நாம் இருவர் – விகடன் விமர்சனம்


விகடனில் ஏவி.எம்மின் நாம் இருவர் படம் வந்தபோது எழுதப்பட்ட விமர்சனத்திலிருந்து ஒரு பகுதி… நன்றி, விகடன்!

ஆடல் பாடல் நல்ல பொழுதுபோக்கு

படங்களைத் தயாரித்து விடலாம். நூற்றுக்கணக்கில் கூடத் தயாரித்துவிடலாம். ஆனால், படிக்காத பாமரர்கள் மட்டுமின்றி, படித்த அறிவாளிகளும் கண்டு வியக்கும் முறையில் கலை நுணுக்கங்கள் நிறைந்த நல்ல படங்களாகத் தயாரிப்பது சிரமம். இந்தச் சிரமமான காரியத்தில் ஏவி.எம். புரொடக்ஷன்ஸார் பாராட்டக் கூடிய அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். அதற்கு ஓர் அத்தாட்சியாக இருக்கிறது ‘நாம் இருவர்’.

எடுத்ததுமே நம்மைக் கவர்ந்து விடுகிறது, நடிகர்களின் வேஷப் பொருத்தம். அந்தந்த பாத்திரங்களுக்கு மிகவும் ஏற்ற நடிகர்களாகவே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அநேக படங்களில் காண்பிக்கப்படுவது போல் ’40 வயது வாலிபனும்’, ’35 வயதுப் பருவ மங்கையும்’ காதல் புரியவில்லை இப்படத்தில். உண்மையிலேயே இளம் வயதுள்ள டி.ஆர். மகாலிங்கமும், டி.ஏ. ஜெயலட்சுமியும் காதலர்களாகக் காட்சியளிக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது நமது உள்ளம் அப்படியே அவர்களோடு ஒன்றுபட்டு விடுகிறது. மீசை நரைத்தும் ஆசை நரைக்காத தந்தையின் பாகத்தில் கே. சாரங்கபாணி நடிக்கிறார். பல சமூகப் படங்களில் நடித்துள்ள பி.ஆர்.பந்துலு உத்தம அண்ணனாக வருகிறார். அசட்டு ஞானோதயத்தின் பாகத்தை ஹாஸ்ய நடிகர் டி.ஆர். ராமச்சந்திரன் ஏற்று நடிக்கிறார். மற்ற நடிகர்கள் நாம் இருவர் நாடகத்தில் திறமையுடன் நடித்து அனுபவம் பெற்றவர்கள்.

நல்லதொரு பொழுதுபோக்காக இருப்பதற்குப் படத்தில் ஆடலும் பாடலும் ரொம்ப அவசியம் என்பதை உணர்ந்துள்ள ஏவி.எம். புரொடக்ஷன்ஸார் கண்ணுக்கினிய ஆடல்களையும் காதுக்கினிய பாடல்களையும் அமைத்திருக்கிறார்கள். ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே‘ முதலிய பாரதியாரின் தேசிய கீதங்களை ஸ்ரீமதி டி.கே. பட்டம்மாள் அழகாகப் பாடியிருப்பதும், அந்தப் பாட்டுக்களுக்கு சிறுமி கமலா அபிநயம் பிடித்து அற்புதமாக ஆடியிருப்பதும், மனதை வசீகரிக்கக் கூடிய நல்ல அம்சங்கள். டி.ஆர்.மகாலிங்கம் பாடியிருக்கும் பாட்டுக்களும் படத்திற்கு ஒரு விசேஷ கவர்ச்சியை அளிக்கின்றன. சில பாட்டுக்கள், காலஞ்சென்ற கிட்டப்பாவின் பாட்டுக்களை ஞாபகப்படுத்துவதால், அவை கேட்போரைப் பரவசப்படுத்துகின்றன.

மகான் காந்தி மகான் என்ற பாட்டுக்கு “சிறுமி” கமலா இங்கே ஆடுகிறார்.

‘ஜே ஹிந்த்’, ‘மகாத்மா காந்திக்கு ஜே!’ முதலிய தேசிய கோஷங்களும், தேச பக்தர்களின் உருவப் படங்களும், அங்கங்கே சில சம்பாஷணைகளில் வரும் கருத்துக்களும் இக்கால மக்களின் மனப்போக்குக்கு ஏற்றவைகளாக இருப்பதால், படத்தின் வெற்றிக்கு அவை பெரிதும் உதவியாக இருக்கின்றன என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

இன்னும் சிலாகிப்பதற்கு இப்படத்தில் எவ்வளவோ நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஒரே பேபி கமலாவை வைத்துக் கொண்டு, இரண்டு பேபி கமலாக்கள் நடனம் செய்வதாகக் காண்பித்திருக்கும் காமிராக்காரரின் திறமையைப் பாராட்டலாம். பாத்திரங்களுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவாறு சம்பாஷணைகளை இயற்றிக் கொடுத்திருக்கும் கதாசிரியர் ஸ்ரீ ப. நீலகண்டனின் திறமையையும் பாராட்டலாம்.

சென்ற உலக யுத்தத்தில் ஹிட்லர் பிரயோகித்த ‘வி-டூ’ என்ற ஆயுதம் அதன் வேகத்திற்குப் பிரசித்தி பெற்றது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தப் பெயரே இப்படத்தின் ஆங்கிலப் பெயராக அமைந்திருப்பதனாலோ என்னவோ, படம் ஆரம்பம் முதல் கடைசி வரையில் விறுவிறுப்பும் வேகமும் உள்ளதாக இருக்கிறது. படத்தில் அலுப்புத் தட்டும் இடமே இல்லை!

ஸ்ரீ ஏவி.எம். செட்டியார் அவர்களின் திறமையில் நமக்கு அதிக நம்பிக்கை ஏற்படுகிறது. வசதிகள் நிறைய ஏற்படும்போது, இதை விடப் பன்மடங்கு மேம்பட்ட படங்களை அவரால் தயாரித்துத் தமிழ்நாட்டுக்கு அளிக்க முடியும் என்பதில் நமக்குச் சந்தேகமே இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்

தொடர்புடைய சுட்டி: மாலை மலரில் இந்த படம் உருவான கதை

தமிழ் தயாரிப்பாளர்கள்


போன பதிவு ஏவிஎம் செட்டியார் அளித்த ஒரு பழைய பேட்டி. செட்டியார் பற்றி நானும் ஏதாவது எழுதலாம் என்று பார்த்தேன், எனக்கு தயாரிப்பாளர்களை பற்றி அவ்வளவாக தெரியாது. அதே நேரத்தில் நண்பர் சூர்யா தன் தளத்தில் சாண்டோ சின்னப்பா தேவரை பற்றி ஒரு அருமையான பதிவு போட்டிருப்பதை பார்த்தேன். சரி, தயாரிப்பாளர்களை பற்றி பொதுவாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ் தயாரிப்பாளர்களில் எஸ்.எஸ். வாசன், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம், செட்டியார், தேவர் நான்கு பேரும் பல வருஷம் கொடி கட்டி பறந்தவர்கள்.

ஏவிஎம் செட்டியார்

ஏவிஎம் இத்தனை வருஷம் கழித்தும் நன்றாக இருப்பது பெரிய விஷயம். செட்டியார் நடுவில் ஒரு பத்து வருஷம் படமே வேண்டாம் என்று இருந்ததாகவும், அவர் இறந்த பிறகுதான் சரவணன் மீண்டும் முரட்டுக் காளை படத்துடன் அடுத்த இன்னிங்சை ஆரம்பித்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கென்னவோ பெரிய செட்டியார் இருந்தபோதுதான் நல்ல படங்கள் வந்தன என்று தோன்றுகிறது. நாற்பதுகளின் பிற்பகுதியிலிருந்து அறுபதுகளின் முற்பாதி வரைக்கும் பல நல்ல படங்கள் வந்தன. சபாபதி, நாம் இருவர், ஓரிரவு, வாழ்க்கை, பராசக்தி, பெண், அந்த நாள், நானும் ஒரு பெண், அன்னை, மேஜர் சந்திரகாந்த் ஆகியவை குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை. சரவணன் வந்த பிறகு மசாலா படங்கள்தான் வருகின்றன.

எஸ்.எஸ். வாசன்

எஸ்.எஸ். வாசன் ஒரு பத்து வருஷம் கொடி கட்டி பறந்தார். மங்கம்மா சபதம், சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், அவ்வையார் எல்லாம் பெரும் வெற்றி. நாற்பதுகளிலேயே கோடீஸ்வரர் ஆகிவிட்டார். அவருக்கு அப்புறம் படம் எடுப்பதில் இண்டரஸ்ட் போய்விட்டது என்று நினைக்கிறேன். இரும்புத் திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஒளி விளக்கு மாதிரி படங்கள் வந்தாலும், ஜெமினி ஃபில்ம்ஸ் அறுபதுகளிலேயே அமுங்கிவிட்டது.

டி.ஆர். சுந்தரம்

டி.ஆர். சுந்தரம் பெரிய ஆள். பாரதிதாசன், எம்ஜிஆர், கலைஞர், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் எல்லாரும் அவரிடத்தில் வேலை செய்திருக்கிறார்கள். மந்திரி குமாரி, திரும்பிப் பார், அலி பாபாவும் நாற்பது திருடர்களும் மாதிரி படங்களை எடுத்திருக்கிறார். ஆனால் அறுபதுகளில் வல்லவன் சீரிஸ் – வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன் மாதிரி – படங்கள் மட்டுமே எடுத்தது ஏன் என்று தெரியவில்லை.

தேவர்

இவர்கள் எல்லாம் கொடி கட்டி பறந்தாலும், நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வட்டத்தில் name recognition இருந்த ஒரே தயாரிப்பாளர் தேவர்தான். தேவரின் மிருகப் படங்கள் எங்கள் வட்டத்தில் பெரிய ஹிட். புலியையும், சிங்கத்தையும், யானையையும் நாங்கள் வேட்டைக்காரன் மாதிரி ஏதாவது படத்தில் பார்த்தால்தான் உண்டு. (உயிர் காலேஜ் எல்லாம் போனதில்லை.)

தேவர் படங்கள் எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய காவியங்கள் இல்லை. அவருடைய ஆடியன்சுக்கு மன அளவில் ஒரு எட்டு வயதுதான் இருக்கும். எம்ஜிஆர், முருகன், மிருகங்கள் இவற்றை வைத்தே காலத்தை ஓட்டியவர். ஆனால் ஒரு நாளும் படம் பார்ப்பார்களை ஏமாற்றியதில்லை. அவர் கடை சமாசாரம் எப்படி இருக்கும் என்பது தெள்ளத்தெளிவாக இருந்தது. அது பிடிக்காதவர்கள் போக வேண்டாம்!

எம்ஜிஆரை வைத்து அதிக படங்கள் எடுத்தவர் அவர்தான் என்று நினைக்கிறேன். எதுவும் எம்ஜிஆரின் சிறந்த படங்கள் லிஸ்டில் கூட வராது. வேட்டைக்காரன், நல்ல நேரம், தேர் திருவிழா, முகராசி இந்த மாதிரி படங்கள் நினைவு வருகின்றன. வேட்டைக்காரன், நல்ல நேரம் இரண்டும் பிரமாதமாக ஓடியன. இந்த நாலு படமும் தண்டம், இப்போது வேறு எதுவும் நினைவு வரவில்லை. எம்ஜிஆருக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்தது. இருவரும் ஒருவரால் ஒருவர் வளர்ந்தவர்கள். எம்ஜிஆர் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரால் இனி பேச முடியுமா, அவருக்கு இனி மேல் சினிமா வாழ்க்கை இருக்கிறதா என்று எல்லாரும் சந்தேகப்பட்டார்களாம். இவர் எம்ஜிஆரை பார்க்கப் போனாராம். போனவர் அடுத்த படம் நடிக்க வேண்டும் என்று ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தாராம்!

அவருக்கென்று ஒரு ஆஸ்தான டீம் இருந்தது. கே.வி. மகாதேவன், எம்.ஏ. திருமுகம், தூயவன், ஆரூர் தாஸ், நாகேஷ், மேஜர், அசோகன் இல்லாமல் அவர் சாதாரணமாக படம் எடுப்பதில்லை.

ஆங்கிலமும் தெரியாமல், ஹிந்தியும் தெரியாமல், ஹிந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தார்.

அவருடைய படங்களில் தெய்வம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியது. படம் நன்றாக இருக்கும் என்று இல்லை, தண்டம்தான். ஆனால் கோவில்களின் அந்த கால நிலையை ஒரு டாக்குமெண்டரி போல நன்றாக எடுத்திருப்பார்.

இவர்களைத் தவிரவும் பல தயாரிப்பாளர்கள் குறிப்பிட வேண்டியவர்கள். எம்ஜிஆர் புகழிலே கொஞ்சம் மங்கி தெரியும் பந்துலு, ஜூபிடர் சோமு, பக்ஷிராஜா ஃபில்ம்ஸ் ஸ்ரீராமுலு நாயுடு, தமிழில் பல வெற்றி படங்கள் எடுத்தாலும் தெலுங்கு கம்பெனியான விஜயா பிக்சர்ஸ் நாகி ரெட்டி, எம்ஜிஆர், சிவாஜி, கலைஞர், பி.எஸ். வீரப்பா, முரசொலி மாறன், ஸ்ரீதர், ஜி.என். வேலுமணி, ஏ.பி. நாகராஜன், பாலச்சந்தர் படங்களை தயாரித்த கலாகேந்த்ரா, பாலாஜி, பிற்காலத்தில் ஜீவி, ஆர்.பி. சௌத்ரி, கமல், கோவைத் தம்பி, பிரகாஷ் ராஜ், என்று சொல்லி கொண்டே போகலாம். ஆனால் இவர்களில் பலருக்கும் வேறு முக்கியமான முகங்கள் இருந்தன – எம்ஜிஆரை தயாரிப்பாளர் என்றா நினைவு வைத்துக் கொள்கிறோம்? அப்படி இல்லாதவர்கள் பலரும் நிலைத்து நிற்கவில்லை.

இன்றைக்கு இவர்களுக்கு சமமாக சொல்லக் கூடிய கோலிவுட் பாதுஷாக்கள் இருக்கிறார்களா? உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்!

தேவரை பற்றி சாரதா இன்னும் விவரங்கள் தருகிறார்.

மேலும் சில படங்கள்: தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், குடும்பத் தலைவன், தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், தொழிலாளி, கன்னித் தாய், தனிப் பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, காதல் வாகனம் ப்ளஸ் நீங்கள் சொன்ன படங்கள் நாலு. இவற்றில் சில மட்டும் 100 நாட்கள் என்ற எல்லைக்கோட்டைத் தொட்டன. பெரும்பாலானவை 50-ஐக்கூட கடக்கவில்லை. அவர் தன் வாழ்நாளில் தமிழில் கண்ட ஒரே வெள்ளிவிழாப்படம் ஆட்டுக்கார அலமேலு மட்டும்தான். சில படங்கள் பெயரை மட்டும் மாற்றி விட்டுப் பார்த்தால் ஒரே மாதிரி இருக்கும். திருக்குறள் மாதிரி இரண்டு வரிக் கதைகளைத்தான் படமாக எடுப்பார். தேவர் படத்தின் கதையை ஒரு பஸ் டிக்கட்டின் பின்பக்கம் எழுதிவிடலாம் என்று கோலிவுட்டில் ஒரு வாசகம் உண்டு.

ஜெய்சங்கரை வைத்து கெட்டிக்காரன், நேர்வழி போன்ற குப்பைப் படங்களையும், அக்கா தங்கை, பெண் தெய்வம், மாணவன் போன்ற நல்ல படங்களையும் எடுத்தவர். ரவிச்சந்திரனை வைத்து மகராசி என்ற படத்தையும் எடுத்தார். சிவகுமாரை கதாநாயனாக வைத்து ஆட்டுக்கார அலமேலு, வெள்ளிக்கிழமை விரதம், (பழைய) ஸ்ரீகாந்தை நாயகனாகவும் பிரமீளாவை நாயகியாகவும் போட்டு கோமாதா என் குல மாதா ஆகிய வெற்றிப்படங்களை எடுத்தார். இடையிடையே ஏ.வி.எம்.ராஜனை வைத்து துணைவன், தெய்வம், திருவருள் என் பக்திப்படங்களின் பக்கமும் தலைநீட்டினார்.

ரஜினியை வைத்து தாய்மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம், தாய் வீடு மற்றும் கமலை வைத்து தாயில்லாமல் நானில்லை (எத்தனை தாய்கள்), ராம் லக்ஷ்மண் போன்றவை அவர் மறைவுக்குப்பின் அவரது வாரிசுகளால் தயாரிக்கப்பட்டவை. கடைசியாக ஆனந்த பாபுவை வைத்து தர்மம் என்ற படம் எடுக்கப்போக, படம் அட்டர் ஃப்ளாப். தேறவேயில்லை. தேவர் பிலிம்ஸ் அத்துடன் நொடித்துப்போனது. இதனிடையே வாரிசுகளுக்குள் பாகப்பிரிவினை தலைதூக்க தேவர் பிலிம்ஸ் மற்றும் தண்டாயுதபாணி பிலிம்ஸ் மூடுவிழா கொண்டாடியது.

சின்னப்பா தேவர் யாரையும் எளிதில் நம்பி விடுவார். யாரும் அவரை சுலபமாக ஏமாற்றிவிடலாம். கே.வி.மகாதேவன் கூட வெறும் நாலு மெட்டுக்களை வைத்துக்கொண்டு அவருக்கு நாற்பது பாட்டுக்கள் போட்டுக்கொடுத்து விடுவார். தேவரின் நல்ல மனதுக்கு அவை பாப்புலராகிவிடும். இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ் ஜோடியை கண்ணதாசன் தேவருக்கு அறிமுகப்படுத்த, தேவர் அவர்களுக்கு படங்களில் வாய்ப்புக்கொடுத்ததால், படங்களில் டைட்டில்களில் ‘கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்’ என்று போட்டு தங்கள் நன்றியை காணிக்கையாக்கினர்.

எனக்கு தேவர் எடுத்த எம்ஜிஆர் படங்கள் பெரிய ஹிட்கள் என்று நினைவு. என் impression டெண்டு கோட்டையில் இருந்த ரெஸ்பான்சை பார்த்து ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் சாரதா என்னை விட விஷயம் தெரிந்தவர். ஞாபகம் வராத எம்ஜியார் படங்களின் பேரை எடுத்து தந்த சாரதாவுக்கு நன்றி! எனக்கு அசோகன் அண்ணனாக வரும் படம் (தாய்க்கு தலை மகன்), அசோகன் ஒரு மாஸ்க் போட்டுக்கொண்டு வரும் படம் (தர்மம் தலை காக்கும்) என்றுதான் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. எம்ஜிஆர் ஒரு படத்தில் பறந்து கூட போவார் என்று ஞாபகம். என்ன படமோ தெரியவில்லை.

சாரதா சொல்வது போல பாட்டுகள் – எம்ஜிஆர் படத்தில் கூட – பிரமாதமாக இருக்காது. சூர்யா சொல்வது போல மூன்று மாதத்தில் படம் எடுப்பதால் இருக்கலாம்.

ஞாபகம் வரும் இன்னும் சில படங்கள் – நீலமலை திருடன் (ரஞ்சன்), சொர்க்கம் நரகம், இளஞ்ஜோடிகள், தர்மத்தின் தலைவன். கோமாதா என் குல மாதா ஹிந்தியிலும் காய் அவுர் கௌரி என்று வந்தது.

தொகுக்க்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஆரூர் தாஸ் தேவரை நினைவு கூர்கிறார்
பா.தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் என்ற புத்தகம் பற்றி பதிவர் சூர்யா
தேவர் புத்தகம் பற்றி முகில், இதே புத்தகம் பற்றி பா. ராகவன்
தேவர் பற்றி முரளி கண்ணன்

ஏவிஎம் பேட்டி


ஏவிஎம்

ஏவிஎம்

ஏ.வி.எம் செட்டியாரை விகடனில் எப்போதோ எடுத்த பேட்டி. நன்றி, விகடன்!

“இந்தத் தொழிலில் நாங்கள் போடுகிற மூலதனத்துக்கும் உழைக்கிற உழைப்புக்கும், படுகிற பாட்டுக்கும் பதிலாக வேறொரு தொழிற்சாலையைத் தொடங்கியிருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும்.”- இப்படிச் சொல்கிறவர் யார்? ஏவி.எம். ஸ்டூடியோ அதிபர் திரு. மெய்யப்பன் அவர்கள்தான்.

“அப்படியானால் இந்தத் தொழிலை விட்டு விடுவதுதானே?” என்று கேட்டால், “எப்படி விட முடியும்? புலியின் வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வாலை விட்டால் திரும்பி நம் மீது பாய்ந்து விடுமோ என்று அஞ்சி, கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதில்லையா? அந்த மாதிரியேதான்” என்கிறார்.

திரு மெய்யப்பன் இத் தொழிலை விரும்பி மேற்கொண்டார் என்பதைக் காட்டிலும், சந்தர்ப்பம் இவரை இழுத்துக்கொண்டது என்று கூறுவதுதான் பொருந்தும்.

இவருடைய தந்தை ஆவிச்சி செட்டியார் காரைக்குடியில் ஒரு ஸ்டோர் வைத்திருந்தார். கிராமபோன் ரிக்கார்டுகள் விற்பனை செய்யும் டீலராகவும் இருந்தார். அவர் தொடங்கிய அந்த ஸ்டோர் ஏவி. அண்ட் ஸன்ஸ் என்ற பெயரில் இப்போதும் நடந்து வருகிறது. கிராமபோன் ரிக்கார்டு வியாபாரத்தை விரிவாகச் செய்யும் நோக்குடன் 1932-ல் சென்னைக்கு வந்த திரு. ஏவி.எம்., நாராயண அய்யங்கார், சிவன் செட்டியார் இவர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு, சரஸ்வதி ஸ்டோர்ஸைத் தொடங்கினார்.

முசிரி சுப்பிரமணிய அய்யர், கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், சுப்பையா பாகவதர் இவர்களுடைய ரிக்கார்டுகளே அந்தக் காலத்தில் பிரசித்தமாயிருந்தன. ‘அதிகமாக விற்பனையான இசைத் தட்டு எது?’ என்று கேட்டதற்கு, “முசிரியின் கர்னாடக இசைத் தட்டுகள் மட்டும் 30,000-க்கு மேல் விற்பனை ஆயின. கர்னாடக இசைத்தட்டு விற்பனையில் அது ஒரு பெரிய ரெக்கார்ட்! ‘டிரியோ டிரியோடேயன்னா’, ‘எட்டுக்குடி வேலனடி’, ‘செந்தூர் வேலாண்டி’ பாட்டெல்லாம் அந்தக் காலத்தில் ரொம்பப் பாப்புலர்!” என்கிறார்.

ரேடியோவும் சினிமாவும் வந்த பிறகு கிராமபோன் ரிக்கார்டுகளுக்கு மவுசு குறைந்துவிட்டதால், மெய்யப்பனின் கவனம் படத் தயாரிப்புத் தொழிலில் திரும்பியது.

சரஸ்வதி டாக்கி புரொடியூஸிங் என்ற பெயரில் ஒரு படக் கம்பெனி யைத் துவக்கினார். அப்போதெல்லாம் சென்னையில் ஸ்டுடியோக்கள் கிடையாதாகையால், கல்கத்தா நியூ தியேட்டர்சுக்குச் சென்று அல்லி அர்ஜுனா என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து முடித்தார். கே.எஸ்.அனந்தநாராயணய்யர் அந்தப் படத்தில் கிருஷ்ணனாகவும், குறத்தியாகவும் நடித்தார்.

‘படம் எப்படி இருந்தது?’ என்று கேட்டதற்கு, “அதை ஏன் கேட்கிறீர்கள்? படம் முழுவதும் எடுத்து விட் டோம். அப்போதெல்லாம் உடனுக்குடன் ரஷ் பார்க்கும் சந்தர்ப்பம் இல்லை. மொத்தமாகப் படத்தைப் போட்டுப் பார்த்தபோது 10,500 அடி கூடத் தேறவில்லை. படத்தில் எல்லோருடைய கண்களும் மூடிக் கிடந்தன. வெயிலில் படம் எடுத்த தால் கூச்சத்தில் கண்களை மூடிக் கொண்டுவிட்டார்கள். எடுக்கிறவர்களுக்கும் வெயில்தானே? நடிக்கிறவர்கள் கண்களை மூடிக் கொண்டிருக்கிறார்களா, திறந்து கொண்டிருக்கிறார்களா என்று பார்க்க முடியவில்லை. அப்புறம் கார்ட்டூன் படங்களைச் சேர்த்துக் காண்பித்து நேரத்தைச் சரிக்கட்டினோம்.” என்றார்.

அல்லி அர்ஜுனாவுக்குப் பிறகு இவர் எடுத்த படம் ரத்னாவளி. நடித்தவர்கள் ரத்னாபாய் – சரஸ்வதிபாய் சகோதரிகள். இந்தச் சகோதரிகளுக்கு 30 நாள் ஷூட்டிங்குக்கு 25,000 ரூபாய் கொடுக்கப்பட்டது. ‘வசூல் எப்படி?’ என்ற நமது கேள்விக்கு, ‘பிரயோஜனமில்லை’ என்பதுதான் அவர் பதில்.

‘இனி சொந்தத்தில் ஸ்டுடியோ இல்லாமல் படம் எடுக்கக் கூடாது. ஸ்டுடியோ ஆரம்பிப்பதாயிருந்தால் அது பங்களூரில்தான் இருக்க வேண்டும். ஸ்டூடியோவுக்கேற்ற சீதோஷ்ண நிலை அங்கேதான் இருக்கிறது’ என்ற முடிவுக்கு வந்தார். அதற்கேற்றாற்போல் ஜயந்திலால் என்பவர் (பூனா பிரபாத் ஸ்டுடியோவுடன் தொடர்பு கொண்டவர்) பங்களூரில் இருந்தார். அவருடைய கூட்டுறவோடும் தம் சகாக்களின் கூட்டுறவோடும் பங்களூரில் பிரகதி என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோவைத் தொடங்க முடிவு செய்தார் ஏவி.எம். வெளி நாட்டிலிருந்து சாதனங்கள் வந்து சேர ஆறு மாத காலம் ஆகும்போல் இருந்ததால், அதற்குள் பூனா சென்று இந்தி நந்தகுமாரைத் தமிழில் எடுக்க முயன்றார்கள். இந்திப் படம் திரையிடப்பட்ட இரண்டு நாளைக்கெல்லாம் வசூல் குறைந்துவிடவே, தமிழை அடியோடு மாற்றி எடுப்பதென முடிவு செய்தனர். இந்தி ஏன் ஓடவில்லை என்று கேட்டால், “கிருஷ்ணலீலா வித்அவுட் கம்சன் என்றால், படம் எப்படி ஓடும்?” என்று திருப்பிக் கேட்கிறார். தமிழ் நந்தகுமாரில் பணம் கிடைத்தது. ஆனால், பங்களூர் பார்ட்னர்கள் தங்கள் பங்கைப் பிரித்துவிட்டதால், ஏவி.எம். பிரகதி ஸ்டுடியோவை பங்களூரில் அமைப்பதற்குப் பதில் சென்னையில் நிறுவ வேண்டியதாயிற்று.

ஒஷியானிக் ஓட்டலுக்கு அருகே யுள்ள விஜயநகரம் பேலஸ்தான் பிரகதி ஸ்டுடியோ இருந்த இடம். வாடகை ரூ.350-தான். பூகைலாஸ், அரிச்சந்திரா, சபாபதி, ஸ்ரீவள்ளி ஆகிய படங்களே ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்டவை.

“சபாபதி ரொம்பத் தமாஷான படம்” என்று நாம் சொன்னபோது, “பூகைலாஸ் எடுத்தது அதைவிட வேடிக்கை” என்றார். “தெலுங்கு பேசும் படம், தமிழ் புரொடியூஸர், இந்தி டைரக்டர், கன்னட ஆர்ட்டிஸ்ட்ஸ்! இதுதான் பூகைலாஸ்!”

1944-ல் ஏவி.எம். டைரக்ஷனில் உருவாக்கப்பட்ட ராஜ யோகி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. வசுந்தராவும் தியாகராஜ பாகவதரும் சேர்ந்து நடித்த முதல் – கடைசிப் படம் அதுதான். பாதியிலேயே நின்று போனதற்குக் காரணம், நட்சத்திரங்கள் ஒத்துழைப்பு இல்லாததுதான்!

ஏவி.எம் தம் சொந்த டைரக்ஷனில் எடுத்த வெற்றிப் படம் ஸ்ரீவள்ளி. டி.ஆர்.மகாலிங்கமும் ருக்மிணியும் இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, ஒருவரை ஒருவர் நிஜ வாழ்க்கையிலும் காதலிக்கத் தொடங்கிவிட்டார்கள். படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் அது. இரண்டாவது காரணம், இந்தப் படத்தில் வந்த யானை. மூன்றாவது காரணம், இயற்கை அழகு மிக்க அவுட்டோர் காட்சிகள்.

1947-ல் உலக யுத்தம் வந்துவிடவே, மின்சார வசதி இல்லாமல், ஸ்டுடியோவை காரைக்குடிக்குக் கொண்டு போக நேர்ந்தது. இடம் மாறிய போது ஸ்டுடியோவின் பெயரும் ஏவி.எம். என்று மாற்றப்பட்டது. தேவகோட்டை ரோடில் ஓர் இடத்தைப் பிடித்து ஐம்பது குடிசைகள் போட்டு, நட்சத்திரங்களை அங்கேயே குடியேற்றி, நாம் இருவர், வேதாள உலகம் போன்ற படங்களை உருவாக்கினார். ராமராஜ்யாவைத் தமிழில் டப் செய்து வெளியிட்டார். பாரதியார் பாடல்களுடன் வெளியான படம் நாம் இருவர். லலிதா-பத்மினி பாம்பாட்டி நடனத்துடன் வெளியானது வேதாள உலகம்.

ரூ.25,000 கொடுத்து பாரதியார் பாடல்களை விலைக்கு வாங்கி வைத்திருந்த உரிமையை, அப்போ தைய முதலமைச்சர் திரு. ஓ.பி. ராமசாமி ரெட்டியாரின் விருப்பத்துக்கிணங்க எவ்விதப் பிரதிப்பயனும் எதிர்பாராமல் பொதுச் சொத்தாக மாற்றிச் சர்க்காரிடம் ஒப்படைத்தார் ஏவி.எம்.

ஏவி.எம். ஸ்டுடியோ கோடம்பாக்கத்துக்குக் குடியேறியது 1948-ல். பராசக்தி, வாழ்க்கை, அந்த நாள் போன்ற படங்கள் உருவானது இங்கேதான்.

‘இந்திப் படம் எடுத்தது எப்போது?’ என்று கேட்டதற்கு, “திரு. வாசன் அவர்கள் இந்தியில் சந்திரலேகா எடுத்து, வட நாட்டில் வெற்றிகரமாக ஓட்டி வழிகாட்டிய பிறகுதான், இந்தி மார்க்கெட்டில் நாங்களும் தைரியமாகப் புகுந்தோம்” என்கிறார் திரு. ஏவி.எம்.

ஏவி.எம். முத்திரையில் எடுக்கப்பட்ட ஹம் பஞ்சி ஏக் டால் கே என்னும், குழந்தைகள் நடித்த இந்திப் படத்துக்குப் பிரதம மந்திரி அவார்ட் கிடைத்தது மட்டுமல்ல; அந்தப் படத்தைப் பார்த்து மகிழ்ந்த நேருஜி ஏவி.எம். அவர்களையும், அந்தக் குழந்தைகளையும் தம் வீட்டுக்கு அழைத்து விருந்தோபசாரமும் செய்தார்.

ஐந்து முறை ஜப்பான் சென்று வந்துள்ள ஏவி.எம்., “அந்த நாட்டுக்கு இணையான இன்னொரு நாட்டைப் பார்த்ததில்லை. நேர்மையும், நாணயமும், உபகார குணமும் அந்த நாட்டின் தனிச் சிறப்பு” என்கிறார்.

ஆவிச்சி உயர்நிலைப் பள்ளி, ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் – இவ்விரண்டும் திரு. மெய்யப்பனின் தர்ம ஸ்தாபனங்கள். இவர் புதிதாகத் தொடங்கியுள்ளது, படங்கள் எடுப்பதற்குத் தேவையான பிலிம் வியாபாரம். பெயர்: ஆர்வோ.

சந்திரபாபு


chandrababu

1957-இல் தமிழ் சினிமா பற்றி எழுத இந்த வார இறுதி ஆகும் என்று நினைக்கிறேன். அதனால் இன்னொரு ஓசி போஸ்ட் போட்டுக் கொள்கிறேன்.

1-3-64-இல் வெளி வந்த பேட்டி. நன்றி, விகடன், விகடன் பொக்கிஷம்!

தூத்துக்குடி காங்கிரஸ்காரர் ஜே.பி. ராட்ரிக்ஸின் பதின்மூன்று குழந்தைகளில் ஆறாவது மகன், சந்திரபாபு. சிறு வயதிலிருந்தே விகடம் பண்ணுவதுதான் அவனுடைய பொழுதுபோக்கு. பிறர் போல் பேசியும் நடித்தும் காட்டச் சளைக்கமாட்டான். ஆங்கில சினிமா பார்த்துவிட்டு வந்தால் போதும், சார்லஸ் போயர், லாரன்ஸ் ஒலிவியர், ஃப்ரெடரிக் மார்ச் ஆகியவர்களை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுவான். சரியாகப் பிடித்துவிட்டது சினிமாப் பைத்தியம்! இது தந்தைக்குப் பிடிக்கவில்லை. முடிவு – தனி மனிதனாகி விட்டான் கலைஞன் சந்திரபாபு.

ஒரு விதத்தில் சந்திரபாபு சென்னைக்கு வருவதற்குக் காரணமாக இருந்தது ஜப்பான்காரன்தான். சென்ற யுத்தத்தின்போது இலங்கையில் குண்டுகள் விழுந்ததும், அங்கு குடியேறியிருந்த ராட்ரிக்ஸின் குடும்பம் இந்தியாவில் வந்து குடியேறியது.

தூத்துக்குடியிலிருந்து தனியாகப் புறப்பட்ட சந்திரபாபு, கையில் ஆறணா காசுடன் எழும்பூரில் வந்து இறங்கினார். எங்கு போவது, யாரைப் பார்ப்பது என்று புரியவில்லை. அப்போது, தந்தை தினமணியில் பணிபுரிந்துகொண்டிருப்பது நினைவுக்கு வர, அங்கே போனார். ஆனால், அங்கு தந்தை இல்லை. வேலையை விட்டு விட்டுப் போய்விட்டார் என்றார்கள். எங்கு குடியிருக்கிறார் என்று கூட ஒருவருக்கும் தெரியவில்லை.

சந்திரபாபுவுக்குத் தலை சுற்றியது. களைப்பு, பசி, ஏமாற்றம்! உடல் பதறியது. நிற்க முடியவில்லை. தடார் என்று தரையில் சாய்ந்துவிட்டார். அருகே இருந்த அன்பர் ஒருவர் – விருத்தாசலம் என்று பெயர் – உதவியுடன் மயிலாப்பூர் மாருதி பார்மஸி வந்து சேர்ந்தார். மலேரியா ஜுரத்துக்கு மருந்து எழுதிக் கொடுத்த டாக்டர், தந்தை இருக்கும் விலாசத்தையும் கொடுத்தார். மருந்து புட்டியுடன் தந்தை வசித்த வீட்டிற்குள் நுழைந்தார் சந்திரபாபு.

பின், அங்கிருந்து திருவல்லிகேணி காங்கிரஸ்காரர் ஏ.ஆர்.வி.ஆச்சார் இருந்த லாட்ஜில் குடி புகுந்தார். அப்போதெல்லாம் இந்திப் பாட்டுக்களைப் பிரமாதமாகப் பாடிக்கொண்டு இருப்பார் பாபு. அதிசயப்பட்ட ஆச்சார், அவரை டைரக்டர் கே.சுப்ரமணியத்திடம் கொண்டு விட்டார். அங்கு பலவிதமான நடனங்களைப் பயின்றார் சந்திரபாபு. மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் ஒரு நடனப் படத்தில் நடிப்பதாகவும் ஏற்பாடாயிற்று. ஆனால், அது பாதியிலேயே நின்றுபோய்விட்டது.

”அப்புறம் மனம் உடைந்து போய், அலைஞ்சுக்கிட்டிருந்தேன். பி.எஸ்.ராமையாவின் முயற்சியால் ‘தன அமராவதி’ என்கிற படத்தில் ஒரு சான்ஸ் கிடைச்சுது. முதல் நாள் ஷூட்டிங்கிலேயே தகராறு பண்ண ஆரம்பிச்சுட்டேன். குடுமி வைக்கிறதுக்காக மொட்டை அடிச்சுக்கணும்னு சொன்னாங்க. நான் மாட்டேன்னேன். அப்போ என் தலை முடி சுருள் சுருளாக அழகாக இருக்கும். அதைத் தியாகம் செய்ய மனசு வரலே. அப்போ செட்டிலேயிருந்த பழைய நண்பர் விருத்தாசலம் (அவர்தான் புரட்சி எழுத்தாளர் புதுமைப்பித்தன்) ‘மொட்டை அடிச்சுக்கோ! அதனால என்ன? மறுபடியும் வளர்ந்துட்டுப் போகுது’ன்னார். சரின்னு ஒப்புக்கிட்டேன். ஆனால் மொட்டை அடிச்சுக்கிட்டதுதான் மிச்சம். படம் கோவிந்தா ஆயிடிச்சு! அதற்கப்புறம் எங்கெங்கேயோ போனேன். யார் யாரையோ கேட்டேன். எல்லோரும் என்னைப் பைத்தியக்காரன் மாதிரிதான் ட்ரீட் பண்ணினாங்களே ஒழிய, திறமையுள்ள கலைஞன் மாதிரி மதிக்கலே. கடைசியிலே ஜெமினி அதிபர் வாசனைப் போய்ப் பார்த்தேன். அவரும் உற்சாகமா பதில் சொல்லலே. சரி, இனிமேல் உயிரோடு இருந்து பிரயோசனம் இல்லை என்று முடிவுக்கு வந்து ஜெமினி ஸ்டுடியோவிலேயே விஷம் குடிச்சு மயக்கமா விழுந்தேன். கேமராமேன் தம்புவும், ஜெமினி கணேசனும்தான் என்னை ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணிக் காப்பாத்தினாங்க. அப்படி ஒரு ட்ராஜிடியிலே ஆரம்பிச்சதுதான் இந்தக் காமெடியனின் வாழ்க்கை.”

ஜெமினியின் மூன்று பிள்ளைகள் படத்தில் ஒரே ஒரு ஸீனில் ஒரு டைரக்டர் வேஷத்தில் நடித்து எஸ்.எஸ்.வாசனின் பாராட்டைப் பெற்றதையும், அதற்கு ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதையும் தன்னால் மறக்கவேமுடியாது என்கிறார் பாபு.

சகோதரி படத்தில் தன் பாத்திரம் அமைந்த விதம் பற்றிக் கூறினார். படத்தை முடித்து, அதைப் போட்டுப் பார்த்த ஏவி.எம். அவர்கள், அதில் காமிக் சேர்க்கவேண்டும் என்று விரும்பி, சந்திரபாபுவைக் கூப்பிட்டு ஆலோசனை கேட்டாராம். சந்திரபாபு படத்தைப் பார்த்துவிட்டு, மனத்தில் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, அதற்கு வசனம் எழுதி, எங்கெங்கே நுழைக்கவேண்டும் என்றும் தீர்மானித்து, ஒரே வாரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டாராம்.

நான் ஒரு முட்டாளுங்க… ரொம்ப நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க என்ற பல்லவி என்னுடையதுதான். மிச்சம்தான் கண்ணதாசனுடையது. ஒரே நாள்லே டியூன் போட்டு ரிக்கார்ட் பண்ணி, அந்தக் காட்சியையும் முடித்துக் கொடுத்தேன். அப்படி உருவானதுதான் அந்த அருமையான பால்காரர் வேஷம்!”

சந்திரபாபு வணங்கும் கடவுள்: சார்லி சாப்ளின்.

ஆர்வி: நான் ஒரு முட்டாளுங்க பாட்டை இங்கே கேட்கலாம்.

சந்திரபாபு நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சபாஷ் மீனாதான். அதைப் பற்றி அடுத்த பதிவில்.

ஐம்பதுகளின் முற்பாதி – திராவிட இயக்கமும் தமிழ் சினிமாவும்


நான் 1950-54 கால கட்டத்தில் ஒவ்வொரு வருஷமும் சிறந்த படம் என்று தேர்ந்தெடுத்தவை மந்திரி குமாரி, ஓரிரவு, பராசக்தி, திரும்பிப் பார், அந்த நாள் மற்றும் மனோகரா. இவை எல்லாமே கலைஞர்/அண்ணா எழுதியதாகவும், திராவிட இயக்க தாக்கம் உள்ளதாகவும் இருக்கின்றன.

தமிழ் படங்கள் வர ஆரம்பித்து முதல் இருபது வருஷம் திராவிட இயக்கத்தின் பாதிப்பு எதுவுமே இல்லை. பாரதிதாசன் அன்றைய தமிழ் திரைப்பட நிலை எழுதிய ஒரு கவிதை கீழே.

என் தமிழர் படமெடுக்க ஆரம்பம் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர் நடை உடை பாவனைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர் உள்ளதில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை!
ஒன்றேனும் உயர் நோக்கம் அமைந்ததுவாயில்லை!
ஒன்றேனும் உயர் நடிகர் வாய்ந்ததுவாயில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதாயில்லை!

வட நாட்டார் போன்ற உடை, வட நாட்டார் மெட்டு!
மாத்தமிழர் முன்னாள் தெலுங்கு கீர்த்தனங்கள்!
வட மொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில பிரசங்கம்!
வாய்க்கு வரா ஹிந்துஸ்தானி ஆபாச நடனம்!
அமையும் இவை அத்தனையும் கழித்துப் பார்க்குங்கால்
அத்திம்பேர் அம்மாமி எனும் தமிழ்தான் மீதம்!

கடவுளர்கள், அட்டை முடி, காகிதப் பூஞ்சோலை,
கண்ணாடி முத்து வடம் கண் கொள்ளாக் காட்சி!
பரமசிவன் அருள் புரிந்து வந்து வந்து போவார்!
பதிவிரதைக்கின்னல் வரும் பழைய படி தீரும்!
சிரமமொடு தாளமெண்ணி போட்டியிலே பாட்டு
சில பாடி மிருதங்கம் ஆவர்த்தம் செய்து
வரும் காதல்! அவ்விதமே துன்பம் வரும், போகும்!
மகரிஷிகள் கோயில் குளம் – இவைகள் கதாசாரம்
இரக்கமற்ற பட முதலாளிக்கெல்லாம் இதனால்
ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!

ஐம்பதுகளின் முற்பாதியில் தமிழ் சினிமா பாகவதர்/பி.யு.சின்னப்பா ஆகியோரின் தாக்கத்தில் இருந்து வெளி வர ஆரம்பித்திருந்தது. படம் என்றால் பாட்டு என்ற நிலை மாறி விட்டிருந்தது. ஆனால் அடுத்த கட்டம் என்ன என்பது இன்னும் தமிழ் சினிமாவை கையில் வைத்திருந்த முதலாளிகளுக்கு தெளிவாகவில்லை. கலை கலைக்காக என்று படம் எடுத்தவர்கள் மிக குறைவு. எனக்கு தெரிந்து இந்த கால கட்டத்தில் அப்படி எடுக்கப் பட்ட படங்கள் ஏழை படும் பாடு (Les Miserables நாவலை படமாக்கி இருந்தனர்), என் வீடு (சாண்டில்யன் + நாகையா), மனிதன் (டி.கே.எஸ். சகோதரர்கள்) மற்றும் அந்த நாள், அவ்வளவுதான். இவற்றில் நான் பார்த்தது அந்த நாள் ஒன்றுதான். அது உலகத் தரம் வாய்ந்த படம்.

பிறகு என்ன மாதிரி படங்கள் எடுக்கப் பட்டன? சாகசப் படங்கள், குறிப்பாக ராஜா ராணி கதைகள் – மர்ம யோகி, சர்வாதிகாரி, மருத நாட்டு இளவரசி, மலைக் கள்ளன் மாதிரி படங்கள் எடுக்கப்பட்டன, பொதுவாக நன்றாக ஓடின. திராவிட இயக்க தாக்கம் உள்ள படங்கள் – மந்திரி குமாரி, பொன்முடி, பராசக்தி, திரும்பிப் பார், பணம், போன்ற படங்கள் எடுக்கப்பட்டன. சில சமயம் ஓடின. பொதுவாக கலைஞர் வசனம் எழுதிய படங்கள் நன்றாக ஓடின. அதை விட்டால் புத்தகமாகவோ, நாடகமாகவோ வெற்றி பெற்றவை – தேவதாஸ், பராசக்தி, மலைக் கள்ளன், பொன்முடி, வேலைக்காரி, தூக்குத் தூக்கி, ரத்தக் கண்ணீர் போன்றவை படமாக்கப்பட்டன. பொதுவாக வெற்றி பெற்றன.

தயாரிப்பாளர்கள் ஓரளவு புதுமையான கதைகளை, சர்ச்சை ஏற்படுத்தக்கூடிய வசனங்களை தேடி இருக்கிறார்கள். அவர்களை பொறுத்த வரையில் புராணப் படங்களின் காலம் முடிந்துவிட்டது. பாட்டை மட்டும் வைத்து ஓட்டி விட முடியாது. சாகசக் கதைகள், மெலோட்ராமா கதைகள் ஆகியவற்றைத்தான் அவர்கள் தேடி இருக்கிறார்கள். குறிப்பாக, வெற்றி பெற்ற நாடகங்களையும், திராவிட இயக்கத்தினரையும் ஓரளவு தேடி இருக்கிறார்கள். ஏ.வி.எம். செட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், ஜூபிடர் பிக்சர்ஸ் எல்லாரும் இப்படித்தான். அதுவும் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் திராவிட இயக்க எழுத்தாளர்களை மாத சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருந்தாராம். ஜெமினி மட்டுமே விதிவிலக்கு போலிருக்கிறது.

இந்த கால கட்டத்தில் திராவிட இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர்கள் சினிமாவில் நுழைந்தனர். கலைஞர் சினிமாத் துறையில் பெரும் வெற்றி பெற்றார். திராவிட இயக்கத்துடன் கொள்கை ரீதியாக பட்டும் படாமலும் இருந்தாலும் சிவாஜி, எம்ஜிஆர் இருவரும் பெரிய ஹீரோக்களாக உருவெடுத்துக் கொண்டிருந்தார்கள். என்.எஸ்.கே., கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர்.ராதா ஆகியோரும் வளர்ந்து கொண்டோ தேய்ந்து கொண்டோ இருந்தார்கள். அண்ணா, பாரதிதாசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, கண்ணதாசன் போன்றவர்களும் கதை, வசனம், பாடல்கள் என்று பல விதங்களில் திரைப்படங்களுக்கு பணி ஆற்றினார்கள். கதை, வசனம், பாடல்கள் எழுதியவர்கள் எல்லாரும் அங்கங்கே நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயக்க கருத்துகளை வசனங்களிலும், கதைகளிலும் புகுத்தினார்கள்.

1949-இல் வந்த வேலைக்காரிதான் முதல் திராவிட இயக்கத் தாக்கம் உள்ள படம் என்று நினைக்கிறேன். 1950-இல் பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் பொன்முடி என்ற பேரில் மாடர்ன் தியெட்டர்சால் படமாக்கப்பட்டது. கலைஞர் மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி (மாடர்ன் தியேட்டர்ஸ்) ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதினர். 1951-இல் அண்ணாவின் ஓரிரவு (ஏவிஎம்) வெளிவந்தது. கலைஞர் தேவகி என்ற படத்துக்கு கதை வசனம் எழுதினர். ஏ.வி.பி. ஆசைத்தம்பி சர்வாதிகாரி படத்துக்கு வசனம் எழுதினார். 1952-இல் பராசக்தி (ஏவிஎம்) வெளிவந்தது. என்.எஸ்.கே. பணம் படத்தை எடுத்தார். (போட்ட பணத்தை எடுத்தாரா என்று தெரியவில்லை). பாரதிதாசன் வசனம், பாட்டுகளை வைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் வளையாபதி படத்தை எடுத்தது. 1953-இல் திரும்பிப் பார் (மாடர்ன் தியேட்டர்ஸ்). கலைஞர், எம்ஜிஆர், பி.எஸ்.வீரப்பா சேர்ந்து தயாரித்த நாம் இந்த வருஷம்தான் வந்தது. 1954-இல் ஏறக்குறைய பிரசார படமான ரத்தக் கண்ணீர், மனோகரா (ஜூபிடர்), மலைக்கள்ளன் (பக்ஷி ராஜா) கலைஞர் கை வண்ணத்தில். சுகம் எங்கே (மாடர்ன் தியேட்டர்ஸ்) வசனம் கலைஞரா, கண்ணதாசனா என்று குழப்பமாக இருக்கிறது. அண்ணா எழுதி, கே.ஆர். ராமசாமி, எஸ்.எஸ்.ஆர். நடித்த சொர்க்க வாசல், கலைஞர் கதை வசனம் எழுதிய அம்மையப்பன், கண்ணதாசன் கதை வசனம் பாட்டு எழுதிய இல்லற ஜோதி இந்த வருஷம்தான் திரைக்கு வந்தன. இதற்கு பிறகு வந்தவற்றில் ரங்கோன் ராதா (1956) ஒன்றுதான் குறிப்பிட வேண்டிய திராவிட இயக்கப் படம் என்பது என் கருத்து.

மேலோட்டமாக பார்த்தால் இந்த கால கட்டத்தில் திராவிட இயக்கம் ஒரு புத்துணர்ச்சியை கொண்டு வந்தது போலிருக்கும். சமூக பிரக்ஞை உள்ள கதைகள் படமாக்கப்பட்டனவோ என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் சிலர் பணம் பார்த்தனர், அவ்வளவுதான். கலைஞர் குறிப்பிடத்த் தக்க வெற்றி அடைந்தார். வெகு விரைவில் நடிகர்கள் – குறிப்பாக சிவாஜி, எம்ஜிஆர் – ஆதிக்கத்துக்கு திரைப்படங்கள் சென்றன. எழுத்தாளார்களின் தேவை மங்கிவிட்டது. அண்ணா கூட பெரும் அளவில் வெற்றி பெறவில்லை. அவரது கதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்தன – ரங்கோன் ராதா, தாய் மகளுக்கு கட்டிய தாலி, நல்லவன் வாழ்வான் – என்று. சினிமா உலகில் பெரும் பாதிப்பு இல்லை. முரசொலி மாறன் ஐம்பதுகளின் பிற்பகுதியில் சினிமா உலகில் நுழைந்து வசனம் எழுதினார், படங்களை திறமையாக தயாரித்தார். ஆனால் புகழ் பெறவில்லை. ஆசைத்தம்பி போன்றவர்கள் ஆளையே காணவில்லை. கொள்கைப் பிடிப்பு உள்ளவர் என்று சொல்லக் கூடிய எஸ்.எஸ்.ஆர். முதல் வரிசைப் படங்களில் இரண்டாவது ஹீரோ, இரண்டாம் வரிசைப் படங்களில் ஹீரோ என்றுதான் வளர முடிந்தது. கே.ஆர்.ராமசாமி, என்.எஸ்.கே. ஆகியோருக்கு தேய்முகம். கண்ணதாசன் பாட்டு எழுதி பெரும் வெற்றி பெற்றார், ஆனால் அவர் எழுதிய கதைகள் கொஞ்சமே – மஹாதேவி, சிவகங்கை சீமை, மாலையிட்ட மங்கை, கவலை இல்லாத மனிதன், கறுப்புப் பணம் மாதிரி. கலைஞருக்கு கூட இதற்கு பிறகு தேய்முகம்தான் – மனோகராவுக்கு பிறகு அவர் எழுதிய வசனங்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை, அவரது வசனங்களுக்காக இதற்கு பிறகு யாரும் படம் பார்ப்பதில்லை.

திராவிட இயக்கத் தாக்கம் ஒரு short lived phase என்றுதான் சொல்ல வேண்டும். ஐம்பதுகளின் பிற்பாதியில் தொடங்கிய எம்ஜிஆர்-சிவாஜி-ஜெமினி ஆதிக்கம் ஒரு பதினைந்து இருபது வருஷங்கள் நீடித்தது. இந்த short lived phase கதைக்கும், இயக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக மாறி இருந்தால் தமிழ் சினிமா நல்ல முறையில் மாறி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

பராசக்தி


km_parashakthi
கலைஞர் சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டிருந்த நேரம். சிறந்த தயாரிப்பாளரான ஏ.வி.எம். செட்டியார் கலைஞரின் வசனங்களைத்தான் இந்த படத்தின் துருப்பு சீட்டாக நினைத்திருப்பார். அவரே எதிர்பார்க்காத திருப்பம் சிவாஜி. சூப்பர்ஸ்டார் கலைஞரை விட இந்த படத்தில் தெரிபவர் சிவாஜிதான். இத்தனைக்கும் அவருக்கு கடுமையான போட்டி – எஸ்.எஸ்.ஆர், ஸஹஸ்ரனாமம் ஆகியவர்கள் நடிப்பில் இளைத்தவர்கள் இல்லை. சிவாஜி காட்டிய வேகம், உணர்ச்சிக் கொந்தளிப்பு, குரல் மாடுலேஷன், சிம்மக் குரல், நடனம் (ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே பாட்டை பாருங்கள்) முதல் படத்திலேயே சென்சுரி!

இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று வசனம் பேசி பார்க்காத தமிழ் நடிகர் இல்லை. ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் என்றும் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்றும் பேசுவதை மறக்க முடியாது. அனல் பறக்கும் வசனங்கள், அந்த வசனங்களையும் விஞ்சிய நடிப்பு.

செட்டியாரின் தயக்கத்தை மீறி சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்திய பெருமாளுக்கு தமிழ் சினிமா உலகம் கடமைப்பட்டிருக்கிறது.

நினைவில் நிற்கும் சில வசனங்கள்.
கல்யாணி: இட்லிக் கடையா?
பக்கத்து வீட்டு அக்கா: தமிழ்நாட்டில் தாலி அறுத்தவர்களுக்கு அதுதானே தாசில் உத்யோகம்!

குணசேகரன்: மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கான்
போலீஸ்காரன்: ஏய்
குணசேகரன்: உங்களை சொல்லலைங்க. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன். சென்னை புனிதமான நகரம். இங்கே மனித மிருகம்
போலீஸ்காரன்: சரிதான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்.

பார்க்கில் தூங்கும் குணசேகரனை எழுப்பும் ஆள்: என்னடா? முழிக்கிறே?
குணசேகரன்: பின்ன, தூங்கினவன எழுப்பினா, முழிக்காம என்ன செய்வான்?

பாரதிதாசனின் வசனம் என்று நினைக்கிறேன் – ஓடப்பர் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ!

1952-இல் வந்த படம். ஏ.வி.எம். தயாரிப்பு. பெருமாள் ஒரு பாகஸ்தர். சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., பண்டரிபாய் ஆகியோருக்கு முதல் படம். எஸ்.வி. ஸஹஸ்ரனாமம் ஒரு முக்கிய ரோலில். இதில் அவருக்கு தங்கையாக வருபவர் பேர் மறந்துவிட்டது.ஸ்ரீரஞ்சனி (நன்றி கிருஷ்ணமூர்த்தி!) பின்னாளில் இல்லற ஜோதி படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தார். பிறகு ரத்தக் கண்ணீரில் எம்.ஆர். ராதாவுக்கு ஜோடியாகவும், அறுபதுகளில் நான் படத்தில் முத்துராமனின் வளர்ப்புத் தாயாகவும், மனோகரின் நிஜத் தாயாகவும் நடித்தாராம். (நன்றி, நல்லதந்தி!) வி.கே. ராமசாமி உண்டோ? இசை சுதர்சனம். இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு. அவர்கள் ஏ.வி.எம்முக்குள் நுழைந்தது இந்த படம் மூலமாகத்தான் போலிருக்கிறது. செட்டியார் சொல்வதை இங்கே பாருங்கள்.

கதை தெரிந்ததுதான். ரங்கூனில் மூன்று அண்ணன்கள். கல்யாணி தமிழ் நாட்டில். கல்யாணியின் கல்யாணத்தை பார்க்க ஒரு அண்ணன்தான் வர முடியும் நிலை. சென்னையில் வந்து இறங்கும் சிவாஜி பணத்தை ஒரு நாட்டியக்காரியிடம் இழக்கிறார். கல்யாணியோ கணவனை இழந்து இட்லிக் கடை வைத்து பிழைக்கிறாள். கல்யாணியை கண்டுபிடிக்கும்போது அவள் உன் மாமன் உன்னை சீராட்ட பெரும் பணத்தோடு வருவான் என்று பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாள். பணம் எல்லாம் போய் ஏழை ஆகிவிட்டேன் என்று சொல்ல விரும்பாத சிவாஜி தான்தான் அண்ணன் என்று சொல்லாமல் கிறுக்காக நடித்து அதே நேரத்தில் கல்யாணிக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறார். கல்யாணியை ஒரு பூசாரி படுக்கைக்கு கூப்பிட, கல்யாணி வெறுத்து போய் தன் குழந்தையை காப்பாற்ற முடியாததால் அதை அற்றில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயல, போலீசில் பிடிபடுகிறார். பூசாரியை தாக்கும் சிவாஜியும் போலீசில் பிடிபடுகிறார். பிறகு புகழ் பெற்ற நீதி மன்ற வசனங்கள். நடுவில் அவருக்கு பண்டரிபாயிடம் இட்லி திருட்டு, மற்றும் காதல். பண்டரிபாய்க்கு தன்னிடமிருந்து இட்லி திருடிக் கொண்டு போன அழுக்கான வாலிபன்தான் காதலிக்க கிடைத்தானா என்றெல்லாம் கேட்கக் கூடாது. ரங்கூனிலிருந்து தப்பி வரும் சின்ன அண்ணன் எஸ்.எஸ்.ஆர். காலை இழந்து பிச்சைக்காரனாகி பிச்சைக்காரர்களை ஒன்று சேர்த்து அவர்கள் நல்வாழ்வுக்கு போராடுகிறார். பெரிய அண்ணன் சஹஸ்ரனாமம்தான் கேசை விசாரிக்கும் ஜட்ஜ். பிறகு ஆற்றில் வீசப்பட்ட குழந்தை காப்பாற்றப்பட்டு, எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்!

சிவாஜி ஒரு புயல்தான். அந்த மாதிரி வேகம் உள்ள நடிகரை தமிழ் சினிமா உலகம் அது வரை பார்த்ததில்லை. இதற்கு முன் எனக்கு தெரிந்து ஓரளவாவது வேகம் உள்ள பாத்திரங்கள் அபூர்வம்தான் – சந்திரலேகா ரஞ்சன், வேலைக்காரி கே.ஆர். ராமசாமி, மந்திரி குமாரி எஸ்.ஏ. நடராஜன் மாதிரி. ஹீரோக்கள் எல்லாம் வேறு மாதிரி – ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் இரண்டு நிமிஷம் gap விடும் பாகவதர், மென்மையாக பேசும் டி.ஆர். மகாலிங்கம், எம்.கே. ராதா, எம்ஜிஆர் மாதிரி கத்தி சண்டை வீரர்கள், இவர்கள் நடுவில் ஸ்டைலாக கலைந்த தலையோடும், கவர்ச்சியான புன்னகையோடும், சிம்மக் குரலோடும் அவர் நுழைந்து நேராக டாப்புக்கு போய்விட்டார். அத்துடன் திராவிட இயக்கப் படங்களுக்கு, உணர்ச்சிகரமான வசனம் பேசுவதற்கு, intense நடிப்புக்கு அவர்தான் சரி என்றாகிவிட்டது. டி.ஆர். மகாலிங்கம், கே.ஆர். ராமசாமியின் குறுகிய திரை உலக வாழ்க்கை சடாலென்று இறங்கி விட்டது. என், நன்றாக நடித்த எஸ்.எஸ்.ஆர். சஹஸ்ரனாமம் ஆகியோரையே இந்த படத்தில் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை.

பண்டரிபாய் சின்ன பெண்ணாய், சொப்பு மாதிரி இருப்பார்.

இன்று இந்த படம் முதல் முறையாக பார்ப்பவர்களுக்கு அதே தாக்கம் ஏற்படுமா எனபது எனக்கு சந்தேகம்தான். ஐம்பதுகளில் அது யதார்த்தமான படம் என்றே கருதப்பட்டிருக்கும். இப்போது நாடகத்தன்மை உள்ளது, melodrama என்று சொல்லலாம். melodrama-வின் ஒரு உச்சம் என்று நான் இந்த படத்தை கருதுகிறேன்.

மிகவும் charming, quaint பாட்டுக்கள். சுதர்சனம் கலக்கிவிட்டார்.


அந்த “போறவரே” என்ற வார்த்தையில் இருக்கும் கொஞ்சல் அபாரம். எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரல் பாப்பா மாதிரி இருக்கும் பண்டரிபாய்க்கு நன்றாக பொருந்துகிறது.

ஓ ரசிக்கும் சீமானே வா ஒரு பிரமாதமான பாட்டு. பாடியது, எழுதியது யார்? எழுதியது கலைஞர்தானாம். விவரம் சொன்ன தாசுக்கு நன்றி!

சி.எஸ். ஜெயராமன் பாடும் “தேசம் ஞானம் கல்வி” எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் ஒன்று. உடுமலை நாராயண கவி அருமையாக எழுதி இருப்பார்.
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே
காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே
கட்டி அழும்போதும் தாண்டவக் கோனே – பணப்
பெட்டியிலே கண் வையடா தாண்டவக் கோனே
நல்ல வரிகள்!

அப்புறம் “கா கா கா” – அதற்கு காக்காய் கத்துவதை போலவே பின்னணியில் வயலின் சூப்பர். கலைஞர் எழுதிய பாட்டோ? சி.எஸ். ஜெயராமன் பாடியது.

“நெஞ்சு பொறுக்குதில்லையே” பாரதியார் பாட்டு. சி.எஸ். ஜெயராமன். சுமார்தான்.

இதை தவிர “என் வாழ்விலே ஒளி ஏற்றும்”, “பூ மாலையை புழுதியிலே”, “பொருளே இல்லார்க்கு”, “திராவிட நாடு வாழ்கவே”, “கொஞ்சும் மொழி சொல்லும்”, “பேசியது நானில்லை” என்ற பாட்டுகளும் இருக்கின்றனவாம். நினைவில்லை.

பாட்டுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே கேட்கலாம்.

பிற்காலத்தில் விவேக் அந்த நீதி மன்ற வசனங்களை மாற்றி பேசும் காட்சியும் புகழ் பெற்றது. கீழே அது.

திராவிட இயக்கத்தின் தலை சிறந்த பங்களிப்பு, கலைஞரின் வசனங்கள், சிவாஜி, quaint பாட்டுக்கள் ஆகியவற்றுக்காக இந்த படத்தை சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B grade.

பராசக்தி – நீதிமன்ற வசனம்


பராசக்தியை பற்றி எழுதிக் கொண்டே போகலாம். அதனால்தான் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியாமல் எனக்கு தாமதம் ஆகி கொண்டே போகிறது. அது எனக்கு உண்மையிலேயே பிடித்த படங்களில் ஒன்று. சிவாஜியும் கலைஞரும் தமிழ் சினிமாவை அதற்கு முன் காணாத உயரங்களுக்கு கொண்டு போனார்கள். அது ஒரு மைல் கல். திராவிட இயக்க படங்களின் உச்ச கட்டம் அதுதான்.

இன்று பார்ப்பவர்களுக்கு அந்த தாக்கம் ஏற்படாதுதான் – அது ஓரளவு சினிமாத்தனமாக கூட தோன்றலாம். ஆனால் வாழ்க்கை எப்போதும் அசோகமித்திரன் கதை போல் subtle ஆகவே செல்வது இல்லை.

முதலில் அந்த நீதிமன்ற வசனத்துடன் ஆரம்பிக்கிறேன். இதற்கு ஒரு வீடியோ கிடைக்க மாட்டேன் என்கிறதே! கிடைத்துவிட்டது! (Opens in a separate browser.)

sivaji_parasakthi

இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.

கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.

என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.

காண வந்த தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் பிள்ளை. கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள். கல்யாணிக்காக நான் அலைந்தேன்.

கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான். நான் தடுத்திராவிட்டால் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்.

கடவுள் பக்தர்களும் கல்யாணிக்குக் கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தலையானவன் இந்தப் பூசாரி. கல்யாணியின் கற்பைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான் – பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால். கல்யாணி உலகத்தில் புழுவாகத் துடித்தபடியாவது உயிரோடு இருந்திருப்பாள். அவளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது இந்த பூசாரிதான். தன் குழந்தையை இரக்கமற்ற உலகத்தில் விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை. தன் குழந்தை ஆதரவற்றுத் துடித்துச் சாவதைக் காண அவள் விரும்பவில்லை. அவளே கொன்றுவிட்டாள். விருப்பமானவர்களைக் கொல்வது விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர், அவரே நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்று குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார், அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி. இது எப்படி குற்றமாகும்?

என் தங்கை விட்டுக் கொடுத்திருந்தால், கோடீஸ்வரன் பள்ளியறையிலே ஒரு நாள் – மானத்தை விலை கூறியிருந்தால், மாளிகை வாசியின் மடியிலே ஒரு நாள் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?

பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என் கல்யாணியை?

அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

குணசேகரன்: யார் வழக்கிற்குமில்லை. அதுவும் என் வழக்குதான். என் தங்கையின் வழக்கு. தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம். குழந்தையைக் கொன்றது ஒரு குற்றம். நான் பூசாரியைத் தாக்கியது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? கல்யாணியைக் கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்

ஏ.வி.எம். செட்டியார் சொன்னது போல கலைஞர் அண்ணாவையே மிஞ்சி விட்டார். இதையும் மிஞ்சிய வசனங்கள் உள்ள படம் மனோகராதான்.

1952


1952-இல் 27 படங்கள் வந்திருக்கின்றன. நான் பார்த்தது பராசக்தி ஒன்றுதான். அதனால் எதை பற்றி எழுதுவது என்று பிரச்சினையே இல்லை. வேறு படங்களை பார்த்திருந்தாலும் பராசக்தியைத்தான் இந்த வருஷத்தின் சிறந்த படம் என்று தேர்ந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

சிவாஜி புயல் மாதிரி உள்ளே நுழைந்திருக்கிறார். பராசக்திக்கு பிறகு அவருக்கு இறங்குமுகம் வர 200 படங்களும், 25 வருஷங்களும் பிடித்திருக்கின்றன. அவர் நடித்த பணம் படமும் இந்த வருஷம்தான் வந்திருக்கிறது.

எம்ஜிஆர் இந்த ஆண்டு ராஜா ராணி படங்களிலிருந்து நகர்ந்து வர முயற்சி செய்திருக்கிறார் போல. என் தங்கை, குமாரி போன்ற கேள்விப்படாத சமூக படங்களில் நடித்திருக்கிறார்.

மற்ற படங்களை பற்றி அதிகம் தெரியவில்லை. அதனால் ஏ.வி.எம். செட்டியார் பராசக்தி பற்றி எழுதியதை கீழே கொடுத்திருக்கிறேன். ஓவர் டு செட்டியார்.

கே.என். ரத்தினம் என்ற நடிகர் கடலூரில் பாய்ஸ் கம்பெனி வைத்து நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். பாவலர் பி.பாலசுந்தரம் என்பவரின் கதையை நாடகமாக நடித்துக் கொண்டிருந்தார்கள்.

“அந்த டிராமாவைப் பார்க்கலாம், வாருங்கள்” என்று பெருமாள் என்னைக் கடலூருக்குக் கூட்டிச் சென்றார். டிராமாவைப் பார்த்தோம். மிக நன்றாக இருந்தது. அந்த நாடகம்தான் பராசக்தி. அந்தக் கதையையே வாங்கித் தரும்படி பெருமாள் கூறினார். பாவலர் பாலசுந்தரத்தை வரவழைத்துப் பேசி, பெருமாளுக்காக அந்தக் கதையை நானே வாங்கினேன்.

அந்தப் படத்தைப் பெருமாளுடன் கூட்டாகச் சேர்ந்து நாங்கள் எடுத்தோம். ஏறக்குறைய ‘ஓர் இரவு’ பாதிக்கு மேல் எடுத்துக் கொண்டிருக்கும்போதே துவங்கிவிட்டோம். ஓர் இரவை நீலகண்டன் சொந்த டைரக்ஷனில் செய்து கொண் டிருந்தார். எம்.வி. ராமன் இந்தி பகார் டைரக்ட் செய்து வந்தார். அப்பொழுதெல்லாம் ஒரு டைரக்டர் இரண்டு படங்களை டைரக்ட் செய்வது என்பது பழக்கத்திற்கு வரவில்லை. ஆகவே, எங்களுடைய புதிய படத்திற்கு யாரை டைரக்டராகப் போடலாம் என்று யோசித்து வந்தோம். கிருஷ்ணன்பஞ்சு என்பவர்கள் நியூட்டோனில் அப்போது படம் எடுத்து வந்தார்கள். திரு அண்ணாதுரை அவர்களுடைய கதையான நல்லதம்பி படம் முடிந்த சமயம். அவர்களைக் கூப்பிட்டு எங்களுக்காக இந்தக் கதையை டைரக்ட் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இருவரும் ஒப்புக் கொண்டார்கள். முதன் முதலாகக் கிருஷ்ணன்-பஞ்சு இருவரும் எங்கள் ஸ்டூடியோவிற்குள் நுழைந்தது இந்தச் சந்தர்ப்பத்தில்தான். அது முதல் ஏறக்குறைய எங்கள் ஸ்தாபனத்துடன் ஒன்றியிருக்கிறார்கள்.

பாவலரிடமிருந்து கதை கிடைத்துவிட்டது. அதற்குரிய வசனங்களை நமது மதிப்பிற்குரிய, தற்போது முதல்வராக விளங்கும் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியை விட்டு எழுதச் சொல்லலாம் என்று பெருமாள் விருப்பம் தெரிவித்தார்.

கலைஞரிடம் கேட்டோம். அவரும் ஒப்புக் கொண்டார்.

டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புதிய பாணியில் வசனங்களைத் தீட்டியிருந்தார்.

அவற்றைக் கணேசன் உச்சரித்த முறை நன்றாக இருந்தது. சொல்லப் போனால் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா ஓர் இரவு படத்திற்கு எழுதியிருந்ததை விடக் கலைஞரின் வசனங்கள் சிறப்பாக இருந்தன.

ஏறக்குறைய ஓர் இரவு கதைக்கு அண்ணாதுரை இங்கே வந்து வசனம் எழுதிக் கொடுத்துக்கொண்டிருந்த சில நாட்களுக்குள்ளேயே கலைஞரும் பராசக்திக்கு வசனம் எழுதித் தர எங்கள் ஸ்டூடியோவுக்கு வந்து போய்க்கொண்டிருந்தார்.

வசனம் எழுதத் துவங்கி விட்டார் கலைஞர்; நடிகர்கள் தேர்வு நடைபெற வேண்டுமே?

அப்போது திரு.கே.ஆர். ராமசாமி வேலைக்காரி, ஓர் இரவு நாடகங்கள் மூலமாக அதிகம் பெயர் பெற்றவராக இருந்தார். ஒரு ஸ்டார் நடிகராகவே விளங்கிவந்தார். எங்களுடைய ஓர் இரவு படத்திலும் நடித்துக்கொண்டிருந்தார்.

பராசக்தியிலும் கே.ஆர்.ராம சாமியையே நடிக்கவைக்கலாம் என்று கூறினேன். ஆனால் என்னுடைய பாகஸ்தரான பெருமாள், “ஒரு புது நடிகரைப் போட்டு எடுக்க வேண்டும். வேலூரில் சக்தி நாடக சபை நடத்தும் சில நாடகங்களைப் பார்த்தேன். ‘நூர்ஜஹான்’ நாடகத்தில் பெண் வேஷம் போட்டுக் கொண்டு கணேசன் என்கிற பையன் எவ்வளவு சிறப்பாக நடிக்கிறான் தெரியுமா? அந்தப் பையனைப் போட்டு இந்தப் பராசக்தியை எடுக்க வேண்டும். நீங்கள் வேண்டுமானால் வேலூருக்குப் போய் ஒருமுறை அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு அப்புறம் சொல்லுங்கள்!” என்றார்.

வேலூரிலிருந்து சக்தி நாடக சபா தங்கள் முகாமைத் திண்டுக்கல்லுக்கு மாற்றிக்கொண்டு விட்டதால் நான் திண்டுக்கல் போய், கணேசன் என்கிற இளைஞனின் நடிப்பைப் பார்த்துவிட்டு வந்தேன்.

“டிராமாவில் நடிப்பது வேறு. இதுவரை கணேசன் எந்த சினிமாவிலும் நடித்ததில்லையே? முதன் முறையாக மெயின் ரோலில் இந்தப் பையனை நடிக்கச் சொல்லி ஃபெயிலியர் ஆகிவிட்டால் என்ன செய்வது? இதுவோ என்னுடன் நீங்கள் கூட்டாகச் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். ரிஸ்க் வேண்டாம்,” என்று சொன்னேன்.

“இல்லை, இல்லை, கணேசனையே நடிக்கச் சொல்லுவோம். பிற்காலத்தில் மிகச் சிறந்த நடிகனாக வருவான் என்றே தோன்றுகிறது. நீங்களே பாருங்கள்,” என்று பெருமாள் சொல்லிவிட்டார். சிறந்த நடிகராக இருந்தும் கணேச னுக்குச் சினிமாவின் போக்கு புது அனுபவமாக இருந்தபடியால் சரியாக வரவில்லை என்று எனக்குத் தோன்றியது. அப்போது கணேசன் மிக ஒல்லியாக இருப்பார். யாருக்குமே ஒரு காரியத்தைச் செய்வதில் ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டால் அதைச் செய்து முடிக்கும் வழியே வேறுதான். தன்னம்பிக்கை வருவதற்கு முன்னால் செய்யும் காரியங்கள் நிச்சயம் நன்றாக அமையாது. ஆரம்பத்தில் கணேசனுக்குத் தன் நடிப்பிலேயே தன்னம்பிக்கை வரவில்லை. போதாக் குறைக்கு எங்களுக்கும் அவருடைய நடிப்பில் நம்பிக்கை இல்லையா? ஆகவே அவர் நடிப்பு எங்களுக்கு அவ்வளவு திருப்தியாக இல்லை.

2000, 3000 அடிகள் வரை எடுத்தாகிவிட்டது. அப்போது நான் மீண்டும் பெருமாளிடம், “விஷப் பரீட்சை வேண்டாம். கே.ஆர்.ராமசாமிக்குப் பெயர் அதிகமாக உள்ளது. அவரையே போட்டு எடுத்து விடலாம்” என்று சொன்னேன்.

பெருமாள் ஒரே பிடிவாதமாக, “இல்லை, கணேசனைப் போட்டுத்தான் எடுக்கவேண்டும். பின்னாடி நன்றாக வரும் பாருங்கள்” என்று கூறிவிட்டார்.படத்தை எடுத்துக்கொண்டு போனோம். ஏறக்குறைய 10,000 அடிகள் வரை சென்று விட்டோம். பத்தாயிரம் அடி என்பது எடிட் செய்யபட்ட லெங்க்த். அதாவது முக்கால் படம். வர வர முதலில் இருந்ததை விடக் கணேசனுடைய நடிப்பு சிறப்பாக வளர்ந்து, படம் முடிவதற்குள் எங்கள் எல்லாருக்குமே மிகவும் திருப்தியாக அமைந்துவிட்டது. பூராப் படம் முடிந்த பிறகு ஆரம்பத்தில் முதலில் எடுத்த எந்தக் காட்சிகளில் அவர் அதிகத் தன்னம்பிக்கையோடு நடிக்கவில்லை என்று எங்களுக்குத் தோன்றியதோ அவற்றை – ஏறக்குறைய 6000, 7000 அடிகளை திரும்பவும் செட்டுக்களைப் போட்டு இரவு பகலாகத் தொடர்ந்தாற்போல் எங்களுடைய ஸ்டுடியோவின் எல்லா ஃப்ளோர்களிலும், எடுத்தோம். மேற்கொண்டு வெளியில் எடுக்க வேண்டிய அவுட்டோர் காட்சிகளையும் ஒரே மூச்சில் சுமார் 15,20 நாட்களில் எடுத்து முடித்தோம்.

இந்தப் படத்திற்குப் பாடல்கள் எழுதியவர் உடுமலை நாராயண கவி. ‘காக்காய் இனம் தன் இனத்தை ஒற்றுமையாகக் கரைந்து அழைத்துச் சேர்ந்து சாப்பிடுகிறது. அதைக் கூட மனிதர்களாகிய நாம் செய்வதில்லை’ என்கிற அற்புதமான கருத்து அமைந்த ‘கா..கா…கா…’ என்று பாட்டை எழுதினார். இந்தப் படத்தின் மூலம் அந்தப் பாட்டு பிரபலமாகியது.’பராசக்தி’ கதை தன் தங்கைக்காக ஓர் அண்ணன் தியாகம் செய்வதைச் சொல்கிறது. தங்கைக்குச் சமூகத்தினர் இழைக்கும் தீங்குகளைக் களையும் முயற்சியில் வெறி பிடித்து, ஆஷாடபூதியாக இருக்கும் பக்தன் ஒருவனைத் தண்டிக்கும்படியான கதையாக இருந்ததால் ஜனங்களுக்கும் மிகவும் பிடித்துவிட்டது.

படம் மிகவும் அருமையாக அமைந்துவிட்டது. டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புதிய பாணியில் வசனங்களைத் தீட்டியிருந்தார். அவற்றைக் கணேசன் உச்சரித்த முறை நன்றாக இருந்தது. சொல்லப் போனால் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா ஓர் இரவு படத்திற்கு எழுதியிருந்ததை விடக் கலைஞரின் வசனங்கள் சிறப்பாக இருந்தன என்று நாங்கள் நினைத்தோம். பொது மக்களும் அவ்வாறே அபிப்பிராயப்பட்டனர்.

கதையின் போக்கு, கலைஞரின் வசனம், கணேசனின் நடிப்பு மூன்றுமாகச் சேர்ந்து பராசக்தி படம் முன்பு நாங்கள் எடுத்த படங்களைக் கூட மிஞ்சும்படி – எங்களுக்கு மகத்தான வெற்றியை அளித்தது. பராசக்தி வெளியானவுடன் ஏகப்பட்ட அபிப்பிராய விரோதங்கள் உண்டாயின. அந்தப் படம் தெய்வத்தை அவமதிப்பதாகச் சிலர் நினைத்து விட்டார்கள். காளியிடம் வந்து சிலர் முறையிடுவதையும், பூசாரியைக் கொலை செய்வதைப் போல உள்ள காட்சிகளினாலும், இந்தப் படத்திற்கு ஒரு எக்ஸ்ட்ரா பப்ளிசிடி கிடைத்துவிட்டது. படத்தை ‘பான்’ செய்யப் போகிறார்கள் என்ற பேச்சுக் கிளம்பவே இன்னும் அதிகமாக ஓடி வசூல் குவிய ஆரம்பித்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் வாசகர்களாகிய உங்களுடன் மனம் திறந்து சில கருத்துக்களைச் சொல்ல விரும்புகிறேன். நம் நாட்டில் – ஏன், நாட்டைவிட இன்னும் ஒருபடி அதிகமாக உண்மையாக என் மனத்தில் உள்ளதைச் சொல்ல வேண்டுமானால் உலகத்திலேயே ஒரு சிறந்த நடிகர் சிவாஜி கணேசன் என்பதுதான் என் தாழ்மையான அபிப்பிராயம். இதில் சிலருக்குக் கருத்து வேற்றுமைகள் கூட இருக்கலாம்.

என் வரையில் ‘நம் தமிழ் நாட்டின் அதிருஷ்டம் சிவாஜி கணேசன் தமிழ் நாட்டில் பிறந்திருக்கிறார். அவருடைய துரதிருஷ்டம் அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை.’ வெளி நாட்டிலிருந்து கலை உலக நண்பர்கள் வரும்போது சிவாஜியை நான் இப்படித்தான் அறிமுகப் படுத்துவது வழக்கம்.

சிவாஜி தம் ஐந்தாவது வயதிலிருந்தே டிராமாக் கம்பெனியில் ‘ஆக்ட்’ பண்ண ஆரம்பித்து விட்டவர். சக்தி நாடக சபை போன்ற சிறந்த நாடகக் கம்பெனியில் நடித்து அனுபவம் பெற்றார். சக்தி கிருஷ்ணசாமி, எஸ்.டி. சுந்தரம் போன்ற வசன கர்த்தாக்களிடம் பயிற்சிபெற்ற அனுபவமும் சிவாஜிக்கு இருக்கிறது. ‘தன் நடிப்புக்கு எல்லையே இல்லை’, என்கிற உணர்வோடு ஒவ்வொரு தடவையும் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து ஒன்றி நடிக்கிறார்.

பராசக்தி படத்தில் நாங்கள் அவரைப் போட்டிருக்காவிட்டாலும் கூட அவர் சிறந்த நடிகராக வந்திருப்பார். கூட இன்னும் ஓர் ஐந்தாறு வருஷம் ஆகியிருக்கும் – அவ்வளவுதான்.

(நன்றி: ஏ.வி.எம். எழுதிய “எனது வாழ்க்கை அனுபவங்கள்’ என்ற நூல். வானதி வெளியீடு.)

ஓரிரவு


oriravu

அண்ணா 1945-இல் எழுதிய நாடகம். திராவிட இயக்கத்தை எதிர்த்த கல்கி கூட இந்த நாடகத்தை பார்த்துவிட்டு இதோ ஒரு பெர்னார்ட் ஷா, இதோ ஒரு இப்சன் என்றெல்லாம் பாராட்டி இருக்கிறார். (இந்த நாடகம் ஷா, இப்சன் தரத்தில் இல்லை என்பது வேறு விஷயம்)

கே.ஆர். ராமசாமி, நாகேஸ்வர ராவ், லலிதா, பாலையா, டி.கே. ஷண்முகம், பி.எஸ். சரோஜா நடித்தது. பி. நீலகண்டன் இயக்கம். சுதர்சனம் இசை. ஏவிஎம் தயாரிப்பு.

பாரதிதாசனின் புகழ் பெற்ற “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ” என்ற பாட்டு இந்த படத்தில் இடம் பெற்றது. இது படத்துக்காக எழுதியதா இல்லை முன்னாலேயே எழுதப்பட்டதா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அருமையான பாட்டு. எம்.எஸ். ராஜேஸ்வரியும் வி.ஜே. வர்மாவும் பாடி இருக்கிறார்கள். யார் இந்த வர்மா? தெலுங்கரா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள். பாட்டை இங்கே காணலாம். காதலர்கள் நெருங்குவதை காட்ட தமிழில் பூக்கள் ஒன்றை ஒன்று நெருங்குவதாக காட்டும் cliche அனேகமாக இந்த பாட்டில்தான் ஆரம்பம் ஆகி இருக்க வேண்டும். அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த cliche-வை பார்ப்பதற்காகவாவது இந்த வீடியோவை கட்டாயம் பாருங்கள்.

மற்றும் ஒரு புகழ் பெற்ற பாட்டு “அய்யா சாமி ஆவோஜி சாமி” அடுத்த வரி அந்த காலத்தில் தமாஷாக இருந்திருக்கும். – “அய்யா வாய்யா, ராய்யா, யூ கம் ஐயா”. என் மாமியார் அவ்வப்போது இந்த வரிகளை முனகி கொண்டே இருப்பார். பத்மினி குறத்தியாக வந்து நடனம் ஆடுவார் என்று நினைவு. இந்த பாட்டை நான் முதலில் ஹிந்தியில்தான் கேட்டேன் – “கோரே கோரே ஓ பாங்கே சோரே” என்ற பாட்டு. நல்ல மெட்டு. ஹிந்தியிலிருந்து தமிழுக்கு வந்ததா இல்லை இங்கிருந்து அங்கு போனதா என்று தெரியவில்லை.

ஏவிஎம் அண்ணாவிடம் கதையை மாற்றாமல் எடுப்பதாக சொன்னாராம். தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம் என்றார் அண்ணா. திரைப்படத்துக்கு ஏற்றபடி கதையை மாற்றி எழுத வந்த அண்ணா, தனக்கு வெற்றிலை, பாக்கு, ஒரு செம்பில் தண்ணீர், எழுதுவதற்கு மேஜை ஆகியவை மட்டும் போதும் என்றார். நாடகத்தின் பேருக்கேற்ப ஒரே இரவில் முழு திரைக்கதை வசனத்தை அண்ணா எழுதி முடித்துவிட்டார். அதற்கு அவருக்கு 20000 ரூபாய் கொடுக்கப்பட்டதாம்.

எனக்கு வசனங்கள் எல்லாம் பெரிதாக ஞாபகம் இல்லை. ஆனால் நன்றாக இருந்தன.
மாளிகை வேண்டாம், மாட்டுக் கொட்டகை போதும்.
பட்டுப் பீதாம்பரம் வேண்டாம்; கட்டத் துணி இருந்தால் போதும்.
ஆபரணங்கள் வேண்டாம்; அன்பு காட்டினால் போதும்.
என்பதை இங்கே கண்டுபிடித்தேன். (இங்கே அண்ணாவுக்கு 10000 ரூபாய்தான் கொடுத்தார்கள் என்று எழுதி இருக்கிறார்கள். அண்ணாவின் வளர்ப்பு மகனான டாக்டர் பரிமளம் 20000 என்று எங்கோ எழுதி இருக்கிறார் என்று நினைவு)

கதை perfect-ஆக ஞாபகம் இல்லை. தவறுகளை கண்டுபிடிப்பவர்கள் திருத்துங்கள். டி.கே. ஷண்முகம் ஒரு ஜமீந்தார். அவர் தன் முதல் மனைவியை கொலை செய்து விடுகிறார். அவரது மகளான லலிதாவை மணந்துகொள்ள இந்த விஷயத்தை வைத்து அவரை பாலையா ப்ளாக்மெய்ல் செய்கிறார். லலிதாவுக்கு நாகேஸ்வர ராவுக்கும் காதல். ஒரு நாள் இரவு திருடன் கே.ஆர். ராமசாமி லலிதாவின் அறைக்குள் திருட நுழைகிறார். லலிதா பாலையாவை துரத்த அவரை தன் காதலன் மாதிரி நடிக்க சொல்கிறார். அதை நாகேஸ்வர ராவ் பார்த்து விட, சந்தேகம் எழும்ப, கடைசியில் கே.ஆர். ராமசாமி ஷண்முகத்தின் முதல் மனைவியின் மகன் என்று தெரியவருகிறது. காதலர்கள் ஒன்று சேர, சுபம்!

கே.ஆர். ராமசாமி நன்றாக நடித்திருந்தார். ஆனால் அண்ணாதான் படத்தின் ஹீரோ என்று சொல்ல வேண்டும்.

பார்க்கலாம். திராவிட இயக்கத்தின் இலக்கிய முயற்சிகளில் இது முக்கியமானது, நல்லது. (எனக்கு இதை விட வேலைக்காரி பிடித்திருந்தது.) அதனால் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். Of course, எனக்கு துன்பம் நேர்கையில் பாட்டு ஒன்றே போதும்.

பத்துக்கு 7 மார்க். B grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்
தொடர்புடைய சுட்டிகள்: ஓரிரவு பற்றி கல்கி
ராண்டார்கை குறிப்பு

அந்த நாள் (Andha Naal)


Backlog வளர்ந்துகொண்டே போகிறது.

சபா(பதி)மீதி இன்னும் பாக்கி இருக்கிறது. நவராத்திரி படத்தை பற்றி எழுத வேண்டும் – விகடனின் அந்த நாள் விமர்சனத்தை பார்த்ததும் ஞாபகம் வந்து எழுதவேண்டும் எழுதவேண்டும் என்று ஆர்வம்! (உங்கள் தலையெழுத்து சரியில்லை). சிவாஜி சிலை பற்றிய என் கருத்துக்களை இன்னும் தெளிவாக எழுத வேண்டும். சமீபத்தில் பார்த்த ஆங்கிலப் படமான “Burn After Reading” பற்றி எழுத வேண்டும். இரண்டு மூன்று நாட்களாக வந்திருக்கும் மறுமொழிகளுக்கு பதில் எழுத முடியவில்லை…

நேரக் குறைச்சலுக்கு ஒரு காரணம் நவராத்திரி. வெள்ளி இரவு எங்கள் வீட்டில் பக்ஸ் உள்ளிட்ட சில நண்பர்களை என் வீட்டில் கொலுவுக்கு அழைத்திருந்தோம். சனி நாங்கள் கொலுவுக்காக நண்பர்கள் வீட்டுக்கு போயிருந்தோம். இன்று ஹேமாவின் அம்மாவை விமானம் ஏற்றிவிட்டு இரண்டு மணிக்குத்தான் வந்தோம்…

வெள்ளி இரவு பார்த்த “அந்த நாள்” இன்னொரு காரணம். நானும் பக்சும் படம்தான் பார்த்துக்கொண்டிருந்தோம். நான் உண்மையிலேயே அசந்து விட்டேன். படம் பார்த்து இரண்டு நாட்களான பிறகும் படத்தை பற்றிய யோசனை மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. இது வரையில் இந்த ப்ரோக்ராமில் பார்த்த படங்களில் வந்த நல்ல படங்கள் எல்லாம் முன்னால் பார்த்தவை. பார்க்காத நல்ல படம் என்றால் இது ஒன்றுதான். It exceeded all my expectations. நானும் பக்சும் படத்தின் லைட்டிங், ஒளிப்பதிவு, ஷாட்கள் பற்றி பேசிக்கொண்டே இருந்தோம். இதை பற்றி எழுத நேரம் வேண்டும், சும்மா உட்கார்ந்து பத்து நிமிஷத்தில் தட்டிவிட முடியாது.

தமிழ் படங்களை பார்க்க வேண்டிய முக்கியமான புலன் காதுதான், கண் இல்லை. வசனங்கள் மூலமாகத்தான் கதை முன்னால் நகரும். கண்கள் தேவைப்படுவது அழகான, பிரமாண்டமான செட்களை பார்க்க; அழகான வெளிப்புற காட்சிகளை, நடனங்களை பார்க்க; சில சமயம் நடிப்பை பார்க்க; சில சமயம் சண்டைகளை, குறிப்பாக கத்தி சண்டைகளை பார்க்க; முன்பெல்லாம் ரேடியோவில் ஒலிச்சித்திரம் என்று படங்களை “திரையிடுவார்கள்”, அதை கேட்டால் போதும், படம் பார்த்த அனுபவம் கிடைத்துவிடும். சாதாரணமாக ஏதாவது படித்துக்கொண்டே படம் பார்க்கலாம். இந்த படம் அப்படி அல்ல.

ஒளிப்பதிவு பிரமாதமாக அமைந்த படங்கள் தமிழில் உண்டு. சாரதா “அவளுக்கென்று ஒரு மனம்” ஒளிப்பதிவு பற்றி குறிப்பிட்டிருந்தார். “சந்திரலேகா” ஒரு visual feast. “பதினாறு வயதினிலே” குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம். ஆனால் ஒளிப்பதிவு படம் பார்க்கும் அனுபவத்தை வேறு எந்த தமிழ் படத்திலும் இந்த அளவு உயர்த்தியதில்லை.

Film noir என்று சொல்லப்படும் படங்களை பார்த்திருக்கிறீர்களா? Maltese Falcon, Third Man, போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். சில குரு தத் படங்கள்(ப்யாசா, ஆர் பார்), சில தேவ் ஆனந்த் படங்கள் (Baazi, CID) இவற்றையும் சொல்லலாம். இவற்றில் கறுப்பு வெள்ளை ஒளிப்பதிவு நிழல்கள், பாதி மறைந்த முகங்கள் போன்ற உத்திகளால் ஒரு ambience உருவாகிறது. இதில் ambience மட்டும் இல்லை, அதை எல்லாம் தாண்டிய ஒரு effect. காட்சிகளை கற்பனை செய்த இயக்குனருக்கும், எடுத்த ஒளிப்பதிவாளருக்கும் hats off!

இத்தனைக்கும் படம் பார்த்ததில்லையே தவிர, படத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். சாரதா போன்றவர்கள் உபயத்தால், படத்தின் கதையில் அதிர்ச்சிகள் எதுவும் இல்லை. பாட்டு இல்லாததால் படத்திற்கு வயதாகிவிட்டிருக்கும், இன்று பார்க்கும்படியாக இருக்காது என்றுதான் நினைத்தேன். திரைக்கதையும், ஒளிப்பதிவும், நடிப்பும் வெளுத்து வாங்கிவிட்டார்கள். ஒரு முன் உதாரணம் இருந்தும் இந்த மாதிரி படங்கள் ஏன் வரவில்லை, பாலச்சந்தர் ஏன் மேலும் படங்கள் எடுக்கவில்லை என்று வருத்தமாக இருக்கிறது.

1953 1954இல் (திருத்திய ராஜ்ராஜுக்கு நன்றி!) வந்த படம். ஏவிஎம் தயாரிப்பு. சிவாஜி, பண்டரிபாய், ஜாவர் சீதாராமன், பி.டி. சம்பந்தம், இவர்கள்தான் தெரிந்த முகங்கள். சிவாஜியின் தம்பியாக வருபவர் டி.கே. பாலச்சந்திரன் என்று சாரதா சொல்லி தெரிந்துகொண்டேன். இசை அமைப்பாளர் கிடையாது – . மாருதி ராவ் ஒளிப்பதிவு. இப்போது கதை, திரைக்கதை, வசனம் ஜாவரா, இல்லை பாலச்சந்தரேவா என்று குழப்பமாக இருக்கிறது. இயக்கம் எஸ். பாலச்சந்தர்.

இந்த படத்தை குறித்து சாரதா எழுதிய அறிமுகத்தை இங்கே பார்க்கலாம்.

விறுவிறுப்பான திரைக்கதை. சாரதா படத்தின் ஆரம்பத்தை அருமையாக விவரித்திருக்கிறார், எனவே நான் மீண்டும் அதையே எழுதப் போவதில்லை.

ஒவ்வொருவராக விசாரணை செய்யும்போது, பக்கத்து வீட்டுக்காரரான பி.டி.சம்பந்தம் தான் கேட்ட சிவாஜி-பாலச்சந்திரன் பாகப்பிரிவினை சண்டையை பற்றி சொல்லி, தம்பிதான் சுட்டிருப்பார் என்று சொல்வதும், தம்பி தன் உணர்ச்சிவசப்படும் மனைவி முந்தைய நாள் சொத்து பற்றி சிவாஜியிடம் சண்டை போட்டதை சொல்லி, அவள்தான் சுட்டிருப்பாள் என்று சந்தேகப்படுவதும், தம்பியின் மனைவி (யார் இவர்? நன்றாக நடித்திருந்தார்) சிவாஜியின் கீப்பை சந்தேகப்படுவதும், கீப்போ தன் ஒரிஜினல் புரவலர் பி.டி. சம்பந்தத்தை சந்தேகப்படுவதும், அழகான வட்டம்!

துப்பறியும் கதைகளில் யார் மேல் முதலில் சந்தேகப்படமாட்டார்களோ அவர்தான் கடைசியில் குற்றவாளி. “கொலையும் செய்வாள் பத்தினி” என்று படித்ததும் ஜாவருக்கு குரளி சொல்லி விடுகிறது. அதற்கு பிறகு சுலபமாக கண்டுபிடித்துவிடுகிறார். அதனால் அதற்குப் பிறகு கதையில் அதிர்ச்சி இல்லை. படம் பார்ப்பதற்கு முன்பே நமக்கு சிவாஜி ஜப்பானிய உளவாளி என்று தெரியும் வேறு. ஆனால் கல்லூரியில் சிவாஜியின் வாதம், பண்டரிபாயின் எதிர்வாதம், பிரின்சிபால் சிவாஜி, பண்டரிபாயின் குணங்களை பற்றி சொல்லும் சம்பவங்கள், சிவாஜி உளவாளி என்று தெரிந்ததும் அவரும் பண்டரிபாயும் செய்யும் வாதங்கள் நன்றாக அமைக்கப்பட்டிருந்தன.

சாராதா சொன்ன மாதிரி துணைக் கதாபாத்திரங்கள் எல்லாரும் உயிருள்ள பாத்திரங்கள். பி.டி. சம்பந்தத்துக்கு எந்த படத்தில்லும் நல்ல பாத்திரம் அமைந்து நான் பார்த்ததில்லை. இதுதான் முதல். சமீபத்தில் அவரை பற்றி இங்கே படித்தேன்.

பல நடிகர்கள் யாரென்று தெரியவில்லை. சிவாஜியின் தம்பியாக வரும் பாலச்சந்திரனை நான் வேறு படங்களில் பார்த்ததில்லை. பாலச்சந்திரனின் மனைவியாக வருபவர் துடிப்பை நன்றாக வெளிப்படுத்தி இருந்தார். யார் இவர்? சாரதா குறிப்பிட்டிருந்த சோடா கடைக்காரர் – யார் இவர்? பி.டி. சம்பந்தம் பிய்த்து உதறி விட்டார். கொஞ்சம் நாடகத்தனமாக நடித்தவர் ஜாவர் ஒருவர்தான்.

சிவாஜியின் நடிப்பை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் இந்த மாதிரி கதைகளை பிற்காலத்திலும் தேடிப்பிடித்து நடித்திருந்தால்…

படத்தில் ஒரு நாடகக்காரி பாத்திரம் இருக்கிறது. அதனால் ஏவிஎம் செட்டியார் வற்புறுத்தி இரண்டு பாட்டு போட்டிருக்கலாம். தனது visionஇல் உறுதியாக இருந்த இயக்குனருக்கும், அவரை அமுக்காத செட்டியாருக்கும் ஒரு சபாஷ்!

ஒரு police procedural என்ற முறையிலும் இந்த படத்தை பார்க்கலாம். அந்த காலத்து போலிஸ் எப்படி இயங்கியது என்று தெரிந்து கொள்ளலாம். சாட்சிகளை விசாரிப்பது இயல்பாக இருந்தது.

பார்க்க வேண்டிய படம். Pioneering effort. 10க்கு 8 மார்க். A grade.