சக்கரம்: பழைய திரைப்படம்


இந்தத் தளத்தில் பழைய திரைப்படங்களைப் பற்றித்தான் எழுதுவேன். வாரம் ஒரு பதிவாவது எழுத வேண்டும் என்று எண்ணம். ஆனால் பழைய படம் ஒன்றைப் பார்த்து கொஞ்ச நாளாகிவிட்டதால் தாமதமாக பதிவு வருகிறது.

சக்கரம் படத்தைப் பற்றிய எனது ஒரே நினைவு – அதில் “காசேதான் கடவுளப்பா” என்ற பிரபலமான பாடல் உண்டு.

நான் ஏ.வி.எம். ராஜன் நடித்த படங்களை பொதுவாக ரசிப்பதில்லை. அவர் சிவாஜியின் சுமாரான நகல் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. (இத்தனைக்கும் “என்னதான் முடிவு” எனக்குப் பிடித்த திரைப்படங்களில் ஒன்று.) அதனால் பழைய திரைப்படங்களை விரும்பிப் பார்த்தாலும் இதைத் தவிர்த்தே வந்திருக்கிறேன்.

கடைசியாக ஒரு வழியாகப் பார்த்தேன். வழக்கமான காட்சிகள் உண்டுதான் என்றாலும் தமிழுக்கு வித்தியாசமான படம்தான். வழக்கமான காதல், குடும்பம், பாசம் என்று இல்லாமல் இருப்பதே கொஞ்சம் refreshing ஆக இருக்கிறது. ராஜனின் பாத்திரமும் நடிப்பும் நன்றாகவே வந்திருக்கின்றன. அவருக்கு “வில்லன்” பாத்திரம்தான் என்றாலும் அவர்தான் நாயகன், ஜெமினி கணேசன் சும்மா ஒப்புக்கு சப்பாணிதான்.

1968-இல் வந்த திரைப்படம். ஜெமினி, ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா, சௌகார் ஜானகி, நாகேஷ், மனோரமா, மேஜர் சுந்தரராஜன், எம்.ஆர்.ஆர். வாசு, ஓ.ஏ.கே. தேவர், வி.எஸ். ராகவன் என்று பலரும் நடித்திருக்கிறார்கள். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை. திரைக்கதை, இயக்கம் ஏ. காசிலிங்கம்.

எளிய கதைதான். ஜம்பு (ராஜன்) மைசூர் காடுகளில் வாழும் நல்ல மனம் படைத்த கொள்ளைக்காரன். திருடும் பணத்தை ஏழைகளுக்கு கொடுத்துவிடுகிறான். பண்ணையார் (வி.எஸ். ராகவன்) வீட்டில் திருடப் போகும்போது அங்கு பிரசவ வலியால் துடிக்கும் பண்ணையார் பெண்ணைக் காப்பாற்றி அவளை தங்கையாக ஏற்றுக் கொள்கிறான். பணக்காரப் பையனோடு காதல் தோற்றுவிடும் என்பதால் தற்கொலை செய்து கொள்ளப் போகும் பாபுவின் (ஜெமினி) தங்கையைக் காப்பாற்றுகிறான். ஜம்புவை பிடித்துக் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று அரசு அறிவித்திருக்கிறது.

பாபுவின் தங்கை காதலிப்பது அவனது எஜமானி அம்மாளின் (சௌகார்) பையனை. சௌகார் வசதி படைத்த குடும்பத்தவர்தான், ஆனால் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறார். 50000 ரூபாய் கொடுத்தால் உன் தங்கையை மருமகளாக ஏற்கிறேன் என்கிறார்.

பாபு ஜம்புவைப் பிடித்துக் கொடுத்து லட்ச ரூபாய் பரிசை வெல்லலாம் என்று கிளம்புகிறான். அவனுக்கு துணையாக அவன் காதலி (நிர்மலா); மற்றும் காடுகளைப் பற்றி நன்கு அறிந்த வழிகாட்டி (நாகேஷ்), கத்தி வீசும் நிபுணன் (ஓ.ஏ.கே. தேவர்), வர்மக்கலை நிபுணன் (வாசு), கயிறு வீசும் நிபுணன் ஒருவன் சம்பளம் பேசி சேர்ந்து கொள்கிறார்கள். ஜம்புவின் தோழர்களை இந்த நிபுணர்கள் கொன்றுவிட, பாபு ஜம்புவை சண்டை போட்டு தோற்கடிக்கிறான். ஜம்பு பாபுவிடம் சரண், தப்பி ஓடமாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறான்.

லட்ச ரூபாய் பரிசு, தங்களுக்கு நூறுகளில்தான் சம்பளம் என்று உணரும் தோழர்கள் பணத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள். ஜம்புவின் தங்கைதான் நாகேஷின் மனைவி (மனோரமா). அண்ணனைப் பிடித்துக் கொடுத்தால் லட்ச ரூபாய் பரிசு என்றதும் பிடித்துக் கொடுக்க அவளும் தயாராக இருக்கிறாள். ராஜன் பணத்துக்கு முன் நட்பும் உறவும் ஒரு பொருட்டில்லை என்று காசேதான் கடவுளப்பா என்று பாட்டு பாடுகிறார். கடைசியில் சௌகார்தான் ராஜனின் மனைவி வேறு. சௌகார் தற்கொலை செய்து கொள்ள, பத்தினிக்கு பணம் தூசு என்று வசனம் பேசிவிட்டு ராஜனும் தற்கொலை. பணம் தேவையில்லை என்று எல்லாரும் மறுக்கிறார்கள்.

தமிழ் திரைப்படங்களில் எதிர்பார்க்கக் கூடிய திருப்பங்கள், twists எல்லாம் உண்டுதான். ஆனால் கதைக்களம் வித்தியாசமாக இருப்பதால் திரைப்படம் பிழைக்கிறது. ராஜன் நன்றாகவே நடித்திருக்கிறார். ஜெமினியும் நாகேஷும் தண்டத்துக்கு வந்து போகிறார்கள். நாகேஷுக்காக படம் கொஞ்சம் ஓடலாம் என்ற காலம். நிர்மலா அதை விட தண்டம்.

பழைய படம் விரும்பிகள் பார்க்கலாம். பத்துக்கு 6.5 மதிப்பெண். C+ grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: யூட்யூபில் திரைப்படம்

 

பார்த்திபன் கனவு


இது பழைய படம். ஸ்ரீகாந்த், ஸ்னேஹா நடித்தது இல்லை. ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, எஸ்.வி. ரங்காராவ், டி.எஸ். பாலையா, எஸ்.வி. சுப்பையா, ராகினி, அசோகன், குமாரி கமலா, ஜாவர் சீதாராமன் என்று பலரும் நடித்தது. இசை வேதா. கல்கியின் புகழ் பெற்ற வரலாற்று நாவலை படமாக்கி இருக்கிறார்கள். இயக்கம் யோகநாத். 1960-இல் படம் வெளிவந்திருக்கிறது.

நான் பார்த்தது விஜய் டிவியில். படத்தை கன்னாபின்னா என்று வெட்டிவிட்டார்கள். முன்னால் வர வேண்டிய சீன் பின்னால் வருகிறது, பின்னால் வர வேண்டிய சீன் முன்னால் வருகிறது. கிராம டெண்டு கொட்டாய்களில் அபூர்வமாக ஆபரேட்டர் தூங்கிவிடும்போது ரீல்கள் வரிசை மாறிவிடும். சின்னப் பசங்க நாங்க ஆய் ஊய் என்று ஜாலியாக சத்தம் போடுவோம். ஆபரேட்டர் எழுந்து மாற்றுவார். விஜய் டிவிகாரர்களை என்ன செய்வது?

சரோஜாதேவி மற்றும் பாலாஜியின் பெயர் டைட்டிலில் பார்த்தேன், ஆனால் படம் பூராவும் இவர்கள் வரவே இல்லை. வில்லன் யார் பி.எஸ். வீரப்பாவா? அடையாளம் காண முடியவில்லை, ஆனால் டைட்டிலில் வீரப்பா பேர் இல்லை. நாவலை சில நாட்கள் முன்னால்தான் படித்திருந்தேன், அதனால் சீன்கள் என்ன சீக்வென்சில் வரவேண்டும் என்று தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும் இவ்வளவு கொடுமை பண்ணக் கூடாது சார்!

கதை தெரிந்திருக்கும். மாமல்லருக்கு (ரங்காராவ்) கப்பம் கட்ட மறுத்து பார்த்திப சோழன் (அசோகன்) போர் புரிந்து இறந்துபோகிறார். இறக்கும் தருவாயில் ஒரு சிவனடியார் பார்த்திபனைப் பார்த்து உன் மகனை வீரனாக வளர்ப்பேன் என்று வாக்குத் தருகிறார். மகன் விக்ரமன் (ஜெமினி) வளர்ந்து புரட்சி செய்து சிறைப்படுகிறான். மாமல்லர் விக்ரமனை நாடு கடத்துகிறார். அதற்குள் அண்ணலும் நோக்கினார், மாமல்லரின் மகள் குந்தவையும் நோக்குகிறாள். நோக்குவது மட்டும்தான், அதிலேயே இரண்டு பேருக்கும் காதல் வந்துவிடுகிறது. நாடு கடத்தப்பட்ட விக்ரமன் செண்பகத்தீவுக்கு அரசன் ஆகிறான். தன குல சொத்தான வாளை எடுத்துப் போக திரும்பி வருகிறான். அங்கே காபாலிகர் கூட்டம் அவனை தாக்குகிறது. பல்லவ ஒற்றர் தலைவன் அவனைக் காப்பாற்றுகிறான். பிறகு அவனுக்கு அடிபட அவன் குந்தவையால் காப்பாற்றப்படுகிறான். இந்த முறை காதலை இருவரும் சொல்லிவிடுகிறார்கள். பின்னே! விட்டுவிட்டால் இன்னும் மூன்று வருஷம் போய்விடுமே! காபாலிகர் கூட்டம் சிவனடியாரை பலி கொடுக்கும்போது எல்லாரும் சரியாக அங்கே போய் அவரைக் காப்பாற்றுகிறார்கள். யார் அந்த சிவனடியார் என்ற சின்னப் பிள்ளைகள் கூட யூகிக்கக் கூடிய பெரும் மர்மம் அவிழ்கிறது. பிறகு, கல்யாணம், சுபம்!

ரங்காராவ் சிறப்பாக நடித்திருந்தார். ஜெமினி, வைஜயந்திமாலா இருவரும் அழகாக இருந்த நாட்கள். ஜோடிப் பொருத்தம் நன்றாக இருந்தது.

வேதா கலக்கிவிட்டார். பின்னாளில் ஹிந்திப் பட மெட்டுகளை காப்பி அடித்தே காலத்தை ஓட்டியவர் இவர்தான் என்று நம்பவே முடியாது. கண்ணாலே நான் கண்ட கணமே, இதய வானில் உதய நிலவே, பழகும் தமிழே பார்த்திபன் மகனே என்ற அருமையான பாட்டுகள். ஏ.எம். ராஜா குரல் ஜெமினிக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

பாட்டுகள், வீடியோக்கள் கிடைக்காதது துரதிருஷ்டம். ஸ்டில் கூட கிடைக்கவில்லை.

படம் ஒன்றும் பிரமாதமில்லை. (நாவலும் கூட பிரமாதமில்லை.) பழைய பாட்டு, பழைய படம் என்றால் விரும்பிப் பார்ப்பவர்களுக்கு மட்டும்.

நல்ல தீர்ப்பு


காலா பானி என்ற வெற்றி பெற்ற ஹிந்திப் படம் ஒன்று உண்டு. எதேச்சையாக டிவியை ஆன் செய்தபோது ஏறக்குறைய அந்த மாதிரியே தெரிந்த ஒரு தமிழ் படம். தேவ் ஆனந்துக்கு பதில் ஜெமினி கணேசன். மதுபாலாவுக்கு பதில் ஜமுனா. நளினி ஜய்வந்துக்கு பதில் எம்.என். ராஜம். என்னடா இது தமிழில் காலா பானி வந்ததாக கேள்விப்பட்டதே இல்லையே என்று பார்க்க ஆரம்பித்தேன். காலா பானியே ஏ.ஜே. க்ரானின் (A.J. Cronin) எழுதிய Beyond this Place என்ற ஒரு கதையை வைத்து எடுக்கப்பட்டது என்று கேள்வி.

படத்தின் பேர் நல்ல தீர்ப்பு. 1959-ஆம் ஆண்டு வந்த படம். ஜெமினி, ஜமுனா, எம்.என். ராஜம், கண்ணாம்பா, நாகையா, டி.ஆர். ராமச்சந்திரன், டி.எஸ்.துரைராஜ், எம்.ஜி. சக்ரபாணி, எஸ்.வி. சஹஸ்ரநாமம், ராகினி, சரோஜா ஆகியோரை அடையாளம் காண முடிந்தது. கதை வசனம் முரசொலி மாறன். இசை சுப்பையா நாயுடு. இயக்கம் டி. பிரகாஷ் ராவ்.

ஜெமினி இளம் வக்கீல். விதவைத் தாய் கண்ணாம்பா கஷ்டப்பட்டு படிக்க வைத்திருக்கிறார். தொழில் நன்றாக நடக்கிறது. லட்சாதிபதி பெண் தருகிறேன் என்கிறார். வீட்டுக்கு வந்தால் அதிர்ச்சி #1. இது நாள் வரை பேசாமல் இருந்த அம்மா சீப்பாக இப்போதுதான் கிடைத்தது என்றோ என்னவோ முகத்தில் குங்குமத்தோடு காட்சி அளிக்கிறாள். அதிச்சி #2 ஆக அப்பா நாகையா செய்யாத கொலைக்காக ஜெயிலில் இருக்கிறார் என்கிறாள். அப்பாவை பார்க்க வேலூர் ஜெயிலுக்கு ஜெமினி போகிறார். நாகையா வழக்கம் போல பரிதாபமாக இருக்கிறார். கொலையை துப்பு துலக்க ஜெமினி திருச்சி போகிறார். அங்கே பத்திரிகை ஆசிரியர் ஜமுனாவை சந்திக்கிறார். பின் வழக்கமான காதல் ஒரு பக்கம். துப்பு துலக்க போன இடத்தில் எம்.என். ராஜம் இவரை வில்லிகளின் இலக்கணப்படி சைட் அடிக்கிறார். மெதுமெதுவாக ஜெமினிக்கு கேஸ் பற்றி தெரிகிறது. மீண்டும் விசாரணை நடத்தி குற்றவாளி யாரென்று திடுக்கிடும் தகவல் தெரிகிறது. நாகையா விடுதலை, சுபம்!

முதல் பாதி பரவாயில்லை. இரண்டாம் பாதி இசு இசு என்று இசுக்கிறார்கள். அதுவும் ஜெமினி பயங்கர தத்தியாக இருக்கிறார், சின்னப் பையனுக்கு கூட புரிந்துவிடும் விஷயங்கள் எல்லாம் அவருக்கு புரியமாட்டேன் என்கிறது. ஒரு ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் அவருக்கு கிடைக்கும் க்ளூவை எல்லாம் விலாவாரியாக விளக்க வேண்டி இருக்கிறது. கண்ணாம்பா பொறுத்தது போதும் பொங்கி எழு ரோலையே மீண்டும் மீண்டும் செய்கிறார். நாகையா அதே ஐயோ பாவம் லுக் விடுகிறார். நகைச்சுவை என்று துரைராஜ், சரோஜா, டி.ஆர். ராமச்சந்திரன் படுத்துகிறார்கள்.

பாட்டு ஒன்றும் சரியில்லை. முதலில் ராகினி ஆடிப் பாடும் ஒரு பாட்டுதான் கொஞ்சம் சுமார், ஆனால் இப்போது மறந்துவிட்டது. அது இருந்தால் இது இல்லே இது இருந்தால் அது இல்லே என்ற பாட்டு மிஸ்ஸியம்மா படத்தில் வரும் படியுமென்றால் முடியாது முடியுமென்றால் படியாது பாட்டை நினைவுபடுத்தியது.

ஸ்டில் எதுவும் கிடைக்கவில்லை. எம்.ஜி. சக்ரபாணி இருக்கும் ஒரு சின்ன கிளிப் மட்டும் கிடைத்தது.

பேசாமல் காலா பானி பாருங்கள். அருமையான பாட்டுகளையாவது கேட்கலாம்!

நீதிபதி


நீதிபதி என்ற படம் கொஞ்ச நாள் முன் விஜய் டிவியில் வந்தது. இது சிவாஜி நடித்த படம் இல்லை. 1955-ஆம் ஆண்டு வந்த படம். கே.ஆர். ராமசாமி, ஜெமினி கணேசன், எஸ்.வி. சஹஸ்ரநாமம், டி.எஸ். பாலையா, எம்.என். ராஜம், ராஜசுலோச்சனா என்று கொஞ்சம் தெரிந்த முகங்கள். தெரியாத பல முகங்களும் உண்டு. இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி. இயக்கம் ஏ.எஸ்.ஏ. சாமி.

நான் பழைய தமிழ் படம்+பாட்டு பைத்தியம்தான். தியாகராஜ பாகவதர் பாட்டைக் கூட விரும்பிக் கேட்பேன். ஆனால் நடிப்பிசைப் புலவர் என்றெல்லாம் புகழப்படும் கே.ஆர். ராமசாமி பாடிய ஒரு பாட்டைக் கூட நான் கேட்டதில்லை. இந்தப் படத்தில்தான் முதல் முறையாக கேட்டேன். நாடகங்களுக்கு ஏற்ற குரல். மைக்கே தேவை இல்லை. ஓங்கி ஒலிக்கும், ஆனால் இயற்கையான குரல். இருந்தாலும் இந்தப் படத்தில் பாட்டுகள் எல்லாம் (பறக்குது பார் பொறி பறக்குது பார், ஜிலுஜிலுவென ஜொலிக்கும் மிட்டாய்) சுமார்தான்.

சம்பிரதாயமான மெலோட்ராமா கதைதான். சஹஸ்ரநாமம் செத்துப் போன அண்ணனின் சொத்தை எல்லாம் அபகரித்துக் கொண்டு அண்ணிக்கு நாமம் போட்கிறார். அண்ணி இடுப்பில் ஒன்று, வயிற்றில் ஒன்றோடு உயிருக்கு பயந்து ஓடிவிடுகிறார். ஒரு சர்ச்சில் தஞ்சம் அடைகிறார். முதல் பையன் – கே.ஆர். ராமசாமி – நம்பிக்கையான பழைய வேலைக்காரனிடம் ஒரு உடன்பிறவா தங்கையோடு வளர்கிறான். சஹஸ்ரநாமத்தின் ஆட்களின் சூழ்ச்சியால் அண்ணி ஜெயிலுக்குப் போகிறார். இரண்டாவது பையன் – ஜெமினி – சர்ச்சில் வளர்ந்து பெரிய வக்கீல் ஆகிவிடுகிறான். சஹஸ்ரநாமம் கே.ஆர். ராமசாமியின் தங்கையிடம் தவறாக நடக்க முயற்சி செய்ய, அவள் இறந்துவிடுகிறாள். கே.ஆர்.ஆர். சஹஸ்ரநாமத்தைப் பழி வாங்க வரும்போது ஏற்படும் சண்டையில் சஹஸ்ரநாமம் தற்செயலாக தன் ஆசைநாயகி எம்.என். ராஜத்தை கொன்றுவிடுகிறார். பழி கே.ஆர்.ஆர். பேரில். போலீஸ் கான்ஸ்டபிள் பாலையா கே.ஆர்.ஆரைத் தேடி அலைகிறார். ஜெயிலிலிருந்து வந்த அம்மா ஜெமினியைப் பார்க்க இருவருக்கும் நடுவில் வழக்கமான இனம் புரியாத பாசம். அம்மாவுக்கும் கே.ஆர்.ஆருக்கும் அதே இனம் புரியாத பாசம். ஜெமினியின் மனைவி ராஜசுலோச்சனாவைக் காப்பாற்ற கே.ஆர்.ஆர். சஹஸ்ரநாமத்தை கொன்றுவிடுகிறார். இதற்குள் நீதிபதி (பின்னே! டைட்டில் வரவேண்டாமா?) ஆகிவிடும் ஜெமினி அண்ணன் என்று தெரிந்தும் தண்டனை அளிக்கிறார்.

என்னைக் கவர்ந்த பகுதி தப்பி ஓடும் கே.ஆர்.ஆர். ஒரு நாடகம் ஆடும் சீன்தான். பின்பாட்டுக்காரர் ஸ்வரம் இழுக்க கே.ஆர்.ஆர். கடுப்பாகி அவர் அருகே நின்று கொண்டு இன்னும் ஸ்வரம் இழுப்பதென்ன, அவர் காலை முழங்கால் வரை தூக்கி தூக்கி நடப்பதென்ன, அவ்வப்போது கைக்குட்டையை வைத்து விசிறிக் கொள்வதென்ன, கோவலன் நாடகத்தில் நாயகி பசும்பாலில் டிகாக்ஷனைக் கலந்து காப்பி தாங்கடி என்று பாடுவதென்ன, மிகவும் அருமையாக இருந்தது.

நாடகத்தில் பின்பாட்டு பாடுபவர் குண்டு கல்யாணம் போலவே இருக்கிறார். அதே மாதிரி முகம், அதே மாதிரி உடல். குண்டு கல்யாணத்தின் அப்பாவும் நடிகரா?

எல். விஜயலட்சுமி அப்போது ரொம்பவும் சின்னப் பெண் போலிருக்கிறது. ஒரு டான்ஸ் ஆடிவிட்டுப் போகிறார்.

கே.ஆர்.ஆர். நாடக நடிகர் என்றும் ஜெமினி அடுத்த ஜெனரேஷன் சினிமா நடிகர் என்றும் தெளிவாகத் தெரிகிறது.

என் போன்ற சினிமாப் பைத்தியங்கள் தவிர மற்றவர்கள் தவிர்க்கலாம்.

நூத்துக்கு நூறு


திருப்பி கொஞ்சம் விமர்சனங்களை ஆரம்பிக்கலாம் என்று பார்க்கிறேன்.

நூத்துக்கு நூறு கொஞ்சம் புத்திசாலித்தனமான படம். அன்றைக்கு புத்திசாலித்தனமாகத் தெரிந்த முடிச்சு, காட்சி அமைப்பு இன்றைக்கும் புத்திசாலித்தனமாக இருப்பதில்லைதான், ஆனாலும் ஒரிஜினல் எண்ணம் தெளிவாகத் தெரிகிறது, பாராட்ட வேண்டிய முயற்சி.

ராஷோமான், அந்த நாள் மாதிரி காட்சி அமைப்பு. ஒரு சம்பவம் இப்படி நடந்தது என்று ஒருவர் ஃப்ளாஷ்பாக்காக சொல்வார்; இல்லை இப்படித்தான் நடந்தது என்று அடுத்தவர் சொல்வார். காமெரா கோணம் விரிந்துகொண்டே போய் இன்னும் இன்னும் காட்சிகள் தெரிவது போல ஒரு உணர்வு.

கல்லூரியில் பாப்புலர் ப்ரொஃபசர் ஜெய்ஷங்கர். ஆங்கிலோ-இந்தியர் வி.எஸ். ராகவன் வீட்டில் வாடகைக்கு இருக்கிறார். ராகவனோடு நல்ல உறவு. தன் மாணவன் நாகேஷின் சகோதரி லக்ஷ்மியோடு நிச்சயதார்த்தம் ஆகிறது. திடீரென்று அவர் மீது ஒருவர் மாற்றி பெண்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மாணவி ஸ்ரீவித்யா ஜெய் தன்னை கெடுக்க முயன்றார் என்று குற்றம் சாட்டுகிறார். இன்னொரு மாணவி தனக்கு அவர் லவ் லெட்டர் கொடுத்தார் என்கிறார். வி.எஸ். ராகவனின் மகள் விஜயலலிதா ஜெய்தான் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா என்கிறார். ஜெய் கைது செய்யப்படுகிறார். பிறகு?

பழைய படம், எல்லாரும் பார்த்திருப்பார்கள். அதனால் சஸ்பென்ஸ் எல்லாம் வைக்க வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். கதையின் முக்கியமான முடிச்சு – தன்னை கெடுக்க முயலும் ப்ரொஃபசரிடமிருந்து தப்பி ஓடும் பெண் பாடப்புத்தகங்களையும் பையையும் கவனமாக எடுத்துக் கொண்டு போகமாட்டாள் என்ற பாயின்ட் – நன்றாக வந்திருக்கிறது. அதில் நான் மிகவும் ரசித்தது இயக்குனரின், அன்றைய ரசிகர்களின் tacit முடிவு – அப்படி புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்தாள் என்று பெண்ணின் அம்மா உண்மையைத்தான் சொல்வாள், பொய் சாட்சி சொல்லமாட்டாள் என்பதுதான். கதாபாத்திரங்கள் பொதுவாக உண்மையைத்தான் சொல்வார்கள் என்பது அன்றைக்கு ஒரு unspoken assumption ஆக இருந்திருக்கிறது.

ஜெய் நன்றாக நடித்திருக்கிறார். அதுவும் ஸ்ரீவித்யா என்ன நடந்தது என்று சொல்லும்போது ஃப்ளாஷ்பாக்கில் அவர் விடும் ரொமாண்டிக் லுக்கும், தானே விவரிக்கும்போது அவர் முகத்தில் காட்டும் கண்டிப்பும் நல்ல கான்ட்ராஸ்ட். நாகேஷை மாணவனாக ஒத்துக் கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான். கொஞ்சம் மிகை நடிப்புதான். ஆனால் போலீஸ் அதிகாரி ஸ்ரீகாந்த் அவரை விசாரிக்கும்போது அவர் பேசுவது நன்றாக இருக்கும். காலேஜ் பிரின்சிபால் ஜெமினி கணேசன் சின்ன ரோலில் திறமையாக நடித்திருப்பார். வி.எஸ். ராகவனுக்கு over the top ரோல். சிவாஜி சாயல் அடிக்கிறது. அது சரி, இன்றைக்கும் கூட சிவாஜி சாயல் இல்லாத நடிப்பைப் பார்ப்பது கஷ்டம்தான்.

சில வசனங்களில் புத்திசாலித்தனம் தெரிகிறது. ஜெய் மீது எல்லாரும் குறை சொல்லும்போது நாகேஷ் வெள்ளை சுவரில் ஒரு கறுப்புப் புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். கறுப்புப் புள்ளி என்று சஹஸ்ரநாமம் சொன்னதும் இவ்வளவு பெரிய வெள்ளைச் சுவர் தெரியவில்லையா என்பார்.

சில இடங்களில் இயக்குனர் கோட்டை விடுகிறார். ஜெய் ஸ்ரீவித்யா தன் மேல் ஆசைப்படுகிறார் என்ற உண்மையை முதலில் சொல்லமாட்டார். ஏனென்றால் அது வெளியே தெரிந்தால் அவளை எல்லாரும் கேவலமாகப் பார்ப்பார்கள் என்பார். ஆனால் அவரே இதை எல்லாருக்கும் தெரியப்படுத்துகிறேன் என்று ஸ்ரீவித்யாவை மிரட்டுவார். அதனால்தான் ஸ்ரீவித்யா பொய்யாக அவர் மேல் பழி போடுவதே!

1970-இல் வந்த படம். ஜெய், லக்ஷ்மி, நாகேஷ், வி.எஸ். ராகவன், விஜயலலிதா, ஜெமினி, ஸ்ரீகாந்த் தவிர எஸ்.வி. சஹஸ்ரநாமம், வி. கோபாலகிருஷ்ணன், நீலு, ஒய்.ஜி. மகேந்திரன் (முதல் படம்), மனோகர், சுகுமாரி, எஸ்.என். லட்சுமி முகங்கள் தெரிகிறது. ஒரு சின்ன அம்மா ரோலில் வருவது ஜெயந்தி மாதிரி இருக்கிறது, ஆனால் 70-இலேயே ஜெயந்திக்கு அம்மா ரோலா என்று சந்தேகமாக இருக்கிறது. கதை வசனம் இயக்கம் பாலச்சந்தர். பாடல்கள் வாலி என்று நினைக்கிறேன். இசை வி. குமார்.

படத்தில் இரண்டு ஹிட் பாட்டுகள் – நான் உன்னை மாற்றிப் பாடுகிறேன் ஒன்று. அதுவும் மூன்று முறை வரும். ஒரு முறை விஜயலலிதா முதலில் விவரிக்கும் கோணத்தில், ஒரு முறை ஜெய்யின் கோணத்தில், இன்னொரு முறை முழு உண்மையாக. இப்போது கூட புத்திசாலித்தனமான காட்சியாகத்தான் தெரிகிறது.

இன்னொன்று நித்தம் நித்தம் ஒரு புத்தம் புது சுகம். இதுவும் அன்றைக்கு புதுமையான முறையில் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. Silhoutte உத்தி நன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பாட்டில் இருக்கும் துள்ளலும் பொருத்தமாக இருக்கிறது.

பூலோகமா என்று தொடங்கும் ஒரு நாடகப் பாட்டு ஒன்று. நாகேஷ் சத்தியவான் சாவித்திரி நாடகம் போடுகிறார். பிரமாதம் என்று சொல்வதற்கில்லை, ஆனால் பார்க்கலாம், கேட்கலாம்.

உங்களில் ஒருவன் நான் என்று இன்னொரு பாட்டு. மறந்துவிடலாம்.

சுருக்கமாக பாலச்சந்தரின் சிறந்த படங்களில் ஒன்று. பார்க்கலாம். பத்துக்கு ஏழு மார்க். பி க்ரேட்.

சந்திரபாபு – 25


நன்றி : ஆனந்த விகடன், விமல்

சந்திரபாபு – தமிழன் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும், சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?

1. கடலோர நகரமான தூத்துக்குடியில் பிறந்த கலைமுத்து. பனிமயதாசன் என்று பெயர். கடும் காய்ச்சலில் இருந்து மீண்டது கர்த்தரின் கருணை என ஜோசப் பிச்சை என்ற பெயரை இணைத்தார்கள். பாபு என்பது செல்லப் பெயர். சந்திர குலத்தில் பிறந்தவன் என்ற பெருமிதத்தால் சந்திரபாபு என்று இவரே பேர் சூடிக்கொண்டார்!

2. பெற்றோர் ரோட்ரிக்ஸ் – ரோஸலின் இருவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையும் நடத்தியவர்கள். உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டதால் இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட, கூடவே சென்ற சந்திரபாபுவும் கொழும்பில் தனது பள்ளிக் கல்வியை முடித்தார்!

3. கொழும்புவில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். திருவல்லிக்கேணியில் வீடு. சாந்தோம் கடற்கரையில் இசையமைப்பாளர் வேதா, தபேலா தாழு. ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. இசை ஞானத்தை விதைத்தது இந்த இருவரும்தான்!

4. காமராஜருக்கு அறிமுகமான குடும்பம் பாபுவின் அப்பா சிறையில் இருந்த காலத்தில் அழைத்துச் சென்று குளிப்பாட்டி அரவணைத்தவர் காமராஜ். சந்திரபாபு மறைந்தபோது மலர் மாலையுடன் வந்த முதல் ஆளும் காமராஜரே!

5. சந்திரபாபுக்கு ஆங்கில அதிகாரிகள். பிரிட்டிஷ் பெண்கள், அவர்களது உடைகள் பாவனைகள் மீது சிறுவயதில் அலாதியான ஈடுபாடு இருந்தது. ஷர்ட் பேண்ட் இன் செய்து, சுத்தமான உடுப்பை அணியும் ஆசை அப்படித்தான் ஆரம்பித்தது!

6· மேற்கத்திய இசை கேட்பது, ராக் அண்ட் ரோல் நடனம் ஆடுவது, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவது. ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்ப்பது- பாபுவின் இளமைக் காலப் பொழுதுபோக்குகள். சந்திரபாபுவை கலைவாணி பிலிம்சுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர் சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன். அவருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தவர் மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா!

7. முதல் படம், தன அமராவதி (1947), கடைசிப் படம் பிள்ளைச் செல்வம் (1974), 50-களில் சுமார் 15 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார்!

8· புனித ஃபாத்திமா ஓவியத்தை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். இறந்தபோது அவருடன் வைத்து அதுவும் புதைக்கப்பட்டது!

9. ரப்பரைப் போன்ற உடல்வாகு. எவ்வளவு உயரத்தில் இருந்தும் குதிப்பார் எத்தனை தடவை சொன்னாலும் திரும்பத் திரும்பக் குதிப்பார். அவர் படங்களில் டூப் போட்டது இல்லை!

10. எம்.ஜி.ஆரை `மிஸ்டர் எம்.ஜி.ஆர்.’ என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான். சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அது பற்றி இவர் கவலைப்படவும் இல்லை!

11· `புகழ் பெறுவதற்காக விளம்பரம் அடையும் வரை தொழிலில் அக்கறை காட்டுவது இயற்கை. ஆனால், புகழ் பெற்ற பிறகும் நல்ல விளம்பரம் கிடைத்த பிறகும் சந்திரபாபுவைப் போல அக்கறை காண்பிப்பவர்கள் குறைவு’ என்று சொன்னவர் எம்.ஜி.ஆர்!

12· ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர்!

13· ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘பிறக்கும் போதும் அழுகின்றான்’, ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’, ‘ஒண்ணுமே புரியல உலகத்துல’, ‘பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’, ‘என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா’ ஆகிய 10 பாடல்களும் 50 ஆண்டுகளாக இன்னமும் தமிழகத்தின் இரவு நேரச் சங்கீதம்!
(இந்த ஒரு பாட்டுக்குத்தான் வீடியோ கிடைத்தது!)

14. எஸ்.எஸ். வாசனைச் சந்திக்க முடியாத வருத்தத்தில் ஜெமினி ஸ்டுடியோ வாசலில் மயில் துத்தநாகத்தைக் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர், தீக்குச்சியை உரசி தன் கையைச் சுட்டுக்கொண்டார். `நான் தீக்குச்சியைக் கொளுத்தியதை உணரலாம். ஆனால், அந்த சூட்டை உங்களால் உணர முடியாது’ என்று நீதிபதிக்குத் தன் துயரத்தை உணர்த்தினார !

15· சென்னை பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். சகோதரி படத்து பால்காரனைப் பார்த்துத்தான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்பதை தமிழகம் உணர்ந்தது!

16· எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மிக முக்கியமான ரசிகர். இருவரும் மணிக்கணக்கில் பேசுவார்கள். சந்திரபாபு கேட்டு அவருக்காக எழுதிய நாடகம்தான் `எனக்காக அழு’, ஆனால், அதில் சந்திரபாபு கடைசி வரை நடிக்கவில்லை!

17· ஷீலா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். முதலிரவின் போதே தனக்கு உள்ள இன்னொரு தொடர்பை அந்தப் பெண் சொன்னார். மறுநாள் காலையில் மனப்பூர்வமாக ஷீலாவை அனுப்பிவைத்துவிட்டார்!

18· நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார். `சில சமயங்களில் என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல’, அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதைவைத் தாழிட்டுக் கொள்பவனும் அல்ல’ என்று சொன்னார்!

19· மூன்று பேரைத் தனது வழிகாட்டிகளாகச் சொன்னார். “மனிதனாக வாழ்வது எப்படி என்று போதித்தவன் ஆபிரகாம் லிங்கன்; ஒரு மனிதனைச் சாகடிக்காமல் சித்ரவதை செய்வது எப்படி என்பதை எனக்குக் கற்றுத் தந்த என்னுடைய மாமனார்; ராஜதந்திரம் என்றால் என்ன என்பதையும் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் கற்றுத் தந்தவர் ஜெமினி கணேசன்’’ என்றவர்!

20· ‘பாபு இஸ் பாபு, ஐ யம் பாபு’ என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். படப்பிடிப்புத் தளத்தில் நுழையும்போது, ‘ஓ ஜீசஸ்!’ என்று சொல்லியபடிதான் நுழைவார்!

21· ஜனாதிபதி மாளிகையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் முன்னால் பிறக்கும் போதும் அழுகின்றான் பாடலைப் பாடினார். பிரமாதம் என்று அவர் பாராட்ட, உடனே ஓடிப் போய் அவரது மடியில் உட்கார்ந்துகொண்டார் சந்திரபாபு, `கண்ணா நீ ரசிகன்டா’ என்று அவரது தாடையைத் தடவ, ஜனாதிபதியும் மகிழ, உற்சாகமான பொழுது அது!

22· தட்டுங்கள் திறக்கப்படும் அவர் இயக்கிய படம். அதில்தான் கதை, திரைக்கதை, டைரக்‌ஷனுடன் நடனம் என்றும் சேர்த்துப் போட்டார். அப்படி போட்ட முதல் இயக்குநர் இவர்தான்!

23· நடிப்பு, பாட்டு, நடனம், இசை, ஒவியம், நாடகம், சிற்பம் ஆகிய அனைத்தின் மீதும் ஈடுபாடும், அது தொடர்பான கலைஞர்கள் அனைவரையும் தேடித் தேடிப் பழகியவரும் கூட. `ஆனால், எனக்கு நடிப்பைத் தவிர, செல்ஃப் ஷேவிங் மட்டும்தான் தெரியும்’ என்று சிரிப்பார்!

24· ‘நீ ஒரு கலைஞன், கற்பனை வளம் மிக்கவன், சிந்தனை சக்தி அதிகம் உள்ளவன்’ என்ற ஒரு பாராட்டு மட்டுமே தனக்குப் போதும் என்று சந்திரபாபு சொன்னார். இப்படிப் பாராட்டியவர், அவருக்கு ஒரு நாள் மட்டுமே மனைவியாக இருந்த ஷீலா!

25· ‘என் நடிப்பு மற்றவர்களுக்கு ஒரு சவால்தான். யாராவது இதைப் போல நடித்துக் காட்டட்டும், பார்க்கலாம்!’ என்று சவால்விட்டார் சந்திரபாபு. எதிர்கொள்ள இன்று வரை யாரும் இல்லை!

பிற்சேர்க்கை: சாரதாவின் மறுமொழியிலிருந்து –

சந்திரபாபு இறப்பதற்கு சில காலம் முன்பு, பிலிமாலயா என்ற சினிமா மாதப் பத்திரிகையில் மாடி வீட்டு ஏழையின் கண்ணீர்க் கதை என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வந்தார். அதில் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒளிவு மறைவின்றி எழுதியிருந்தார். அதனால் அந்த பத்திரிகை அலுவலகம் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, தொடர் நிறுத்தப்பட்டது.

படப்பிடிப்பின்போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு பூரண ஒத்துழைப்பு கொடுக்காதவர் என்ற அவப்பெயர் இவருக்கு உண்டு. அதுபற்றி பல பேர் பல சமயங்களில் கூறியிருக்கிறார்கள். அவருக்கிருந்த மார்க்கெட் வால்யூவுக்காக படங்களில் போட வேண்டியிருந்தபோதிலும், முடிந்தவரையில் ‘கழட்டி விடவே’ பார்த்தனர். அந்த நேரம் ஆபத்பாந்தவனாக நாகேஷ், புயலாக திரையுலகில் நுழைய, இவர் சுத்தமாக ஓரங்கட்டப்பட்டார்.

அது போலவே பாடல் பதிவின்போதும் இவரை வைத்து பாடல் ஒலிப்பதிவு செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம் என்பார்கள். சமீபத்தில் கூட ஜெயா டி.வி.யின் ‘ராகமாலிகா’ நிகழ்ச்சியில் டி.கே.ராமமூர்த்தி சொன்னார். சிரத்தை எடுத்துப் பாடமாட்டார், திருப்பி திருப்பி டேக் வாங்குவார். அப்போதெல்லாம் ட்ராக் சிஸ்டம் கிடையாது என்பதால் பாடகர் ஒருவர் தப்பு செய்தாலும் அனைத்து இசைக்கருவி வாசிப்பவர்களும் திருப்பி திருப்பி வாசிக்க வேண்டும். அதனால் இவர் பாட்டு என்றால் இன்ஸ்ட்ருமெண்ட் பிளேயர்கள் ஜகா வாங்கி ஓடுவார்களாம்.

புகழின் உச்சியில் இருக்கும்போது இது போன்ற வேண்டாத பழக்கங்களால் மார்க்கெட்டை இழந்து தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர். (தற்போதைய நடிகர் கார்த்திக் போல. வளமாக ஒளி வீச வேண்டிய அருமையான வயதுகளை கார்த்திக் எப்படி தொலைத்து நின்றார் என்பது நமக்குத் தெரியும்தானே).

நடிகர் ஜெமினி கணேசன் சாவி வார இதழில் எழுதி வந்த ஆசையாக ஒரு அசை வாழ்க்கைத் தொடரில், ‘நடிகை சாவித்திரியின் வேண்டாத பழக்கங்களுக்கும், விபரீத முடிவுக்கும் சந்திரபாபுதான் காரணம்’ என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.

இவைற்றையெல்லாம் மீறியும் சந்திரபாபு சுடர் விட்டாரென்றால் அது அவருடைய அபார திறமையால் என்பதில் சந்தேகமில்லை.

எந்த உயரத்திலிருந்தும் தானே குதிப்பார் என்பதை மெய்ப்பிக்கும் ஒரு இடம் – ஆண்டவன் கட்டளையில் சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடலில் ஒரு பஸ்ஸின் டாப்பிலிருந்து படுக்கை வசத்தில் பொத்தென்று விழுவார். கீழே நிற்பவர்கள் அவர் குதிக்கத் துவங்கிய பின்னர்தான் கைகளைக் கோர்ப்பார்கள். அவர்கள் கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தாலும் விபரீதமாகியிருக்கும். ரொம்பவே தைரியம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சந்திரபாபுவும் புதுமைப்பித்தனும்
1964-இல் சந்திரபாபுவின் பேட்டி
சந்திரபாபுவின் மாஸ்டர்பீஸ் – சபாஷ் மீனா
சந்திரபாபு பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
சந்திரபாபு பற்றி எழுத்தாளர் முகில்
சந்திரபாபு சபாஷ் மீனா படத்துக்கு புக் ஆன கதை

களத்தூர் கண்ணம்மா


படம் வந்தபோது (செப்டம்பர் 1960) விகடனில் வந்த விமர்சனம். கமலைப் பற்றி அப்பவே புகழ ஆரம்பித்துவிட்டார்கள்! நன்றி விகடன்!

சண்முகம் – மீனாட்சி

சண்: ஏன் மீனாட்சி, முகமெல்லாம் ஒரே வாட்டமா இருக்குது?

மீனா: களத்தூர் கண்ணம்மா படத்துக்குப் போயிருந்தேன். அநாதைக் குழந்தை ஒண்ணு படற கஷ்டத்தைப் பார்த்து என் மனசு ரொம்பச் சங்கடப்பட்டுதுங்க.

சண்: அப்படி என்ன உருக்கமான கதை அது?

மீனா: களத்தூர் ஜமீன்தாரோட பிள்ளை ராஜா, அவங்க ஜமீன்லேயே வேலை பார்க்கிறவருடைய பெண் கண்ணம்மாவைக் காதலிச்சு, ரகசியக் கலியாணம் பண்ணிக்கறாரு. கலியாணம் ஆனவுடனேயே மனைவியைப் பிரிஞ்சு, சீமைக்குப் போறாரு. கல்யாண விஷயம் ஜமீன்தாருக்குத் தெரிஞ்சு போவுது.

சண்: அப்புறம் மூணு பேரும் தனித்தனியா பிரிஞ்சுடுவாங்க. திரும்பி வந்த ராஜா கண்ணம்மாவைக் காணாமல் தவிப்பான். கடைசியிலே எல்லாம் ஒண்ணு கூடுவாங்க. அவ்வளவுதானே!

மீனா: ஆமாம். அந்தப் பையன் நடிப்புதான் எல்லாரையும் உலுக்கிடுச்சு. ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே‘ன்னு முருகன் படத்துக்கு எதிரிலே நின்னு அந்தப் பையன் பாடியது ரொம்ப உருக்கமா இருந்துதுங்க. சாவித்திரியும் ஜெமினி கணேசனும் கண்ணம்மாவும் ராஜாவுமா வராங்க. காதலியா வரபோதும் சரி, கண் கலங்கித் தவிக்கிற மனைவியா வரபோதும் சரி, கொடுத்த வேஷத்தை நல்லாச் செய்திருக்கு சாவித்திரி.

சண்: ஜமீன்தார் யார்? பாலையாவா?

மீனா: ஆமாம். அவர் நடிப்புக்குச் சொல்லணுமா! சுப்பய்யாதான் வேலைக்காரனா வராரு. கொஞ்சம் ‘ஓவரா’ நடிக்கிறாரு. ஆனால், பிறந்த குழந்தையை அநாதை ஆசிரமத்திலே கொண்டுபோய் விடற இடத்திலே, அந்தக் குழந்தை துணியைப் பிடிச்சுக்குது. அதை அவர் விலக்கிக்கிட்டு வர இடம் ரொம்ப நல்லா இருந்தது.

சண்: டைரக்ஷன் பீம்சிங்கா?

மீனா: ஆமாம். எப்படிச் சரியா சொன்னீங்க?

சண்: மறந்துட்டியா? இதே மாதிரி காட்சியை பாகப் பிரிவினையிலே பார்க்கலியா நீ?

மீனா: இந்தக் குறையெல்லாம் உங்களுக்குத்தான் படும். எனக்கென்னவோ, இதில் அழுகைக்குதான் அதிக இடம் இருக்கு, சிரிக்கவே முடியலேங்கறது ஒண்ணுதான் குறையாகப்பட்டது. நான் பார்த்த நல்ல தமிழ்ப் படங்களிலே களத்தூர் கண்ணம்மாவைக் கண்டிப்பா சேர்த்துக்குவேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்

ஸ்ரீதரின் “தேனிலவு” நினைவுகள்


சாரதா இதை தேனிலவு பதிவுக்கு ஒரு மறுமொழியாக எழுதி இருந்தார். சுவாரசியமான நினைவுகள், அதையே ஒரு பதிவாக போட்டிருக்கிறேன்.

அன்றைக்கு டெக்னிக்கல் வசதிகள் இல்லாத காலத்தில் தேனிலவு படத்தை எடுக்க புதுமை இயக்குனர் ஸ்ரீதர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை ஸ்ரீதர் வாயிலாகவே கேட்போம். (பழைய சினிமா இதழ் ஒன்றில் நான் படித்தது). ஸ்ரீதர் சொல்கிறார்:

தேன் நிலவு படத்தை காஷ்மீரில் ஐம்பத்திரண்டு நாடகள் ஷூட் பண்ணினோம். எடுத்த காட்சிகளை உடனே போட்டுப் பார்க்கும் வசதி எல்லாம் அப்போது கிடையாது. அதிலும் நாங்கள் இருந்த இடம் ஸ்ரீநகரில் இருந்து வெகு தொலைவில் ஒரு கிராமத்துக்கு அருகில் இருந்தது. அந்த கிராமத்தில் ஒரேயொரு சினிமா தியேட்டர்தான் உண்டு. காஷ்மீரில் கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகளை சென்னைக்குப் போய் போட்டுப் பார்த்து சரியாக வரவில்லை என்றால் மீண்டும் ஷூட் பண்ணுவது எல்லாம் முடியாத காரியம். அதனால் நாங்கள் காஷ்மீரில் இருக்கும்போதே, எடுத்தவற்றை எல்லாம் அவ்வப்போது போட்டுப் பார்க்க விரும்பினோம். சரியாக வரவில்லையென்றால் மீண்டும் எடுத்துக் கொள்ளலாமே என்பதனால்.

காஷ்மீரில் அதற்கான வசதிகள் அப்போது இல்லாததால், ஷூட்டிங் எடுத்தவற்றை போட்டுப் பார்க்க ஃபிலிம் ரோலகளை சென்னை அனுப்பித்தான் கழுவி பிரிண்ட் போட்டு வரவேண்டும்.

அப்போதெல்லாம் ஸ்ரீநகரில் இருந்து வாரம் இரண்டு முறை மட்டும் ‘டகோட்டா’ விமானம் டெல்லிக்குப் போகும். அதில் எங்கள் சித்ராலயா நிர்வாகி ராமகிருஷ்ணன் மற்றும் ஒருவரை, நாங்கள் எடுத்த நெகட்டிவ் படச் சுருள்களோடு அனுப்பி வைப்போம். அவர்கள் டெல்லி சென்று, அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தை பிடித்து சென்னை சென்று, அங்கு விஜயா லேபரட்டரியில் அவற்றை பிரிண்ட் போட்டு மீண்டும் டெல்லி வழியாக ஸ்ரீநகர் வருவார்கள்.

அந்த படப் பிரதிகளை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருந்த இடத்துக்கு அருகிலுள்ள கிராமத்தின் தியேட்டருக்குப் போய் அவர்களிடம் அனுமதி பெற்று, அங்கு வழக்கமான இரவுக் காட்சி முடிந்த பிறகு, இரவு ஒரு மணிக்கு மேல் அங்குள்ள புரொஜக்டரில் திரையிட்டு நான், கோபு, ஜெமினி, வைஜயந்தி(மாலா), நம்பியார், வின்சென்ட், பி.என். சுந்தரம் மற்றும் எங்கள் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பார்ப்போம். மனதுக்கு திருப்தியாக இருக்கும். திருப்தி இல்லாத சில காட்சிகளை மீண்டும் எடுத்திருக்கிறோம். இரவு சுமார் மூன்று மணிக்கு மேல் அங்கிருந்து திரும்பி வந்து, படுத்து விட்டு காலை ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொள்வோம். உண்மையில் ‘தேன் நிலவு’ படம் முதலில் ரிலீஸான தியேட்டர், காஷ்மீர் கிராமத்திலுள்ள அந்த தியேட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இடத்துக்கு முழுவதும் காரில் போக முடியாது. சிறிது தூரம் நடந்தும் போக வேண்டும். அப்படிப் போகும்போது, தான் ஒரு பெரிய வில்லன் என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் படச்சுருள் பெட்டிகளை நம்பியார் தன்னுடைய தலையிலும், தோளிலும் சுமந்து வந்ததை நான் இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் பட்ட கஷ்ட்டத்துக்கு பலன் கிடைத்தது. படம் வெற்றிகரமாக ஓடியது.

இவ்வாறு ஸ்ரீதர் சொல்லியிருந்தார்.

எந்த வித வசதியும் இல்லாத அந்த நாட்களில் நல்ல படங்களை நமக்கு தர வேண்டும் என்று அவர்கள் பட்ட கஷ்ட்டங்களைப் பார்த்தீர்களா?. ஆனால் இன்றைக்கு இத்தனை டெக்னிக்கல் முன்னேற்றங்களை கையில் வைத்துக்கொண்டு…, (வேண்டாம், எதுக்கு வம்பு. யாராவது அடிக்க வருவாங்க. அடி வாங்குவதற்கெல்லாம் நமக்கு தெம்பு இல்லை).

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்->ஸ்ரீதர் பக்கம், கூட்டாஞ்சோறு->நண்பர்கள்->சாரதா பக்கம், படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்:
தேனிலவு – ஆர்வியின் விமர்சனம்

ஸ்ரீதரின் “கல்யாணப் பரிசு” பற்றி சாரதா


இயக்குனர் ஸ்ரீதர்

தமிழ் திரைப்பட உலகை புரட்டிப் போட்ட ஒரு பெயர். கதாநாயகர்களுக்காக படம் பார்க்க மக்கள் திரையரங்குகளுக்கு வந்த நிலையை மாற்றி, ஒரு இயக்குனருக்காக மக்கள் திரைப்பட கொட்டகைகளுக்கு படையெடுக்க வைத்த ஒரு மகத்தான பெயர். பின்னாளில் பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம் என இயக்குநரின் பெயரில் படம் சொல்லப்பட முதன் முதலில் பிள்ளையார் சுழியிட்ட பெயர்.

அது வரை நீண்ட வசனங்கள் மூலமாகவும், அதற்கு முன்னர் ஏராளமான பாடல்கள் மூலமாகவும் படத்தின் கதை சொல்லப்பட்ட நிலையை மாற்றி காமிரா வழியாக கதையைச் சொல்ல வைத்தவர் ஸ்ரீதர். எப்படி கேமரா கோணம் அமைப்பது, எப்படி காட்சிக்குத் தேவையான லைட்டிங் செட் பண்ணுவது என்பதெல்லாம் அவர் படமெடுக்கத் துவங்கிய காலத்துக்குப் பின்தான் பேசப்பட்டன.

அதற்கு முன்னர் பராசக்தி போன்ற புரட்சிப் படங்களும், மலைக் கள்ளன், நாடோடி மன்னன் போன்ற வித்தியாசமான படங்களும், சந்திரலேகா போன்ற பிரம்மாண்டமான படங்களும் வந்திருந்த போதிலும், ஒரு படத்தை கவிதையாக வடிக்க முடியும் என்று ஒரு புதிய சித்தாந்தத்தை துவக்கியவர் ‘புதுமை இயக்குனர்’ ஸ்ரீதர்தான் என்றால் அது மிகையல்ல. அமர தீபம் போன்ற படங்களுக்கு வசனம் எழுதுபவராக தன்னுடைய வாழ்க்கையைத் துவங்கிய போதிலும் அவரை முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான திரைப்படவாதியாக அடையாளம் காட்டியது, அவரது கதை வசனம் மற்றும் இயக்கத்தில் முதன்முதலாக வந்த கல்யாணப் பரிசுதான்.

கல்யாணப் பரிசு ஒரு மாபெரும் வெள்ளிவிழாப்படமாக அமைந்தது என்பது மட்டும் அதற்குப் பெருமையல்ல. அது பல படங்கள் செய்யக்கூடிய சாதனைதான். ஆனால் கல்யாணப் பரிசு படத்தை மக்கள் வேறு விதமாகக் கண்டார்கள். அது ஏதோ தங்கள் வாழ்க்கையில் ஒன்றிவிட்ட ஒரு கதையாக நிகழ்ச்சியாக அவர்கள் மனதில் படிந்தது. குறிப்பாக பெண்கள் மனத்தில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. டீக்கடைகளிலும், முடி வெட்டும் கடைகளிலும் அதுவே தலைப்புச் செய்தியாக பேசப்பட்டது.

கோயில்களிலும் குளக்கரைகளிலும் சந்தித்துக்கொள்ளும் பெண்களுக்கு வேறு பேச்சில்லாமல் போனது. ‘கல்யாணப்பரிசு படத்தை பார்த்தாயா’ என்று கேட்பதற்கு பதில், ‘நான் இத்தனை முறை பார்த்தேன், நீ எத்தனை முறை பார்த்தாய்’ என்று கேட்டுக் கொள்வது வாடிக்கையாகிப் போனது.

அந்த ஆண்டு தமிழகத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு ‘வசந்தி’ என்றும் ஆண் குழந்தைகளுக்கு ‘பாஸ்கர்’ என்றும் பெயர் வைப்பதை பெருமையாக கொள்ளுமளவுக்கு அந்தப் படம் மக்கள் மனத்தில் ஒன்றிப் போனது.

படம் முடிந்த பின்னரும் கூட தியேட்டர் இருக்கையை விட்டு எழுந்திருக்காமல், ‘காதலிலே தோல்வியுற்றான்’ என்று பாடிக் கொண்டே அடிவானத்தை நோக்கிச் சென்ற பாஸ்கர் என்னவானான் என்று பிரமை பிடித்துப் போய் உட்கார்ந்திருந்த ரசிகர்கள் ஏராளம்.

1959ல், ஒரு புறம் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிம்ம கர்ஜனைக்கும், மறுபுறம் நாடோடி மன்னனின் மின்னல் வெட்டும் வாள் வீச்சுக்கும் நடுவே இந்த 21 வயது இளைஞர் இயக்குனராக விஸ்வரூபம் எடுத்தபோது பார்த்த கண்கள் பிரமித்தன.

கல்யாணப் பரிசு படத்தின் கதையை அதன் தயாரிப்பாளர் மற்றும் அன்றைய திரையுலக ஜாம்பவான்களுக்கு நடுவில் சின்னஞ்சிறு பையனாக இவர் கதை சொன்னபோது அதிசயித்தவர்கள் அதன் முடிவை இவர் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தனர். காரணம் முடிவு அன்றைய திரைப்பட இலக்கணத்துக்கு மாறுபட்டிருந்தது. கதாநாயகன் கதாநாயகியின் கழுத்தில் தாலி கட்டும்போது “வணக்கம்” போட்டே பழகியவர்கள் அவர்கள்.

“என்னது? கதாநாயகியின் கழுத்தில் கதாநாயகன் தாலி கட்டவில்லையா? கதாநாயகிக்கு வேறொருவன் தாலி கட்டுகிறானா? கதாநாயகன் ஏமாற்றத்தோடு செல்கிறானா? இது என்ன முடிவு? நிச்சயம் இந்த இளைஞர் தன் முதல் படத்திலேயே தோலிவியைத்தான் சந்திக்கப் போகிறார்” என்று அனைவரும் ஆரூட்ம் சொன்னார்கள்.

அவர்களின் ஆரூடங்களைப் பொய்யாக்கி விட்டு கல்யாணப் பரிசு மாபெரும் வெற்றியடைந்தது. மற்ற இயக்குனர்களுக்கு இந்த இளம் இயக்குனர் சிம்ம சொப்பனமானார்.

எந்தப்பக்கம் திரும்பினாலும் ‘வாடிக்கை மறந்ததும் ஏனோ’, ‘ஆசையாலே மனம்.. அஞ்சுது கொஞ்சுது தினம்’, ‘காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி’ இப்படி அப்படத்தின் பாடல்களே ஒலித்தன.

பட்டுக்கோட்டையார், ஏ.எம்.ராஜா, ஸ்ரீதர் கூட்டணியில் இப்படம் திரையிடப்பட்ட அரங்குகள் எல்லாம் ‘பாடல் பெற்ற தலங்கள்’ ஆனது.

1960 முதல் இன்று வரையில் ஒவ்வொரு தீபாவளியன்றும் வானொலியில் ஒலி பரப்பப்படும் முதல் பாடல் பி.சுசீலாவின் இனிய குரலில், ராஜாவின் இசையில் பட்டுக்கோட்டையாரின் சாகாவரம் பெற்ற ‘உன்னைக்கண்டு நானாட… என்னைக்கண்டு நீயாட’ என்னும் கல்யாணப் பரிசு பாடலே என்பது இப்படத்தின் பிரத்தியேக சிறப்பு.

‘புதுமையை கொடுத்தால் நிச்சயம் வரவேற்போம்’ என்று தமிழக மக்கள் திரண்டெழுந்து கோஷமிட, இந்த புதுமை இயக்குனரின் வெற்றிப்பயணம் ஆரம்பமானது….

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: ஆளுமைகள்->ஸ்ரீதர் பக்கம், கூட்டாஞ்சோறு->நண்பர்கள்->சாரதா பக்கம், படங்களின் பட்டியல்

தொடர்புடைய பக்கங்கள்:
கல்யாணப் பரிசு – ஆர்வி விமர்சனம், விகடன் விமர்சனம்

பிற்சேர்க்கை: விஜயன் சொல்கிறார் – “எல்லாவற்றிலும் புதுமை. வசனம், காமிரா, உடை, ஒப்பனை, நாயகன் நாயகி சக நடிகர்கள் தேர்வு என்று எல்லாவற்றிலும் புதுமை, புரட்சி. ஒரிஜினாலிட்டி. பம்பாய் படவுலகம் மூக்கின் மேல் விரலை வைக்கிறது. சாந்தாராம், குரு தத் போன்ற ஜாம்பவான்கள் கூப்பிட்டு விருந்து வைக்கிறார்கள். தங்கள் நாயகனை வைத்து படம் எடுக்கவில்லை என்று எம்ஜிஆர் ரசிகர்கள் இவர் படம் ஓடும் அரங்கங்களின் இருக்கையை கிழிக்கிறார்கள். வேலுமணி போன்ற தயாரிப்பாளர்கள் இவர் இயக்கத்தில் படம் தயாரிக்க brand new plymouth காரையே அட்வான்சாக கொடுத்தார்கள். வெள்ளிவிழா இயக்குனர் பீம்சிங் தன மகன் லெனினை இவரிடம் தொழில் கற்று கொள்ள அனுப்பினார். சினிமாவை வெறுத்த காமராஜர் இவர் பெருமை உணர்ந்து இவர் திருமண வரவேற்பில் கலந்து இவரை பெருமைப்படுத்தினார்.”

வஞ்சிக்கோட்டை வாலிபன்


Vanjikkottai Valibanமுப்பது வருஷத்துக்கு முன்னால் இன்றைக்கு டிவி எப்படியோ அப்படி ரேடியோ இருந்தது. விவித்பாரதி கேட்டு வளர்ந்த ஜெனரேஷன் அது. கடைத்தெருவில் நடந்து போனால் நாலு கடையிலாவது ரேடியோ பாட்டு கேட்கும். அப்படி காற்றினிலே வரும் கீதங்களில் இரண்டு கீதம் எப்போதும் என்னைப் பிடித்து நிறுத்திவிடும். என்ன அவசர வேலையாக இருந்தாலும் அந்தப் பாட்டைக் கேட்டுவிட்டுதான் அடுத்த அடி வைப்பேன். அதில் ஒன்று வஞ்சிக் கோட்டை வாலிபனின் போட்டி நடனப் பாட்டு.

என்ன அற்புதமான பாட்டு? காதல் என்பது இதுதானா என்று மெதுவாக ஆரம்பிக்கும். அப்புறம் கண்ணும் கண்ணும் கலந்து என்று கொஞ்சம் டெம்போ ஏறும். வீரப்பா சரியான போட்டியைக் கண்டு சபாஷ் போடுவார். வைஜயந்திமாலா களத்தில் ஜிலுஜிலுவென குதிப்பார். பத்மினி ஆறு பெருகி வரின் ஆணை கட்டலாகும் என்று சொல்லிப் பார்ப்பார். வை. மாலா இன்னொருத்தி நிகராகுமோ என்று அலட்டுவார். ஆடு மயில் முன்னே ஆணவத்தில் வந்தவரும் பாடும் குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடுபவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆடிப் பாடுவார்கள். சி. ராமச்சந்திரா சும்மா புகுந்து விளையாடிவிட்டார். வை. மாலா பாடும்போது ஒரு துள்ளல்; பத்மினி பாட்டில் சரணத்துக்கு சரணத்துக்கு ஏறிக் கொண்டே போகும் டெம்போ. ஆஹா!

இந்த பாட்டை கேட்டதிலிருந்தே படம் பார்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால் என் துரதிருஷ்டம், சின்ன வயதில் அக்கம்பக்கம் எங்குமே இந்தப் படம் திரையிடப்படவில்லை. சன் டிவியில் சில சமயம் ராஜா மகள் பாட்டு போடுவார்கள். வீடியோ லேசில் கிடைப்பதில்லை. கடைசியில் முழுவதும் பார்த்தது சன் டிவி தயவில்தான்.

சந்திரலேகா, அபூர்வ சகோதரர்களை விட ஒரு மாற்று குறைவுதான், ஆனால் நல்ல பொழுதுபோக்குப் படம். கப்பலில் ஜெமினி புரியும் சாகசம், கடைசியில் கோட்டையில் போடும் சண்டை எல்லாமே நன்றாக இருக்கும். வாசன் ஹிந்தியிலிருந்து சி. ராமச்சந்திராவை ஏன் இறக்குமதி செய்தாரோ தெரியாது, ஆனால் அவர் வூடு கட்டி அடித்திருக்கிறார்.

கதை சிம்பிள். ஜெமினி விசுவாசமான மந்திரி? மகன். ராஜ குடும்பத்தை சதி செய்து பி.எஸ். வீரப்பா துரத்திவிட்டு தான் ராஜாவாகிவிடுகிறார். ஆனால் மந்திரி இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார். ஜெமினியும் ராஜகுமாரி பத்மினியும் வழக்கம் போல காதலிக்கிறார்கள். நடுவில் வை. மாலாவின் தீவில் ஜெமினி மாட்டிக் கொள்கிறார். மாலா ஜெமினியைப் பார்த்து உருக, மாலா உதவியால் ஜெமினி மீண்டும் வஞ்சிக்கோட்டைக்கு வந்து போராட, ஆனால் மாலாவுக்கு பத்மினி விஷயம் தெரிந்துவிடுகிறது. போட்டி நடனம். மாலா ஜெமினியைக் காட்டிக் கொடுத்துவிடுகிறார். பிறகு தப்பிக்கவும் வைக்கிறார். அப்புறம் வழக்கம் போல சண்டை, மாலா முழ நீளம் வசனம் பேசி விட்டு இறக்கிறார்.

ராஜா மகள் இன்னொரு நீளமான நல்ல பாட்டு. பாப்புலரும் கூட.

நண்பர் ராஜு சிலாகிக்கும் ஒரு நல்ல பாட்டு வெண்ணிலவே தண்மதியே. வீடியோ

ஜாலியான பொழுதுபோக்குப் படம். பாட்டுக்காகவே பார்க்கலாம். பத்துக்கு 7 மார்க். B- grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பக்கம்: விகடன் விமர்சனம்