உத்தமபுத்திரன் – விகடன் விமர்சனம்


16-2-58 அன்று விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

முனுசாமி – மாணிக்கம்

மாணி: ஏண்ணே! நீ ‘உத்தமபுத்திரன்‘ பார்த்துட்டியா?

முனு: இல்லியே! நீ பார்த்துட்டியா? கதை என்ன?

மாணி: ஒரு ராணிக்குக் குழந்தை பிறக்குது. இது ராணியின் தம்பி நாகநாதனுக்குப் பிடிக்கலே. குழந்தையைக் கொல்ல ஏற்பாடு பண்றான். ராணிக்கு உடனே இரண்டாவதா, ஒரு குழந்தை பிறக்குது.

முனு: சரிதான். கொல்லச் சொன்ன அந்தக் குழந்தை என்ன ஆவுது?

மாணி: வழக்கம் போல அந்தக் கையாளு அந்தக் குழந்தையைக் கொல்லலே! ரகசியமா தன் பெண்சாதிகிட்ட கொடுத்து வேற இடத்துக்கு அனுப்பிடறான். ராஜா வீட்டுக் குழந்தை குடிசைலே நல்லவனா வளருது. அரண்மனையிலே இருக்கிற குழந்தையை சேனாதிபதி நாகநாதன் குடிகாரனா வளக்கறாரு; அக்கிரம ஆட்சி நடத்தறாரு.

முனு: சரி, நடிப்பைப் பற்றிச் சொல்லு!

மாணி: குடிசையில வளர்ற சிவாஜி கணேசன், குடிகாரனா வளர்ற சிவாஜிகணேசன்… ஆளு ஒண்ணுன்னாலும் வேஷம் இரண்டில்லே? ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிடறாங்க! ரெண்டு வேஷம் என்ன அண்ணே, 20 வேஷம் குடுத்தா லும் தத்ரூபமா நடிப்பாரு அவரு!

முனு: சரி; ஹீரோயின் எப்படி?

மாணி: பத்மினியாச்சே, கேக்கணுமா? மேக்கப் அள்ளுது; நடை, உடை, ஜடை மூணும் துள்ளுது; நடிப்பு வெல்லுது! ஆஹா! ஒரு சீன்லே நீளமா சடை போட்டு பூ வச்சுப் பின்னிக்கிட்டு வருது பாரு!

முனு: நம்பியாருக்கு என்ன வேஷம்?

மாணி: அவர்தான் ராணியின் தம்பி. வழக்கம் போல அமர்க்களப்படுத்தியிருக்காரு.

முனு: நம்பியார் வராரு இல்லே! அப்ப, கத்திச்சண்டை இருக்குமே?

மாணி: அது மட்டும் இல்லே! இரண்டு சிவாஜிகளுக்குள்ளேயே சண்டை நடக்குது!

முனு: காட்சி ஜோடனை?

மாணி: இயற்கைக் காட்சிகள் பிரமாதம்! மைசூர் பிருந்தாவனத்திலே ஒரு டான்ஸ் எடுத்திருக்காங்க. அற்புதம்! உயரமான கோட்டைச் சுவரிலேருந்து குதிரை மேல குதிக்கிறாரு சிவாஜி! நம்பவே முடியலே அண்ணே!

முனு: குதிரை தாங்குதா இல்லையா? அப்புறம் நீ ஏன் கவலைப்படறே? சரி, படம் எப்படி?

மாணி: ஒரு சில குறைங்க இருந் தாலும், நிச்சயமா இது ஒரு நல்ல படம் அண்ணே!

சிரித்து வாழ வேண்டும் – விகடன் விமர்சனம்


இன்னுமொரு விகடன் விமர்சனம், நன்றி விகடன்!

டிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல டைரக்டர் திரு. ப. நீலகண்டன், நடிகை திருமதி ஷீலா, கலாக்ஷேத்ரா நாட்டியக் கலைஞர் திருமதி கிருஷ்ணவேணி, டாக்டர் திருமதி சரோஜா, வர்த்தகர் ஜனாப் வதூது, வழக்கறிஞர் திரு. பழனியப்பன், தொழில் துறைப் பணியாளர் திரு. பாலசுப்ரமணியம், கல்லூரி மாணவி குமாரி உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ப.நீலகண்டன்: படத்தைப் பார்த்த உடனேயே இது ஒரு ஜனரஞ்சகமான படம்னு சொல்லத் தோணித்து. கதையைச் சொல்லியிருக்கிற முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லாம, ஒழுங்கா, நேரடியாகச் சொல்லுகிற முறைக்காக டைரக்டரைப் பாராட்டணும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரைக்கும், எந்தக் கதையாக இருந்தாலும், தான் சொல்ல விரும்புகிற சில நல்ல கொள்கைகளை, எந்த இடத்திலேயாவது புகுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அது அந்தக் கதையோடு ஒட்டுகிற மாதிரியாகப் பண்றாரு பாருங்க, அது அழகாக இருந்தது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் ‘நமாஸ்’ பண்றாரு; அதே நேரத்திலே ஒரு பெண் அதே வீட்டிலே, முருகன் படத்துக்கு வணக்கம் பண்ணிக்கிட்டிருக்கா. மத சுதந்திரம் உண்டு என்கிறதை அது நல்லா எடுத்துக் காட்டுது.

பழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லியிருக்காங்க.

உதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர்ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ்பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.

கிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.

வதூது: ஆமாம்! எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எல்லாமே இயற்கையாக இருக்கிறது.

ப.நீலகண்டன்: ‘மலைக்கள்ளன்‘லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.

கிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே… நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.

ஷீலா: இந்தப் படத்திலே எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்புக்கு அடுத்தபடியா என்னைக் கவர்கிறது ‘எடிட்டிங்’. அதுவும் அந்த ரேப்பிங் ஸீனில் எடிட்டிங் ரொம்ப நல்லா இருந்தது. அதேபோல, லதாவின் நடிப்பும் ரொம்ப நல்லா இருந்தது.

வதூது: டைரக்டரோட திறமைக்கு எடுத்துக்காட்டா அந்த ரேப் ஸீன்லே ரிக்கார்டு வால் யூமை அதிகப்படுத்துவதுபோல் காட்டுவது நன்றாக இருக்கிறது. ரேப் முடிஞ்சதும் ரிக்கார்டில் ஊசி தேய்ந்துகொண்டிருப்பது நல்ல டெக்னிக்!

ஷீலா: ஸ்லோமோஷன்லே எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அந்த ஸ்லோ மோஷன் சண்டை இன்னும் கொஞ்சம் கூட இருக்காதா என்று இருக்கிறது.

கிருஷ்ணவேணி: ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாட்டுக்கு, எம்.ஜி.ஆர். கையில் டேப் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறாரே, அது பிரமாதம். அதுக்காகவே இரண்டாம் தடவை அந்தப் படத்தைப் பார்த்தேன்.

ஷீலா: காமெடின்னு தனி டிராக்கே இல்லை. இது தமிழ்ப் படத்திலே ரொம்ப அபூர்வம். ஆனால், நகைச்சுவை இல்லாத குறையே தெரியலை.

சரோஜா: தேங்காய் சீனிவாசன் கேடியாக வர்ற காட்சிகள் தமாஷாக இருக்கே!

கிருஷ்ணவேணி: நம்பியார் பேசுறதே சில இடத்திலே நகைச்சுவையா இருக்கு. தான் செய்த கொலைகளைப் பற்றி அவர் கூலாகப் பேசுவது தமாஷ்தான்!

(லதா கத்தி தீட்டும் பெண்ணாக வரும்போது போட்டுக்கொண்டிருக்கிற உடையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பொதுவாக, அந்த உடை வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று கருதினார்கள். உப பாத்திரங்கள் ராகவன், தேங்காய் சீனிவாசன், மோதிரத்தைக் கழற்றும் வீரப்பன் அனைவருமே நெஞ்சை அள்ளும்படி நன்றாக நடித்திருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். பாடல் களில் ‘கொஞ்ச நேரம்‘, ‘பொன் மனச் செம்மல்‘ ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது.)

உதயா: ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

பாலசுப்ரமணியம்: ஒரு பெரிய சரித்திரப் படத்தைப் பார்க்கிற உணர்ச்சி இருந்தது. ரொம்ப ரிச்காஸ்ட்யூம்ஸ்; ரிச் ஸெட்ஸ்; இந்த மாதிரி ஒரு படம் சமீபகாலத்திலே பார்க்கலேன்னு சொல்லலாம்.

ப.நீலகண்டன்: அது, காலம் சென்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பிரதிபலிப்புன்னுதான் சொல்லணும். பிரமாண்டமா தயாரிக்கிற பாரம்பரியம். அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஒரு புதிய சாதனையைச் செய்திருக்கிறார்.

தர்மம் எங்கே?


சிவாஜியின் சொந்தப் படம் போலிருக்கிறது. சிவாஜி, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ், நம்பியார், குமாரி பத்மினி, ராமதாஸ், செந்தாமரை நடித்தது. இசை எம்எஸ்வி. வசனம் சக்தி கிருஷ்ணசாமி. இயக்கம் திருலோகச்சந்தர். 1972-இல் வந்திருக்கிறது.

ஒரு கற்பனை நாட்டில் படம் நடக்கிறது. நம்பியார் கொடுமைக்கார ராஜப் பிரதிநிதி. (ராஜாவை கடைசி வரைக்கும் காணவில்லை.) சிவாஜி கொஞ்சம் அப்பாவி கிராமத்தான். ஊர்க்காரர்கள் ராணுவத்தின் கொடுமையைப் பற்றி நம்பியாரிடம் முறையிடப் போகும்போது சிவாஜியையும் கூட்டிக் கொண்டு போகிறார்கள். நம்பியார் என்ன சாட்சி என்று கேட்க, எல்லாரும் பயப்படுகிறார்கள். சிவாஜி முன் வந்து நான் சாட்சி சொல்கிறேன், என் கண்ணால் பார்த்தேன் என்கிறார். நம்பியார் எல்லாரையும் சரி போங்கள் என்று விரட்டிவிட்டு சிவாஜியை அப்புறம் கைது செய்கிறார். சிவாஜி தப்பிக்கிறார். ஜெயலலிதா காப்பாற்றுகிறார். ஜெ இருக்கும் நாடோடி கும்பல் அவருக்கு ஆதரவு தருகிறது. மைத்துனர் முத்துராமன் அவரோடு சேர்ந்துகொள்கிறார். கலகம், புரட்சி, சிவாஜி நம்பியாரை விரட்டிவிட்டு புது ராஜபிரதிநிதி ஆகிறார். தனக்குப் பதவி தரவில்லை என்ற கோபத்தில் முத்துராமன் சிவாஜிக்கு எதிராக கிளம்புகிறார். கடைசியில் அவர் வேறு வழியில்லாமல் மனம் திருந்தி, க்ளைமாக்சுக்காக செஞ்சி போய் சண்டை போட்டு, சுபம்!

மூன்று விஷயங்கள் நன்றாக இருந்தன.

சிவாஜி ராணுவத்தின் கொடுமையைப் பற்றி சாட்சி சொல்ல வரும்போது நம்பியார் என்ன ரியாக்ஷன் காட்டுகிறாரோ அதே ரியாக்ஷன் சிவாஜி முத்துராமனின் கழகத்தைப் பற்றி ஒருவன் சாட்சி சொல்லும்போதும். பதவி மனிதனை மாற்றுகிறது என்று அருமையாக டெவலப் செய்திருக்கலாம். ஆனால் எழுபதுகளில் சிவாஜி நெகடிவ் ரோல்களைத் தவிர்த்தார். ரொம்ப நல்லவராகத்தான் வருவார். அதனால் ஒரு சீனோடு இது முடிந்துவிடுகிறது. இருந்தாலும் திரைக்கதை எழுதியவருக்கு ஒரு சபாஷ்!

முத்துராமன் தூக்குமேடையில் இருக்கும்போது மனோகரா ஸ்டைலில் சிவாஜி வசனம் பேசுகிறார். நல்ல வசனங்கள். சக்தி கிருஷ்ணசாமிக்கு ஒரு சபாஷ்!

சுதந்திர பூமியில் பல வகை ஜனங்களும் என்ற பாடல் அருமை. அருமையான சந்தம். எழுதிய கண்ணதாசன், இசை அமைத்த எம்எஸ்வி, பாடிய டிஎம்எஸ், சிவாஜியின் முதுகில் ஒரு பெரிய பூக்கூடையை வைத்து வித்தியாசமாக படமேடுத்திருந்த ஒளிப்பதிவாளர்+இயக்குனர்+உடை இன் சார்ஜ் எல்லாருக்கும் ஒரு சபாஷ்! சாரதா, நீங்கள் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஓபனிங் சாங் என்று இந்த காலத்தில் வருவதை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள். இவ்வளவு நல்ல பாட்டுக்கு ஆடியோ வீடியோ எதுவும் கிடைக்கவில்லை.

இதைத் தவிர பள்ளியறையில் வந்த புள்ளி மயிலே என்ற கொஞ்சம் பிரபலமான பாட்டு ரிச்சாக படமாக்கப்பட்டிருக்கிறது.

மற்றபடி படத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நாகேஷ் காமெடி, சண்டைக் காட்சிகள் எதுவும் தேறவில்லை. நம்பியார் வழக்கம் போல கையைப் பிசைகிறார். அம்மாவாக வருபவர் உருகி உருகி வசனம் பேசுகிறார். சிவாஜி அங்கங்கே ஓவர் ஆக்டிங் செய்கிறார். எல்லாரும் ஹிப்பி ஸ்டைலில் வருகிறார்கள்.

சிவாஜி ரசிகர்கள் நிச்சயமாக பார்க்கலாம். மற்றவர்களுக்கு கொஞ்சம் சினிமா பைத்தியம் இருக்க வேண்டும்.

ஸ்ரீதர் பற்றி நம்பியார்


டைரக்டர் ஸ்ரீதர் பற்றி எம்.என். நம்பியார் (நான் வில்லன் அல்லகல்கி கட்டுரை, 16 -11 -1997)

டைரக்டர் ஸ்ரீதர் அவரு காலகட்டத்தில் டைரக்டர்கள்ல ஒரு ஹீரோ போல வாழ்ந்தார். அதற்க்கான எல்லாத் தகுதியும் அவருக்கு இருந்தது. அவரு கொடுத்த எல்லாக் கதைகளையுமே ஜனங்க ஏத்துக்கிட்டாங்க. அவரோட படைப்புகள் அமோகமா ஓடி ரொம்பப் பெரிய ஆளாயிட்டாரு. அவரோட பல ஆசைகளும் நிறைவேறிச்சு. தேன்நிலவு படத்துக்காக அவரு எங்களையெல்லாம் கூட்டிக்கிட்டு காஷ்மீர் போனாரு. ஒரு பெரிய கும்பல். குடும்பத்தோட. நான் என் மனைவியுடன் போயிருந்தேன். மொத்த பேரும் ஒரே குடும்பமா பழகினோம். ஷூட்டிங் இல்லாத சமயங்கள்ல ஸ்ரீதர் சும்மா இருக்க மாட்டார். ‘வாங்க’ன்னு எல்லாரையும் அழைச்சிக்கிட்டு இயற்கைக் காட்சிகளைக் காட்ட போயிடுவார். பணச் செலவைப் பத்திக் கவலையே படாம, யூனிட்ல எல்லாம் சந்தோஷமா இருக்கணும்னு அவரு எங்களை ட்ரீட் பண்ண முறை இருக்கே, என் ஜன்மத்துக்கும் மறக்காது.

காஷ்மீர் குளிர்லேயும் என் வழக்கப்படி நான் அதிகாலையில எழுந்திடுவேன். எல்லாம் தூங்கிகிட்டிருப்பாங்க. யாரையும் எழுப்ப முடியாது. எழுப்பினா நான்தான் வாங்கிக் கட்டிக்கணும். சித்ராலயா கோபு, ‘அண்ணே, கண்ணைத் திறந்திட்டேண்ணே. ஆனா எழுந்திருக்கத்தான் முடியல்ல’ன்னு பரிதாபமா கெஞ்சுவார்.

டணால் தங்கவேலு கதையே தனி. பத்து மணிக்கு மேல தேவதைகள்ளாம் புடைசூழ அவர் ரொம்ப நேரம் ‘சைனீஸ் செக்கர்’ விளையாடுவார். இவர் ஆட்டமெல்லாம் முடிய காலையில மூணு நாலு மணி ஆயிடும்னு வச்சுக்கிங்களேன். அப்பவாவது தூங்கப் போவார்னு நினைக்கிறீங்க? அந்த நேரத்தில கம்பெனி சமையல்காரனை எழுப்பி உப்புமா கிண்டித் தரச் சொல்லி சாப்பிட்டுட்டு காலை ஆறு மணிக்குத்தான் தூங்கப் போவார். அப்புறம் எங்க எழுந்திருக்கறது ? எல்லாரும் தூங்குவாங்க. ஸ்ரீதர், வாங்கண்ணே எதையாவது எடுக்கலாம்னு காமிரா மேனை அழைச்சுக்கிட்டு பக்கத்தில் எங்கேயாவது நல்ல லொகேஷனுக்குப் போயி படத்துக்குத் தேவையிருக்கோ – இல்லையோ – என்னை அப்படியும் இப்படியுமா நாலு க்ளோஸ்-அப் ஷாட்ஸ் எடுத்து அனுப்புவார். மத்தவங்க எழுந்தப்புறம் படத்தோட வேலைகள் தொடங்கும். ரெண்டு மாசம் இப்படி எங்களையெல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லாம காஷ்மீரத்து அழகை அனுபவிக்க வச்சார். நான் ரொம்ப நேசிக்கிற ஒரு டைரக்டர் ஸ்ரீதர். அவர் வாழ்க!!

ஸ்ரீனிவாஸ் அனுப்பிய தகவல்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஸ்ரீதர் பக்கம்

ஆயிரத்தில் ஒருவன் – சாரதா விமர்சனம்


சாரதா சிவாஜியின் முரட்டு பக்தை என்பது இந்த தளத்தின் வாசகர்களுக்கு தெரிந்த விஷயம். அவர் எம்ஜிஆருக்கு “எதிரி” இல்லை என்பதும் இந்த விமர்சனத்தைப் படித்தால் புரியும். ஓவர் டு சாரதா!

தமிழ்ப் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப் படங்களில் புராணப் படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப் படங்களின் பட்டியலும் நீளம்தான். காதலை மையமாகக் கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.

ஆனால் இது வரை கடற் கொள்ளையர்களை கதைக் கருவாகக் கொண்டு வெளி வந்த ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே. கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக் களங்கள் என, ஒரு வெற்றிப் படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.

இப்படத்தின் கதாநாயனான ‘மக்கள் திலகம்’ எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கை தேர்ந்த தையற் கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவது போல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச் சண்டைக் காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் படம்.

கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் பந்துலு மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அது வரை (பானுமதிக்குப் பின்) சரோஜா தேவிதான் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக) போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


பருவம் எனது பாடல் என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மண்டபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.

எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம் போல “வெற்றி… வெற்றி…” என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித் தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும் போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இளவரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக் கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக் காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ‘கடற் கொள்ளையனாக’ சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப் போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்… இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்கும்.

கத்திச் சண்டைக் காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (எம்ஜிஆர்+ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச் சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப் பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள் சண்டை (நம்பியார்: “இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் தலைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்”), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர். (வழக்கம் போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.

பின்னர் வரப் போகும் மூன்று கத்திச் சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித் தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.

பாடல்களும் இசையும்:

இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அது வரை தமிழ்த் திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா… இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.

  • 1. பருவம் எனது பாடல்
  • நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.

    பருவம் எனது பாடல்
    பார்வை எனது ஆடல்
    கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்
    கருணை உனது கோயில் கலைகள் உனது காவல்

    பல்லவியை பாடி முடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ஹம்மிங் ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ் ஸ்தாயி வரையில் கொண்டு வர‌, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து

    இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்

    என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை.

    (நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘LINK’ தருவார்கள். SONGS கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).

  • 2. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை
  • வழக்கம் போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.

    ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
    நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
    வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
    நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே

    இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத‌ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.

  • 3. ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

  • இந்தப் பாடலைப் பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப் பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க‌ள். பாதிப் பாட‌ல் அர‌ண்ம‌னை செட்டிலும் பாதிப்பாட‌ல் கார்வார் க‌ட‌ற்க‌ரையிலும் க‌ண்டினியூட்டி கெடாம‌ல் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

  • 4. உன்னை நான் ச‌ந்தித்தேன் நீ ஆயிர‌த்தில் ஒருவ‌ன்
  • பி.சுசீலா தனியாக‌ப் பாடிய‌ பாட‌ல். கூட‌வே ஆண்க‌ளின் கோர‌ஸ். ம‌ணிமாற‌னைப் பிரிந்த‌ பூங்கொடி, செங்க‌ப்ப‌ரின் அர‌ண்ம‌னையில் சோக‌மே உருவாக‌ பாடும் பாட‌ல், கூட‌வே க‌ப்ப‌லில் போய்க்கொண்டிருக்கும் ம‌ணிமாற‌னைக் காண்பிக்கும்போது, அவ‌ர‌து கூட்டாளிக‌ளின் உற்சாக‌மான‌ கோர‌ஸ்.

    பொன்னைத்தான் உட‌ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம‌ன‌மென்பேன்
    க‌ண்க‌ளால் உன்னை அள‌ந்தேன் தொட்ட‌ கைக‌ளால் நான் ம‌ல‌ர்ந்தேன்
    உள்ள‌த்தால் வ‌ள்ள‌ல்தான் ஏழைக‌ளின் த‌லைவ‌ன்

    அடுத்து வ‌ரும் இசை ‘பிட்’டைக் கேட்க‌ முடியாது, கார‌ண‌ம் ப‌ல‌த்த‌ கைத‌ட்ட‌லும், விசில் ச‌த்த‌மும். பாட‌ல் முடியும்போது, கோர‌ஸுட‌ன் க‌ப்ப‌ல்க‌ள் முல்லைத்தீவு க‌ரையில் ஒதுங்குவ‌தாக‌ காட்டுவ‌து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கறுப்பு நிற உடையில் அழகுப் பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி).

  • 4. ஆடாமல் ஆடுகிறேன்
  • கடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டையடி சத்தம், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.

    ஆடாமல் ஆடுகிறேன்… பாடாமல் பாடுகிறேன்
    ஆண்டவனைத் தேடுகிறேன் வா…வா…வா….
    நான் ஆண்டவனைத் தேடுகிறேன்
    வா…வா…வா…. வா….வா…வா…

    முதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, ‘ஆண்டவனைத் தேடுகிறேன்’ என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக தபேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.

    விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
    ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
    அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
    அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்

    ‘கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்’ என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.

    (மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘SEND OFF ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).

  • 5. நாணமோ… இன்னும் நாணமோ
  • நீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன? காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா? அதுதான் இந்தப் பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘PRELUDE’அருமையாக துவங்கும். (PRELUDE, INTERLUDE என்பவை என்ன என்று தெரிந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).

    தோட்டத்துப் பூவினில் இல்லாதது
    ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
    ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
    ஆனந்த வெள்ளத்தில் நீராடுது – அது எது?

    ஆடவர் கண்கள் காணாதது
    அது காலங்கள் மாறினும் மாறாதது
    காதலன் பெண்ணிடம் தேடுவது
    காதலி கண்களை மூடுவது – அது இது

    பாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும்.

  • 6. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
  • அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘PRELUDE’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.

    கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
    கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
    அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
    அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

    இன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.

    இப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் “என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா?”

    நாகேஷ்: “அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து ‘ஈ’ன்னு சிரிச்சா. ‘கொன்னுடுவேன்’ அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்”.

    ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.

    எப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.

    ‘ஆயிரத்தில் ஒருவன்’ பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.

    தொகுக்கப்பட்ட பக்கம்: சாரதா பதிவுகள், திரைப்படங்கள்

    தொடர்புடைய பதிவுகள்: ஆயிரத்தில் ஒருவன் – ஆர்வி விமர்சனம், ஜெயலலிதா நினைவுகள்

    நாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்


    நாடோடி மன்னன்

    நண்பர் ஜெகதீஸ்வரனின் தளத்தில்தான் நான் எம்ஜிஆர் தான் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் பற்றி ஒரு புத்தகமும் எழுதி இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். ஜெகதீஸ்வரன் இந்த புத்தகத்திலிருந்து பல excerpt-களை பதித்திருக்கிறார்.

    படத்தை உருவாக்க பாடுபட்ட சக நடிகர்கள் – நம்பியார், வீரப்பா, சரோஜா தேவி, பானுமதி, சந்திரபாபு, ஏன் எக்ஸ்ட்ராவாக வரும் துணை நடிகர்களைப் பற்றிக் கூட எழுதி இருக்கிறார் – இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு, வசனம் எழுதிய கண்ணதாசன், எடிட்டர் ஜம்பு, பின்னணியில் இருந்த இயக்குனர் கே. சுப்பிரமணியம், ஆர்.எம்.வீ. என்று அத்தனை பேரின் பங்கையும் பற்றி எழுதி இருக்கிறார். படிக்க சுவாரசியமாக இருக்கிறது!

    இந்த தளத்திலிருந்து விகடன் விமர்சனம் மற்றும் உப்பிலி ஸ்ரீனிவாஸ் அளித்த விவரங்களையும் கூட போட்டிருக்கிறார், அவருக்கு நன்றி!

    தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

    தொடர்புடைய பக்கங்கள்:
    நாடோடி மன்னன் புத்தகம் – Excerpts

    நாடோடி மன்னன் – ஆர்வியின் விமர்சனம், விகடன் விமர்சனம்

    ஸ்ரீதரின் “தேனிலவு” நினைவுகள்


    சாரதா இதை தேனிலவு பதிவுக்கு ஒரு மறுமொழியாக எழுதி இருந்தார். சுவாரசியமான நினைவுகள், அதையே ஒரு பதிவாக போட்டிருக்கிறேன்.

    அன்றைக்கு டெக்னிக்கல் வசதிகள் இல்லாத காலத்தில் தேனிலவு படத்தை எடுக்க புதுமை இயக்குனர் ஸ்ரீதர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை ஸ்ரீதர் வாயிலாகவே கேட்போம். (பழைய சினிமா இதழ் ஒன்றில் நான் படித்தது). ஸ்ரீதர் சொல்கிறார்:

    தேன் நிலவு படத்தை காஷ்மீரில் ஐம்பத்திரண்டு நாடகள் ஷூட் பண்ணினோம். எடுத்த காட்சிகளை உடனே போட்டுப் பார்க்கும் வசதி எல்லாம் அப்போது கிடையாது. அதிலும் நாங்கள் இருந்த இடம் ஸ்ரீநகரில் இருந்து வெகு தொலைவில் ஒரு கிராமத்துக்கு அருகில் இருந்தது. அந்த கிராமத்தில் ஒரேயொரு சினிமா தியேட்டர்தான் உண்டு. காஷ்மீரில் கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகளை சென்னைக்குப் போய் போட்டுப் பார்த்து சரியாக வரவில்லை என்றால் மீண்டும் ஷூட் பண்ணுவது எல்லாம் முடியாத காரியம். அதனால் நாங்கள் காஷ்மீரில் இருக்கும்போதே, எடுத்தவற்றை எல்லாம் அவ்வப்போது போட்டுப் பார்க்க விரும்பினோம். சரியாக வரவில்லையென்றால் மீண்டும் எடுத்துக் கொள்ளலாமே என்பதனால்.

    காஷ்மீரில் அதற்கான வசதிகள் அப்போது இல்லாததால், ஷூட்டிங் எடுத்தவற்றை போட்டுப் பார்க்க ஃபிலிம் ரோலகளை சென்னை அனுப்பித்தான் கழுவி பிரிண்ட் போட்டு வரவேண்டும்.

    அப்போதெல்லாம் ஸ்ரீநகரில் இருந்து வாரம் இரண்டு முறை மட்டும் ‘டகோட்டா’ விமானம் டெல்லிக்குப் போகும். அதில் எங்கள் சித்ராலயா நிர்வாகி ராமகிருஷ்ணன் மற்றும் ஒருவரை, நாங்கள் எடுத்த நெகட்டிவ் படச் சுருள்களோடு அனுப்பி வைப்போம். அவர்கள் டெல்லி சென்று, அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தை பிடித்து சென்னை சென்று, அங்கு விஜயா லேபரட்டரியில் அவற்றை பிரிண்ட் போட்டு மீண்டும் டெல்லி வழியாக ஸ்ரீநகர் வருவார்கள்.

    அந்த படப் பிரதிகளை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருந்த இடத்துக்கு அருகிலுள்ள கிராமத்தின் தியேட்டருக்குப் போய் அவர்களிடம் அனுமதி பெற்று, அங்கு வழக்கமான இரவுக் காட்சி முடிந்த பிறகு, இரவு ஒரு மணிக்கு மேல் அங்குள்ள புரொஜக்டரில் திரையிட்டு நான், கோபு, ஜெமினி, வைஜயந்தி(மாலா), நம்பியார், வின்சென்ட், பி.என். சுந்தரம் மற்றும் எங்கள் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பார்ப்போம். மனதுக்கு திருப்தியாக இருக்கும். திருப்தி இல்லாத சில காட்சிகளை மீண்டும் எடுத்திருக்கிறோம். இரவு சுமார் மூன்று மணிக்கு மேல் அங்கிருந்து திரும்பி வந்து, படுத்து விட்டு காலை ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொள்வோம். உண்மையில் ‘தேன் நிலவு’ படம் முதலில் ரிலீஸான தியேட்டர், காஷ்மீர் கிராமத்திலுள்ள அந்த தியேட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இடத்துக்கு முழுவதும் காரில் போக முடியாது. சிறிது தூரம் நடந்தும் போக வேண்டும். அப்படிப் போகும்போது, தான் ஒரு பெரிய வில்லன் என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் படச்சுருள் பெட்டிகளை நம்பியார் தன்னுடைய தலையிலும், தோளிலும் சுமந்து வந்ததை நான் இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் பட்ட கஷ்ட்டத்துக்கு பலன் கிடைத்தது. படம் வெற்றிகரமாக ஓடியது.

    இவ்வாறு ஸ்ரீதர் சொல்லியிருந்தார்.

    எந்த வித வசதியும் இல்லாத அந்த நாட்களில் நல்ல படங்களை நமக்கு தர வேண்டும் என்று அவர்கள் பட்ட கஷ்ட்டங்களைப் பார்த்தீர்களா?. ஆனால் இன்றைக்கு இத்தனை டெக்னிக்கல் முன்னேற்றங்களை கையில் வைத்துக்கொண்டு…, (வேண்டாம், எதுக்கு வம்பு. யாராவது அடிக்க வருவாங்க. அடி வாங்குவதற்கெல்லாம் நமக்கு தெம்பு இல்லை).

    தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்->ஸ்ரீதர் பக்கம், கூட்டாஞ்சோறு->நண்பர்கள்->சாரதா பக்கம், படங்களின் பட்டியல்

    தொடர்புடைய பதிவுகள்:
    தேனிலவு – ஆர்வியின் விமர்சனம்

    நாடோடி – என் விமர்சனம்


    நாடோடி எம்ஜிஆரின் தண்டப் படங்களில் ஒன்று. எம்ஜிஆரும் தயாரிப்பாளர்-இயக்குனர் பந்துலுவும் சொதப்பிவிட்டார்கள். எனக்கென்னவோ இது சிவாஜிக்காக எழுதப்பட்ட கதையோ என்று ஒரு சந்தேகம். கதையில் ஆக்ஷன் குறைவு, செண்டிமெண்ட் அதிகம். அதுவும் குழந்தைக்கதை மாதிரி நம்பியார் மருந்து போட்டு டெம்பரரியாக ஆனால் பெர்மனேன்டாக எம்ஜிஆரையும் சரோஜா தேவியையும் குருடாக வைத்திருப்பார். என்ன சின்னப்பிள்ளைத்தனமா இல்ல இருக்கு?

    ஆயிரத்தில் ஒருவனுக்கு பிறகு பந்துலு எம்ஜிஆர் கூட்டணியில் வந்த படம் இதுதான் என்று நினைக்கிறேன். 1966இல் வந்திருக்கிறது. பந்துலு நஷ்டப்பட்டிருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். இதை விட மோசமான முகராசி, தேர்த்திருவிழா எல்லாம் எம்ஜிஆர் முக ராசியில் கையை கடிக்கவில்லையாம். இதை விட மோசமாக படம் எடுப்பது பெரும் கஷ்டம், அதை எல்லாம் தேவர்தான் செய்ய முடியும். சாரதா மாதிரி யாராவது இந்த படம் எப்படி ஓடியது என்று தெரிந்தால் சொல்லுங்களேன்!

    இதுக்கு கதை எல்லாம் சொல்லி நானும் கஷ்டப்பட்டு உங்களையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. பாரதி இந்த படத்தில்தான் அறிமுகம் ஆனார். பார்க்க அழகாக இருப்பார். பந்துலு கன்னட நடிகைகளை – தங்கமலை ரகசியத்தில் சரோஜா தேவி, ஆயிரத்தில் ஒருவனில் மைசூர் பாரம்பரியம் உள்ள ஜெயலலிதா, இதில் பாரதி – என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

    படத்தின் ஒரே ப்ளஸ் பாயின்ட் பாட்டு. எம்எஸ்வி இரண்டு நல்ல பாட்டு போட்டிருக்கிறார். உலகமெங்கும் ஒரே மொழி மிக நல்ல பாட்டு. எனக்கு மிக பிடித்த பாட்டு இதுதான். அன்றொரு நாள் இதே நிலவில் இன்னொரு நல்ல பாட்டு. என் கண்ணில் இரண்டாம் இடம்தான், ஆனால் இதுதான் பிரபலமான பாட்டு. இரண்டையும் இங்கே கேட்கலாம். உலகமெங்கும் ஒரே மொழி வீடியோ கீழே.

    இவற்றைத் தவிர நாடு அதை நாடு என்று ஒரு சுமாரான பாட்டு உண்டு. எனக்கு வேறு பாட்டுகள் நினைவில்லை. சாரதா லிஸ்ட் கொடுத்திருக்கிறார் – அப்படியும் நினைவு வரவில்லை.

    1. அன்றொரு நாள் இதே நிலவில் – டிஎம்எஸ், சுசீலா
    2. அன்றொரு நாள் இதே நிலவில் – சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி
    3. உலகமெங்கும் ஒரே மொழி – டிஎம்எஸ், சுசீலா
    4. திரும்பி வா ஒளியே திரும்பி வா – டிஎம்எஸ், சுசீலா
    5. நாடு அதை நாடு, அதை நாடாவிட்டால் ஏது வீடு – டிஎம்எஸ், சுசீலா
    6. ரசிக்கத்தானே இந்த அழகு – சுசீலா
    7. பாடும் குரலிங்கே பாடியவன் எங்கே – சுசீலா
    8. கண்களினால் காண்பதெல்லாம் – டிஎம்எஸ், சுசீலா (படத்தில் இல்லை)

    சாரதா “விமர்சனம் என்றால் அப்படத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் (ஓரளவேனும்) உள்ளடக்கியதாக இருக்க வேண்டாமா?. இரண்டு பேர் உட்கார்ந்து வெறுமனே கதைச்சுருக்கம் பேசுவதுதான் விமர்சனமா?” என்று கேட்கிறார். நியாயம்தான். ஆனால் படம் மகா தண்டம். விகடன் விமர்சனத்தில் முனுசாமி சொல்வது – “ஒரு மூணு மணிநேரம் கண் தெரியாம இருக்கிறதுக்கு யாராவது ஒரு குருட்டு மருந்து கண்டுபிடிச்சுக் கொடுத்தா, அதைப் போட்டுகிட்டு இந்தப் படத்துக்குப் போய் ஜாலியா உட்கார்ந்துகிட்டு, இரண்டு பாட்டை மட்டும் கேட்டுட்டு வந்துடலாம்.” மிகச்சரி. எனக்கு பிடித்த பாட்டுகள்தான் விகடனுக்கும் பிடித்திருந்தனவோ என்னவோ.

    பாட்டு மட்டும் கேளுங்கள்/பாருங்கள். படம் தண்டம். பத்துக்கு மூன்று மார்க். (உலகமெங்கும், அன்றொரு நாள் பாட்டுகளுக்கு தலா ஒரு மார்க், பாரதிக்கு ஒரு மார்க்). D grade.

    தொடர்புடைய பதிவுகள்
    விகடன் விமர்சனம்

    நாடோடி – விகடன் விமர்சனம்


    படம் வந்தபோது – மே 1966இல – விகடனில் வந்த விமர்சனம். விகடனுக்கு நன்றி!
    .
    முனுசாமி – மாணிக்கம்

    முனுசாமி: தாழ்ந்த சாதியிலே பிறந்த தியாகுவை, உயர்ந்த சாதியிலே பிறந்த மீனாங்கற பெண் காதலிக்குது. சாதி வெறி பிடிச்ச மீனாவின் தந்தை தர்மலிங்கம் இதைத் தடுக்கிறாரு. அதனாலே மீனா உயிரை விட்டுடுது.

    மாணிக்கம்: அடப் பாவமே! ஆமா, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதின்னு வருதே! எந்தக் காலத்துக் கதை இது?

    முனு: கிராஸ் பண்ணாதே! கதையைக் கேளு. மீனாவுக்கு ராதான்னு ஒரு தங்கை. மீனாவின் காதலன் தியாகுவை, தானே மணந்து சாதி வெறியைத் தரை மட்டமாக்கப் போறேன்னு அது அப்பங்காரனைப் பார்த்துச் சவால் விடுது.

    மாணி: இது என்ன சவால்? இந்தப் பொண்ணு அவனை மணந்துக்கிட்டா, சாதி வெறி தரை மட்டமாயிடுமா?

    முனு: பார்த்தியா! பணம் குடுத்துப் படம் பார்த்த நானே இதெல்லாம் கேட்கமுடியலே! நீ என்னமோ…

    மாணி: சரி, அப்புறம்?

    முனு: ஒரு வில்லன்.

    மாணி: நம்பியார்தானே?

    முனு: ஆமாம். அவரும் ஒரு தாழ்ந்த சாதிக்காரரு. தர்மலிங்கத்தாலே ஜெயிலுக்குப் போறாரு. அதனால தர்மலிங்கத்தின் பேரிலே அவருக்கு படா கோவம். தியாகுவா வர எம்.ஜி.ஆரும், ஜம்புவா வர நம்பியாரும் ஒரே ஜெயில்லே சந்திக்கிறாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் பொது எதிரி தர்மலிங்கம். ஜம்பு விடுதலை ஆகி வெளியே போனதும், முதல் காரியமா தர்மலிங்கத்தைப் பழி வாங்கறதுக்காக அவர் பெண் ராதாவைக் கடத்திக்கிட்டுப் போய் குகையிலே வெச்சு, கண்ணைக் குருடாக்கிடறாரு. குருடுன்னா எப்போதும் குருடு இல்லே! வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை ஒரு மருந்து போட்டு அந்தப் பெண்ணைக் குருடாக்கிடுவாரு. அதாவது வாரக் குருடு! அந்தக் குகைக்கு எம்.ஜி.ஆர் வந்து சேர்ராரு. அங்கே ராதாவைச் சந்திக்கிறாரு, அவளை வில்லனுக்குத் தெரியாம கடத்த முயற்சிக்கிறாரு. அது தெரிஞ்சதும் எம்.ஜி.ஆர். கண்ணுக்கும் மருந்து போட்டு குருடாக்கிடறாரு வில்லன்.

    மாணி: முடிவா என்னதான் சொல்றே?

    முனு: ஒரு மூணு மணிநேரம் கண் தெரியாம இருக்கிறதுக்கு யாராவது ஒரு குருட்டு மருந்து கண்டுபிடிச்சுக் கொடுத்தா, அதைப் போட்டுகிட்டு இந்தப் படத்துக்குப் போய் ஜாலியா உட்கார்ந்துகிட்டு, இரண்டு பாட்டை மட்டும் கேட்டுட்டு வந்துடலாம்.

    நாடோடி மன்னன்


    நாடோடி மன்னன்

    நாடோடி மன்னன் வந்தபோது (7-9-58) விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்! அடுத்த இன்ஸ்டால்மென்டில் என் விமர்சனம்.

    முனுசாமி – மாணிக்கம்

    மாணி: அண்ணே, உடனே எனக்கு ஒரு பெண் பார்க்கணும் அண்ணே!

    முனு: எதுக்கடா?

    மாணி: கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாச் செலவையும் சர்க்காரே ஏத்துக்கிறாங்களாம்.

    முனு: அப்படின்னா எனக்கும் ஒண்ணு பாருடா தம்பி! ஆமா, இந்தச் சட்டம் நம்ம ஊர்லே எப்ப வந்தது?

    மாணி: நாடோடி மன்னன் ராஜாங்கத்திலே, நல்ல நல்ல சட்டமெல்லாம் செய்யறாங்க அண்ணே!

    முனு: அடடே! படம் பார்த்துட்டியா? எப்படி இருக்கு?

    மாணி: பாதி படம் கறுப்பிலே எடுத்திருக்காங்க; மீதி கலர்லே எடுத்திருக்காங்க.

    முனு: ரொம்பப் பெரிய படமாமே?

    மாணி: நீளத்திலே மட்டுமில்லே, தரத்திலேயும் அப்படித்தான். நாலு வருசமா எடுத்திருக்காங்க. இரண்டு எம். ஜி. ஆர். வராங்க! அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா? கை தட்டித் தட்டி வலி கண்டு போச்சு அண்ணே!

    முனு: எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாரு?

    மாணி: எம்.ஜி.ஆர். – பானுமதி; எம்.ஜி.ஆர். – எம்.என். ராஜம்; எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி. அப்புறம், எம்.ஜி.ஆர். – எம்.ஜி.ஆர்.! என்னா த்ரில்லு! என்னா ஸ்டன்ட்டு! ஒரு சீன்லே எம்.ஜி.ஆர். ஒரு பாலத்தையே ஒரு கையாலே இழுத்துப் பிடிச்சு விழாம நிறுத்தறாருன்னா பார்த்துக்க!

    முனு: கத்திச் சண்டை உண்டா?

    மாணி: இது என்ன கேள்வி அண்ணே? கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே! கடற்கரையிலே எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போடறாங்க, அந்தக் கடலே கலங்குது. அதுக்கே துட்டு கொடுத்துடலாம். அப்புறம், வீரப்பாவோடயும் ஒரு சண்டை போடறாரு!

    முனு: டிரிக் ஷாட்டெல்லாம் எப்படி?

    மாணி: காமரா வேலை ரொம்ப நல்லாருக்கு. கன்னித் தீவு, கழுகு குகை, நீர்வீழ்ச்சி… அந்த வெள்ளம் ஒண்ணு போதும் அண்ணே. பாக்கிறப்போ கண்ணுக்குள்ளே ஜில் ஜில்லுங்குது! கனவு சீன், காதல் காட்சி, குரூப் டான்ஸ் எல்லாத்திலேயும் கலர் அள்ளிக்கிட்டுப் போகுது.

    முனு: காமிக் இருக்குதா?

    மாணி: எம்ஜியாரும் பானுமதியும் முதல்லே மீட் பண்றதே காமிக்தான். சந்திரபாபு ஒரு கூடை முட்டைகளை உடைச்சுத் தின்னுகிட்டேயிருக்காரு. அப்புறம், அவர் வாயிலேருந்து ஒரு கோழிக்குஞ்சு வருது. நம்ம வாயிலேருந்து சிரிப்பு வருது. டான்ஸ் பண்றாரு பாரு, அற்புதமா இருக்குது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாட்டெல்லாம் நல்லா இருக்குது. ஆனா என்ன… கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, காசுக்குத்தான் நஷ்டம்!

    முனு: என்ன தம்பி சொல்றே?

    மாணி: ஆமாண்ணே! ஒரு வாட்டி பார்த்துட்டா மறுபடி மறுபடி பார்க்கச் சொல்லுமே!

    தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

    தொடர்புடைய பக்கங்கள்:
    நாடோடி மன்னன் – ஆர்வியின் விமர்சனம்

    நாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்