நாம் இருவர் – விகடன் விமர்சனம்


விகடனில் ஏவி.எம்மின் நாம் இருவர் படம் வந்தபோது எழுதப்பட்ட விமர்சனத்திலிருந்து ஒரு பகுதி… நன்றி, விகடன்!

ஆடல் பாடல் நல்ல பொழுதுபோக்கு

படங்களைத் தயாரித்து விடலாம். நூற்றுக்கணக்கில் கூடத் தயாரித்துவிடலாம். ஆனால், படிக்காத பாமரர்கள் மட்டுமின்றி, படித்த அறிவாளிகளும் கண்டு வியக்கும் முறையில் கலை நுணுக்கங்கள் நிறைந்த நல்ல படங்களாகத் தயாரிப்பது சிரமம். இந்தச் சிரமமான காரியத்தில் ஏவி.எம். புரொடக்ஷன்ஸார் பாராட்டக் கூடிய அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். அதற்கு ஓர் அத்தாட்சியாக இருக்கிறது ‘நாம் இருவர்’.

எடுத்ததுமே நம்மைக் கவர்ந்து விடுகிறது, நடிகர்களின் வேஷப் பொருத்தம். அந்தந்த பாத்திரங்களுக்கு மிகவும் ஏற்ற நடிகர்களாகவே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அநேக படங்களில் காண்பிக்கப்படுவது போல் ’40 வயது வாலிபனும்’, ’35 வயதுப் பருவ மங்கையும்’ காதல் புரியவில்லை இப்படத்தில். உண்மையிலேயே இளம் வயதுள்ள டி.ஆர். மகாலிங்கமும், டி.ஏ. ஜெயலட்சுமியும் காதலர்களாகக் காட்சியளிக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது நமது உள்ளம் அப்படியே அவர்களோடு ஒன்றுபட்டு விடுகிறது. மீசை நரைத்தும் ஆசை நரைக்காத தந்தையின் பாகத்தில் கே. சாரங்கபாணி நடிக்கிறார். பல சமூகப் படங்களில் நடித்துள்ள பி.ஆர்.பந்துலு உத்தம அண்ணனாக வருகிறார். அசட்டு ஞானோதயத்தின் பாகத்தை ஹாஸ்ய நடிகர் டி.ஆர். ராமச்சந்திரன் ஏற்று நடிக்கிறார். மற்ற நடிகர்கள் நாம் இருவர் நாடகத்தில் திறமையுடன் நடித்து அனுபவம் பெற்றவர்கள்.

நல்லதொரு பொழுதுபோக்காக இருப்பதற்குப் படத்தில் ஆடலும் பாடலும் ரொம்ப அவசியம் என்பதை உணர்ந்துள்ள ஏவி.எம். புரொடக்ஷன்ஸார் கண்ணுக்கினிய ஆடல்களையும் காதுக்கினிய பாடல்களையும் அமைத்திருக்கிறார்கள். ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே‘ முதலிய பாரதியாரின் தேசிய கீதங்களை ஸ்ரீமதி டி.கே. பட்டம்மாள் அழகாகப் பாடியிருப்பதும், அந்தப் பாட்டுக்களுக்கு சிறுமி கமலா அபிநயம் பிடித்து அற்புதமாக ஆடியிருப்பதும், மனதை வசீகரிக்கக் கூடிய நல்ல அம்சங்கள். டி.ஆர்.மகாலிங்கம் பாடியிருக்கும் பாட்டுக்களும் படத்திற்கு ஒரு விசேஷ கவர்ச்சியை அளிக்கின்றன. சில பாட்டுக்கள், காலஞ்சென்ற கிட்டப்பாவின் பாட்டுக்களை ஞாபகப்படுத்துவதால், அவை கேட்போரைப் பரவசப்படுத்துகின்றன.

மகான் காந்தி மகான் என்ற பாட்டுக்கு “சிறுமி” கமலா இங்கே ஆடுகிறார்.

‘ஜே ஹிந்த்’, ‘மகாத்மா காந்திக்கு ஜே!’ முதலிய தேசிய கோஷங்களும், தேச பக்தர்களின் உருவப் படங்களும், அங்கங்கே சில சம்பாஷணைகளில் வரும் கருத்துக்களும் இக்கால மக்களின் மனப்போக்குக்கு ஏற்றவைகளாக இருப்பதால், படத்தின் வெற்றிக்கு அவை பெரிதும் உதவியாக இருக்கின்றன என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

இன்னும் சிலாகிப்பதற்கு இப்படத்தில் எவ்வளவோ நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஒரே பேபி கமலாவை வைத்துக் கொண்டு, இரண்டு பேபி கமலாக்கள் நடனம் செய்வதாகக் காண்பித்திருக்கும் காமிராக்காரரின் திறமையைப் பாராட்டலாம். பாத்திரங்களுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவாறு சம்பாஷணைகளை இயற்றிக் கொடுத்திருக்கும் கதாசிரியர் ஸ்ரீ ப. நீலகண்டனின் திறமையையும் பாராட்டலாம்.

சென்ற உலக யுத்தத்தில் ஹிட்லர் பிரயோகித்த ‘வி-டூ’ என்ற ஆயுதம் அதன் வேகத்திற்குப் பிரசித்தி பெற்றது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தப் பெயரே இப்படத்தின் ஆங்கிலப் பெயராக அமைந்திருப்பதனாலோ என்னவோ, படம் ஆரம்பம் முதல் கடைசி வரையில் விறுவிறுப்பும் வேகமும் உள்ளதாக இருக்கிறது. படத்தில் அலுப்புத் தட்டும் இடமே இல்லை!

ஸ்ரீ ஏவி.எம். செட்டியார் அவர்களின் திறமையில் நமக்கு அதிக நம்பிக்கை ஏற்படுகிறது. வசதிகள் நிறைய ஏற்படும்போது, இதை விடப் பன்மடங்கு மேம்பட்ட படங்களை அவரால் தயாரித்துத் தமிழ்நாட்டுக்கு அளிக்க முடியும் என்பதில் நமக்குச் சந்தேகமே இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்

தொடர்புடைய சுட்டி: மாலை மலரில் இந்த படம் உருவான கதை

ஆயிரத்தில் ஒருவன் – சாரதா விமர்சனம்


சாரதா சிவாஜியின் முரட்டு பக்தை என்பது இந்த தளத்தின் வாசகர்களுக்கு தெரிந்த விஷயம். அவர் எம்ஜிஆருக்கு “எதிரி” இல்லை என்பதும் இந்த விமர்சனத்தைப் படித்தால் புரியும். ஓவர் டு சாரதா!

தமிழ்ப் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப் படங்களில் புராணப் படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப் படங்களின் பட்டியலும் நீளம்தான். காதலை மையமாகக் கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.

ஆனால் இது வரை கடற் கொள்ளையர்களை கதைக் கருவாகக் கொண்டு வெளி வந்த ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே. கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக் களங்கள் என, ஒரு வெற்றிப் படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.

இப்படத்தின் கதாநாயனான ‘மக்கள் திலகம்’ எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கை தேர்ந்த தையற் கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவது போல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச் சண்டைக் காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் படம்.

கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் பந்துலு மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அது வரை (பானுமதிக்குப் பின்) சரோஜா தேவிதான் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக) போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


பருவம் எனது பாடல் என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மண்டபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.

எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம் போல “வெற்றி… வெற்றி…” என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித் தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும் போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இளவரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக் கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக் காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ‘கடற் கொள்ளையனாக’ சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப் போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்… இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்கும்.

கத்திச் சண்டைக் காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (எம்ஜிஆர்+ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச் சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப் பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள் சண்டை (நம்பியார்: “இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் தலைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்”), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர். (வழக்கம் போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.

பின்னர் வரப் போகும் மூன்று கத்திச் சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித் தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.

பாடல்களும் இசையும்:

இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அது வரை தமிழ்த் திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா… இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.

  • 1. பருவம் எனது பாடல்
  • நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.

    பருவம் எனது பாடல்
    பார்வை எனது ஆடல்
    கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்
    கருணை உனது கோயில் கலைகள் உனது காவல்

    பல்லவியை பாடி முடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ஹம்மிங் ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ் ஸ்தாயி வரையில் கொண்டு வர‌, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து

    இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்

    என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை.

    (நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘LINK’ தருவார்கள். SONGS கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).

  • 2. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை
  • வழக்கம் போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.

    ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
    நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
    வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
    நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே

    இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத‌ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.

  • 3. ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

  • இந்தப் பாடலைப் பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப் பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க‌ள். பாதிப் பாட‌ல் அர‌ண்ம‌னை செட்டிலும் பாதிப்பாட‌ல் கார்வார் க‌ட‌ற்க‌ரையிலும் க‌ண்டினியூட்டி கெடாம‌ல் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

  • 4. உன்னை நான் ச‌ந்தித்தேன் நீ ஆயிர‌த்தில் ஒருவ‌ன்
  • பி.சுசீலா தனியாக‌ப் பாடிய‌ பாட‌ல். கூட‌வே ஆண்க‌ளின் கோர‌ஸ். ம‌ணிமாற‌னைப் பிரிந்த‌ பூங்கொடி, செங்க‌ப்ப‌ரின் அர‌ண்ம‌னையில் சோக‌மே உருவாக‌ பாடும் பாட‌ல், கூட‌வே க‌ப்ப‌லில் போய்க்கொண்டிருக்கும் ம‌ணிமாற‌னைக் காண்பிக்கும்போது, அவ‌ர‌து கூட்டாளிக‌ளின் உற்சாக‌மான‌ கோர‌ஸ்.

    பொன்னைத்தான் உட‌ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம‌ன‌மென்பேன்
    க‌ண்க‌ளால் உன்னை அள‌ந்தேன் தொட்ட‌ கைக‌ளால் நான் ம‌ல‌ர்ந்தேன்
    உள்ள‌த்தால் வ‌ள்ள‌ல்தான் ஏழைக‌ளின் த‌லைவ‌ன்

    அடுத்து வ‌ரும் இசை ‘பிட்’டைக் கேட்க‌ முடியாது, கார‌ண‌ம் ப‌ல‌த்த‌ கைத‌ட்ட‌லும், விசில் ச‌த்த‌மும். பாட‌ல் முடியும்போது, கோர‌ஸுட‌ன் க‌ப்ப‌ல்க‌ள் முல்லைத்தீவு க‌ரையில் ஒதுங்குவ‌தாக‌ காட்டுவ‌து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கறுப்பு நிற உடையில் அழகுப் பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி).

  • 4. ஆடாமல் ஆடுகிறேன்
  • கடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டையடி சத்தம், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.

    ஆடாமல் ஆடுகிறேன்… பாடாமல் பாடுகிறேன்
    ஆண்டவனைத் தேடுகிறேன் வா…வா…வா….
    நான் ஆண்டவனைத் தேடுகிறேன்
    வா…வா…வா…. வா….வா…வா…

    முதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, ‘ஆண்டவனைத் தேடுகிறேன்’ என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக தபேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.

    விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
    ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
    அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
    அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்

    ‘கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்’ என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.

    (மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘SEND OFF ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).

  • 5. நாணமோ… இன்னும் நாணமோ
  • நீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன? காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா? அதுதான் இந்தப் பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘PRELUDE’அருமையாக துவங்கும். (PRELUDE, INTERLUDE என்பவை என்ன என்று தெரிந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).

    தோட்டத்துப் பூவினில் இல்லாதது
    ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
    ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
    ஆனந்த வெள்ளத்தில் நீராடுது – அது எது?

    ஆடவர் கண்கள் காணாதது
    அது காலங்கள் மாறினும் மாறாதது
    காதலன் பெண்ணிடம் தேடுவது
    காதலி கண்களை மூடுவது – அது இது

    பாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும்.

  • 6. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
  • அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘PRELUDE’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.

    கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
    கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
    அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
    அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

    இன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.

    இப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் “என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா?”

    நாகேஷ்: “அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து ‘ஈ’ன்னு சிரிச்சா. ‘கொன்னுடுவேன்’ அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்”.

    ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.

    எப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.

    ‘ஆயிரத்தில் ஒருவன்’ பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.

    தொகுக்கப்பட்ட பக்கம்: சாரதா பதிவுகள், திரைப்படங்கள்

    தொடர்புடைய பதிவுகள்: ஆயிரத்தில் ஒருவன் – ஆர்வி விமர்சனம், ஜெயலலிதா நினைவுகள்

    பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்


    இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் டாப் டென் இந்திய சினிமாவை இந்த லிங்கில் பார்க்கலாம். வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.

    1. 1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே
    2. 1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி
    3. 1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா
    4. 1957, குரு தத்தின் ப்யாசா
    5. 1960, ரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா
    6. 1964, சத்யஜித் ரேயின் சாருலதா
    7. 1962, ரித்விக் கடக்கின் சுபர்ணரேகா
    8. 1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்
    9. 1986, ஜான் ஆபிரகாமின் அம்மா அரியன்
    10. 1951, ராஜ் கபூரின் ஆவாரா

    எனக்கும் ஷோலே, பதேர் பாஞ்சாலி, மதர் இந்தியா, ப்யாசா, சாருலதா பிடித்த படங்கள்தான். குரு தத்தின் படங்களை என் ஒரிஜினல் லிஸ்டில் குறிப்பிட மறந்துவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த குரு தத் படம் சாஹிப் பீபி அவுர் குலாம். ப்யாசாவும் பிடிக்கும்தான். ஆனால் படம் பிடிக்க பாட்டுகளும் பெரிய காரணம். குறைந்த பட்சம் honourable mention என்று தயங்காமல் சொல்லலாம். காகஸ் கே ஃபூல் வராது. எல்லா படங்களிலும் ஒளிப்பதிவு அற்புதம்.

    ரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா ஒரு டப்பா டிவியில் 20 வருஷத்துக்கு முன்னால் பார்த்தேன். என்னை பெரிதாக கவரவில்லை. மங்கலாகத்தான் நினைவிருக்கிறது, வழக்கமான செண்டிமெண்ட் படங்களில் வருவது போல குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடாக போகும் மூத்த பெண்ணின் கதை என்று நினைவு. திருப்பி பார்த்தால் மனம் மாறுமோ என்னவோ. சுபர்ணரேகா கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை. கடக் பெரிதாக பேசப்படும் இயக்குனர். ஒரு வேளை அறிவு ஜீவிகளுக்காக படம் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை.

    மொகலே ஆஜம் என் லிஸ்டில் வராது. இதெல்லாம் சும்மா, ஓவர் ஹைப். இதில் பிரித்வி ராஜ் கபூர் குதித்து குதித்து நடப்பதைப் போலத்தான் சோவும் முகமது பின் துக்ளக்கில் நடப்பார்.

    நிச்சயமாக வராத படம் ஆவாரா. குப்பைப் படம். (ஆனால் பாட்டுகள் சூப்பர்!)

    அம்மா அரியன் பார்த்ததில்லை. ஜான் ஆபிரகாம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அக்ரஹாரத்தில் கழுதை படத்துக்கு ஒரு torrent கூட கோகுல் கொடுத்திருந்தார், ஆனால் எனக்கு வேலை செய்யவில்லை.

    இது சினிமா “அறிஞர்களின்” தேர்வாம். நம்ம மாதிரி எல்லாரும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த லிஸ்ட் (லிங்க் இங்கே):

    1. 1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி
    2. 1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே
    3. 1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே – ஏண்டா, ஏண்டா இப்படி கொலை வெறி பிடிச்சு அலையறீங்க?
    4. 2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான் – முதல் பாதி வேஸ்ட். என் லிஸ்டில் வராது.
    5. 1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா
    6. 1972, கமல் அம்ரோஹியின் பகீசா – படம் திராபை, பாட்டுகள் சூப்பர்!
    7. 1964, சத்யஜித் ரேயின் சாருலதா
    8. 1957, குரு தத்தின் ப்யாசா
    9. 1998, மணிரத்னத்தின் தில் சே(தமிழில் உயிரே)
    10. 1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்

    “அறிஞர்களின்” அடுத்த பத்து பட தேர்வுகள்: (அதே லிங்கில் பார்க்கலாம்.)

    1. 1957, குரு தத்தின் காகஸ் கே ஃபூல் – ஏற்கனவே சொன்ன மாதிரி நல்ல படம்தான், ஆனால் என் honourable mention லிஸ்டில் கூட வரும் ஆனால் வராது.
    2. 1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே
    3. 1952, விஜய் பட்டின் பைஜு பாவ்ரா – நல்ல பாட்டுகள் (பைஜு தான்செனையே தோற்கடித்த ஒரு பாடகன்), அவ்வளவுதான். அதற்கு மட்டும் ஒரு படத்தை தேர்ந்தெடுக்கக் கூடாது.
    4. 1995, மணிரத்னத்தின் பாம்பே – நிச்சயம் honourable mention என்று சொல்லலாம்.
    5. 1953, பிமல் ராயின் தோ பிகா ஜமீன் – பால்ராஜ் சாஹ்னியின் மிக அருமையான நடிப்பு. ஆனால் இந்த படம் இன்று ஒரு cliche ஆகிவிட்டது.
    6. 2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான்
    7. 1965, விஜய் ஆனந்தின் கைட் – ஆர். கே. நாராயணைப் போல நானும் விஜய் ஆனந்தும் தேவ் ஆனந்தும் இந்த நல்ல கதையை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் என்ன அருமையான பாட்டுகள்! தே தே மேக் தே, ஆஜ் ஃபிர் ஜீனே கி தமன்னா ஹை, வஹான் கோன் ஹை தேரா, காத்தா ரஹே மேரா தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
    8. 1975, யஷ் சோப்ராவின் தீவார் – என் டாப் டென் லிஸ்டில் உண்டு.
    9. 1977, மன்மோகன் தேசாயின் அமர் அக்பர் அந்தோணி – இதெல்லாம் கொஞ்சம் ஓவர்!
    10. 1983, குந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோ -என் டாப் டென் லிஸ்ட்.

    இவர்களின் நீளமான லிஸ்டில் உள்ள தமிழ் படங்கள்:

    1. 1939, கே. சுப்ரமணியத்தின் தியாக பூமி – பார்த்ததில்லை.
    2. 1942, ஆர்.எஸ். மணியின் கண்ணகி – அன்னக்கிளி படத்தில் ஒரு சீன் வரும், அதை மட்டுமே பார்த்திருக்கிறேன்.
    3. 1944, சுந்தர்லால் நட்கர்னியின் ஹரிதாஸ் (தியாகராஜா பாகவதர் படம்) – பார்த்ததில்லை
    4. 1948, எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா – என் டாப் டென் தமிழ் பட லிஸ்ட்
    5. 1950, எல்லிஸ் ஆர். டங்கன்/டி.ஆர். சுந்தரத்தின் மந்திரி குமாரி – நோ சான்ஸ்
    6. 1952, கிருஷ்ணன் பஞ்சுவின் பராசக்தி (சிவாஜி) – நிச்சயமாக honourable mention
    7. 1956, யோகானந்தின் மதுரை வீரன் (எம்ஜிஆர் படம்) – என்னங்க இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை?
    8. 1959, பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன் – Honourable mention
    9. 1961, பந்துலுவின் கப்பலோட்டிய தமிழன் – என் டாப் டென் லிஸ்டில் வருகிறது.
    10. 1968, ஏ.பி. நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் – இல்லை.
    11. 1976, பீம்சிங்கின் சில நேரங்களில் சில மனிதர்கள் – டாப் டென்னுக்கு பரிசீலிக்கலாம்
    12. 1977, பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே – என் லிஸ்டில் வராது. இதில் என்ன இருக்கிறது என்று எல்லாரும் கொண்டாடுகிறார்கள்?
    13. 1979, துரை இயக்கிய பசி (ஷோபாவுக்கு தேசிய விருது) – பார்த்ததில்லை.
    14. 1981, பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் – என் டாப் டென் லிஸ்ட்.
    15. 1982, பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை – நிச்சயமாக honourable mention. வீடு படமும் சேர்த்துக் கொள்ளலாம்.
    16. 1987 , மணிரத்னத்தின் நாயகன் – என் டாப் டென் லிஸ்ட்.
    17. 1988, மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் – Honourable mention
    18. 1992, மணிரத்னத்தின் ரோஜா – Honourable mention
    19. 1992, சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் அபூர்வ சகோதரர்கள் (கமல் படம்) – டாப் டென்னுக்கு பரிசீலிக்க வேண்டிய படம்.
    20. 1994, மணிவண்ணனின் அமைதிப் படை – பார்த்ததில்லை.
    21. 1994, ஷங்கர் இயக்கிய காதலன் (ஷங்கரின் காதலன் என்று எழுதினால் தப்பாக வருகிறது!) – எப்படிங்க இந்த படம் எல்லாம் லிஸ்டுக்கு வருது?
    22. 1994, பாரதிராஜாவின் கருத்தம்மா – அடப் போங்க சார், இதெல்லாம் லிஸ்டிலா?
    23. 1995, ஆர்.எஸ். ரவிகுமாரின் முத்து (ரஜினி) – இந்த லிஸ்டை எப்படிங்க போட்டாங்க?
    24. 2000, ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – நல்ல படம்தான், ஆனாலும் honourable mention லிஸ்டில் வருமா தெரியவில்லை.

    தொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்

    தொடர்புடைய பதிவுகள்:
    என் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்
    கமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்
    நடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்
    பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி
    பாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்
    அஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்
    NCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்

    சந்திரலேகா
    கப்பலோட்டிய தமிழன்
    மந்திரி குமாரி (Mandiri Kumari)
    முகமது பின் துக்ளக், விகடன் விமர்சனம்
    பராசக்தி (Parasakthi), பராசக்தி – நீதிமன்ற வசனம்
    தில்லானா மோகனாம்பாள் (Thillana Mohanambal), தில்லானா மோகனாம்பாள் விகடன் விமர்சனம், நாதஸ்வரம் வாசித்த எம்.பி.என். சகோதரர்கள்
    வீரபாண்டிய கட்டபொம்மன், விகடன் விமர்சனம்

    வீரபாண்டிய கட்டபொம்மன்


    சிவாஜியைப் பற்றி பொதுவாக சொல்லப்படும் குறை அவர் ஓவர்ஆக்ட் செய்கிறார், மெலோட்ராமா என்பதுதான். உண்மையில் குறை அதுவல்ல. மெலோட்ராமா என்பது ஒரு விதமான ஸ்டைல். பாய்ஸ் நாடகங்கள், தெருக்கூத்து, ஜப்பானிய கபூகி நாடகங்கள், ஷேக்ஸ்பியர் நாடகங்கள், musicals எல்லாவற்றுக்கும் ஒரு ஸ்டைல், இலக்கணம் இருக்கிறது. சிவாஜியின் படங்களையும் அப்படித்தான் பார்க்க வேண்டும். குறை அவர் படங்கள் – அதுவும் பிற்காலப் படங்கள் – அவருக்கு “நடிக்க” ஸ்கோப் உள்ள காட்சிகளின் தொகுப்பாக இருப்பதுதான். சினிமா என்பது வெறும் சீன்களின் தொகுப்பல்ல. இதை அவரும் உணரவில்லை, அவர் காலத்து இயக்குனர்களும் உணரவில்லை. அந்த காலத்து ரசிகர்கள் உணர்ந்தார்களா என்பதும் சந்தேகமே.

    இதனால்தான் அவரது significant number of படங்கள் உணர்ச்சிகளின் உச்சத்தை வெளிப்படுத்தும் சீன்களின் தொகுப்பாக, அவர் மட்டுமே வியாபித்திருக்கும் கதைகளாக, மிக சுலபமாக கிண்டல் அடிக்கப்படுபவையாக இருக்கின்றன. கமல் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னார் – சிவாஜி சிங்கம், ஆனால் அவருக்கு தயிர் சாதம் மட்டுமே போடப்பட்டது என்று. அதில் உண்மை இருக்கிறது.

    வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த குறைகளை சுலபமாக தாண்டுகின்றது. கட்டபொம்மன் உணர்ச்சிப் பிழம்புதான். ஓவர் ஆக்டிங், மெலோட்ராமா, over the top performance போன்ற வழக்கமான “குற்றச்சாட்டுகளை” அள்ளி வீசலாம்தான். ஆனால் யாராக நடிக்கிறார்? ஒரு larger than life icon, நாட்டுப்புற பாட்டுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தொன்மம், சரித்திரத்தை தாண்டி ஐதீகமாக மாறிவிட்ட ஒரு மனிதனை இப்படி நடித்துக் காட்டுவது மிக பொருத்தமாக இருக்கிறது.

    கட்டபொம்மன் ஜாக்சன் துரையை பார்த்து எங்கள் மங்கலப் பெண்டிருக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா என்று கேட்டாரா என்பது சந்தேகம்தான். அப்படி கட்டபொம்மன் கர்ஜித்திருந்தால் அது ஜாக்சன் துரைக்கு புரிந்திருக்குமா என்பது அதை விட பெரிய சந்தேகம். ஆனால் சிவாஜி கொண்டு வருவது சரித்திரத்தை தாண்டிப்போய்விட்ட கட்டபொம்மன் என்ற இதிகாச மனிதரை. கட்டபொம்மனை ஒரு இதிகாசமாக, தொன்மமாக, icon ஆக மாற்றியதில் நாட்டுப்புற பாடல்களுக்கு எவ்வளவு பங்குண்டோ அதே அளவு பங்கு இந்த நடிப்புக்கும் உண்டு. இந்த performanceஇன் தாக்கம் இல்லாத தமிழ் நடிகர் யாருமில்லை. பராசக்தி, மனோகரா, கட்டபொம்மன் மூன்று படங்களும் மெலோட்ராமா என்பது கெட்ட வார்த்தை இல்லை என்பதை இன்றும் உணர்த்தும் படங்கள்.

    பந்துலு சிறந்த தயாரிப்பாளர். பணம் முக்கியம்தான், ஆனால் படம் நன்றாக வருவது அதை விட முக்கியம் என்று நம்பியவர். கட்டபொம்மன், கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் மாதிரி படங்களில் பணத்தை வாரி இறைத்தார். வெள்ளைக்காரனை எதிர்த்து போராடியவர்களை திரைப்படத்தில் கொண்டு வந்ததற்காக எப்போதும் நினைவிளிருப்பார். (கன்னடத்தில் கிட்டூர் ராணி சென்னம்மா எடுத்தார். சென்னம்மா கன்னட கட்டபொம்மி.)

    1959-இல் வந்த படம். சிவாஜி, எஸ். வரலக்ஷ்மி, ஜெமினி, பத்மினி, ஓ.ஏ.கே. தேவர், ராகினி, ஜாவர் சீதாராமன், வி.கே. ராமசாமி, குலதெய்வம் ராஜகோபால், ஏ. கருணாநிதி, டி.பி. முத்துலட்சுமி நடித்தது. ஜி. ராமநாதனின் அற்புதமான இசை. பந்துலுவே இயக்கினார் என்று நினைக்கிறேன்.

    சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்களில் அனல் பறக்கிறது. அவற்றை ஏற்ற இறக்கத்துடன் உச்சரிக்க சிம்மக் குரல். பத்திக்கிச்சு!

    இதற்கும் கதை எழுத வேண்டுமா என்ன?

    சிவாஜி ஜாக்சன் துரையிடம் பேசுவது தமிழ் சினிமாவில் ஒரு seminal moment. Enough said.

    ஜெமினி-பத்மினி காதல் கதை படத்தின் வீக்னஸ். படத்தின் தீவிரத்தை குறைக்கிறது. அதுதான் இயக்குனரின் எண்ணம், என்றாலும் சுலபமாக தம் அடிக்க வெளியே போய்விடலாம். படத்தின் தீவிரத்தை அதிகரிக்க ஊமைத்துரையின் காரக்டரை டெவலப் செய்திருக்கலாம். ஓ.ஏ.கே. தேவருக்கு ஏதாவது வசனம் உண்டா என்று யோசித்துப் பார்க்கிறேன், அவர் வாயை திறந்த மாதிரியே தெரியவில்லை. அதே போல எட்டப்பனும் ஒரு கார்ட்போர்ட் கட்அவுட்தான். ஜாவர் ஒருவர்தான் படத்தில் கொஞ்சம் நிற்கிறார்.

    பாட்டுகள் அபாரம். ஜி. ராமநாதன் கொன்றுவிட்டார்.

    இன்பம் பொங்கும் வெண்ணிலாதான் என் ஃபேவரிட். அதுவும் பிபிஎஸ் “உன்னைக் கண்டு” என்று கேட்கும் தருணம்!

    எஸ். வரலக்ஷ்மி கலக்கிய படம். அவருடைய கனமான குரல் என்ன சுகமாக “சிங்காரக் கண்ணே உன் தேனூறும் செவ்வாயால்” என்று பாடுகிறது? அதுவும் “உன் வாய் முத்தம் ஒன்றாலே” என்ற வார்த்தைகளை கொஞ்சம் வேகமாக பாடுவது மிக நன்றாக இருக்கும். “மனம் கனிந்தருள் வேல்முருகா” குழந்தைகளுக்கு சாமி பாட்டாக சொல்லித் தரலாம். அப்புறம் “டக்கு டக்கு” என்று ஒரு பாட்டு. கேட்கக் கூடிய பாட்டுதான், ஆனால் இதை எல்லாம் கருணை காட்டாமல் எடிட்டிங் டேபிளில் கட் பண்ணி இருக்க வேண்டும். படத்தின் ஓட்டத்தில் ஒரு ஸ்பீட்பிரேக்கர் மாதிரி வரும்.

    ஜி. ராமநாதனின் பாட்டுகள் எப்போதும் இரண்டு வகை. ஒன்று கர்நாடக சங்கீதத்தை அஸ்திவாரமாக வைத்து எழுப்பப்பட்ட highbrow பாட்டுகள். இரண்டு நாட்டுப்புற பாட்டு, டப்பாங்குத்தை அஸ்திவாரமாக வைத்து எழுப்பப்பட்ட lowbrow பாட்டுகள். “மாட்டு வண்டியை பூட்டிக்கிட்டு” இரண்டாவது வகை. நல்ல, ஆனால் கவனிக்கப்படாத பாட்டு. “ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி” என்ற இன்னொரு நல்ல பாட்டும் “அஞ்சாத சிங்கம் உன் காளை” என்று ஒரு சுமாரான பாட்டும் உண்டு. ஆத்துக்குள்ளே பாட்டு (ஏ.கருணாநிதி நகைச்சுவை பகுதி எல்லாமே) ஸ்பீட்ப்ரேக்கர்தான்.

    Highbrow வகையில், நாடக பாரம்பரியம் உள்ள பாட்டு போகாதே போகாதே என் கணவா. எனக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை. அதுவும் படமாக்கப்பட்ட விதம்! சின்னப்பிள்ளைக்கு சொல்கிற மாதிரி வாழை மரம் விழக் கண்டேன் என்றால் ஒரு வாழை மரத்தை வெட்டி காண்பிப்பார்கள். அதுவும் பத்மினியின் ஓவர்ஆக்டிங் வேறு கொடுமையாக இருக்கும்.

    சிவாஜிக்கு பாட்டு கிடையாதோ? வெற்றி வடிவேலனே என்று ஒரு தொகையறா வரும் அது யார் பாடுவதாக வரும் என்று நினைவில்லை. சிவாஜிதானோ?

    வேறு பாட்டுகள் எனக்கு நினைவில்லை. சாரதா எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

    சிவாஜியின் seminal நடிப்பு, பந்துலுவின் நல்ல தயாரிப்பு, ஜி. ராமநாதனின் அற்புதமான இசை, எஸ். வரலக்ஷ்மியின் குரல், எடுத்துக்கொள்ளப்பட்ட subject matter ஆகியவற்றுக்காக பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு 7.5 மார்க். A- grade.

    தொடர்புடைய பதிவுகள்
    வீரபாண்டிய கட்டபொம்மன் விகடன் விமர்சனம்
    ம.பொ.சி – ஒரு மதிப்பீடு
    கப்பலோட்டிய தமிழன்
    மனோகரா, விகடன் விமர்சனம்
    பராசக்தி, பராசக்தி – நீதிமன்ற வசனம்
    ஆயிரத்தில் ஒருவன்
    எஸ். வரலக்ஷ்மி அஞ்சலி

    வீரபாண்டிய கட்டபொம்மன் – விகடன் விமர்சனம்


    படம் வந்தபோது – மே 1959 – விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

    மாணி: வெற்றிவேல்! வீரவேல்!

    முனு: என்ன தம்பி, முதல் காட்சியே பார்த்துட்டியா?

    மாணி: முதல் முழக்கம் செய்த தமிழ் மகனுடைய படம். தமிழிலே முதல் சரித்திரப் படம். பார்க்காம இருப்பேனா? அதிலும் சிவாஜி நடிப்பு இருக்கே…

    முனு:- ஒண்ணும் சொல்லாதே தம்பி!

    மாணி:- ஏன் அண்ணே..?

    முனு:- அவர் நடிப்பைப் பற்றி இனி யாரும் புகழ வேண்டிய அவசியம் கிடையாது. அவர் ஒரு தனிப்பிறவி தம்பி! சரி, சண்டைக் காட்சியெல்லாம் எப்படி இருக்கு?

    மாணி: நல்லா எடுத்திருக்காங்க அண்ணே! இங்கிலீஷ்கார சோல்ஜர்களும் தமிழ்நாட்டு வீரர்களும் ரொம்ப ரோசமாச் சண்டை போடறாங்க. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை வெள்ளைக்காரன் குண்டு போட்டுத் தகர்த்தெறிகிற காட்சியைப் பார்க்கிறபோது, இவ்வளவு கொடுமை செஞ்சிருக்கிறானே வெள்ளைக்காரன், அவனைச் சாதாரணமா ஊருக்குப் போக விட்டுட்டோமேன்னு தோணிச்சண்ணே!

    கவிதையும் வசனமும் கரும்பு போல் இருக்கு. காதலும் வீரமும் போட்டி போட்டுக்கிட்டு வருது.

    முனு: காதலர்கள் யார் யார்?

    மாணி: ஜக்கம்மாவா எஸ். வரலட்சுமி வருது. சொந்தக் குரல்லே இரண்டு பாட்டு உருக்கமா பாடுது. நல்லா நடிச்சிருக்குது. ஊமைத் துரையா ஓ.ஏ.கே. தேவரும், அவரு மனைவியா ராகினியும் வராங்க. ஊமைத்துரையைப் பேருக்குப் பொருத்தமா விட்டுட்டாங்க.நடிப்புக்கு அதிக வாய்ப்பில்லே! வெள்ளையத் தேவரா ஜெமினி கணேசன் வராரு.

    முனு: வெள்ளையம்மா யாரு?

    மாணி: பத்மினிதான்! ‘போகாதே போகாதே என் கணவா’ன்னு பாடி வழியை மறைக்கிறபோது பெண் குலமே அழுதுடும். கணவன் போரில் இறந்தவுடனே, தானும் போர்க்களத்திலே குதிச்சு பழி வாங்கற காட்சியைப் பார்த்தா ஆண் குலத்துக்கு வீரம் வந்துடும். வீரத் தமிழ் மங்கைன்னா அதுதான் அண்ணே!

    முனு: கலர் எப்படி?

    மாணி: கண் குளிர்ந்தது அண்ணே! வெளிப்புறக் காட்சிகள் எல்லாம் குளுகுளுன்னு இருக்கு. திருச்செந்தூர் முதல் ஜெய்ப்பூர் வரைக்கும் பார்க்கப் பார்க்க அழகாயிருந்தது. பணச் செலவைப் பார்க்கவேயில்லை.

    முனு: மற்ற நடிகர்களைப் பற்றி ஏதாவது…

    மாணி: வி.கே. ராமசாமி எட்டப்பனா வராரு. ஜாவர் சீதாராமன் பானர்மென் துரையா வந்து பஸ்டு கிளாஸா நடிச்சிருக்காரு. இன்னும் கருணாநிதி, குலதெய்வம் ராஜகோபால், பக்கிரிசாமி, முத்துலட்சுமி…

    முனு: எல்லாருமே இதை ஒரு பாக்கியமா எண்ணி நடிச்சிருப்பாங்க தம்பி. சரி, அப்புறம்..?

    மாணி: பிரமாண்டமான சண்டைகளுக்கு நடுப்புற குளோசப்லே வர கத்திச் சண்டைகள் சுமார்தான்! டைரக்டர் பி.ஆர்.பந்துலு முதல்லே நேரிலே வந்து, அவையடக்கமாப் பேசறாரு. அப்புறம், படம் பூரா அவருடைய திறமை தெரியுது.

    முனு: மொத்தத்திலே…

    மாணி: பார்த்தவர்கள் நெஞ்சை விட்டு நீங்காத படம் கட்டபொம்மன். சிவாஜி கணேசன் அப்படி நடிச்சிருக்காரு. இது தமிழனுக்கே பெருமை தரும் படம் அண்ணே!

    தொடர்புடைய பதிவுகள்
    ம.பொ.சி. – ஒரு மதிப்பீடு

    நாடோடி – என் விமர்சனம்


    நாடோடி எம்ஜிஆரின் தண்டப் படங்களில் ஒன்று. எம்ஜிஆரும் தயாரிப்பாளர்-இயக்குனர் பந்துலுவும் சொதப்பிவிட்டார்கள். எனக்கென்னவோ இது சிவாஜிக்காக எழுதப்பட்ட கதையோ என்று ஒரு சந்தேகம். கதையில் ஆக்ஷன் குறைவு, செண்டிமெண்ட் அதிகம். அதுவும் குழந்தைக்கதை மாதிரி நம்பியார் மருந்து போட்டு டெம்பரரியாக ஆனால் பெர்மனேன்டாக எம்ஜிஆரையும் சரோஜா தேவியையும் குருடாக வைத்திருப்பார். என்ன சின்னப்பிள்ளைத்தனமா இல்ல இருக்கு?

    ஆயிரத்தில் ஒருவனுக்கு பிறகு பந்துலு எம்ஜிஆர் கூட்டணியில் வந்த படம் இதுதான் என்று நினைக்கிறேன். 1966இல் வந்திருக்கிறது. பந்துலு நஷ்டப்பட்டிருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். இதை விட மோசமான முகராசி, தேர்த்திருவிழா எல்லாம் எம்ஜிஆர் முக ராசியில் கையை கடிக்கவில்லையாம். இதை விட மோசமாக படம் எடுப்பது பெரும் கஷ்டம், அதை எல்லாம் தேவர்தான் செய்ய முடியும். சாரதா மாதிரி யாராவது இந்த படம் எப்படி ஓடியது என்று தெரிந்தால் சொல்லுங்களேன்!

    இதுக்கு கதை எல்லாம் சொல்லி நானும் கஷ்டப்பட்டு உங்களையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. பாரதி இந்த படத்தில்தான் அறிமுகம் ஆனார். பார்க்க அழகாக இருப்பார். பந்துலு கன்னட நடிகைகளை – தங்கமலை ரகசியத்தில் சரோஜா தேவி, ஆயிரத்தில் ஒருவனில் மைசூர் பாரம்பரியம் உள்ள ஜெயலலிதா, இதில் பாரதி – என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

    படத்தின் ஒரே ப்ளஸ் பாயின்ட் பாட்டு. எம்எஸ்வி இரண்டு நல்ல பாட்டு போட்டிருக்கிறார். உலகமெங்கும் ஒரே மொழி மிக நல்ல பாட்டு. எனக்கு மிக பிடித்த பாட்டு இதுதான். அன்றொரு நாள் இதே நிலவில் இன்னொரு நல்ல பாட்டு. என் கண்ணில் இரண்டாம் இடம்தான், ஆனால் இதுதான் பிரபலமான பாட்டு. இரண்டையும் இங்கே கேட்கலாம். உலகமெங்கும் ஒரே மொழி வீடியோ கீழே.

    இவற்றைத் தவிர நாடு அதை நாடு என்று ஒரு சுமாரான பாட்டு உண்டு. எனக்கு வேறு பாட்டுகள் நினைவில்லை. சாரதா லிஸ்ட் கொடுத்திருக்கிறார் – அப்படியும் நினைவு வரவில்லை.

    1. அன்றொரு நாள் இதே நிலவில் – டிஎம்எஸ், சுசீலா
    2. அன்றொரு நாள் இதே நிலவில் – சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி
    3. உலகமெங்கும் ஒரே மொழி – டிஎம்எஸ், சுசீலா
    4. திரும்பி வா ஒளியே திரும்பி வா – டிஎம்எஸ், சுசீலா
    5. நாடு அதை நாடு, அதை நாடாவிட்டால் ஏது வீடு – டிஎம்எஸ், சுசீலா
    6. ரசிக்கத்தானே இந்த அழகு – சுசீலா
    7. பாடும் குரலிங்கே பாடியவன் எங்கே – சுசீலா
    8. கண்களினால் காண்பதெல்லாம் – டிஎம்எஸ், சுசீலா (படத்தில் இல்லை)

    சாரதா “விமர்சனம் என்றால் அப்படத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் (ஓரளவேனும்) உள்ளடக்கியதாக இருக்க வேண்டாமா?. இரண்டு பேர் உட்கார்ந்து வெறுமனே கதைச்சுருக்கம் பேசுவதுதான் விமர்சனமா?” என்று கேட்கிறார். நியாயம்தான். ஆனால் படம் மகா தண்டம். விகடன் விமர்சனத்தில் முனுசாமி சொல்வது – “ஒரு மூணு மணிநேரம் கண் தெரியாம இருக்கிறதுக்கு யாராவது ஒரு குருட்டு மருந்து கண்டுபிடிச்சுக் கொடுத்தா, அதைப் போட்டுகிட்டு இந்தப் படத்துக்குப் போய் ஜாலியா உட்கார்ந்துகிட்டு, இரண்டு பாட்டை மட்டும் கேட்டுட்டு வந்துடலாம்.” மிகச்சரி. எனக்கு பிடித்த பாட்டுகள்தான் விகடனுக்கும் பிடித்திருந்தனவோ என்னவோ.

    பாட்டு மட்டும் கேளுங்கள்/பாருங்கள். படம் தண்டம். பத்துக்கு மூன்று மார்க். (உலகமெங்கும், அன்றொரு நாள் பாட்டுகளுக்கு தலா ஒரு மார்க், பாரதிக்கு ஒரு மார்க்). D grade.

    தொடர்புடைய பதிவுகள்
    விகடன் விமர்சனம்

    தமிழ் தயாரிப்பாளர்கள்


    போன பதிவு ஏவிஎம் செட்டியார் அளித்த ஒரு பழைய பேட்டி. செட்டியார் பற்றி நானும் ஏதாவது எழுதலாம் என்று பார்த்தேன், எனக்கு தயாரிப்பாளர்களை பற்றி அவ்வளவாக தெரியாது. அதே நேரத்தில் நண்பர் சூர்யா தன் தளத்தில் சாண்டோ சின்னப்பா தேவரை பற்றி ஒரு அருமையான பதிவு போட்டிருப்பதை பார்த்தேன். சரி, தயாரிப்பாளர்களை பற்றி பொதுவாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

    தமிழ் தயாரிப்பாளர்களில் எஸ்.எஸ். வாசன், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம், செட்டியார், தேவர் நான்கு பேரும் பல வருஷம் கொடி கட்டி பறந்தவர்கள்.

    ஏவிஎம் செட்டியார்

    ஏவிஎம் இத்தனை வருஷம் கழித்தும் நன்றாக இருப்பது பெரிய விஷயம். செட்டியார் நடுவில் ஒரு பத்து வருஷம் படமே வேண்டாம் என்று இருந்ததாகவும், அவர் இறந்த பிறகுதான் சரவணன் மீண்டும் முரட்டுக் காளை படத்துடன் அடுத்த இன்னிங்சை ஆரம்பித்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கென்னவோ பெரிய செட்டியார் இருந்தபோதுதான் நல்ல படங்கள் வந்தன என்று தோன்றுகிறது. நாற்பதுகளின் பிற்பகுதியிலிருந்து அறுபதுகளின் முற்பாதி வரைக்கும் பல நல்ல படங்கள் வந்தன. சபாபதி, நாம் இருவர், ஓரிரவு, வாழ்க்கை, பராசக்தி, பெண், அந்த நாள், நானும் ஒரு பெண், அன்னை, மேஜர் சந்திரகாந்த் ஆகியவை குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை. சரவணன் வந்த பிறகு மசாலா படங்கள்தான் வருகின்றன.

    எஸ்.எஸ். வாசன்

    எஸ்.எஸ். வாசன் ஒரு பத்து வருஷம் கொடி கட்டி பறந்தார். மங்கம்மா சபதம், சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், அவ்வையார் எல்லாம் பெரும் வெற்றி. நாற்பதுகளிலேயே கோடீஸ்வரர் ஆகிவிட்டார். அவருக்கு அப்புறம் படம் எடுப்பதில் இண்டரஸ்ட் போய்விட்டது என்று நினைக்கிறேன். இரும்புத் திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஒளி விளக்கு மாதிரி படங்கள் வந்தாலும், ஜெமினி ஃபில்ம்ஸ் அறுபதுகளிலேயே அமுங்கிவிட்டது.

    டி.ஆர். சுந்தரம்

    டி.ஆர். சுந்தரம் பெரிய ஆள். பாரதிதாசன், எம்ஜிஆர், கலைஞர், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் எல்லாரும் அவரிடத்தில் வேலை செய்திருக்கிறார்கள். மந்திரி குமாரி, திரும்பிப் பார், அலி பாபாவும் நாற்பது திருடர்களும் மாதிரி படங்களை எடுத்திருக்கிறார். ஆனால் அறுபதுகளில் வல்லவன் சீரிஸ் – வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன் மாதிரி – படங்கள் மட்டுமே எடுத்தது ஏன் என்று தெரியவில்லை.

    தேவர்

    இவர்கள் எல்லாம் கொடி கட்டி பறந்தாலும், நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வட்டத்தில் name recognition இருந்த ஒரே தயாரிப்பாளர் தேவர்தான். தேவரின் மிருகப் படங்கள் எங்கள் வட்டத்தில் பெரிய ஹிட். புலியையும், சிங்கத்தையும், யானையையும் நாங்கள் வேட்டைக்காரன் மாதிரி ஏதாவது படத்தில் பார்த்தால்தான் உண்டு. (உயிர் காலேஜ் எல்லாம் போனதில்லை.)

    தேவர் படங்கள் எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய காவியங்கள் இல்லை. அவருடைய ஆடியன்சுக்கு மன அளவில் ஒரு எட்டு வயதுதான் இருக்கும். எம்ஜிஆர், முருகன், மிருகங்கள் இவற்றை வைத்தே காலத்தை ஓட்டியவர். ஆனால் ஒரு நாளும் படம் பார்ப்பார்களை ஏமாற்றியதில்லை. அவர் கடை சமாசாரம் எப்படி இருக்கும் என்பது தெள்ளத்தெளிவாக இருந்தது. அது பிடிக்காதவர்கள் போக வேண்டாம்!

    எம்ஜிஆரை வைத்து அதிக படங்கள் எடுத்தவர் அவர்தான் என்று நினைக்கிறேன். எதுவும் எம்ஜிஆரின் சிறந்த படங்கள் லிஸ்டில் கூட வராது. வேட்டைக்காரன், நல்ல நேரம், தேர் திருவிழா, முகராசி இந்த மாதிரி படங்கள் நினைவு வருகின்றன. வேட்டைக்காரன், நல்ல நேரம் இரண்டும் பிரமாதமாக ஓடியன. இந்த நாலு படமும் தண்டம், இப்போது வேறு எதுவும் நினைவு வரவில்லை. எம்ஜிஆருக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்தது. இருவரும் ஒருவரால் ஒருவர் வளர்ந்தவர்கள். எம்ஜிஆர் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரால் இனி பேச முடியுமா, அவருக்கு இனி மேல் சினிமா வாழ்க்கை இருக்கிறதா என்று எல்லாரும் சந்தேகப்பட்டார்களாம். இவர் எம்ஜிஆரை பார்க்கப் போனாராம். போனவர் அடுத்த படம் நடிக்க வேண்டும் என்று ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தாராம்!

    அவருக்கென்று ஒரு ஆஸ்தான டீம் இருந்தது. கே.வி. மகாதேவன், எம்.ஏ. திருமுகம், தூயவன், ஆரூர் தாஸ், நாகேஷ், மேஜர், அசோகன் இல்லாமல் அவர் சாதாரணமாக படம் எடுப்பதில்லை.

    ஆங்கிலமும் தெரியாமல், ஹிந்தியும் தெரியாமல், ஹிந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தார்.

    அவருடைய படங்களில் தெய்வம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியது. படம் நன்றாக இருக்கும் என்று இல்லை, தண்டம்தான். ஆனால் கோவில்களின் அந்த கால நிலையை ஒரு டாக்குமெண்டரி போல நன்றாக எடுத்திருப்பார்.

    இவர்களைத் தவிரவும் பல தயாரிப்பாளர்கள் குறிப்பிட வேண்டியவர்கள். எம்ஜிஆர் புகழிலே கொஞ்சம் மங்கி தெரியும் பந்துலு, ஜூபிடர் சோமு, பக்ஷிராஜா ஃபில்ம்ஸ் ஸ்ரீராமுலு நாயுடு, தமிழில் பல வெற்றி படங்கள் எடுத்தாலும் தெலுங்கு கம்பெனியான விஜயா பிக்சர்ஸ் நாகி ரெட்டி, எம்ஜிஆர், சிவாஜி, கலைஞர், பி.எஸ். வீரப்பா, முரசொலி மாறன், ஸ்ரீதர், ஜி.என். வேலுமணி, ஏ.பி. நாகராஜன், பாலச்சந்தர் படங்களை தயாரித்த கலாகேந்த்ரா, பாலாஜி, பிற்காலத்தில் ஜீவி, ஆர்.பி. சௌத்ரி, கமல், கோவைத் தம்பி, பிரகாஷ் ராஜ், என்று சொல்லி கொண்டே போகலாம். ஆனால் இவர்களில் பலருக்கும் வேறு முக்கியமான முகங்கள் இருந்தன – எம்ஜிஆரை தயாரிப்பாளர் என்றா நினைவு வைத்துக் கொள்கிறோம்? அப்படி இல்லாதவர்கள் பலரும் நிலைத்து நிற்கவில்லை.

    இன்றைக்கு இவர்களுக்கு சமமாக சொல்லக் கூடிய கோலிவுட் பாதுஷாக்கள் இருக்கிறார்களா? உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்!

    தேவரை பற்றி சாரதா இன்னும் விவரங்கள் தருகிறார்.

    மேலும் சில படங்கள்: தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், குடும்பத் தலைவன், தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், தொழிலாளி, கன்னித் தாய், தனிப் பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, காதல் வாகனம் ப்ளஸ் நீங்கள் சொன்ன படங்கள் நாலு. இவற்றில் சில மட்டும் 100 நாட்கள் என்ற எல்லைக்கோட்டைத் தொட்டன. பெரும்பாலானவை 50-ஐக்கூட கடக்கவில்லை. அவர் தன் வாழ்நாளில் தமிழில் கண்ட ஒரே வெள்ளிவிழாப்படம் ஆட்டுக்கார அலமேலு மட்டும்தான். சில படங்கள் பெயரை மட்டும் மாற்றி விட்டுப் பார்த்தால் ஒரே மாதிரி இருக்கும். திருக்குறள் மாதிரி இரண்டு வரிக் கதைகளைத்தான் படமாக எடுப்பார். தேவர் படத்தின் கதையை ஒரு பஸ் டிக்கட்டின் பின்பக்கம் எழுதிவிடலாம் என்று கோலிவுட்டில் ஒரு வாசகம் உண்டு.

    ஜெய்சங்கரை வைத்து கெட்டிக்காரன், நேர்வழி போன்ற குப்பைப் படங்களையும், அக்கா தங்கை, பெண் தெய்வம், மாணவன் போன்ற நல்ல படங்களையும் எடுத்தவர். ரவிச்சந்திரனை வைத்து மகராசி என்ற படத்தையும் எடுத்தார். சிவகுமாரை கதாநாயனாக வைத்து ஆட்டுக்கார அலமேலு, வெள்ளிக்கிழமை விரதம், (பழைய) ஸ்ரீகாந்தை நாயகனாகவும் பிரமீளாவை நாயகியாகவும் போட்டு கோமாதா என் குல மாதா ஆகிய வெற்றிப்படங்களை எடுத்தார். இடையிடையே ஏ.வி.எம்.ராஜனை வைத்து துணைவன், தெய்வம், திருவருள் என் பக்திப்படங்களின் பக்கமும் தலைநீட்டினார்.

    ரஜினியை வைத்து தாய்மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம், தாய் வீடு மற்றும் கமலை வைத்து தாயில்லாமல் நானில்லை (எத்தனை தாய்கள்), ராம் லக்ஷ்மண் போன்றவை அவர் மறைவுக்குப்பின் அவரது வாரிசுகளால் தயாரிக்கப்பட்டவை. கடைசியாக ஆனந்த பாபுவை வைத்து தர்மம் என்ற படம் எடுக்கப்போக, படம் அட்டர் ஃப்ளாப். தேறவேயில்லை. தேவர் பிலிம்ஸ் அத்துடன் நொடித்துப்போனது. இதனிடையே வாரிசுகளுக்குள் பாகப்பிரிவினை தலைதூக்க தேவர் பிலிம்ஸ் மற்றும் தண்டாயுதபாணி பிலிம்ஸ் மூடுவிழா கொண்டாடியது.

    சின்னப்பா தேவர் யாரையும் எளிதில் நம்பி விடுவார். யாரும் அவரை சுலபமாக ஏமாற்றிவிடலாம். கே.வி.மகாதேவன் கூட வெறும் நாலு மெட்டுக்களை வைத்துக்கொண்டு அவருக்கு நாற்பது பாட்டுக்கள் போட்டுக்கொடுத்து விடுவார். தேவரின் நல்ல மனதுக்கு அவை பாப்புலராகிவிடும். இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ் ஜோடியை கண்ணதாசன் தேவருக்கு அறிமுகப்படுத்த, தேவர் அவர்களுக்கு படங்களில் வாய்ப்புக்கொடுத்ததால், படங்களில் டைட்டில்களில் ‘கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்’ என்று போட்டு தங்கள் நன்றியை காணிக்கையாக்கினர்.

    எனக்கு தேவர் எடுத்த எம்ஜிஆர் படங்கள் பெரிய ஹிட்கள் என்று நினைவு. என் impression டெண்டு கோட்டையில் இருந்த ரெஸ்பான்சை பார்த்து ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் சாரதா என்னை விட விஷயம் தெரிந்தவர். ஞாபகம் வராத எம்ஜியார் படங்களின் பேரை எடுத்து தந்த சாரதாவுக்கு நன்றி! எனக்கு அசோகன் அண்ணனாக வரும் படம் (தாய்க்கு தலை மகன்), அசோகன் ஒரு மாஸ்க் போட்டுக்கொண்டு வரும் படம் (தர்மம் தலை காக்கும்) என்றுதான் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. எம்ஜிஆர் ஒரு படத்தில் பறந்து கூட போவார் என்று ஞாபகம். என்ன படமோ தெரியவில்லை.

    சாரதா சொல்வது போல பாட்டுகள் – எம்ஜிஆர் படத்தில் கூட – பிரமாதமாக இருக்காது. சூர்யா சொல்வது போல மூன்று மாதத்தில் படம் எடுப்பதால் இருக்கலாம்.

    ஞாபகம் வரும் இன்னும் சில படங்கள் – நீலமலை திருடன் (ரஞ்சன்), சொர்க்கம் நரகம், இளஞ்ஜோடிகள், தர்மத்தின் தலைவன். கோமாதா என் குல மாதா ஹிந்தியிலும் காய் அவுர் கௌரி என்று வந்தது.

    தொகுக்க்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

    தொடர்புடைய சுட்டிகள்:
    ஆரூர் தாஸ் தேவரை நினைவு கூர்கிறார்
    பா.தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் என்ற புத்தகம் பற்றி பதிவர் சூர்யா
    தேவர் புத்தகம் பற்றி முகில், இதே புத்தகம் பற்றி பா. ராகவன்
    தேவர் பற்றி முரளி கண்ணன்

    சந்திரபாபு, சபாஷ் மீனா


    சந்திரபாபு பற்றிய முந்தைய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.

    சபாஷ் மீனா விமர்சனம் இங்கே.

    எழுத்தாளர் முகிலின் பதிவிலிருந்து, நண்பர் சூர்யா எடுத்துத் தந்த பகுதி கீழே.

    பத்மினி ப்ரொடக்ஷன்ஸ் பி.ஆர். பந்தலு, ப. நீலகண்டன் ஆகியோர் ‘சபாஷ் மீனா’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை எடுக்க விரும்பினார்கள்.

    கதாநாயகனாக நடிக்க சிவாஜியிடம் பேசினார்கள். கதையைக் கேட்டார் சிவாஜி. அதில் நாயகன் பாத்திரத்துக்கு இணையாக படம் முழுவதும் வரும் மற்றொரு நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு சிவாஜி, ‘அந்த கேரக்டருக்கு சந்திரபாபுவைப் போட்டா ரொம்ப நல்லா வரும்’ என்றார் அவர்களிடம்.

    ப. நீலகண்டன் தமது அலுவலகத்துக்குச் சென்று சந்திரபாபுவைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரைச் சந்திக்க வருவதாகக் கூறினார். அதற்குச் சந்திரபாபு, ‘நீங்க அங்கேயே இருங்க. நான் கிளம்பி வர்றேன்’ என சொல்லிவிட்டு தன் காரில் கிளம்பி வந்தார் மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகிலிருந்த பத்மினி பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு.

    ‘சபாஷ் மீனா’ படத்தின் கதை, சந்திரபாபுவின் கதாபாத்திரம், சிவாஜி சொன்ன கருத்து ஆகியவற்றை சந்திரபாபுவிடம் சொன்னார் நீலகண்டன்.

    ‘மிஸ்டர் சிவாஜி ஒரு நல்ல, பிரமாதமான ஆக்டர். என் திறமைய புரிஞ்சுக்கிட்டிருக்கார். அதான் என்னை சிபாரிசு பண்ணியிருக்கார்’ என சந்திரபாபு சொல்ல, நீலகண்டனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. சுதாரித்துக்கொண்டு, ‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும்’ என கேட்டார் நீலகண்டன்.

    ‘சிவாஜி கணேசனுக்குக் கொடுக்கறதை விட கூட ஒரு ரூபாய் கொடுங்க!’ என்றார் சந்திரபாபு.

    நீலகண்டனுக்கு என்ன பதில் பேசுவதென்றே புரியவில்லை. சிவாஜியிடம் நடந்ததைச் சொன்னார் நீலகண்டன்.

    ‘அவன்கிட்ட விஷயம் இருக்கு. இது காமெடிப் படம். சில ஸீன்களில அவன் நடிப்புதான் நிக்கும். நான்தான் பார்த்து நடிக்கணும். சில சமயங்களில் இப்படித்தான் லூசுத்தனமா பேசுவான். விடுங்க.’ – சிவாஜி சொன்னார்.

    சபாஷ் மீனா


    sabash_meena

    இந்த ஆள் மாறாட்ட கதை இன்றைக்கும் பயன்படுகிறது. உள்ளத்தை அள்ளித் தா இதே கதைதான். காதலா காதலா படத்தில் இதன் சாயல் உண்டு.

    1958-இல் வந்த படம். பந்துலுவின் சொந்தப் படம். அவரே இயக்கியும் இருக்கிறார். சிவாஜி, சந்திரபாபு, மாலினி, சரோஜா தேவி, குலதெய்வம் ராஜகோபால், பந்துலு டி. பாலசுப்ரமணியம் (திருத்திய நல்லதந்திக்கு நன்றி!), எஸ்.வி. ரங்காராவ் நடித்தது. இசை டி.ஜி.லிங்கப்பா. வெற்றிப் படம் என்று நினைக்கிறேன். ஹிந்தியில் இந்த படம் தில் தேரா தீவானா என்று ஷம்மி கபூர், மெஹ்மூத் நடித்து வந்தது.

    திருச்சியில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த சிவாஜி நாடகம், கீடகம் என்று சந்திரபாபுவோடு சுற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பொறுப்பு வருவதற்காகவும், அப்படியே பணக்கார ரங்காராவ் வீட்டில் சம்பந்தம் செய்வதற்காகவும் சிவாஜியை அவர் அப்பா பந்துலு பாலசுப்ரமணியம் சென்னைக்கு ரங்காராவ் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். சிவாஜி தன் நண்பன் சந்திரபாபுவை அங்கே ஆள் மாறாட்டம் செய்ய வைக்கிறார். சேரியில் ஒரு பெண்ணோடு லவ்வுகிறார். ஏறக்குறைய சந்திரபாபுவை மறந்தே விடுகிறார். ரங்காராவ் மகள் சரோஜா தேவிக்கும் சந்திரபாபுவுக்கும் இங்கே லவ் டெவலப் ஆகிறது. ஆனால் சந்திரபாபுவுக்கு ஒரே பயம். அவர் சரோஜா தேவியின் சொன்னதற்காக ஒரு நாடகத்தில் ரிக்ஷாக்காரன் வேஷம் போடுகிறார். பிறகு வீட்டை விட்டு ஓடி விடுகிறார். ஒரு நிஜ ரிக்ஷாக்காரன் (டபிள் ரோல்) சந்திர பாபு போலிருப்பதால் அவனை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். டாக்டர் ரிக்ஷாக்காரன் ரோலில் மூழ்கிவிட்டதால் அவருக்கு மனம் பேதலித்துவிட்டது என்று சொல்கிறார். பிறகு ஒரே கூத்துதான். கடைசியில் உண்மை தெரிந்து ஜோடிகள் சேர்ந்து சுபம்!

    சிவாஜி ஹீரோ என்றாலும் இது சந்திரபாபு படம். கொஞ்சம் நாடகத் தன்மை இருந்தாலும் நிறைய சிரிக்கலாம்.

    பந்துலு பாலசுப்ரமணியம் ரங்காராவை பார்க்க வரும் காட்சி சூப்பர்! சிவாஜி ஆஃபீஸில் இருக்கும் பாபுவிடம் போய் அப்பா வந்திருப்பதை சொல்வார். அப்பா பந்துலு பாலசுப்ரமணியம் அங்கே நுழைந்ததும் சிவாஜி தான்தான் மானேஜர் போல் நடிப்பார். பிறகு ரங்காராவ் நுழையும்போது பாபு இங்க்லீஷில் போட்டு தாக்குவது அபாரம்! அடுத்த சீனில் பந்துலு, ரங்காராவ் இருவரும் ஒன்றாக உள்ளே நுழைவார்கள். இரண்டு பேரும் பந்துலுவின் பாலசுப்ரமணியத்தின் “மகனிடம்” பேசுவார்கள். வாயையே திறக்காமல் சிவாஜியும் பாபுவும் சமாளிப்பார்கள். அருமையான இந்த காட்சியை கீழே காணலாம்.

    பாபுவுக்கு பேய் பிடித்துவிட்டது என்று அவரை தலை கீழே கட்டிப் போட்டிருப்பார்கள். பூசாரி “ஓடிட்ரயா” என்று கேட்பார். பாபு பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு தலைகீழா கட்டிபோட்டு ஓடிட்ரயா என்றால் எப்படிய்யா என்பார். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும்.

    ரிக்ஷாக்காரன் வீட்டுப் பக்கம் தவறுதலாக போய்விடும் பாபு ரிக்ஷாக்காரன் மனைவியை பார்த்து நீ யாரம்மா என்பார். கூச்சல் போட்டு எல்லாரும் வந்து உன் மனைவி குழந்தைகளையே யாரென்று கேட்கிறாயா என்று அடி போடுவார்கள். பாபு உடனே ஆமாமாம் என் மனைவிதான், என் குழந்தைகள்தான் என்று நாலு குழந்தைகளை அணைத்துக் கொள்வார். அடி போட்டவர்களில் ஒருவன் யோவ் அது என் குழந்தைய்யா என்று ஒரு குழந்தையை பிடுங்கிக் கொள்வான்!

    ராண்டார்கை இந்த ரிக்ஷாக்காரன் ரோலை செய்ய பாபு கொஞ்ச நாள் ரிக்ஷா இழுத்து பார்த்தார் என்று சொல்கிறார்!

    மாலினி வேறு எந்தப் படத்திலும் நடித்ததாக தெரியவில்லை. சரோஜா தேவி இரண்டாவது கதாநாயகி. அவர் சந்திரபாபுவுக்கு ஜோடியாக வேறு எதிலும் நடித்ததில்லை என்று நினைக்கிறேன். ரங்காராவுக்கு எக்சலண்ட், மார்வலஸ், அதாவது பிரமாதம் என்று இங்க்ளிஷும் தமிழும் பேசும் ஒரு அப்பா ரோல். குலதெய்வம் ராஜகோபாலுக்கு கொஞ்சம் பெரிய ரோல் என்று ஞாபகம். பாபு தனக்கு சிவாஜியை விட ஒரு ரூபாயாவது அதிக சம்பளம் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வாங்கிக் கொண்டாராம் என்று பக்ஸ் சொல்கிறான்.

    நல்ல பாட்டுகள். இப்போது ஞாபகம் வருவது சித்திரம் பேசுதடி. என்ன அற்புதமான பாட்டு? சிவாஜிக்கு கொஞ்சமும் பொருந்தாத குரல் டி.ஏ. மோதி. அவர் காணா இன்பம் கனிந்ததாலே என்று ஒரு பாட்டு பாடி இருப்பார். இந்த இரண்டு பாட்டுகளையும் இங்கே கேட்கலாம். இதைத் தவிர ஆசைக் கிளியே கோபமா என்ற ஒரு நல்ல பாட்டும் நினைவில் இருக்கிறது. பாபுவுக்கு சீர்காழி குரல் கொடுத்திருப்பார்! அதுதான் முதலும் கடைசி முறையுமாக இருக்கும்! அதன் வீடியோவை இங்கே பார்க்கலாம்.

    பாபு, பாட்டுகளுக்காக பாருங்கள். பத்துக்கு 7 மார்க். B grade.

    ஆயிரத்தில் ஒருவன்


    எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படம் இதுதான்.

    1965இல் வந்த படம். எம்ஜிஆர், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், மனோகர், ராமதாஸ், எல். விஜயலக்ஷ்மி நடிப்பு. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்து இசை அமைத்த கடைசி படம். பி.ஆர். பந்துலு சிவாஜியுடன் முறைத்துக் கொண்டு எம்ஜிஆர் பக்கம் வந்து எடுத்த முதல் படம். அவரேதான் இயக்கம் என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லைநண்பர் ராஜு உறுதி செய்கிறார். பிற்காலத்தில் கலைஞர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது சினிமா ஷூட்டிங்கில் இருந்தவர்தான் எம்ஜிஆர் என்று தாக்குவார் – அந்த சினிமா ஷூட்டிங் இதுதான்.

    கலர் படங்கள் அபூர்வமாகவே வந்த காலத்தில் வந்த கலர் படம். கலர் மேக்கப் ரொம்ப கோரமாக இருக்காது (சரோஜாதேவி, எங்க வீட்டுப் பிள்ளை, enough said) எட்டு மணி மணியான பாட்டுகள். ராஜா ராணி சாகசக் கதைகளில் எம்ஜிஆரை அடிக்க ஆளில்லை என்று நிரூபித்த படம்.

    ரஃபேல் சபாடினி என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் எழுதிய ஒரு புகழ் பெற்ற நாவலின் பெயர் காப்டன் ப்ளட் (Captain Blood). அந்தக் காலத்தில் மேற்கிந்திய தீவுகளில் இருந்த ஒரு பிரபலமான கொள்ளைக்காரனான சர் ஹென்றி மார்கனின் வாழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. பிற்காலத்தில் மார்கன் மேற்கிந்திய தீவுகளின் கவர்னர் ஆனார். இந்த நாவல் எர்ரால் ஃப்ளின் நடித்து திரைப்படமாக முப்பதுகளில் வந்தது. எம்ஜிஆரின் ஆதர்ச நடிகர்கள் டக்ளஸ் ஃபேர்பாங்க்சும் எர்ரால் ஃப்ளின்னும்தான். சபாடினியின் இன்னொரு புத்தகமான சீ ஹாக் (Sea Hawk)புத்தகத்திலிருந்து சில சீன்களை எடுத்து – – குறிப்பாக ஜெயலலிதாவை ஏலம் விடும் சீன், அவர் ஆடாமல் ஆடுகிறேன் என்று பாடுவார் அந்த சீன் – இந்த புத்தகத்துடன் சேர்த்து உருவாக்கப்பட்ட திரைக்கதைதான் ஆயிரத்தில் ஒருவன்.

    எம்ஜிஆர் ஒரு டாக்டர். சர்வாதிகாரி மனோகரை எதிர்க்கும் புரட்சியாளர்களுக்கு தன் தொழில் தர்மப்படி சிகிச்சை அளிப்பார். அதற்காக அடிமையாக ராமதாசின் தீவில் விற்கப்படுவார். அங்கே சென்று நாம் அடிமையாகவே இருக்க வேண்டியதுதானா என்று கேட்கும் தோழர்களுக்கு ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே, நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே என்று ஆறுதல் சொல்வார். நடுவில் தன்னை சைட் அடிக்கும் ஜெவை பற்றி மாளிகையில் அவள் வீடு, மரக்கிளையில் ஏன் கூடு, இதில் நான் அந்த மான் நெஞ்சில் வாழுவதெங்கே கூறு என்று பாடுவார். கொள்ளை அடிக்க வரும் நம்பியாருடன் போராடினால் சுதந்திரம் தருகிறேன் என்று சொல்லும் ராமதாசை நம்பி நம்பியாரை விரட்டுவார். ஏமாற்ற நினைக்கும் ராமதாசிடமிருந்து தப்பி நம்பியாரின் கப்பலில் போவார். நம்பியாரின் ப்ளாக்மெயிலால் கொள்ளைக்காரனாக மாறுவார். ஆனால் கொள்ளைக்காரர்களிடமிருந்துதான் கொள்ளை அடிப்பார். ஜெவின் கப்பலை கைப்பற்றுவார். ஜெவை விரும்பும் நம்பியாரிடமிருந்து அவரை காப்பாற்ற தன் அடிமையாக்கிக் கொள்வார். பிறகு அவரை மணப்பார். நம்பியாரிடமிருந்து தப்ப முயற்சி செய்யும்போது நம்பியாருடன் ஒரு சூப்பர் கத்தி சண்டை போட்டு பிறகு அதோ அந்த பறவை என்று பாட்டு பாடி, மனோகரின் கப்பலுடன் சண்டை போட்டு, மனோகரை சாவிலிருந்து காப்பற்றி, மனோகர் தரும் ராஜ பதவியை நிராகரித்து டாக்டராகவே வாழ்வார்.

    அவரல்லவோ சூப்பர்மான்? ரஜினியும், விஜயும் எந்த காலத்திலும் அவருக்கு ஈடாக முடியாது.

    அருமையான ஆர்ட் டைரக்ஷன். காட்சிகள் மிகவும் ரிச்சாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கப்பல் காட்சிகள் நம்மை இன்னும் அசத்துகின்றன. பந்துலு பணத்தை தண்ணீராகத்தான் செலவழித்திருக்கிறார்.

    எம்ஜிஆர், நம்பியார், ஜெ, ராமதாஸ் ஆகியோருக்கு நல்ல வேஷப் பொருத்தம். சரோஜா தேவியின் கொஞ்சல் பாணியிலிருந்து விடுதலை! நாகேஷ் ராமதாஸ் காட்சிகளில் சிரிக்கலாம்.

    நம்பியாரிடமிருந்து ஜெவை ஒரு பெட்டியில் வைத்து கடத்தி செல்ல, நம்பியார் அந்த பெட்டியில் தன் வாளை செருகும் காட்சி அருமையானது. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்று பாடும் போது தியேட்டரில் உற்சாகம் பிய்த்துக்கொண்டு கிளம்பும்.

    ராமதாஸ் பேசும் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய்தான் காது வரை இருக்கிறது” என்ற வசனம் எங்கள் வட்டத்தில் ரொம்ப ஃபேமஸ்!

    கண்ணதாசனும் வாலியும் போட்டி போட்டுக்கொண்டு அருமையான பாட்டுகளை எழுதி இருக்கிறார்கள். கண்ணதாசன் “அதோ அந்தப் பறவை“, “நாணமோ” பாட்டுகளை எழுதினால், வாலி “பருவம் எனது பாடல்“, “ஆடாமல் ஆடுகிறேன்“, “ஏன் என்ற கேள்வி“, “ஓடும் மேகங்களே“, “உன்னை நான் சந்தித்தேன்” போன்ற பாட்டுகளில் அசத்தி இருக்கிறார்.

    எனது ஃபேவரிட் அதோ அந்த பறவைதான். எல்லாருக்குமே அதுதான் ஃபேவரிட். பாட்டும், கப்பலில் எம்ஜிஆரும் ஜெவும் ஓடி ஆடி பாடுவதும் பிரமாதம்.

    எனக்கு பிடித்த அடுத்த பாட்டு ஏன் என்ற கேள்விதான். அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆரும் அவர் தோழர்களும் வட்டமாக படுத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கும் காட்சி பார்க்க பிரமாதமாக இருக்கும்.

    ஓடும் மேகங்களேவுக்கு மூன்றாவது இடம். நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் என்ற வரிகள் மிக அருமை. படத்தின் டைட்டிலை வேறு அர்த்தத்தில் வாலி உபயோகித்திருப்பார். வார்த்தைகள் வருவதற்கு முன் அருமையான இசை.

    ஒரே ஒரு டூயட் – நாணமோ. நல்ல பாட்டு.

    ஜெவுக்கு மூன்று சோலோ பாட்டுகள். பருவம் எனது பாடல், உன்னை நான் சந்தித்தேன், ஆடாமல் ஆடுகிறேன் என்று. நன்றாக, அந்த காலத்துக்கு கவர்ச்சியாக ஆடியிருப்பார்.

    இன்னும் ஒரு பாட்டு இருக்கிறதோ? சரியாக நினைவு வரவில்லை.

    பாட்டுகளை இங்கே கேட்கலாம்.

    சிறந்த பொழுதுபோக்கு படம். கட்டாயம் பாருங்கள். 10க்கு 8 மார்க். A- grade.