இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு பாடுபடுகிறார். அதே மாதிரி ‘ஜெமினி’யும் எல்லோருக்கும் நல்ல படமா கொடுக்கணும்னு பாடுபட்டிருக்காங்க. கறுப்பும் சிவப்பும் கண்ணைப் பறிக்குது. கடவுளும் பக்தியும் கலந்திருக்கு. அவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க; இவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க!

    லீலா: ஆமாம்! எம்.ஜி.ஆரோட இந்த ஒரு படத்திலேதான் கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமாக வந்திருக்குன்னு நினைக்கிறேன்.

    சீனிவாசன்: தான் ஒரு குணசித்திர நடிகர்னு இதிலே காட்டிட்டார் எம்.ஜி.ஆர்.

    லீலா: கடைசியிலே, குழு நடனம் ஒண்ணு வருதே… அப்படி ஒரு நடனம் நம்ப தமிழ்நாட்டிலே உண்டா?

    துணை ஆசிரியர்: இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால, காமன் பண்டிகைன்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே கொண்டாடுவாங்க. அது, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ அது நடை முறையிலே இல்லாமல் போனதாலே, நமக்குப் புதுசா இருக்கு!

    ரங்கநாதன்: படத்திலே ‘விஷ சுரம்’, ‘விஷ சுரம்’னு மைக்ல சொல்றதும், மக்கள் ஓடறதும் இயற்கையா இல்லேன்னு நான் நினைக்கிறேன்!

    சாந்தி: அது பிளேக் மாதிரி ஒரு பயங்கர நோயா இருக்கலாம்!

    சீனி: அப்படித்தான் இருக்கணும். ஒரு கிராமத்திலே அந்த அளவுக்குச் சொல்லிப் பயமுறுத்தலேனா, கிராமத்து ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கஷ்டப்படுவார்கள்!

    குப்பம்மாள்: மருமகளா வந்த சௌகார்ஜானகியைப் பாராட் டாம இருக்கமுடியாது! அடேயப்பா, என்னமா நடிச்சிருக் காங்க!

    சீனி: எல்லாத்துக்கும் கதைதான் காரணம். இது கருத்தாழம் மிக்க கதை. மக்களைத் திருத்தக் கூடிய கதை. ‘ஒருவன் திருடனா கவே பிறப்பதில்லை; சமுதாயத்தாலேதான் அவன் திருடனாக்கப் படுகிறான்’ என்பதை எடுத்துக் காட்டுகிற கதை. அப்புறம் மதுவை வெறுத்து ஒரு காட்சி, அதை ஒட்டி ஒரு பாட்டு வருது பாருங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.

    திரவியம்: வாலியின் பாடல்கள் என்றால் வளமாயிருக்கும்! அந்தக் குறவன் குறத்தி பாட்டிலே, ‘சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக் கிட்டோம், சிக்கனமா பெத்துப் போடுவோம்’னு வருதே… அதிலே நல்ல கருத்து இருந்தது.

    சீனி: அந்த நெருப்புக் காட்சிக்கு அப்புறம் சௌகார் பாடறாங்களே ஒரு முருகன் பாட்டு, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

    திரவியம்: அந்தக் காட்சியில் என் மனத்தில் பட்ட கருத்து இதுதான்… ‘கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தமுடியும்; அவர்களும் நல்லவர்கள்தான்’.

    சீனி: இந்தப் படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது, கவனிச்சீங்களா? ஓடிப் பிடிச்சு, குதிச்சு வெளையாடற விஷயமே கிடையாது!

    திரவியம்: அது சிறந்த அம்சம் தான். ஆனால், கிளப் டான்ஸ்கள் கொஞ்சம் அதிகம்னு எனக்குப் பட்டுது.

    ரங்க: இந்தப் படத்திலே எல்லாமே இருக்கு. ரொமான்ஸ் இருக்கு; கத்திச் சண்டை இருக்கு; கிளப் டான்ஸ் இருக்கு; சோகக் காட்சிகள் இருக்கு. ஜனரஞ்சக மான படத்திற்குத் தேவையான எல்லாமே இருக்கு. வசனமும் ரொம்ப நல்லா இருக்கு. ‘வானத் திலிருந்து விழும் தண்ணி காவிரி யிலே விழுந்தா, தூய்மையாகுது. புழுதியிலே விழுந்தா, சேறாகுது. அதே போல சந்தர்ப்பத்தினாலே தான் ஒருத்தன் திருடனாகிறான்’னு சொல்றாங்களே, அது ரொம்ப நல்ல கருத்து. என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பாங்க!

    சாந்தி: எம்.ஜி.ஆர். குடிச்சுட்டு சௌகார் கிட்டே வராரே… அங்கே சௌகார் பயப்படறதும், அந்த இடத்திலே என்ன செய்துடுவாரோனு நாம பயப்படறதும்… அந்தக் காட்சியை ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.

    ரங்க: அதே போல, குருட்டுப் பாட்டிக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள அன்பை ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. அந்தப் பாட்டி இறந்த காட்சி, ரொம்ப உருக்கமா இருந்தது.

    சீனி: நெருப்பு ஸீன் ரொம்பத் தத்ரூபம்! எம்.ஜி.ஆர். நெருப்புக்குள்ளே போனபோது எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்தது. தமிழ்ப் படத்திலே இப்படி ஒரு ஸீனை நான் பார்த்ததே இல்லை. பின்னே, ‘ஜெமினி’ படம்னா ஒரு முத்திரை இருக்கணுமே!

    குப்: ஜெயலலிதாவுக்குதான் பாத்திரம் சரியா அமையலே.

    சீனி: சௌகார் ஜானகியின் அபார நடிப்பாலே ஜெயலலிதா வின் நடிப்பு மங்கிப் போயிட்டதோ?!

    கிருஷ்ணமூர்த்தி: ஷி ஈஸ் கிளாமரெஸ்! அது போதாதா? எல்லாரும் ஒரு படத்திலே நடிக்கணும்னா முடியுமா? கவர்ச்சியா இருக்காங்க. கண்ணுக்கு விருந்து. அவ்வளவுதான்!

    திரவியம்: மொத்தத்திலே, நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி! ‘இவர் கெட்டவர்னா, ஆயிரம் ஆயிரம் கெட்டவர்களை உலகத் துக்குக் கொடு’ன்னு இதிலே ஒரு வசனம் வருது. அந்த மாதிரி, ‘இதுதான் தமிழ்ப் படம்னா, இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழ்ப் படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்’னுதான் நான் சொல்லுவேன்.

    சுஜாதாவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள்


    கணையாழி இன்னும் வருகிறதா என்று தெரியாது. ஆனால் சுஜாதா எழுதிய “கணையாழியின் கடைசி பக்கங்கள்’ இந்த காலத்து ப்ளாக்களின் முன்னோடி. சுருக்கமாக (எப்பவுமே வார்த்தைகளை வீணடிக்க மாட்டார்), சுவாரசியமாக எழுதப்பட்டவை. கணையாழி களஞ்சியம் என்ற தொகுப்பில் சில கடைசி பக்கங்களை படித்தேன். ஒன்று சினிமா பற்றியது.

    இதை எழுதும்போது சுஜாதா டெல்லியில் இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் பழைய படங்கள்தான் டெல்லிக்கு வரும்போல. இதை முழுவதுமாக இங்கே தரப்போவதில்லை. சில பகுதிகள் மட்டும்.

    சுஜாதா நல்லபடியாக சொன்ன படங்கள் இவை.

    அன்னை – பானுமதியின் நடிப்பை சிலாகித்திருக்கிறார். சில சமயங்களில் கண்ணீர் வந்ததாம். ஆனால் கூட இருக்கும் எல்லாரும், குறிப்பாக இளம் நடிகர்கள் (பெயர் குறிப்பிடவில்லை, ஹரிநாத் ராஜாவும் சச்சுவும் என்று நினைக்கிறேன்) சொதப்பிவிட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார். பானுமதியை தவிர எனக்கு கண்ணில் தெரிந்த நடிகர்கள் ரங்காராவும் (பரவாயில்லை), ஸௌகாரும் (ஓவர் ஆக்டிங்) மட்டும்தான். இவர் கண்ணில் எல்லாரும் பட்டிருக்கிறார்கள்.

    பாலச்சந்தரின் அந்த நாள், இது நிஜமா – அந்த நாள் பற்றி சாரதாவின் கருத்துகள் இங்கே, ராஜ்ராஜின் கருத்துகள் இங்கே, எனது கருத்துகள் இங்கே. இது நிஜமா கல்யாணராமனின் inspiration என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    பாதை தெரியுது பார், உன்னை போல் ஒருவன் – நான் இரண்டையும் பார்த்ததில்லை. இதை எல்லாம் போட்டிருக்கக்கூடாதா?

    நாலு வேலி நிலம் – இது படமாக வந்ததே தெரியாது. தி. ஜானகிராமனின் கதை. பாட்டுகள் இதை கெடுக்கின்றன என்று சொல்லி இருக்கிறார்.

    குமார ராஜா – சில பகுதிகள் நன்றாக இருக்கின்றன என்று சொல்லி இருக்கிறார். எனக்கு தெரிந்த ஒரே விஷயம் சந்திரபாபு பாடிய “ஒண்ணுமே புரியலே உலகத்திலே” பாட்டு மட்டும்தான். பார்த்ததில்லை.

    அவருக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் பிடிக்கவில்லை. இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை என்று எழுதி இருக்கிறார். நான் பார்த்து பல வருஷம் இருக்கும், பார்த்த போது படம் பிடித்துத்தான் இருந்தது.

    வாலி மீது பாய்ந்திருக்கிறார். கண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார். வாலி கேட்டால் கண்ணதாசனை காப்பி அடிப்பதில் எனக்கு பெருமைதான் என்று சொல்லி இருப்பார்.

    சிவாஜி மீது ஏகமாக பாய்ந்திருக்கிறார். verbatim ஆக – “இவர் முக்கால் வாசிப் படங்களில் கேவிக் கேவி அழுகிறார். பின்னால் தாடி வளர்க்கிறார். அல்லது கை கால் கண் பார்வை ஏதாவது ஒன்று இழக்கிறார். இப்படி இல்லாத படங்கள் மிக சிலவே!…”

    ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.

    கே. பாலச்சந்தரை பற்றி குறிப்பிடவில்லை. அதனால் அனேகமாக இது அறுபதுகளின் இறுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது என் யூகம்தான், எழுதப்பட்ட தேதி புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. அப்பவே சிவாஜியை பற்றி இப்படி எழுத ஆரம்பித்துவிட்டார்களா?

    அந்த நாள் Preview


    இது சாரதாவின் guest post. அவர் அந்த நாள் பற்றி எழுதிய மறுமொழி மிக அருமையாக இருந்ததால், அதை இங்கே ஒரு போஸ்டாக போட்டிருக்கிறேன்.

    சாரதா, ராஷோமொன் படத்தில் இந்த ஃப்ளாஷ்பாக் உத்தி மிக சிறப்பாக பயன்படுத்தப்பட்டது.

    Over to Saradha!

    அந்த நாளில், அதாவது அந்த நாட்களில் (1950) படம் துவங்கும்போது கர்நாடக இசையுடன் அல்லது கர்நாடக இசைப்பாடலுடன் படத்தின் டைட்டில்கள் ஓடும். முடிந்ததும் ஒரு அரசவையில் அரசவை நர்த்தகியின் நடனம் நடைபெறும். அதைத் தொடர்ந்து பாத்திரங்கள் பேசத்துவங்க படம் நகர ஆரம்பிக்கும். இதுதான் அன்றைய நடைமுறை.

    ஆனால் “அந்த நாள்” படத்தின் துவக்கத்தைப்பாருங்கள். படம் துவங்கும்போது ஜாவர் சீதாராமனின் குரலில் “இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கிக்கொண்டிருந்தன. எந்த நேரம் என்ன நடைபெறுமோவென்று எல்லோர் மனதிலும் ஒரு அச்சம் குடிகொண்டிருந்தது. அப்போது ஒருநாள் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில்…”

    இதைப்பேசி முடிக்கும் முன்பாகவே, திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சப்தம், அதைதொடர்ந்து சிவாஜி நெஞ்சைப் பிடித்துக்கொண்டே கேமராவிலிருந்து பின்னோக்கிச்சென்று கீழே விழுவார். கால்களை உதைத்தவாறே உயிரை விடுவார். (ஆம். முதல் காட்சியிலேயே கதாநாயகன் அவுட். அந்த நாளில் நினைத்துப்பார்க்க முடியாத புதுமை). சிவாஜி இறந்ததும், மாடியிலிருந்து கதவொன்று திறக்கும். ஒரு வழுக்கைத்தலை பெரியவர் தட தட வென மாடிப்படிகளில் ஓடி வந்து கேமரா அருகில் வந்ததும் கீழுதட்டை கைகளல் பிடித்தவாரே அங்குமிங்கும் பார்ப்பார். பின்னர் ஓடத்துவங்குவார். டைட்டில்கள் ஓடத்துவங்கும். (ஆம் ‘அந்த நாள்’.. அந்த நாளேதான்).

    கொலை எப்படி நடந்தது என்று விசாரிக்க வரும் சி.ஐ.டி.ஜாவர் சீதாராமனிடம், கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும், கொலை எப்படி நடந்திருக்கக் கூடும் என்று அவரவருக்கு தெரிந்த விஷயங்களைக்கொண்டு விவரிக்க, ஒவ்வொன்றும் ஒரு ஃப்ளாஷ்பேக்காக விரியும். ஒவ்வொருவர் சொல்லி முடிக்கும்போதும் சிவாஜி சுடப்பட்டு விழுவார். (படம் முழுவதையும் ஃப்ளாஷ் பேக்கிலேயே சொல்லும் பாணியில் பின்னாளில் வந்த பல புதுமைப்படங்களுக்கு வித்திட்டு வழிகாட்டிய படம் ‘அந்த நாள்’).

    பெரியவர் பி.டி.சம்பந்தம், சிவாஜியின் தம்பி டி.கே.பாலச்சந்திரன், பாலச்சந்திரனின் மனைவி, நாடோடிப்பாடலை சுவாரஸ்யமாகப்பாடும் சோடாக்கடைக்காரன், குதிரை வண்டிக்காரன்… ஒவ்வொருவரும் எவ்வளவு ஜீவனுள்ள பாத்திரங்கள்..!!. நாட்டுப்பற்று மிகுந்த பண்டரிபாய், கல்லூரி விழாவில் புரட்சிக்கருத்துக்களை சொல்லும் சிவாஜியைக் கண்டு காதல் வசப்படுவது ஒரு அருமையான கவிதை நயம். தன்னுடைய திறமையை தன்னுடைய சொந்த நாட்டு அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்று விரக்தியின் எல்லைக்குப் போய் ஜப்பான் நாட்டு அரசுடன் உறவு வைத்து தன் சொந்த நாட்டுக்கே விரோதியாக மாறும் துடிப்புள்ள எஞ்சினீயர் கதாபாத்திரத்தில் சிவாஜி தூள் கிளப்பியிருப்பார்.

    கேமரா வழியாக கதை சொல்லும் பாணி முதலில் இந்தப்படத்தில்தான் பரீட்சித்துப் பார்க்கப்பட்டிருக்கும் என்பது பலரின் எண்ணம். நான் முன்பு சொன்னது போல அறையைப்பூட்டிக்கொண்டு சிவாஜி போகும்போது அவரோடேயே கேமராவும் போகும். கையிலிருக்கும் சாவிக்கொத்தை மேலும் கீழும் தூக்கிப்போட்டுப் பிடித்தபடி அவர் செல்லும்போது, கேமராவும் சாவியோடு மேலும் கீழும் போகும்.

    அதே போல இறுதிக்காட்சியில், தான் சுடப்படுவதற்கு முன்பாக, சுழல் நாற்காலியில் அமர்ந்த படி மனைவி பணடரிபாயுடன் பேசும்போது கேமரா இவரிடத்தில் அமர்ந்து கொண்டு இவர் பார்வை போகும் திசையெல்லாம் போகும். அறை முழுக்க சுற்றி சுற்றி அலையும்.

    ( ‘இருகோடுகள்’ படத்தில் கலெக்டர் சௌகார், முதலமைச்சர் அண்ணாவை பேட்டியெடுக்கும் காட்சியில், அண்ணாவின் இருக்கையில் கேமரா அமர்ந்து, அவர் பார்வை போகும் திசைகளில் போவதைக்கண்டுவியந்தேன். அதன் பின்னரே ‘அந்தநாள்’ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த உத்தி ஏற்கெனவே (15 ஆண்டுகளுக்கு முன்பே) அந்த நாளில் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டு வியப்பின் எல்லையை அடைந்தேன். (பாலச்சந்தர் என்று பெயர் வைத்தாலே புதுமைகள் செய்யதோன்றுமோ)

    எஸ். பாலச்சந்தர், தானே ஒரு நடிகராக இருந்தும் கூட, சில காட்சிகளில் தானே நடித்துப் போட்டுப் பார்த்தபின், சரிவரவில்லையென்றதும் தூக்கிப்போட்டுவிட்டு ஏ.வி.எம். செட்டியாரின் ஆலோசனையின்படி நடிகர்திலகத்தை கதாநாயகனாகப் போட்டு படத்தை எடுத்தார்.

    படத்தில் பாடல்களே இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில் ‘பிண்ணனி இசை : ஏ.வி.எம்.இசைக்குழு’ என்று மட்டும் காண்பிக்கப்படும்.

    தமிழ்த்திரையுலக வரலாற்றில் எந்நாளும் பேசப்படும் படமாக சிறந்த தொழில் நுட்பம், மற்றும் புதிய சிந்தனை அமைந்த படம்தான் “அந்த நாள்”I

    அன்னை (Annai)


    பானுமதியின் மாஸ்டர்பீஸ். அவருக்காகவே எழுதப்பட்ட திரைக்கதையில் அவர் பிய்த்து உதறி இருக்கிறார். அவருக்கு இந்த படத்துக்கு தேசிய அளவில் சிறந்த நடிகை விருது கிடைத்தது. இதற்கு பிறகும் அவர் இரண்டு சிறந்த நடிகை விருதுகளை பெற்றிருக்கிறார்

    1962இல் வந்த படம். வழக்கம் போல டைட்டில்களை மிஸ் செய்துவிட்டேன். அடையாளம் தெரிந்தது ஸௌகார், ரங்காராவ், முத்தையா (வேறொரு படத்தில் இவர் யாரென்று சொன்ன சாரதாவுக்கு நன்றி), சச்சு, சந்திரபாபு. ஏவிஎம் படம். இசை சுதர்சனம். இயக்கம் ஏவிஎம்மின் ஆஸ்தான இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சுவா? பஞ்சு. அனேகமாக தெலுங்கிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். நாயகன் பேர் ஹரிநாத் ராஜா. தெலுங்கு நடிகர் என்று நினைக்கிறேன், யாரோ தெரியவில்லை. (பானுமதியின் மகனாக நடிக்க முதலில் ஜெய்ஷங்கரைத்தான் மேக்கப் டெஸ்ட் செய்து பார்த்தார்களாம். அவருக்கு சிறிய கண்கள் என்று அவரை நிராகரித்துவிட்டார்களாம்.)

    ஒரு வங்காள மொழி நாடகம்தான் மூலக்கதை. ஹிந்தியில் மாய ம்ருகா என்று படமாக எடுக்கப்பட்டது. ஏவிஎம் செட்டியார் பார்த்தது நாடகமா இல்லை ஹிந்தி படமா என்று தெரியாது. ஆனால் இதை திரைக்கதையாகும் முயற்சியில் பானுமதிக்கும் பங்கு உண்டு என்று கேள்வி. பானுமதிக்கு மூலக்கதையில் வந்த பாத்திரம் கொஞ்சம் அசடாக இருக்கிறார் என்று தோன்றியதாம். அதனால் அவர் பாத்திரத்தை கொஞ்சம் மாற்றினாராம்.

    தமிழ் படங்களில் சாதாரணமாக நல்லவர்களில் ஒரு குறையும் இருக்காது. கெட்டவர்களோ வடிகட்டின கெட்டவர்கள் – மருந்துக்கு கூட ஒரு நல்ல குணம் இருக்காது. இந்த படம் ஒரு அதிசயமான விதிவிலக்கு. ஒரு குறை உள்ள பாத்திரம், அதுவும் பெண் பாத்திரம்தான் கதாநாயகி. பானுமதி நாம் பார்க்கக்கூடிய ஒரு பாத்திரம். அவரது இன்செக்யுரிடியினால் அவர் செய்யும் தவறுகள் ரியலிஸ்டிக்காக சித்தரிக்கப்படுகின்றன. அவருக்கு அந்தஸ்து முக்கியம். ஆனால் எல்லா படங்களிலும் வருவது போல அவர் அந்தஸ்துக்காக வாழும் ஒரு கார்ட்டூன் காரக்டர் அல்லர். அதனால்தான் கதையும், அதனால் படமும் நன்றாக இருக்கிறது.

    நல்ல முடிச்சு உள்ள கதை. பணக்கார குடும்பத்தில் பிறந்த பானுமதி, அவரது தங்கை ஸௌகார். ஸௌகார் ஏழை முத்தையாவை கல்யாணம் செய்துகொள்வதால் சிரமப்படுகிறார். குழந்தை இல்லாத தன் அக்காவுக்கு தன் குழ்ந்தையை கொடுக்கிறார். பதில் உதவி என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அக்காவிடம் பண உதவி பெற்றுக் கொண்டு வெளி நாடு போய்விடுகிறார். பானுமதி பையனை உயிருக்கு உயிராக வளர்க்கிறார். அடி மனதில் எப்போதாவது பையன் தன்னை பெரியம்மா என்று சொல்லிவிடுவானோ என்ற பயம் இருக்கிறது. இருபது வருஷம் கழித்து ஸௌகாரும் முத்தையாவும் ஏழையாகவே திரும்பிவரும்போது, தங்கை மேல் உள்ள பாசத்தை பையன் தன் நிஜ அம்மாவுடன் போய்விடுவானோ என்ற பயம் வென்றுவிடுகிறது. மகனும் தங்கையும் சந்திக்கக்கூடாது என்று முயற்சி செய்கிறார். தற்செயலாக அவர்கள் சந்தித்துவிட, பானுமதியின் பயம் அதிகரிக்கிறது. முத்தையா இறந்துவிட, ஸௌகார் அழுதுகொண்டே இருக்க, பையனுக்கு உண்மை தெரிந்து பெரியம்மா என்றே கூப்பிட்டுவிடுகிறான். வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறான். கடைசியில் பானுமதி ஸௌகாரிடம் இவன் நம் பிள்ளை என்று சொல்ல, சுபம்!

    இது பானுமதியின் படம். மற்ற எல்லாரும் பானுமதிக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கத்தான். ரங்காராவ் நன்றாக நடித்திருக்கிறார். பானுமதி பல காட்சிகளில் கலக்குகிறார். குறிப்பாக தன் மகன் அடிபட்டு படுத்திருக்கும்போது சரக் சரக் என்று சத்தத்தோடு நடந்து வரும் நர்சை ஒரு அடி போடும் காட்சி பிரமாதம். ஸ்லீவ்லெஸ் ரவிக்கையோடு வரும் தன் prospective மருமகளிடம் “அவசரமா வந்ததால ரவிக்கை போடாம வந்துட்டா போலிருக்கு” என்று சொல்லும் இடம் அபாரம். தங்கையை நடத்தும் விதம் தவறு என்று தெரிந்தும் ரங்காராவிடம் இந்த ஒரு விஷயத்தை விட்டுடுங்க என்று சொல்லும் இடம், தங்கையை கண்டு கண் கலங்கும் இடம், எல்லாரும் என்னைத்தான் சொல்வீங்க என்று புலம்புவது – சும்மா புகுந்து விளையாடிவிட்டார்.

    மிச்ச எல்லாரும் டம்மிதான். ஆனால் ஹீரோ பார்க்க நன்றாக இருக்கிறார்.

    படம் முக்கால்வாசி முடிந்த பிறகுதான் ஒரே வீட்டில் வசிக்கும், தன்னை ஒரு தலையாக காதலிக்கும் சந்திரபாபுவை பார்த்து சச்சு அண்ணா என்று சொல்கிறார். அது வரைக்கும் எப்படி கூப்பிட்டார் என்று தெரியவில்லை. பஞ்சதந்திரம் படத்தில் தேவயானி சிம்ரன் சந்தேகப்பட்டு திட்டிவிட்டு போனதும் கமலை பார்த்து “ராமண்ணா ராமண்ணா” என்பார். கமல் “கரெக்டா அவ போனப்புறம் சொல்லு!” என்பார். அதுதான் ஞாபகம் வந்தது!

    பாட்டுகள் எழுதி இருப்பது கண்ணதாசன். சந்திரபாபு பாடும் “புத்தி உள்ள மனிதரெல்லாம்”, பி.பி.எஸ்., சுசீலா பாடும் “அழகிய மிதிலை நகரினிலே”, சுசீலா பாடும் “பக் பக் பக் பக் பக்கும் பக்கும் மாடப்புறா”, பானுமதியே பாடும் “பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று” எல்லாமே நல்ல பாட்டுகள். எனக்கு எப்போதுமே சந்திரபாபு பாட்டுக்கள் என்றால் ஒரு மயக்கம் உண்டு. இதில் அவர் கலக்கிவிடுவார். “அழகிய மிதிலை நகரினிலே” பாட்டில் “பருவத்து பெண்கள் தனித்திருந்தால்” என்று ஆரம்பித்து, “ஆஹா, ஓஹோ” என்று பி.பி.எஸ். பாடுவதும், “ம்ஹ்ம்ம்” என்று சுசீலா முறைப்பதும் அருமை! “பக்கும் பக்கும் மாடப்புறா” பாட்டுக்கு சந்திரபாபு என்ன ஜோராக டான்ஸ் ஆடுகிறார்! பானுமதியின் குரலில் கொஞ்சம் தெலுங்கு வாடை உண்டு. அது அவரது குரலுக்கு ஒரு special charmஐ கொடுக்கிறது.

    “அழகிய மிதிலை நகரினிலே”, “புத்தி உள்ள மனிதரெல்லாம்” பாட்டுகளை இங்கே கேட்கலாம்.

    பானுமதிக்காக பாருங்கள். 10க்கு 7 மார்க். B grade.

    சிரஞ்சீவி (Chiranjeevi)


    1984இல் வந்த படம். 1964இல் வந்திருந்தால் நன்றாக ஓடியிருக்கும். இருபது வருஷம் லேட்டான கதை சிவாஜியின் மைனஸ் பாயிண்டுகளை அழுத்தமாக காட்டுகிறது. உதாரணமாக சிவாஜி தான் ரிடையர் ஆகப் போகிறோம் என்று தெரிந்ததும் “நடிக்கும்” காட்சியை 1964இல் எல்லாரும் அற்புதம் அற்புதம் என்று கொண்டாடி இருப்பார்கள். அஃப் கோர்ஸ், 1964இல் வந்திருந்தாலும் என்னை மாதிரி ஆட்கள் யாராவது 2008இல் பார்த்துவிட்டு என்னா ஓவர் ஆக்டிங் என்று கமென்ட் அடித்திருப்போம்.

    சிவாஜி, ஜெய்கணேஷ், ஸௌகார், ஸ்ரீப்ரியா, விஜயகுமார், கோபி, மனோரமா, தேங்காய், ஒரு விரல் கிருஷ்ணாராவ் நடித்திருக்கிறார்கள். சத்யராஜ் எஸ் பாஸ் அடியாள் ரேஞ்சில் வில்லனாக வருகிறார். எம்எஸ்வி இசை. கே. சங்கர் இயக்கம்.

    இந்த கொடுமைக்கு கதை சுருக்கம் எல்லாம் தேவை இல்லை. ஆனால் பாட்டுகளும் சுகம் இல்லை, என்னதான் எழுதுவது?

    கப்பலில் நிகழும் கதை. வடிவேலு பாணியில் சொன்னால் சிவாஜி ரொம்ப நல்லவஅஅஅர். ஃப்ளாஷ்பாக்கில் ஸௌகார் தன் குழந்தையை குப்பை தொட்டியில் போட்டுவிடுகிறார். பிற்காலத்தில் அடையாளம் கண்டுபிடிக்க வசதியாக அதற்கு ஒரு மச்சம் இருக்கிறது. ரவிக்கையை கிழித்து காட்டுவதற்காக மச்சம் முதுகில் ப்ரா ஸ்ட்ராப்புக்கு கொஞ்சம் மேலே இருக்கிறது. ப்ரயாச்சித்தமாக ஸௌகார் சொத்தை எல்லாம் அநாதை ஆசிரமத்துக்கு எழுதி வைக்க விரும்புகிறார். அவருக்கு பேங்க் ட்ராஃப்ட், வைர் ட்ரான்ஸ்ஃபர் பற்றி எல்லாம் தெரியாததால் எல்லா பணத்தையும் வைரமாக மாற்றிக்கொண்டு கப்பலில் வருகிறார். அதை திருட விஜயகுமார், சத்யராஜ், இரண்டு மூன்று சைடிக்களோடு வருகிறார்கள். அதிக பிரசங்கித்தனமாக பேச ஒரு சின்னப் பையன். சென்னைக்கு போய் தூக்கில் தொங்கப்போகும் சரத்பாபு. அவரைக் காப்பாற்ற பைத்தியமாக நடிக்கும் ஸ்ரீப்ரியா. ஸ்ரீப்ரியா, ப்ரா ஸ்ட்ராப், மச்சம் என்றதும் அவர்தான் சௌகாரின் மகள் என்று கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு ஒரு நாற்பது வயது என்று நான் கண்டுபிடித்துக்கொள்வேன். சிவாஜியை பற்றி உருக கப்பலின் காப்டன் ஜெய்கணேஷ், கப்பலின் டாக்டர் கோபி. சிவாஜி படம் பூராவும் நம்ம உயிரை வாங்கிவிட்டு கடைசியில் அவரும் உயிரை விட்டுவிடுகிறார்.

    திரைக் கதை, நடிப்பு எல்லாமே sloppy. உதாரணமாக ஜெய்கனேஷிடம் ஒரு சைடி வந்து தான் ஸௌகாரின் மகள் இல்லை, ஸ்ரீப்ரியாதான் அது என்று சொல்வாள். அவள் உண்மையை சொல்வதற்கு முன்னாலேயே ஜெய்கணேஷ் ஒரு அதிர்ச்சி ரியாக்ஷன் காட்டிவிடுவார். நம்ம வேலையை நம்ம முடிச்சுடுவோம் என்று நினைத்துவிட்டார். உண்மையை சொல்லப் போனால் இந்தப் படத்திலும் திறமையாக நடிப்பவர் சிவாஜி மட்டும்தான்.

    சிவாஜிக்கு ஓவரால் போட்டால் ஒரு பீப்பாய் தோற்றம் வருகிறது. நல்ல வேளையாக இந்தப் படத்தில் அவர் வயதானவராக வருகிறார், கோரமாக தெரியவில்லை.

    பாட்டுக்கள் ஒன்றும் சுகம் இல்லை.

    காலேஜ் படிக்கும்போது பார்க்காமல் தவிர்த்துவிட்டேன். வயதாக ஆக புத்தி குறைந்துகொண்டே போகிறது, அதனால் இப்போது பார்த்து தொலைத்துவிட்டேன். இதெல்லாம் முத்தான படம் என்றால், சண் டிவிக்கு எதுதான் மோசமான படம்?

    10க்கு 3 மார்க். இதுவும் சிவாஜிக்காகத்தான். சிவாஜி இல்லை என்றால் இவ்வளவு மார்க் கூட கிடைத்திருக்காது. D grade.