இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!


பாலகுமாரன் பிரபலமாக ஆரம்பித்திருந்த நேரத்தில் முந்தானை முடிச்சு கதை டிஸ்கஷனில் பங்கேற்றிருக்கிறார். அப்போதிலிருந்து அவருக்கு சினிமாவில் நுழைய ஆசை. கூடவே ஒரு தயக்கம். அப்புறம் நுழைந்துவிட்டார். அந்த அனுபவங்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் சிறு memoir-தான் இந்த புத்தகம்.

முதல் முதலாக பாக்யராஜ் அவருக்கு அறுபது ரூபாய் ஃபீஸ் கொடுத்திருக்கிறார். இது எண்பதுகளின் முற்பாதியில். அப்போது பாக்யராஜுக்கு ஜி.எம். குமாரும் லிவிங்ஸ்டனும் உதவியாளர்கள். பாக்யராஜ் இவரையும் வந்து சேருங்கள் என்று கூப்பிட்டிருக்கிறார். குறைந்த சம்பளம், கொஞ்சம் பயம் – அதனால் பாலா மறுத்துவிட்டார். பிறகு மு. முடிச்சு படம் பார்த்தபிறகு கமல், சிவகுமார், சுகாசினி, பாலு மகேந்திரா எல்லாரிடமும் அறிவுரை கேட்டிருக்கிறார். யாரும் வா என்று சொல்லவில்லை. சிவகுமார் இவரை நீங்கள் ஏற்கனவே சபல கேஸ், இங்கே தப்பு பண்ண நிறைய சான்ஸ் என்று இடித்திருக்கிறார். சுகாசினி மூன்று வருஷத்துக்கு ஒரு முறை ஏதாவது தப்பு பண்ண வேண்டும் என்று விரதமா என்று கேட்டிருக்கிறார். கோபம், ஒரு கை பார்க்கிறேன் என்று இறங்கி இருக்கிறார். அப்போது கமல் வரவேற்றாராம்! முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும், யாரிடம் யோசனை கேட்கக்கூடாது என்று சொன்னாராம்!

சிந்துபைரவி படத்தில் உதவி இயக்குனர். வசந்த் இன்னொரு உதவி இயக்குனர். அனந்த் தலைமை நிர்வாகி மாதிரி. இவர் ஆஃபீஸ் போவது போல ஒன்பது மணி வாக்கில் போக நான்காவது நாள் அனந்து பிடித்து எகிறி இருக்கிறார். சிவகுமாரிடம் பொரும, அவர் “சவுகரியமா வளர்ந்துட்டீரு ஓய்!” என்று கமென்ட் விட்டிருக்கிறார். அப்புறம் பாலகுமாரன் கொஞ்சம் கொஞ்சமாக நெளிவு சுளிவுகளை புரிந்துகொண்டிருக்கிறார்.

சினிமாவின் சில முகங்களைப் பற்றி – இளையராஜாவின் “கர்வம்”, பாலச்சந்தரின் கோபம்+அன்பு, ஒரு டீமாக வேலை செய்வது என்று வெளியே தெரியாத முகங்களைப் பற்றி நன்றாக எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்: பாலகுமாரனும் சினிமாவும் – அருன்மொழிவர்மனின் பதிவு

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

9 Responses to இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!

  1. சாரதா says:

    ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ தொடர், குமுதத்திலிருந்து கிழித்து பைண்ட் செய்யப்பட்ட வடிவில் படித்திருக்கிறேன்.

    தொலைக்காட்சி நேர்காணலில் பாலகுமாரன் சொன்ன விஷயம்: திரைத்துறைக்கு வருவதற்காக கமல் இடம் யோசனை கேட்டபோது, “இங்கே வந்து என்ன சாதிக்கப்போகிறீர்கள்?. நீங்கள் எழுத்துத் துறையிலிருக்கும்போதே உங்கள் இரண்டு மனைவிகளும் பட்டுப்புடவைகள், நகை நட்டு என்று நல்ல வசதியாகத்தானே இருக்கிறார்கள்?. இங்கே வந்தால் நிம்மதி போய்விடும், தூக்கம் போய்விடும். யோசித்துக்கொள்ளுங்கள்” என்று எச்சரித்தாராம்.

  2. subramanianv says:

    balakumaran is my favourite writer. his writing changed me a lot in handling situations and thoughts.

    • RV says:

      பாலகுமாரன் பதிவுக்கு மறுமொழி எழுதியதற்கு நன்றி, சுப்பிரமணியன்!
      சுட்டிக்கு நன்றி ஸ்ரீனிவாஸ்!
      அருண்மொழிவர்மன், உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது, இங்கும் ஒரு இணைப்பு கொடுத்திருக்கிறேன்.

  3. BaalHanuman says:

    நான் ரசித்த உவமைகள்-வருணனைகள்
    ==========================================
    பாலகுமாரன் படைப்புகளில் இருந்து:
    ======================================
    வே.சபாநாயகம் (http://ninaivu.blogspot.com)

    1. சினிமா ஒரு காட்டாறு. அதற்கு இலக்கு முறைமை எதுவுமில்லை. காட்டுப் பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நதி, கரை புரண்டு கிராமத்துப் பக்கம் போகும். பிறகு நகரத்தில் உலா வரும்.

    – ‘என் கண்மணி’ நாவலில்.

    2. சின்ன ஏரி மாதிரி இருந்தது லைப்ரரி.

    – ‘ஆருயிரே மன்னவரே’ நாவலில்.

    3. வெட்கம் ஒரு சுகமான விஷயம். வெட்கம் பழகப் பழகப் பிடித்துப் போகும். மறுபடி வெட்கப்பட மாட்டோமா என்று தோன்றும். வெட்கப் பட்டதை நினைத்து நினைத்து மறுபடி வெட்கப் படும். வெட்கம் காதலுக்கு உரம்.

    – ‘கல்யாண மாலை’ நாவலில்.

    4. இது மந்தை. மனித மந்தை. எங்கு போகிறோம் என்று தெரியாமல் இரு நூறு ஆடுகளுக்குள் எந்த ஆடு முதல் என்று முட்டிக் கொள்கிற மந்தை. நின்று நிதானித்து, தனித்து, தலை தூக்கி, எந்தத் திசை நோக்கி, எதற்கு என்று இவர்கள் கேட்டதே இல்லை. இவர்கள் இல்லை உலகம்; ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’. உயர்ந்தவர்கள் யாரென்று உயர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அவர்களால் தான் ஏற்றுக் கொள்ள முடியும்.

    – ‘புருஷ விரதம்’ நாவலில்.

    5. காற்று, பத்து வயசுப் பெண்போல மின்விசிறி இறக்கைகளோடு கோத்துக் கொண்டு தட்டாமாலை ஆடிற்று. முரளிதரன் தலையைக் கலைத்தது.

    – ‘மரக்கால்’ நாவலில்’.

    6. “ஜலமில்லாத காவிரி மகாகொடுமை ரகு. தலையை மழிச்சு நார்மடி சுத்தி மூலையில் உம்மென்று உட்கார்ந்திருக்கிற கிழவி மாதிரி. ரொம்ப வேதனை ரகு. நீ இப்போ ஊருக்கு வராதே. ஜலம் வந்த பிறகு நான் உனக்கு எழுதுகிறேன்.”

    – ‘ஏதோ ஒரு நதியில்’ குறுநாவலில்.

    7. வாழ்க்கை மாறிக் கொண்டிருக்கிறது. தினம் தினம் திசை திரும்பிக் கொண்டிருக்கிறது. தரையில் ஓடிக் கொண்டிருந்த விமானம் புகையோடு எழும்பத் தொடங்கி விட்ட மாதிரி அதீத வேகம் கொண்டு விட்டது. உலகம் மிகவும் சுருங்கி விட்டது. பேண்டும், சட்டையும், தலைமயிரும் மட்டுமில்லை, மனைவியே, மேற்கத்திய வக்கிரமும் நம்மீது வந்து விழுந்து விட்டது. கப்பலில் டிங்கு ஜுரம் வந்து இறங்குகிறது. பழங்கதைகள் பேசி லாபம் என்ன….?

    – ‘சேவல் பண்ணை’ நாவலில்.

    8. காதலித்த பிறகு அயர்ச்சி வருகிறதோ இல்லையோ திருமணம் என்பதற்குப் பிறகு ஒரு அயர்ச்சி வரத்தான் செய்கிறது. அது அயர்ச்சி இல்லை. இனி என்ன என்ற கேள்வி. கூத்து முடிந்து இல்லத்துக்குத் திரும்பும் போது கூத்து பாதியும், வீடு பாதியுமாய் நினைவிலிருக்குமே அதைப் போன்ற ஒரு அதிசயம்.

    – ‘கிருஷ்ண அர்ஜுனன்’ நாவலில்.

    9. யாரையுமே….. எதையும் எப்போதும் காதலித்தல் முடியாது. காதலுக்குக் கீழே இருக்கிற பொய் புரிந்து போன பிறகு முடியாது. கீழே இருக்கிற சேறு தெரிந்த பிறகு தாமரை உயரே வந்து விடும். எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று சிரிக்கும். தெறித்தாலும் ஒட்டாது. சேறு கீழே விழும்.

    – ‘யானை வேட்டை’ நாவலில்.

    10. மல்லிகை ரொம்ப ரொமாண்டிக்கான பூ. ரோஜா மாதிரி மல்லிகை கம்பீரமில்லை. போகன்வில்லா மாதிரி குப்பைத்தனமில்லை. நாகலிங்கம் மாதிரி சந்நியாசி இல்லை. முல்லை போலவும் குழந்தைத் தனமில்லை. தாழைபோலக் குப்பை இல்லை. மகுடம் போல அழுக்கு இல்லை. கனகாம்பரம் போல அலட்டல் இல்லை. மனோரஞ்சிதம் போல மந்திரத்தனமில்லை. சாமந்தி போலத் திமிரில்லை. தாமரைபோல கர்வமில்லை. மல்லிகை ஒரு ரொமாண்டிக் பூ. குடித்தனப் பொம்பிளை போல காதல், காமம், அமைதி, அழைப்பு, அலட்சியம், அழகு எல்லாம் நிறைந்த பூ.

    – ‘அடுக்கு மல்லி நாவலில்’.

  4. பாலகுமாரனின் சினிமா உலக அனுபவங்கள் பற்றி முன்னொருமுறை எழுதி இருக்கின்றேன்,
    http://solvathellamunmai.blogspot.com/2008/10/blog-post.html

  5. bogan says:

    பாலகுமாரன் வசன கர்த்தாவாக பணியாற்றிய படங்களில் தனது அடையாளத்தை முற்றிலும் இழந்து விடாமல் நன்றாகவே செய்தார்.நாயகனின் சில புகழ்பெற்ற வசனங்கள் பாட்சாவின் வசனங்கள் குணா போன்ற படங்களில் அவர்தான் வசனம் என்று தனித்துத் தெரிகிற அளவு இருந்தன.கமல் ரஜினி மணிரத்தினம் சங்கர் போன்ற ஆளுமைகள் நடுவிலும் அவர் டச் தெரியும்.ஆனால் பாபாவிலும் சண்டைக் கோழியிலும் எஸ் ராவைத் தேட வேண்டியிருந்தது.

  6. RV says:

    போகன், பாலகுமாரன், மற்றும் எஸ்.ரா. பற்றி நீங்கள் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன்.

  7. விமல் says:

    மின் நூல் வடிவம் : (17.42 MB)

    http://www.mediafire.com/?5r44tmkwz7que7h

பின்னூட்டமொன்றை இடுக