நந்தா என் நிலா
பிப்ரவரி 13, 2011 3 பின்னூட்டங்கள்
By Eshwar gopal
திரைப்பட விமர்சனம்
நடிகர்கள் | விஜயகுமார், செல்வகுமார், வீராச்சாமி | ||
நடிகைகள் | சுமித்ரா, ஃபடாபட் ஜெயலட்சுமி, எம்.என்.ராஜம், குசல குமாரி, ஜெயகீதா, அனுபமா மற்றும் பலர் | ||
பின்னணி | எஸ்.பி.பி (நந்தா நீ என் நிலா), ஜெயசந்திரன், டி.கே.கலா (ஒரு காதல் சாம்ராஜ்யம்), பி.சுசீலா (கோயிலுக்கு), எஸ்.ஜானகி (கண்ணுக்குட்டி செல்லம்மா), |
||
பாடல்கள் | கவிஞர் இரா பழனிச்சாமி (நந்தா என் நிலா), நா.காமராஜன் (ஒருகாதல் சாம்ராஜ்யம்) | ||
பின்னணி இசை | வி.தட்சிணாமூர்த்தி | புகைப்படம் | தத் |
கதை | புஷ்பா தங்கதுரை | தயாரிப்பு | ஆர்.எஸ்.சங்கரன் |
படத்தொகுப்பு | விஜய் ஆனந்த் | திரைக்கதை, இயக்கம் | ஜகன்னாதன். B.A. |
ஒரே போல் இருக்கும் இருவரில் ஒருவரை காதலித்து (ஒரு தலைக்காதல்), காதலித்தவர் நாயகியை முதலில் விரும்பாததால் ஏற்படும் மனக்காயங்களும், குழப்பங்களும் – அதனால் ஏற்படும் சச்சரவுகளையும் நேர்த்தியாகவும், தடுமாறியும் படமாக்கி பரிமாறி இருக்கிறார் இயக்குனர் ஜகன்னாதான் (B.A).
விரிவானகதை
நந்தா (சுமித்ராவின்) குடும்பம் சாதாராண நடுத்தரக்குடும்பம், கிராமத்தில் வாழ்கிறது. அவர் தந்தை (வீராச்சாமி) சிறு நிலங்களை வைத்து பராமரித்தாலும், வலுவான வசதியில்லாத குடும்பம். அவருக்கு கல்யாண ஏற்பாடுகளை செய்ய முனைக்கும்போது அதை வேண்டாமென்று தட்டிவிடுகிறார், அதற்கான காரணத்தை தந்தையிடமே கூற மறுக்கிறார். அதற்கு காரணம் – நாயகன் விஜயகுமார். ஒருமுறை நாயகியின் தந்தையின் நண்பர் அழைத்ததை ஏற்று ஒரு வாரம் தங்க சென்னைக்கு குடும்பத்துடன் செல்லும் நாயகிக்கு முதல் முறையாக விஜயகுமாரை பார்த்ததில் ‘ஆயிரம் பட்டாம்பூச்சி’ வேலை செய்கிறது. இதற்கிடையில் நாயகனின் அம்மா எம்.என்.ராஜம் வேறு, இவர்களை கூட்டிக்கொண்டு சென்னையை சுற்றிக்காட்டுமாறு கட்டளையிட, நாயகியும் குதூகலமாக கடற்கரை, எல்.ஐ.சி கட்டிடம் (அப்போது வந்த படங்களில் அதை பார்க்காமல் ஊர் வந்து சேரக்கூடாது போலிருக்கிறது. உதாரணம்: நாயகி “அப்பா, எம்மாம்பெரிய கட்டிடம்” என்று மலைப்பது). இப்படத்திலும் நாயகன் வாங்கிக்கொடுக்கும் சாப்பாடு, ஐஸ்கிரீம், மலைக்கோயிலுக்கு போகும்போது நாயகி விருப்பப்பட்ட பொம்மையை வாங்கிக்கொடுப்பது, அவரின் பண்பு, அமைதி, கைப்பந்து விளையாடும் திறன், வசீகரம், பணக்கார நாகரீகம் எல்லாம் சேர்ந்து நாயகியின் மனதிற்குள் மத்தாப்பாய் ஜொலிக்க, வயதின் பருவமும், மயக்கத்தில் தோன்றும் ஒற்றை எண்ணமும் அவர் மேல் காதல் கொள்ளச்செய்கிறது. பல இடங்களுக்குச் செல்லும் அவர்கள் மைதானத்தில் நடக்கும் ‘நட்சத்திர துடுப்பாட்டப் போட்டி’யையும் கண்டு களிக்கிறார்கள். (அன்றைய பெரிய ‘தலை’கள் லட்சுமி, ஜெய்சங்கர், தேங்காய், கமல், ஜெயசித்ரா, சீமா, சசி மைதானத்தில் ஆட வருவதை ஒய்.ஜி.மஹேந்திரன் நக்கலாக வர்ணனை செய்கிறார் – அதை இங்கே பாருங்கள்)
http://www.youtube.com/watch?v=h1n_RicokC8
நாயகியின் ஒருதலைக்காதல்
நாயகி ஒரு தலைக்காதல் வயப்பட்டு, நாயகன் வாங்கிக்கொடுத்த பொம்மையை வைத்துக்கொண்டு நாட்களை கிராமத்தில் ஓட்டுகிறார். இதனிடையே வரும் வரனை தட்டிக்கழிக்க, நாயகியின் அப்பா அதிர்ச்சியில், ஏக்கத்தில் உறைந்து உயிரை விடுகிறார். ஆண்பிள்ளையில்லா குடும்பத்தை, அதுவும் நிலங்களை கடன்களாக மாற்றி வைத்துவிட்டு இறந்து போன தந்தைக்குப்பின் யாரும் இல்லாததால், பொருளாதாரத்தை ஈட்ட நாயகி முற்பட்டு, பண்ணையாரிடம் வேலைக்கு சிபாரிசுக்கடிதம் வாங்கிக்கொண்டு சென்னை வந்து சேர்கிறது. சுமித்ரா அங்கு அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வந்து அங்கிருக்கும் காரியதரசியான ஃபடாபட்டை பார்க்க, வேலை காலி இல்லாவிட்டாலும், கடிதம் கொண்டுவந்ததால், தற்காலிகமாக, ‘குப்பியில் அடைக்கும் பொறுப்பு’ வேலையாக கிடைக்கிறது. வேலையில் சேர்ந்த அன்று தான் எதேர்ச்சியாக அந்த நிறுவனத்திற்கு நிர்வாக இயக்குனர் விஜயகுமாரே என்று தெரிந்து கொள்கிறார். ஒரு புறம் வேலை கிடைத்த மகிழ்ச்சி, இன்னொரு புறம் விஜயகுமாரைப்பற்றி அங்குதான் உள்ளார் என்று தெரிந்து கொண்டது என்று பறக்கிறார் நாயகி. இம்மகிழ்ச்சி அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை.
நாயகியை அலுவலகத்தில் வைத்து பார்க்கும் அவருக்கும் இவர் மேல் காதல் வருகிறது. அவரை மேலும் கவர, வேலைமுடிந்தவுடன் டென்னிஸ் விளையாட்டை பார்க்கப்போகிறார். அங்கு நிர்வாக இயக்குனரக ஒரு விஜயகுமாரும், டென்னிஸ் விளையாடுபவராக ஒருவரும் வந்து அதிர்ச்சி கொடுக்கிறார்கள். தான் காலித்தது டென்னிஸ் வீரரைத்தான் என்பதையும், மற்றவரை பார்த்து ஏமாந்து போனோம் என்றும் நினைத்து குழப்பத்தில் டென்னிஸ் வீரர் விஜயகுமாரை அவர் வீட்டிற்கு சந்திக்கப்போகிறார். அங்கோ இவரின் உள் அர்த்தத்தை புரிந்துகொண்ட விஜயகுமாரின் அம்மா, இவரிடம் ஏற்கனவே ஒரு பணக்காரப்பெண்ணை அடையாளம் காட்டி அவர்தான் இவருக்கு துணைவியாக போவதாக மேலும் இறுக்குகிறார். எப்படியாவது விஜயை தனியாக சந்தித்து இவரின் மென்மையான பாசத்தை கொட்டிவிடத்துடிக்கும் நாயகிக்கு – நாயகனின் செய்கைகள் ‘வெந்தபுண்ணில் மிளகாய்பொடியை மயிலிறகால்’ தடவினதைப்போல் உள்ளது. நாயகியின் தங்கை இவரிடம் நட்பு பாராட்டினாலும், அவர் அம்மா ஒரு படி மேலே போய், தன் அந்தஸ்துக்கிற்கு ஏற்ற ஒரு பெண்ணா- கத்தான் அவரை மணம் முடிக்க ஆசையென்றும் நாயகியின் அந்தஸ்த்து ஒருபோதும் ஒத்துவராதென்றும் கூறி இனி இங்கு வரவேண்டாமென்று கூறிவிடுகிறார். நாயகியின் மணக்கணக்கு மனக்கணக்காகிறது. அப்போது கக்குகிறார் தத்துவத்தை பாடலாக இதோ :-
ஃபடாபட்டின் நட்பு
இதற்கிடையில் ஃபடாபட்டின் அலுவலக நட்பு கூடி நல்ல நண்பர்களாக ஆகிவிடுகிறார்கள். சுமித்ராவின் அழகையும், நற்பண்புகளையும் பார்த்து வீழ்ந்த இரண்டாவது விஜயகுமார் அம்மாவிடம் அவரை தனக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்குமாறு வேண்டுகிறார். இப்பணியை ஃபடாபட்டிடம் கொடுக்கும் அவரது அம்மா, ஒரு முறை அவரை பார்க்க கூட்டிக்கொண்டு வருமாறு கூறுகிறார். அவரை பார்த்து பிடித்துப்போகவே, உடனேயே அவரை இரண்டாவது நாயகனுக்கு மனைவியாக தெரிவுசெய்யக்கூறுகிறார். இதற்கிடையில், ஃபடாபட்டிடம் வரும் சுமித்ரா தன்னுடைய ஒருதலைக்காதலையும், முதல் நபரை எவ்வளவு ஆழமாக காதலிப்பதாகவும் கூறி, ஃபடாபட்டின் அனுபவத்தை கூறுமாறு விண்ணப்பிக்க, அவரோ காதலால் தான் ஏற்கனவே, மனதாலும், உடலாலும், ஒருவனால் நோகடிக்கப்பட்டுவிட்டதாகவும், அதனால் காதலில் தனக்கு பெரிய நம்பிக்கை இல்லையென்றும் கூறுகிறார். நோகடிக்கப்பட்ட ஃபடாபட் பாடும் ‘ஒரு காதல் சாம்ராஜ்யம்’ பாட்டு பாடி நம்மை மகிழ்விக்கிறார் – இதோ:
தன் காதலில் உறுதியாக உள்ள சுமித்ரா, திருமண வாய்ப்பை தட்டுவதோடு, வீட்டிற்கு வந்து ஏற்கனவே வாக்குக்கொடுத்த அம்மாவிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். பின் வேலையை ராஜினாமா செய்கிறார். ஃபடாபட்டின் சிபாரிசில் விளம்பரக்கம்பனி வேலை கிடைக்க, அங்கும் தொடர்கிறது காதல் கதை. அங்கு போனால் ‘விளம்பர மாதிரிகளை’ தேர்ந்தெடுக்க அவர் போகும் நிறுவனத்தின் தலைவர்தான் டென்னிஸ் விஜயகுமார். இவரிடம் வாங்கிய அடியில், சுமித்ரா வியாபரா சம்பந்தமாக மட்டுமே கறாராக பேசுகிறார். மற்றபடி கண்டுகொள்வதில்லை. இதற்கிடையில், இரண்டாவது கதாநாயகனுக்கு இவர் மேல் பைத்தியம் பிடித்து மூளைக்கலக்கம் பிடித்து விடுகிறது. ஃபடாபட்டின் ஆலோசனையின் பெயரில் அவர் அம்மாவுடன் பெங்களூரி போய் 2 மாதம் தங்கினால் அவர் மாறுதலடையக்கூடும் என்று கூறி அங்கு அனுப்பிவிடுகிறார். அங்கு போயும், நந்தா (சுமித்ரா) நினைவாகவே இருப்பதால், அவர் அம்மா ஃபடாபட்டை உடன் பெங்களூரி வருமாறு பணிக்கிறார். அங்கு செல்லும் அவர், அவர் மனதை மாற்ற நந்தாவும் அவர் நினைவாகவே உள்ளதாகக்கூறி ஒரு பூச்செண்டையும் அவர் கொடுத்ததாகக் கூற, குதூகலமாகும் நாயகன் நந்தாவை நினைத்து பாடுகிறார் அருமையாக :
நந்தா நந்தா என்று கூறி மயக்கத்தில் (ஃபடாபட்டை) நந்தாவாக எண்ணி படுக்கையறையில் சூரையாடிவிடுகிறார். (மனநிலை பாதிக்கப்பட்டு மயக்கத்தில் இருக்கும் நாயகன் இதை மட்டும் சரியாக பண்ணிவிடுவான் – அவன் தமிழ்பட கதாநாயகனல்லவா). இக்கதையை நந்தாவிடம் கூறி ஃபடாபட் தூக்க மாத்திரை உண்டு மரிக்கிறார்.
இதெற்கிடையில் டென்னிஸ் விஜயகுமாரின் பெரியைடத்துப்பெண் அவரிடம் வியாபாரத்தனமாக நடந்து கொள்ள, நந்தாவை நினைத்து மன மாறுதல் அடையும் அவருக்கு, அவர் தங்கையின் நந்தாவைப்பற்றிய கருத்தும் வலுவூட்ட, நந்தாவிடம் தன் மனதை கொட்ட, நந்தா அதை (வரட்டு பிடிவாதமாக) தட்டிவிட, கடைசியில் கோவிலுக்கு போகும் அங்கு இருவரும் சந்தித்து டட்டடய்ங்ங்ங்ங்ங்……..
இசை
இடைக்காலப்பாடல்கள்,அதைவிட பழய பாடல்கள் எல்லாம் கேட்க கேட்க தெவிட்டாத தெள்ளமுதாக இருக்கிறது. இப்படத்தில் இரண்டு பாட்டுக்கள் மிக அற்புதமாக உள்ளது, மற்ற இரண்டில் ஒன்று (எஸ்.ஜானகியின் கண்ணுக்குட்டி செல்லம்மா-எழுத்து போடும்போதுபாட்டு), சுசீலாவின் கோவிலுக்கு பூஜை செய்ய (தத்துவம்). ஒரு பாடல் தத்துவப்பாடல். இதன் இசை, திரு.வி.தக்ஷிணாமூர்த்தி. அற்புதமான கர்நாடக இசை வல்லுனர். எம்.எஸ்.வியைபோலவே கர்நாடக இசையை கையாள்வதில் தேர்வுபெற்றவர். இவர் பல இன்றய, பழய இசையமைப்பளர்களுக்கு (இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான்) ஆகியோரின் குரு. இவரின் 1950-70-களில் மலையாள பட உலகில் கொடிகட்டி பறந்திருக்கிறார். தமிழிலும் அற்புதமான நமக்குத்தெரிந்த இரண்டு படங்களில் (‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’) இசை பிண்ணி பெடலெடுத்திருக்கிறார். இளையராஜா இவரிடம்தான் துவக்ககாலத்தில் கர்நாடக இசையின் பரிமாணங்களை கற்றுக்கொண்டுள்ளார். இவரைப்பற்றி கூறிய இளையராஜா “இவரைப்பற்றி கூற எனக்கு அருகதை இல்லை” என்று பணிவுடன் முடித்துக்கொண்டார். அப்படிப்பட்ட இசை மேதை. பல சிங்களப்படத்திற்கும் இவர் இசை அமைத்திருக்கிறார். முற்றிலும் திரைப்படத்துறையை விட்டுவிட்டு – வயோதிகத்தில் பாலக்காடில் இருப்பதாகக்கேள்வி.
நடிப்பு, நடிகர்கள்
புஷ்பா தங்கதுரையின் கதையை படமாக்கியிருக்கிறார்கள். இருவேடங்களில் நடிப்பதென்றால் தமிழில் சிவாஜியைத் தவிர யாருக்கும் இரு வேறு நடிப்புத் திறமையைக்கையாளும் கலை இருப்பதாகத்தெரியவில்லை. மற்ற நடிகர்கள் எல்லாம், தலைமுடி, சட்டை, கையைச்சொடுக்குவது, வெகுளியாக இருப்பது என்று ஏதாவது அடையாளம் வைத்தால்தான் நமக்கு குழப்பம் தீரும். இதிலும் விஜயகுமார் அதையே செய்கிறார், ஒரு விஜயகுமாருக்கு சட்டையின் கழுத்துப்பட்டை நீளமாக இருக்கிறது, மற்றவருக்கு சாதாரணம் – மற்றபடி இருவரும் ஒரே நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். தபால் தலை போல் ஒரே சீரான நடிப்பு. உணர்ச்சியை கொட்டும்போது தடுமாறுகிறார். சுமித்ரா பிச்சு உதறுகிறார். பொம்மை போல் அழகாகவும் இருப்பது இவருக்கு ஒரு கூடுதல் ஏற்றம். ஃபடாபட் தன் திறமையை திறம்பட காட்டுகிறார். ஒரு பாட்டிலும் நன்றாக பரிமளிக்கிறார். (‘ஒரு காதல் சாம்ராஜ்யம்’ – இப்பாடலில் ஆண்நடிகர் [செல்வகுமார்?] அணைக்கும் லாவகத்தில் கால் பாவாடைத்தலைப்பை லேசாக தூக்க, நாசூக்காக இவர் கீழிறக்குவது கூர்மையாகப்பார்த்தால் தெரியும்.) ‘மயங்குகிறாள் ஒரு மாதுவில் ஒல்லியாக’ இருக்கும் இவர், இதில் நல்ல குண்டாக உள்ளார். எம்.என்.ராஜம், மற்றொரு விஜயின் அம்மா (குசலகுமாரி), சுமித்ரா அம்மா (அனுபமா), தங்கை வந்து போகிறார்கள்.
மருந்துக்கும் நகைச்சுவை இல்லாததாலும், படம் முழுக்க சுமித்ரா, ஃபடாபட், விஜயகுமார் போன்றவர்களையே கதை சுற்றி சுற்றி வருவதாலும், நடுவில் படத்தின் ஓட்டத்தில் தொய்வு ஏற்பட்டு சலிப்பை உண்டு பண்ணுகிறது. இருப்பினும், ஜெகன்னாதன் பி.ஏ – ஒருவாறு சமாளித்து கரை சேர்த்து விடுகிறார். ஃபடாபட்டை நாயகன் மயக்கத்தில் கெடுப்பது – சுமித்ரா முதல் நாயகனை திருமணம் செய்துகொள்வதற்காகவே ஏற்படுத்தப்பட்ட காட்சி, இது தமிழ்படத்திற்கே உள்ள சாபக்கேடு. அதிலும், நாயகன் ஃபடாபட்டை கற்பழித்துவிட்டு, அவரும் இறக்க, பின் சுமித்ராவிடம் நீ யாரைவேண்டு மானாலும் திருமணம் செய்துகொள் என்று அப்பாவியாகச் சொல்வது ரௌடிகளின் மொழி. அவருக்கு தண்டனை – ஒன்றும் கிடையாது, இந்நிகழ்சிக்குப்பின் அவருக்கு ஏற்பட்ட மூளைகலக்கமும் நீங்கிவிடுகிறது (என்னே கண்டுபிடிப்பு).
அண்மைய பின்னூட்டங்கள்