சக்கரம்: பழைய திரைப்படம்
பிப்ரவரி 26, 2024 பின்னூட்டமொன்றை இடுக
இந்தத் தளத்தில் பழைய திரைப்படங்களைப் பற்றித்தான் எழுதுவேன். வாரம் ஒரு பதிவாவது எழுத வேண்டும் என்று எண்ணம். ஆனால் பழைய படம் ஒன்றைப் பார்த்து கொஞ்ச நாளாகிவிட்டதால் தாமதமாக பதிவு வருகிறது.
சக்கரம் படத்தைப் பற்றிய எனது ஒரே நினைவு – அதில் “காசேதான் கடவுளப்பா” என்ற பிரபலமான பாடல் உண்டு.
நான் ஏ.வி.எம். ராஜன் நடித்த படங்களை பொதுவாக ரசிப்பதில்லை. அவர் சிவாஜியின் சுமாரான நகல் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. (இத்தனைக்கும் “என்னதான் முடிவு” எனக்குப் பிடித்த திரைப்படங்களில் ஒன்று.) அதனால் பழைய திரைப்படங்களை விரும்பிப் பார்த்தாலும் இதைத் தவிர்த்தே வந்திருக்கிறேன்.
கடைசியாக ஒரு வழியாகப் பார்த்தேன். வழக்கமான காட்சிகள் உண்டுதான் என்றாலும் தமிழுக்கு வித்தியாசமான படம்தான். வழக்கமான காதல், குடும்பம், பாசம் என்று இல்லாமல் இருப்பதே கொஞ்சம் refreshing ஆக இருக்கிறது. ராஜனின் பாத்திரமும் நடிப்பும் நன்றாகவே வந்திருக்கின்றன. அவருக்கு “வில்லன்” பாத்திரம்தான் என்றாலும் அவர்தான் நாயகன், ஜெமினி கணேசன் சும்மா ஒப்புக்கு சப்பாணிதான்.
1968-இல் வந்த திரைப்படம். ஜெமினி, ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா, சௌகார் ஜானகி, நாகேஷ், மனோரமா, மேஜர் சுந்தரராஜன், எம்.ஆர்.ஆர். வாசு, ஓ.ஏ.கே. தேவர், வி.எஸ். ராகவன் என்று பலரும் நடித்திருக்கிறார்கள். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை. திரைக்கதை, இயக்கம் ஏ. காசிலிங்கம்.
எளிய கதைதான். ஜம்பு (ராஜன்) மைசூர் காடுகளில் வாழும் நல்ல மனம் படைத்த கொள்ளைக்காரன். திருடும் பணத்தை ஏழைகளுக்கு கொடுத்துவிடுகிறான். பண்ணையார் (வி.எஸ். ராகவன்) வீட்டில் திருடப் போகும்போது அங்கு பிரசவ வலியால் துடிக்கும் பண்ணையார் பெண்ணைக் காப்பாற்றி அவளை தங்கையாக ஏற்றுக் கொள்கிறான். பணக்காரப் பையனோடு காதல் தோற்றுவிடும் என்பதால் தற்கொலை செய்து கொள்ளப் போகும் பாபுவின் (ஜெமினி) தங்கையைக் காப்பாற்றுகிறான். ஜம்புவை பிடித்துக் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று அரசு அறிவித்திருக்கிறது.
பாபுவின் தங்கை காதலிப்பது அவனது எஜமானி அம்மாளின் (சௌகார்) பையனை. சௌகார் வசதி படைத்த குடும்பத்தவர்தான், ஆனால் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறார். 50000 ரூபாய் கொடுத்தால் உன் தங்கையை மருமகளாக ஏற்கிறேன் என்கிறார்.
பாபு ஜம்புவைப் பிடித்துக் கொடுத்து லட்ச ரூபாய் பரிசை வெல்லலாம் என்று கிளம்புகிறான். அவனுக்கு துணையாக அவன் காதலி (நிர்மலா); மற்றும் காடுகளைப் பற்றி நன்கு அறிந்த வழிகாட்டி (நாகேஷ்), கத்தி வீசும் நிபுணன் (ஓ.ஏ.கே. தேவர்), வர்மக்கலை நிபுணன் (வாசு), கயிறு வீசும் நிபுணன் ஒருவன் சம்பளம் பேசி சேர்ந்து கொள்கிறார்கள். ஜம்புவின் தோழர்களை இந்த நிபுணர்கள் கொன்றுவிட, பாபு ஜம்புவை சண்டை போட்டு தோற்கடிக்கிறான். ஜம்பு பாபுவிடம் சரண், தப்பி ஓடமாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறான்.
லட்ச ரூபாய் பரிசு, தங்களுக்கு நூறுகளில்தான் சம்பளம் என்று உணரும் தோழர்கள் பணத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள். ஜம்புவின் தங்கைதான் நாகேஷின் மனைவி (மனோரமா). அண்ணனைப் பிடித்துக் கொடுத்தால் லட்ச ரூபாய் பரிசு என்றதும் பிடித்துக் கொடுக்க அவளும் தயாராக இருக்கிறாள். ராஜன் பணத்துக்கு முன் நட்பும் உறவும் ஒரு பொருட்டில்லை என்று காசேதான் கடவுளப்பா என்று பாட்டு பாடுகிறார். கடைசியில் சௌகார்தான் ராஜனின் மனைவி வேறு. சௌகார் தற்கொலை செய்து கொள்ள, பத்தினிக்கு பணம் தூசு என்று வசனம் பேசிவிட்டு ராஜனும் தற்கொலை. பணம் தேவையில்லை என்று எல்லாரும் மறுக்கிறார்கள்.
தமிழ் திரைப்படங்களில் எதிர்பார்க்கக் கூடிய திருப்பங்கள், twists எல்லாம் உண்டுதான். ஆனால் கதைக்களம் வித்தியாசமாக இருப்பதால் திரைப்படம் பிழைக்கிறது. ராஜன் நன்றாகவே நடித்திருக்கிறார். ஜெமினியும் நாகேஷும் தண்டத்துக்கு வந்து போகிறார்கள். நாகேஷுக்காக படம் கொஞ்சம் ஓடலாம் என்ற காலம். நிர்மலா அதை விட தண்டம்.
பழைய படம் விரும்பிகள் பார்க்கலாம். பத்துக்கு 6.5 மதிப்பெண். C+ grade.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் திரைப்படங்கள்
தொடர்புடைய சுட்டி: யூட்யூபில் திரைப்படம்
அண்மைய பின்னூட்டங்கள்