நாகேஷ்–25


அனுப்பிய விமலுக்கும், விகடனுக்கும் நன்றி!

நாகேஷ் மாறும் உடல் மொழி, ஏறி இறங்கும் குரல் ஜாலம், தமிழர்களில் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம், ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழிந்தவர்!

  1. பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராக பணியாற்ற், குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்.
  2. பெற்றோர் கிருஷ்ணராவ் – ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன் பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்ல பெயர் – குண்டப்பா.
  3. பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!
  4. இளம் வயதில் வீட்டில் கோபித்துக் கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர் ரேடியோ கடை ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!
  5. முதன் முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார் அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!
  6. கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்த மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலர வைத்து அவரது நடிப்பில் வெளிச்சம்!
  7. ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால் தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!
  8. இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ்பாபு, ராஜேஷ்பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!
  9. முதல் படம் `தாமரைக்குளம்’ ஷூட்டிங்கின் போது சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர். ராதாவிடம் மனம் வெதும்பி நடந்தைச் சொன்னார் இவர். `மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்… கவலைப்படாம நடி’ என்றாராம் ராதா!
  10. `அபூர்வ ராகங்கள்’ படத்தில் இவருக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் கண்ணதாசன், அவரிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் நாகேஷ் கவிதை கேட்ட இவர், `அதான்யா கண்ணதாசன்’ என்று சொல்லிவிட்டு, `பீஸ் எவ்வளவு?’ என்பார். `இதுதான்யா ஃபீஸ்’ என்பார் கண்ணதாசன்!
  11. முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை, யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் `நாகேஷ் பாணி’ என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!
  12. எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!
  13. திருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி. நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்!
  14. நகைச்சுவையில் மட்டுமல்ல: `நீர்க் குமிழி’ குணச்சித்திரம், `சர்வர் சுந்தரம்’ ஹீரோ, `அபூர்வ சகோதரர்கள்’-ல் வில்லன், ‘மகளிர் மட்டும்’ பிணம் என்று வெளுத்துக் கட்டியவர்!
  15. `அபூர்வ ராகங்கள்’ ஷூட்டிங், பாலசந்தர் ஆக்‌ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ் கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, `சியர்ஸ்’ என்று சொல்ல, படம் பார்த்தவர்கள் பாரட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்சுக்கு இது ஒரு சாம்பிள்!
  16. இவரை எப்போதும் `டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்.
  17. டைரக்‌ஷன் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை. `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்‌ஷனில் வெளிவந்த திரைப்படம்.
  18. பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், `எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே’ என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!
  19. `சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்’ என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி.
  20. `நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ண்ணாக அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக் கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்’ என்று சொன்னவர் கமலஹாசன்.
  21. பஞ்சதந்திரம்’ ஷூட்டிங், உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், `கோழி இன்னும் சாகலையாப்பா?’
  22. `தசாவதாரம்’ கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம் `என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured–டா கமல்!’
  23. தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்.
  24. இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது- செப்டம்பர் 27, 1933 –ல். மறைந்தது ஜனவரி 31, 2009 –ல்.
  25. 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாகேஷ் பக்கம்

சிவாஜி–25


விமல் அனுப்பிய செய்தி. அவருக்கும் விகடனுக்கும் நன்றி!

சிவாஜி கணேசன்! இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்…

  1. சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், ‘இனி இவர்தான் சிவாஜி!’ என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
  2. நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம்தான். உப்பரிகையில் நின்று கொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
  3. 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த பராசக்தியில் குணசேகரன் பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
  4. சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள் கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!
  5. கலைஞரை ‘மூனா கானா’, எம்ஜிஆரை ‘அண்ணன்’, ஜெயலலிதாவை ‘அம்மு’ என்றுதான் அழைப்பார்!
  6. வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
  7. தன்னை பராசக்தி படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!
  8. திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!
  9. தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் வணங்காமுடி!
  10. சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. மனோகரா நாடகத்தைப் பார்த்த கேரளா-கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!
  11. தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதி வரை வாழ்ந்தார். சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!
  12. சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
  13. ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!
  14. விநாயகர் மீது மிகுந்த பக்தி கொண்டவர் சிவாஜி. சிறு வெள்ளியிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!
  15. சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. பராசக்தி படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன்–பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!
  16. ரத்தத் திலகம் படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு – ஒரு துப்பாக்கி!
  17. படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!
  18. சிவாஜியும் எம்ஜிஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
  19. விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!
  20. தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்து வைத்தவர் எம்ஜிஆர்!
  21. ‘ஸ்டேனிஸ்லாவோஸ்கி தியரி’ என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!
  22. அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறைவேறவே இல்லை!
  23. பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, ‘தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்’ என்று சிவாஜியிடம் சொன்னபோது, ‘டி.எஸ். பாலையா, எம்.ஆர். ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்’ என்றாராம் தன்னடக்கமாக!
  24. பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். ‘அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்’ – என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!
  25. கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம்

பணமா பாசமா – ஆர்வியின் விமர்சனம்


அறுபதுகளில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ஒரு நட்சத்திர இயக்குனர். சாரதா, கற்பகம், கை கொடுத்த தெய்வம் மாதிரி பல படங்கள். ஸ்ரீதர், பீம்சிங், ஏ.பி. நாகராஜன், இளம் கே. பாலசந்தர் எல்லாரும் ஓரளவு middle-of-the-road படம் எடுத்தார்கள். கே.எஸ்.ஜி செண்டிமெண்ட் படங்கள் எடுத்தார். Subtlety எல்லாம் எதிர்பார்க்க முடியாது. படம் பொதுவாக வசனங்கள் மூலம்தான் நகரும். ஆனால் பாத்திரங்கள் ஓரளவு நம்பகத் தன்மை உடையவையாக இருக்கும். அப்படி நம்பகத் தன்மை இல்லாவிட்டாலும் சுவாரசியமாகவாவது இருக்கும். கற்பகத்தில் அபூர்வமான மாமனார்-மருமகன் உறவு உண்டு; அதே நேரத்தில் சாவித்திரி, கே.ஆர். விஜயா, முத்துராமன், எம்.ஆர். ராதா எல்லாருக்கும் ஸ்டீரியோடைப் ரோல். சாரதாவில் அந்த காலத்துக்கு அதிர்ச்சியான கதை. கை கொடுத்த தெய்வத்தில் எங்கேயும் இல்லாத உலக மகா பேக்கு சாவித்திரி (அந்த ரோலில் அவர் புகுந்து விளையாடினார் என்பது வேறு விஷயம்). சின்னஞ்சிறு உலகத்தில் முற்பாதியில் பொய்யே சொல்லாத ஜெமினி, பிற்பாதியில் பொய் மட்டுமே சொல்வார். முற்பாதியில் சிரிக்கத் தெரியாத நாகேஷ் பிற்பாதியில் சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக் கொண்டிருப்பேன் என்று பாட்டு பாடுவார். இந்த மாதிரி ஆட்களையும் மாற்றங்களையும் சினிமாவில்தான் பார்க்க முடியும். ஆனால் நம்பகத் தன்மை எப்படியோ, சுவாரசியமான பாத்திரங்கள். ஷெர்லாக் ஹோம்ஸின் நம்பகத் தன்மை குறைவுதான், ஆனால் என்ன?

பணமா பாசமாவில் எஸ். வரலக்ஷ்மியும் டி.கே. பகவதியும் கே.எஸ்.ஜியின் பலம் பலவீனம் இரண்டும் தெரிகிறது. பகவதி underplay செய்கிறார். அலட்டிக் கொள்ளவில்லை. அவர் பாத்திரம் வரலக்ஷ்மியின் பாத்திரத்துக்கு counterpoint – அதனால் முழு நம்பகத் தன்மை இல்லை. ஆனால் நல்ல படைப்பு. வரலக்ஷ்மி மறு துருவம். ஸ்டீரியோடைப் ரோல், cliche – மிகை நடிப்பில் அவர் எங்கியோ போயிட்டார். ஸ்டேடஸ் பார்க்கும் அம்மா ரோல் (இதே மாதிரி பூவா தலையா படத்திலும்) ஆனால் சுவாரசியமான பாத்திரப் படைப்பு.

தெரிந்த கதைதான் – பணக்கார வரலக்ஷ்மி, அவர் சொன்னதுதான் வீட்டில் சட்டம். அப்பா பகவதியின் வார்த்தை எடுபடாது. மகன் நாகேஷ் சினிமா விதிப்படி ஏழைப் பெண், எத்தனையோ பாத்தியே இம்மாம் பெரிசு பாத்தியா என்று பாட்டு பாடி எலந்தப்பயம் விற்கும் விஜயநிர்மலாவை லவ்வுகிறார். மகள் சரோஜா தேவி ஏழை ஓவியர் ஜெமினியை லவ்வுகிறார். வித விதமாய் சூடிதார் போட்டு வந்து அவர் முனனால் நிற்கிறார். ஜெமினி அவரை திரும்பிப் பார்ப்பதில்லை. ஒரு நாள் ஜெமினி புடவை, பூ, புஸ்பம் என்று வசனம் பேசுவதை கேட்டுவிட்டு புடவையோடு வந்து ஜெமினிக்கு நூல் விடுகிறார். காதல் மன்னனோடு கல்யாணம், அம்மா வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். நாகேஷ் இதுதான் சாக்கு என்று விஜயநிர்மலாவை மணந்து வீட்டுக்கு கொண்டு வருகிறார். வரலக்ஷ்மியின் பாச்சா வி. நிர்மலாவிடம் பலிக்கவில்லை. நாகேஷும் வி. நிர்மலாவும் வாழைத்தண்டு போல உடம்பு அலேக் அலேக் என்று இன்னொரு டூயட் பாடுகிறார்கள். தீபாவளி வருகிறது. அம்மா ஏழை மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் காஸ்ட்லி புடவை அனுப்புகிறார். மகளோ நூல் புடவை திருப்பி அனுப்புகிறார். அம்மா முழ நீளம் வசனம் பேசிவிட்டு சரி வந்த புடவையை எதற்கு விடவேண்டும் என்று அதையும் கட்டிக் கொண்டு மகளை பார்க்க போக, எல்லாரும் ஒன்று சேர்ந்து, சுபம்!

கதை ஒன்றும் பிரமாதம் இல்லை. ஆனால் க்ளைமாக்ஸ் நன்றாக அமைந்திருந்தது. அப்பா அம்மா அனுப்பிய புடவையுடன் ஏழை மகளை பார்க்கப் போவது, மகள் நூல் புடவை அனுப்புவது, அம்மா அந்த புடவையைக் கட்டிக் கொண்டு மகளை பார்க்கப் போவது எல்லாம் நல்ல சீன்கள்.

பகவதி நன்றாக நடித்திருப்பார். எஸ். வரலட்சுமிக்கு இந்த மாதிரி ரோல் எல்லாம் ரொம்ப சுலபம். ஊதி தள்ளிவிடுகிறார். இயக்குனரின் திறமை கடைசி சீன்களில் வெளிப்படுகிறது. ஜெமினி வந்து போகிறார். சரோஜா தேவி வழக்கம் போல கொஞ்சல்ஸ். கடைசி சீன்களில் மட்டும்தான் அவருக்கு வேலை. நாகேஷுக்கும், வி. நிர்மலாவுக்கும் பெரிய வேலை இல்லை.

கண்ணதாசன் பல முறை எலந்தப்பயம் பாட்டு எழுதியதற்காக தன்னைத் தானே நொந்து கொண்டிருக்கிறார். தமிழ் மக்களின் ரசனை எவ்வளவு மட்டம் என்று எழுதி இருக்கிறார். வரிகள் எப்படியோ, பாட்டுக்கு நல்ல பீட்! ஜவஹர் சொல்வது போல எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் இந்த பாட்டுக்கு மிக அற்புதமாக பொருந்துகிறது, படம் வெற்றி பெற இந்த பாட்டும் ஒரு முக்கிய காரணம். யூட்யூப் லிங்க் கீழே.

நினைவிருக்கும் இன்னொரு பாட்டு வாழைத்தண்டு போல உடம்பு அலேக்! நாகேஷைப் பார்த்து கொத்தவரங்கா போல உடம்பு அலேக் என்று பாடுவது வெகு பொருத்தம்! ஏ.எல். ராகவனின் குரல் நாகேஷுக்கு பொருந்தும். யூட்யூப் லிங்க் கீழே.

மாறியது நெஞ்சம் என்ற நல்ல மெலடி பாட்டும் உண்டு. யூட்யூப் லிங்க் கீழே.

மெல்ல மெல்ல மெல்ல என் மேனி நடுங்குது மெல்ல பாட்டும் இந்த படத்தில்தான் போலிருக்கிறது. அதுவும் நல்ல பாட்டுதான்.

1968 இல் வந்த படம். ஜெமினி கணேசன், சரோஜா தேவி, நாகேஷ், விஜயநிர்மலா, பகவதி நடித்திருக்கிறார்கள். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கம். இசை யார்? எம்.எஸ்.வி.யா, மாமா கே.வி. மகாதேவனா? மாமாதான்.

பார்க்கலாம். கடைசி சீன்களுக்காக, பாட்டுகளுக்காக, ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி என்பதற்காக. பத்துக்கு ஆறு மார்க். C+ grade.

தொடர்புடைய பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்: பணமா பாசமா விகடன் விமர்சனம்

பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்கள்


பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ்ராஜ் பார்த்ததிலே பிடித்த பத்து திரைப்படங்கள் என்று ஒரு லிஸ்ட் விகடனில் வந்து பாஸ்டன் பாலாவால் மறுபதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த படங்களுக்கு ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.

பராசக்தி – கொஞ்சம் வயதாகிவிட்டாலும் பார்க்கலாம். இந்த படத்துக்கு விமர்சனம் இங்கே. நீதி மன்ற வசனம் இங்கே.

வீர பாண்டிய கட்டபொம்மன் – உணர்ச்சி கொந்தளிப்பும் பார்க்கக் கூடியதே. பாருங்கள்.

எங்க வீட்டுப் பிள்ளை – அருமையான மசாலா. என் விமர்சனம் இங்கே, விகடன் விமர்சனம் இங்கே.

கை கொடுத்த தெய்வம் – சின்ன வயதில் பிடித்திருந்தது. சாவித்ரி, ரங்காராவ், எம்.ஆர். ராதா, எஸ்.எஸ்.ஆர்., சிவாஜி, புஷ்பலதா எல்லாருமே நன்றாக நடித்திருப்பார்கள். சிந்து நதியின் மிசை நிலவினிலே பாட்டுக்காக மட்டுமே பார்க்கலாம். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கம்.

காதலிக்க நேரமில்லை – ஜாலியான யூத் படம். விமர்சனம், குறிப்புகள் இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே.

நீர்க்குமிழி – முதல் பாதி சிரிப்பு, இரண்டாம் பாதி அழுகை என்று ஒரு ஃபார்முலா. பார்க்கலாம்.

தில்லானா மோகனாம்பாள் – ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி. நாகேஷ் அற்புதமாக நடித்திருப்பார். என் விமர்சனம் இங்கே, விகடன் விமர்சனம் இங்கே, நாதசுரக் கலைஞர்கள் பற்றி இங்கே.

16 வயதினிலே – பார்க்கலாம். ஆனால் ஆஹா ஓஹோ என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

உதிரிப் பூக்கள் – பார்த்ததில்லை.

ஒரு தலை ராகம் – முப்பது வருஷங்களுக்கு முன்னால் நானும் தினமும் ட்ரெயின் ஏறி ஸ்கூலுக்கும் காலேஜுக்கும் போனவன். இந்த படம் அதனாலேயே பிடித்திருந்தது. மன்மதன் ரட்சிக்கனும், வாசமில்லா மலரிது மாதிரி அருமையான பாட்டுகள்.

ஐம்பதுகளின் முற்பாதி – திராவிட இயக்கமும் தமிழ் சினிமாவும்


நான் 1950-54 கால கட்டத்தில் ஒவ்வொரு வருஷமும் சிறந்த படம் என்று தேர்ந்தெடுத்தவை மந்திரி குமாரி, ஓரிரவு, பராசக்தி, திரும்பிப் பார், அந்த நாள் மற்றும் மனோகரா. இவை எல்லாமே கலைஞர்/அண்ணா எழுதியதாகவும், திராவிட இயக்க தாக்கம் உள்ளதாகவும் இருக்கின்றன.

தமிழ் படங்கள் வர ஆரம்பித்து முதல் இருபது வருஷம் திராவிட இயக்கத்தின் பாதிப்பு எதுவுமே இல்லை. பாரதிதாசன் அன்றைய தமிழ் திரைப்பட நிலை எழுதிய ஒரு கவிதை கீழே.

என் தமிழர் படமெடுக்க ஆரம்பம் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர் நடை உடை பாவனைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர் உள்ளதில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை!
ஒன்றேனும் உயர் நோக்கம் அமைந்ததுவாயில்லை!
ஒன்றேனும் உயர் நடிகர் வாய்ந்ததுவாயில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதாயில்லை!

வட நாட்டார் போன்ற உடை, வட நாட்டார் மெட்டு!
மாத்தமிழர் முன்னாள் தெலுங்கு கீர்த்தனங்கள்!
வட மொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில பிரசங்கம்!
வாய்க்கு வரா ஹிந்துஸ்தானி ஆபாச நடனம்!
அமையும் இவை அத்தனையும் கழித்துப் பார்க்குங்கால்
அத்திம்பேர் அம்மாமி எனும் தமிழ்தான் மீதம்!

கடவுளர்கள், அட்டை முடி, காகிதப் பூஞ்சோலை,
கண்ணாடி முத்து வடம் கண் கொள்ளாக் காட்சி!
பரமசிவன் அருள் புரிந்து வந்து வந்து போவார்!
பதிவிரதைக்கின்னல் வரும் பழைய படி தீரும்!
சிரமமொடு தாளமெண்ணி போட்டியிலே பாட்டு
சில பாடி மிருதங்கம் ஆவர்த்தம் செய்து
வரும் காதல்! அவ்விதமே துன்பம் வரும், போகும்!
மகரிஷிகள் கோயில் குளம் – இவைகள் கதாசாரம்
இரக்கமற்ற பட முதலாளிக்கெல்லாம் இதனால்
ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!

ஐம்பதுகளின் முற்பாதியில் தமிழ் சினிமா பாகவதர்/பி.யு.சின்னப்பா ஆகியோரின் தாக்கத்தில் இருந்து வெளி வர ஆரம்பித்திருந்தது. படம் என்றால் பாட்டு என்ற நிலை மாறி விட்டிருந்தது. ஆனால் அடுத்த கட்டம் என்ன என்பது இன்னும் தமிழ் சினிமாவை கையில் வைத்திருந்த முதலாளிகளுக்கு தெளிவாகவில்லை. கலை கலைக்காக என்று படம் எடுத்தவர்கள் மிக குறைவு. எனக்கு தெரிந்து இந்த கால கட்டத்தில் அப்படி எடுக்கப் பட்ட படங்கள் ஏழை படும் பாடு (Les Miserables நாவலை படமாக்கி இருந்தனர்), என் வீடு (சாண்டில்யன் + நாகையா), மனிதன் (டி.கே.எஸ். சகோதரர்கள்) மற்றும் அந்த நாள், அவ்வளவுதான். இவற்றில் நான் பார்த்தது அந்த நாள் ஒன்றுதான். அது உலகத் தரம் வாய்ந்த படம்.

பிறகு என்ன மாதிரி படங்கள் எடுக்கப் பட்டன? சாகசப் படங்கள், குறிப்பாக ராஜா ராணி கதைகள் – மர்ம யோகி, சர்வாதிகாரி, மருத நாட்டு இளவரசி, மலைக் கள்ளன் மாதிரி படங்கள் எடுக்கப்பட்டன, பொதுவாக நன்றாக ஓடின. திராவிட இயக்க தாக்கம் உள்ள படங்கள் – மந்திரி குமாரி, பொன்முடி, பராசக்தி, திரும்பிப் பார், பணம், போன்ற படங்கள் எடுக்கப்பட்டன. சில சமயம் ஓடின. பொதுவாக கலைஞர் வசனம் எழுதிய படங்கள் நன்றாக ஓடின. அதை விட்டால் புத்தகமாகவோ, நாடகமாகவோ வெற்றி பெற்றவை – தேவதாஸ், பராசக்தி, மலைக் கள்ளன், பொன்முடி, வேலைக்காரி, தூக்குத் தூக்கி, ரத்தக் கண்ணீர் போன்றவை படமாக்கப்பட்டன. பொதுவாக வெற்றி பெற்றன.

தயாரிப்பாளர்கள் ஓரளவு புதுமையான கதைகளை, சர்ச்சை ஏற்படுத்தக்கூடிய வசனங்களை தேடி இருக்கிறார்கள். அவர்களை பொறுத்த வரையில் புராணப் படங்களின் காலம் முடிந்துவிட்டது. பாட்டை மட்டும் வைத்து ஓட்டி விட முடியாது. சாகசக் கதைகள், மெலோட்ராமா கதைகள் ஆகியவற்றைத்தான் அவர்கள் தேடி இருக்கிறார்கள். குறிப்பாக, வெற்றி பெற்ற நாடகங்களையும், திராவிட இயக்கத்தினரையும் ஓரளவு தேடி இருக்கிறார்கள். ஏ.வி.எம். செட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், ஜூபிடர் பிக்சர்ஸ் எல்லாரும் இப்படித்தான். அதுவும் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் திராவிட இயக்க எழுத்தாளர்களை மாத சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருந்தாராம். ஜெமினி மட்டுமே விதிவிலக்கு போலிருக்கிறது.

இந்த கால கட்டத்தில் திராவிட இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர்கள் சினிமாவில் நுழைந்தனர். கலைஞர் சினிமாத் துறையில் பெரும் வெற்றி பெற்றார். திராவிட இயக்கத்துடன் கொள்கை ரீதியாக பட்டும் படாமலும் இருந்தாலும் சிவாஜி, எம்ஜிஆர் இருவரும் பெரிய ஹீரோக்களாக உருவெடுத்துக் கொண்டிருந்தார்கள். என்.எஸ்.கே., கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர்.ராதா ஆகியோரும் வளர்ந்து கொண்டோ தேய்ந்து கொண்டோ இருந்தார்கள். அண்ணா, பாரதிதாசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, கண்ணதாசன் போன்றவர்களும் கதை, வசனம், பாடல்கள் என்று பல விதங்களில் திரைப்படங்களுக்கு பணி ஆற்றினார்கள். கதை, வசனம், பாடல்கள் எழுதியவர்கள் எல்லாரும் அங்கங்கே நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயக்க கருத்துகளை வசனங்களிலும், கதைகளிலும் புகுத்தினார்கள்.

1949-இல் வந்த வேலைக்காரிதான் முதல் திராவிட இயக்கத் தாக்கம் உள்ள படம் என்று நினைக்கிறேன். 1950-இல் பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் பொன்முடி என்ற பேரில் மாடர்ன் தியெட்டர்சால் படமாக்கப்பட்டது. கலைஞர் மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி (மாடர்ன் தியேட்டர்ஸ்) ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதினர். 1951-இல் அண்ணாவின் ஓரிரவு (ஏவிஎம்) வெளிவந்தது. கலைஞர் தேவகி என்ற படத்துக்கு கதை வசனம் எழுதினர். ஏ.வி.பி. ஆசைத்தம்பி சர்வாதிகாரி படத்துக்கு வசனம் எழுதினார். 1952-இல் பராசக்தி (ஏவிஎம்) வெளிவந்தது. என்.எஸ்.கே. பணம் படத்தை எடுத்தார். (போட்ட பணத்தை எடுத்தாரா என்று தெரியவில்லை). பாரதிதாசன் வசனம், பாட்டுகளை வைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் வளையாபதி படத்தை எடுத்தது. 1953-இல் திரும்பிப் பார் (மாடர்ன் தியேட்டர்ஸ்). கலைஞர், எம்ஜிஆர், பி.எஸ்.வீரப்பா சேர்ந்து தயாரித்த நாம் இந்த வருஷம்தான் வந்தது. 1954-இல் ஏறக்குறைய பிரசார படமான ரத்தக் கண்ணீர், மனோகரா (ஜூபிடர்), மலைக்கள்ளன் (பக்ஷி ராஜா) கலைஞர் கை வண்ணத்தில். சுகம் எங்கே (மாடர்ன் தியேட்டர்ஸ்) வசனம் கலைஞரா, கண்ணதாசனா என்று குழப்பமாக இருக்கிறது. அண்ணா எழுதி, கே.ஆர். ராமசாமி, எஸ்.எஸ்.ஆர். நடித்த சொர்க்க வாசல், கலைஞர் கதை வசனம் எழுதிய அம்மையப்பன், கண்ணதாசன் கதை வசனம் பாட்டு எழுதிய இல்லற ஜோதி இந்த வருஷம்தான் திரைக்கு வந்தன. இதற்கு பிறகு வந்தவற்றில் ரங்கோன் ராதா (1956) ஒன்றுதான் குறிப்பிட வேண்டிய திராவிட இயக்கப் படம் என்பது என் கருத்து.

மேலோட்டமாக பார்த்தால் இந்த கால கட்டத்தில் திராவிட இயக்கம் ஒரு புத்துணர்ச்சியை கொண்டு வந்தது போலிருக்கும். சமூக பிரக்ஞை உள்ள கதைகள் படமாக்கப்பட்டனவோ என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் சிலர் பணம் பார்த்தனர், அவ்வளவுதான். கலைஞர் குறிப்பிடத்த் தக்க வெற்றி அடைந்தார். வெகு விரைவில் நடிகர்கள் – குறிப்பாக சிவாஜி, எம்ஜிஆர் – ஆதிக்கத்துக்கு திரைப்படங்கள் சென்றன. எழுத்தாளார்களின் தேவை மங்கிவிட்டது. அண்ணா கூட பெரும் அளவில் வெற்றி பெறவில்லை. அவரது கதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்தன – ரங்கோன் ராதா, தாய் மகளுக்கு கட்டிய தாலி, நல்லவன் வாழ்வான் – என்று. சினிமா உலகில் பெரும் பாதிப்பு இல்லை. முரசொலி மாறன் ஐம்பதுகளின் பிற்பகுதியில் சினிமா உலகில் நுழைந்து வசனம் எழுதினார், படங்களை திறமையாக தயாரித்தார். ஆனால் புகழ் பெறவில்லை. ஆசைத்தம்பி போன்றவர்கள் ஆளையே காணவில்லை. கொள்கைப் பிடிப்பு உள்ளவர் என்று சொல்லக் கூடிய எஸ்.எஸ்.ஆர். முதல் வரிசைப் படங்களில் இரண்டாவது ஹீரோ, இரண்டாம் வரிசைப் படங்களில் ஹீரோ என்றுதான் வளர முடிந்தது. கே.ஆர்.ராமசாமி, என்.எஸ்.கே. ஆகியோருக்கு தேய்முகம். கண்ணதாசன் பாட்டு எழுதி பெரும் வெற்றி பெற்றார், ஆனால் அவர் எழுதிய கதைகள் கொஞ்சமே – மஹாதேவி, சிவகங்கை சீமை, மாலையிட்ட மங்கை, கவலை இல்லாத மனிதன், கறுப்புப் பணம் மாதிரி. கலைஞருக்கு கூட இதற்கு பிறகு தேய்முகம்தான் – மனோகராவுக்கு பிறகு அவர் எழுதிய வசனங்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை, அவரது வசனங்களுக்காக இதற்கு பிறகு யாரும் படம் பார்ப்பதில்லை.

திராவிட இயக்கத் தாக்கம் ஒரு short lived phase என்றுதான் சொல்ல வேண்டும். ஐம்பதுகளின் பிற்பாதியில் தொடங்கிய எம்ஜிஆர்-சிவாஜி-ஜெமினி ஆதிக்கம் ஒரு பதினைந்து இருபது வருஷங்கள் நீடித்தது. இந்த short lived phase கதைக்கும், இயக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக மாறி இருந்தால் தமிழ் சினிமா நல்ல முறையில் மாறி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

பராசக்தி


km_parashakthi
கலைஞர் சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டிருந்த நேரம். சிறந்த தயாரிப்பாளரான ஏ.வி.எம். செட்டியார் கலைஞரின் வசனங்களைத்தான் இந்த படத்தின் துருப்பு சீட்டாக நினைத்திருப்பார். அவரே எதிர்பார்க்காத திருப்பம் சிவாஜி. சூப்பர்ஸ்டார் கலைஞரை விட இந்த படத்தில் தெரிபவர் சிவாஜிதான். இத்தனைக்கும் அவருக்கு கடுமையான போட்டி – எஸ்.எஸ்.ஆர், ஸஹஸ்ரனாமம் ஆகியவர்கள் நடிப்பில் இளைத்தவர்கள் இல்லை. சிவாஜி காட்டிய வேகம், உணர்ச்சிக் கொந்தளிப்பு, குரல் மாடுலேஷன், சிம்மக் குரல், நடனம் (ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே பாட்டை பாருங்கள்) முதல் படத்திலேயே சென்சுரி!

இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று வசனம் பேசி பார்க்காத தமிழ் நடிகர் இல்லை. ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் என்றும் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்றும் பேசுவதை மறக்க முடியாது. அனல் பறக்கும் வசனங்கள், அந்த வசனங்களையும் விஞ்சிய நடிப்பு.

செட்டியாரின் தயக்கத்தை மீறி சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்திய பெருமாளுக்கு தமிழ் சினிமா உலகம் கடமைப்பட்டிருக்கிறது.

நினைவில் நிற்கும் சில வசனங்கள்.
கல்யாணி: இட்லிக் கடையா?
பக்கத்து வீட்டு அக்கா: தமிழ்நாட்டில் தாலி அறுத்தவர்களுக்கு அதுதானே தாசில் உத்யோகம்!

குணசேகரன்: மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கான்
போலீஸ்காரன்: ஏய்
குணசேகரன்: உங்களை சொல்லலைங்க. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன். சென்னை புனிதமான நகரம். இங்கே மனித மிருகம்
போலீஸ்காரன்: சரிதான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்.

பார்க்கில் தூங்கும் குணசேகரனை எழுப்பும் ஆள்: என்னடா? முழிக்கிறே?
குணசேகரன்: பின்ன, தூங்கினவன எழுப்பினா, முழிக்காம என்ன செய்வான்?

பாரதிதாசனின் வசனம் என்று நினைக்கிறேன் – ஓடப்பர் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ!

1952-இல் வந்த படம். ஏ.வி.எம். தயாரிப்பு. பெருமாள் ஒரு பாகஸ்தர். சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., பண்டரிபாய் ஆகியோருக்கு முதல் படம். எஸ்.வி. ஸஹஸ்ரனாமம் ஒரு முக்கிய ரோலில். இதில் அவருக்கு தங்கையாக வருபவர் பேர் மறந்துவிட்டது.ஸ்ரீரஞ்சனி (நன்றி கிருஷ்ணமூர்த்தி!) பின்னாளில் இல்லற ஜோதி படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தார். பிறகு ரத்தக் கண்ணீரில் எம்.ஆர். ராதாவுக்கு ஜோடியாகவும், அறுபதுகளில் நான் படத்தில் முத்துராமனின் வளர்ப்புத் தாயாகவும், மனோகரின் நிஜத் தாயாகவும் நடித்தாராம். (நன்றி, நல்லதந்தி!) வி.கே. ராமசாமி உண்டோ? இசை சுதர்சனம். இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு. அவர்கள் ஏ.வி.எம்முக்குள் நுழைந்தது இந்த படம் மூலமாகத்தான் போலிருக்கிறது. செட்டியார் சொல்வதை இங்கே பாருங்கள்.

கதை தெரிந்ததுதான். ரங்கூனில் மூன்று அண்ணன்கள். கல்யாணி தமிழ் நாட்டில். கல்யாணியின் கல்யாணத்தை பார்க்க ஒரு அண்ணன்தான் வர முடியும் நிலை. சென்னையில் வந்து இறங்கும் சிவாஜி பணத்தை ஒரு நாட்டியக்காரியிடம் இழக்கிறார். கல்யாணியோ கணவனை இழந்து இட்லிக் கடை வைத்து பிழைக்கிறாள். கல்யாணியை கண்டுபிடிக்கும்போது அவள் உன் மாமன் உன்னை சீராட்ட பெரும் பணத்தோடு வருவான் என்று பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாள். பணம் எல்லாம் போய் ஏழை ஆகிவிட்டேன் என்று சொல்ல விரும்பாத சிவாஜி தான்தான் அண்ணன் என்று சொல்லாமல் கிறுக்காக நடித்து அதே நேரத்தில் கல்யாணிக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறார். கல்யாணியை ஒரு பூசாரி படுக்கைக்கு கூப்பிட, கல்யாணி வெறுத்து போய் தன் குழந்தையை காப்பாற்ற முடியாததால் அதை அற்றில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயல, போலீசில் பிடிபடுகிறார். பூசாரியை தாக்கும் சிவாஜியும் போலீசில் பிடிபடுகிறார். பிறகு புகழ் பெற்ற நீதி மன்ற வசனங்கள். நடுவில் அவருக்கு பண்டரிபாயிடம் இட்லி திருட்டு, மற்றும் காதல். பண்டரிபாய்க்கு தன்னிடமிருந்து இட்லி திருடிக் கொண்டு போன அழுக்கான வாலிபன்தான் காதலிக்க கிடைத்தானா என்றெல்லாம் கேட்கக் கூடாது. ரங்கூனிலிருந்து தப்பி வரும் சின்ன அண்ணன் எஸ்.எஸ்.ஆர். காலை இழந்து பிச்சைக்காரனாகி பிச்சைக்காரர்களை ஒன்று சேர்த்து அவர்கள் நல்வாழ்வுக்கு போராடுகிறார். பெரிய அண்ணன் சஹஸ்ரனாமம்தான் கேசை விசாரிக்கும் ஜட்ஜ். பிறகு ஆற்றில் வீசப்பட்ட குழந்தை காப்பாற்றப்பட்டு, எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்!

சிவாஜி ஒரு புயல்தான். அந்த மாதிரி வேகம் உள்ள நடிகரை தமிழ் சினிமா உலகம் அது வரை பார்த்ததில்லை. இதற்கு முன் எனக்கு தெரிந்து ஓரளவாவது வேகம் உள்ள பாத்திரங்கள் அபூர்வம்தான் – சந்திரலேகா ரஞ்சன், வேலைக்காரி கே.ஆர். ராமசாமி, மந்திரி குமாரி எஸ்.ஏ. நடராஜன் மாதிரி. ஹீரோக்கள் எல்லாம் வேறு மாதிரி – ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் இரண்டு நிமிஷம் gap விடும் பாகவதர், மென்மையாக பேசும் டி.ஆர். மகாலிங்கம், எம்.கே. ராதா, எம்ஜிஆர் மாதிரி கத்தி சண்டை வீரர்கள், இவர்கள் நடுவில் ஸ்டைலாக கலைந்த தலையோடும், கவர்ச்சியான புன்னகையோடும், சிம்மக் குரலோடும் அவர் நுழைந்து நேராக டாப்புக்கு போய்விட்டார். அத்துடன் திராவிட இயக்கப் படங்களுக்கு, உணர்ச்சிகரமான வசனம் பேசுவதற்கு, intense நடிப்புக்கு அவர்தான் சரி என்றாகிவிட்டது. டி.ஆர். மகாலிங்கம், கே.ஆர். ராமசாமியின் குறுகிய திரை உலக வாழ்க்கை சடாலென்று இறங்கி விட்டது. என், நன்றாக நடித்த எஸ்.எஸ்.ஆர். சஹஸ்ரனாமம் ஆகியோரையே இந்த படத்தில் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை.

பண்டரிபாய் சின்ன பெண்ணாய், சொப்பு மாதிரி இருப்பார்.

இன்று இந்த படம் முதல் முறையாக பார்ப்பவர்களுக்கு அதே தாக்கம் ஏற்படுமா எனபது எனக்கு சந்தேகம்தான். ஐம்பதுகளில் அது யதார்த்தமான படம் என்றே கருதப்பட்டிருக்கும். இப்போது நாடகத்தன்மை உள்ளது, melodrama என்று சொல்லலாம். melodrama-வின் ஒரு உச்சம் என்று நான் இந்த படத்தை கருதுகிறேன்.

மிகவும் charming, quaint பாட்டுக்கள். சுதர்சனம் கலக்கிவிட்டார்.


அந்த “போறவரே” என்ற வார்த்தையில் இருக்கும் கொஞ்சல் அபாரம். எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரல் பாப்பா மாதிரி இருக்கும் பண்டரிபாய்க்கு நன்றாக பொருந்துகிறது.

ஓ ரசிக்கும் சீமானே வா ஒரு பிரமாதமான பாட்டு. பாடியது, எழுதியது யார்? எழுதியது கலைஞர்தானாம். விவரம் சொன்ன தாசுக்கு நன்றி!

சி.எஸ். ஜெயராமன் பாடும் “தேசம் ஞானம் கல்வி” எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் ஒன்று. உடுமலை நாராயண கவி அருமையாக எழுதி இருப்பார்.
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே
காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே
கட்டி அழும்போதும் தாண்டவக் கோனே – பணப்
பெட்டியிலே கண் வையடா தாண்டவக் கோனே
நல்ல வரிகள்!

அப்புறம் “கா கா கா” – அதற்கு காக்காய் கத்துவதை போலவே பின்னணியில் வயலின் சூப்பர். கலைஞர் எழுதிய பாட்டோ? சி.எஸ். ஜெயராமன் பாடியது.

“நெஞ்சு பொறுக்குதில்லையே” பாரதியார் பாட்டு. சி.எஸ். ஜெயராமன். சுமார்தான்.

இதை தவிர “என் வாழ்விலே ஒளி ஏற்றும்”, “பூ மாலையை புழுதியிலே”, “பொருளே இல்லார்க்கு”, “திராவிட நாடு வாழ்கவே”, “கொஞ்சும் மொழி சொல்லும்”, “பேசியது நானில்லை” என்ற பாட்டுகளும் இருக்கின்றனவாம். நினைவில்லை.

பாட்டுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே கேட்கலாம்.

பிற்காலத்தில் விவேக் அந்த நீதி மன்ற வசனங்களை மாற்றி பேசும் காட்சியும் புகழ் பெற்றது. கீழே அது.

திராவிட இயக்கத்தின் தலை சிறந்த பங்களிப்பு, கலைஞரின் வசனங்கள், சிவாஜி, quaint பாட்டுக்கள் ஆகியவற்றுக்காக இந்த படத்தை சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B grade.

சிறந்த வில்லன் நடிகர் யார்?


நம்பியார்


பல நாட்களாக பக்ஸ் கலக்கிக் கொண்டிருக்கிறான். இன்றைக்கு நானும் கொஞ்சம் முயற்சி செய்கிறேன்.

ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவரைப் பற்றி நம் உண்மையான கருத்தை மறைப்பது பொய். எனக்கு நம்பியார் என்ற நடிகரை பற்றி அவ்வளவு நல்ல அபிப்ராயம் இல்லை. எல்லா படங்களிலும் ஏறக்குறைய ஒரே நடிப்புதான். கையை பிசைந்து கொண்டு, ஜம்புவையும் மருதுவையும் (அது ஏன் அடியாட்களுக்கு சுப்பிரமணி, ராமசாமி என்றெல்லாம் பேர் வைக்க மாட்டார்களா?) யாரையாவது அடிக்க சொல்வது எல்லாம் ஒரு வேஸ்ட். திறமையான வில்லன் நடிப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது. ரகுவரன், பிரகாஷ் ராஜ் போன்றவர்களுக்கு எந்த விதத்திலும் ஈடாகாது. அந்த காலத்து நடிகர்களான எம்.ஆர். ராதா, பி.எஸ். வீரப்பா போன்றவர்களை இவரை விட பார்க்கலாம். என்ன, மனோகரை விட பெட்டர். எனக்கு அசோகனை பார்த்தால் சிரிப்பு வரும், இவரை பார்த்தல் அதுவும் வருவதில்லை. பக்ஸ் சொன்ன உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் கூட, “அந்த பெட்டியை கொடுத்துடு” வசனத்தை விட அசோகன் உருகி உருகி “முருகன், நீங்க பெரிய மேதை முருகன்” என்று சொல்வதுதான் நினைத்தாலே சிரிப்பு வருகிறது.

ஆனால் மக்கள் மத்தியில் வில்லன் என்றால் நம்பியார்தான். எம்ஜியார் நம்பியார் காம்பினேஷன் மாதிரி வராது என்று சொல்வார்கள். எம்ஜிஆர் நல்ல நடிகர் இல்லாவிட்டாலும் எல்லாருக்கும் பிடித்தவர். அந்த மாதிரிதான் நம்பியாரும். எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படமான ஆயிரத்தில் ஒருவனில் அவரும் நன்றாக செய்திருந்தார். எங்க வீட்டுப் பிள்ளையில் எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை, ஆனால் பிரபலமான ரோல்.

நம்பியாரின் பொற்காலம் என்றால் அது ஐம்பதுகள்தான். அவரும் அப்போது நன்றாக வசனம் பேசக்கூடிய ஒரு நடிகர். வேலைக்காரி, சர்வாதிகாரி, மந்திரி குமாரி, உத்தம புத்திரன் போன்ற படங்களில் நன்றாக செய்தார். (மந்திரி குமாரியில் அவரை கள்ள பார்ட் நடராஜன் மிஞ்சிவிட்டார்.) அவரும் எம்ஜிஆரும் ராஜா ராணி படங்களில் கத்தி சண்டை போடுவது சாதாரணமாக நன்றாக இருக்கும். அரச கட்டளையில் அவரும் எம்ஜிஆரும் ஒரு அசத்தலான சண்டை போடுவார்கள். ஆயிரத்தில் ஒருவனில் இரண்டு பேரும் கலக்குவார்கள்.

நினைவில் நிற்கும் இரண்டு விஷயங்கள்:
1. எம்ஜிஆரிடம் ஒரு பாட்டி “உனக்குத்தான் ராசா எங்க வோட்டு, ஆனா இந்த நம்பியார்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு” என்று சொன்னாராம்.
2. எதோ ஒரு படத்தில் வடிவேலு அவரிடம் “எம்ஜிஆர் போன பிறகு உனக்கு ரொம்ப துளுத்து போச்சு!” என்பார்.

நெஞ்சம் மறப்பதில்லை குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம். அதில் அவர் வரும் காட்சிகள், குறிப்பாக கடைசியில் அவர் புதைகுழியில் மூழ்கும் காட்சி உறைய வைக்கும். அந்த பெருமை ஸ்ரீதருக்கும் வின்சென்டுக்கும் உரியது என்றாலும், நம்பியாரை நினைவு கூரக்கூடிய படங்களில் அதுவும் ஒன்று.

அவர் நடித்து நான் பார்க்க விரும்பும் படம் திகம்பர சாமியார். பிரிண்ட் இருக்குமா என்று தெரியவில்லை.

எனக்கு தெரிந்து மக்களை பெற்ற மகராசியில் அவருக்கு ஒரு டூயட் உண்டு – “ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா” வேறு பாட்டு ஏதாவது உண்டா தெரியவில்லை.

கிட்டத்தட்ட தொண்ணூறு வயது வரை வாழ்ந்திருக்கிறார். அவர் பல மாற்றங்களை பார்த்திருப்பார். சொந்த வாழ்க்கையில் புனிதர் என்று சொல்வார்கள். சினிமா உலகத்தில், அதுவும் நாற்பதுகளிலிருந்து நடித்து வரும் ஒருவருக்கு இப்படிப்பட்ட இமேஜ் இருப்பது அதிசயம்தான். நிறைந்த வாழ்வு வாழ்ந்து மறைந்த அவருக்கு என் அஞ்சலி.

இந்த வாரம் (Week of Sep 15)


முன் ஒரு போஸ்டில் சொன்ன மாதிரி இரண்டு மூன்று நாட்களாக படங்களை பார்க்கமுடியவில்லை. மீண்டும் இன்று துவக்கலாம் என்றிருக்கிறேன், டச்வுட்.

மிஸ் செய்த படங்கள் கீழ்வானம் சிவக்கும், புனர்ஜன்மம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம். இந்த சன் டிவி படங்களை உலகத்தில் ஆயிரம் பேர் பார்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் ஒரு பத்து பேராவது இந்த ப்ளாகை படிக்கமாட்டீர்களா? அதில் ஒருத்தராவது மிஸ் ஆன படங்களை பற்றி எழுத முன்வரக்கூடாதா? (சமீபத்தில் சுஜாதாவின் கணேஷ்(வசந்த்) கதை ஒன்றை – ஒரு விபத்தின் அனாடமி – படித்த பாதிப்பால் இப்படி ஸ்டாடிஸ்டிக்ஸாய் பொழிகிறது)

இந்த வாரப் படங்கள்:

திங்கள்: புனர்ஜன்மம். நான் சின்ன வயதில் பார்த்திருக்கலாம். ஒன்றும் நினைவில்லை. ஹிந்தியில் திலிப் குமார் நடித்த டாக் என்ற படத்தின் மறுபதிப்பு என்று நினைக்கிறேன். டாக் என்றால் கறை என்று அர்த்தம். சிவாஜி, பத்மினி நடித்தது. ஸ்ரீதர் இயக்கியதா? இசை அமைப்பாளர் யார்? ஹிந்தியில் “ஏ மேரே தில் கஹி அவுர் சல்” என்ற அருமையான பாட்டு ஒன்று உண்டு. தமிழில் இந்த பாட்டும் மறு பதிவு செய்யப்பட்டதா என்று பார்த்தவர்கள், தெரிந்தவர்கள் சொல்லுங்கள். எனக்கு ட்ரெய்லர் பார்த்து நினைவு வந்த பாட்டு “உள்ளங்கள் ஒன்றாகி“.

செவ்வாய்: மங்கையர் உள்ளம் மங்காத செல்வம். மணாளனே மங்கையின் பாக்யம் என்ற படத்தை பார்க்க நேர்ந்தது எனக்கு ஒரு அருமையான அனுபவம். பெயரை வைத்தும், சிடி கவரை வைத்தும் அதே டீம்தான் இந்த படத்தையும் எடுத்திருக்க வேண்டும் என்று தெரிந்து நாஸ்டால்ஜியாவில் சில மாதங்களுக்கு முன் இந்த படத்தை எடுத்துப் பார்த்தேன். எனக்கு வீட்டில் அடி விழாதது ஒன்றுதான் குறை. படம் பயங்கர போர். ஒரு பாட்டு கூட நினைவில் வைத்துக்கொள்ளும்படி இல்லை. இசை ஆதி நாராயண ராவாகத்தான் இருக்க வேண்டும். அஞ்சலி தேவி, ஜெமினி, எம்.ஆர். ராதா, ஜெயந்தி, நாகையா, மற்றும் பலர் நடித்தது.

புதன்: நவக்ரகம். பாலச்சந்தரின் அவ்வளவாக வெற்றி அடையாத படங்களின் ஒன்று. எதிர் நீச்சல் பாணியில் பெரிய கூட்டத்தை வைத்து எடுக்கப்பட்ட படம். எனக்கு தெரிந்த பாட்டு “உன்னை தொட்ட காற்று வந்து என்னை தொட்டது” என்பதுதான். அருமையான பாட்டு. சில சமயம் சன் டிவியில் இரவுகளில் போடுவார்கள், போட்டால் ராத்திரி 2 மணியானாலும் பார்த்துவிட்டுத்தான் படுப்பேன்.

வியாழன்: மறக்க முடியுமா புகழ் பெற்ற “காகித ஓடம் கடலலை மீது” பாட்டு இதில்தான். எஸ்.எஸ்.ஆர்., ஜெயலலிதா நடித்தது. கலைஞரின் சொந்தப் படம் என்று நினைக்கிறேன்

பாக்தாத் திருடன்: எம்ஜிஆர் வைஜயந்திமாலாவுடன் நடித்த ஒரே படம். நான் என் வாழ்க்கையில் பார்த்த மூன்றாவது படம். (முதல் படம் தங்க சுரங்கம், இரண்டாவது நாங்கள் இருந்த எண்டத்தூரில் டென்ட் கொட்டாய் திறந்து முதல் முதலாக போட்ட திருவருட்செல்வர்). வீட்டில் சண்டை போட்டு எட்டு வயதில் தனியாக பார்த்த முதல் படம். அப்போதெல்லாம் எனக்கு சண்டைக் காட்சிகள், சோகக் காட்சிகள் கண்டால் ஒரே பயம். சேருக்கு அடியில் ஒளிந்து கொள்வேன். அதுவும் சண்டை என்றால் யாராவது என்னை அடித்துவிடுவார்களோ என்று பயம். இந்த பயம் என் அப்பாவின் நண்பர்கள் நிறைய பேருக்கு தெரியும். டென்ட் கோட்டையில் வழக்கம் போல பெஞ்ச்சுக்கு அடியில் நான் ஒளியும்போது வேறு எங்கிருந்தோ பார்த்த கிட்டு மாமா இந்த மாதிரி ஒளிவது உலகத்தில் இவன்தானே என்று என் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு எனக்கு தைரியம் கொடுத்தார். அதிலிருந்துதான் நான் எம்ஜிஆர் ரசிகன் ஆனேன். நாஸ்டால்ஜியாவுக்காக இந்த படம் பார்க்கவேண்டும், ஆனால் அன்று இரவு வெளியூருக்கு புறப்படுகிறோம், பார்க்க முடியாது. என்ன கொடுமை சார் இது!

காஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)


MGR in "Oru kodiyil iru malarkal" song1963இல் வந்த படம். கலைஞர் கருணாநிதியின் கதை வசனம். அவரும் முரசொலி மாறனும் படத்தின் இயக்குனர் காசிலிங்கமும் தயாரிப்பாளர்கள். கே.வி. மகாதேவன் இசை. எம்ஜியாரைத் தவிர, பானுமதி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர். ராதா, விஜயகுமாரி, அசோகன், டி.ஏ. மதுரம், எஸ். ராமாராவ், மனோரமா, ஜி.சகுந்தலா நடித்திருக்கிறர்கள். முதலில் ஒரு காட்சியில் வருவது பிற்காலத்தில் பிரபலமான வில்லன் நடிகர் செந்தாமரை போல் இருக்கிறது. பிற்காலத்தில் புகழ் பெற்ற இயக்குனர் மகேந்திரன் இந்த படத்தில் எம்ஜிஆரின் சிபாரிசில் உதவி இயக்குனராக பணி புரிந்தாராம். நான் டைட்டில்களில் அவர் பெயரை கவனிக்கத் தவறிவிட்டேன்.

படத்தின் பிரிண்ட் பழையதாகிவிட்டாலும் கோட்டை, அரச சபை செட்கள் நன்றாக இருக்கிறது. எம்ஜியார் நரசிம்ம வர்ம பல்லவனாகவும், எஸ்.எஸ்.ஆர். தளபதி பரஞ்சோதியாகவும், அசோகன் புலிகேசியாகவும் வருகிறரகள். காஞ்சித் தலைவன் என்பது அறிஞர் அண்ணாவை குறிக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். “காஞ்சித் தலைவன் கை காட்டிய வழியில் கரை ஏறியவரகள் அனேகம்” போன்ற பல வசனங்களை அங்கங்கே கேட்கலாம். எம்ஜியார் அரச உடையில் வரும்போது நல்ல அழகாக இருக்கிறார். அசோகன் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார்.

இந்த படம் வந்த போது கலைஞரும் எஸ்.எஸ்.ஆரும் எம்.எல்.ஏக்களாகவும், எம்ஜியார் எம்.எல்.சியாகவும் இருந்திருக்கிறார்கள்.

கர்நாடகாவில் இந்த படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டதாம். அப்பவே ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது.

எம்.ஆர். ராதா பாட்டு பாடும் காட்சிகள் அபூர்வம். இதில் அவருக்கு ஒரு பாட்டு காட்சி – “உலகம் சுத்துது எதனாலே” என்ற ஒரு பாட்டு. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பாட்டு இல்லை, ஆனாலும் எனக்கு 30 வருஷங்களுக்கு பின்னும் எனக்கு ஏனோ இன்னும் ஞாபகம் இருக்கிறது.

முதலில் ஒரு பாட்டில் – ஆலங்குடி சோமு எழுதிய “அவனி எல்லாம் புகழ் மணக்கும்” – மகாபலிபுரத்தின் பகீரதன் தவம் க்ளோஸ் அப்பில் காட்டினார்கள். எப்போதோ சின்ன வய்தில் டூர் போனபோது பார்த்தது. அப்போது இதையெல்லாம் பார்ப்பதைவிட நண்பர்களுடன் ஓடி விளையாடுவதில்தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. மீண்டும் ஒரு முறை போய் பார்க்க வேண்டும்.

“கண் கவரும் சிலையே”, “ஒரு கொடியில் இரு மலர்கள்”, “வானத்தில் வருவது ஒரு நிலவு” போன்றவை மெதுவான இனிமையான மெலடிகள். கே.வி. மகாதேவன் எப்போதுமே பாட்டுக்குத்தான் மெட்டமைப்பாராம். அப்படி செய்தால் கவிதைகளின் தரம் அதிகப்படுகிறது. இந்தக் கவிதைகளும் நன்றாக இருக்கின்றன. எம்ஜிஆரும் விஜயகுமாரியும் இணைந்து நடிக்கும் ஒரே பாட்டு “ஒரு கொடியில்”தானாம். :-)) இவற்றை இங்கே கேட்கலாம்.

“மயங்காத மனம் யாவும் மயங்கும்” என்ற பானுமதி சொந்தக் குரலில் பாடும் பாட்டும் இனிமையாக இருக்கிறது. சமீபத்தில் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் பானுமதி நடனம் ஆடுவதைப் போல் யாரோ இமிடேட் செய்தார்கள். சும்மா நின்ற இடத்திலேயே முகபாவம் மட்டும் மாற்றுவார், அங்கே இங்கே ஸ்டைலாக நடப்பார், அவ்வளவுதான். இந்தப் பாட்டில் பானுமதி முக்கால்வாசி அப்படித்தான் நடனம் ஆடுகிறார். இங்கே கேட்கலாம்.

“வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே” என்ற பாட்டும் சுமாராக இருக்கிறது. கலைஞர் எழுதியது. முதலில் “வெல்க காஞ்சி வெல்க காஞ்சி” என்று எழுதப்பட்டு பிறகு சென்ஸார் ஆட்சேபணையால் மாற்றி எழுதப்பட்டதாம்.

இந்தப் படத்தில் ஆலங்குடி சோமு நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறர் – 9 பாட்டுகளில் 7 அவர் எழுதியதுதான். “கண் கவரும் சிலையே”, “ஒரு கொடியில்”, “வானத்தில் வருவது”, “மயங்காத மனம் யாவும்” அவர் எழுதியவைதான்.

மற்ற இரண்டு பாட்டுக்களும் கடி – “உயிரைத் தருகிறேன்”, “மக்கள் ஒரு தவறு செய்தால்” என்ற பாட்டுக்கள். இவையும் சோமு எழுதியவையே.

ஒன்பதில் 4 பாட்டு தேறும்.

கலைஞரின் வசனம் எழுதும் திறனை ஆகா ஓகோ என்பார்கள். இதில் எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை.

நரசிம்ம வர்மன் (எம்ஜியார்), பரஞ்சோதி (எஸ்.எஸ்.ஆர்.) இலங்கை மன்னன் (யாரோ) மூவரும் காஞ்சியில் ஒரு வலிவான குழு. பரஞ்சோதிக்கும் பல்லவரின் தங்கை விஜயகுமாரிக்கும் லவ். அவர்களை சூழ்ச்சியால் தோற்கடிக்க பானுமதியும் எம்.ஆர். ராதாவும் புலிகேசியால் (அசோகன்) அனுப்பப்படுகிறார்கள். ராதா இலஙகை மன்னனின் மனைவியை வைத்து மூவர் குழுவை பிரிக்க செய்யும் முயற்சி ஆரம்ப வெற்றிக்குப் பிறகு தோல்வி அடைகிறது. பானுமதி உண்மையிலேயே பல்லவனை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் பானுமதி எம்ஜியார் காதலை பரஞ்சோதி விரும்பவில்லை. அதனால் விஜயகுமாரியையும் தளபதி பதவியையும் விட்டுவிடுகிறார். சமயம் பார்த்து புலிகேசி படை எடுக்கிறார். பல கோட்டைகளை வெல்கிறார். எம்ஜியாரை கொல்ல செய்த சதியில் விஜயகுமாரி மாட்டிக்கொண்டு இறந்துவிடுகிறார். அவர் அப்படி இறந்துவிடுவார் என்பதை அவரே 5 நிமிஷம் முன்னால் “உயிரைத் தருகிறேன்” என்று ஒரு பாட்டு பாடி நமக்கு சொல்லிவிடுகிறார். அவர் இறந்ததும் எம்ஜியார் வழக்கம் போல சுவரில் முகத்தை புதைத்துக்கொண்டு அழுகிறார். மனம் திருந்திய பரஞ்சோதி திரும்பி வந்து எல்லாரும் சேர்ந்து புலிகேசியை தோற்கடித்து சுபம்!

எம்ஜியார் படத்தில் மற்றவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நான் பார்த்ததில்லை. இதில் எஸ்.எஸ்.ஆர். இல்லாததால் தோல்வி என்று காட்டபடுகிறது. எம்ஜியாருக்கு ஒரு மல்யுத்தம்தான் பெரிய சண்டை.

படம் எம்ஜியார் ரசிகர்களுக்காக. புதிய படமாக இருக்கும்போது கொஞ்சம் ரிச்சாக இருந்திருக்கும். இப்போது பாட்டுக்கள்தான் மிஞ்சி இருக்கும் பலம்.