ஏவிஎம் பேட்டி
ஜூலை 4, 2009 பின்னூட்டமொன்றை இடுக
ஏ.வி.எம் செட்டியாரை விகடனில் எப்போதோ எடுத்த பேட்டி. நன்றி, விகடன்!
“இந்தத் தொழிலில் நாங்கள் போடுகிற மூலதனத்துக்கும் உழைக்கிற உழைப்புக்கும், படுகிற பாட்டுக்கும் பதிலாக வேறொரு தொழிற்சாலையைத் தொடங்கியிருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும்.”- இப்படிச் சொல்கிறவர் யார்? ஏவி.எம். ஸ்டூடியோ அதிபர் திரு. மெய்யப்பன் அவர்கள்தான்.
“அப்படியானால் இந்தத் தொழிலை விட்டு விடுவதுதானே?” என்று கேட்டால், “எப்படி விட முடியும்? புலியின் வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வாலை விட்டால் திரும்பி நம் மீது பாய்ந்து விடுமோ என்று அஞ்சி, கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதில்லையா? அந்த மாதிரியேதான்” என்கிறார்.
திரு மெய்யப்பன் இத் தொழிலை விரும்பி மேற்கொண்டார் என்பதைக் காட்டிலும், சந்தர்ப்பம் இவரை இழுத்துக்கொண்டது என்று கூறுவதுதான் பொருந்தும்.
இவருடைய தந்தை ஆவிச்சி செட்டியார் காரைக்குடியில் ஒரு ஸ்டோர் வைத்திருந்தார். கிராமபோன் ரிக்கார்டுகள் விற்பனை செய்யும் டீலராகவும் இருந்தார். அவர் தொடங்கிய அந்த ஸ்டோர் ஏவி. அண்ட் ஸன்ஸ் என்ற பெயரில் இப்போதும் நடந்து வருகிறது. கிராமபோன் ரிக்கார்டு வியாபாரத்தை விரிவாகச் செய்யும் நோக்குடன் 1932-ல் சென்னைக்கு வந்த திரு. ஏவி.எம்., நாராயண அய்யங்கார், சிவன் செட்டியார் இவர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு, சரஸ்வதி ஸ்டோர்ஸைத் தொடங்கினார்.
முசிரி சுப்பிரமணிய அய்யர், கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், சுப்பையா பாகவதர் இவர்களுடைய ரிக்கார்டுகளே அந்தக் காலத்தில் பிரசித்தமாயிருந்தன. ‘அதிகமாக விற்பனையான இசைத் தட்டு எது?’ என்று கேட்டதற்கு, “முசிரியின் கர்னாடக இசைத் தட்டுகள் மட்டும் 30,000-க்கு மேல் விற்பனை ஆயின. கர்னாடக இசைத்தட்டு விற்பனையில் அது ஒரு பெரிய ரெக்கார்ட்! ‘டிரியோ டிரியோடேயன்னா’, ‘எட்டுக்குடி வேலனடி’, ‘செந்தூர் வேலாண்டி’ பாட்டெல்லாம் அந்தக் காலத்தில் ரொம்பப் பாப்புலர்!” என்கிறார்.
ரேடியோவும் சினிமாவும் வந்த பிறகு கிராமபோன் ரிக்கார்டுகளுக்கு மவுசு குறைந்துவிட்டதால், மெய்யப்பனின் கவனம் படத் தயாரிப்புத் தொழிலில் திரும்பியது.
சரஸ்வதி டாக்கி புரொடியூஸிங் என்ற பெயரில் ஒரு படக் கம்பெனி யைத் துவக்கினார். அப்போதெல்லாம் சென்னையில் ஸ்டுடியோக்கள் கிடையாதாகையால், கல்கத்தா நியூ தியேட்டர்சுக்குச் சென்று அல்லி அர்ஜுனா என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து முடித்தார். கே.எஸ்.அனந்தநாராயணய்யர் அந்தப் படத்தில் கிருஷ்ணனாகவும், குறத்தியாகவும் நடித்தார்.
‘படம் எப்படி இருந்தது?’ என்று கேட்டதற்கு, “அதை ஏன் கேட்கிறீர்கள்? படம் முழுவதும் எடுத்து விட் டோம். அப்போதெல்லாம் உடனுக்குடன் ரஷ் பார்க்கும் சந்தர்ப்பம் இல்லை. மொத்தமாகப் படத்தைப் போட்டுப் பார்த்தபோது 10,500 அடி கூடத் தேறவில்லை. படத்தில் எல்லோருடைய கண்களும் மூடிக் கிடந்தன. வெயிலில் படம் எடுத்த தால் கூச்சத்தில் கண்களை மூடிக் கொண்டுவிட்டார்கள். எடுக்கிறவர்களுக்கும் வெயில்தானே? நடிக்கிறவர்கள் கண்களை மூடிக் கொண்டிருக்கிறார்களா, திறந்து கொண்டிருக்கிறார்களா என்று பார்க்க முடியவில்லை. அப்புறம் கார்ட்டூன் படங்களைச் சேர்த்துக் காண்பித்து நேரத்தைச் சரிக்கட்டினோம்.” என்றார்.
அல்லி அர்ஜுனாவுக்குப் பிறகு இவர் எடுத்த படம் ரத்னாவளி. நடித்தவர்கள் ரத்னாபாய் – சரஸ்வதிபாய் சகோதரிகள். இந்தச் சகோதரிகளுக்கு 30 நாள் ஷூட்டிங்குக்கு 25,000 ரூபாய் கொடுக்கப்பட்டது. ‘வசூல் எப்படி?’ என்ற நமது கேள்விக்கு, ‘பிரயோஜனமில்லை’ என்பதுதான் அவர் பதில்.
‘இனி சொந்தத்தில் ஸ்டுடியோ இல்லாமல் படம் எடுக்கக் கூடாது. ஸ்டுடியோ ஆரம்பிப்பதாயிருந்தால் அது பங்களூரில்தான் இருக்க வேண்டும். ஸ்டூடியோவுக்கேற்ற சீதோஷ்ண நிலை அங்கேதான் இருக்கிறது’ என்ற முடிவுக்கு வந்தார். அதற்கேற்றாற்போல் ஜயந்திலால் என்பவர் (பூனா பிரபாத் ஸ்டுடியோவுடன் தொடர்பு கொண்டவர்) பங்களூரில் இருந்தார். அவருடைய கூட்டுறவோடும் தம் சகாக்களின் கூட்டுறவோடும் பங்களூரில் பிரகதி என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோவைத் தொடங்க முடிவு செய்தார் ஏவி.எம். வெளி நாட்டிலிருந்து சாதனங்கள் வந்து சேர ஆறு மாத காலம் ஆகும்போல் இருந்ததால், அதற்குள் பூனா சென்று இந்தி நந்தகுமாரைத் தமிழில் எடுக்க முயன்றார்கள். இந்திப் படம் திரையிடப்பட்ட இரண்டு நாளைக்கெல்லாம் வசூல் குறைந்துவிடவே, தமிழை அடியோடு மாற்றி எடுப்பதென முடிவு செய்தனர். இந்தி ஏன் ஓடவில்லை என்று கேட்டால், “கிருஷ்ணலீலா வித்அவுட் கம்சன் என்றால், படம் எப்படி ஓடும்?” என்று திருப்பிக் கேட்கிறார். தமிழ் நந்தகுமாரில் பணம் கிடைத்தது. ஆனால், பங்களூர் பார்ட்னர்கள் தங்கள் பங்கைப் பிரித்துவிட்டதால், ஏவி.எம். பிரகதி ஸ்டுடியோவை பங்களூரில் அமைப்பதற்குப் பதில் சென்னையில் நிறுவ வேண்டியதாயிற்று.
ஒஷியானிக் ஓட்டலுக்கு அருகே யுள்ள விஜயநகரம் பேலஸ்தான் பிரகதி ஸ்டுடியோ இருந்த இடம். வாடகை ரூ.350-தான். பூகைலாஸ், அரிச்சந்திரா, சபாபதி, ஸ்ரீவள்ளி ஆகிய படங்களே ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்டவை.
“சபாபதி ரொம்பத் தமாஷான படம்” என்று நாம் சொன்னபோது, “பூகைலாஸ் எடுத்தது அதைவிட வேடிக்கை” என்றார். “தெலுங்கு பேசும் படம், தமிழ் புரொடியூஸர், இந்தி டைரக்டர், கன்னட ஆர்ட்டிஸ்ட்ஸ்! இதுதான் பூகைலாஸ்!”
1944-ல் ஏவி.எம். டைரக்ஷனில் உருவாக்கப்பட்ட ராஜ யோகி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. வசுந்தராவும் தியாகராஜ பாகவதரும் சேர்ந்து நடித்த முதல் – கடைசிப் படம் அதுதான். பாதியிலேயே நின்று போனதற்குக் காரணம், நட்சத்திரங்கள் ஒத்துழைப்பு இல்லாததுதான்!
ஏவி.எம் தம் சொந்த டைரக்ஷனில் எடுத்த வெற்றிப் படம் ஸ்ரீவள்ளி. டி.ஆர்.மகாலிங்கமும் ருக்மிணியும் இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, ஒருவரை ஒருவர் நிஜ வாழ்க்கையிலும் காதலிக்கத் தொடங்கிவிட்டார்கள். படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் அது. இரண்டாவது காரணம், இந்தப் படத்தில் வந்த யானை. மூன்றாவது காரணம், இயற்கை அழகு மிக்க அவுட்டோர் காட்சிகள்.
1947-ல் உலக யுத்தம் வந்துவிடவே, மின்சார வசதி இல்லாமல், ஸ்டுடியோவை காரைக்குடிக்குக் கொண்டு போக நேர்ந்தது. இடம் மாறிய போது ஸ்டுடியோவின் பெயரும் ஏவி.எம். என்று மாற்றப்பட்டது. தேவகோட்டை ரோடில் ஓர் இடத்தைப் பிடித்து ஐம்பது குடிசைகள் போட்டு, நட்சத்திரங்களை அங்கேயே குடியேற்றி, நாம் இருவர், வேதாள உலகம் போன்ற படங்களை உருவாக்கினார். ராமராஜ்யாவைத் தமிழில் டப் செய்து வெளியிட்டார். பாரதியார் பாடல்களுடன் வெளியான படம் நாம் இருவர். லலிதா-பத்மினி பாம்பாட்டி நடனத்துடன் வெளியானது வேதாள உலகம்.
ரூ.25,000 கொடுத்து பாரதியார் பாடல்களை விலைக்கு வாங்கி வைத்திருந்த உரிமையை, அப்போ தைய முதலமைச்சர் திரு. ஓ.பி. ராமசாமி ரெட்டியாரின் விருப்பத்துக்கிணங்க எவ்விதப் பிரதிப்பயனும் எதிர்பாராமல் பொதுச் சொத்தாக மாற்றிச் சர்க்காரிடம் ஒப்படைத்தார் ஏவி.எம்.
ஏவி.எம். ஸ்டுடியோ கோடம்பாக்கத்துக்குக் குடியேறியது 1948-ல். பராசக்தி, வாழ்க்கை, அந்த நாள் போன்ற படங்கள் உருவானது இங்கேதான்.
‘இந்திப் படம் எடுத்தது எப்போது?’ என்று கேட்டதற்கு, “திரு. வாசன் அவர்கள் இந்தியில் சந்திரலேகா எடுத்து, வட நாட்டில் வெற்றிகரமாக ஓட்டி வழிகாட்டிய பிறகுதான், இந்தி மார்க்கெட்டில் நாங்களும் தைரியமாகப் புகுந்தோம்” என்கிறார் திரு. ஏவி.எம்.
ஏவி.எம். முத்திரையில் எடுக்கப்பட்ட ஹம் பஞ்சி ஏக் டால் கே என்னும், குழந்தைகள் நடித்த இந்திப் படத்துக்குப் பிரதம மந்திரி அவார்ட் கிடைத்தது மட்டுமல்ல; அந்தப் படத்தைப் பார்த்து மகிழ்ந்த நேருஜி ஏவி.எம். அவர்களையும், அந்தக் குழந்தைகளையும் தம் வீட்டுக்கு அழைத்து விருந்தோபசாரமும் செய்தார்.
ஐந்து முறை ஜப்பான் சென்று வந்துள்ள ஏவி.எம்., “அந்த நாட்டுக்கு இணையான இன்னொரு நாட்டைப் பார்த்ததில்லை. நேர்மையும், நாணயமும், உபகார குணமும் அந்த நாட்டின் தனிச் சிறப்பு” என்கிறார்.
ஆவிச்சி உயர்நிலைப் பள்ளி, ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் – இவ்விரண்டும் திரு. மெய்யப்பனின் தர்ம ஸ்தாபனங்கள். இவர் புதிதாகத் தொடங்கியுள்ளது, படங்கள் எடுப்பதற்குத் தேவையான பிலிம் வியாபாரம். பெயர்: ஆர்வோ.
அண்மைய பின்னூட்டங்கள்