நேற்று இன்று நாளை


திரைப்படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

மூன்று கதாநாயகிகள் இருக்கும்போது இரண்டு கதாநாயகர்களாவது வேண்டாமா? நண்பனும் (சற்று நேரம்) கதாநாயகனுமாக எம்.ஜி.ஆர். தோன்றுவது சற்று வித்தியாசமான உத்தி.

ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எம்.ஜி.ஆரின் நடிப்பில் துள்ளலும் துடிப்பும் முனைப்பாக உயர்ந்து நிற்கின்றன. காதல் காட்சிகளில் எத்தனை கலகலப்பு! இவற்றுக்கு மேலே நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்கவில்லை.

மூன்று கதாநாயகிகளில் யாரும் சளைத்தவராக இல்லை. ஆப்பக்கார அன்னம்மா மஞ்சுளா. அசல் ‘பேட்டை’யாகவே மாறியிருக் கிறார்.

ராஜஸ்ரீ பைத்தியமாகிப் படாதபாடு படுத்துவது நல்ல தமாஷ்!

நடிகையாகத் தோன்றும் லதா கவர்ச்சியோடு நிற்காமல், சில கட்டங்களில் உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்.

‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது கதை. நேற்றைய கதைகளின் சாயலும், இன்றைய நடப்புகளும் பின்னிக் கிடக்கின்றன.

கதாநாயகன் குடிக்கவேண்டிய விஷத்தை மற்றவர்கள் குடித்து மடிவது புதியதல்லவே! காதலனை அடையமுடியாத லதா, தற்கொலை செய்துகொள்வதற்குக் குன்றின் உச்சிக்குத்தான் வர வேண்டுமா?

“மெட்ராஸிலேயே ரொம்ப நல்ல சபா ஐ.நா.சபைதாங்க” என்று சுகுமாரி விளாசித் தள்ளுவது அருமை. தேங்காய் சீனிவாசன், திகில் சீனிவாசனாக மாறியிருக்கிறாரே!

“விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்போறோம்னு நான் சொல்லமாட்டேனே!” என்று குடி போதையில் உளறிக் கொட்டும்போதும், ஆவேசமாகச் சண்டையிடும்போதும் அசோகன் ‘சபாஷ்’ பெறுகிறார்.

ராஜஸ்ரீக்கு விஷம், லதாவுக்கு கன்னியாஸ்திரீ உடை, மஞ்சுளாவுக்கு மணமாலை என்று முடிவு கொடுத்திருப்பது சாமர்த்தியமான சமாளிப்பு.

கதைக்குக் கதை, நகைச்சுவைக்கு நகைச்சுவை, விறுவிறுப்புக்கு விறு விறுப்பு, கண்கவரும் வண்ணம், காதுக்கினிய கீதங்கள்… ‘நேற்று இன்று நாளை’ நேர்த்தியான பொழுதுபோக்கு.

நண்பர் சிமுலேஷன் தந்திருக்கும் பாட்டு சுட்டி.

பார்த்திபன் கனவு


இது பழைய படம். ஸ்ரீகாந்த், ஸ்னேஹா நடித்தது இல்லை. ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, எஸ்.வி. ரங்காராவ், டி.எஸ். பாலையா, எஸ்.வி. சுப்பையா, ராகினி, அசோகன், குமாரி கமலா, ஜாவர் சீதாராமன் என்று பலரும் நடித்தது. இசை வேதா. கல்கியின் புகழ் பெற்ற வரலாற்று நாவலை படமாக்கி இருக்கிறார்கள். இயக்கம் யோகநாத். 1960-இல் படம் வெளிவந்திருக்கிறது.

நான் பார்த்தது விஜய் டிவியில். படத்தை கன்னாபின்னா என்று வெட்டிவிட்டார்கள். முன்னால் வர வேண்டிய சீன் பின்னால் வருகிறது, பின்னால் வர வேண்டிய சீன் முன்னால் வருகிறது. கிராம டெண்டு கொட்டாய்களில் அபூர்வமாக ஆபரேட்டர் தூங்கிவிடும்போது ரீல்கள் வரிசை மாறிவிடும். சின்னப் பசங்க நாங்க ஆய் ஊய் என்று ஜாலியாக சத்தம் போடுவோம். ஆபரேட்டர் எழுந்து மாற்றுவார். விஜய் டிவிகாரர்களை என்ன செய்வது?

சரோஜாதேவி மற்றும் பாலாஜியின் பெயர் டைட்டிலில் பார்த்தேன், ஆனால் படம் பூராவும் இவர்கள் வரவே இல்லை. வில்லன் யார் பி.எஸ். வீரப்பாவா? அடையாளம் காண முடியவில்லை, ஆனால் டைட்டிலில் வீரப்பா பேர் இல்லை. நாவலை சில நாட்கள் முன்னால்தான் படித்திருந்தேன், அதனால் சீன்கள் என்ன சீக்வென்சில் வரவேண்டும் என்று தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும் இவ்வளவு கொடுமை பண்ணக் கூடாது சார்!

கதை தெரிந்திருக்கும். மாமல்லருக்கு (ரங்காராவ்) கப்பம் கட்ட மறுத்து பார்த்திப சோழன் (அசோகன்) போர் புரிந்து இறந்துபோகிறார். இறக்கும் தருவாயில் ஒரு சிவனடியார் பார்த்திபனைப் பார்த்து உன் மகனை வீரனாக வளர்ப்பேன் என்று வாக்குத் தருகிறார். மகன் விக்ரமன் (ஜெமினி) வளர்ந்து புரட்சி செய்து சிறைப்படுகிறான். மாமல்லர் விக்ரமனை நாடு கடத்துகிறார். அதற்குள் அண்ணலும் நோக்கினார், மாமல்லரின் மகள் குந்தவையும் நோக்குகிறாள். நோக்குவது மட்டும்தான், அதிலேயே இரண்டு பேருக்கும் காதல் வந்துவிடுகிறது. நாடு கடத்தப்பட்ட விக்ரமன் செண்பகத்தீவுக்கு அரசன் ஆகிறான். தன குல சொத்தான வாளை எடுத்துப் போக திரும்பி வருகிறான். அங்கே காபாலிகர் கூட்டம் அவனை தாக்குகிறது. பல்லவ ஒற்றர் தலைவன் அவனைக் காப்பாற்றுகிறான். பிறகு அவனுக்கு அடிபட அவன் குந்தவையால் காப்பாற்றப்படுகிறான். இந்த முறை காதலை இருவரும் சொல்லிவிடுகிறார்கள். பின்னே! விட்டுவிட்டால் இன்னும் மூன்று வருஷம் போய்விடுமே! காபாலிகர் கூட்டம் சிவனடியாரை பலி கொடுக்கும்போது எல்லாரும் சரியாக அங்கே போய் அவரைக் காப்பாற்றுகிறார்கள். யார் அந்த சிவனடியார் என்ற சின்னப் பிள்ளைகள் கூட யூகிக்கக் கூடிய பெரும் மர்மம் அவிழ்கிறது. பிறகு, கல்யாணம், சுபம்!

ரங்காராவ் சிறப்பாக நடித்திருந்தார். ஜெமினி, வைஜயந்திமாலா இருவரும் அழகாக இருந்த நாட்கள். ஜோடிப் பொருத்தம் நன்றாக இருந்தது.

வேதா கலக்கிவிட்டார். பின்னாளில் ஹிந்திப் பட மெட்டுகளை காப்பி அடித்தே காலத்தை ஓட்டியவர் இவர்தான் என்று நம்பவே முடியாது. கண்ணாலே நான் கண்ட கணமே, இதய வானில் உதய நிலவே, பழகும் தமிழே பார்த்திபன் மகனே என்ற அருமையான பாட்டுகள். ஏ.எம். ராஜா குரல் ஜெமினிக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

பாட்டுகள், வீடியோக்கள் கிடைக்காதது துரதிருஷ்டம். ஸ்டில் கூட கிடைக்கவில்லை.

படம் ஒன்றும் பிரமாதமில்லை. (நாவலும் கூட பிரமாதமில்லை.) பழைய பாட்டு, பழைய படம் என்றால் விரும்பிப் பார்ப்பவர்களுக்கு மட்டும்.

மயங்குகிறாள் ஒரு மாது (1975)


By E. Gopal

படம் வெளியான தேதி: 30.5.1975,

நடிகர்கள் : முத்துராமன், விஜயகுமார், தேங்காய் சீனிவாசன், அசோகன், செந்தாமரை நடிகைகள்: சுஜாதா, ஃபடாபட் ஜயலக்ஷ்மி, எம்.என்.ராஜம், காந்திமதி, புஷ்பா பின்னணி பாயிருப்பவர்கள் : கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணிஜயராம் பின்னணி இசை: விஜய பாஸ்கர் பாடியவர்கள் : கே.ஜெ.யேசுதாஸ், தயாரிப்பு: பாஸ்கர்
வசனம்: பஞ்சுஅருணாசலம்
திரைக்கதை, வசனம், இயக்கம் : எஸ்.பி.முத்துராமன்

மாத்திரையடக்க கதை

மனச்சஞ்சலத்தால் சற்று வழிமாறிப்போகும் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த ஒரு பெண், குடும்பவாழ்க்கையில் சந்திக்கும் பதற்றங்களும், சவால்களையும் பரபரப்பான பிண்ணனியில் விளக்கியிருக்கும் படம் “மயங்குகிறாள் ஒரு மாது”.

கதைச்சுருக்கம்

கல்லூரியில் படித்துக்கொண்டு, தங்கும் விடுதியில் பெண்தோழிகளுடன் தங்கியிருக்கிறார் சுஜாதா.  இவரின் அறைநண்பியான ஃபடாபட் ஜயலட்சுமி மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்கிறார். படிக்கற காலத்தில் படிக்க வேண்டும், மற்ற சஞ்சலங்களில் மனதைச்செலுத்தி விடக்கூடாதென்று நினைக்கிறார். இக்கருத்தை உடைக்க முற்பட்டு சுஜாதாவின் மனதில் சலனத்தை ஏற்படுத்துகிறார்கள் தோழிகள். உணர்ச்சிகளை தூண்டும் புத்தகங்களைக் கொடுத்தும், திரைப்படத்திற்கு திருட்டுத்தனமாக கூட்டிப்போயும் அவர் மனதில் பாதையைப்போடுகிறார்கள். இதனால் ஏற்படும் கருத்துவேறுபாடில் சுஜாதாவை, ஃபடாபட் அடித்துவிட, இருவருக்கும் மனதில் பிளவு ஏற்பட்டு பேச்சுவார்த்தை நின்று போகிறது. பருவக்கோளாறினால் ஏற்படும் மயக்கம் ஒருபுறம் தள்ள, உடம்பு என்ற நெருப்பு மனதை வினாடியில் சாம்பலாக்க, காதல் என்ற பல்லக்கு பயணிக்கத்தொடங்குகிறது.

விஜயகுமாரின் அப்பா (செந்தாமரை) ஒரு  பெண் சபலஸ்தர், பணக்காரர்.  இவர் பெண்கள் கூட குஜாலாக இருக்கும்போது தெரியாமல் புகைப்படம் எடுத்து அதைகாட்டி மிரட்டுகிறார் புகைப்படக்கலைஞரும் எப்படியும் பணத்தை சம்பாதிக்கத்துடிக்கும் தேங்காய் சீனிவாசன். விஜயகுமார் தேங்காயின் மகன், சுஜாதாவின்மேல் காதல்வயப்பட்டு அவர் பின்னால் சுற்றுகிறார்.  ஆரம்பத்தில் நிராகரிக்கும் சுஜாதா, இன்னபிற பருவக்கோளாறுகளும் சேர்த்து உந்த, விரித்த வலையில் சிக்குகிறார்.  விஜயகுமாரின் பங்களாக்கு போகும் ஒருமுறை தன்னை மறந்த நிலையில் இருவரும் தவறு செய்ய, பேயரைந்தவர்போல் விடுதிக்கு வருகிறார்.  வருத்தம் தெரிவிக்கும் விஜயகுமார், கல்யாணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுக்கிறார். இந்நிகழ்ச்சிக்குப் பின் இவரின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் வர, சந்தேகிக்கிறார் ஃபடாபட்.  மறுநாளிலிருந்து விஜயகுமாரை காணாமல் தேட, ஒரு வண்டி அமர்த்திக்கொண்டு அவரின் இருப்பிட்த்திற்கே போக, அங்கோ, காவலர்கள் அவரையும், அவர் அப்பாவையும் கடத்தல் காரணமாக கைது பண்ணி ஜீப்பில் ஏற்றிக்கொண்டுபோகிறார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள ஒரே வழி, விஷம் குடிப்பதுதான் என்று முடிவு செய்து – அதையும் செய்கிறார். இவர் மயங்கி விழ, ஃபடாபட் ஓடிப்போய் விடுதியின் மருத்துவரான எம்.என்.ராஜத்தை கூட்டி வந்து சிகிச்சை அளிக்கிறார்.  இவரின் விஷத்தை குடலிலிருந்து எடுத்த மருத்துவர், இவர் கர்ப்பமாக இருப்பதாகவும், உள் இறங்கிய விஷம் அதை முறித்துவிட்டது என்றும் – இவ்விஷயம் யாருக்கும் தெரியவேண்டாமென்றும், அதனால் சுஜாதாவின் வருங்காலம் பாதிக்கப்படலாம் என்றும் ஃபடாபட்டிடம் உறுதி வாங்கிக்கொள்கிறார். ஒருமுறை ஒன்றுகூடிய உடன் கர்ப்பமாகத்தான் வேண்டும், புற்று நோய் வந்தால் சாகத்தான் வேண்டும், இரண்டு மனைவி இருந்தால் ஒரு மனைவி சாகத்தான் வேண்டும் (அ) அப்புறம் போய்விடவேண்டும், வில்லன் கடைசி காட்சிகளில் இறக்கத்தான் வேண்டும், கடத்தல்காரன் பணத்தை சுருட்டிக்கொண்டு சிங்கப்பூருக்கு கப்பலில் (இதில் கடவுச்சீட்டும், பயணச்சீட்டும் வேறு
இருக்கும்) தப்பிக்க ஒரு அதிரடி திட்டம் இருக்கத்தான் வேண்டும், மனைவியை விட்டு ஓடிவிட்டால், கடைசி காட்சியில் சேரும்போது மனைவி கணவன் காலில் விழத்தான் வேண்டும் – இது போன்ற மாற்றமுடியாத, மாற்ற விரும்பும் ஆனால் மாற்றக்கூடாதென்ற ஊறிப்போன தமிழ்பட தலைவிதிகள் இதிலும் உண்டு.

அவர் நலனையே கருதும், ஃபடாபட், எல்லாவற்றையும் மறக்க ஆதரவளித்து, கல்லூரி நாட்கள் முடிந்தவுடன் பிரிந்து செல்கிறார்கள்.  சுஜாதாவின் தந்தையான அசோகன், தன் மனைவி உயிருடன் இல்லாத காரணத்தினால், அவருக்கு சீக்கிரமாக கல்யாணம் செய்து வைக்க முற்படுகிறார். முத்துராமனும் அவர் அக்காவும் பெண்பார்க்க வருகிறார்கள்.

அவர் அக்காவாக வரும் எம்.என்.ராஜத்தை கண்டு அதிரிச்சியை உள்வாங்கும் நாயகி, தனியே அவரை கூட்டிப்போய், இக்கல்யாணத்தை எப்படியாவது நிறுத்துமாறு மன்றாடுகிறார்.  “வாழ்க்கையில் அப்படிப்பார்த்தால் யாரும் உயிருடனே இருக்க முடியாது” என்று வாதிடும் ராஜம், அவரின் குணத்திற்குத்தான் பண்ணிக்கொள்வதாகவும், நடத்தையை பார்த்து அல்ல என்றும், தனக்கு இதில் பரிபூரண சம்மதம் என்றும் கூறி சம்மதிக்க வைக்கிறார்.  முதல் இரவில், முத்துராமனும், தனக்கும் ஒரு காதலி இருந்த்தாகவும், கல்யாணம் கைகூடவில்லை என்றும் கூற, சற்று ஆறுதலடைகிறார்.

இதற்க்குப்பின், இனிமையாக பயணம் செய்யும் வாழ்க்கை, ஒரு குழந்தை பிறந்து வளர, திடீரென்று புடவைக்கடையில் ஃபடாபட்டை சந்திக்கும் போது பாதை மாறுகிறது.  அவரின் கணவர்தான் தேங்காய்.  ஏற்கனவே இருவரின் மனைவியும் நண்பிகளாதலால், குடும்ப நண்பர்கள் ஆகிறார்கள்.  ஒரு நாள் தேங்காய், தனிமையில் இருக்கும் சுஜாதாவிடம் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கொடுக்க, அதை பார்த்துக்கொண்டு வரும் நாயகிக்கு – அவரும், விஜயகுமாரும் கூடியபோது எடுக்கப்பட்டபடங்களையும் இடைச்செருகல் செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பின் தேங்காய், ஒரு பெரிய பணமுடிப்பு கொடுத்தால் இதன் மூலச்சுருளை கொடுத்துவிடுவதாகவும், அப்பணமுடிப்பை எப்படி அவர் கணவர் செய்யும் தொழிலிலிருந்து அவர் அறியாமல் எடுக்கக் முடியும் என்ற லாவகத்தை  கற்றுக்கொடுப்பதாகவும் கூறி, அவகாசமும் கொடுத்துச்செல்கிறார்.

இவ்வதிரிச்சியிலிருந்து மீள்வதற்குள், மாலை, அவர் கணவரோ, புதிதாக ஒரு ஓட்டுனரை நியமித் திருப்பதாகக்கூறி விஜயகுமாரை கொண்டு நிறுத்துகிறார்.
கள் குடித்த குரங்காக தலை சுற்றுகிறது நாயகிக்கு.

இச்சுழலிலிருந்து அவர் எப்படி மீண்டார், தேங்காயை எப்படி சமாளித்தார், முன்னாள் காதலனை எப்படி தவிர்த்தார், கணவனுக்கு குட்டு வெளிப்பட்ட்தா என்பதை வெள்ளித்திரையில் காண்க.

மொத்தக்கருத்து

ஆரம்பம்முதலே கல்லூரி மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட படமோ என்று நினைக்கத்தோன்றும் காட்சிகள் வேகவேகமாக மாறி குடும்பத்துக்குள் புகுந்து சுவை கூட்டுகிறது.  திரைக்கதையை நம் கலாசாரக் கண்ணோட்டத்தில் எடுத்திருக்கிறார்கள்.  பிற்பாதியில் ஒருவித சோர்வு ஏற்பட்டு, கதை இப்படித்தான் பயணிக்கும் என்று தோன்றிவிடுவது எதிர்பாராத திருப்பங்களை மனதில் ஏற்படுத்த வில்லை.  ஆனாலும்,  சிறு சிறு பாத்திரங்கள் மூலம் எல்லோருடைய படைப்பும் நிறைவைத்தருகிறது.  ஆரம்பக் காட்சிகளில் புஷ்பாவின் உடையலங்காரம் அப்போதிருந்த நாகரீகத்தை காட்டுவதாக இருந்தாலும், கல்லூரி இளைஞர்களை திருப்திப்படுத்தும் நோக்கோடு எடுத்திருப்பது தெரிகிறது.

நடிகர்கள்

ஃபடாபட் ஜயலட்சுமி, எம்.என்.ராஜம், தேங்காய், முத்துராமன், விஜயகுமார் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே தேய்த்திருக்கிறார்கள். சுஜாதாவிற்கு நிறைவான பாத்திரம்.
நன்றாகச்செய்துள்ளார். ஃபடாபட்டின் பாத்திரம் ‘அவள் ஒரு தொடர்கதை’யில் சமூகச்சங்கிலிகளை அறுப்பதாக இருந்தது. இங்கு அதற்கு நேர்மார். எக்காரணம் கொண்டும் ஊறிவிட்ட கோட்பாடுகளை அறுக்கக்கூடாதென்று கூறும் பாத்திரம்.
சுஜாதாவின் உற்ற தோழியாகவும், அவரை காட்டிக்கொடுக்கூடாதென்று நினைக்கும் உன்னதமான பாத்திரத்தில் மிளிர்கிறார். விஜயகுமார் அமைதியாக வந்து போகிறார். தேங்காய்க்கு என்னவோ வில்லத்தனம் அவ்வளவாக இப்படத்தில் பொருந்தவில்லை. ஃபடாபட் தன்னை மாய்த்துக்கொள்வதாக கூறுவது, பின் தேங்காய் திருந்துவது எல்லாம் தமிழ்படத்திற்கென்று காலில் போட்ட சங்கிலிகள்.
செந்தாமரையும், அசோகனும் வந்து போகிறார்கள்.  சிறு பாதிரங்கள் நிறைவாகச்செய்திருக்கிறார்கள்.

இசை

இசை இப்படத்திற்கு ஒரு மிகப்பெரிய பலம். விஜயபாஸ்கர் அவர்களின் இசை மிகவும் மெச்சத்தகுந்த வகையில் போடப்பட்டிருக்கிறது.  “சுகம் ஆயிரம்”, “வரவேண்டும் வாழ்க்கையில்”, “சம்சாரம் என்பது வீணை”, “ஒரு புறம் வேடன், ஒருபுறம் நாகம்” போன்ற இன்றும் பிரபலமாக உள்ள பாடல்களை தன் இனிய இசை மூலம் அள்ளித்தெளித்திருக்கிறார். இவர் ஒரு கன்னட இசையமைப்பாளர், இருப்பினும், ஹிந்தி, மற்றும் எல்லா தெற்கு மாநில மொழிகளிலும் இசைகோர்த்திருக்கிறார். இவரின் இசை எனக்குப்பிடித்தமான ஒன்று.  பல அதிரடி வெற்றி இசை கொடுத்திருக்கிறார். எம்.எஸ்.வி. என்ற புயல் காற்றில் அவ்வளவாக அறியப்படாதவர், இருப்பினும் அற்புதமான இசை வித்தகர்.  சில ஆண்டுகளுக்கு முன்தான் காலமானார். இவரின் மற்ற சில படங்கள்:
தெய்வக்குழந்தை (முதல்படம்), தப்புத்தாளங்கள், ஆடுபுலிஆட்டம், உங்கள் விருப்பம், சௌந்தர்யமே வருக வருக, எங்கம்மா சபதம், யாருக்கு மாப்பிள்ளை யாரோ, பேர் சொல்ல ஒரு பிள்ளை.

பஞ்சுஅருணாசலத்தின் வசனங்களும் கூர்மை, கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகளும் இதம் சேர்ப்பவை.  பஞ்சு அருணாசலமும் பாட்டெழுகியிருக்கிறார்.  பாபுவின் புகைப்பட காட்சிகள் மனதை கொள்ளைகொள்வதோடு, புதுக்கோணப் பரிமாணங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் நல்லதொரு படம் கொடுதிருக்கிறார்.

இப்படம் வந்து ஓடியதா என்று தெரியவில்லை, நான் படித்துக்கொண்டிருக்கும்போது வெளிவந்து, படம் பார்க்க வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. அதற்குப்பின் 25 வருடம் கழித்து இப்போதுதான் பார்த்தேன்.

பாட்டிற்காகவும், அறுவையாக இல்லாத திரைக்கதைக்காகவும் நீங்கள் பார்க்கலாமே! இப்படத்தின் பிரதி இப்போது இந்தியாவில், சென்னையில், சங்கரா ஹாலில் கிடைக்கிறது. முதலில் கிடைக்காமல்  நானும் அசோக்கும் சிரமப்பட்டுத் தேடி எடுத்தோம்.

நம் நாடு


நம் நாடு திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

ஓர் உரையாடல்

வி.எஸ்.சுப்பையா: இந்தப் படம் முதலிலிருந்து கடைசி வரை நல்ல ‘என்டர்டெய்ன்மென்ட்’டா இருக்கு. சில இடங்களில் நம்மையும் அறியாமல் கண்ணீர் விடுமளவு இருக்கு. கதாநாயகன் துரை, புடவை வாங்கித் தரும் இடம், குழந்தைகள் கதாநாயகனுக்குச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்து தரும் இடம்… இதெல்லாம் உதாரணம்.

ஜெயராஜ்: சாதாரணமா கலர் படம் என்றால், வர்ணங்கள் கொஞ்சம் ‘டார்க்’கா இருக்கும். இந்தப் படத்தில் ரொம்ப லைட்டா, மனதுக்குக் குளிர்ச்சி அளிப்பதுபோல இருந்தது.

சீனிவாசன்: ஜெயராஜ் ஓவியர் அல்லவா? வர்ணத்தைப் பத்தி அவர் சொன்னால் சரியா தான் இருக்கும்.

மனோரமா: கதாநாயகன் கதாநாயகி முதன்முதலில் சந்திக்கும் இடம் – ஏதாவது விபத்திலேயோ, அல்லது எங்காவதோதான் சந்திப்பாங்க. இந்தப் படத்திலே அவர்கள் சந்திப்பு புது மாதிரியா இருந்தது. ஒருவருக்கு உதவி செய்யப் போக, தன் பணமே பிக்பாக்கெட் போக, ஹீரோயின் ஹீரோ சொக்காயைக் கேட்கறது, சண்டை போடறது, கடைசியிலே வாட்சை வாங்கிக்கிறது இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த ஹீரோயின் ஹீரோவை அதுவரைக்கும் விரும்பறாளா இல்லையான்னு காட்டாமல், ‘உங்களுக்குப் பெண்ணை நான்தான் ‘செலக்ட்’ பண்ணுவேன்; என்னைக் கேட்காமல் செய்துட்டீங்களே’ன்னு சொல்றது, அதாவது அந்தப் பாத்திரம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதை ஜெயலலிதாவும் ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க. காதலா இல்லாமல் வேற ஒரு விதமா அவங்க காதல் ஆரம்பித்திருக்கிறது நல்லா இருக்கு!

ஜெயராஜ்: இப்பல்லாம் தமிழ்ப் படங்களில், கட்டிப் பிடிச்சுக் காதல் பண்ணும் காட்சி அதிகமா இருக்கும். இந்தப் படத்திலே அப்படி இல்லை.

மனோரமா: ஆமாம்! நான் கூட, ஹீரோ ‘உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கறேன்’னு சொல்லிட்டு, வெளியே ஓடினதும் ரெண்டு பேரும் சேர்ந்து மழையிலே பாடப் போறாங்கன்னு நெனைச்சேன். இதிலே அது இல்லை. அதுவே நல்லா இருந்தது.

ராஜம் கிருஷ்ணன்: இந்தப் படத்திலே பொதுவா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இவர்களைத் தாக்குவதுபோல மனசில் படுது!

சீனிவாசன்: இல்லீங்க. பொதுவா அரசியலில் இருக்கும் எல்லோருக்குமே இது பொருத்தமா இருக்கும். அவர் நகரசபை சேர்மனா இருக்கும்போது, சிலர் தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வராங்க. இதிலே காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுன்னு வேறுபாடே வேண்டாம். ஜனநாயகம் என்றைக்கு ஆரம்பித்ததோ, அன்றை யிலிருந்து இது போன்ற நபர்கள் அரசியலில் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவா சொல்லப் போனா, இது ஒரு நல்ல ‘மாரல் டீச்சிங்’. நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் படம்.

பிரேமா: வசனம் கூட ரொம்ப நல்லா இருக்கு. உதாரணமா, ரங்காராவ், ‘முன் ஜென்மத்திலேயே குழந்தை லஞ்சம் வாங்கியிருக்கும், அதனாலேதான் பிறக்கும்போது கையை மூடிக்கிட்டு பிறக்குது.’

சசிகலா: அப்புறம் எம்.ஜி.ஆர். தன் பிரதர்கிட்டே சொல்றாரே… ‘நான் ஊமைகளுக்காகச் செவிடர்கள்கிட்டே பேசிக்கிட்டு இருந்தேன்’னு, அந்த வசனமும் நல்லா இருந்தது.

ராஜப்பா: படம் ஆபாசம் இல்லாமல், விரசம் இல்லாமல் இருப்பதுதான் எனக்குப் பிடிச்சுது!

சுப்பையா: ‘வாங்கய்யா, வாத்தியாரய்யா‘ன்னு ஒரு பாட்டு வருதே, அதிலே ஏதாவது குறிப்பு இருக்கா? அது யாரையாவது குறிக்குதா? (சிரிப்பு)

மனோரமா: இல்லீங்க. முதல்லே முதியோர் கல்விக்காகத்தானே குப்பத்துக்கு வர்றார் துரை? அப்போ அவர் வாத்தியார்தானே?

ராஜம் கிருஷ்ணன்: படத்திலே காமெடியே அதிகம் இல்லை! நாகேஷ் இருந்தும் கூட அதிக ஹாஸ்யம் இல்லை.

சசிகலா: ஆமாம்! எம்.ஜி.ஆர். சேர்மன் ஆயிட்டபோது நாகேஷ் ஏன் நகரசபைக் கூட்டத்திலே அவர் பின்னாடியே நின்னுக்கிட்டு இருக்கார்?

சீனிவாசன்: செக்ரெட்டரி ஆகியிருப்பார்!

சசிகலா: அது சரி, பின்னாலே ஜெயலலிதா எப்படி இங்கிலீஷ் பேசறாங்க?

மனோரமா: முதியோர் கல்விக்காக வந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கலாம், இல்லியா?

சீனிவாசன்: சரி, நான் ஒண்ணு ஒண்ணு கேட்கிறேன். ஒரு படத் திலே எலந்தப் பழம் வந்தா, உடனே இன்னொரு படத்திலே மாம்பழம், அந்தப் பழம் இந்தப் பழம்னு ஏதாவது வந்தே ஆகணுமா என்ன?

ஜெயராஜ்: அந்தம்மாவைப் போய் கேட்டீங்கன்னா, அவங்க எப்படிச் சொல்லுவாங்க? புரொடியூஸரைத்தான் கேட்கணும். அதிருக்கட்டும், ரங்காராவைப் பத்தி யாரும் சொல்லலையே?

சீனிவாசன்: அவரை நல்ல மனுஷனா பார்த்துப் பார்த்து, இந்த மாதிரி பார்க்க ஆரம்பத்தில் ஒரு மாதிரி சங்கடமா இருந்தது. போகப் போக பிக்கப் பண்ணிடறாரு. அதாவது, பாதாள பைரவி வில்லன் மாதிரி திரும்பிடறாரு!

ராஜப்பா: அசோகன் மட்டும் என்னவாம்?

பிரேமா: ஆமாம்! ரொம்ப அடக்கமா நடிச்சிருக்கார். பகவதியும் நல்லா நடிச்சிருக்கார். சாதாரணமா கலர் படங்களில் டார்க் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு இருப்பார் எம்.ஜி.ஆர். இதிலே ரொம்ப ப்ளீஸிங் கலரைப் போட்டுக்கிட்டு, ரொம்ப இதுவா இருக்கார்!

சுப்பையா: மொத்தத்திலே அறிவுரைகள், கருத்துக்கள் எல்லாம் இருக்கு. அதையும் ‘என்டர்டெயின்மென்ட்’ எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து, நல்லா போர் அடிக்காம எடுத்திருக்காங்க!

சீனிவாசன் விருதுநகர் எம் எல் ஏ (காமராஜரைத் தோற்கடித்தவர்)
மனோரமா
ஜெயராஜ் ஓவியர்

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்

நீரும் நெருப்பும் விகடன் விமர்சனம்


Neerum Neruppumபடம் வந்தபோது – அக்டோபர் 71இல் விகடனில் வந்த விமர்சனம். விமர்சனத்தை எழுதியவர் எம்.கே. ராதா! ராதாதான் இந்தப் படத்தின் ஒரிஜினலான அபூர்வ சகோதரர்கள் படத்தின் ஹீரோ, அதில் அவர் டபிள் ரோல் செய்திருந்தார். நன்றி, விகடன்!

என் விமர்சனத்தை நான் முன்னாலேயே எழுதிவிட்டேன், அதை இங்கே காணலாம்.

பல ஆண்டுகளுக்கு முன், நான் நடித்து வெளியான ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ கதை, இன்று ‘நீரும் நெருப்பும்’ என்ற வண்ணப்படமாக வெளிவந்திருக்கிறது.

முந்தைய படத்தில் நடித்த நடிகன் என்ற முறையிலோ அல்லது ஒரு விமர்சகன் என்ற நோக்கிலோ நான் இப்படத்தைப் பற்றிக் கருத்து கூறவில்லை. ஒரு ரசிகன் என்ற முறையிலேயே இதை எழுதுகிறேன்.

‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நீரும் நெருப்பும்’ ஆகிய இரு படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இரண்டுமே அந்தந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றிருப்பவை.

இந்த வெற்றிக்கு முதல் காரணம் கதைதான். எந்தக் காலத்திலும் எல்லோராலும் ரசிக்கத்தக்க அருமையான கதை இது. விறுவிறுப்பான சம்பவங்களோடு, ஒருவர் உணர்ச்சியை மற்றவரும் சேர்ந்து அனுபவிக்கும் விசித்திரமான இரட்டைச் சகோதரர்களின் மனத்தில் பொங்கும் புயல்தான் கதைக்கு ஜீவநாடி.

‘அபூர்வ சகோதரர்கள்’ படம் கறுப்பு வெள்ளையில், அக்கால கட்டுப்பாட்டுக்கேற்ப 11,000 அடி அளவுக்குத் தயாரிக்கப்பட்டது.

‘நீரும் நெருப்பும்’ படம் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களோடு, வண்ணத்தில், பிரமாண்டமான காட்சி அமைப்புகளோடு கம்பீரமாகவும் விறுவிறுப்பு குன்றாமலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

பழைய படத்தில் நான் சிரமப்பட்டு நடித்திருப்பதைப் போல், இப்படத்திலும் திரு. எம்.ஜி.ஆர். கடுமையாக உழைத்து சிறப்பாக நடித்திருக்கிறார். தம்பியின் (கரிகாலன்) பாத்திரத்தில் அவர் நடிப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது. தனது உள்ளத்துப் புயலைக் குமுறலோடு வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவருடைய நடிப்பின் சிறப்பு சுடர் விடுகி றது. அண்ணன் அடிபடும்போது சிரித்துக்கொண்டே துடிக்கும் இடமும், முடிவில் அடிபட்டு விழுந்திருக்கும்போது அண்ணன் சண்டை போடுவதை ரசிக்கும் காட்சியும் அருமை. சீன வியாபாரி பிரமாதம்.

திருமதி பானுமதி ஏற்ற பாத்திரத்தை இன்னொரு நடிகை ஏற்று நடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் ஜெயலலிதாவும் பாராட்டும்படி நடித்திருக்கிறார். அவருடைய விளையாட்டும் துள்ளலும் நல்ல கலகலப்பைத் தருகின்றன. ‘லட்டு லட்டு’ எனப் பாடி ஆடும் திருமதி பானுமதியின் பிரசித்தி பெற்ற காட்சியில் ஜெயலலிதாவும் சிரமப்பட்டு செய்திருக்கிறார். என்றாலும், எனக்கென்னவோ ‘லட்டு லட்டு’ பாடலின் இனிமை இந்தப் பாட்டில் இல்லை என்றே தோன்றுகிறது. அது பானுமதியின் குரல் மகிமையாகவும் இருக்கலாம்!

மார்த்தாண்டம் பாத்திரத்தை அசோகன் நகைச்சுவை கலந்து செய்திருக்கிறார். டி.கே.பகவதியும், மருதுவாக வரும் மனோகரும், மேக்கப்காரராக வரும் தேங்காய் சீனிவாசனும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ப.நீலகண்டன் அவர்களின் டைரக்ஷன் சிறப்பு பல இடங்களில் மின்னுகிறது.

மனோரமாவின் கொங்கு நாட்டுத் தமிழ் ஒரு சுவாரசியம்.

பாடல்களை என்னால் பிரமாதமாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், எம்.எஸ்.விசுவநாதனின் ரீரிகார்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.

பொதுவாக, தரமான கதையும், பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்திருப்பதில்லை. இந்தப் படத்தில் அவை இணைந்திருக்கின்றன. அதுவே படத்தின் சிறப்பு!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்: நீரும் நெருப்பும் – ஆர்வியின் விமர்சனம்

அடிமைப் பெண் – என் விமர்சனம்



சின்ன வயதில் டென்டு கொட்டாயில் பார்த்த படம். இன்னும் நினைவில் இருப்பவை: எம்ஜிஆர் க்ளைமாக்சில் சிங்கத்துடன் சண்டை போடுவது; பாலைவனக் காட்சிகள்; எம்ஜிஆர் இரட்டை வேஷம் என்றார்களே எங்கே இன்னொரு எம்ஜிஆர் என்று காத்திருந்தது (அது அப்பா எம்ஜிஆர், முதலில் பத்து நிமிஷம் வந்துவிட்டு செத்துப்போய் விடுவார்) அப்போதெல்லாம் அசோகனின் தீவிர பக்தன் ஆகவில்லை.

ஒரு above average சாகசப் படம். சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், அம்மா செண்டிமெண்ட் காட்சிகள், ஜெவின் பெல்லி டான்ஸ், புதுப்பையன் எஸ்பிபிக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாட்டு, திமிராக ஜெ பேச சில காட்சிகள், ஜெ பாட ஒரு பாட்டு, சண்டைக் காட்சிகள் இவற்றை சுற்றி எம்ஜிஆருக்காக வடிவமைக்கப்பட்ட திரைக்கதை.

1969-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்தப் படம். அவரே இயக்கம். பொதுவாக அவர் நடிக்கும் படங்களை – முக்கியமாக அவர் நடிக்கும் காட்சிகளை – அவர்தான் உண்மையில் இயக்குவார் என்று சொல்வார்கள். இந்தப் படத்தில் டைட்டிலிலேயே அவர் இயக்கியதாக வரும். (நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இரண்டும் அவர் இயக்கிய மற்ற படங்கள்) ஜெயலலிதா இரட்டை வேஷம், அசோகன், சந்திரபாபு, சோ, மனோகர், பண்டரிபாய் நடித்து, கே.வி. மகாதேவன் இசையில் வந்த படம்.

அசோகன் (செங்கோடன்?) பண்டரிபாயிடம் தவறான முறையில் நடக்க முயற்சி செய்ய, பண்டரிபாய் அவர் காலை வெட்டிவிடுகிறார். பண்டரிபாயின் கணவர் எம்ஜிஆர் அசோகனுடன் ஒரு காலை கட்டிக்கொண்டு – எம்ஜிஆர் எப்பவும் அப்படித்தான். எதிராளியின் கத்தி உடைந்துவிட்டால் தன கத்தியையும் தூக்கிப் போட்டு விடுவார். எப்படியும் அவர்தான் ஜெயிக்கப் போகிறார் – சண்டை போட்டு ஜெயிக்கிறார். ஆனால் அசோகன் பின்னால் இருந்து அவரை குத்தி கொன்றுவிடுகிறார். எம்ஜிஆரின் clan ஆட்கள எல்லாம் அடிமை. பண்டரிபாய் காட்டில் மறைந்து வாழ்கிறார். பையன் எம்ஜிஆர் ஜெயிலில் கூனனாக வளர்கிறார். எப்படியோ ஆற்றில் குதித்து தப்பி, ஜெவிடம் அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் கம்பு போன்ற அரிய உண்மைகளை கற்று கூன் போய் வீரனாகிறார். பிறகு எப்படி பாலைவனத்துக்கு போகிறார் என்று மறந்துவிட்டது. (ரொம்ப முக்கியம்!) அங்கே போய் ஏமாறாதே ஏமாற்றாதே என்று ரசிகர்களை ஏமாற்றாமல் பாடுகிறார். பிறகு இன்னொரு திமிர் ஜெவிடம் மாட்டிக் கொள்கிறார். அந்த ஜெவும் இவர் மேல் காதல் ஆகிவிட ஆயிரம் நிலவை கூப்பிடுகிறார். பிறகு அந்த ஜெவுக்கு எல்லாம் நாடகம் என்று தெரிய அவர் கடுப்பாகி இவரை அசோகனிடம் காட்டி கொடுக்கிறார். அசோகன் பப்ளிக்காக அம்மாவை கற்பழிக்கப் போவதாக அறிக்கை விட (படம் பார்த்தபோது இந்த இடம் புரியவில்லை) உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது என்று பாட்டு பாடிக் கொண்டே கோட்டைக்குள் நுழைந்து சிங்கத்தை கொன்று அம்மாவிடம் உருகி சுபம்!

எம்ஜிஆருக்கு காட்சிகளை உருவாக்க தெரிந்திருக்கிறது. சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், ஜெய்ப்பூர் அரண்மனை, ஜெயில், ஆற்றில் தப்பி போவது எல்லாம் நன்றாக அமைத்திருப்பார்.

சந்திரபாபு, சோ இருவர் இருந்தும் சிரிப்பு வருவது கஷ்டம்.

ஆயிரம் நிலவே வா ஒன்றுதான் ஏ க்ளாஸ் பாட்டு. ஏமாறாதே ஏமாற்றாதே, காலத்தை வென்றவன் நீ, தாயில்லாமல் நானில்லை, அம்மா என்றால் அன்பு, உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது எல்லாம் சுமார்தான். ஆனால் ஆயிரம் நிலவே வா பாட்டில் மிச்ச எல்லா குறையும் மறந்துவிடுகிறது.

பார்க்கலாம். டைம் பாஸ் படம். எம்ஜிஆருக்கு இது ஒரு க்ளாசிக் படம். பத்துக்கு 6.5 மார்க். C+ grade.

அடிமைப் பெண் – விகடன் விமர்சனம்


அடிமைப் பெண்

அடிமைப் பெண்

அடிமைப் பெண் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். அன்றைய பிரபலங்கள் கூடி தங்கள் கருத்துகளை சொல்கிறார்கள். இப்போது தெரிவது நடிகை தேவிகாவும், டென்னிஸ் வீரர் கிருஷ்ணனும்தான். எஸ்.பி.பி. பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவனியுங்கள்! விகடனுக்கு நன்றி, ஓவர் டு விகடன்!

கிருஷ்ணன்: இது ஒரு புது மாதிரியான படம். இந்த மாதிரி படத்தை தமிழிலே நான் பார்த்ததில்லே!

லலிதா: அவர் சொல்றது ஒரு வகையில் கரெக்ட்தான். ஆனால், சண்டைக் காட்சிகள் கொஞ்சம் அதிகமா இருப்பதாக எனக்குப் படுது.

சேது: ஆனா, பல பேர் அதை ரசிக்கிறாங்க! ஜெய்ப்பூர், பாலைவனம் இதைப் பத்தி எல்லாம் நான் கேள்விதான் பட்டிருக்கேன்; இந்தப் படத்திலேதான் பார்த்தேன்.

ஜெயராம்: ‘பென்ஹர்’, ‘ஸாம்ஸன் அண்ட் டிலைலா’ போன்ற ஆங்கிலப் படங்களில்தான் இந்த மாதிரி வெளிப்புறக் காட்சிகள் வந்ததா நான் நினைக்கிறேன்.

ராமன்: ஜெயலலிதா டான்ஸ் பண்றாங்களே! அதிலே கூட பல பாணிகள் நல்லா இருந்தது. ‘ஈஜிப்ஷியன் பெல்லி டான்ஸ்’… ஐ லைக் இட்!

சேது: போட்டோகிராபியும், கலரும் ரொம்ப நல்லா இருந்தது.

தேவிகா: ஆமாம். காமிராமேன் ராமமூர்த்தி எடுத்த ஒண்ணோ ரெண்டோ கலர் படங்களில் நான் நடிச்சிருக்கேன். எல்லாத்தையும் விட இந்தப் படத்தை இவ்வளவு நல்லா எடுத்திருக்காரே, இதில் நான் நடிக்கலையேன்னு வருத்தப்படறேன்.

கமலம்: எனக்கு ஜெயலலிதாவோட நடிப்பும் பிடிச்சுது; அவங்க சொந்தக் குரல்ல பாடற பாட்டும் பிடிச்சுது.

தேசிகாமணி: ஆமாம்! ஆனால் மனசிலே பதியற பாட்டு…

பல குரல்கள்: ‘ஏமாற்றாதே… ஏமாறாதே..!’

சேது: அந்தப் பாட்டு பாடற இடம், டான்ஸ்… எல்லாமே நல்லா இருந்தது.

ஜெயராம்: பாலசுப்பிரமணியம் பாடற பாட்டு..?

கமலம்: ‘ஆயிரம் நிலவே’ தானே! குரல் கொஞ்சம் புதுமையா இருந்தது.

தேசிகாமணி: சண்டைக் காட்சிகளை ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. சிங்கத்தோடு சண்டை போடும் போது, எம்.ஜி.ஆர். உயிரைக் கூட மதிக்காம நடிச்ச மாதிரி தெரியுது.

தேவிகா: நான் முன்னே இன்னொரு படத்திலே எம்.ஜி.ஆர். புலிச் சண்டை பார்த்தேன். ஆனால், இந்தச் சண்டை அதைவிட ரொம்ப இயற்கையா இருக்கு. அதிலும் அந்தச் சிங்கம் நாக்கை இப்படி அப்படிப் பண்ணி…இந்தப் படத்திலே சிங்கம்கூட அருமையா ஆக்ட் பண்ணியிருக்கு.

லலிதா: எல்லா காட்சியையும் விட, சோ விஷம் மாத்தற காட்சிதான் எனக்கு ரொம்ப பிடிச்சுது.

கமலம்: பண்டரிபாய் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையா தன் பிள்ளையைப் பார்க்கணும்னு ஆசைப்படறாங்க. ஜெயலலிதா தடுத்துடறாங்க. ஆனால், அந்தப் பிள்ளை நேரே வந்ததும் ‘நான் உன்னைப் பார்க்க விரும்பலே’னு சொல்றாங்க. அங்கே ஒரு மாதிரி குழப்பமா இருக்கே?

கிருஷ்ணன்: முதல் தடவை தன் மகனைப் பார்க்கணும் என்கிற ஆசை அந்தத் தாய்க்கு வருது! அப்புறம், ‘அவன் என் மகன் மட்டும் அல்ல; ஊருக்கே உழைக்க வேண்டிய மகன். பலரின் அடிமைத்தனத்தைப் போக்க வேண்டியவன்’ என்கிற எண்ணம் வந்ததும், பார்க்க மாட்டேன்னு சொல்லிடறாங்க. ஒரு குழப்பமும் இல்லே!

ஜெயராம்: அந்த பேபி ராணி… ஆறு விரல் பாயின்ட்… கதையிலே புகுத்தப்பட்ட சின்ன, நல்ல பாயின்ட். ஆனால், எந்த நாட்டிலேருந்து எந்த நாட்டுக்குப் போறாங்க என்பதிலெல்லாம் கொஞ்சம் குழப்பம் இருந்தது.

கமலம்: கரெக்ட்! அந்த ரெண்டு ஜெயலலிதா மாறுகிற இடம் ரொம்பக் குழப்பம். திடீர்னு அசோகனோடு பேசறது எந்த ஜெயலலிதான்னு புரியாம கஷ்டப்பட்டேன்.

சேது: எனக்குப் படத்திலே எங்கேயும் தொய்வு தெரியலே! கண்ணுக்குக் குளிர்ச்சியா ஏதோ இங்கிலீஷ் படத்தோட போட்டி போடற தமிழ்ப் படம் மாதிரி இருந்ததுன்னு சொல்வேன்.

தமிழ் தயாரிப்பாளர்கள்


போன பதிவு ஏவிஎம் செட்டியார் அளித்த ஒரு பழைய பேட்டி. செட்டியார் பற்றி நானும் ஏதாவது எழுதலாம் என்று பார்த்தேன், எனக்கு தயாரிப்பாளர்களை பற்றி அவ்வளவாக தெரியாது. அதே நேரத்தில் நண்பர் சூர்யா தன் தளத்தில் சாண்டோ சின்னப்பா தேவரை பற்றி ஒரு அருமையான பதிவு போட்டிருப்பதை பார்த்தேன். சரி, தயாரிப்பாளர்களை பற்றி பொதுவாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ் தயாரிப்பாளர்களில் எஸ்.எஸ். வாசன், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம், செட்டியார், தேவர் நான்கு பேரும் பல வருஷம் கொடி கட்டி பறந்தவர்கள்.

ஏவிஎம் செட்டியார்

ஏவிஎம் இத்தனை வருஷம் கழித்தும் நன்றாக இருப்பது பெரிய விஷயம். செட்டியார் நடுவில் ஒரு பத்து வருஷம் படமே வேண்டாம் என்று இருந்ததாகவும், அவர் இறந்த பிறகுதான் சரவணன் மீண்டும் முரட்டுக் காளை படத்துடன் அடுத்த இன்னிங்சை ஆரம்பித்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கென்னவோ பெரிய செட்டியார் இருந்தபோதுதான் நல்ல படங்கள் வந்தன என்று தோன்றுகிறது. நாற்பதுகளின் பிற்பகுதியிலிருந்து அறுபதுகளின் முற்பாதி வரைக்கும் பல நல்ல படங்கள் வந்தன. சபாபதி, நாம் இருவர், ஓரிரவு, வாழ்க்கை, பராசக்தி, பெண், அந்த நாள், நானும் ஒரு பெண், அன்னை, மேஜர் சந்திரகாந்த் ஆகியவை குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை. சரவணன் வந்த பிறகு மசாலா படங்கள்தான் வருகின்றன.

எஸ்.எஸ். வாசன்

எஸ்.எஸ். வாசன் ஒரு பத்து வருஷம் கொடி கட்டி பறந்தார். மங்கம்மா சபதம், சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், அவ்வையார் எல்லாம் பெரும் வெற்றி. நாற்பதுகளிலேயே கோடீஸ்வரர் ஆகிவிட்டார். அவருக்கு அப்புறம் படம் எடுப்பதில் இண்டரஸ்ட் போய்விட்டது என்று நினைக்கிறேன். இரும்புத் திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஒளி விளக்கு மாதிரி படங்கள் வந்தாலும், ஜெமினி ஃபில்ம்ஸ் அறுபதுகளிலேயே அமுங்கிவிட்டது.

டி.ஆர். சுந்தரம்

டி.ஆர். சுந்தரம் பெரிய ஆள். பாரதிதாசன், எம்ஜிஆர், கலைஞர், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் எல்லாரும் அவரிடத்தில் வேலை செய்திருக்கிறார்கள். மந்திரி குமாரி, திரும்பிப் பார், அலி பாபாவும் நாற்பது திருடர்களும் மாதிரி படங்களை எடுத்திருக்கிறார். ஆனால் அறுபதுகளில் வல்லவன் சீரிஸ் – வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன் மாதிரி – படங்கள் மட்டுமே எடுத்தது ஏன் என்று தெரியவில்லை.

தேவர்

இவர்கள் எல்லாம் கொடி கட்டி பறந்தாலும், நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வட்டத்தில் name recognition இருந்த ஒரே தயாரிப்பாளர் தேவர்தான். தேவரின் மிருகப் படங்கள் எங்கள் வட்டத்தில் பெரிய ஹிட். புலியையும், சிங்கத்தையும், யானையையும் நாங்கள் வேட்டைக்காரன் மாதிரி ஏதாவது படத்தில் பார்த்தால்தான் உண்டு. (உயிர் காலேஜ் எல்லாம் போனதில்லை.)

தேவர் படங்கள் எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய காவியங்கள் இல்லை. அவருடைய ஆடியன்சுக்கு மன அளவில் ஒரு எட்டு வயதுதான் இருக்கும். எம்ஜிஆர், முருகன், மிருகங்கள் இவற்றை வைத்தே காலத்தை ஓட்டியவர். ஆனால் ஒரு நாளும் படம் பார்ப்பார்களை ஏமாற்றியதில்லை. அவர் கடை சமாசாரம் எப்படி இருக்கும் என்பது தெள்ளத்தெளிவாக இருந்தது. அது பிடிக்காதவர்கள் போக வேண்டாம்!

எம்ஜிஆரை வைத்து அதிக படங்கள் எடுத்தவர் அவர்தான் என்று நினைக்கிறேன். எதுவும் எம்ஜிஆரின் சிறந்த படங்கள் லிஸ்டில் கூட வராது. வேட்டைக்காரன், நல்ல நேரம், தேர் திருவிழா, முகராசி இந்த மாதிரி படங்கள் நினைவு வருகின்றன. வேட்டைக்காரன், நல்ல நேரம் இரண்டும் பிரமாதமாக ஓடியன. இந்த நாலு படமும் தண்டம், இப்போது வேறு எதுவும் நினைவு வரவில்லை. எம்ஜிஆருக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்தது. இருவரும் ஒருவரால் ஒருவர் வளர்ந்தவர்கள். எம்ஜிஆர் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரால் இனி பேச முடியுமா, அவருக்கு இனி மேல் சினிமா வாழ்க்கை இருக்கிறதா என்று எல்லாரும் சந்தேகப்பட்டார்களாம். இவர் எம்ஜிஆரை பார்க்கப் போனாராம். போனவர் அடுத்த படம் நடிக்க வேண்டும் என்று ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தாராம்!

அவருக்கென்று ஒரு ஆஸ்தான டீம் இருந்தது. கே.வி. மகாதேவன், எம்.ஏ. திருமுகம், தூயவன், ஆரூர் தாஸ், நாகேஷ், மேஜர், அசோகன் இல்லாமல் அவர் சாதாரணமாக படம் எடுப்பதில்லை.

ஆங்கிலமும் தெரியாமல், ஹிந்தியும் தெரியாமல், ஹிந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தார்.

அவருடைய படங்களில் தெய்வம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியது. படம் நன்றாக இருக்கும் என்று இல்லை, தண்டம்தான். ஆனால் கோவில்களின் அந்த கால நிலையை ஒரு டாக்குமெண்டரி போல நன்றாக எடுத்திருப்பார்.

இவர்களைத் தவிரவும் பல தயாரிப்பாளர்கள் குறிப்பிட வேண்டியவர்கள். எம்ஜிஆர் புகழிலே கொஞ்சம் மங்கி தெரியும் பந்துலு, ஜூபிடர் சோமு, பக்ஷிராஜா ஃபில்ம்ஸ் ஸ்ரீராமுலு நாயுடு, தமிழில் பல வெற்றி படங்கள் எடுத்தாலும் தெலுங்கு கம்பெனியான விஜயா பிக்சர்ஸ் நாகி ரெட்டி, எம்ஜிஆர், சிவாஜி, கலைஞர், பி.எஸ். வீரப்பா, முரசொலி மாறன், ஸ்ரீதர், ஜி.என். வேலுமணி, ஏ.பி. நாகராஜன், பாலச்சந்தர் படங்களை தயாரித்த கலாகேந்த்ரா, பாலாஜி, பிற்காலத்தில் ஜீவி, ஆர்.பி. சௌத்ரி, கமல், கோவைத் தம்பி, பிரகாஷ் ராஜ், என்று சொல்லி கொண்டே போகலாம். ஆனால் இவர்களில் பலருக்கும் வேறு முக்கியமான முகங்கள் இருந்தன – எம்ஜிஆரை தயாரிப்பாளர் என்றா நினைவு வைத்துக் கொள்கிறோம்? அப்படி இல்லாதவர்கள் பலரும் நிலைத்து நிற்கவில்லை.

இன்றைக்கு இவர்களுக்கு சமமாக சொல்லக் கூடிய கோலிவுட் பாதுஷாக்கள் இருக்கிறார்களா? உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்!

தேவரை பற்றி சாரதா இன்னும் விவரங்கள் தருகிறார்.

மேலும் சில படங்கள்: தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், குடும்பத் தலைவன், தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், தொழிலாளி, கன்னித் தாய், தனிப் பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, காதல் வாகனம் ப்ளஸ் நீங்கள் சொன்ன படங்கள் நாலு. இவற்றில் சில மட்டும் 100 நாட்கள் என்ற எல்லைக்கோட்டைத் தொட்டன. பெரும்பாலானவை 50-ஐக்கூட கடக்கவில்லை. அவர் தன் வாழ்நாளில் தமிழில் கண்ட ஒரே வெள்ளிவிழாப்படம் ஆட்டுக்கார அலமேலு மட்டும்தான். சில படங்கள் பெயரை மட்டும் மாற்றி விட்டுப் பார்த்தால் ஒரே மாதிரி இருக்கும். திருக்குறள் மாதிரி இரண்டு வரிக் கதைகளைத்தான் படமாக எடுப்பார். தேவர் படத்தின் கதையை ஒரு பஸ் டிக்கட்டின் பின்பக்கம் எழுதிவிடலாம் என்று கோலிவுட்டில் ஒரு வாசகம் உண்டு.

ஜெய்சங்கரை வைத்து கெட்டிக்காரன், நேர்வழி போன்ற குப்பைப் படங்களையும், அக்கா தங்கை, பெண் தெய்வம், மாணவன் போன்ற நல்ல படங்களையும் எடுத்தவர். ரவிச்சந்திரனை வைத்து மகராசி என்ற படத்தையும் எடுத்தார். சிவகுமாரை கதாநாயனாக வைத்து ஆட்டுக்கார அலமேலு, வெள்ளிக்கிழமை விரதம், (பழைய) ஸ்ரீகாந்தை நாயகனாகவும் பிரமீளாவை நாயகியாகவும் போட்டு கோமாதா என் குல மாதா ஆகிய வெற்றிப்படங்களை எடுத்தார். இடையிடையே ஏ.வி.எம்.ராஜனை வைத்து துணைவன், தெய்வம், திருவருள் என் பக்திப்படங்களின் பக்கமும் தலைநீட்டினார்.

ரஜினியை வைத்து தாய்மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம், தாய் வீடு மற்றும் கமலை வைத்து தாயில்லாமல் நானில்லை (எத்தனை தாய்கள்), ராம் லக்ஷ்மண் போன்றவை அவர் மறைவுக்குப்பின் அவரது வாரிசுகளால் தயாரிக்கப்பட்டவை. கடைசியாக ஆனந்த பாபுவை வைத்து தர்மம் என்ற படம் எடுக்கப்போக, படம் அட்டர் ஃப்ளாப். தேறவேயில்லை. தேவர் பிலிம்ஸ் அத்துடன் நொடித்துப்போனது. இதனிடையே வாரிசுகளுக்குள் பாகப்பிரிவினை தலைதூக்க தேவர் பிலிம்ஸ் மற்றும் தண்டாயுதபாணி பிலிம்ஸ் மூடுவிழா கொண்டாடியது.

சின்னப்பா தேவர் யாரையும் எளிதில் நம்பி விடுவார். யாரும் அவரை சுலபமாக ஏமாற்றிவிடலாம். கே.வி.மகாதேவன் கூட வெறும் நாலு மெட்டுக்களை வைத்துக்கொண்டு அவருக்கு நாற்பது பாட்டுக்கள் போட்டுக்கொடுத்து விடுவார். தேவரின் நல்ல மனதுக்கு அவை பாப்புலராகிவிடும். இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ் ஜோடியை கண்ணதாசன் தேவருக்கு அறிமுகப்படுத்த, தேவர் அவர்களுக்கு படங்களில் வாய்ப்புக்கொடுத்ததால், படங்களில் டைட்டில்களில் ‘கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்’ என்று போட்டு தங்கள் நன்றியை காணிக்கையாக்கினர்.

எனக்கு தேவர் எடுத்த எம்ஜிஆர் படங்கள் பெரிய ஹிட்கள் என்று நினைவு. என் impression டெண்டு கோட்டையில் இருந்த ரெஸ்பான்சை பார்த்து ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் சாரதா என்னை விட விஷயம் தெரிந்தவர். ஞாபகம் வராத எம்ஜியார் படங்களின் பேரை எடுத்து தந்த சாரதாவுக்கு நன்றி! எனக்கு அசோகன் அண்ணனாக வரும் படம் (தாய்க்கு தலை மகன்), அசோகன் ஒரு மாஸ்க் போட்டுக்கொண்டு வரும் படம் (தர்மம் தலை காக்கும்) என்றுதான் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. எம்ஜிஆர் ஒரு படத்தில் பறந்து கூட போவார் என்று ஞாபகம். என்ன படமோ தெரியவில்லை.

சாரதா சொல்வது போல பாட்டுகள் – எம்ஜிஆர் படத்தில் கூட – பிரமாதமாக இருக்காது. சூர்யா சொல்வது போல மூன்று மாதத்தில் படம் எடுப்பதால் இருக்கலாம்.

ஞாபகம் வரும் இன்னும் சில படங்கள் – நீலமலை திருடன் (ரஞ்சன்), சொர்க்கம் நரகம், இளஞ்ஜோடிகள், தர்மத்தின் தலைவன். கோமாதா என் குல மாதா ஹிந்தியிலும் காய் அவுர் கௌரி என்று வந்தது.

தொகுக்க்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஆரூர் தாஸ் தேவரை நினைவு கூர்கிறார்
பா.தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் என்ற புத்தகம் பற்றி பதிவர் சூர்யா
தேவர் புத்தகம் பற்றி முகில், இதே புத்தகம் பற்றி பா. ராகவன்
தேவர் பற்றி முரளி கண்ணன்

நினைத்ததை முடிப்பவன் – என் விமர்சனம்


படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனத்தை இங்கே காணலாம்.

அறுபதுகளில் நல்ல கதை என்று கருதப்பட்டிருக்கும். படம் 75-இல்தான் வந்தது. எம்ஜிஆர், நம்பியார், அசோகன், லதா, மஞ்சுளா, ஊர்வசி சாரதா நடித்தது. எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் நீலகண்டன் இயக்கியது. எம்எஸ்வி இசை. ஹிந்தியில் ராஜேஷ் கன்னா நடித்து சச்சா ஜூட்டா என்று வந்தது.

மேக்கப்போ, காமெராவோ, இல்லை ரொம்ப நாள் தயாரிப்பில் இருந்த படமோ, எம்ஜிஆரிடம் இந்த படத்தில் கொஞ்சம் துள்ளலும் இளமையும் தெரிகிறது. இதற்கு முன்னால் வந்த உரிமைக்குரல், ஊருக்கு உழைப்பவன், இன்று போல் என்றும் வாழ்க மாதிரி பல படங்களில் அவர் முகத்தில் வயதாகிவிட்டது நன்றாக தெரியும்.

இரண்டு எம்ஜிஆர். ஒருவன் நொண்டி தங்கை சாரதாவுக்கு கல்யாணம் செய்ய சென்னைக்கு வரும் பாண்ட் மாஸ்டர். இன்னொருவன் திருடன். போலீஸ் அதிகாரி மஞ்சுளா, திருடனின் அசிஸ்டன்ட் லதா இருவரும் ஜோடி. இருவரும் அந்த காலத்துக்கு எக்கச்சக்க கவர்ச்சி. கெட்ட எம்ஜிஆரிடம் ஒரு மருந்து – சாப்பிட்டால் எல்லாரும் அப்படியே சிலை மாதிரி நின்றுவிடுவார்கள். சின்ன பையனாக இருந்தபோது இந்த சீன மிக த்ரில்லிங்காக இருந்தது. வழக்கம் போல ஆள் மாறாட்டம், நல்ல எம்ஜிஆரை கெட்ட எம்ஜிஆர் ப்ளாக்மெய்ல் செய்து தன்னை போல நடிக்க வைக்கிறார். கடைசியில் அவருக்கு தண்டனை, ஜோடிகள் இணைகின்றன, சாரதா போலீஸ் அதிகாரி நம்பியாரை கல்யாணம் செய்து கொள்கிறார், சுபம்!

படம் வேஸ்ட். பார்க்க வேண்டும் என்றால் சிக்கென்று இருக்கும் மஞ்சுளா, கொழுக் மொழுக் லதாவுக்காகத்தான். தானே தானே தன்னான்த்தானா, ஒருவர மீது ஒருவர் சாய்ந்து பாட்டுகளில் மஞ்சுளா கலக்குவார். இன்னும் இரண்டு பாட்டுகள் – பூ மழை தூவி, கண்ணை நம்பாதே. பாட்டுகள் பரவாயில்லை. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அழகான காஷ்மீரில் எடுக்கப்பட்டது.

பத்துக்கு ஆறு மார்க். அதுவும் மஞ்சுளா,லதா, பாட்டுகள், காஷ்மீருக்காகத்தான். C- grade.

நினைத்ததை முடிப்பவன்


விகடனில் படம் வெளியானபோது வந்த விமர்சனம். (ஜனவரி 6, 1975) நன்றி, விகடன்!

உருவத்தில் தன்னைப் போல் இருக்கும் நாட்டுப்புற பாண்ட் மாஸ்டரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்றபடி ஆட்டி வைக்கும் வைரக் கொள்ளைக்காரன், அவன் சுய உருவத்தைப் புரிந்து கொள்ளாமல் சொன்னதை அநாயாசமாகச் செய்து முடிக்கும் அசட்டு பாண்ட் மாஸ்டர் என முரணான இரண்டு பாத்திரங்கள். இரண்டு பேருக்கும் இரண்டு கதாநாயகிகள், ஒரு தங்கை, போலீஸ் அதிகாரிகள். இத்தனை பேர் போதாதா, நினைத்ததை முடிப்பதற்கு?

வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, இயற்கையாக நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அசட்டுத்தனம், ஆவேசம், காதல், பாசம் அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதற்கு வைரக் கொள்ளைக்காரன் ரஞ்சித்தை விட பாண்ட் மாஸ்டர் சுந்தரத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரண்டு பேரும் கடைசியில் மோதிக் கொள்ளும்போது பொறி பறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அலட்சியமாக அவர்கள் மோதிக் கொள்வது கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொள்ளைக்காரன் யார் என்பதை நிரூபிக்கும் நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி, வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த நல்ல திருப்பம்.

லதாவுக்கும் மஞ்சுளாவுக்கும் மிதமான பாத்திரங்கள். நெருக்கமான காட்சிகளில் இருவருமே பின்வாங்கவில்லை. சி.ஐ.டி. அதிகாரியான மஞ்சுளாவின் மாத்திரை சமாசாரம் மணியான நகைச்சுவைக் கட்டம். சாரதாவிடம் பாசத்தைப் பிழிந்தெடுத்துத் தரும் துடிப்பான நடிப்பு! ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா? நம்பியாருக்கும் அசோகனுக்கும் போலீஸ் அதிகாரிகளாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது.

பாடல்களில் இனிமை ‘பூ மழை தூவு’கிறது. வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் கேமரா வெகு கவர்ச்சியாக இயங்கியிருக்கிறது. டைரக்டர் நீலகண்டன் அவர்களின் சாமர்த்தியம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. சபாஷ்!

நிறைவான பொழுதுபோக்கு.