அஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்
ஓகஸ்ட் 14, 2014 பின்னூட்டமொன்றை இடுக
துபாய் நண்பர் ஈஸ்வர் கோபாலின் விமர்சனம். ஓவர் டு கோபால்!
இப்படம் நாளை (ஆகஸ்ட் 15) இந்தியாவிலும், இன்று ஐக்கிய அரபு அமிரகத்திலும் வெளியாகிறது. கோல்டன் சினிமாவில் முதல் காட்சி பார்த்தேன்.
துபாயில் வெளியிடப்படும் படத்தில் ஒரு மவுசு உண்டு. அதாவது நம்மூரில் வெளியிடப்படும் அன்றோ அல்லது ஒருவாரத்திற்கோ படத்திற்கு அனுமதிச்சீட்டு கிடைப்பதே குதிரைக்கொம்பு. ஆனால் இங்கு எந்தக்கவலையுமில்லாது முதல் காட்சியில், மெதுவாக ஒரு பாப்கார்னை கொரித்துக்கொண்டு, முன்பதிவு இல்லாமல், அனுமதிச்சீட்டை வாங்கி உள்ளே புகுந்து எந்தவித ஆர்பாட்டமோ, நெருக்கடியோ இல்லாமல் பார்க்கலாம். ரசிக்க முடியுமா என்பது உங்களின் ரசனையைப் பொறுத்துள்ளது.
இப்படத்தில் சூர்யாவையும், ஓரளவு சமந்தா மற்றும் (பரோட்டா) சூரியையும் தவிர்த்து எல்லாம் ‘சப்பாத்தி’ இறக்குமதி. கதைச்சுருக்கம் இதுவே. சூர்யா (ராஜு பாய்) மும்பையில் பிரபல தாதா. இவரும் சந்த்ருவும் உற்ற நண்பர்கள், பெரிய பெரிய தாதா இருக்கும் போது அவர்களைக் காலி செய்துவிட்டு காலூன்றப் பார்க்கிறர்கள். இதில் சூர்யா எதற்கும் துணிந்தவர். (பின்னே அஞ்சான் ஆச்சே!) ஒரு கட்டத்தில் பெரிய தாதாவிற்கும், இவர்களுக்கும் சின்ன பிரச்சனை இவர்களின் ஆணவத்தைக் கிளப்ப, சூர்யாவின் நண்பரான சந்த்ருவை (வித்யுத்) போட்டுத் தள்ளி, சூர்யாவையும், இரண்டு குண்டுகளைப் பாய்ச்சி தண்ணீரில் விழ வைக்கிறார்கள். மதுரையிலிருக்கும் அவர் தம்பி க்ருஷ்ணா அவரைத் தேடி மும்பாய் வர, வில்லன் கோஷ்டி அவரை என்ன செய்தது, பழைய சூர்யா என்ன ஆனார், நொண்டி நடக்கும் சூர்யா யார் என்பது மீதிக்கதை.
சூர்யா ஓரளவு பரவாயில்லாமல் நடித்துள்ள போதிலும், லிங்குசாமி கதையை லிங்க் பண்ணத்தவறிவிட்டார். மொத்தத்தில் நாயகன், பாட்ஷா படங்களை ஒரு அரவையில் அரைத்து, ஒரு கோப்பை எடுத்தால் அஞ்சான் வரும். இப்பொழுது வரும் தமிழ்த் திரைப்படங்களில் நாயகி ஒரு ரௌடியை காதலித்துத்தான் ஆகவேண்டும் என்ற நியதியை இப்படத்திலும் தவறாமல் கடைப்பிடித்து மானத்தைக் காப்பாற்றியுள்ளார்கள். சமந்தா நடிப்பை விட தன் உடம்பின்பால் நல்ல நம்பிக்கை வைத்துள்ளார். ஆடி மாதம் என்று யார் கூறினார்களோ தெரியவில்லை, ரங்கநாதன் தெரு தோற்கும் அளவிற்கு தள்ளுபடி செய்து, தன்னால் முடிந்த மட்டும் ஒரு 80% ஆடைக்குறைப்பை வெற்றிகரமாக செய்து, ஒரு காட்சியில் சிறு கைக்குட்டையை இரண்டாகக் கிழித்து தனது உடம்பை மறைத்து தமிழ்ப் பண்பாடை சங்க காலத்திற்கு கொண்டு செய்துள்ளது பாராட்டத் தக்கது. நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார். ஒரு பெரிய போலீஸ் ஐ.ஜி யின் மகளாய் வந்து அந்த அப்பாவை காமடி போலீஸாக மாற்றுகிறார். சமந்தாவின் அப்பாவாக வரும் ஐ.ஜி. துவக்கக் காட்சியில் புலி போல் கொக்கரித்து, ஏதோ பெரிய்தாக செய்யப் போகிறார் என்று பார்த்தால், படம் முடிந்து வீட்டிற்கு வரும்வரை ஆளைக் காணோம்.
பரொட்டா சூரி கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்டுகிறார். இசை: யுவன். ஒரே இரைச்சல் மட்டுமல்லாமல், பின்னணி இசைக்குப் பின்னால் ஆஹா, ஓஹோ என்று ஒரே காட்டுக்கூச்சல். அப்பாவிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கலாம். பாடல்கள் ஒவ்வொன்றும் தேன்சுவை – என்று சொல்ல ஆசையாகத்தான் உள்ளது.
மொத்தத்தில் – கொலை, காதல், காமம், தாதாவின் செயல்கள் எல்லாமே நியாயப்படுத்தப்பட்டுள்ளன. என்ன செய்ய, மக்களான நாம் எல்லாவற்றையும் ஜீரணிக்க பழகிவிட்டோம். முக்கியமான வில்லன் – பெரிய வில்லனுக்கு ஒரு முஸ்லிம் பெயரை வைத்த காரணத்தினாலேயே, சூர்யாவிற்கு ஒரு நண்பரை முஸ்லீமாக (நல்லவராக) காட்டி பிரச்சனையிலிருந்து தப்பித்துள்ளார் இயக்குனர்.
சூர்யா முழுத்திறமையும் காட்டியிருந்தாலும், ஒருவித ஈர்ப்பு இல்லை. பொண்டாட்டி நம்மை வெளியில் தள்ளி இன்று திண்ணையில்தான் தூக்கம் என்று சொல்லிவிட்டால் – அரங்கத்தில் போய் இந்த காட்சியில் உட்கார்ந்துவிட்டு வாருங்கள். இதற்கு செலவு தண்டம் என்றால், ஆர்யாசில் இரண்டு சாம்பார் இட்லியை வாங்கி வயற்றுக்கு தானமாகக் கொடுங்கள்.
லிங்குசாமி, சூர்யாவின் திறமையை சரியாக உபயொகிக்கவில்லை என்றே தோன்றுகிறது. பல இடங்களில் படன் ஒரு கோர்வையாக இல்லை. ஒரு பாட்டும் மனதில் ஒட்டவில்லை.
ஒரு காட்சியில் நாயகியும், நாயகனும் ‘தண்ணி’ அடிப்பது சமீபத்திய தமிழ்ப்படத்தின் பரிணாமம். இதுதான் தமிழ்ப்படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வது போலும்.
அஞ்சான் ……….நோஞ்சான்
அண்மைய பின்னூட்டங்கள்