சக்கரம்: பழைய திரைப்படம்


இந்தத் தளத்தில் பழைய திரைப்படங்களைப் பற்றித்தான் எழுதுவேன். வாரம் ஒரு பதிவாவது எழுத வேண்டும் என்று எண்ணம். ஆனால் பழைய படம் ஒன்றைப் பார்த்து கொஞ்ச நாளாகிவிட்டதால் தாமதமாக பதிவு வருகிறது.

சக்கரம் படத்தைப் பற்றிய எனது ஒரே நினைவு – அதில் “காசேதான் கடவுளப்பா” என்ற பிரபலமான பாடல் உண்டு.

நான் ஏ.வி.எம். ராஜன் நடித்த படங்களை பொதுவாக ரசிப்பதில்லை. அவர் சிவாஜியின் சுமாரான நகல் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. (இத்தனைக்கும் “என்னதான் முடிவு” எனக்குப் பிடித்த திரைப்படங்களில் ஒன்று.) அதனால் பழைய திரைப்படங்களை விரும்பிப் பார்த்தாலும் இதைத் தவிர்த்தே வந்திருக்கிறேன்.

கடைசியாக ஒரு வழியாகப் பார்த்தேன். வழக்கமான காட்சிகள் உண்டுதான் என்றாலும் தமிழுக்கு வித்தியாசமான படம்தான். வழக்கமான காதல், குடும்பம், பாசம் என்று இல்லாமல் இருப்பதே கொஞ்சம் refreshing ஆக இருக்கிறது. ராஜனின் பாத்திரமும் நடிப்பும் நன்றாகவே வந்திருக்கின்றன. அவருக்கு “வில்லன்” பாத்திரம்தான் என்றாலும் அவர்தான் நாயகன், ஜெமினி கணேசன் சும்மா ஒப்புக்கு சப்பாணிதான்.

1968-இல் வந்த திரைப்படம். ஜெமினி, ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா, சௌகார் ஜானகி, நாகேஷ், மனோரமா, மேஜர் சுந்தரராஜன், எம்.ஆர்.ஆர். வாசு, ஓ.ஏ.கே. தேவர், வி.எஸ். ராகவன் என்று பலரும் நடித்திருக்கிறார்கள். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை. திரைக்கதை, இயக்கம் ஏ. காசிலிங்கம்.

எளிய கதைதான். ஜம்பு (ராஜன்) மைசூர் காடுகளில் வாழும் நல்ல மனம் படைத்த கொள்ளைக்காரன். திருடும் பணத்தை ஏழைகளுக்கு கொடுத்துவிடுகிறான். பண்ணையார் (வி.எஸ். ராகவன்) வீட்டில் திருடப் போகும்போது அங்கு பிரசவ வலியால் துடிக்கும் பண்ணையார் பெண்ணைக் காப்பாற்றி அவளை தங்கையாக ஏற்றுக் கொள்கிறான். பணக்காரப் பையனோடு காதல் தோற்றுவிடும் என்பதால் தற்கொலை செய்து கொள்ளப் போகும் பாபுவின் (ஜெமினி) தங்கையைக் காப்பாற்றுகிறான். ஜம்புவை பிடித்துக் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று அரசு அறிவித்திருக்கிறது.

பாபுவின் தங்கை காதலிப்பது அவனது எஜமானி அம்மாளின் (சௌகார்) பையனை. சௌகார் வசதி படைத்த குடும்பத்தவர்தான், ஆனால் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறார். 50000 ரூபாய் கொடுத்தால் உன் தங்கையை மருமகளாக ஏற்கிறேன் என்கிறார்.

பாபு ஜம்புவைப் பிடித்துக் கொடுத்து லட்ச ரூபாய் பரிசை வெல்லலாம் என்று கிளம்புகிறான். அவனுக்கு துணையாக அவன் காதலி (நிர்மலா); மற்றும் காடுகளைப் பற்றி நன்கு அறிந்த வழிகாட்டி (நாகேஷ்), கத்தி வீசும் நிபுணன் (ஓ.ஏ.கே. தேவர்), வர்மக்கலை நிபுணன் (வாசு), கயிறு வீசும் நிபுணன் ஒருவன் சம்பளம் பேசி சேர்ந்து கொள்கிறார்கள். ஜம்புவின் தோழர்களை இந்த நிபுணர்கள் கொன்றுவிட, பாபு ஜம்புவை சண்டை போட்டு தோற்கடிக்கிறான். ஜம்பு பாபுவிடம் சரண், தப்பி ஓடமாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறான்.

லட்ச ரூபாய் பரிசு, தங்களுக்கு நூறுகளில்தான் சம்பளம் என்று உணரும் தோழர்கள் பணத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள். ஜம்புவின் தங்கைதான் நாகேஷின் மனைவி (மனோரமா). அண்ணனைப் பிடித்துக் கொடுத்தால் லட்ச ரூபாய் பரிசு என்றதும் பிடித்துக் கொடுக்க அவளும் தயாராக இருக்கிறாள். ராஜன் பணத்துக்கு முன் நட்பும் உறவும் ஒரு பொருட்டில்லை என்று காசேதான் கடவுளப்பா என்று பாட்டு பாடுகிறார். கடைசியில் சௌகார்தான் ராஜனின் மனைவி வேறு. சௌகார் தற்கொலை செய்து கொள்ள, பத்தினிக்கு பணம் தூசு என்று வசனம் பேசிவிட்டு ராஜனும் தற்கொலை. பணம் தேவையில்லை என்று எல்லாரும் மறுக்கிறார்கள்.

தமிழ் திரைப்படங்களில் எதிர்பார்க்கக் கூடிய திருப்பங்கள், twists எல்லாம் உண்டுதான். ஆனால் கதைக்களம் வித்தியாசமாக இருப்பதால் திரைப்படம் பிழைக்கிறது. ராஜன் நன்றாகவே நடித்திருக்கிறார். ஜெமினியும் நாகேஷும் தண்டத்துக்கு வந்து போகிறார்கள். நாகேஷுக்காக படம் கொஞ்சம் ஓடலாம் என்ற காலம். நிர்மலா அதை விட தண்டம்.

பழைய படம் விரும்பிகள் பார்க்கலாம். பத்துக்கு 6.5 மதிப்பெண். C+ grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: யூட்யூபில் திரைப்படம்

 

ஆலயம் – பழைய தமிழ் திரைப்படம்


ஆலயம் (1967) 1967-க்கான சிறந்த தமிழ் திரைப்படம் விருது பெற்றது.

பிலஹரி எழுதிய நெஞ்சே நீ வாழ்க நாடகம்தான் மூலம். இயக்குனர்கள் பீம்சிங்கின் சீடர்களான திருமலை-மகாலிங்கம். மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், வி.கே. ராமசாமி, மனோரமா, ஸ்ரீகாந்த், சோ ராமசாமி, ஏ. கருணாநிதி, டைப்பிஸ்ட் கோபு, பக்கோடா காதர் நடித்திருக்கிறார்கள். டி.கே. ராமமூர்த்தி இசை.

1967-க்கு நல்ல திரைப்படம்தான். வழக்கமான காதல் மோதல் பாசம் குடும்பம் என்ற கருக்களிலிருந்து விலகி இருப்பதாலேயே தனியாக நிற்கிறது. இன்று கொஞ்சம் வயதாகிவிட்டாலும் பார்க்கலாம்.

எளிய கதைதான். மேஜர் அப்பழுக்கற்ற நேர்மையாளர், அதனால் அலுவலகத்திலும் சரி, ஊரிலும் சரி நிறைய மரியாதை. மேஜருக்கு 5000 ரூபாய் லஞ்சம் தர வருபவரை மேஜர் விரட்டிவிடுகிறார். ஆனால் மேஜரின் மாப்பிள்ளைக்கு திடீரென்று பண நெருக்கடி. நாலு மணிக்குள் 5000 ரூபாய் புரட்டாவிட்டால் சிறை செல்ல வேண்டியதுதான். மேஜர் என்ன செய்யப் போகிறார்?

முதலில் தன் மீது எக்கச்சக்க மரியாதை வைத்திருக்கும் முதலாளி ஸ்ரீகாந்திடம் கடன் கேட்க முயற்சிக்கிறார். ஆனால் ஸ்ரீகாந்த் இவர் வாயைத் திறக்கும் முன் தற்செயலாக நாளை வருமான வரி கட்ட 10000 ரூபாயை எப்படியாவது புரட்ட வேண்டும் என்கிறார். லஞ்சம் வாங்கிக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கிறார். ஸ்ரீகாந்த் மேஜரின் நேர்மையை புகழ்ந்து பேசுவதை கேட்கிறார், மனம் மாறுகிறார். நண்பர் ஒருவர் மகள் கல்யாணத்துக்காக கடன் வாங்கிய 5000 ரூபாயை இவரிடம் கொடுத்து எனக்கு வங்கி கணக்கு இல்லை, இரண்டு மாதம் கழித்து வாங்கிக் கொள்கிறேன் என்று இவரிடம் கொடுத்து வைக்கிறார். ஒரு உத்தரவாதமும் இல்லாமல் பணத்தை கொடுத்திருக்கிறாயே முட்டாளே என்று இன்னொரு அலுவலக குமாஸ்தா பேச அலுவலக பியூன் நாகேஷ் யாரை சந்தேகப்படுகிறாய் என்று கத்துகிறார்.

யாராவது என்னை அயோக்கியன் என்று சொல்லிவிட மாட்டார்களா, என் மீது நம்பிக்கை வைக்காமல் இருக்கமாட்டார்களா, அப்படி இருந்தால் என் மனத்தடைகள் நீங்கி நண்பனை ஏமாற்றுவேன் இல்லாவிட்டால் லஞ்சம் வாங்குவேன் என்று மேஜர் தவிக்கிறார். ஆனால் கடைசியில் மன உறுதி பெறுகிறார்; லஞ்சம் வாங்கலாம் என்று நினைத்தற்காக வேலையை ராஜினாமா செய்கிறார். மாப்பிள்ளையின் நெருக்கடி அதிர்ஷ்டவசமாக நீங்கிவிட, மேஜர் நிம்மதியில் இறந்தே போகிறார்.

மேஜரின் சிக்கல் சிறப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது. மெலோட்ராமா குறைவு. மேஜர் பிறழ முயற்சிப்பதும், ஆனால் அவரால் முடியாமல் போவதும் நன்றாக வந்திருக்கிறது. ஓரளவு டென்ஷன் குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

திரைப்படத்தின் பலவீனம் அதன் சபா நாடகத்தன்மை. நகைச்சுவை வலிந்து புகுத்தப்பட்டிருக்கிறது. அலுவலகத்தில் வேலையைப் பார்க்காமல் ஸ்ரீராமஜயம் எழுதும் வி.கே. ராமசாமி, பத்திரிகைகளுக்கு கதை எழுதும் ஒரு குமாஸ்தா, மனோரமாவை சைட்டடிக்கும் சோ, மனோரமா-நாகேஷ் காதல் என்பதெல்லாம் கதையின் டென்ஷனை குறைக்கிறது. உதாரணத்துக்கு ஒரு நகைச்சுவைக் காட்சியில் வி.கே. ராமசாமியின் துணிகளை அலுவலகத்துக்கு எடுத்து வரும் வண்ணான். வண்ணானாக வருபவர் நன்றாகவே நடித்திருக்கிறார்,  கழுதையை ஹூம் என்று விரட்டிக் கொண்டே இருப்பது இயல்பாக இருக்கிறது, ஆனால் காட்சி செயற்கையாக இருக்கிறது.

டைப்பிஸ்ட் கோபுவுக்கு இதுதான் முதல் திரைப்படம். (நாணல் என்றும் எங்கோ படித்திருக்கிறேன்.) அலுவலகத்தில் டைப்பிஸ்ட். நாடகத்திலும் அவருக்கு இதே பாத்திரம்தான். நாடகத்தில் அவருக்கு வசனமே கிடையாதாம். திரைப்படத்தில் ஒரே ஒரு வசனம் பேசுகிறார். அப்படி இருந்தும் நாடகத்தில் நினைவில் நிற்கும்படி நடித்ததால்தான் டைப்பிஸ்ட் கோபு என்று அழைக்கப்பட்டாரம்.

பாடல்கள் எதுவும் நினைவில் நிற்கவில்லை.

வித்தியாசமான கதை மற்றும் மேஜர், ஏ. கருணாநிதி நடிப்புக்காக நூற்றுக்கு 65 மதிப்பெண் தருகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் திரைப்படங்கள்

தர்மம் எங்கே?


சிவாஜியின் சொந்தப் படம் போலிருக்கிறது. சிவாஜி, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ், நம்பியார், குமாரி பத்மினி, ராமதாஸ், செந்தாமரை நடித்தது. இசை எம்எஸ்வி. வசனம் சக்தி கிருஷ்ணசாமி. இயக்கம் திருலோகச்சந்தர். 1972-இல் வந்திருக்கிறது.

ஒரு கற்பனை நாட்டில் படம் நடக்கிறது. நம்பியார் கொடுமைக்கார ராஜப் பிரதிநிதி. (ராஜாவை கடைசி வரைக்கும் காணவில்லை.) சிவாஜி கொஞ்சம் அப்பாவி கிராமத்தான். ஊர்க்காரர்கள் ராணுவத்தின் கொடுமையைப் பற்றி நம்பியாரிடம் முறையிடப் போகும்போது சிவாஜியையும் கூட்டிக் கொண்டு போகிறார்கள். நம்பியார் என்ன சாட்சி என்று கேட்க, எல்லாரும் பயப்படுகிறார்கள். சிவாஜி முன் வந்து நான் சாட்சி சொல்கிறேன், என் கண்ணால் பார்த்தேன் என்கிறார். நம்பியார் எல்லாரையும் சரி போங்கள் என்று விரட்டிவிட்டு சிவாஜியை அப்புறம் கைது செய்கிறார். சிவாஜி தப்பிக்கிறார். ஜெயலலிதா காப்பாற்றுகிறார். ஜெ இருக்கும் நாடோடி கும்பல் அவருக்கு ஆதரவு தருகிறது. மைத்துனர் முத்துராமன் அவரோடு சேர்ந்துகொள்கிறார். கலகம், புரட்சி, சிவாஜி நம்பியாரை விரட்டிவிட்டு புது ராஜபிரதிநிதி ஆகிறார். தனக்குப் பதவி தரவில்லை என்ற கோபத்தில் முத்துராமன் சிவாஜிக்கு எதிராக கிளம்புகிறார். கடைசியில் அவர் வேறு வழியில்லாமல் மனம் திருந்தி, க்ளைமாக்சுக்காக செஞ்சி போய் சண்டை போட்டு, சுபம்!

மூன்று விஷயங்கள் நன்றாக இருந்தன.

சிவாஜி ராணுவத்தின் கொடுமையைப் பற்றி சாட்சி சொல்ல வரும்போது நம்பியார் என்ன ரியாக்ஷன் காட்டுகிறாரோ அதே ரியாக்ஷன் சிவாஜி முத்துராமனின் கழகத்தைப் பற்றி ஒருவன் சாட்சி சொல்லும்போதும். பதவி மனிதனை மாற்றுகிறது என்று அருமையாக டெவலப் செய்திருக்கலாம். ஆனால் எழுபதுகளில் சிவாஜி நெகடிவ் ரோல்களைத் தவிர்த்தார். ரொம்ப நல்லவராகத்தான் வருவார். அதனால் ஒரு சீனோடு இது முடிந்துவிடுகிறது. இருந்தாலும் திரைக்கதை எழுதியவருக்கு ஒரு சபாஷ்!

முத்துராமன் தூக்குமேடையில் இருக்கும்போது மனோகரா ஸ்டைலில் சிவாஜி வசனம் பேசுகிறார். நல்ல வசனங்கள். சக்தி கிருஷ்ணசாமிக்கு ஒரு சபாஷ்!

சுதந்திர பூமியில் பல வகை ஜனங்களும் என்ற பாடல் அருமை. அருமையான சந்தம். எழுதிய கண்ணதாசன், இசை அமைத்த எம்எஸ்வி, பாடிய டிஎம்எஸ், சிவாஜியின் முதுகில் ஒரு பெரிய பூக்கூடையை வைத்து வித்தியாசமாக படமேடுத்திருந்த ஒளிப்பதிவாளர்+இயக்குனர்+உடை இன் சார்ஜ் எல்லாருக்கும் ஒரு சபாஷ்! சாரதா, நீங்கள் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஓபனிங் சாங் என்று இந்த காலத்தில் வருவதை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள். இவ்வளவு நல்ல பாட்டுக்கு ஆடியோ வீடியோ எதுவும் கிடைக்கவில்லை.

இதைத் தவிர பள்ளியறையில் வந்த புள்ளி மயிலே என்ற கொஞ்சம் பிரபலமான பாட்டு ரிச்சாக படமாக்கப்பட்டிருக்கிறது.

மற்றபடி படத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நாகேஷ் காமெடி, சண்டைக் காட்சிகள் எதுவும் தேறவில்லை. நம்பியார் வழக்கம் போல கையைப் பிசைகிறார். அம்மாவாக வருபவர் உருகி உருகி வசனம் பேசுகிறார். சிவாஜி அங்கங்கே ஓவர் ஆக்டிங் செய்கிறார். எல்லாரும் ஹிப்பி ஸ்டைலில் வருகிறார்கள்.

சிவாஜி ரசிகர்கள் நிச்சயமாக பார்க்கலாம். மற்றவர்களுக்கு கொஞ்சம் சினிமா பைத்தியம் இருக்க வேண்டும்.

கொடி மலர்


1966ல் ஸ்ரீதர் டைரக்‌ஷனில் வந்த திரைப்படம்.  கதை மாந்தர்களைக் காட்டிலும் கதையை நம்பி எடுக்கப்பட்டத் திரைப்படம். ஸ்ரீதர் பொதுவாகவே அப்படித்தானே. அவருடைய அத்தியாயத்தின் கடைசி பக்கங்களில் சில திரைப்படங்கள் இந்த இலக்கணத்தைப் பின்பற்றாமல் போனாலும்  அதற்கு முன்னர் வந்த திரைப்படங்களின் தரத்தை நாம் எப்படி சீர்தூக்கிப் பார்த்தாலும் சோடை போனதில்லை. கொடி மலர் அப்படிபட்ட தரமான ஒரு திரைப்படம்.

பிரபல நடிகர்கள் – முத்துராமன், ஏவிஎம் ராஜன், நாகேஷ்

பிரபல நடிகைகள் – காஞ்சனா, விஜயகுமாரி, எஸ்.என். பார்வதி, (முத்துராமனின் தாய் காரக்டரரில் நடித்தவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் முக்கிய ரோல். பிற்சேர்க்கை – எம்.வி.ராஜம்மா  – நன்றி அப்துல்)

இசை – எம்.எஸ்.விஸ்வனாதன் பாடல்கள் – கண்ணதாசன்

டைரக்‌ஷன் – C.V.ஸ்ரீதர்

சமூக மாற்றத்தின் விளம்பில் அகப்பட்டுக்கொள்ளும் குடும்பங்கள் எது சரி, எது தவறு, ஏற்றுக் கொள்வதா, ஏற்க மறுக்கவேண்டுமா என்று தடுமாறுகிறார்கள். குடுமபத்தில் சிலர் மற்றங்களை ஏற்றுக் கொள்வதும், சிலர் ஏற்க மறுப்பதும் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இந்தப் பிரச்சனையை படம் பிடித்துக் காட்டும் ஒரு முயற்சியை கொடிமலிர்ல் ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார்.

முத்துராமன் அண்ணன். ஏவிஎம் ராஜன் தம்பி. இருவரும் இரு துருவங்கள். ஏவிஎம் ராஜன் கல்லூரியில் படித்து முடித்து வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது ”மாற்றம்” எனும் முன்னேற்றக் கொள்கைகளுடன் நுழைகிறார். பழமைவாதங்களில் மூழ்கியிருக்கும் தாயுடன் போராட்டம் துவங்குகிறது. மிகுந்த வசதி படைத்தவர்களாயினும் இளைய மகனின் மோட்டார் சைக்கிளையே தேவையற்ற ஒரு பொருளாக கருதுகிறார் தாய். அனாவசிய பண விரயம் என்று கருதுகிறார். தன்னிடம் அனுமதி வாங்காமல் மகன் த்ன்னிச்சையாக செயல்படுவதும் மரபிலிருந்து விலகிச்செல்வதும் தாய்க்கு ஒரு சுமையாகத் தெரிகிறது.  மகனோ தாயிடம் மரியாதையாகவும், அன்புடன் இருக்கவேண்டும், ஆனால் தன் வாழ்க்கை தனது, அதில் முடிவுகள் தனதாகவே இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் உறுதியாக இருக்கிறார். இதனால் மகனுக்கும் தாய்க்கும் இடைவெளி பெரிதாக உருவாகிவிடுகிறது. அதனால் தாயும் இளைய மகன் நம் கை அடக்கத்தில் இல்லை என்பதை மனதளவில் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் மகன் தன்னைவிட்டுப் போய்விடுவானோ என்ற பயம் இருப்பதால் அவன் வழியில் குறுக்கிடாமலும், மகன் சற்றே ஓங்கிப் பேசினால் பயந்து விடுவதும் இயல்ப்பாகிப் போகிறது.

மூத்த மகன் முத்துராமன். மூத்த மகன் இன்னொரு துருவம். அம்மா மேல் பக்தியே வைத்திருக்கிறார். அம்மா சிறிது மனம் கோணல் அடந்தாலும் துடித்து விடுகிறார். அம்மாவுக்கும் மகன் கையடக்கமாக இருப்பதில் பரம திருப்தி. தம்பியை பல முறை அம்மாவுக்காக கண்டித்தாலும், தம்பியின் மேலும் மிக பாசமாக உள்ளவர். தமபியைப் போல் அல்லாம்ல் மாமாவிடமும் மிகுந்த மரியாதையுடையவர். வீட்டிலேயே வளர்ந்து அம்மா வா என்றால் வருவதும், போ என்றால் போவதுமாக அம்மாவின் நிழலாக இருப்பவர்.

தாய் மாமா நாகேஷ். அவருக்கு அக்காவை விட்டால் பூவாவுக்கு வழியில்லை. இடமும் கிடையாது. அக்காவை காக்கா பிடித்துக் கொண்டும், அக்கா கொடுக்கும் இடத்தினால் கணக்கராக இருந்து வீட்டிலும், வயலிலும் எல்லோரையும் வேலை வாங்குவதும், அக்கா மகன்களையும், அக்காவையுமே தன் சொந்தங்களாகவும் கொண்டிருக்கிறார். தன் பாச்சா இளைய மகனிடம் பலிக்காவிட்டாலும் துணிச்சலாக அக்காவுக்காக பரிந்து இளைய மகனிடம் மோதிக் கொண்டு காலம் தள்ளுகிறார்.

பைக்கில் கிராம்ங்களை வலம் வருகையில் இயற்க்கையிலேயே துணிச்சலான காஞ்சனாவை சந்திக்கிறார் இளைய மகன். காதல் மலர்கிறது. விஜயகுமாரி காஞ்சனாவின் அக்கா. ஊமைப்பெண். இவர்கள் தந்தை பரம் ஏழை. தாய் எஸ்.என்.பார்வதி. ஊமையானாதால் மூத்த மகளை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் வெதும்புகிறார் தந்தை. ஊமைப் பெண்ணை தன் அசட்டு மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார் பஞ்சாயத்து தலைவர்.  காஞ்சனாவின் துணிச்சலாலும், மதி நுட்பத்தாலும் குடுமபம் ஒருவாறு தாக்குப்பிடிக்கிறது. மூத்த மகளுக்கு திருமணம் ஆகாது என்று நினைத்து இளைய மகளுக்குத் திருமணம் செய்யத் தயாராகிறார்கள் பெற்றோர்கள்.

முத்துராமனுக்கு மனம் செய்ய தாய் தயாராகிறார். திருமணம் நடை பெறவிருக்கும் சமயத்தில் தாய் உடல் நலம் குன்றுகிறது. அதனால் தாய் மாமா தலைமையில் சகோதரர் இருவரும் செல்கிறார்கள். மனப்பெண் காஞ்சனா. அதே முகூர்த்தத்தில் விஜயகுமாரி பஞ்சாயத்து தலைவரின் அழுத்தம் தாங்க முடியாமல் அவரின் அசட்டு மகனுக்கு மணம் செய்யத் தயாராகிறார்கள். ஏவிஎம் ராஜனும் காஞ்சனாவும் பரிதவிக்கிறார்கள்.

இந்த இடத்தில் சினிமாத்தனம் புகுந்து விடுகிறது. விஜயகுமரி கிணத்தில் குதிக்க முத்துராமன் காப்பாற்ற பெருந்தன்மையுடம் ஊமைப்பெண்ணை மனம் செய்து கொள்கிறார். அனால் தாய் வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. தாய்க்கு எதிராகப் பேசி பழக்கமில்லாத மகன் விஜயகுமாரியை அவர் வீட்டிற்கே அனுப்பிவிடுகிறார் மகன்.

அதன் பிறகு ஏவிஎம் ராஜன் காஞ்சனா திருமணம் நடக்கிறதா, முத்துராமன் விஜயகுமாரியுடன் சேருகிறாரா? என்பதயெல்லாம் வெள்ளித்திரையில காண வாருங்கள் என்று கமர்சியல் தான் போடமுடியும். கதையை கொடுத்துவிட்டேன் (அப்படியெல்லாம் இல்லாமலேயே) என்று ஒரு வாசகர் கொந்தளித்துவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். உங்களுக்கு எங்கேயாவது டிவிடி கிடைக்கமலா போய்விடும்?

”மௌணமே பார்வையாய்” என்று பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடும் பாட்டு பெரிய ஹிட். எம்.எஸ்.வியின் இசையில் அருமையாக இருக்கிறது.

அம்மா கேரக்டர் யாரென்று கண்டு பிடித்து கூறுபவர்களுக்கு நூறு கைத்தட்டல்கள் இனாம்.

நூற்றுக்கு அறுபத்தைந்து மதிப்பெண்கள்.

இவர்கள் வித்தியாசமானவர்கள்


(By Saradha – Originally published in Forum Hub)

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த இன்னொரு வித்தியாசமான படம்.

எழுபதுகளின் இறுதிப்பகுதிகளில், முழுநேர நாடக நிறுவனங்களில் மனோகரின் நேஷனல் தியேட்டர்ஸ் போன்ற ஒரு சிலவே தொடர்ந்து நாடகங்கள் நடத்திக்கொண்டிருக்க, சென்னை நாடக அரங்குகளில் பெரும்பாலும் அமெச்சூர் நாடகமன்றங்களே கோலோச்சிக்கொண்டிருந்தன. அப்படியான அமெச்சூர் நாடகக்குழுவில் கோலோச்சிக்கொண்டிருந்த ஒருவர் கதாசிரியர், வசனகர்த்தா, மற்றும் இயக்குனர் என்ற முப்பரிமாணங்களுடன் 1979-ல் திரையுலகில் கால் பதித்தார். அவர்தான் இன்றைக்கும் திரையுலகில் வலம் வந்துகொண்டிருக்கும் “மௌலி”. அவருடைய வித்தியாசமான சிந்தனையில் உருவானதுதான் ‘இவர்கள் வித்தியாசமானவ்ர்கள்’ திரைப்படம்.

ஒரு அலுவலகத்தில் மாதச்சம்பளத்தில் மேனேஜராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த். அவருக்கு பாந்தமான மனைவியாக ஸ்ரீவித்யா மற்றும் இரண்டு குழந்தைகள் என அழகான அளவான குடும்பம். வித்யாவின் சித்தப்பாவாக நாகேஷ். இந்நிலையில் அதே அலுவலகத்துக்கு உதவி மேனேஜராக தலைமை அலுவலகத்திலிருந்து பணி மாற்றம் செய்யப்பட்டு வந்து சேரும் ‘படாபட்’ ஜெயலட்சுமி. திருமணம் ஆகியிராத அவருக்கு ஆதரவு நிழகாக இருக்கும் தந்தை பூர்ணம் விஸ்வநாதன். அலுவலகத்தில் மேனேஜர் ஸ்ரீகாந்துக்கும், உதவி மேனேஜர் ஜெயலட்சுமிக்கும் ‘ஈகோ’ பிரச்சினை படிப்படியாக வளர்ந்து, ஒரு கட்டத்தில் தாங்க முடியாத நிலை வரும்போது, அங்கிருந்தே மாற்றல் வாங்கி சென்றுவிடத்துடிக்கும் ஜெயலட்சுமி. அவரை அப்படியே ஸ்ரீகாந்த் போக விட்டிருந்தாரானால் படம் மூன்றாவது ரீலில் முடிந்துவிட்டிருக்கும் (?). ஆனால் போகாமல் தடுக்கும்போது, ஸ்ரீகாந்தின் நல்ல மனம் ஜெயலட்சுமியின் மனதில் சலனத்தை ஏற்படுத்த, வந்தது வினை. காந்த் திருமணமாகி, குழந்தைகளுடன் வாழ்பவர் என்று தெரிந்தும் ஜெயலட்சுமி அவரைக் காதலிக்க, அதைத்தவிர்க்க முடியாத நிலையில் ஸ்ரீகாந்தும் ஏற்றுக்கொள்ள, இதற்கு அப்பாவியான முதல் மனைவி ஸ்ரீவித்யாவும் சம்மதிக்க, தந்தை பூர்ணம் ஊரில் இல்லாதநேரம் அவர்கள் திருமணம் நடந்துவிடுகிறது. அதைத்தொடர்ந்து இரண்டு பெண்டாட்டிக்காரரான ஸ்ரீகாந்த் வாழ்வில் படும் அவஸ்தைகளை வைத்து சுவையாக படத்தைக்கொண்டு சென்றிருப்பார் மௌலி. இன்னொன்றைக் குறிப்பிட விட்டுவிட்டேன். கதை, வசனம், இயக்கத்தோடு நிற்காமல் நான்காவது பரிமாணமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகராகவும் உருவெடுத்திருப்பார் மௌலி. மனைவியிழந்தவராக வரும் இவர், கைவிடப்பட்ட குடும்பத்துக்கு ஆதரவாக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

ஸ்ரீகாந்துக்கு இப்படத்தில் கிடைத்த பொறுப்புமிக்க கதாபாத்திரம், ஏற்கெனவே அவர்மேல் திணிக்கப்பட்டிருந்த இமேஜை உடைத்து, எந்த ரோலிலும் தன்னால் சோபித்துக்காட்ட முடியும் என்ற புதிய முகவரியைத்தந்தது என்றால் மிகையல்ல. இரண்டு வீட்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு திண்டாடும் நிலையை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார். கடைசியில் இரண்டு வீடுமே இல்லாமல் போய், தனியாளாக அலையும் போது (பின்னணியில் மெல்லிசை மன்னரில் குரலில் ‘இரண்டு வீடு இரண்டு கட்டில், படுக்க இடமில்லை’ பாடல் ஒலிக்க) கடற்கரை மணலில் அலையும் அவர், ஒன்றுமாற்றி ஒன்று அறுந்து போகும் இரண்டு செருப்புக்களையும் உதறி எறிந்துவிட்டு வெறும் காலுடன் செல்வது நல்ல டைரக்டோரியல் டச்.

ஸ்ரீவித்யா அப்படியே ஒரு அப்பாவி மனைவியை கண்முன் கொண்டு வந்திருப்பார். கணவர் ஸ்ரீகாந்தை ‘ராமுப்பா… ராமுப்பா..’ என்று அழைத்தவண்ணம் படத்தின் முற்பகுதியில் வளைய வரும்போதே அனைவரது அபிமானத்தையும் பெற்றுவிடுகிறார். (அதென்ன ராமுப்பா?. தன் மகன் ராமுவுடைய அப்பாவாம்). கணவரின் இரண்டாவது மனைவியான படாபட் ஜெயலட்சுமிக்கு குழந்தை பிறந்ததைப் பார்க்கச்செல்லும் அவர், தன் கணவர் தன்னையும் தன் குழந்தைகளையும் மறந்து இரண்டாவது மனைவியே கதி என்று இருப்பதைச் சுட்டிக்காட்ட, அங்கு கிடக்கும் தூசி படிந்த தலையணையைத் தட்டி, ‘அப்பப்பா தலையணையெல்லாம் ஒரே தூசி படிஞ்சு கிடக்கு’ என்று சொல்லும் இடத்தில் மௌலி தெரிகிறார்.

இவரது சித்தப்பாவாக வரும் நாகேஷ் பற்றி சொல்லவே வேண்டாம். பிரமாதப்படுத்தியிருப்பார். அத்தானின் இரண்டாவது திருமணத்துக்கு ஸ்ரீவித்யா சம்மதித்து விட்டார் என்பதையறிந்து கொடுப்பாரே ஒரு பஞ்ச் டயலாக்.. சூப்பர். கடைசியில் ஸ்ரீவித்யாவிடம் ‘உன் புருஷனோட கல்யாணத்தில் நீ எங்கே இருப்பே?. புருஷனோட ரெண்டாவது கல்யாணத்துல முதல் மனைவி எங்கே இருக்கணும்னு இந்து தர்மத்துல சொல்லலியேம்மா’ என்று கேட்கும் இடத்தில் அவர் முகத்தில் தெரியும் அந்த ஏக்கமும் ஏமாற்றமும்.. யப்பா.

‘படாபட்’ ஜெயலட்சுமியிடம் நல்ல பாந்தமான நடிப்பு. அந்த நேரத்தில் அவர் முள்ளும் மலரும், தியாகம், 6 லிருந்து 60 வரை என அசத்திக்கொண்டிருந்த நேரம். இந்தப்படத்திலும் அசத்தியிருந்தார். தேனிலவுக்காக ஸ்ரீகாந்துடன் வெளியூர் சென்று ஓட்டல் அறையில் நுழைந்த சற்று நேரத்திலேயே, வித்யாவின் குழந்தைக்கு விபத்து என்று போன் வர, முகத்தில் தோன்றும் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு, ‘புறப்படுங்க.. போகலாம்’ என்று சொல்வாரே, அந்த இடத்தில் அவர் பார்வையும், அதற்கு பதிலளிப்பது போல ‘என்னை மன்னித்துவிடு, வேறு வழியில்லை’ என்பது போல ஸ்ரீகாந்த் அவரைப் பார்ப்பாரே அந்தப்பார்வையும் வசனமின்றி உணர்ச்சிகளைக்கொட்டும். அதேபோல இன்னொரு கட்டத்தில், வெளியூரிலிருந்து வரும் பூர்ணம் தன் வீட்டில் ஸ்ரீகாந்த் குளித்துக்கொண்டிருப்பதை கேள்விக்குறியுடன் பார்க்க, ‘அவர் யாருடைய வீட்டிலோ குளிக்கிறார்னு பார்க்காதீங்கப்பா. அவருக்கு உரிமையான வீட்டில்தான் குளிச்சிக்கிட்டிருக்கார்’ என்று சொல்லி, தனக்கும் அவருக்கும் திருமணம் நடந்துவிட்டதை நாசூக்காக உணர்த்துமிடமும் அப்படியே. ஆனால் அதைக்கேட்டதும் அதிரும் பூர்ணம் மகளிடம் ஒரு வார்த்தையும் பேசாமல், நேராகச்சென்று சுவரில் மாட்டப்பட்டிருக்கும் சாமி படத்தை உடைப்பதும், அதைப்பார்த்து ஜெயலட்சுமி அதிர்வதும் உணர்ச்சிகளின் உச்சம்.

மனதில் எதையும் மறைக்கத்தெரியாத வெள்ளந்தியான அப்பாவாக வரும் ‘பூர்ணம்’ விஸ்வநாதனுக்கு யார் அந்தப்பெயர் வைத்தார்களோ தெரியாது. ஆனால் பெயருக்கேற்றாற்போல நடிப்பில் பரி’பூரணம்’. மகளின் திருமணத்துக்கு முன் மகளின் மேலதிகாரியான ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வரும் அவர், அங்கிருக்கும் நாகேஷ் ஒரு பழைய பட்டாளத்து வீரர் எனப்தையறிந்து, பட்டாளத்திலிருக்கும் யாரோ (நாகேஷுக்கு முன்பின் தெரியாத) தன் பழைய நண்பனைப்பற்றி அசால்ட்டாக விசாரிக்கும்போது தெரியும் அப்பாவித்தனம் அவரது தேர்ந்த நடிப்புக்கு ஒரு சான்று.

ஸ்ரீகாந்த், ஸ்ரீவித்யா, ‘படாபட்’ஜெயலட்சுமி, மௌலி, நாகேஷ், பூரணம் விஸ்வநாதன் ஆகியோர் நடித்திருந்த இப்படத்துக்கு ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். வித்யாவுக்காக வாணி ஜெயராம் பாடிய பாடலும் (முதலடி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்), எம்.எஸ்.வி. பாடிய (நான் முன் குறிப்பிட்ட) பாடலும் மனதைக்கவர்ந்தன. குடும்பக்கதைக்கேற்ற சுகமான ரீ-ரிக்கார்டிங். படம் துவங்கும்போது ஆகாசவாணியின் இசையை மெல்ல பின்னணியில் ஒலிக்கவிட்டிருப்பது ஜோர்.

வித்தியாசமான ஒரு படத்தைத்தந்த ‘இவர்கள்’ நிச்சயம் ‘வித்தியாசமானவர்கள்’தான்.

கலைக்கோவில்


By E. Gopal
திரைப்பட விமர்சனம் – கலைக்கோவில் (kalai kovil)

படம் வெளியான தேதி: 25.9.1964,

நடிகர்கள் : எஸ்.வி.சுப்பையா, முத்துராமன், நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன், வி.எஸ்.ராகவன்
நடிகைகள்:
சந்த்ரகாந்தா, ராஜ்ஸ்ரீ, ஜெயந்தி, எஸ்.என்.லக்ஷ்மி
பின்னனி வீணை இசை: சிட்டிபாபு
பாடியவர்கள் : டி.எம்.எஸ், பாலமுரளிகிருஷ்ணா, எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா
திரைக்கதை, வசனம், இயக்கம்: ஸ்ரீதர்.சி.வி.
தயாரிப்பு : எம்.எஸ்.விசுவநாதன் – கங்கா (கலை இயக்குனர்)

இசை: எம்.எஸ்.விசுவநாதன்-ராமமூர்த்தி

இப்படத்தைப் பற்றிய நுணுக்கமான, சங்கீதத் தகவல்களை அள்ளித்தெளித்ததற்கும்,  இப்படத்தை பற்றிய அறிய தகவல்களைத்தந்து, அதனை பார்க்கத்தூண்டிய நண்பர் அசோக்கிற்கு நன்றி.

தன் வீணை வித்வத்தால் புகழின் உச்சிக்குப்போகும் வித்வான் தனக்கு ஏற்படும் துரோகத்தால் எப்படி வீழ்ந்து மடிகிறார் என்பதே கதை.  ஆரம்பத்திலேயே அற்புதமான கச்சேரியுடன் தொடங்கும் பகுதியில் எஸ்.வி.சுப்பையா வீணை வித்வானாகவே மாறிவிடுகிறார்.  பின் இசையில் வீணைவாசித்திருப்பவர் சிட்டி பாபு.  மிகவும் ரம்மியமாகவும், லயத்துடனும் படமாக்கப்பட்டுள்ளது.

எஸ்.வி.சுப்பையா பிரம்மசாரி. மிகப்பெரிய நாணிலம் போற்றும் வீணை வித்வான்.  தன் அக்காள் (எஸ்.என்.லக்ஷ்மி), மற்றும் அவர் மகள் (சந்த்ரகாந்தா)வுடன் மகிழ்ச்சியாக வசித்துவருகிறார். கச்சேரி முடிந்த கையோடு, தன் நன்றியை கடவுளுக்கு தெரிவிக்க கோவிலுக்கு சென்று வரும் போது வெளியில் முத்துராமன் 2 நாட்களாக பசியினால் மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்து அவரை தன் காரில் ஏற்றி, வீட்டிற்கு கொண்டுவந்து, ஊணும் உடையும் கொடுத்து பேணுகிறார்.  அவர் கூடவே வசிக்கும் முத்துராமன், காலப்போக்கில் வீணையை கற்றுக்கொண்டு கலையில் தேர்ச்சி பெறுகிறார்.  வாரிசு இல்லாத எஸ்.வி.யோ இவரை தன் மகனாகவே சுவீகரித்து தன் இசைக்கும் இவர்தான் வாரிசு என்று போற்றி வளர்க்கிறார். முத்துராமனின் அரங்கேற்றம் நடக்கிறது, எல்லோரும் எஸ்.விக்கு இதை விட ஒரு வாரிசு கிடைக்காது என்று பாராட்டுகிறார்கள்.

இதனிடையில், எஸ்.வி.சுப்பையாவின் அக்காள் மகளும் அவருக்கு பணிவிடை செய்து அங்கேயே வளர்ந்துவரும் முத்துராமனுக்கும் காதல் பற்றிக்கொள்கிறது.  இருவரையும் தனிமையில் காணும் எஸ்.வி., அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து அவ்வாறே செய்கிறார்.

பிரபல நாட்டியக்காரியான (ரஜ்யஸ்ரீ), முத்துராமனின் வீணை இசைக்கு அடிமையாகிறார்.  அவரின் காரியதரசியிடம் (வி.கோபாலகிருஷ்ணன்) தம்வீட்டிற்கு எப்பாடியாவது முத்துராமனை சாப்பாட்டிற்கு அழைக்க வேண்டும் என்று கூறுகிறார்.  அவரும் சபாக்களில் கச்சேரி பிடித்துத்தருபவரும், சபா ஒருங்கிணைப்பாளரான  சுப்புவிடம் (நாகேஷ்) தன் கோரிக்கையை முன்வைக்கிறார்.  இது ஒன்றும் பெரிய காரியமில்லை என்று திருமணமான கையோடு – தம்பதிகளை ராஜ்ஸ்ரீ வீட்டிற்கு சாப்பாட்டு விருந்துக்கு அழைக்கிறார்.  அவர்களும் வந்து கௌரவிக்கிறார்கள்.  யாருக்கும் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் – முத்துராமனை ஒரு அரை மணித்துளிகள் வீணை வாசிக்க வேண்டுமென்று கேட்கிறார் ராஜ்யஸ்ரீ.  தன் மனைவியை தயக்கத்துடன் பார்த்தபடியே, வீணை கொண்டுவரவில்லை என்று கூற, அவரிடம் ஒரு வீணை இருப்பதாக எடுத்து வந்து வாசிக்குமாறு வற்புறுத்துகிறார்.  அவர் வாசிக்கிறார், வாசித்துக்கொண்டிருக்கும்போதே, எல்லொரும் புருவத்தை உயர்த்தும் வண்ணம், ராஜ்யஸ்ரீ வீணை வாசிப்பில் மயங்கி ஆடத்தொடங்கி, பாட்டும் பாடுகிறார் (தேவியர் இருவர் – ராகம் – ஷண்முகப்ரியா), இப்பாட்டில் உள்ள வரிகள், மிகவும் சச்சரவாக பிண்ணப்பட்டிருக்கவே, சந்தேகம் உணர்ச்சிகளில் குழைந்து முகத்தில் பீறிட, பாட்டை நிறுத்தச்சொல்லுமாறு கத்துகிறார் சந்த்ரகாந்தா.  முதல் முறை அவருக்கு எங்கே தன் கணவர் பாதை மாறிபோய்விடுவாரோ என்று பலவீன ரேகைகள் முகத்திலும், உள்ளத்திலும் இரட்டை குதிரை சவாரி செய்கின்றன. இந்நிகழ்சியிலிருந்து அவர்கள் சற்று இளைப்பாற, சுற்றுலா கிளம்பிப்போகிறார்கள்.
இதற்கிடையே – தனக்கு எல்லாத்திறமைகள் இருந்தும் ஏன் சபாக்களில் கச்சேரி கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் நீறுபூத்த நெருப்பாக மனதில் புகையை மூட்ட, அதை சுப்புவின் காதுகளில் போட்டு விளக்கம் கேட்க, அவரோ எல்லாம் நேரம்தான் காரணம், திறமை இருந்தாலும், ஒரு வீட்டில் இரு வித்வான் இருந்தால் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும், பெரியவர் இருக்கும் வரை இவர் குட்டிக்கரணம் போட்டாலும் கிடைப்பது கடினம் என்று மனதில் ஏற்பட்ட புகையில் சாம்பிராணையை தூவ – புகை, பகையாக மாறி நெருப்பாக நாக்கின் வழி எட்டிப்பார்க்கிறது.

ஒரு முறை எஸ்.வி.சு. ஒப்புக்கொண்ட கச்சேரிக்கு தன் உடல் நிலையை காரணம் காட்டி ரத்து செய்யச்சொல்லும் போது – அக்கச்சேரி வாய்ப்பை ஏன் தனக்கு கொடுக்கச்சொல்லி கோரிக்கை வைக்க, அவரோ முகமலர்ந்து அதற்கென்னா, “பேஷா செய்துடலாம்” என்று சபா ஒருங்கிணைப்பாளரிடம் இக்கருத்தை மையப்படுத்த, அவரோ மிகவும் கண்டிப்பாக,  ”நடந்தால் உங்கள் கச்சேரி, இல்லையேல் நிகழ்ச்சி ரத்து” என்று கூற – இப்போது முத்துராமனின் உடம்பின் எல்லாப்பாகத்திலும் தீ ஜுவாலை பரவுகிறது.

தன்னுடைய ஆதங்கத்தைத்தீர்க்க வடிகால் தேடி, சுப்பு, ரஜ்யஸ்ரீ கூட்டுக்குழுவினரிடம் போய் கொட்ட – அவர்கள் இவருக்கு குடியையும் பழக்கி தவறான பாதைக்கு போக அடித்தளமிடுகிறார்கள். ஒரு நாள் பூஜை நடக்கும்போது எஸ்.வி. வீணை வாசித்துக்கொண்டிருக்கும்போது அங்கு ஒரு முடிவோடு வரும் முத்துராமன், எஸ்.வி.யிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார். அந்த வரம் தன் வாழ்கையையே பிறட்டிப்போடப்போவது என்பதை அறியாமல், அது என்ன கோரிக்கையானாலும், தான் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கிறார்.  “இனிமேல் நீங்கள் வீணையை வாசிக்க்க்கூடாது” என்று சத்தியம் செய்யச்சொல்கிறார். எமாற்றமோ, கோபமோ இல்லாமல் அத்ர்ச்சியை மட்டும் தன்னுள் இறக்கிக்கொண்டு, சமாளித்து அவ்வாறே செய்து கொடுக்கிறார்.

எந்த ஒரு நாதத்தை தன் மூச்சாக கொண்டு வசித்து வந்தாரோ, அதுவே இல்லாத போது அதன் நினைவு வந்து  வாட்டுவதால் இனி அங்கிருப்பது சரியில்லை என்று, கடிதம் எழுதிவிட்டு, கோவில் மண்டபத்திற்கே – எங்கு முத்துராமனை கண்டு, தூக்கிவந்தாரோ – அங்கேயே வந்து வாழ ஆரம்பிக்கிறார்.  முத்துராமனும் இந்த அதிர்ச்சியை மறைக்க, ராஜ்யஸ்ரீ கும்பலுடன் சேர்ந்து நேரத்தைப்போக்கி, குடித்து கெடுகிறார்.  குடியை விடாவிட்டாலும், கச்சேரியால் புகழின் உச்சியை அடைகிறார். எஸ்.வி-யோ பிச்சைக்காரனை போல் வாழ்கிறார். பாதி நேரம் நாட்டியக்காரியினூடேயே வசிக்கும் முத்துராமனால் வீட்டிற்க்கு வருவதைத்தவிர்க்கிறார். இதனால், வீடும் களையிழந்து, அவர் மனைவியும் பலாக்காணம் பாடிக்கொண்டு ஓட்டுகிறார்.

இங்கு தான் இயக்குனர் பெரிய ரம்பத்தை எடுத்து நம் கழுத்தில் வைக்கிறார். இதுவரை நன்றாக போய்க்கொண்டிருந்த கதையை ஜவ்வு போல் இழுத்து அறுக்கிறார்.  ஒருபுரம் முத்துராமனின் வரட்டு கௌரவம், ஒரு புரம் எஸ்.வி.சுப்பையாவின் பிடிவாதம், இரண்டுக்கும் நடுவில் சந்த்ரகாந்தாவின் அழுகுரல் – மூன்றும் மிளகாயை அரைத்து புண்ணில் தடவுகிறது. முத்துராமனின் ஈகோவால் எல்லாம் சீரழிந்து, பின் கடைசியில் பக்கவாதம் வந்து பாதிக்கப்படுகிறார். முத்துராமனுக்கு பக்கவாதம் வந்த பின்தான் நமக்கு பக்காவாக பாதம் நகர்கிறது. கடைசியில், வரட்டுப்பிடிவாதத்தில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே உச்சக்கட்டம்.

முத்துராமனின் வெறுப்பு, எஸ்.வி-யின் சோகம் ததும்பும் முகம், சந்த்ரகாந்தா எப்போதும் கண்களில் வாசிக்கும் ஜலதரங்கம் எல்லாம் பிற்பகுதியில் நம்மை அவர்களிடம் பரிவை ஏற்படுத்துவதற்குப்பதிலாக, எரிச்சலையே ஏற்படுத்துகிறது. கடைசிசொதப்பலால் ஒருவேளை இப்படம் தோல்வியைச் சந்தித்ததோ தெரியவில்லை.

எஸ்.வி.சுப்பையா-வின் நடிப்பு நிறைவைத்தருகிறது.  முத்துராமன், சந்த்ரகாந்தா, ராஜ்யஸ்ரீ, நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தம்தம் பாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.  முதலில் விறுவிறுப்பாக போகும் படத்தில், முத்துராமன்மேல் இனம்புரியாத கோபம் வருவது திரைக்கதைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

நாகேஷ் பிச்சு உதறுகிறார்.  சபா ஒருங்கிணைப்பாளராகவும், ஜெயந்தியின் கணவராகவும் ஜமாய்க்கிறார்.  ராஜ்யஸ்ரீயால் கைவிடப்பட்ட முத்துராமன், குடிப்பதற்க்கு நாகேஷின் உறவை தேர்ந்தெடுக்க, அவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ஜெயந்தியை வாரு வாரு என்று வாருவது பிரமாதமான நகைச்சுவை.

இசையைப் பற்றி சொல்லவில்லையென்றால் முழுமை பெறாது.  மிகவும் அற்புதமான மெட்டுக்கள், தேன்சுவையை பாடல்கள் மூலம் தந்த இரட்டையர் பாராட்டுக்குறியவர்களே.  பாலமுரளியின் “தங்கரதம் வந்தது” (ஆபோகி ராகம்….) “நான் உன்னை சேர்ந்த”, தேவியர் இருவர் முருகனுக்கு (ஷண்முகப்ப்ரியா), மேற்கத்திய பாணியில் முள்ளில் ரோஜா ஆகியவை அருமை.
இப்படம் சிந்துபைரவிக்கு முன்னோடியாக்க்கருதப்படுகிறது.  படம் வந்து ஒருவாரத்தில் படுதோல்வி அடைந்தது. இப்படத்தின் பிரதியை எல்லா இடத்திலும் தேடினோம்.  சென்னை, மதுரை என்று – கிடைக்கவில்லை.  சென்னையில் சங்கரா ஹாலில் (ஏவிஎம்) முக்கால்வாசி படங்கள் கிடைக்கும், ஆனால் இங்கும் இல்லை.  அங்கு இருக்கும் பொறுப்பாளர் கருணாகரன் இப்படம் இந்தியாவில் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.  இப்படம் எம்.எஸ்.வியின் சொந்தப்படமாதலால், தோல்வியுற்றபோது, பிரதியை எங்கோ தூக்கி போட்டுவிட்டார் போலும். மலேசியா, சிங்கப்பூரில் விசிடி பதிப்பு கிடைக்கிறது. இந்தியாவில் எனக்குத்தெரிந்து கிடைக்கவில்லை. சிறந்த படம்– அருமையான பாட்டிற்காகவும், முன் திரைக்கதைக்காகவும் பார்க்கலாம்.

எம்.கே. தியாகராஜ பாகவதரின் இறுதி நாட்கள் – சோகமான கதை !


(ஈஸ்வர் கோபால் அனுப்பியுள்ள பதிவு – இது ஒரு மீள் பதிவா என்பது தெளிவாகத்த் தெரியவில்லை. உரிய courtesyக்கள் செலுத்தாததற்கு  சம்பந்த பட்டவர்கள் மன்னிக்கவும். தகவல் தெரிந்தவுடன் இணைக்கிறோம். ஓவர் டு) ஈஸ்வர் கோபால்)

Re: IDHAYA VEENAI by Dr. M.K.R.SANTHARAM

Postby mkrsantharam » Mon Nov 01, 2010 3:47 pm

தொகுப்பு எண் : 56 

Image

” ஹேய்…….

வாழ்விலோர் திரு நாள் ! …… “

பாய்ந்தோடும் வெள்ளைக் குதிரை யில் இரு கால்கள் அசைந்தாடுவது
முதலில் தெரிய , பின்னர் காமிரா மெல்ல மெல்ல மேல் நோக்கி
நகர்ந்து ………..

பாகவதரின் சிரித்த முகத்தை ” போகஸ் “செய்கிறது !

Image

ஆமாம் …..

16 – 10 – 1944 , அன்று தீபாவளி !

” ஹரிதாஸ் “

அன்றைய தினம் ” ரிலீஸ் ” செய்து , படத்தின் ஆரம்பக் காட்சியில்
பாகவதர் மேற்கண்டவாறு பாடிக்கொண்டே வந்ததைப் பார்த்து மக்கள்
கைகளைத் தட்டியும் , ” விசில் ” அடித்தும் மகிழ் வடைந்தனாறாம் !
( அப்போது அடியேன் …… இல்லே ..இல்லே … என் அண்ணன் கூட
பிறக்கவில்லை ! )

அது மட்டுமா !

பாகவதர் இந்த பாடலைப் பாடிக்கொண்டே ……..

கண்ணடிக்கிறார் !

இந்த காட்சியில் பெண்கள் சொக்கிப் போனாராம் !

தமிழ் சினிமா வரலாற்றில் :

” ஹீரோவுக்கான அசத்தலான அறிமுகக் காட்சியை
அறிமுகம் செய்தது இந்த படம்தான் !

” குடும்பப் பெண்கள் ” பாகவதரின் அழகிலும் பாடலிலும் மயங்கி
அவரைக் காண பின் தொடர்ந்து செல்லும் நிலை உருவானதால்
பல குடும்பத்தலைவர்கள் , அந்த பெண்களை தங்கள் தங்கள்
வீட்டுக்கு அழைத்து செல்வதில் மிகுந்த சிரமம் அடைந்தனராம் !

பாகவதருக்கு ” காதல் காய்தம் ”
( நடிகர் நாகேஷ் , தான் நடிக்கும் படங்களில் ” காதல் கடிதம் ” என்று சொல்லும் இடங்களில் இப்படித்தான் சொல்லுவார் ! ) எழுதிய பெண்கள் ஏராளம் !

இந்த விஷயங்களை அடியேன் மிகைப் படுத்தி எழுதவில்லை !
நடந்தது நடந்தபடி எழுதினேன் !

” ஹரிதாஸ் ” படம் வெளி வந்த பிறகு பாகவதரின் புகழ் உச்சியில்
இருந்தது உண்மை !

இன்னொன்று :

ஒரு சினிமா நடிகரைப் பார்ப்பதர்க்கென்று மக்கள் கூட்டம்
கூட்டம் ஆக வருவது , பாகவதருக்கு பின்னர் தான் ஏற்பட்டது !

ஒரு முறை பாகவதர் கொச்சின் போய் விட்டு இரயில் இருந்து
திரும்பும் போது , பாகவதரைப் பார்த்தே ஆகா வேண்டும் என்று
மக்கள் இரயில் நிலையத்திற்கு வந்து அவரை ” தரிசித்து ” விட்டுத்தான்
இரயிலை ஓட்ட விட்டார்கள் ! இதனால் இரயில் ஐந்து அல்லது ஆறு
மணி நேரம் தாமதம் ஆவதுண்டு ! பாகவதர் வருவதை அறிந்த மக்கள்
இரயில் நிலையத்திற்கு வருவர் ! ” பிளாட்பாரம் டிக்கட் ” அனைத்தும்
விற்று விடுமாம் ! இரயில் நிற்கத் தேவை இல்லாத நிலையங்களுக்குக்
கூட இரயில் வண்டி நிறுத்தப்படுமாம் ! மக்கள் பாகவதரை ” வழி
அனுப்பி விட்டால்தான் ” இரயில் கிளம்பு அனுமதி கிடைக்குமாம் !

சுருக்கமாக சொல்லப் போனால் :
மகாத்மா காந்தி தமிழ் நாட்டுக்கு வந்த பின்னர் அவரைப்
பார்ப்பதற்கு கூடிய கூட்டம் போல் , பாகவதருக்கு ஏற்பட்டது !

” ஹரிதாஸ் ” படம் ” சூப்பர் ஹிட் ” !

எப்போதும் ஒரு சமயத்தில் ஒரே படத்தில் நடிக்கும் பழக்கம் உள்ள
பாகவதர் , ” ஹரிதாஸ் ” வெற்றிக்கு பிறகு நிறைய படங்களை ஒத்துக்
கொண்டார் ! ” அட்வான்ஸ் ” வாங்கிக் கொண்டார் !

அந்த படங்கள் :

1 ” ராஜ யோகி ” 2 . ” வால்மீகி
3 . ” பில்ஹணன், 4″ ஸ்ரீ முருகன்”
5 . “உதயணன் ” 6 .” பக்த மேதா”
7 .” ஜீவகன்” , 8 .. ” காளிதாஸ்”
9 ” நம்பியாண்டார் நம்பி “

இத்தனைப் படங்களை ஒத்துக்கொண்டு புகளின் உச்சியில் இருந்த

பாகவதருக்கு ……


ரி
வு

ஏற்பட்டது !
எப்படி ?

” ஹரிதாஸ் ” வெளியான அதே தீபாவள் நாள் , தான் தங்கியிருந்த
திருச்சி பங்களாவை விட்டு தன நண்பர்களை சந்திக்க குதிரை
வண்டியில் ( அந்த கால ” பென்ஸ் ” கார் ! ) கிளம்பி வண்டியில்
கிளம்பிப் போன பாகவதருக்கு விபத்து நேர்ந்தது ! சாலையில்
குவித்து வைத்திருந்த கருங்கற் கற்களில் ( அந்த காலத்திலும்
இதே ” கர்மாந்திரம் ! ” ) வண்டி சக்கரம் மாட்டிக்கொண்டு வண்டி
குடை சாய்ந்தது . பாகவதரின் இரு முழங்கால்களில் பலத்த அடி !
” ஹரிதாஸ் ” படத்தில் , இறுதியில் வருவது போல் பாகவதர்
தவழ்து நடக்கிறார் என்று அந்த காலப் பத்திரிகைகள் ” அவல ”
சாப்பிட்டன ! இந்த சம்பவத்தை பாகவதர் ஓர் அபசகுனம்
என்றே நினைத்தார் !

அவர் நினைத்தது உண்மையானது !

” ஹரிதாஸ் ” படம் 70 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக்
கொண்டிருக்கும்போது , போர் முனைச் செய்திகளைக் கேட்பதற்காக
வானொலியை நாடும் அந்த கால மக்கள், அந்த ” BREAKING NEWS ”
கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர் !

அந்த செய்தி :

” லட்சுமி காந்தன் கொலை வழக்கில் நடிகர்
எம். கே. தியாகராஜா பாகவதர் கைது செய்யப்பட்டார் ! ”
லட்சுமி காந்தன் கொலை வழக்கில் பாகவதர் மட்டும் அல்ல ,
பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் , மற்றும் பிரபல
படத்தயாரிப்பாளர் ” பட்சி ராஜா ” எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாய்டு –
ஆகியோரும் கைது செய்யப்பட்டனர் . தமிழ் நாட்டை கலக்கிய

இந்த கொலை வழக்கு அந்த காலத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டது .

( ” இந்த கொலை வழக்கு பற்றி ஒரு தனித் தொகுப்பு ஆகா
எழுத அடியேனும் விருப்பம் ! எனவே , அந்த கொலை வழக்கு பற்றிய
விவரங்களை இங்கே இப்போது கொடுததால் , அடியேன் எழுத ஆரம்பித்த
தலைப்பில் இருந்து விலகிச் சென்ற மாதிரி ஆகிவிடும் ! “

இந்த வழக்கில் பாகவதர் சிக்கியது அவரது ” இமேஜ் ” ஐ மிகவும் பாதித்தது !
வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பாகவதர் பெரும் பொருட்
செலவு செய்தார் ! ஆனால் எல்லாம் வீண் ஆனது !

பாகவர் உட்பட ஆறு பேருக்கு ” ஆயுட் தண்டனை ” வழங்கப்பட்டது !

பாகவதர் இடிந்து போனார் ! கையில் இருந்த பணமெல்லாம் கோர்ட் ,

கேஸ் என்று என்று கரைய ஆரம்பித்தது .

போட்டிப் போட்டுக்கொண்டு ” அட்வான்ஸ் ” பணம் கொடுத்து படங்களை

” புக் ” செய்த படத் தயாரிப்பாளர்கள் , தங்கள் பணத்தை திருப்பித்
தரும்படி ” டார்ச்சர் ” செய்ய , வீட்டையும் நகைகளையும் விற்று
அவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தந்து விடுமாறு தன வீட்டில்
உள்ளவர்களிடம் சொல்லி விட்டார் , பாகவதர் !

பாகவதர் நடித்துக்கொண்டிருந்த ” உதயணன் வாசவதத்தா ”
படம் அப்படியே நிறுத்தப் பட்டது ! அதற்கு பதில் அந்த படத்தில்

ஜி . என். பாலசுப்பிரமணியம் ஒப்பந்தம் செய்யப்பட்டார் .
அது போல் :

” ஸ்ரீ வள்ளி ” படத்திற்கு தி .ஆர்.மகாலிங்கம் அவர்களும் ,

” வால்மீகி ” படத்திற்கு ஹொன்னப்பா பாகவதரும் நடிக்க

ஆரம்பித்தனர் ! பாகவதர் பாடி ஒரு படத்தில் சேர்க்கவேண்டிய பாடல்

ஒன்றை இயக்குனர் கே. சுப்ரமணியம் , பி. யு . சின்னப்பா , டி. ஆர். ராஜகுமாரி

நடித்த ” விகட யோகி ” என்கிற படத்தில் சேர்த்துவிட்டார் !

அந்த படத்தில் நடித்த எஸ். வி. சுப்பையா ஏதோ ஒரு ரசாயனக் கலைவையை

தெரியாமல் குடித்து பின்னர் குரல் மாறி ” பாகவதர் குரலில் ” பாடுவதாக கதை !

பாகவதர் ” உள்ளே ” இருப்பதால் வந்த வினை !

ஆனால் ……..

இந்த தடைகளையும் மீறி ” ஹரிதாஸ் ” படம் மூன்று தீபாவளிகளையும்

கடந்து ஓடிக் கொண்டிருந்தது !

Image

இரண்டு வருடங்கள் ! பாகவதரும் என்.எஸ் . கிருஷ்ணன்

ஆகிய இருவரும் இரண்டு வருடங்கள் சிறையில் இருந்தனர் !

இந்த தண்டனையை எதிர்த்து ” அப்பீல் ” செய்தார் பாகவதர்

அப்போதைக்கு லண்டனில் உள்ள பிரிவியு கவுன்சில் தான் இந்தியாவுக்கு

” சுப்ரீம் கோர்ட் ! ” லட்சுமிகாந்தன் கொலையில் பாகவதரும் , என். எஸ்.

கிருஷ்ணன் சம்பந்தப்பட்டவர்கள் என்பது சரியாக உறுதி செய்யப்படவில்லை

என்று சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டது !

1947 , ஏப்ரல் மாதம் , ஒரு நாள் பாகவதரும் , என்.

எஸ் . கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டு

வெளியே வந்தனர் .

கிட்டத்தட்ட முப்பது மாத சிறை வாசத்தின் சோர்வு பாகவதரின் முகத்தில்

தெரிந்தது ! அந்த பொன்னிற தேகத்தில் பொலிவு இல்லை ! அன்றைய

வானொலியில் பாகவதர் விடுதலை ஆனது தான் தலைப்பு செய்தி !

சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் தன தம்பியுடன் உடனே

சென்றது வடபழனி முருகன் கோவில் தான் ! பின்னர்

இரயில் ஏறி திருச்சிக்கு போனார் . வாசலில் அவர் குடும்பத்தினர் வெளியே

நின்று அவரை வரவேற்றனர் !

ஆனால் ……………… !

முன்பு போல் பாகவதரைக் காண வரும் ரசிகர்களின் கூட்டம்

இல்லை ! பாகவதரின் கண்களில் கண்ணீர் !

புகழை அடைய மிகவும் எளிது !

ஆனால் அதனைக் கட்டிக் காப்பது மிக அரிது !

இப்போதைய ” எந்திரன் ” ரஜினிக்கும் அந்த கவலை உண்டு !

ரொம்ப நாளைக்குப் பின்னர் குடும்பத்தோடு உணவு உண்டார் பாகவதர் !

மறு நாள் :

பட உலகில் உள்ள பல பட அதிபர்கள் அவரைப் பார்க்க வந்தனர் !

” அட்வான்ஸ் ” தொகையை வறுப்புரித்தி திருப்பி வாங்கிப் போன பட

அதிபர்களும் அதில் அதிகம் பேர் உண்டு ! யாரிடமும் நேரிடையாக

பாகவதர் பேசவில்லை ! அமைதியாக இருந்தார் ! எல்லோரும் அமைதியாக

உட்கார்ந்திருக்க , பத்திரிகையாளர்கள் பலர் அங்கே இருக்க பாகவதரின்

அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று ஆவலுடன் காத்திருக்க பாகவதர்

பேச ஆரம்பித்தார் !

” இந்த இரண்டரை வருடங்களில் உலகத்தை புரிந்து கொண்டேன் !

சினிமா உலகத்தையும் தெரிந்து கொண்டேன் ! இனிமேல் நான் சினிமாவில்

நடிப்பதாக இல்லை ! அடிப்படையில் நான் ஒரு சங்கீத வித்துவான் ! எனவே

சங்கீதத்தில் கவனம் செலுத்தப் போகிறேன் ! “

இந்த செய்தி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது !

ஆனால் இசை உலகம் பாகவதரை ஏற்றுக்கொள்ளவில்லை !

காரணம் ?

” ஜெயில் – க்கு போய் வந்தவருக்கெல்லாம் எப்படி பாட

அனுமதிக்கலாம் ? ” என்று சபாக்கள் அவரைப் பற்றி இகழ்ந்து பேசின !

பாகவதர் நொந்து போனார் !

ஆனாலும் பாகவதர் மனம் தளராமல் கோவிலுக்கு சென்று ஆண்டவனின்

சன்னதிக்கு சென்று பாட ஆரம்பித்தார் !

விரைவில் பாகவதர் :

1 . ரேடியோ கச்சேரி

2 . கோவில் திரு விழா

3 . கல்யாண கச்சேரி

போன்ற நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தார் !

ஓரளவு , அதில் வெற்றியும் பெற்றார் !

” ஆனால் இது மாதிரியான ” குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதை ” விட

திரைப் படங்களில் மறுபடியும் நடித்தால் உங்களின் புகழ் மறுபடியும் பெருகும் !

ஒரு ” சுப்பர் ஹிட் ” கொடுத்த பின்னர் பட உலகில் இருந்து விலகி விடலாம் !

பின்னர் இசைத் துறையை நீங்கள் நாடலாம் ! “

என்று அவரின் ” நலம் விரும்பிகள் ” கேட்டுக்கொண்டனர் !

பாகவதர் யோசித்தார் !

அதில் நியாயம் இருப்பதை ஒப்புக்கொண்டார் !

மறுபடியும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் !

முன்னர் போல் மற்றவர்கள் முன்னாள் கைகளைக் கட்டி வேலை செய்வது

பாகவதருக்குப் பிடிக்கவில்லை !

தாமே சொந்தப் படங்களை எடுப்பது என முடிவு செய்தார் !

இதுதான் அவர் செய்த மாபெரும் தவறு என்று கூட சொல்லலாம் !

” ராஜ முக்தி “

நூத்துக்கு நூறு


திருப்பி கொஞ்சம் விமர்சனங்களை ஆரம்பிக்கலாம் என்று பார்க்கிறேன்.

நூத்துக்கு நூறு கொஞ்சம் புத்திசாலித்தனமான படம். அன்றைக்கு புத்திசாலித்தனமாகத் தெரிந்த முடிச்சு, காட்சி அமைப்பு இன்றைக்கும் புத்திசாலித்தனமாக இருப்பதில்லைதான், ஆனாலும் ஒரிஜினல் எண்ணம் தெளிவாகத் தெரிகிறது, பாராட்ட வேண்டிய முயற்சி.

ராஷோமான், அந்த நாள் மாதிரி காட்சி அமைப்பு. ஒரு சம்பவம் இப்படி நடந்தது என்று ஒருவர் ஃப்ளாஷ்பாக்காக சொல்வார்; இல்லை இப்படித்தான் நடந்தது என்று அடுத்தவர் சொல்வார். காமெரா கோணம் விரிந்துகொண்டே போய் இன்னும் இன்னும் காட்சிகள் தெரிவது போல ஒரு உணர்வு.

கல்லூரியில் பாப்புலர் ப்ரொஃபசர் ஜெய்ஷங்கர். ஆங்கிலோ-இந்தியர் வி.எஸ். ராகவன் வீட்டில் வாடகைக்கு இருக்கிறார். ராகவனோடு நல்ல உறவு. தன் மாணவன் நாகேஷின் சகோதரி லக்ஷ்மியோடு நிச்சயதார்த்தம் ஆகிறது. திடீரென்று அவர் மீது ஒருவர் மாற்றி பெண்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மாணவி ஸ்ரீவித்யா ஜெய் தன்னை கெடுக்க முயன்றார் என்று குற்றம் சாட்டுகிறார். இன்னொரு மாணவி தனக்கு அவர் லவ் லெட்டர் கொடுத்தார் என்கிறார். வி.எஸ். ராகவனின் மகள் விஜயலலிதா ஜெய்தான் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா என்கிறார். ஜெய் கைது செய்யப்படுகிறார். பிறகு?

பழைய படம், எல்லாரும் பார்த்திருப்பார்கள். அதனால் சஸ்பென்ஸ் எல்லாம் வைக்க வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். கதையின் முக்கியமான முடிச்சு – தன்னை கெடுக்க முயலும் ப்ரொஃபசரிடமிருந்து தப்பி ஓடும் பெண் பாடப்புத்தகங்களையும் பையையும் கவனமாக எடுத்துக் கொண்டு போகமாட்டாள் என்ற பாயின்ட் – நன்றாக வந்திருக்கிறது. அதில் நான் மிகவும் ரசித்தது இயக்குனரின், அன்றைய ரசிகர்களின் tacit முடிவு – அப்படி புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்தாள் என்று பெண்ணின் அம்மா உண்மையைத்தான் சொல்வாள், பொய் சாட்சி சொல்லமாட்டாள் என்பதுதான். கதாபாத்திரங்கள் பொதுவாக உண்மையைத்தான் சொல்வார்கள் என்பது அன்றைக்கு ஒரு unspoken assumption ஆக இருந்திருக்கிறது.

ஜெய் நன்றாக நடித்திருக்கிறார். அதுவும் ஸ்ரீவித்யா என்ன நடந்தது என்று சொல்லும்போது ஃப்ளாஷ்பாக்கில் அவர் விடும் ரொமாண்டிக் லுக்கும், தானே விவரிக்கும்போது அவர் முகத்தில் காட்டும் கண்டிப்பும் நல்ல கான்ட்ராஸ்ட். நாகேஷை மாணவனாக ஒத்துக் கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான். கொஞ்சம் மிகை நடிப்புதான். ஆனால் போலீஸ் அதிகாரி ஸ்ரீகாந்த் அவரை விசாரிக்கும்போது அவர் பேசுவது நன்றாக இருக்கும். காலேஜ் பிரின்சிபால் ஜெமினி கணேசன் சின்ன ரோலில் திறமையாக நடித்திருப்பார். வி.எஸ். ராகவனுக்கு over the top ரோல். சிவாஜி சாயல் அடிக்கிறது. அது சரி, இன்றைக்கும் கூட சிவாஜி சாயல் இல்லாத நடிப்பைப் பார்ப்பது கஷ்டம்தான்.

சில வசனங்களில் புத்திசாலித்தனம் தெரிகிறது. ஜெய் மீது எல்லாரும் குறை சொல்லும்போது நாகேஷ் வெள்ளை சுவரில் ஒரு கறுப்புப் புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். கறுப்புப் புள்ளி என்று சஹஸ்ரநாமம் சொன்னதும் இவ்வளவு பெரிய வெள்ளைச் சுவர் தெரியவில்லையா என்பார்.

சில இடங்களில் இயக்குனர் கோட்டை விடுகிறார். ஜெய் ஸ்ரீவித்யா தன் மேல் ஆசைப்படுகிறார் என்ற உண்மையை முதலில் சொல்லமாட்டார். ஏனென்றால் அது வெளியே தெரிந்தால் அவளை எல்லாரும் கேவலமாகப் பார்ப்பார்கள் என்பார். ஆனால் அவரே இதை எல்லாருக்கும் தெரியப்படுத்துகிறேன் என்று ஸ்ரீவித்யாவை மிரட்டுவார். அதனால்தான் ஸ்ரீவித்யா பொய்யாக அவர் மேல் பழி போடுவதே!

1970-இல் வந்த படம். ஜெய், லக்ஷ்மி, நாகேஷ், வி.எஸ். ராகவன், விஜயலலிதா, ஜெமினி, ஸ்ரீகாந்த் தவிர எஸ்.வி. சஹஸ்ரநாமம், வி. கோபாலகிருஷ்ணன், நீலு, ஒய்.ஜி. மகேந்திரன் (முதல் படம்), மனோகர், சுகுமாரி, எஸ்.என். லட்சுமி முகங்கள் தெரிகிறது. ஒரு சின்ன அம்மா ரோலில் வருவது ஜெயந்தி மாதிரி இருக்கிறது, ஆனால் 70-இலேயே ஜெயந்திக்கு அம்மா ரோலா என்று சந்தேகமாக இருக்கிறது. கதை வசனம் இயக்கம் பாலச்சந்தர். பாடல்கள் வாலி என்று நினைக்கிறேன். இசை வி. குமார்.

படத்தில் இரண்டு ஹிட் பாட்டுகள் – நான் உன்னை மாற்றிப் பாடுகிறேன் ஒன்று. அதுவும் மூன்று முறை வரும். ஒரு முறை விஜயலலிதா முதலில் விவரிக்கும் கோணத்தில், ஒரு முறை ஜெய்யின் கோணத்தில், இன்னொரு முறை முழு உண்மையாக. இப்போது கூட புத்திசாலித்தனமான காட்சியாகத்தான் தெரிகிறது.

இன்னொன்று நித்தம் நித்தம் ஒரு புத்தம் புது சுகம். இதுவும் அன்றைக்கு புதுமையான முறையில் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. Silhoutte உத்தி நன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பாட்டில் இருக்கும் துள்ளலும் பொருத்தமாக இருக்கிறது.

பூலோகமா என்று தொடங்கும் ஒரு நாடகப் பாட்டு ஒன்று. நாகேஷ் சத்தியவான் சாவித்திரி நாடகம் போடுகிறார். பிரமாதம் என்று சொல்வதற்கில்லை, ஆனால் பார்க்கலாம், கேட்கலாம்.

உங்களில் ஒருவன் நான் என்று இன்னொரு பாட்டு. மறந்துவிடலாம்.

சுருக்கமாக பாலச்சந்தரின் சிறந்த படங்களில் ஒன்று. பார்க்கலாம். பத்துக்கு ஏழு மார்க். பி க்ரேட்.

ஆயிரத்தில் ஒருவன் – சாரதா விமர்சனம்


சாரதா சிவாஜியின் முரட்டு பக்தை என்பது இந்த தளத்தின் வாசகர்களுக்கு தெரிந்த விஷயம். அவர் எம்ஜிஆருக்கு “எதிரி” இல்லை என்பதும் இந்த விமர்சனத்தைப் படித்தால் புரியும். ஓவர் டு சாரதா!

தமிழ்ப் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப் படங்களில் புராணப் படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப் படங்களின் பட்டியலும் நீளம்தான். காதலை மையமாகக் கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.

ஆனால் இது வரை கடற் கொள்ளையர்களை கதைக் கருவாகக் கொண்டு வெளி வந்த ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே. கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக் களங்கள் என, ஒரு வெற்றிப் படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.

இப்படத்தின் கதாநாயனான ‘மக்கள் திலகம்’ எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கை தேர்ந்த தையற் கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவது போல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச் சண்டைக் காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் படம்.

கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் பந்துலு மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அது வரை (பானுமதிக்குப் பின்) சரோஜா தேவிதான் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக) போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


பருவம் எனது பாடல் என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மண்டபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.

எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம் போல “வெற்றி… வெற்றி…” என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித் தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும் போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இளவரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக் கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக் காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ‘கடற் கொள்ளையனாக’ சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப் போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்… இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்கும்.

கத்திச் சண்டைக் காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (எம்ஜிஆர்+ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச் சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப் பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள் சண்டை (நம்பியார்: “இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் தலைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்”), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர். (வழக்கம் போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.

பின்னர் வரப் போகும் மூன்று கத்திச் சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித் தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.

பாடல்களும் இசையும்:

இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அது வரை தமிழ்த் திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா… இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.

  • 1. பருவம் எனது பாடல்
  • நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.

    பருவம் எனது பாடல்
    பார்வை எனது ஆடல்
    கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்
    கருணை உனது கோயில் கலைகள் உனது காவல்

    பல்லவியை பாடி முடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ஹம்மிங் ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ் ஸ்தாயி வரையில் கொண்டு வர‌, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து

    இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்

    என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை.

    (நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘LINK’ தருவார்கள். SONGS கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).

  • 2. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை
  • வழக்கம் போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.

    ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
    நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
    வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
    நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே

    இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத‌ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.

  • 3. ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

  • இந்தப் பாடலைப் பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப் பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க‌ள். பாதிப் பாட‌ல் அர‌ண்ம‌னை செட்டிலும் பாதிப்பாட‌ல் கார்வார் க‌ட‌ற்க‌ரையிலும் க‌ண்டினியூட்டி கெடாம‌ல் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

  • 4. உன்னை நான் ச‌ந்தித்தேன் நீ ஆயிர‌த்தில் ஒருவ‌ன்
  • பி.சுசீலா தனியாக‌ப் பாடிய‌ பாட‌ல். கூட‌வே ஆண்க‌ளின் கோர‌ஸ். ம‌ணிமாற‌னைப் பிரிந்த‌ பூங்கொடி, செங்க‌ப்ப‌ரின் அர‌ண்ம‌னையில் சோக‌மே உருவாக‌ பாடும் பாட‌ல், கூட‌வே க‌ப்ப‌லில் போய்க்கொண்டிருக்கும் ம‌ணிமாற‌னைக் காண்பிக்கும்போது, அவ‌ர‌து கூட்டாளிக‌ளின் உற்சாக‌மான‌ கோர‌ஸ்.

    பொன்னைத்தான் உட‌ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம‌ன‌மென்பேன்
    க‌ண்க‌ளால் உன்னை அள‌ந்தேன் தொட்ட‌ கைக‌ளால் நான் ம‌ல‌ர்ந்தேன்
    உள்ள‌த்தால் வ‌ள்ள‌ல்தான் ஏழைக‌ளின் த‌லைவ‌ன்

    அடுத்து வ‌ரும் இசை ‘பிட்’டைக் கேட்க‌ முடியாது, கார‌ண‌ம் ப‌ல‌த்த‌ கைத‌ட்ட‌லும், விசில் ச‌த்த‌மும். பாட‌ல் முடியும்போது, கோர‌ஸுட‌ன் க‌ப்ப‌ல்க‌ள் முல்லைத்தீவு க‌ரையில் ஒதுங்குவ‌தாக‌ காட்டுவ‌து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கறுப்பு நிற உடையில் அழகுப் பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி).

  • 4. ஆடாமல் ஆடுகிறேன்
  • கடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டையடி சத்தம், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.

    ஆடாமல் ஆடுகிறேன்… பாடாமல் பாடுகிறேன்
    ஆண்டவனைத் தேடுகிறேன் வா…வா…வா….
    நான் ஆண்டவனைத் தேடுகிறேன்
    வா…வா…வா…. வா….வா…வா…

    முதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, ‘ஆண்டவனைத் தேடுகிறேன்’ என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக தபேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.

    விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
    ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
    அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
    அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்

    ‘கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்’ என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.

    (மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘SEND OFF ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).

  • 5. நாணமோ… இன்னும் நாணமோ
  • நீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன? காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா? அதுதான் இந்தப் பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘PRELUDE’அருமையாக துவங்கும். (PRELUDE, INTERLUDE என்பவை என்ன என்று தெரிந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).

    தோட்டத்துப் பூவினில் இல்லாதது
    ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
    ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
    ஆனந்த வெள்ளத்தில் நீராடுது – அது எது?

    ஆடவர் கண்கள் காணாதது
    அது காலங்கள் மாறினும் மாறாதது
    காதலன் பெண்ணிடம் தேடுவது
    காதலி கண்களை மூடுவது – அது இது

    பாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும்.

  • 6. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
  • அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘PRELUDE’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.

    கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
    கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
    அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
    அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

    இன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.

    இப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் “என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா?”

    நாகேஷ்: “அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து ‘ஈ’ன்னு சிரிச்சா. ‘கொன்னுடுவேன்’ அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்”.

    ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.

    எப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.

    ‘ஆயிரத்தில் ஒருவன்’ பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.

    தொகுக்கப்பட்ட பக்கம்: சாரதா பதிவுகள், திரைப்படங்கள்

    தொடர்புடைய பதிவுகள்: ஆயிரத்தில் ஒருவன் – ஆர்வி விமர்சனம், ஜெயலலிதா நினைவுகள்

    நம் நாடு


    நம் நாடு திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

    ஓர் உரையாடல்

    வி.எஸ்.சுப்பையா: இந்தப் படம் முதலிலிருந்து கடைசி வரை நல்ல ‘என்டர்டெய்ன்மென்ட்’டா இருக்கு. சில இடங்களில் நம்மையும் அறியாமல் கண்ணீர் விடுமளவு இருக்கு. கதாநாயகன் துரை, புடவை வாங்கித் தரும் இடம், குழந்தைகள் கதாநாயகனுக்குச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்து தரும் இடம்… இதெல்லாம் உதாரணம்.

    ஜெயராஜ்: சாதாரணமா கலர் படம் என்றால், வர்ணங்கள் கொஞ்சம் ‘டார்க்’கா இருக்கும். இந்தப் படத்தில் ரொம்ப லைட்டா, மனதுக்குக் குளிர்ச்சி அளிப்பதுபோல இருந்தது.

    சீனிவாசன்: ஜெயராஜ் ஓவியர் அல்லவா? வர்ணத்தைப் பத்தி அவர் சொன்னால் சரியா தான் இருக்கும்.

    மனோரமா: கதாநாயகன் கதாநாயகி முதன்முதலில் சந்திக்கும் இடம் – ஏதாவது விபத்திலேயோ, அல்லது எங்காவதோதான் சந்திப்பாங்க. இந்தப் படத்திலே அவர்கள் சந்திப்பு புது மாதிரியா இருந்தது. ஒருவருக்கு உதவி செய்யப் போக, தன் பணமே பிக்பாக்கெட் போக, ஹீரோயின் ஹீரோ சொக்காயைக் கேட்கறது, சண்டை போடறது, கடைசியிலே வாட்சை வாங்கிக்கிறது இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த ஹீரோயின் ஹீரோவை அதுவரைக்கும் விரும்பறாளா இல்லையான்னு காட்டாமல், ‘உங்களுக்குப் பெண்ணை நான்தான் ‘செலக்ட்’ பண்ணுவேன்; என்னைக் கேட்காமல் செய்துட்டீங்களே’ன்னு சொல்றது, அதாவது அந்தப் பாத்திரம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதை ஜெயலலிதாவும் ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க. காதலா இல்லாமல் வேற ஒரு விதமா அவங்க காதல் ஆரம்பித்திருக்கிறது நல்லா இருக்கு!

    ஜெயராஜ்: இப்பல்லாம் தமிழ்ப் படங்களில், கட்டிப் பிடிச்சுக் காதல் பண்ணும் காட்சி அதிகமா இருக்கும். இந்தப் படத்திலே அப்படி இல்லை.

    மனோரமா: ஆமாம்! நான் கூட, ஹீரோ ‘உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கறேன்’னு சொல்லிட்டு, வெளியே ஓடினதும் ரெண்டு பேரும் சேர்ந்து மழையிலே பாடப் போறாங்கன்னு நெனைச்சேன். இதிலே அது இல்லை. அதுவே நல்லா இருந்தது.

    ராஜம் கிருஷ்ணன்: இந்தப் படத்திலே பொதுவா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இவர்களைத் தாக்குவதுபோல மனசில் படுது!

    சீனிவாசன்: இல்லீங்க. பொதுவா அரசியலில் இருக்கும் எல்லோருக்குமே இது பொருத்தமா இருக்கும். அவர் நகரசபை சேர்மனா இருக்கும்போது, சிலர் தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வராங்க. இதிலே காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுன்னு வேறுபாடே வேண்டாம். ஜனநாயகம் என்றைக்கு ஆரம்பித்ததோ, அன்றை யிலிருந்து இது போன்ற நபர்கள் அரசியலில் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவா சொல்லப் போனா, இது ஒரு நல்ல ‘மாரல் டீச்சிங்’. நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் படம்.

    பிரேமா: வசனம் கூட ரொம்ப நல்லா இருக்கு. உதாரணமா, ரங்காராவ், ‘முன் ஜென்மத்திலேயே குழந்தை லஞ்சம் வாங்கியிருக்கும், அதனாலேதான் பிறக்கும்போது கையை மூடிக்கிட்டு பிறக்குது.’

    சசிகலா: அப்புறம் எம்.ஜி.ஆர். தன் பிரதர்கிட்டே சொல்றாரே… ‘நான் ஊமைகளுக்காகச் செவிடர்கள்கிட்டே பேசிக்கிட்டு இருந்தேன்’னு, அந்த வசனமும் நல்லா இருந்தது.

    ராஜப்பா: படம் ஆபாசம் இல்லாமல், விரசம் இல்லாமல் இருப்பதுதான் எனக்குப் பிடிச்சுது!

    சுப்பையா: ‘வாங்கய்யா, வாத்தியாரய்யா‘ன்னு ஒரு பாட்டு வருதே, அதிலே ஏதாவது குறிப்பு இருக்கா? அது யாரையாவது குறிக்குதா? (சிரிப்பு)

    மனோரமா: இல்லீங்க. முதல்லே முதியோர் கல்விக்காகத்தானே குப்பத்துக்கு வர்றார் துரை? அப்போ அவர் வாத்தியார்தானே?

    ராஜம் கிருஷ்ணன்: படத்திலே காமெடியே அதிகம் இல்லை! நாகேஷ் இருந்தும் கூட அதிக ஹாஸ்யம் இல்லை.

    சசிகலா: ஆமாம்! எம்.ஜி.ஆர். சேர்மன் ஆயிட்டபோது நாகேஷ் ஏன் நகரசபைக் கூட்டத்திலே அவர் பின்னாடியே நின்னுக்கிட்டு இருக்கார்?

    சீனிவாசன்: செக்ரெட்டரி ஆகியிருப்பார்!

    சசிகலா: அது சரி, பின்னாலே ஜெயலலிதா எப்படி இங்கிலீஷ் பேசறாங்க?

    மனோரமா: முதியோர் கல்விக்காக வந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கலாம், இல்லியா?

    சீனிவாசன்: சரி, நான் ஒண்ணு ஒண்ணு கேட்கிறேன். ஒரு படத் திலே எலந்தப் பழம் வந்தா, உடனே இன்னொரு படத்திலே மாம்பழம், அந்தப் பழம் இந்தப் பழம்னு ஏதாவது வந்தே ஆகணுமா என்ன?

    ஜெயராஜ்: அந்தம்மாவைப் போய் கேட்டீங்கன்னா, அவங்க எப்படிச் சொல்லுவாங்க? புரொடியூஸரைத்தான் கேட்கணும். அதிருக்கட்டும், ரங்காராவைப் பத்தி யாரும் சொல்லலையே?

    சீனிவாசன்: அவரை நல்ல மனுஷனா பார்த்துப் பார்த்து, இந்த மாதிரி பார்க்க ஆரம்பத்தில் ஒரு மாதிரி சங்கடமா இருந்தது. போகப் போக பிக்கப் பண்ணிடறாரு. அதாவது, பாதாள பைரவி வில்லன் மாதிரி திரும்பிடறாரு!

    ராஜப்பா: அசோகன் மட்டும் என்னவாம்?

    பிரேமா: ஆமாம்! ரொம்ப அடக்கமா நடிச்சிருக்கார். பகவதியும் நல்லா நடிச்சிருக்கார். சாதாரணமா கலர் படங்களில் டார்க் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு இருப்பார் எம்.ஜி.ஆர். இதிலே ரொம்ப ப்ளீஸிங் கலரைப் போட்டுக்கிட்டு, ரொம்ப இதுவா இருக்கார்!

    சுப்பையா: மொத்தத்திலே அறிவுரைகள், கருத்துக்கள் எல்லாம் இருக்கு. அதையும் ‘என்டர்டெயின்மென்ட்’ எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து, நல்லா போர் அடிக்காம எடுத்திருக்காங்க!

    சீனிவாசன் விருதுநகர் எம் எல் ஏ (காமராஜரைத் தோற்கடித்தவர்)
    மனோரமா
    ஜெயராஜ் ஓவியர்

    தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்