சந்திரபாபு – 25
ஒக்ரோபர் 22, 2010 7 பின்னூட்டங்கள்
நன்றி : ஆனந்த விகடன், விமல்
சந்திரபாபு – தமிழன் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும், சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?
1. கடலோர நகரமான தூத்துக்குடியில் பிறந்த கலைமுத்து. பனிமயதாசன் என்று பெயர். கடும் காய்ச்சலில் இருந்து மீண்டது கர்த்தரின் கருணை என ஜோசப் பிச்சை என்ற பெயரை இணைத்தார்கள். பாபு என்பது செல்லப் பெயர். சந்திர குலத்தில் பிறந்தவன் என்ற பெருமிதத்தால் சந்திரபாபு என்று இவரே பேர் சூடிக்கொண்டார்!
2. பெற்றோர் ரோட்ரிக்ஸ் – ரோஸலின் இருவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையும் நடத்தியவர்கள். உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டதால் இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட, கூடவே சென்ற சந்திரபாபுவும் கொழும்பில் தனது பள்ளிக் கல்வியை முடித்தார்!
3. கொழும்புவில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். திருவல்லிக்கேணியில் வீடு. சாந்தோம் கடற்கரையில் இசையமைப்பாளர் வேதா, தபேலா தாழு. ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. இசை ஞானத்தை விதைத்தது இந்த இருவரும்தான்!
4. காமராஜருக்கு அறிமுகமான குடும்பம் பாபுவின் அப்பா சிறையில் இருந்த காலத்தில் அழைத்துச் சென்று குளிப்பாட்டி அரவணைத்தவர் காமராஜ். சந்திரபாபு மறைந்தபோது மலர் மாலையுடன் வந்த முதல் ஆளும் காமராஜரே!
5. சந்திரபாபுக்கு ஆங்கில அதிகாரிகள். பிரிட்டிஷ் பெண்கள், அவர்களது உடைகள் பாவனைகள் மீது சிறுவயதில் அலாதியான ஈடுபாடு இருந்தது. ஷர்ட் பேண்ட் இன் செய்து, சுத்தமான உடுப்பை அணியும் ஆசை அப்படித்தான் ஆரம்பித்தது!
6· மேற்கத்திய இசை கேட்பது, ராக் அண்ட் ரோல் நடனம் ஆடுவது, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவது. ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்ப்பது- பாபுவின் இளமைக் காலப் பொழுதுபோக்குகள். சந்திரபாபுவை கலைவாணி பிலிம்சுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர் சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன். அவருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தவர் மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா!
7. முதல் படம், தன அமராவதி (1947), கடைசிப் படம் பிள்ளைச் செல்வம் (1974), 50-களில் சுமார் 15 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார்!
8· புனித ஃபாத்திமா ஓவியத்தை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். இறந்தபோது அவருடன் வைத்து அதுவும் புதைக்கப்பட்டது!
9. ரப்பரைப் போன்ற உடல்வாகு. எவ்வளவு உயரத்தில் இருந்தும் குதிப்பார் எத்தனை தடவை சொன்னாலும் திரும்பத் திரும்பக் குதிப்பார். அவர் படங்களில் டூப் போட்டது இல்லை!
10. எம்.ஜி.ஆரை `மிஸ்டர் எம்.ஜி.ஆர்.’ என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான். சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அது பற்றி இவர் கவலைப்படவும் இல்லை!
11· `புகழ் பெறுவதற்காக விளம்பரம் அடையும் வரை தொழிலில் அக்கறை காட்டுவது இயற்கை. ஆனால், புகழ் பெற்ற பிறகும் நல்ல விளம்பரம் கிடைத்த பிறகும் சந்திரபாபுவைப் போல அக்கறை காண்பிப்பவர்கள் குறைவு’ என்று சொன்னவர் எம்.ஜி.ஆர்!
12· ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர்!
13· ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘பிறக்கும் போதும் அழுகின்றான்’, ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’, ‘ஒண்ணுமே புரியல உலகத்துல’, ‘பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’, ‘என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா’ ஆகிய 10 பாடல்களும் 50 ஆண்டுகளாக இன்னமும் தமிழகத்தின் இரவு நேரச் சங்கீதம்!
(இந்த ஒரு பாட்டுக்குத்தான் வீடியோ கிடைத்தது!)
14. எஸ்.எஸ். வாசனைச் சந்திக்க முடியாத வருத்தத்தில் ஜெமினி ஸ்டுடியோ வாசலில் மயில் துத்தநாகத்தைக் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர், தீக்குச்சியை உரசி தன் கையைச் சுட்டுக்கொண்டார். `நான் தீக்குச்சியைக் கொளுத்தியதை உணரலாம். ஆனால், அந்த சூட்டை உங்களால் உணர முடியாது’ என்று நீதிபதிக்குத் தன் துயரத்தை உணர்த்தினார !
15· சென்னை பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். சகோதரி படத்து பால்காரனைப் பார்த்துத்தான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்பதை தமிழகம் உணர்ந்தது!
16· எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மிக முக்கியமான ரசிகர். இருவரும் மணிக்கணக்கில் பேசுவார்கள். சந்திரபாபு கேட்டு அவருக்காக எழுதிய நாடகம்தான் `எனக்காக அழு’, ஆனால், அதில் சந்திரபாபு கடைசி வரை நடிக்கவில்லை!
17· ஷீலா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். முதலிரவின் போதே தனக்கு உள்ள இன்னொரு தொடர்பை அந்தப் பெண் சொன்னார். மறுநாள் காலையில் மனப்பூர்வமாக ஷீலாவை அனுப்பிவைத்துவிட்டார்!
18· நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார். `சில சமயங்களில் என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல’, அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதைவைத் தாழிட்டுக் கொள்பவனும் அல்ல’ என்று சொன்னார்!
19· மூன்று பேரைத் தனது வழிகாட்டிகளாகச் சொன்னார். “மனிதனாக வாழ்வது எப்படி என்று போதித்தவன் ஆபிரகாம் லிங்கன்; ஒரு மனிதனைச் சாகடிக்காமல் சித்ரவதை செய்வது எப்படி என்பதை எனக்குக் கற்றுத் தந்த என்னுடைய மாமனார்; ராஜதந்திரம் என்றால் என்ன என்பதையும் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் கற்றுத் தந்தவர் ஜெமினி கணேசன்’’ என்றவர்!
20· ‘பாபு இஸ் பாபு, ஐ யம் பாபு’ என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். படப்பிடிப்புத் தளத்தில் நுழையும்போது, ‘ஓ ஜீசஸ்!’ என்று சொல்லியபடிதான் நுழைவார்!
21· ஜனாதிபதி மாளிகையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் முன்னால் பிறக்கும் போதும் அழுகின்றான் பாடலைப் பாடினார். பிரமாதம் என்று அவர் பாராட்ட, உடனே ஓடிப் போய் அவரது மடியில் உட்கார்ந்துகொண்டார் சந்திரபாபு, `கண்ணா நீ ரசிகன்டா’ என்று அவரது தாடையைத் தடவ, ஜனாதிபதியும் மகிழ, உற்சாகமான பொழுது அது!
22· தட்டுங்கள் திறக்கப்படும் அவர் இயக்கிய படம். அதில்தான் கதை, திரைக்கதை, டைரக்ஷனுடன் நடனம் என்றும் சேர்த்துப் போட்டார். அப்படி போட்ட முதல் இயக்குநர் இவர்தான்!
23· நடிப்பு, பாட்டு, நடனம், இசை, ஒவியம், நாடகம், சிற்பம் ஆகிய அனைத்தின் மீதும் ஈடுபாடும், அது தொடர்பான கலைஞர்கள் அனைவரையும் தேடித் தேடிப் பழகியவரும் கூட. `ஆனால், எனக்கு நடிப்பைத் தவிர, செல்ஃப் ஷேவிங் மட்டும்தான் தெரியும்’ என்று சிரிப்பார்!
24· ‘நீ ஒரு கலைஞன், கற்பனை வளம் மிக்கவன், சிந்தனை சக்தி அதிகம் உள்ளவன்’ என்ற ஒரு பாராட்டு மட்டுமே தனக்குப் போதும் என்று சந்திரபாபு சொன்னார். இப்படிப் பாராட்டியவர், அவருக்கு ஒரு நாள் மட்டுமே மனைவியாக இருந்த ஷீலா!
25· ‘என் நடிப்பு மற்றவர்களுக்கு ஒரு சவால்தான். யாராவது இதைப் போல நடித்துக் காட்டட்டும், பார்க்கலாம்!’ என்று சவால்விட்டார் சந்திரபாபு. எதிர்கொள்ள இன்று வரை யாரும் இல்லை!
பிற்சேர்க்கை: சாரதாவின் மறுமொழியிலிருந்து –
சந்திரபாபு இறப்பதற்கு சில காலம் முன்பு, பிலிமாலயா என்ற சினிமா மாதப் பத்திரிகையில் மாடி வீட்டு ஏழையின் கண்ணீர்க் கதை என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வந்தார். அதில் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒளிவு மறைவின்றி எழுதியிருந்தார். அதனால் அந்த பத்திரிகை அலுவலகம் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, தொடர் நிறுத்தப்பட்டது.
படப்பிடிப்பின்போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு பூரண ஒத்துழைப்பு கொடுக்காதவர் என்ற அவப்பெயர் இவருக்கு உண்டு. அதுபற்றி பல பேர் பல சமயங்களில் கூறியிருக்கிறார்கள். அவருக்கிருந்த மார்க்கெட் வால்யூவுக்காக படங்களில் போட வேண்டியிருந்தபோதிலும், முடிந்தவரையில் ‘கழட்டி விடவே’ பார்த்தனர். அந்த நேரம் ஆபத்பாந்தவனாக நாகேஷ், புயலாக திரையுலகில் நுழைய, இவர் சுத்தமாக ஓரங்கட்டப்பட்டார்.
அது போலவே பாடல் பதிவின்போதும் இவரை வைத்து பாடல் ஒலிப்பதிவு செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம் என்பார்கள். சமீபத்தில் கூட ஜெயா டி.வி.யின் ‘ராகமாலிகா’ நிகழ்ச்சியில் டி.கே.ராமமூர்த்தி சொன்னார். சிரத்தை எடுத்துப் பாடமாட்டார், திருப்பி திருப்பி டேக் வாங்குவார். அப்போதெல்லாம் ட்ராக் சிஸ்டம் கிடையாது என்பதால் பாடகர் ஒருவர் தப்பு செய்தாலும் அனைத்து இசைக்கருவி வாசிப்பவர்களும் திருப்பி திருப்பி வாசிக்க வேண்டும். அதனால் இவர் பாட்டு என்றால் இன்ஸ்ட்ருமெண்ட் பிளேயர்கள் ஜகா வாங்கி ஓடுவார்களாம்.
புகழின் உச்சியில் இருக்கும்போது இது போன்ற வேண்டாத பழக்கங்களால் மார்க்கெட்டை இழந்து தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர். (தற்போதைய நடிகர் கார்த்திக் போல. வளமாக ஒளி வீச வேண்டிய அருமையான வயதுகளை கார்த்திக் எப்படி தொலைத்து நின்றார் என்பது நமக்குத் தெரியும்தானே).
நடிகர் ஜெமினி கணேசன் சாவி வார இதழில் எழுதி வந்த ஆசையாக ஒரு அசை வாழ்க்கைத் தொடரில், ‘நடிகை சாவித்திரியின் வேண்டாத பழக்கங்களுக்கும், விபரீத முடிவுக்கும் சந்திரபாபுதான் காரணம்’ என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.
இவைற்றையெல்லாம் மீறியும் சந்திரபாபு சுடர் விட்டாரென்றால் அது அவருடைய அபார திறமையால் என்பதில் சந்தேகமில்லை.
எந்த உயரத்திலிருந்தும் தானே குதிப்பார் என்பதை மெய்ப்பிக்கும் ஒரு இடம் – ஆண்டவன் கட்டளையில் சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடலில் ஒரு பஸ்ஸின் டாப்பிலிருந்து படுக்கை வசத்தில் பொத்தென்று விழுவார். கீழே நிற்பவர்கள் அவர் குதிக்கத் துவங்கிய பின்னர்தான் கைகளைக் கோர்ப்பார்கள். அவர்கள் கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தாலும் விபரீதமாகியிருக்கும். ரொம்பவே தைரியம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
தொடர்புடைய சுட்டிகள்:
சந்திரபாபுவும் புதுமைப்பித்தனும்
1964-இல் சந்திரபாபுவின் பேட்டி
சந்திரபாபுவின் மாஸ்டர்பீஸ் – சபாஷ் மீனா
சந்திரபாபு பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
சந்திரபாபு பற்றி எழுத்தாளர் முகில்
சந்திரபாபு சபாஷ் மீனா படத்துக்கு புக் ஆன கதை
அண்மைய பின்னூட்டங்கள்