இயக்குனர் ஸ்ரீதரின் படங்கள் பற்றிய அலசல்கள் இப்பதிவில் நல்ல சுவாரசியமாக நடந்து கொண்டிருக்கிறது. என் பங்கிற்கு நினைவெல்லாம் நித்யா என்கிற படத்தைப் பற்றி எழுத இங்கு வந்துள்ளேன்.

1982ல் ஸ்ரீதர் இயக்கத்தில் கார்த்திக், ஜீ.ஜீ நடித்து இளையராசாவின் இசையில் வெளிவந்த படம். நான் ஐந்தாவது ஆறாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுது எங்கள் வீட்டு கிராமஃபோன் பெட்டியில் இப்பட பாடல்களைக் கேட்டிருக்கிறேன். பெரும்பாலானப் பாடல்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், நீதானே என் பொன் வசந்தம் மற்றும் பனிவிழும் மலர்வனம் பாடல்களின் வரிகள் என் வாயில் பல நாட்கள் முனுமுனுத்துக் கொண்டுருந்தன. அவ்வாறே அனைத்து தமிழ் சினிமா இசை விரும்பிகளிடம் நினைவில் அழியாமல் இருக்கின்றன இப்பட பாடல் வரிகள்.

எனக்கு பிடித்த வரி

இனி வரும் முனிவரும்

தடுமாறும் கனிமரம்

இந்த வைர வரிகளின் சொந்தக்காரர் வைரமுத்து.

கதைச் சுருக்கம்:

சந்துரு (கார்த்திக்) ஒரு தொழிலதிபரின் மகன். பட்டப் படிப்பு முடிந்ததும் ஊர் சுற்ற மலைப்பிரதேசம் செல்கிறான். அங்கு நித்யாவைக் (ஜி.ஜீ) கண்டதும் காதல். நித்யா மலைவாழ் மக்களின் தலைவரின் மகள். மலைவாழ் மக்களின் சாதி கட்டுப்பாட்டை எதிர்த்து சந்துருவும் நித்யாவும் ஊரைவிட்டு ஓடி சென்னைக்கு வருகின்றனர். கார்த்திக்கின் தந்தையும் அவர்கள் காதலை எதிர்கின்றார்.

இந்நிலையில் வழக்கமாக மண்ணெண்ணை அடுப்பு மருமகளுக்குத்தான் வெடிக்கும் ஆனால் ஒரு நாள் சந்துருவிற்கு அது வெடித்து அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு மோசமாகிவிடுகிறது. பணத்திற்காக சந்துருவின் தந்தையிடம் செல்கிறாள் நித்யா. தந்தையோ மனசாட்சி இல்லாமல் காதலை பேரம் பேசுகிறார். நித்யாவும் காதலன் உயிர்தான் முக்கியம் என்று தன் ஊருக்கு சென்று விடுகிறாள். சந்துருக்கு உண்மை தெரிந்து மீண்டும் மலைவாழ் மக்கள் இருக்கும் ஊருக்கு செல்கிறான். காதலித்த மனங்கள் ஒன்று சேர்கின்றனவா இல்லை பரலோகம் செல்கின்றனவா என்பது படத்தின் முடிவில் தெரியும்.

நினைவெல்லாம் நித்யா படம் பார்க்கும் பொழுது அன்றைய தமிழ் திரையுலகைக் குறித்து எனக்கு எழுந்த எண்ணங்கள்:

1. 1976 முதல் 1982 வரை பல படங்கள் சமூக அக்கறை மற்றும் மாற்றுப் பார்வை சிந்தனைகள் நிறைந்த படமாக இருந்தன. அவள் அப்படித்தான், வறுமையின் நிறம் சிகப்பு போன்ற படங்கள் குவிந்து கொண்டிருந்த காலம்.

2. பொழுதுப்போக்குக்கான சில படங்களே வந்திருக்கக் கூடும். உதாரணமாக தில்லு முல்லு.

3. பாடல் காட்சி அமைப்புகள், இசையில் புது யுக்திகள், பாடல் வரிகளின் தாக்கங்கள் என பல இடங்களில் அக்காலப் படங்கள் சற்று மட்டமாக இருந்ததாக எனக்குப் படுகிறது.

4. சினிமா பார்க்க வரும் அன்பர்கள் முடிவு பாதகமாக இருந்தாலும் படத்தை வரவேற்க செய்தனர்.

இப்படிப் பட்ட காலக் கட்டம் 1990களின் முதல் பகுதியில் வந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. இச்சூழ்நிலையில் காதலன் என்ற படம் பிரபு தேவா நாயகனாக சங்கர் இயக்கத்தில் ரகுமான் இசையில் சக்கைப் போடு போட்டது. நி.நிவையும் காதலனையும் ஒரே தராசில் வைக்கலாம் என்று கருதுகிறேன். இரண்டுமே அக்காலகட்டத்தில் ரிலீஃப் என்ற வகையில் வித்தியாசம் காட்டியுள்ளனர்.

நீதானே என் பொன் வசந்தம்

நினைவெல்லாம் நித்யாவில் பாடல் காட்சிகள் பலவும் சிரமப்பட்டு எடுத்துள்ளனர் என்று தெரிகிறது. எதார்த்தத்தை விட அழகியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  பல நேரம் அழகியல் செயற்கைத் தனத்தின் எல்லைக்கே போகிறது!

தமிழ் சினிமாவில் கல்யாண பரிசு எப்படி முக்கோணக் காதல் கதையின் டெம்பிளேட் ஆனதோ அது போல் இக்கால மாசாலா காதல் படத்தின் டெம்பிளேடை உருவாக்கித் தந்தது ஸ்ரீதரின் நி.நி. எனலாம்.