16-2-58 அன்று விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
முனுசாமி – மாணிக்கம்
மாணி: ஏண்ணே! நீ ‘உத்தமபுத்திரன்‘ பார்த்துட்டியா?
முனு: இல்லியே! நீ பார்த்துட்டியா? கதை என்ன?
மாணி: ஒரு ராணிக்குக் குழந்தை பிறக்குது. இது ராணியின் தம்பி நாகநாதனுக்குப் பிடிக்கலே. குழந்தையைக் கொல்ல ஏற்பாடு பண்றான். ராணிக்கு உடனே இரண்டாவதா, ஒரு குழந்தை பிறக்குது.
முனு: சரிதான். கொல்லச் சொன்ன அந்தக் குழந்தை என்ன ஆவுது?
மாணி: வழக்கம் போல அந்தக் கையாளு அந்தக் குழந்தையைக் கொல்லலே! ரகசியமா தன் பெண்சாதிகிட்ட கொடுத்து வேற இடத்துக்கு அனுப்பிடறான். ராஜா வீட்டுக் குழந்தை குடிசைலே நல்லவனா வளருது. அரண்மனையிலே இருக்கிற குழந்தையை சேனாதிபதி நாகநாதன் குடிகாரனா வளக்கறாரு; அக்கிரம ஆட்சி நடத்தறாரு.
முனு: சரி, நடிப்பைப் பற்றிச் சொல்லு!
மாணி: குடிசையில வளர்ற சிவாஜி கணேசன், குடிகாரனா வளர்ற சிவாஜிகணேசன்… ஆளு ஒண்ணுன்னாலும் வேஷம் இரண்டில்லே? ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிடறாங்க! ரெண்டு வேஷம் என்ன அண்ணே, 20 வேஷம் குடுத்தா லும் தத்ரூபமா நடிப்பாரு அவரு!
முனு: சரி; ஹீரோயின் எப்படி?
மாணி: பத்மினியாச்சே, கேக்கணுமா? மேக்கப் அள்ளுது; நடை, உடை, ஜடை மூணும் துள்ளுது; நடிப்பு வெல்லுது! ஆஹா! ஒரு சீன்லே நீளமா சடை போட்டு பூ வச்சுப் பின்னிக்கிட்டு வருது பாரு!
முனு: நம்பியாருக்கு என்ன வேஷம்?
மாணி: அவர்தான் ராணியின் தம்பி. வழக்கம் போல அமர்க்களப்படுத்தியிருக்காரு.
மாணி: அது மட்டும் இல்லே! இரண்டு சிவாஜிகளுக்குள்ளேயே சண்டை நடக்குது!
முனு: காட்சி ஜோடனை?
மாணி: இயற்கைக் காட்சிகள் பிரமாதம்! மைசூர் பிருந்தாவனத்திலே ஒரு டான்ஸ் எடுத்திருக்காங்க. அற்புதம்! உயரமான கோட்டைச் சுவரிலேருந்து குதிரை மேல குதிக்கிறாரு சிவாஜி! நம்பவே முடியலே அண்ணே!
முனு: குதிரை தாங்குதா இல்லையா? அப்புறம் நீ ஏன் கவலைப்படறே? சரி, படம் எப்படி?
மாணி: ஒரு சில குறைங்க இருந் தாலும், நிச்சயமா இது ஒரு நல்ல படம் அண்ணே!
ஜெமினி என்றவுடன், குழலூதும் இரட்டைக் குழந்தைகள் நம் நினைவில் பளிச்சிடுகின்றன. அந்த இரட்டைக் குழந்தைகள் (டிரேட் மார்க்) சின்னத்தை உருவாக்கியவர், மறைந்த கார்ட்டூன் மேதை மாலி. அவர் அந்தச் சின்னத்தைத் தோற்றுவித்தது ஒரு சுவையான நிகழ்ச்சி. மாலி விகடனில் பணி புரிந்து வந்த சமயம் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வசித்து வந்தார். விகடன் ஆபீசும் அதே பகுதியில் தான் இருந்தது. புகைப்படங்கள் எடுப்பது என்பதைக் கற்க விரும்பிய மாலி, பவழக்காரத் தெரு வருவார். அந்தத் தெருவில்தான் புகைப்பட நிபுணர் திரு. ஆர்.என். நாகராஜராவ் ஒரு மாடி வீட்டில் குடியிருந்தார். (மாலி, புகைப்பட நிபுணராகி, ஒரு குரங்கு ஜோடியை வைத்து நகைச்சுவைக்காக, விநோதமாக எடுத்த புகைப்படத் தொடர் விகடனில் வெளிவந்துள்ளது.) அப்படி ஒரு சமயம் அவரைத் தேடி வந்தபோது, மாலி அங்கிருந்த ஒரு குழந்தையைப் பார்த்து மடமடவென்று படம் வரைந்தார். அந்தக் குழந்தை உட்கார்ந்தபடி கைகளின் கட்டை விரல் இரண்டையும் வாயில் வைத்து ‘உஹூ உஹூம்’ என்று விளையாட்டாய் ஊதியது. நாகராஜராவ் உள்ளேயிருந்து வெளியே வருவதற்குள் மாலி அந்த குழந்தையின் சித்திரத்தை வரைந்து முடித்துவிட்டார்.
நாகராஜராவ் மாலியை விசாரித்தார். “எங்க முதலாளி (வாசன்) ஜெமினி என்ற பெயரில் பட விநியோகம் ஆரம்பிக்கப் போகிறார். அதற்கு ஜெமினி (மிதுன) ராசிக்கு ஓர் இரட்டை உருவம் கொண்ட சித்திரம் போடச் சொல்லியிருந்தார். இந்தக் குழந்தை வாயில் குழலை வைச்சு ஊதற மாதிரி ஒரு படத்தை வரைஞ்சிட்டால் போதும்” என்றார் மாலி. மாலி சித்திரமாக வரைந்த அந்தக் குழந்தையை, நாகராஜாவும் உடனே புகைப்படம் அதே நிலையில் எடுத்து விட்டார். அந்தப் புகைப்படம் பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘கல்கி’ பத்திரிகை துவங்கிய முதல் வருடத் தீபாவளி மலரிலும் முழுப் பக்கத்தில் வெளி வந்தது.
அந்தக் குழந்தை யாருடையது தெரியுமா? புகைப்பட நிபுணர் ஆர்.என்.நாகராஜராவ் அவர்களுடைய குமாரன் படம்தான். இன்று ஸ்டூடியோக்களில் புகைப்படங்கள் எடுக்க தினமும் காரில் பறந்து வரும் திரு. பாபுதான் அந்தக் குழந்தை. இவரும் தந்தையைப் போலவே படங்களுக்கு “ஸ்டில்” என்ற நிற்கும் படங்களை எடுத்து வருகிறார்.
விகடனில் ஏவி.எம்மின் நாம் இருவர் படம் வந்தபோது எழுதப்பட்ட விமர்சனத்திலிருந்து ஒரு பகுதி… நன்றி, விகடன்!
ஆடல் பாடல் நல்ல பொழுதுபோக்கு
படங்களைத் தயாரித்து விடலாம். நூற்றுக்கணக்கில் கூடத் தயாரித்துவிடலாம். ஆனால், படிக்காத பாமரர்கள் மட்டுமின்றி, படித்த அறிவாளிகளும் கண்டு வியக்கும் முறையில் கலை நுணுக்கங்கள் நிறைந்த நல்ல படங்களாகத் தயாரிப்பது சிரமம். இந்தச் சிரமமான காரியத்தில் ஏவி.எம். புரொடக்ஷன்ஸார் பாராட்டக் கூடிய அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். அதற்கு ஓர் அத்தாட்சியாக இருக்கிறது ‘நாம் இருவர்’.
எடுத்ததுமே நம்மைக் கவர்ந்து விடுகிறது, நடிகர்களின் வேஷப் பொருத்தம். அந்தந்த பாத்திரங்களுக்கு மிகவும் ஏற்ற நடிகர்களாகவே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அநேக படங்களில் காண்பிக்கப்படுவது போல் ’40 வயது வாலிபனும்’, ’35 வயதுப் பருவ மங்கையும்’ காதல் புரியவில்லை இப்படத்தில். உண்மையிலேயே இளம் வயதுள்ள டி.ஆர். மகாலிங்கமும், டி.ஏ. ஜெயலட்சுமியும் காதலர்களாகக் காட்சியளிக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது நமது உள்ளம் அப்படியே அவர்களோடு ஒன்றுபட்டு விடுகிறது. மீசை நரைத்தும் ஆசை நரைக்காத தந்தையின் பாகத்தில் கே. சாரங்கபாணி நடிக்கிறார். பல சமூகப் படங்களில் நடித்துள்ள பி.ஆர்.பந்துலு உத்தம அண்ணனாக வருகிறார். அசட்டு ஞானோதயத்தின் பாகத்தை ஹாஸ்ய நடிகர் டி.ஆர். ராமச்சந்திரன் ஏற்று நடிக்கிறார். மற்ற நடிகர்கள் நாம் இருவர் நாடகத்தில் திறமையுடன் நடித்து அனுபவம் பெற்றவர்கள்.
நல்லதொரு பொழுதுபோக்காக இருப்பதற்குப் படத்தில் ஆடலும் பாடலும் ரொம்ப அவசியம் என்பதை உணர்ந்துள்ள ஏவி.எம். புரொடக்ஷன்ஸார் கண்ணுக்கினிய ஆடல்களையும் காதுக்கினிய பாடல்களையும் அமைத்திருக்கிறார்கள். ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே‘ முதலிய பாரதியாரின் தேசிய கீதங்களை ஸ்ரீமதி டி.கே. பட்டம்மாள் அழகாகப் பாடியிருப்பதும், அந்தப் பாட்டுக்களுக்கு சிறுமி கமலா அபிநயம் பிடித்து அற்புதமாக ஆடியிருப்பதும், மனதை வசீகரிக்கக் கூடிய நல்ல அம்சங்கள். டி.ஆர்.மகாலிங்கம் பாடியிருக்கும் பாட்டுக்களும் படத்திற்கு ஒரு விசேஷ கவர்ச்சியை அளிக்கின்றன. சில பாட்டுக்கள், காலஞ்சென்ற கிட்டப்பாவின் பாட்டுக்களை ஞாபகப்படுத்துவதால், அவை கேட்போரைப் பரவசப்படுத்துகின்றன.
மகான் காந்தி மகான் என்ற பாட்டுக்கு “சிறுமி” கமலா இங்கே ஆடுகிறார்.
‘ஜே ஹிந்த்’, ‘மகாத்மா காந்திக்கு ஜே!’ முதலிய தேசிய கோஷங்களும், தேச பக்தர்களின் உருவப் படங்களும், அங்கங்கே சில சம்பாஷணைகளில் வரும் கருத்துக்களும் இக்கால மக்களின் மனப்போக்குக்கு ஏற்றவைகளாக இருப்பதால், படத்தின் வெற்றிக்கு அவை பெரிதும் உதவியாக இருக்கின்றன என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.
இன்னும் சிலாகிப்பதற்கு இப்படத்தில் எவ்வளவோ நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஒரே பேபி கமலாவை வைத்துக் கொண்டு, இரண்டு பேபி கமலாக்கள் நடனம் செய்வதாகக் காண்பித்திருக்கும் காமிராக்காரரின் திறமையைப் பாராட்டலாம். பாத்திரங்களுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவாறு சம்பாஷணைகளை இயற்றிக் கொடுத்திருக்கும் கதாசிரியர் ஸ்ரீ ப. நீலகண்டனின் திறமையையும் பாராட்டலாம்.
சென்ற உலக யுத்தத்தில் ஹிட்லர் பிரயோகித்த ‘வி-டூ’ என்ற ஆயுதம் அதன் வேகத்திற்குப் பிரசித்தி பெற்றது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தப் பெயரே இப்படத்தின் ஆங்கிலப் பெயராக அமைந்திருப்பதனாலோ என்னவோ, படம் ஆரம்பம் முதல் கடைசி வரையில் விறுவிறுப்பும் வேகமும் உள்ளதாக இருக்கிறது. படத்தில் அலுப்புத் தட்டும் இடமே இல்லை!
ஸ்ரீ ஏவி.எம். செட்டியார் அவர்களின் திறமையில் நமக்கு அதிக நம்பிக்கை ஏற்படுகிறது. வசதிகள் நிறைய ஏற்படும்போது, இதை விடப் பன்மடங்கு மேம்பட்ட படங்களை அவரால் தயாரித்துத் தமிழ்நாட்டுக்கு அளிக்க முடியும் என்பதில் நமக்குச் சந்தேகமே இல்லை.
தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்
சந்திரபாபு – தமிழன் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும், சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?
1. கடலோர நகரமான தூத்துக்குடியில் பிறந்த கலைமுத்து. பனிமயதாசன் என்று பெயர். கடும் காய்ச்சலில் இருந்து மீண்டது கர்த்தரின் கருணை என ஜோசப் பிச்சை என்ற பெயரை இணைத்தார்கள். பாபு என்பது செல்லப் பெயர். சந்திர குலத்தில் பிறந்தவன் என்ற பெருமிதத்தால் சந்திரபாபு என்று இவரே பேர் சூடிக்கொண்டார்!
2. பெற்றோர் ரோட்ரிக்ஸ் – ரோஸலின் இருவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையும் நடத்தியவர்கள். உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டதால் இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட, கூடவே சென்ற சந்திரபாபுவும் கொழும்பில் தனது பள்ளிக் கல்வியை முடித்தார்!
3. கொழும்புவில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். திருவல்லிக்கேணியில் வீடு. சாந்தோம் கடற்கரையில் இசையமைப்பாளர் வேதா, தபேலா தாழு. ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. இசை ஞானத்தை விதைத்தது இந்த இருவரும்தான்!
4. காமராஜருக்கு அறிமுகமான குடும்பம் பாபுவின் அப்பா சிறையில் இருந்த காலத்தில் அழைத்துச் சென்று குளிப்பாட்டி அரவணைத்தவர் காமராஜ். சந்திரபாபு மறைந்தபோது மலர் மாலையுடன் வந்த முதல் ஆளும் காமராஜரே!
5. சந்திரபாபுக்கு ஆங்கில அதிகாரிகள். பிரிட்டிஷ் பெண்கள், அவர்களது உடைகள் பாவனைகள் மீது சிறுவயதில் அலாதியான ஈடுபாடு இருந்தது. ஷர்ட் பேண்ட் இன் செய்து, சுத்தமான உடுப்பை அணியும் ஆசை அப்படித்தான் ஆரம்பித்தது!
6· மேற்கத்திய இசை கேட்பது, ராக் அண்ட் ரோல் நடனம் ஆடுவது, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவது. ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்ப்பது- பாபுவின் இளமைக் காலப் பொழுதுபோக்குகள். சந்திரபாபுவை கலைவாணி பிலிம்சுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர் சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன். அவருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தவர் மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா!
7. முதல் படம், தன அமராவதி (1947), கடைசிப் படம் பிள்ளைச் செல்வம் (1974), 50-களில் சுமார் 15 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார்!
8· புனித ஃபாத்திமா ஓவியத்தை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். இறந்தபோது அவருடன் வைத்து அதுவும் புதைக்கப்பட்டது!
9. ரப்பரைப் போன்ற உடல்வாகு. எவ்வளவு உயரத்தில் இருந்தும் குதிப்பார் எத்தனை தடவை சொன்னாலும் திரும்பத் திரும்பக் குதிப்பார். அவர் படங்களில் டூப் போட்டது இல்லை!
10. எம்.ஜி.ஆரை `மிஸ்டர் எம்.ஜி.ஆர்.’ என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான். சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அது பற்றி இவர் கவலைப்படவும் இல்லை!
11· `புகழ் பெறுவதற்காக விளம்பரம் அடையும் வரை தொழிலில் அக்கறை காட்டுவது இயற்கை. ஆனால், புகழ் பெற்ற பிறகும் நல்ல விளம்பரம் கிடைத்த பிறகும் சந்திரபாபுவைப் போல அக்கறை காண்பிப்பவர்கள் குறைவு’ என்று சொன்னவர் எம்.ஜி.ஆர்!
12· ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர்!
13· ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘பிறக்கும் போதும் அழுகின்றான்’, ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’, ‘ஒண்ணுமே புரியல உலகத்துல’, ‘பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’, ‘என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா’ ஆகிய 10 பாடல்களும் 50 ஆண்டுகளாக இன்னமும் தமிழகத்தின் இரவு நேரச் சங்கீதம்!
(இந்த ஒரு பாட்டுக்குத்தான் வீடியோ கிடைத்தது!)
14. எஸ்.எஸ். வாசனைச் சந்திக்க முடியாத வருத்தத்தில் ஜெமினி ஸ்டுடியோ வாசலில் மயில் துத்தநாகத்தைக் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர், தீக்குச்சியை உரசி தன் கையைச் சுட்டுக்கொண்டார். `நான் தீக்குச்சியைக் கொளுத்தியதை உணரலாம். ஆனால், அந்த சூட்டை உங்களால் உணர முடியாது’ என்று நீதிபதிக்குத் தன் துயரத்தை உணர்த்தினார !
15· சென்னை பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். சகோதரி படத்து பால்காரனைப் பார்த்துத்தான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்பதை தமிழகம் உணர்ந்தது!
16· எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மிக முக்கியமான ரசிகர். இருவரும் மணிக்கணக்கில் பேசுவார்கள். சந்திரபாபு கேட்டு அவருக்காக எழுதிய நாடகம்தான் `எனக்காக அழு’, ஆனால், அதில் சந்திரபாபு கடைசி வரை நடிக்கவில்லை!
17· ஷீலா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். முதலிரவின் போதே தனக்கு உள்ள இன்னொரு தொடர்பை அந்தப் பெண் சொன்னார். மறுநாள் காலையில் மனப்பூர்வமாக ஷீலாவை அனுப்பிவைத்துவிட்டார்!
18· நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார். `சில சமயங்களில் என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல’, அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதைவைத் தாழிட்டுக் கொள்பவனும் அல்ல’ என்று சொன்னார்!
19· மூன்று பேரைத் தனது வழிகாட்டிகளாகச் சொன்னார். “மனிதனாக வாழ்வது எப்படி என்று போதித்தவன் ஆபிரகாம் லிங்கன்; ஒரு மனிதனைச் சாகடிக்காமல் சித்ரவதை செய்வது எப்படி என்பதை எனக்குக் கற்றுத் தந்த என்னுடைய மாமனார்; ராஜதந்திரம் என்றால் என்ன என்பதையும் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் கற்றுத் தந்தவர் ஜெமினி கணேசன்’’ என்றவர்!
20· ‘பாபு இஸ் பாபு, ஐ யம் பாபு’ என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். படப்பிடிப்புத் தளத்தில் நுழையும்போது, ‘ஓ ஜீசஸ்!’ என்று சொல்லியபடிதான் நுழைவார்!
21· ஜனாதிபதி மாளிகையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் முன்னால் பிறக்கும் போதும் அழுகின்றான் பாடலைப் பாடினார். பிரமாதம் என்று அவர் பாராட்ட, உடனே ஓடிப் போய் அவரது மடியில் உட்கார்ந்துகொண்டார் சந்திரபாபு, `கண்ணா நீ ரசிகன்டா’ என்று அவரது தாடையைத் தடவ, ஜனாதிபதியும் மகிழ, உற்சாகமான பொழுது அது!
22· தட்டுங்கள் திறக்கப்படும் அவர் இயக்கிய படம். அதில்தான் கதை, திரைக்கதை, டைரக்ஷனுடன் நடனம் என்றும் சேர்த்துப் போட்டார். அப்படி போட்ட முதல் இயக்குநர் இவர்தான்!
23· நடிப்பு, பாட்டு, நடனம், இசை, ஒவியம், நாடகம், சிற்பம் ஆகிய அனைத்தின் மீதும் ஈடுபாடும், அது தொடர்பான கலைஞர்கள் அனைவரையும் தேடித் தேடிப் பழகியவரும் கூட. `ஆனால், எனக்கு நடிப்பைத் தவிர, செல்ஃப் ஷேவிங் மட்டும்தான் தெரியும்’ என்று சிரிப்பார்!
24· ‘நீ ஒரு கலைஞன், கற்பனை வளம் மிக்கவன், சிந்தனை சக்தி அதிகம் உள்ளவன்’ என்ற ஒரு பாராட்டு மட்டுமே தனக்குப் போதும் என்று சந்திரபாபு சொன்னார். இப்படிப் பாராட்டியவர், அவருக்கு ஒரு நாள் மட்டுமே மனைவியாக இருந்த ஷீலா!
25· ‘என் நடிப்பு மற்றவர்களுக்கு ஒரு சவால்தான். யாராவது இதைப் போல நடித்துக் காட்டட்டும், பார்க்கலாம்!’ என்று சவால்விட்டார் சந்திரபாபு. எதிர்கொள்ள இன்று வரை யாரும் இல்லை!
பிற்சேர்க்கை: சாரதாவின் மறுமொழியிலிருந்து –
சந்திரபாபு இறப்பதற்கு சில காலம் முன்பு, பிலிமாலயா என்ற சினிமா மாதப் பத்திரிகையில் மாடி வீட்டு ஏழையின் கண்ணீர்க் கதை என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வந்தார். அதில் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒளிவு மறைவின்றி எழுதியிருந்தார். அதனால் அந்த பத்திரிகை அலுவலகம் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, தொடர் நிறுத்தப்பட்டது.
படப்பிடிப்பின்போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு பூரண ஒத்துழைப்பு கொடுக்காதவர் என்ற அவப்பெயர் இவருக்கு உண்டு. அதுபற்றி பல பேர் பல சமயங்களில் கூறியிருக்கிறார்கள். அவருக்கிருந்த மார்க்கெட் வால்யூவுக்காக படங்களில் போட வேண்டியிருந்தபோதிலும், முடிந்தவரையில் ‘கழட்டி விடவே’ பார்த்தனர். அந்த நேரம் ஆபத்பாந்தவனாக நாகேஷ், புயலாக திரையுலகில் நுழைய, இவர் சுத்தமாக ஓரங்கட்டப்பட்டார்.
அது போலவே பாடல் பதிவின்போதும் இவரை வைத்து பாடல் ஒலிப்பதிவு செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம் என்பார்கள். சமீபத்தில் கூட ஜெயா டி.வி.யின் ‘ராகமாலிகா’ நிகழ்ச்சியில் டி.கே.ராமமூர்த்தி சொன்னார். சிரத்தை எடுத்துப் பாடமாட்டார், திருப்பி திருப்பி டேக் வாங்குவார். அப்போதெல்லாம் ட்ராக் சிஸ்டம் கிடையாது என்பதால் பாடகர் ஒருவர் தப்பு செய்தாலும் அனைத்து இசைக்கருவி வாசிப்பவர்களும் திருப்பி திருப்பி வாசிக்க வேண்டும். அதனால் இவர் பாட்டு என்றால் இன்ஸ்ட்ருமெண்ட் பிளேயர்கள் ஜகா வாங்கி ஓடுவார்களாம்.
புகழின் உச்சியில் இருக்கும்போது இது போன்ற வேண்டாத பழக்கங்களால் மார்க்கெட்டை இழந்து தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர். (தற்போதைய நடிகர் கார்த்திக் போல. வளமாக ஒளி வீச வேண்டிய அருமையான வயதுகளை கார்த்திக் எப்படி தொலைத்து நின்றார் என்பது நமக்குத் தெரியும்தானே).
நடிகர் ஜெமினி கணேசன்சாவி வார இதழில் எழுதி வந்த ஆசையாக ஒரு அசை வாழ்க்கைத் தொடரில், ‘நடிகை சாவித்திரியின் வேண்டாத பழக்கங்களுக்கும், விபரீத முடிவுக்கும் சந்திரபாபுதான் காரணம்’ என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.
இவைற்றையெல்லாம் மீறியும் சந்திரபாபு சுடர் விட்டாரென்றால் அது அவருடைய அபார திறமையால் என்பதில் சந்தேகமில்லை.
எந்த உயரத்திலிருந்தும் தானே குதிப்பார் என்பதை மெய்ப்பிக்கும் ஒரு இடம் – ஆண்டவன் கட்டளையில் சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடலில் ஒரு பஸ்ஸின் டாப்பிலிருந்து படுக்கை வசத்தில் பொத்தென்று விழுவார். கீழே நிற்பவர்கள் அவர் குதிக்கத் துவங்கிய பின்னர்தான் கைகளைக் கோர்ப்பார்கள். அவர்கள் கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தாலும் விபரீதமாகியிருக்கும். ரொம்பவே தைரியம்.
திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த (1975 செப்டம்பர்) விமர்சனம். நன்றி, விகடன்!
தேனிலவுக்குப் போய் வந்த அவசரத்தில் காபி எஸ்டேட் முதலாளி மோகனுக்கு போலீஸ் இலாகாவின் அழைப்பு வருகிறது. தன் கணவன் எஸ்டேட் முதலாளி மட்டுமல்ல, உளவு போலீஸ் அதிகாரி என்பதும் அப்போதுதான் தெரிகிறது இளம் மனைவிக்கு. துப்பு துலக்குவதற்காகத் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கொலை வழக்கில், கொலையின் தொடர்பில் தேடப்படும் பெண் தன் மனைவியே என்பது தெரிந்ததும் மோகனுக்கு அதிர்ச்சி! மனைவியின் கடந்த கால நடவடிக்கைகளைக் கண்டறியும் முயற்சியில் மோகன் முனைய, ஒரு சதிகாரக் கும்பலே அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
எம்.ஜி.ஆரிடம் இளமை துள்ளுகிறது. காதல் சுவை சொட்டச் சொட்ட ராதா சலூஜாவுடன் ஆடிப் பாடுவதும், குறும்பு செய்வதும் கொள்ளைக் கவர்ச்சி! போலீஸ் அதிகாரியாகக் கடமையில் ஈடுபடும் போது எஸ்டேட் முதலாளிக்கு நேர் எதிரான ஒரு பாத்திரமாக எம்.ஜி.ஆர். மாறி விடுகிறார். சதிக் கும்பலுக்குள் புகுந்து அவர்களின் ரகசிய இடங்களுக்குச் சென்று வளைத்துப் பிடிக்கும் காட்சிகள் ‘திரில்’ மூட்டுகின்றன.
கதாநாயகி ராதா சலூஜாவின் தமிழில் மழலை கொஞ்சுகிறது. ஆனாலும், சாதுரியமாகச் சமாளித்திருக்கிறார். இந்தி நடிகை என்று எண்ண முடியாதபடி, காதல் நெருக்கத்திலும் உருக்கத்திலும் உணர்ச்சிகளைக் கொட்டியிருக்கிறார்.
கொலையில் சம்பந்தப்பட்ட மாலாவும் கதாநாயகி லட்சுமியும் இரட்டையர்கள் என்று கதையை அமைக்காமல் இருவரும் ஒருவரே என்பதை நம்ப வைத்திருப்பது நல்ல டெக்னிக். இறந்து போனதாகச் சொல்லப்படும் மாலா, உயிருடன்தான் இருக்கிறாள் என்று ராதா சலூஜாவை சதிக் கும்பலின் முன் கொண்டு வந்து வீரப்பா நிறுத்துகிறாரே, அங்கிருந்து தொடரும் சஸ்பென்ஸ், கடைசியில் அருமையாக அவிழ்க்கப்பட்டிருக்கிறது.
தெலுங்கு டயலாக் பேசி தேங்காய் சீனிவாசன் குலுங்க வைத்திருக்கிறார்.
படம் வந்தபோது (செப்டம்பர் 1960) விகடனில் வந்த விமர்சனம். கமலைப் பற்றி அப்பவே புகழ ஆரம்பித்துவிட்டார்கள்! நன்றி விகடன்!
சண்முகம் – மீனாட்சி
சண்: ஏன் மீனாட்சி, முகமெல்லாம் ஒரே வாட்டமா இருக்குது?
மீனா: களத்தூர் கண்ணம்மா படத்துக்குப் போயிருந்தேன். அநாதைக் குழந்தை ஒண்ணு படற கஷ்டத்தைப் பார்த்து என் மனசு ரொம்பச் சங்கடப்பட்டுதுங்க.
சண்: அப்படி என்ன உருக்கமான கதை அது?
மீனா: களத்தூர் ஜமீன்தாரோட பிள்ளை ராஜா, அவங்க ஜமீன்லேயே வேலை பார்க்கிறவருடைய பெண் கண்ணம்மாவைக் காதலிச்சு, ரகசியக் கலியாணம் பண்ணிக்கறாரு. கலியாணம் ஆனவுடனேயே மனைவியைப் பிரிஞ்சு, சீமைக்குப் போறாரு. கல்யாண விஷயம் ஜமீன்தாருக்குத் தெரிஞ்சு போவுது.
சண்: அப்புறம் மூணு பேரும் தனித்தனியா பிரிஞ்சுடுவாங்க. திரும்பி வந்த ராஜா கண்ணம்மாவைக் காணாமல் தவிப்பான். கடைசியிலே எல்லாம் ஒண்ணு கூடுவாங்க. அவ்வளவுதானே!
மீனா: ஆமாம். அந்தப் பையன் நடிப்புதான் எல்லாரையும் உலுக்கிடுச்சு. ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே‘ன்னு முருகன் படத்துக்கு எதிரிலே நின்னு அந்தப் பையன் பாடியது ரொம்ப உருக்கமா இருந்துதுங்க. சாவித்திரியும் ஜெமினி கணேசனும் கண்ணம்மாவும் ராஜாவுமா வராங்க. காதலியா வரபோதும் சரி, கண் கலங்கித் தவிக்கிற மனைவியா வரபோதும் சரி, கொடுத்த வேஷத்தை நல்லாச் செய்திருக்கு சாவித்திரி.
சண்: ஜமீன்தார் யார்? பாலையாவா?
மீனா: ஆமாம். அவர் நடிப்புக்குச் சொல்லணுமா! சுப்பய்யாதான் வேலைக்காரனா வராரு. கொஞ்சம் ‘ஓவரா’ நடிக்கிறாரு. ஆனால், பிறந்த குழந்தையை அநாதை ஆசிரமத்திலே கொண்டுபோய் விடற இடத்திலே, அந்தக் குழந்தை துணியைப் பிடிச்சுக்குது. அதை அவர் விலக்கிக்கிட்டு வர இடம் ரொம்ப நல்லா இருந்தது.
சண்: டைரக்ஷன் பீம்சிங்கா?
மீனா: ஆமாம். எப்படிச் சரியா சொன்னீங்க?
சண்: மறந்துட்டியா? இதே மாதிரி காட்சியை பாகப் பிரிவினையிலே பார்க்கலியா நீ?
மீனா: இந்தக் குறையெல்லாம் உங்களுக்குத்தான் படும். எனக்கென்னவோ, இதில் அழுகைக்குதான் அதிக இடம் இருக்கு, சிரிக்கவே முடியலேங்கறது ஒண்ணுதான் குறையாகப்பட்டது. நான் பார்த்த நல்ல தமிழ்ப் படங்களிலே களத்தூர் கண்ணம்மாவைக் கண்டிப்பா சேர்த்துக்குவேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்
‘நடிப்பினால் ஒரு காவியமே படைத்திருக்கிறார்’ என்று சொல்வது கூட சிவாஜியின் அற்புதமான நடிப்புக்குப் போதுமான பாராட்டாக இருக்க முடியாது. அப்படி ஓர் அருமையான நடிப்பு!
ரிக்ஷாவின் கைப்பிடியைக் காலால் உதைத்து, லாகவமாகக் கையில் பிடித்துக்கொண்டு, துள்ளி ஓடும் இளமைத் துடிப்புள்ள ரிக்ஷாக்காரனாகத் தோன்றுவது முதல், கூனிக் குறுகி முதுமையடைந்து, ரிக்ஷாவைத் தூக்க முடியாத முதுமை வரை, ஒவ்வொரு நிலையிலும் சிவாஜியின் நடிப்பில் முத்திரை பதிகிறது.
பணக்கார சமதர்மவாதியான பாலாஜியின் பரிவைப் பார்த்து விட்டு, ”நீங்க எலெக்ஷனுக்குத்தானே நிற்கப் போறீங்க?” என்று கேட்கும் அப்பாவித்தனம்; நொடித்துப் போன ஜானகி குடும்பத்துக்குக் காவல் நாயாகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் விசுவாசம் – இப்படிப் பல காட்சிகள் குறிப்பிடத் தக்கவை.
சிவாஜி-விஜயஸ்ரீயின் காதலில், கதை ஜிலுஜிலுப்பாக ஆரம்பிக்கிற ஜோர் பிரமாதமாக இருக்கிறது.
பாபுவின் லட்சியப்படி நிர்மலா, பட்டம் வாங்கியதோடு கதையை முடித்திருக்கலாம். அதற்கு மேலும் கதையை நீட்டியிருக்க வேண்டுமா?
பணக்காரத் தம்பதியாக வரும் பாலாஜி-சௌகார் ஜானகி, குழந்தை மூவரும் நெஞ்சையள்ளும் பாத்திரங்கள். பாலாஜி வெகு அநாயாசமாகவும் அழகாகவும் நடித்துப் பெயரைத் தட்டிக் கொள்கிறார். குழந்தை பிச்சையெடுத்துவிட்டு அழும்போது இளகாத நெஞ்சமும் இளகும். சோதனையால் நிலை தடுமாறி குன்றிப் போன உயர் குலப் பெண்மணி ஒருவரின் தவிப்பு, தயக்கம் அத்தனையையும் உருக்கமாகச் சித்திரித்திருக்கிறார், சௌகார் ஜானகி.
படத்துக்குக் கவர்ச்சியூட்ட வேண்டிய பொறுப்பை சிவகுமார்-நிர்மலா ஜோடியிடம் விட்டிருக்கிறார்கள். மினி டிராயரைப் போட்டுக் கொண்டும், மழையினால் உடை, உடம்பில் ஒட்ட நனைந்து கொண்டும் நிர்மலா அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முயன்றிருப்பதில் குறையில்லை. ஆனால், சிவகுமார்-நிர்மலா காதலை விட நம் மனத்தில் சுவையூட்டியது ஆரம்பத்தில் மின்னல் போல் தோன்றி மறைந்த சிவாஜி-விஜயஸ்ரீ காதல் காட்சிதான்.
‘கஞ்சி வரதப்பா‘ பாட்டுக்கு ஏற்ப புன்னகை சிந்த, சாப்பாட்டுக் கூடையுடன் ஒயிலாக இடையை அசைத்து, விஜயஸ்ரீ நடந்து வரும் அழகில் சிருங்காரம் சொட்டுகிறது. முயன்றால் கதாநாயகி அந்தஸ்துக்கு சிறப்பாகத் தேறிவிடக் கூடிய நளினமும் அழகும் இவரிடம் பொருந்தியிருக்கின்றன.
சிவாஜியின் நடிப்பு என்ற தங்க விளக்கு இருக்கிறது; ஆனால் கதை என்ற திரி சரியாக இல்லையே!
தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்
நம் நாடு திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
ஓர் உரையாடல்
வி.எஸ்.சுப்பையா: இந்தப் படம் முதலிலிருந்து கடைசி வரை நல்ல ‘என்டர்டெய்ன்மென்ட்’டா இருக்கு. சில இடங்களில் நம்மையும் அறியாமல் கண்ணீர் விடுமளவு இருக்கு. கதாநாயகன் துரை, புடவை வாங்கித் தரும் இடம், குழந்தைகள் கதாநாயகனுக்குச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்து தரும் இடம்… இதெல்லாம் உதாரணம்.
ஜெயராஜ்: சாதாரணமா கலர் படம் என்றால், வர்ணங்கள் கொஞ்சம் ‘டார்க்’கா இருக்கும். இந்தப் படத்தில் ரொம்ப லைட்டா, மனதுக்குக் குளிர்ச்சி அளிப்பதுபோல இருந்தது.
சீனிவாசன்: ஜெயராஜ் ஓவியர் அல்லவா? வர்ணத்தைப் பத்தி அவர் சொன்னால் சரியா தான் இருக்கும்.
மனோரமா: கதாநாயகன் கதாநாயகி முதன்முதலில் சந்திக்கும் இடம் – ஏதாவது விபத்திலேயோ, அல்லது எங்காவதோதான் சந்திப்பாங்க. இந்தப் படத்திலே அவர்கள் சந்திப்பு புது மாதிரியா இருந்தது. ஒருவருக்கு உதவி செய்யப் போக, தன் பணமே பிக்பாக்கெட் போக, ஹீரோயின் ஹீரோ சொக்காயைக் கேட்கறது, சண்டை போடறது, கடைசியிலே வாட்சை வாங்கிக்கிறது இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த ஹீரோயின் ஹீரோவை அதுவரைக்கும் விரும்பறாளா இல்லையான்னு காட்டாமல், ‘உங்களுக்குப் பெண்ணை நான்தான் ‘செலக்ட்’ பண்ணுவேன்; என்னைக் கேட்காமல் செய்துட்டீங்களே’ன்னு சொல்றது, அதாவது அந்தப் பாத்திரம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதை ஜெயலலிதாவும் ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க. காதலா இல்லாமல் வேற ஒரு விதமா அவங்க காதல் ஆரம்பித்திருக்கிறது நல்லா இருக்கு!
ஜெயராஜ்: இப்பல்லாம் தமிழ்ப் படங்களில், கட்டிப் பிடிச்சுக் காதல் பண்ணும் காட்சி அதிகமா இருக்கும். இந்தப் படத்திலே அப்படி இல்லை.
மனோரமா: ஆமாம்! நான் கூட, ஹீரோ ‘உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கறேன்’னு சொல்லிட்டு, வெளியே ஓடினதும் ரெண்டு பேரும் சேர்ந்து மழையிலே பாடப் போறாங்கன்னு நெனைச்சேன். இதிலே அது இல்லை. அதுவே நல்லா இருந்தது.
சீனிவாசன்: இல்லீங்க. பொதுவா அரசியலில் இருக்கும் எல்லோருக்குமே இது பொருத்தமா இருக்கும். அவர் நகரசபை சேர்மனா இருக்கும்போது, சிலர் தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வராங்க. இதிலே காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுன்னு வேறுபாடே வேண்டாம். ஜனநாயகம் என்றைக்கு ஆரம்பித்ததோ, அன்றை யிலிருந்து இது போன்ற நபர்கள் அரசியலில் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவா சொல்லப் போனா, இது ஒரு நல்ல ‘மாரல் டீச்சிங்’. நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் படம்.
பிரேமா: வசனம் கூட ரொம்ப நல்லா இருக்கு. உதாரணமா, ரங்காராவ், ‘முன் ஜென்மத்திலேயே குழந்தை லஞ்சம் வாங்கியிருக்கும், அதனாலேதான் பிறக்கும்போது கையை மூடிக்கிட்டு பிறக்குது.’
சசிகலா: அப்புறம் எம்.ஜி.ஆர். தன் பிரதர்கிட்டே சொல்றாரே… ‘நான் ஊமைகளுக்காகச் செவிடர்கள்கிட்டே பேசிக்கிட்டு இருந்தேன்’னு, அந்த வசனமும் நல்லா இருந்தது.
ராஜப்பா: படம் ஆபாசம் இல்லாமல், விரசம் இல்லாமல் இருப்பதுதான் எனக்குப் பிடிச்சுது!
சுப்பையா: ‘வாங்கய்யா, வாத்தியாரய்யா‘ன்னு ஒரு பாட்டு வருதே, அதிலே ஏதாவது குறிப்பு இருக்கா? அது யாரையாவது குறிக்குதா? (சிரிப்பு)
ராஜம் கிருஷ்ணன்: படத்திலே காமெடியே அதிகம் இல்லை! நாகேஷ் இருந்தும் கூட அதிக ஹாஸ்யம் இல்லை.
சசிகலா: ஆமாம்! எம்.ஜி.ஆர். சேர்மன் ஆயிட்டபோது நாகேஷ் ஏன் நகரசபைக் கூட்டத்திலே அவர் பின்னாடியே நின்னுக்கிட்டு இருக்கார்?
சீனிவாசன்: செக்ரெட்டரி ஆகியிருப்பார்!
சசிகலா: அது சரி, பின்னாலே ஜெயலலிதா எப்படி இங்கிலீஷ் பேசறாங்க?
மனோரமா: முதியோர் கல்விக்காக வந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கலாம், இல்லியா?
சீனிவாசன்: சரி, நான் ஒண்ணு ஒண்ணு கேட்கிறேன். ஒரு படத் திலே எலந்தப் பழம் வந்தா, உடனே இன்னொரு படத்திலே மாம்பழம், அந்தப் பழம் இந்தப் பழம்னு ஏதாவது வந்தே ஆகணுமா என்ன?
ஜெயராஜ்: அந்தம்மாவைப் போய் கேட்டீங்கன்னா, அவங்க எப்படிச் சொல்லுவாங்க? புரொடியூஸரைத்தான் கேட்கணும். அதிருக்கட்டும், ரங்காராவைப் பத்தி யாரும் சொல்லலையே?
சீனிவாசன்: அவரை நல்ல மனுஷனா பார்த்துப் பார்த்து, இந்த மாதிரி பார்க்க ஆரம்பத்தில் ஒரு மாதிரி சங்கடமா இருந்தது. போகப் போக பிக்கப் பண்ணிடறாரு. அதாவது, பாதாள பைரவி வில்லன் மாதிரி திரும்பிடறாரு!
சுப்பையா: மொத்தத்திலே அறிவுரைகள், கருத்துக்கள் எல்லாம் இருக்கு. அதையும் ‘என்டர்டெயின்மென்ட்’ எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து, நல்லா போர் அடிக்காம எடுத்திருக்காங்க!
சீனிவாசன் விருதுநகர் எம் எல் ஏ (காமராஜரைத் தோற்கடித்தவர்)
மனோரமா
ஜெயராஜ் ஓவியர்
தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்
திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம் (27-3-1960) நன்றி, விகடன்!
முனுசாமி – மாணிக்கம்
மாணிக்கம்: அண்ணே, தலைவர் ராஜிநாமா பண்ணிவிட்டா கழகத்திற்கு அடுத்த தலைவர் நான்தாங்கறாரு கருணாநிதி!
முனுசாமி: அப்படியா? எந்தக் கூட்டத்திலே சொன்னாரு தம்பி?
மாணி: கூட்டத்திலேயா? நான் சினிமாவிலே சொல்றேன் அண்ணே! ‘அடுத்த வீட்டுப் பெண்’லே காமெடியன் கருணாநிதி, காரியம் கைகூடும் கழகத்துத் தலைவர் தங்கவேலு ராஜிநாமா செய்தா நான்தான் அடுத்த தலைவர்னு சொல்றாரு.
முனு: ஓகோ! படம் எப்படி தம்பி?
மாணி: நல்லா இருக்குது அண்ணே!
முனு: என்ன, ஒரு வார்த்தையிலே முடிச்சுட்டே?
மாணி: கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னேன். விளக்கமா வேணும்னாலும் சொல்றேன். அடுத்த வீட்டுப் பெண் லீலாவைக் காதலிக்கிறாரு மன்னாரு. லீலா கொஞ்சம் முரட்டுப் பெண். ஆனால், சங்கீதத்திலே ரொம்பப் பித்து. அதனாலே அவளோட காதலை அடைய மன்னாரு தன் நண்பன் குரலை இரவல் வாங்கி, பெரிய பாடகரா நடிச்சு, கடைசியிலே அந்தப் பெண்ணையே கலியாணம் செய்துக்கறாரு. இதுதான் கதை.
முனு: கதை ரொம்ப சாதாரணமாத்தானே இருக்குது?
மாணி: இது கதைக்காக எடுத்த படமில்லே அண்ணே, காமெடிக்காக எடுத்த படம்.
நாகேஷ் மாறும் உடல் மொழி, ஏறி இறங்கும் குரல் ஜாலம், தமிழர்களில் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம், ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழிந்தவர்!
பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராக பணியாற்ற், குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்.
பெற்றோர் கிருஷ்ணராவ் – ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன் பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்ல பெயர் – குண்டப்பா.
பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!
இளம் வயதில் வீட்டில் கோபித்துக் கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர் ரேடியோ கடை ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!
முதன் முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார் அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!
கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்த மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலர வைத்து அவரது நடிப்பில் வெளிச்சம்!
ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால் தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!
இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ்பாபு, ராஜேஷ்பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!
முதல் படம் `தாமரைக்குளம்’ ஷூட்டிங்கின் போது சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர். ராதாவிடம் மனம் வெதும்பி நடந்தைச் சொன்னார் இவர். `மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்… கவலைப்படாம நடி’ என்றாராம் ராதா!
`அபூர்வ ராகங்கள்’ படத்தில் இவருக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் கண்ணதாசன், அவரிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் நாகேஷ் கவிதை கேட்ட இவர், `அதான்யா கண்ணதாசன்’ என்று சொல்லிவிட்டு, `பீஸ் எவ்வளவு?’ என்பார். `இதுதான்யா ஃபீஸ்’ என்பார் கண்ணதாசன்!
முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை, யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் `நாகேஷ் பாணி’ என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!
எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!
திருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி. நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்!
`அபூர்வ ராகங்கள்’ ஷூட்டிங், பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ் கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, `சியர்ஸ்’ என்று சொல்ல, படம் பார்த்தவர்கள் பாரட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்சுக்கு இது ஒரு சாம்பிள்!
இவரை எப்போதும் `டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்.
டைரக்ஷன் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை. `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்.
பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், `எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே’ என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!
`சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்’ என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி.
`நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ண்ணாக அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக் கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்’ என்று சொன்னவர் கமலஹாசன்.
‘பஞ்சதந்திரம்’ ஷூட்டிங், உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், `கோழி இன்னும் சாகலையாப்பா?’
`தசாவதாரம்’ கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம் `என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured–டா கமல்!’
தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்.
இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது- செப்டம்பர் 27, 1933 –ல். மறைந்தது ஜனவரி 31, 2009 –ல்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை!
அண்மைய பின்னூட்டங்கள்