பழைய தெலுகு திரைப்படம் – யோகி வேமனா


சமீபத்தில் யோகி வேமனா பற்றி படித்தேன். தமிழுக்கு அவ்வையார் போல தெலுகுக்கு வேமனா என்று நினைக்கிறேன். அப்போது யோகி வேமனா திரைப்படத்தைப் பற்றியும் தெரிந்தது. சரி கொஞ்சம் நேரம் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருந்தது.

படத்தின் revelation நாகய்யாதான். தெய்வமகன் சிவாஜி, வசந்தமாளிகை சிவாஜி என்று சிவாஜி ரசிகர்கள் சிலாகிப்பதைக் கேட்டிருக்கலாம். (நானும் தெய்வமகன் சிவாஜிக்கு ரசிகன்தான்). நாகய்யா – அழுமூஞ்சி நாகய்யா, ஒரே stereotype பாத்திரத்தில் மட்டுமே நான் பார்த்திருக்கும் நாகய்யா அந்த ஸ்டைலை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டார். படத்தின் முதல் பாதியில் வேமனா போகி, தாசி பக்தர். Subtle ஆன உதட்டோரத்து சிறு சிரிப்பில், உடல் மொழியில், நடையில் அப்படியே கொண்டு வந்துவிட்டார். நடிப்பில் கலக்குகிறார்.

திரைப்படத்தின் அடுத்த takeaway எம்.வி. ராஜம்மா. ராஜம்மாவுக்கு தாசி பாத்திரம். எப்போதும் சோக முகத்துடன் வலம் வரும் ராஜம்மாவா இது! நன்றாகவே நடனமாடுகிறார்.

வேமனா பதினேழாம் நூற்றாண்டில் பிறந்தவராம். ஆனால் அவர் பிறப்பு, வாழ்வு பற்றி சரியான தரவுகள் இல்லையாம்.

திரைப்படத்தின் கதைப்படி வேமனா சிற்றரசர் குடும்பத்தில் பிறந்தவர். அவரது அண்ணியின் அரவணைப்பில் வளர்ந்தவர். அண்ணியின் மகள் ஜோதி மீது உயிரையே வைத்திருக்கிறார். இளம் வயதில் பெண் பித்தர். வீட்டில் இருக்கும் நகைகள், பணத்தை திருடிக் கொண்டு போய் தாசி வீட்டில் கொட்டுகிறார். அண்ணி/அண்ணன் யாரும் அவரை திருத்த முடியவில்லை. கப்பம் கட்ட வைத்திருந்த பணத்தை தாசியிடம் கொடுத்துவிட அண்ணனை ராஜா சிறை செய்துவிடுகிறார். பொற்கொல்லர் அபிராம் வேமனாவின் உயிர் நண்பர். இருவரும் ரசவாதம் செய்ய முயற்சிக்கிறார்கள்.  வேமனாவின் கையில் ஸ்வர்ணரேகை ஓடுகிறது, அதனால் வெற்றி கிடைக்கிறது. ரசவாதத்தில் மும்முரமாக இருக்கும்போது அண்ணன் மகள் ஜோதி இறந்துவிடுகிறாள். சோகத்தில் வீழும் வேமனா சாவின் ரகசியம் என்று அறிந்து கொள்ளத் தவிக்கிறார். சிவபெருமான் அருளால் அவரும் ஒரு யோகியாகிறார், அவ்வையார் மாதிரி நிறைய பாட்டு பாடுகிறார், கடைசியில் ஜீவசமாதி அடைகிறார்.

நமக்கு கிடைக்கும் தொன்மக் கதைகளின் படியும் ஏறக்குறைய இப்படித்தான். தாசி அண்ணியின் நகைகளைக் கேட்க, அண்ணியும் கொடுப்பதாகவும், அண்ணி தாசி முழு நிர்வாணமாக பின்னால் வளைந்து தன் மூக்குத்தியை எடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க அந்த “ஆபாசக் காட்சியை” காணும் வேமனாவின் பெண் பித்து முடிவடைகிறது என்று ஒரு தொன்மக்கதை இருக்கிறது. பொற்கொல்லர் அபிராம் ஒரு சாமியாருக்கு காலம் காலமாக சேவை செய்வதாகவும், சாமியார் அபிராமுக்கு சர்வ சித்திகளையும் அருளும் தருணத்தில் அபிராமை ஏமாற்றி வேமனா அவற்றைப் பெற்றுக் கொள்வதாகவும் ஒரு தொன்மக்கதை இருக்கிறது. அண்ணன் மகள் இறப்பால் வேமனா உலகைத் துறந்து சன்னியாசி ஆவது தொன்மக்கதைகளில் இருக்கிறது.

வேமனாவின் பாடல்கள் மிகப் பிரபலமாம். தமிழில் நாம் அங்கங்கே அவ்வையார் பாடல்களை மேற்கோள் காட்டுவது போல ஆந்திராவில் இவர் பாடல்களை மேற்கோள் காட்டுவார்களாம். ஏதாவது தெரிந்திருந்தால் திரைப்படத்தை இன்னும் ரசித்திருப்பேன்.

எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். நாகையாவைத் தவிர மற்றவர்களில் நண்பர் அபிராமாக வரும் லிங்கமூர்த்தியும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

1947-இல் வெளிவந்த திரைப்படம். கே.வி. ரெட்டி இயக்கம். நாகையாவே இசை. சில பாடல்கள் இனிமையாக இருக்கின்றன.

நாகையாவின் நடிப்புக்காக கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தெலுகு திரைப்படங்கள்

நல்ல தீர்ப்பு


காலா பானி என்ற வெற்றி பெற்ற ஹிந்திப் படம் ஒன்று உண்டு. எதேச்சையாக டிவியை ஆன் செய்தபோது ஏறக்குறைய அந்த மாதிரியே தெரிந்த ஒரு தமிழ் படம். தேவ் ஆனந்துக்கு பதில் ஜெமினி கணேசன். மதுபாலாவுக்கு பதில் ஜமுனா. நளினி ஜய்வந்துக்கு பதில் எம்.என். ராஜம். என்னடா இது தமிழில் காலா பானி வந்ததாக கேள்விப்பட்டதே இல்லையே என்று பார்க்க ஆரம்பித்தேன். காலா பானியே ஏ.ஜே. க்ரானின் (A.J. Cronin) எழுதிய Beyond this Place என்ற ஒரு கதையை வைத்து எடுக்கப்பட்டது என்று கேள்வி.

படத்தின் பேர் நல்ல தீர்ப்பு. 1959-ஆம் ஆண்டு வந்த படம். ஜெமினி, ஜமுனா, எம்.என். ராஜம், கண்ணாம்பா, நாகையா, டி.ஆர். ராமச்சந்திரன், டி.எஸ்.துரைராஜ், எம்.ஜி. சக்ரபாணி, எஸ்.வி. சஹஸ்ரநாமம், ராகினி, சரோஜா ஆகியோரை அடையாளம் காண முடிந்தது. கதை வசனம் முரசொலி மாறன். இசை சுப்பையா நாயுடு. இயக்கம் டி. பிரகாஷ் ராவ்.

ஜெமினி இளம் வக்கீல். விதவைத் தாய் கண்ணாம்பா கஷ்டப்பட்டு படிக்க வைத்திருக்கிறார். தொழில் நன்றாக நடக்கிறது. லட்சாதிபதி பெண் தருகிறேன் என்கிறார். வீட்டுக்கு வந்தால் அதிர்ச்சி #1. இது நாள் வரை பேசாமல் இருந்த அம்மா சீப்பாக இப்போதுதான் கிடைத்தது என்றோ என்னவோ முகத்தில் குங்குமத்தோடு காட்சி அளிக்கிறாள். அதிச்சி #2 ஆக அப்பா நாகையா செய்யாத கொலைக்காக ஜெயிலில் இருக்கிறார் என்கிறாள். அப்பாவை பார்க்க வேலூர் ஜெயிலுக்கு ஜெமினி போகிறார். நாகையா வழக்கம் போல பரிதாபமாக இருக்கிறார். கொலையை துப்பு துலக்க ஜெமினி திருச்சி போகிறார். அங்கே பத்திரிகை ஆசிரியர் ஜமுனாவை சந்திக்கிறார். பின் வழக்கமான காதல் ஒரு பக்கம். துப்பு துலக்க போன இடத்தில் எம்.என். ராஜம் இவரை வில்லிகளின் இலக்கணப்படி சைட் அடிக்கிறார். மெதுமெதுவாக ஜெமினிக்கு கேஸ் பற்றி தெரிகிறது. மீண்டும் விசாரணை நடத்தி குற்றவாளி யாரென்று திடுக்கிடும் தகவல் தெரிகிறது. நாகையா விடுதலை, சுபம்!

முதல் பாதி பரவாயில்லை. இரண்டாம் பாதி இசு இசு என்று இசுக்கிறார்கள். அதுவும் ஜெமினி பயங்கர தத்தியாக இருக்கிறார், சின்னப் பையனுக்கு கூட புரிந்துவிடும் விஷயங்கள் எல்லாம் அவருக்கு புரியமாட்டேன் என்கிறது. ஒரு ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் அவருக்கு கிடைக்கும் க்ளூவை எல்லாம் விலாவாரியாக விளக்க வேண்டி இருக்கிறது. கண்ணாம்பா பொறுத்தது போதும் பொங்கி எழு ரோலையே மீண்டும் மீண்டும் செய்கிறார். நாகையா அதே ஐயோ பாவம் லுக் விடுகிறார். நகைச்சுவை என்று துரைராஜ், சரோஜா, டி.ஆர். ராமச்சந்திரன் படுத்துகிறார்கள்.

பாட்டு ஒன்றும் சரியில்லை. முதலில் ராகினி ஆடிப் பாடும் ஒரு பாட்டுதான் கொஞ்சம் சுமார், ஆனால் இப்போது மறந்துவிட்டது. அது இருந்தால் இது இல்லே இது இருந்தால் அது இல்லே என்ற பாட்டு மிஸ்ஸியம்மா படத்தில் வரும் படியுமென்றால் முடியாது முடியுமென்றால் படியாது பாட்டை நினைவுபடுத்தியது.

ஸ்டில் எதுவும் கிடைக்கவில்லை. எம்.ஜி. சக்ரபாணி இருக்கும் ஒரு சின்ன கிளிப் மட்டும் கிடைத்தது.

பேசாமல் காலா பானி பாருங்கள். அருமையான பாட்டுகளையாவது கேட்கலாம்!

விடுதலை போராட்டத்தில் பிரபல நடிகர்கள்


இந்திய விடுதலையின் வெள்ளி விழா சமயத்தில் – ஆகஸ்ட் 1972இல் – விகடனில் வந்த கட்டுரை. பல நாடக நடிகர்கள் சுதந்திரப் போராட்ட காலத்து நினைவுகளை, போராட்டத்தில் அவர்கள் பங்கை நினைவு கூர்கிறார்கள். விகடனுக்கு நன்றி!

பொழுதுபோக்குக்காகத்தான் கலை என்ற சிந்தனையை மாற்றி, தங்களுடைய வீரமிகு பேச்சாலும், உணர்ச்சிமிகு நடிப்பாலும் தேசியப் பணியாற்றியுள்ளார்கள் எண்ணற்ற கலைஞர்கள். அவர்களில் சிலர் தங்கள் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

கே.சாரங்கபாணி:
சுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, நான் திரு.ஜகன்னாதையர் கம்பெனியான மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சித சங்கீத சபாவில்தான் நடிகனாக இருந்தேன்.

காலைப் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும், கருத்துகளையும் அன்றைய நாடகத்திலேயே சிலேடையாகப் புகுத்திப் பிரசாரம் செய்வோம். பதிபக்தி, பஞ்சாப் மெயில், தேசியக் கொடி, கதரின் வெற்றி என்று பல நாடகங்களைப் போட்டிருக்கிறோம்.

கதரின் வெற்றி நாடகம், இங்கிலாந்தில் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் முன்னால் எங்கள் குழுவினரால் நடித்துக் காட்டப்பட்டு, மெடல், சர்ட்டிபிகேட் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்தது. ஆனால், அதே நாடகம் இந்தியாவில் நடத்தக்கூடாது என்று தடை செய்யப்பட்டது.

நாடகத்திலே தேசியக் கொடியைக் காட்டக்கூடாது என்றும் தடை விதித்திருந்தார்கள். எப்படியாவது காட்டிவிடவேண்டும் என்று எங்களுக்குள் ஒரு தீர்மானம். போலீஸ் கெடுபிடி வேறு. கடைசியில் ஒரு தந்திரம் செய்தோம். மூன்று பையன்களுக்கு தேசியக் கொடியின் மூன்று கலர்களிலும் உடை அணிவித்து, கொடியைப் போல் மேடையில் நிற்க வைத்தோம். அதைப் புரிந்துகொண்டுவிட்ட மக்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

கே.பி.சுந்தராம்பாள்:
அப்போதெல்லாம் சத்தியமூர்த்தி மேடைகளில் முழங்குவார். நான் தேசியப் பாடல்களைப் பாடுவேன். ஊருக்கு ஊர், கிராமத்துக்குக் கிராமம் என்று நாங்கள் இருவரும் போகாத இடமேயில்லை. ‘பாட்டாலேயே சுந்தராம்பாள் வெள்ளைக்காரனை அடிச்சு விரட்டிடுவார்’ என்று நண்பர்கள் சொல்லுமளவுக்கு என் பாட்டில் உணர்ச்சி கொப்பளிக்கும்.

எனக்கு எங்கே போனாலும் தடை. பின்னாலேயே சி.ஐ.டி-க்கள்! என் பாட்டைக் கேட்டுப் பல ஆங்கிலேயர்கள் கூடக் கட்சியில் வந்து சேர்ந்தார்கள்.

நாகையா:
நான் சித்தூரில் ரெவின்யூ துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். வருஷம் 1922.

கள்ளுக்கடை எதிர்ப்புப் போராட்டம் நடந்துகொண்டு இருந்தபோது, ஒரு நாள் சத்தியமூர்த்தி சித்தூருக்கு வந்து, நானும் போராடவேண்டும் என்று கட்டளையிட்டுவிட்டார். அப்போது என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. இருந்தாலும் சுதந்திர உணர்ச்சி காரணமாக நான் கிளம்பிவிட்டேன்.

சித்தூரிலிருந்து 30, 40 மைல் தள்ளி ஒரு கிராமத்தில் கள்ளுக் கடை மறியல் போராட்டம் நடந்தது. அந்தக் கிராமத்தில் போய் இறங்கியவுடனேயே, ஒரு கள்ளுக்கடையின் முன்னால் உருக்கமாகத் தேசியப் பாடல்களைப் பாடினேன். அப்போது கள்ளுக்கடையிலிருந்து ஒருவன் வெளியே வந்து, வாயில் இருந்த கள்ளை என் முகத்தில் காறித் துப்பிவிட்டான். அப்படியும் நான் விடமல், அவன் காலில் விழுந்து, குடிப்பதை விடும்படி வேண்டினேன்.

அன்று மறியல் செய்துவிட்டு நான் சித்தூர் திரும்பியபோது, என் மனைவி சித்தூர் அரசாங்க ஆஸ்பத்திரியில் இறந்து கிடந்தாள்!

டி.கே.சண்முகம்:
அரசியல் விஷயங்களில் எங்கள் நாடகக் குழு தொடர்பு கொள்ள ஆரம்பித்தது 1931-ம் ஆண்டில்தான். பண்டித மோதிலால் நேரு இறந்தபோது கும்பகோணம் காந்தி பார்க்கில் அவருக்காக ஓர் அனுதாபக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் நான் முதல் முதலாகப் பாட்டுக்கள் பாடினேன்.

அப்போது கிளம்பிய தேசிய உணர்ச்சியில், வெ.சாமிநாத சர்மா எழுதிய ‘பாணபுரத்து வீரன்’ என்ற நாடகத்தை நடத்த எண்ணினோம். ஆனால் அது சர்க்காரால் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே, அந்த நாட கத்தை ‘தேசபக்தி’ என்று மாற்றி நடத்தினோம். அந்த நாடகம் மக்களிடையே உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

எஸ்.வி.சகஸ்ரநாமம்:
அப்போது நான் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபையில் டி.கே.எஸ். அவர்களோடு இருந் தேன். அவர் நடத்திய ‘தேச பக்தி’ நாடகத்தில் வாலீசன் என்ற பாத்திரத்தை நான் ஏற்றேன். அது ஏறக்குறைய பகத் சிங்கைப் பிரதிபலிப்பதுதான். நான் வாலீசனாக மேடையில் தோன்றினாலே, ஜனங்கள் எல்லாம் ‘பகத்சிங்குக்கு ஜே’ என்று கோஷம் போடுவார்கள்.

முதல் முதலாக இந்த நாடகத்தில்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், காந்திஜியின் வரலாற்றை வில்லுப் பாட்டாகப் பாடி அரங்கேற்றினார்.

தெலுங்கு படங்கள்


கொல்லப்புடி மாருதி ராவ் தனக்கு பிடித்த தெலுங்கு படங்களை பற்றி இங்கே சொல்கிறார். கொல்லப்புடி தெலுங்கு நடிகர், எழுத்தாளர். சாஹித்ய அகாடெமி விருது எல்லாம் வாங்கி இருக்கிறார். நம்மூர் டெல்லி கணேஷ் மாதிரி stature உள்ள தெலுங்கு நடிகர்.

அவரது லிஸ்டும் என் குறிப்புகளும்:

  • யோகி வேமனா: நான் பார்த்ததில்லை. நாகையா, எம்.வி. ராஜம்மா நடித்து, கே.வி. ரெட்டி இயக்கியது. கே.வி. ரெட்டி பெரிய இயக்குனர் – புகழ் பெற்ற மாயா பஜார், பாதாள பைரவி ஆகியவை இவர் இயக்கியவைதான். விஜயா (வாகினி) ஸ்டுடியோஸ் தயாரிப்பு. வேமனா புகழ் பெற்ற தெலுங்கு கவிஞர் – நம் அவ்வையார் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
  • லைலா மஜ்னு: – நான் பார்த்ததில்லை. நாகேஸ்வர ராவ், பானுமதி நடித்து, சி.ஆர். சுப்பராமன் இசையில், பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது.
  • சவுகாரு: நான் பார்த்ததில்லை. என்.டி. ராமராவ், ஸௌகார் ஜானகி நடித்து எல்.வி. பிரசாத் இயக்கியது. விஜயா ஸ்டுடியோஸ் தயாரிப்பு. ஸௌகார் ஜானகிக்கு உள்ள அடைமொழி இந்த படத்திலிருந்து வந்ததுதான். அவரது முதல் படம். எல்.வி. பிரசாத் முதல் தமிழ் படமான காளிதாசிலும், முதல் தெலுங்கு படமான நடித்திருக்கிறார். கமலஹாசனின் ராஜ பார்வை படத்தில் மாதவிக்கு தாத்தாவாக நடிப்பார். மனோகரா, இருவர் உள்ளம், மிஸ்ஸியம்மா ஆகிய படங்களை இயக்கியவர் இவரே.
  • தீக்ஷா – ஜி. வரலக்ஷ்மி, யாரோ ராம்கோபால் நடித்து, ஆத்ரேயா பாடல்களுடன், கே.எஸ். பிரகாஷ் ராவ் இயக்கியதாம். கேள்விப்பட்டது கூட இல்லை.
  • தேவதாஸ்: ஏ.என்.ஆர்., சாவித்ரி, சி.ஆர். சுப்பராமன் இசை, வேதாந்தம் ராகவையா இயக்கம். இதுதான் எல்லாவற்றிலும் சிறந்த தேவதாஸ் என்று கருதப்படுகிறது – குறைந்த பட்சம் தெலுங்கர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். ஓ ஓ ஓ தேவதாஸ் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
  • மல்லேஸ்வரி: பிரமாதமான படம். கிருஷ்ண தேவராயர் ஒரு இரவு பானுமதி தன காதலனிடம் தான் ராணி போல வாழ வேண்டும் என்று சொல்வதை கேட்கிறார். அவளை தனது அந்தப்புரத்துக்கு கூட்டி வருகிறார். ஏ.என்.ஆர்., என்.டி.ஆர். நடித்து, எஸ். ராஜேஸ்வர ராவ் இசையில் பி.என். ரெட்டி இயக்கியது.
  • விப்ரநாராயணா: தொண்டரடிபொடி ஆழ்வாரின் கதை. ஏ.என்.ஆர்., பானுமதி நடித்து, பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது. இசை எஸ். ராஜேஸ்வர ராவ். பார்த்ததில்லை.
  • மாயாபஜார்: அருமையான படம். சாவித்ரி, ரங்காராவ் இருவருக்காக மட்டுமே பார்க்கலாம். இசையில் கண்டசாலா, எஸ். ராஜேஸ்வர ராவ் கலக்கி இருப்பார்கள். என்.டி.ஆர்., ஏ.என்.ஆர். வேறு. என்.டி.ஆர். இந்த மாதிரி படங்களால்தான் தெலுங்கர்களின் கண்ணில் தேவுடுவாகவே மாறிவிட்டார். இயக்கம் கே.வி. ரெட்டி. தயாரிப்பு விஜயா ஸ்டுடியோஸ்.
  • மூக மனசுலு: ஏ.என்.ஆர., சாவித்ரி. பார்த்ததில்லை.
  • மனுஷுலு மாறாலி: சாரதா நடித்தது. பார்த்ததில்லை.
  • பிரதிகடனா:விஜயசாந்தி நடித்து கிருஷ்ணா இயக்கியது. பார்த்ததில்லை.
  • சங்கராபரணம்: எனக்கு கர்நாடக சங்கீதத்தை கேட்டால் ஓட வேண்டாம் என்று தைரியம் கொடுத்த படம். முதன் முதலாக ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்த படம். (க்ரோம்பேட் வெற்றி தியேட்டரில் 2.10 பைசா டிக்கெட்டை இரண்டரை ரூபாய்க்கு வாங்கினோம்) பாட்டுகள் மிக அருமையாக இருந்தன. கவர்ச்சி நடனம் இல்லாவிட்டால் படம் வேஸ்ட் என்று நினைத்த ஸ்கூல் நாட்களிலேயே இந்த படம் எங்கள் செட்டுக்கு பிடித்திருந்தது. கே.வி. மகாதேவன், எஸ்பிபி, மஞ்சு பார்கவி எல்லாரும் கலக்கிவிட்டார்கள். சோமயாஜுலு, கே. விஸ்வநாத் இருவருக்கு இதுதான் மாஸ்டர்பீஸ்.
  • சுவாதி முத்யம்:தமிழர்களுக்கு தெரிந்த படம்தான். கமல் “நடிப்பதற்காக” எடுக்கப்பட்ட படம். பார்க்கலாம், ஆனால் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ராதிகா ஹீரோயின், கே. விஸ்வநாத் இயக்கம். வடபத்ர சாயிக்கு பாட்டில் இழையோடும் சோகம் மிக நன்றாக இருக்கும். இசை யார், இளையராஜாவா?
  • ஓசே ராமுலம்மா: தாசரி நாராயண ராவ் இயக்கி நடித்தது. விஜயசாந்தியும் உண்டு. பார்த்ததில்லை.
  • அயித்தே: நீல்காந்தம் என்பவர் இயக்கிய நியூ வேவ் சினிமாவாம். கேள்விப்பட்டதில்லை.
  • ஷிவா: ராம் கோபால் வர்மாவின் முதல் படம். நாகார்ஜுன், அமலா நடித்தது, இளையராஜா இசை. இது வெளியானபோது நான் செகந்தராபாதில் வாழ்ந்தேன். பெரிய தாக்கத்தை உருவாக்கியது. ஒரு cult film என்றே சொல்லலாம். இன்று யோசித்துப் பார்த்தால் அப்போது புதுமையாக இருந்த திரைக்கதைதான் காரணம் என்று தோன்றுகிறது. மிகவும் taut ஆன, நம்பகத்தன்மை நிறைந்த காலேஜ் காட்சிகள். ரவுடி ரகுவரன், அரசியல்வாதி கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மிக லாஜிகலாக யோசித்தார்கள்.
  • இவற்றுள் யோகி வேமனா, தேவதாஸ், மல்லேஸ்வரி, விப்ரநாராயணா, மாயாபஜார், லைலா மஜ்னு, சவுகாரு, சங்கராபரணம் போன்றவற்றை க்ளாசிக்குகள் என்று சொல்லலாம். நான் பார்த்தவற்றில் மல்லேஸ்வரி, மாயாபஜார், சங்கராபரணம், ஷிவா ஆகியவற்றை சிபாரிசு செய்வேன். நான் சிபாரிசு செய்யும் மற்ற படங்கள்: குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா, கீதாஞ்சலி. மாயாபஜார், குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா ஆகியவற்றை 20 வருஷங்களுக்கு முன் செகந்தராபாதில் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம் – தியேட்டர் பாதி நிறைந்திருக்கும், பார்ப்பவர்கள் மிகவும் என்ஜாய் செய்து பார்ப்பார்கள். (அதே போல் பழைய ஹிந்தி படங்களை ஹைதராபாத் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம். பார்ப்பவர்கள் உண்மையில் என்ஜாய் செய்வார்கள். சி.ஐ.டி. படத்தில் வஹீதா ரெஹ்மான் கஹி பே நிகாஹென் கஹி பே நிஷானா என்று பாடிக் கொண்டு வரும்போது தியேட்டர் கூட சேர்ந்து ஆடியது.)

    ஐம்பதுகளின் முற்பாதி – திராவிட இயக்கமும் தமிழ் சினிமாவும்


    நான் 1950-54 கால கட்டத்தில் ஒவ்வொரு வருஷமும் சிறந்த படம் என்று தேர்ந்தெடுத்தவை மந்திரி குமாரி, ஓரிரவு, பராசக்தி, திரும்பிப் பார், அந்த நாள் மற்றும் மனோகரா. இவை எல்லாமே கலைஞர்/அண்ணா எழுதியதாகவும், திராவிட இயக்க தாக்கம் உள்ளதாகவும் இருக்கின்றன.

    தமிழ் படங்கள் வர ஆரம்பித்து முதல் இருபது வருஷம் திராவிட இயக்கத்தின் பாதிப்பு எதுவுமே இல்லை. பாரதிதாசன் அன்றைய தமிழ் திரைப்பட நிலை எழுதிய ஒரு கவிதை கீழே.

    என் தமிழர் படமெடுக்க ஆரம்பம் செய்தார்;
    எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
    ஒன்றேனும் தமிழர் நடை உடை பாவனைகள்
    உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர் உள்ளதில்லை!
    ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை!
    ஒன்றேனும் உயர் நோக்கம் அமைந்ததுவாயில்லை!
    ஒன்றேனும் உயர் நடிகர் வாய்ந்ததுவாயில்லை!
    ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதாயில்லை!

    வட நாட்டார் போன்ற உடை, வட நாட்டார் மெட்டு!
    மாத்தமிழர் முன்னாள் தெலுங்கு கீர்த்தனங்கள்!
    வட மொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில பிரசங்கம்!
    வாய்க்கு வரா ஹிந்துஸ்தானி ஆபாச நடனம்!
    அமையும் இவை அத்தனையும் கழித்துப் பார்க்குங்கால்
    அத்திம்பேர் அம்மாமி எனும் தமிழ்தான் மீதம்!

    கடவுளர்கள், அட்டை முடி, காகிதப் பூஞ்சோலை,
    கண்ணாடி முத்து வடம் கண் கொள்ளாக் காட்சி!
    பரமசிவன் அருள் புரிந்து வந்து வந்து போவார்!
    பதிவிரதைக்கின்னல் வரும் பழைய படி தீரும்!
    சிரமமொடு தாளமெண்ணி போட்டியிலே பாட்டு
    சில பாடி மிருதங்கம் ஆவர்த்தம் செய்து
    வரும் காதல்! அவ்விதமே துன்பம் வரும், போகும்!
    மகரிஷிகள் கோயில் குளம் – இவைகள் கதாசாரம்
    இரக்கமற்ற பட முதலாளிக்கெல்லாம் இதனால்
    ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!

    ஐம்பதுகளின் முற்பாதியில் தமிழ் சினிமா பாகவதர்/பி.யு.சின்னப்பா ஆகியோரின் தாக்கத்தில் இருந்து வெளி வர ஆரம்பித்திருந்தது. படம் என்றால் பாட்டு என்ற நிலை மாறி விட்டிருந்தது. ஆனால் அடுத்த கட்டம் என்ன என்பது இன்னும் தமிழ் சினிமாவை கையில் வைத்திருந்த முதலாளிகளுக்கு தெளிவாகவில்லை. கலை கலைக்காக என்று படம் எடுத்தவர்கள் மிக குறைவு. எனக்கு தெரிந்து இந்த கால கட்டத்தில் அப்படி எடுக்கப் பட்ட படங்கள் ஏழை படும் பாடு (Les Miserables நாவலை படமாக்கி இருந்தனர்), என் வீடு (சாண்டில்யன் + நாகையா), மனிதன் (டி.கே.எஸ். சகோதரர்கள்) மற்றும் அந்த நாள், அவ்வளவுதான். இவற்றில் நான் பார்த்தது அந்த நாள் ஒன்றுதான். அது உலகத் தரம் வாய்ந்த படம்.

    பிறகு என்ன மாதிரி படங்கள் எடுக்கப் பட்டன? சாகசப் படங்கள், குறிப்பாக ராஜா ராணி கதைகள் – மர்ம யோகி, சர்வாதிகாரி, மருத நாட்டு இளவரசி, மலைக் கள்ளன் மாதிரி படங்கள் எடுக்கப்பட்டன, பொதுவாக நன்றாக ஓடின. திராவிட இயக்க தாக்கம் உள்ள படங்கள் – மந்திரி குமாரி, பொன்முடி, பராசக்தி, திரும்பிப் பார், பணம், போன்ற படங்கள் எடுக்கப்பட்டன. சில சமயம் ஓடின. பொதுவாக கலைஞர் வசனம் எழுதிய படங்கள் நன்றாக ஓடின. அதை விட்டால் புத்தகமாகவோ, நாடகமாகவோ வெற்றி பெற்றவை – தேவதாஸ், பராசக்தி, மலைக் கள்ளன், பொன்முடி, வேலைக்காரி, தூக்குத் தூக்கி, ரத்தக் கண்ணீர் போன்றவை படமாக்கப்பட்டன. பொதுவாக வெற்றி பெற்றன.

    தயாரிப்பாளர்கள் ஓரளவு புதுமையான கதைகளை, சர்ச்சை ஏற்படுத்தக்கூடிய வசனங்களை தேடி இருக்கிறார்கள். அவர்களை பொறுத்த வரையில் புராணப் படங்களின் காலம் முடிந்துவிட்டது. பாட்டை மட்டும் வைத்து ஓட்டி விட முடியாது. சாகசக் கதைகள், மெலோட்ராமா கதைகள் ஆகியவற்றைத்தான் அவர்கள் தேடி இருக்கிறார்கள். குறிப்பாக, வெற்றி பெற்ற நாடகங்களையும், திராவிட இயக்கத்தினரையும் ஓரளவு தேடி இருக்கிறார்கள். ஏ.வி.எம். செட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், ஜூபிடர் பிக்சர்ஸ் எல்லாரும் இப்படித்தான். அதுவும் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் திராவிட இயக்க எழுத்தாளர்களை மாத சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருந்தாராம். ஜெமினி மட்டுமே விதிவிலக்கு போலிருக்கிறது.

    இந்த கால கட்டத்தில் திராவிட இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர்கள் சினிமாவில் நுழைந்தனர். கலைஞர் சினிமாத் துறையில் பெரும் வெற்றி பெற்றார். திராவிட இயக்கத்துடன் கொள்கை ரீதியாக பட்டும் படாமலும் இருந்தாலும் சிவாஜி, எம்ஜிஆர் இருவரும் பெரிய ஹீரோக்களாக உருவெடுத்துக் கொண்டிருந்தார்கள். என்.எஸ்.கே., கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர்.ராதா ஆகியோரும் வளர்ந்து கொண்டோ தேய்ந்து கொண்டோ இருந்தார்கள். அண்ணா, பாரதிதாசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, கண்ணதாசன் போன்றவர்களும் கதை, வசனம், பாடல்கள் என்று பல விதங்களில் திரைப்படங்களுக்கு பணி ஆற்றினார்கள். கதை, வசனம், பாடல்கள் எழுதியவர்கள் எல்லாரும் அங்கங்கே நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயக்க கருத்துகளை வசனங்களிலும், கதைகளிலும் புகுத்தினார்கள்.

    1949-இல் வந்த வேலைக்காரிதான் முதல் திராவிட இயக்கத் தாக்கம் உள்ள படம் என்று நினைக்கிறேன். 1950-இல் பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் பொன்முடி என்ற பேரில் மாடர்ன் தியெட்டர்சால் படமாக்கப்பட்டது. கலைஞர் மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி (மாடர்ன் தியேட்டர்ஸ்) ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதினர். 1951-இல் அண்ணாவின் ஓரிரவு (ஏவிஎம்) வெளிவந்தது. கலைஞர் தேவகி என்ற படத்துக்கு கதை வசனம் எழுதினர். ஏ.வி.பி. ஆசைத்தம்பி சர்வாதிகாரி படத்துக்கு வசனம் எழுதினார். 1952-இல் பராசக்தி (ஏவிஎம்) வெளிவந்தது. என்.எஸ்.கே. பணம் படத்தை எடுத்தார். (போட்ட பணத்தை எடுத்தாரா என்று தெரியவில்லை). பாரதிதாசன் வசனம், பாட்டுகளை வைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் வளையாபதி படத்தை எடுத்தது. 1953-இல் திரும்பிப் பார் (மாடர்ன் தியேட்டர்ஸ்). கலைஞர், எம்ஜிஆர், பி.எஸ்.வீரப்பா சேர்ந்து தயாரித்த நாம் இந்த வருஷம்தான் வந்தது. 1954-இல் ஏறக்குறைய பிரசார படமான ரத்தக் கண்ணீர், மனோகரா (ஜூபிடர்), மலைக்கள்ளன் (பக்ஷி ராஜா) கலைஞர் கை வண்ணத்தில். சுகம் எங்கே (மாடர்ன் தியேட்டர்ஸ்) வசனம் கலைஞரா, கண்ணதாசனா என்று குழப்பமாக இருக்கிறது. அண்ணா எழுதி, கே.ஆர். ராமசாமி, எஸ்.எஸ்.ஆர். நடித்த சொர்க்க வாசல், கலைஞர் கதை வசனம் எழுதிய அம்மையப்பன், கண்ணதாசன் கதை வசனம் பாட்டு எழுதிய இல்லற ஜோதி இந்த வருஷம்தான் திரைக்கு வந்தன. இதற்கு பிறகு வந்தவற்றில் ரங்கோன் ராதா (1956) ஒன்றுதான் குறிப்பிட வேண்டிய திராவிட இயக்கப் படம் என்பது என் கருத்து.

    மேலோட்டமாக பார்த்தால் இந்த கால கட்டத்தில் திராவிட இயக்கம் ஒரு புத்துணர்ச்சியை கொண்டு வந்தது போலிருக்கும். சமூக பிரக்ஞை உள்ள கதைகள் படமாக்கப்பட்டனவோ என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் சிலர் பணம் பார்த்தனர், அவ்வளவுதான். கலைஞர் குறிப்பிடத்த் தக்க வெற்றி அடைந்தார். வெகு விரைவில் நடிகர்கள் – குறிப்பாக சிவாஜி, எம்ஜிஆர் – ஆதிக்கத்துக்கு திரைப்படங்கள் சென்றன. எழுத்தாளார்களின் தேவை மங்கிவிட்டது. அண்ணா கூட பெரும் அளவில் வெற்றி பெறவில்லை. அவரது கதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்தன – ரங்கோன் ராதா, தாய் மகளுக்கு கட்டிய தாலி, நல்லவன் வாழ்வான் – என்று. சினிமா உலகில் பெரும் பாதிப்பு இல்லை. முரசொலி மாறன் ஐம்பதுகளின் பிற்பகுதியில் சினிமா உலகில் நுழைந்து வசனம் எழுதினார், படங்களை திறமையாக தயாரித்தார். ஆனால் புகழ் பெறவில்லை. ஆசைத்தம்பி போன்றவர்கள் ஆளையே காணவில்லை. கொள்கைப் பிடிப்பு உள்ளவர் என்று சொல்லக் கூடிய எஸ்.எஸ்.ஆர். முதல் வரிசைப் படங்களில் இரண்டாவது ஹீரோ, இரண்டாம் வரிசைப் படங்களில் ஹீரோ என்றுதான் வளர முடிந்தது. கே.ஆர்.ராமசாமி, என்.எஸ்.கே. ஆகியோருக்கு தேய்முகம். கண்ணதாசன் பாட்டு எழுதி பெரும் வெற்றி பெற்றார், ஆனால் அவர் எழுதிய கதைகள் கொஞ்சமே – மஹாதேவி, சிவகங்கை சீமை, மாலையிட்ட மங்கை, கவலை இல்லாத மனிதன், கறுப்புப் பணம் மாதிரி. கலைஞருக்கு கூட இதற்கு பிறகு தேய்முகம்தான் – மனோகராவுக்கு பிறகு அவர் எழுதிய வசனங்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை, அவரது வசனங்களுக்காக இதற்கு பிறகு யாரும் படம் பார்ப்பதில்லை.

    திராவிட இயக்கத் தாக்கம் ஒரு short lived phase என்றுதான் சொல்ல வேண்டும். ஐம்பதுகளின் பிற்பாதியில் தொடங்கிய எம்ஜிஆர்-சிவாஜி-ஜெமினி ஆதிக்கம் ஒரு பதினைந்து இருபது வருஷங்கள் நீடித்தது. இந்த short lived phase கதைக்கும், இயக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக மாறி இருந்தால் தமிழ் சினிமா நல்ல முறையில் மாறி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

    தில்லானா மோகனாம்பாள் – என் விமர்சனம்


    அந்த காலத்தில் இந்த படத்தை பற்றி என்ன நினைத்தார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினால் விகடன் விமர்சனம் இங்கே

    மோகனாம்பாளை நான் நாலைந்து முறை பார்த்திருக்கிறேன். முதல் முறை பார்த்தபோது சிவாஜியின் நடிப்புக்கு கண்மூடித்தனமான ரசிகனாக இருந்த காலம். அவர் தும்மினாலும் என்ன நடிப்பு என்றுதான் சொல்லுவேன். அப்போது சிவாஜி நன்றாக நடித்திருந்தார், ஆனால் அவரை மனோரமாவும் நாகேஷும் தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள் என்று தோன்றியது. பாலையா நடிப்பு பிடித்திருந்தது. பாட்டுக்கள் பிடித்திருந்தன. மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாட்டில் பத்மினியின் மூக்குத்தி டாலடிக்கும் காட்சி அற்புதமாகத் தோன்றியது.

    யாரையும் கண்மூடித்தனமாக ரசிக்கும் காலகட்டம் போனதும் இந்த படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க நேர்ந்தது. ஏற்கனவே இருந்த நல்ல அபிப்ராயம் எல்லாம் நொறுங்கிவிட்டன. மெலோட்ராமாவை பிழிந்து எடுப்பார்கள். அதுவும் அந்த நலம்தானா பாட்டு வரும்போது ஏண்டா எல்லாரும் இப்படி கொலை வெறி பிடிச்சு அலயறீங்க என்று கத்த வேண்டும் போலிருந்தது. சிவாஜியே மோசம்; ஆனால் பத்மினி! இதுக்குத்தான் அமெரிக்காவிலிருந்து வந்து ரசிகர்களை இப்படி ஒரேயடியாக ஒழிக்க வேண்டுமா? நாகேஷ் இவர்களுக்கு மாறாக அலட்டிக்கொள்ளாமல் நடித்திருப்பதால்தான் முன்னாலும் அவர் நடிப்பு பிடித்திருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். மனோரமாவுக்கு ஓவர் த டாப் ரோல்தான். ஆனாலும் அவர் நன்றாகத்தான் நடித்திருந்தார். கொடுமை என்னவென்றால் இந்த படத்தை என் அம்மாவோடு பார்த்தேன். என் அம்மாவுக்கு இது ஒரு டாப் டென் திரைப்படம். நிமிஷத்துக்கு நிமிஷம் சிவாஜி என்னமா நடிக்கிறார், பத்மினி எப்படி கலக்கறா, என்றெல்லாம் கமென்ட் விட்டுக் கொண்டே இருந்தார். எனக்கோ சிவாஜியின் சொதப்பலையும் மிஞ்சிய பத்மினி என்றுதான் ஒன் லைன் விமர்சனம் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. இன்றைக்கு ஒரு ஐம்பது வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு இந்த படம் பிடிக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். என் மனைவி பார்த்தாலே ஓடி விடுவாள்.

    அதற்கு ஒரு preparation வேண்டும். தி. மோகனாம்பாளை விகடனில் வாராவாரம் படித்தவர்கள் ரியாக்ஷன் வேறு மாதிரிதான் இருக்கும். நான் அந்த நாவலை வாங்கிப் படித்தேன். படு சுமாரான நாவல். இல்லை இது எப்போது படமாக வரப்போகிறது என்று எதிர்பார்த்து எதிர்ப்பார்த்து பார்த்தவர்களின் ரியாக்ஷன் வேறு மாதிரிதான் இருக்கும். எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் இந்த படம் பிடிப்பது கஷ்டம்.

    கடைசியாக இரண்டு மூன்று வருஷம் முன்னால் மீண்டும் இந்த படத்தை டிவியில் பார்த்தேன். பத்மினி இமாலய சொதப்பல் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. நாகேஷ் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை. பாலையா, மனோரமா குறிப்பிடும்படி நடித்திருந்தார்கள் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் சிவாஜியின் நடிப்பை பற்றிய எண்ணம் மீண்டும் ஒரு முறை மாறியது. சிக்கல் ஷண்முக சுந்தரம் ஒரு அப்பாவி, வெட்டி பந்தா நிறைய உள்ளவன். அவன் எப்படி நடந்து கொள்வான்? அவன் வாழ்க்கையில் அண்டர்ப்ளே என்பது ஏது? எல்லாவற்றுக்கும் உணர்ச்சிவசப்படத்தான் படுவான். சிவாஜி கொந்தளிப்பதில் என்ன ஆச்சரியம்? அதுதான் அந்த காரக்டர்! (ஆனால் நலம்தானா மெலோட்ராமாவை கசக்கி பிழிவது என்பதில் எந்த மாற்றமும் இல்லை)

    1968-இல் வந்த படம். சிவாஜி, பத்மினி, நாகேஷ், மனோரமா, பாலையா நடித்தது. தங்கவேலு, டி.ஆர். ராமச்சந்திரன், நம்பியார், சி.கே. சரஸ்வதி, சுகுமாரி, நாகையா, ஏ.வி.எம். ராஜன், சாரங்கபாணி, பாலாஜி, செந்தாமரை மாதிரி நிறைய பேர் வந்து போவார்கள். கே.வி. மகாதேவன் இசை. எம்.பி.என். பொன்னுசாமி/சேதுராமன் சகோதரர்கள் நாதஸ்வரம். கொத்தமங்கலம் சுப்புவின் மூலக்கதை. ஏ.பி. நாகராஜன் இயக்கம்.

    ஏ.பி.என். நாகேஷ், பத்மினி ஆகியோருக்காக காத்திருந்து எடுத்த படமாம்.

    கதை தெரிந்ததுதான். கோபக்கார, ஆனால் வித்தைக்கார நாதஸ்வர வித்வான் சிக்கல் ஷண்முக சுந்தரம். அழகர் மலையில் புது ஆட்டக்காரி மோகனாவோடு முதல் சந்திப்பிலேயே சண்டை, சவால். ஆனால் மோகனாவின் ஆட்டத்தை சிக்கலார் மறைந்திருந்து பார்க்கும் மர்மத்தை மோகனா புரிந்து கொள்கிறாள். தாசி குலத்தில் பிறந்த மோகனாவை ஏழை ஷண்முக சுந்தரத்திடம் ஒப்படைக்க அவள் அம்மாவுக்கு மனதில்லை. அவளுக்கு சவடால் வைத்தி துணை. மோகனாவை தவறாக புரிந்து கொண்டு ஜில் ஜில் ரமாமணியுடன் மலேயாவுக்கு போக திட்டமிடும் சிக்கலாரை மோகனா சவாலை நினைவூட்டி நிறுத்தி விடுகிறாள். சவால் போட்டியின்போது ஷண்முக சுந்தரத்துக்கு கத்திக்குத்து, நாதஸ்வரத்தை தூக்க முடியவில்லை. குணமாகி வந்த பிறகும் காதலர்கள் ஒன்று சேர மோகனாவின் அம்மா தடையாக இருக்கிறாள். சவடால் வைத்தியின் சதியால் மீண்டும் ஷண்முக சுந்தரம் மோகனாவை தவறாக புரிந்துகொள்ள, மோகனா தற்கொலைக்கு முயற்சி செய்ய, அம்மா மனம் மாறி காதலர்கள் ஒன்று சேர்ந்து சுபம்!

    நடிப்பை பற்றி பேசியாயிற்று. இசை! அற்புதம்!

    பாண்டியன் நானிருக்க அற்புதமான டப்பாங்குத்து. குத்துன்னா இது! அதுவும் அஜக்தா, மஜக்தா, சதக் சதக் சதக்தா என்று வார்த்தை பிரயோகம் அபாரம்! ராகிங் காலத்தில் இந்த பாட்டை பாடினால் சில சீனியர்கள் விட்டுவிடுவார்கள்!

    மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன நல்ல பாட்டு. அழகாக படமாக்கப்பட்டிருக்கும். அதுவும் பாலையா மேலே விழும் கையை ஒதுக்குவதும், பிறகு அது சிவாஜி கை என்று தெரிந்து பயந்து ஓடுவதும் அருமை!

    நலம்தானா பாட்டாக கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் பத்மினி ஏன் இப்படி கொலை வெறி பிடிச்சு அலைஞ்சாங்க என்றுதான் கேள்வி எழுகிறது.

    சிவாஜி இங்கிலிஷ் நோட்ஸ் வாசிப்பது நன்றாக வந்திருக்கும்.

    எல்லா பாட்டுகளையும், நாதஸ்வர இசையையும் இங்கே கேட்கலாம்.

    எனக்கு பாட்டு கேட்கத்தான் தெரியும். சிவாஜி நிஜ நாதஸ்வர வித்வான் போல அழகாக வாசித்திருப்பார் என்று சொல்வார்கள். கேட்டுக்கொள்ள வேண்டியதுதான். கிடைத்த ஒரு யூட்யூப் க்ளிப் கீழே.

    மொத்தத்தில் மெலோட்ராமாவை ஓரளவாவது சகித்துக் கொள்வீர்கள் என்றால் நாகேஷ், சிவாஜியின் நடிப்பு, அருமையான இசை, நல்ல பாட்டுக்கள் ஆகியவற்றுக்காக பாருங்கள். பத்மினி நடிக்கும் காட்சிகளில் தம் கிம் அடிக்க போய்விடுங்கள். பத்துக்கு 6.5 மார்க். B- grade.

    1953-இல் தமிழ் சினிமா


    1953-இல் 36 படங்கள் வந்திருக்கின்றன என்று தமிழ் சினிமா சைட் சொல்கிறது. நான் பார்த்தது வழக்கம் போல மிகக் குறைவுதான். அவ்வையார், திரும்பிப் பார் இரண்டுதான் நினைவில் இருக்கின்றன. சின்ன வயதில் டெண்டு கோட்டையில் பானுமதி நடித்து இயக்கிய சண்டி ராணி (வான் மீதிலே இன்பத் தேன் மாரி தூவுதே என்ற இனிமையான பாடல் கொண்ட பாட்டு), ஜெனோவா என்ற எம்ஜிஆர் படம் பார்த்திருக்கிறேன். அப்போதே அது இரண்டும் கடி படம் என்று தோன்றியது. ஜெனோவா எம்ஜிஆர் நாயகனாக நடித்திருந்தாலும் எம்ஜிஆர் படம் அல்ல. இவற்றைத் தவிர தேவதாஸ் படமும் மங்கலாக நினைவு இருக்கிறது.

    பார்க்க விரும்பும் படங்கள் இருக்கின்றன. தலையாயது மனம் போல் மாங்கல்யம். ஜெமினி, சாவித்ரி நடித்தது. சாவித்ரியின் முதல் படமோ? மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய் என்ற அருமையான பாட்டு இதில் வருவதுதான். அந்த ஒரு பாட்டுக்காகவே இந்த படம் பார்க்க ஆசை.

    சாண்டில்யன் கதை வசனம் எழுதி நாகையா நடித்த என் வீடு என்ற படத்தையும் பார்க்க ஆசை. சாண்டில்யன் இந்த படத்தை பற்றி நிறைய பீற்றி கொண்டிருக்கிறார். அனேகமாக பிரிண்டே இருக்காது என்று நினைக்கிறேன். சாண்டில்யனும் நாகையாவும் நெருங்கிய நண்பர்கள் போலிருக்கிறது. நாகையாவை பற்றி அவர் தனது memoirs-களில் – போராட்டங்கள் என்ற புத்தகம் – புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

    ஏ.பி. நாகராஜன் நடித்த நால்வர் என்ற படத்தை பார்க்கவும ஆசை. இதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

    மனிதன் டி.கே. ஷண்முகம் தனது நாடகம் ஒன்றை படமாக்கியதாம். அகலிகை கதைதான் inspiration ஆக இருந்திருக்கும் போலிருக்கிறது. கணவனை விட்டு நெடு நாட்களாக பிரிந்திருக்கும் மனைவி, வேறு ஒருவனுடன் கூடுகிறாள். கணவன் விஷயம் தெரிந்தும் அவளை ஏற்றுக் கொள்கிறான். பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

    எம்ஜிஆருக்கு இந்த வருஷம் இரண்டு படம். அவரும், பி.எஸ். வீரப்பாவும், கலைஞரும் பார்ட்னர்களாக சேர்ந்து தயாரித்த நாம் ஒன்று, ஜெனோவா இன்னொன்று. ஜெனோவா ஓடியதாம். நாம் ஓடவில்லையாம்.

    சிவாஜிக்கும் 1952-இல் புயல் போல நுழைந்தும், அடுத்த வருஷமே சொல்லிக் கொள்கிற மாதிரி படம் எதுவும் இல்லை. அன்பு, பூங்கோதை என்று இரண்டு. மனிதனும் மிருகமும் கூட சிவாஜி படமோ?

    திரும்பிப் பார், அவ்வையார், தேவதாஸ் மூன்றும் குறிப்பிட வேண்டிய படங்கள்தாம்.

    தேவதாஸ் எப்படி ஓடியது என்று எனக்கு இன்னும் புரியவில்லை. அது மெலொட்ராமாவின் தோல்வி என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஆனால் அந்த நாவல் மிக வெற்றி பெற்றது. படம் எந்த மொழியில் எடுத்தாலும் பிய்த்துக் கொண்டு ஓடியது. அதை புரிந்து கொள்ள நான் அந்த கால கட்டத்தில் பிறந்திருக்க வேண்டும் போல. ஆனால் “ஓ, ஓ, ஓ, தேவதாஸ்” பாட்டு கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

    அவ்வையார் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் அதில் கதை என்று ஒன்றுமே இல்லை. பல கர்ண பரம்பரைக் கதைகளை ஒன்றாக இணைத்து படம் எடுத்துவிட்டார்கள். ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடுவார். பின்னால் ஏதோ ஒரு கர்ண பரம்பரை கதையில் குலத்தளவே ஆகுமாம் குணம் என்றும் பாடுவார். கே.பி. சுந்தராம்பாள் அந்த ரோலுக்கு மிக பொருத்தமாக இருந்தார். அவரது மணியான குரலும் அருமையாக பொருந்தியது.

    மிச்சம் இருக்கும் திரும்பிப் பார்தான் எனக்கு இந்த வருடம் வந்த சிறந்த படம். அதுவும் மிக அற்புதம் என்றெல்லாம் இல்லை, இந்த வருஷம் வந்த படங்களில் சிறந்தது, அவ்வளவுதான்.

    1950-இல் வந்த படங்கள்


    1950-இல் 13 படங்கள்தான் வெளி வந்திருக்கின்றன. இதய கீதம், ஏழை படும் பாடு, கிருஷ்ண விஜயம், சந்திரிகா, திகம்பர சாமியார், பாரிஜாதம், பொன்முடி, மச்ச ரேகை, மந்திரி குமாரி, மருத நாட்டு இளவரசி, ராஜ விக்ரமா, லைலா மஜ்னு, விஜயகுமாரி அவ்வளவுதான். சின்ன லிஸ்டாக இருப்பதால் முழுதாக கொடுத்திருக்கிறேன். எத்தனை படத்துக்கு இன்னும் பிரிண்ட் இருக்கிறதோ? யாராவது பார்த்தவர்கள் இருந்தால் படங்களை பற்றி சொல்லுங்கள்.

    விக்டர் ஹ்யூகோ எழுதிய Les Miserables நாவல ஏழை படும் பாடு நாகையா, ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடித்து ஏழை படும் பாடு என்று வந்தது. இந்த படத்தில் ஜாவர் என்ற ரோலில் நடித்ததால்தான் ஜாவர் சீதாராமன் என்ற பட்டப் பெயர் அவருக்கு கிடைத்தது. இன்றும் பேசப்படுகிறது.

    நம்பியார் பல வேடங்களில் நடித்த திகம்பர சாமியார் இந்த வருஷம்தான் வந்தது. இது வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய அந்த காலத்தில் புகழ் பெற்ற மர்ம நாவல்.

    பாரதிதாசன் எழுதிய நூல் பொன்முடி என்று படமாக்கப் பட்டது.

    எம்ஜிஆர், வி.என். ஜானகி நடித்த மருத நாட்டு இளவரசி இந்த் வருஷம் வந்ததுதான்.

    இவ்வளவு இருந்தும் இவற்றில் நான் பார்த்தது மந்திரி குமாரி ஒன்றுதான். அதனால் எந்த படத்தை பற்றி எழுதுவது என்று பெரிதாக ஒன்றும் யோசிக்க வேண்டியதில்லை. அது அடுத்த பதிவில்.

    அன்னையும் பிதாவும் (Annaiyum Pithavum)


    1969ல் வந்த படம். AVM ப்ரொடெக்‌ஷன்ஸில் வெளிவந்தது.

    நடிகர்கள் AVM ராஜன், நாகையா, கோபாலக்கிருஷ்ணன், சிவக்குமார், சோ, T.R. ராமச்சந்திரன், V.K. ராமசாமி, ஒர் விரல் கிருஷ்ணாராவ்
    நடிகைகள் வாணிஸ்ரீ, லக்‌ஷ்மி, SN லக்ஷ்மி, S.சகுந்தலா, மனோரமா, பானுமதி
    வசனம் நிர்மலா
    ஒளிப்பதிவு தம்பு
    பாடல்கள் கண்ணதாசன்
    இசை M.S. விஸ்வனாதன்
    பின்னணி L.R.ஈஸ்வரி. T.M.S, P.சுசீலா
    தயாரிப்பு M.முருகன், M.சரவணன், M.குமரன்
    டைரக்‌ஷன் கிருஷ்ணன்-பஞ்சு

    நாகையா, மனைவி S.N.லக்‌ஷ்மி இருவருக்கும் கோபாலகிருஷ்ணன், AVM ராஜன், ஊனமுற்ற தங்கை லக்‌ஷ்மி ஆகியோர் வாரிசுகள்.  நாகையாவுக்கு ஃபாக்டரியில் வேலை செய்யும் போது கண் போய்விடுகிறது. அதன் பின் மருமகள் சகுந்தலா கொடுமை படுத்துகிறாள். AVM ராஜன் பொறுப்பு வந்து பாண்ட், ஷர்ட் போட்டுக்கொண்டு கட்டட வேலை செய்யப் போன இடத்தில் வேலையை இன்னொருவருக்கு தியாகம் செய்துவிட்டு தத்துவப் பாடல் ஒன்றை அவிழ்த்துவிடுகிறார். அந்தப் பாடல் ”சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்”.

    பின்னர் ராமச்சந்திரன் வாலட்டை கண்டுபிடித்துக்கொடுத்து அவர் மூலமாக டிரைவர் வேலை கண்டுபிடித்துக்கொள்கிறார். எந்த வேலையிலும் நிலைக்காமல் கடைசியில் வாணிஸ்ரீயின் தந்தை வி.கே.ராமசாமி கம்பெனியில் அண்ணன் மேனேஜர், தம்பி குமாஸ்தா.

    சோ  VKராமிசாமியை நல்ல மிளகாய் அரைக்கிறார். ராமச்ச்ந்திரனின் மகன் சிவக்குமார் லக்‌ஷ்மியுடன் ஜோடி சேருகிறார்.

    அண்ணன் கோபாலகிருஷ்ணன் மனைவி பேச்சைக் கேட்டு குடும்பத்தை கைவிட்ட பிறகு AVM ராஜன் குடும்பத்தை பல கஷ்டங்களுக்கு இடையில் காப்பாற்றுவதுதான் கதை. திரைகதையை நன்றாக சிரத்தை எடுத்து பண்ணியிருக்கிறார்கள் கிருஷ்ணன் பஞ்சு.

    “முத்தான ஊர்கோலமோ”, “மோதிரம் போட்டது”, “மலரும் மங்கையும் ஒரு ஜாதி”, “இறைவா உனக்கொரு கேள்வி” என்ற பாடல்கள் சுசீலா பாடுகிறார். ”பொன்னாலே” என்ற பாட்டை வெ.நிர்மலாவிற்க்காக LR ஈஸ்வரி பாடுகிறார். பாடல்கள் ஒன்றும் மனதில் நிற்க்கவில்லை. வார்த்தைகள் பரவாயில்லை

    வசனம் நன்றாக இருக்கிறது. நார் பெருமையானதா? பூ பெருமையானதா என்று சோ விளக்குவது இது: “பூ இவ்வளவு தானா?” என்று பூவை அலட்சியம் பண்ணுவார்கள். ஆனால் நாரையோ பெருமையாக மாம”நாரு” என்று பெருமையாக சொல்வார்கள்.

    வாணிஸ்ரீ அழகாக இருக்கிறார்.

    நல்ல பாசம் நிறைந்த குடும்பக் கதை. ஆனாலும் 19 ரீல் பாசம் கொஞசம் ஓவர் தான்.

    கடைசி சீன் ஜோக் – சோ மனம் திருந்துகிறார். அவர் கைவிட்ட பானுமதியிடம் “நான் திருந்திட்டேன்”  என்கிறார். அவர் “அப்படிச் சொல்லாதிர்கள்” என்று சொல்ல,  “இல்லை, அப்படித்தான் சொல்லனும்” என்கிறார் சோ, கடைசி சீன் என்பதை குறிப்பிட்டு.

    6/10 மார்க்.

    பெண் (Penn)


    1953இல் வெளிவந்தது. ஒரே நேரத்தில் “லட்கி” என்று ஹிந்தியிலும் வெளிவந்திருக்கிறது. தமிழில் நடித்தவர்கள் ஜெமினி, வீணை எஸ். பாலச்சந்தர், வைஜயந்திமாலா, அஞ்சலி தேவி, எஸ்.வி. சஹஸ்ரனாமம், நாகையா, சாரங்கபாணி, வி.கே. ராமசாமி, பி.டி.சம்பந்தம், ஆர். பாலசுப்ரமணியம் நடித்திருக்கிறார்கள். இசை ஏவிஎம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளர் சுதர்சனம். இயக்குனர் எம்.வி.ராமனா? ஹிந்தி படத்துக்கு அவர்தான். சுமாராகத்தான் ஓடியதாம்.

    ஹிந்தியிலும் வைஜயந்திமாலாவும் அஞ்சலி தேவியும்தான். ஜெமினிக்கு பதிலாக பரத் பூஷன். பாலச்சந்தருக்கு பதிலாக கிஷோர் குமார். சாரங்கபாணிக்கு பதிலாக ஓம் பிரகாஷ்.

    பாட்டுக்கள் பிரமாதம்! எனக்கு மிகவும் பிடித்தது “சொன்ன சொல்லை மறந்திடலாமா” பாட்டுதான். எம்.எஸ். ராஜேஸ்வரியும் எனக்கு ஞாபகம் இல்லாத இன்னொருவரும் டி.எஸ். பகவதியும் பாடியது. மீண்டும் கேட்டால் ஞாபகம் வந்துவிடும் என்று ஆவலோடு காத்திருந்தேன், சன் டிவிக்காரர்கள் என் ஆசையில் மண்ணை வாரி போட்டுவிட்டார்கள். முன்னால் எழுதிய போஸ்ட்1, போஸ்ட்2 இங்கே. இங்கே கேட்கலாம்.

    “பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் கண்ணா” அபாரம். ஏதாவது தமிழ் கீர்த்தனையா? அதில் “பத்து ஜனங்கள் முன்னால்” என்று ஆரம்பித்து விஸ்தாரமாக ஸ்வர ஆலாபனை செய்வதும், அதை வீணையில் திருப்பி வாசிப்பதும் அருமை! பாடியது டி.எஸ். பகவதியாம். எம்எல்வி என்றும் எங்கேயோ படித்தேன். என்னால் இப்போது குரலை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரே ஒரு முறைதானே கேட்டிருக்கிறேன்… எனக்கு கர்நாடக சங்கீதம் எல்லாம் தெரியாது – ஆனால் ராகம் தாளம் எல்லாம் தெரிந்தால்தான் பாட்டை ரசிக்க வேண்டுமா என்ன? ராகம் என்னவென்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்! இந்த பாட்டுக்கு யாரிடமாவது MP3 இருக்கிறதா?

    “உல்லாசமாகவே உலகத்தில் வாழவே” – சந்திரபாபு அபூர்வமாக வேறு ஒருவருக்கு குரல் கொடுத்திருக்கிறார். அது ஒரு . “வனஜா கிரிஜா ஜலஜா [ஏதோ ஒரு ஜா] ராகினி ரோஷினி சரசா கிரிஜா ஜலஜா வனஜா மாலினி லோசனி மஞ்சுளபாஷிணி யாரோ ஒரு பெண்மணி அவளே என் கண்மணி” என்று பாடும்போது பிய்த்து உதறுகிறார். (வனஜா கிரிஜா என்று தவறாக எழுதி இருந்ததை திருத்திய ராஜ்ராஜுக்கு நன்றி!) ஸ்விங் இசையை அருமையாக தமிழுக்கு கொண்டுவந்திருக்கிறார். அந்த காலத்து இளைஞர்கள் குஷி மூடில் இருக்கும்போது கண்டிப்பாக பாடியிருப்பார்கள்!

    “பாரத நாட்டுக்கிணை பாரத நாடே” நல்ல அழகான செட். பாட்டு கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும், நன்றாக இருக்கிறது.

    சாரங்கபாணி செய்யும் கதாகாலட்சேபம் அருமை. “பெண்ணை நம்பாதே” என்று சாரங்கபாணி காலட்சேபம் செய்ய, அவரது மனைவியிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு பெண்ணாக வாக் அவுட் செய்கிறார்கள். ஆனால் சாரங்கபாணியும், பி.டி. சம்பந்தமும் விடாமல் வேகத்துடன் பாடிக்கொண்டே போகிறார்கள். பி.டி. சம்பந்தம் கொஞ்சம் குள்ளம். அவர் ஒரு சேரில் ஏறிக்கொண்டு சாரங்கபாணிக்கு இணையாக பாடுவது அருமை.

    “எட்டாத கிளையில் கிட்டாத கனி போல்” ஒரு ஜாலியான feet tapping number. நல்ல சந்தம்.

    “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்” என்ற பாரதியார் பாட்டு. பாடுவது அபூர்வமாக பாடும் டி.ஏ. மோதி.

    “அகில பாரத பெண்கள் திலகமாய்” கேட்கலாம்.

    படத்தில் எங்கெல்லாம் டான்ஸ் ஆடமுடியுமோ அங்கெல்லாம் வை. மாலா ஆடிவிடுகிறார். மேடம் ஃப்யூரியுடன் “பாரத நாட்டுக்கிணை” என்று பாடிக்கொண்டே போட்டி டான்ஸ், கிராமீய நடனம் என்று சொல்லி “எட்டாத கிளை மேல்” என்று ஒரு பாட்டு. இதை தவிர குதிரை சவாரி செய்துகொண்டே “அகில பாரத பெண்கள் திலகமாய்”, தோழிகள் இருவரும் சேர்ந்து “சொன்ன சொல்லை மறந்திடலாமா”.

    பாட்டும் டான்சும்தான் முக்கியம். கதை எல்லாம் இரண்டாம் பட்சம்தான். கலப்பு மணத்தில் பிறந்த அ. தேவியை ஜெமினி காதலித்து கல்யாணம் செய்துகொள்கிறார். அவரது ஆச்சாரமான அப்பா சாரங்கபாணியின் வற்புறுத்தலாலும், தன் மனைவி மீது ஏற்படும் சந்தேகத்தாலும் ஜெமினி வை. மாலாவை மணந்துகொள்ள சம்மதிக்கிறார். கல்யாண மேடையில் உண்மைகள் வெளிவர, ஜெமினியும் அ. தேவியும் ஒன்று சேர, ஜெமினியின் கஸின் பாலச்சந்தர் வை. மாலாவை மணக்க, சுபம்!

    அஞ்சலி தேவியின் குரலில் கொஞ்சம் தெலுங்கு வாடை அடிக்கிறது. அதுவும் சார்மிங்காகத்தான் இருக்கிறது.

    சாரங்கபாணி எப்போதுமே அழுத்தி அழுத்தித்தான் பேசுவார். Like rolling the “R”s in English. அது இந்த ரோலுக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது.

    ஆர். பாலசுப்ரமணியம் அந்த காலத்து மேஜர் சுந்தரராஜன். எல்லா படத்திலும் அப்பா.

    ஜெமினி வை. மாலாவை கல்யாணம் செய்து கொள்ள ஊர்வலமாக வரும்போது வாண வேடிக்கை, யானைகள், குதிரைகள், பூப்பல்லக்கு எல்லாம் அமர்க்களப்படுகிறது! இப்படித்தான் அந்தக் காலத்தில் இருக்குமா என்ன?

    ஜெமினி டைட்டிலில் ஆர். கணேஷ்தான். இன்னும் ஜெமினி கணேசன் ஆகவில்லை. டைட்டிலில் வரும் முதல் பேர் சாரங்கபாணி!

    பாட்டுக்களுக்காவே பார்க்கலாம். படம் quaint ஆகவும் இருப்பது ஒரு போனஸ். வை. மாலா இன்னொரு போனஸ்! 10க்கு 6.5 மார்க். C+ grade.

    பாலச்சந்தருக்கு அப்போதே receding hairline. எனக்கு அதில் ஒரு அல்ப சந்தோஷம்!