ஸ்ரீதர்


தாய்ப் பக்கம்: ஆளுமைகள்


சமீபத்தில் (2008) மறைந்த இயக்குனர் ஸ்ரீதரை பற்றியும், அவரது படங்களை பற்றியும் பல போஸ்ட்களை இங்கே வடிவமைத்திருக்கிறேன். இப்போதைக்கு இந்த ப்ளாகில் எழுதப்பட்ட போஸ்ட்கள் மட்டுமே இங்கே இருக்கின்றன. வேறு ஏதாவது நல்ல போஸ்ட்கள் பார்த்தால் இங்கே சேர்த்துக்கொள்ள சிபாரிசு செய்யுங்கள்!

ஸ்ரீதர் பற்றிய போஸ்ட்கள்:
சிவாஜி பற்றி ஸ்ரீதர்
ஸ்ரீதர் பற்றி சிலர்
ஸ்ரீதரை பற்றி அவர் மனைவி
ஸ்ரீதர் பற்றி எம்எஸ்வி
ஸ்ரீதரை பற்றி அவரே

ஸ்ரீதர் பற்றி நல்லதந்தியின் நல்ல கட்டுரை இங்கே
ஸ்ரீதரை பற்றி அம்ஷன் குமார் எழுதிய அருமையான மதிப்பீடு இங்கே.
ஸ்ரீதரை பற்றி மங்கையர் மலரில் வந்த நல்ல கட்டுரை இங்கே
ஸ்ரீதரை பற்றிய ஆர்வியின் மதிப்பீடு இங்கே

ஸ்ரீதர் படங்களை பற்றி போஸ்ட்கள்:

அவளுக்கென்று ஒரு மனம் (Avalukkenru Oru Manam)

காதலிக்க நேரமில்லை – விகடன் ஒரிஜினல் விமர்சனம்
காதலிக்க நேரமில்லை பாட்டுகள்
காதலிக்க நேரமில்லை சினிமா
காதலிக்க நேரமில்லை takeoffs
விஸ்வநாதன் வேலை வேணும் – பாடல் பிறந்த கதை

கல்யாணப் பரிசு, விகடன் விமர்சனம், சாரதா விமர்சனம்
நெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappadhillai)
நெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam), சொன்னது நீதானா – பாடல் பிறந்த கதை

நினைவெல்லாம் நித்யா பற்றி முரளி
நினைவெல்லாம் நித்யா நினைவுகள்
நினைவெல்லாம் நித்யா நினைவுகள் II
தோளின் மேலே பாரம் இல்லே பாட்டு

ஊட்டி வரை உறவு (Ooty Varai Uravu)
தேனிலவு (Thenilavu), தேனிலவு ஷூட்டிங் அனுபவங்கள் பற்றி ஸ்ரீதர்
வெண்ணிற ஆடை (Vennira Aadai) – விகடன் விமர்சனம், ராஜன் விமர்சனம், வெண்ணிற ஆடை திரைப்படத்தின் அரசியல்

ஸ்ரீதர் பட லிஸ்ட்:

  1. 1959, கல்யாணப் பரிசு, விகடன் விமர்சனம், சாரதா விமர்சனம்
  2. 1960, விடிவெள்ளி
  3. 1960, மீண்ட சொர்க்கம் (நன்றி, பார்டிசன்!)
  4. 1961, தேனிலவு, தேனிலவு ஷூட்டிங் அனுபவங்கள் பற்றி ஸ்ரீதர்
  5. 1962, நெஞ்சில் ஓர் ஆலயம்
  6. 1962, போலீஸ்காரன் மகள்
  7. 1962, சுமைதாங்கி
  8. 1963, நெஞ்சம் மறப்பதில்லை
  9. 1964, கலைக் கோவில்
  10. 1964, காதலிக்க நேரமில்லை1, 2, 3, 4
  11. 1965, வெண்ணிற ஆடை – விகடன் விமர்சனம், ராஜன் விமர்சனம், வெண்ணிற ஆடை திரைப்படத்தின் அரசியல்
  12. 1967, நெஞ்சிருக்கும் வரை
  13. 1967, ஊட்டி வரை உறவு
  14. 1969, சிவந்த மண்
  15. 1971, அவளுக்கென்று ஒரு மனம்
  16. 1974, உரிமைக் குரல்
  17. 1975, வைர நெஞ்சம்
  18. 1978, இளமை ஊஞ்சலாடுகிறது
  19. 1979, அழகே உன்னை ஆராதிக்கிறேன்
  20. 1981, மோகனப் புன்னகை
  21. 1982, நினைவெல்லாம் நித்யா, நினைவெல்லாம் நித்யா நினைவுகள், நினைவெல்லாம் நித்யா நினைவுகள் II, தோளின் மேலே பாரம் இல்லே பாட்டு
  22. 1983, துடிக்கும் கரங்கள்
  23. 1983, ஒரு ஓடை நதியாகிறது
  24. 1984, ஆலய தீபம்
  25. 1985, தென்றலே என்னை தொடு
  26. 1986, நானும் ஒரு தொழிலாளி
  27. 1986, யாரோ எழுதிய கவிதை
  28. 1987, இனிய உறவு பூத்தது
  29. 1991, தந்துவிட்டேன் என்னை
  30. கொடிமலர்
  31. அலைகள்
  32. மீனவ நண்பன்
  33. ஓ மஞ்சு
  34. ஸௌந்தர்யமே வருக வருக

இதை தவிர அவர் 1954-எதிர்பாராதது, 1956-அமர தீபம், 1961-புனர்ஜென்மம், 1959-உத்தம புத்திரன் ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதி இருக்கிறார்.

19 Responses to ஸ்ரீதர்

  1. நல்லதந்தி says:

    http://thanthii.blogspot.com/2008/10/blog-post_23.html

    இந்த போஸ்ட்டையும் முடிந்தால் சேர்த்துக் கொள்ளவும்!.
    நன்றி!

    நல்லதந்தி

  2. Surya says:

    காலத்தால் அழியாத காவிய நாயகன் இயக்குநர் ஸ்ரீதர்..

    செங்கல்பட்டில் உள்ள சித்தாமூரைச் சேர்ந்த ஸ்ரீதர், டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் குழுவில் வசனகர்த்தாவாகத் தன் கலையுலகப் பயணத்தைத் தொடங்கியவர். இவர் எழுதிய “ரத்த பாசம்’ என்ற நாடகம் பின்னாளில் திரைப்படமாக உருவானது. அந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதித் திரையுலகில் அறிமுகமானார் ஸ்ரீதர்.

    சினிமாவில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவர்.

    சினிமாவை நேசித்த மிகச்சிலரில ஒருவர். தனகென தனி பாணி அமைத்தவர். இயக்குநரால் திரைப்படங்கள் ஒடும் என தனி formula அமைத்தவர்.

    1959 ல் வெளி வந்த கல்யாண பரிசு படத்தில ” அம்மா ஸ்கூலுக்கு போயிட்டு வரேன் ” என்ற ஒரே வசனத்தால் அதை marketing மந்திரமாக பயன் படுத்தியவர். ..அந்த காலத்தில் ஒருவரை காதலித்துவிட்டு இன்னொருவரை மணந்துகொண்ட முதல் சினிமா கதை, கல்யாண பரிசுதான். அது எப்படி சாத்தியம்? என்று கடும் விமர்சனத்துக்குள்ளான கதை அது. முதல் இரண்டு நாட்கள் தியேட்டர்களில் கூட்டமே இல்லை. அது தோல்வி படம் என்று முடிவுகட்டிய நிலையில், மூன்றாவது நாளில் இருந்து கூட்டம் அலைமோத ஆரம்பித்தது

    “நெஞ்சில் ஓர் ஆலயம்’ வெற்றிப் படம், 14 நாள்களில் படமாக்கி புதுமை வித்தகர். ஒரே செட். ஒருபுற்ம மருத்துவமனை, மறு புறம் வீடு.. என அசத்தியவர்.

    பெண்களுக்கு என்று ஆடியன்ஸ் ஏற்படுத்தியவர். அவரை பின்பற்றியே பல இயக்குநர்கள் { பாலச்சந்தர், விசு, பாக்யராஜ் } பெண்களை கவர பல உத்தியை கையாணடார்கள்.

    தமிழ் சினிமாவில், புராண காலக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்கள் வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில் சமூகம் சார்ந்த கதைகளையும், மனித உறவுகளின் மேன்மையைச் சித்திரிக்கும் கதைகளையும் அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்தியவர் ஸ்ரீதர். நடிகர்கள் ராஜா, ராணி உடையணிந்து நடித்துவந்த சூழ்நிலையில் தன்னுடைய படங்களில் கதாபாத்திரங்களுக்கு நவநாகரிக உடைகளை அணிவித்து ரசிகர்களுக்கு நவீன தமிழ் சினிமாவை அறிமுகம் செய்தவர்.

    இதைபற்றி அவர் கூறும் போது.. சினிமா என்பது “Talkie” மட்டுமே அல்ல அது ‘Movie” எனபார். புதிய பரிமாணதை 1960 களில் ஏற்படுத்தியவர். எந்த பாடல்களிலும் 30 வினாடிகளுக்கு மேல் ஒரே ஷாட் இருக்க கூடாது என அடம் பிடிப்பவர்.

    நான் பல படங்களில் பல பாடல்களில் இதை சோதித்து உள்ளேன்..

    நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்டதில் “சொன்னது நீதானா”? என்ற திரைப்பட கட்டிலுக்கு கீழேயிருந்து தான் கேமரா வரவேண்டும் என அந்த ஒரு ஷாட்டுக்காக பல வழிகள்ளில் முயன்று பட மாக்கியவர்.

    தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சியடையாத கருப்பு-வெள்ளைப் பட கால கட்டங்களிலேயே தன்னுடைய நுணுக்கமான இயக்கத் திறனால் நுட்பமான விஷயங்களைத் திரையில் புகுத்தியவர். ஸ்ரீதர் கையாண்ட வித்தியாசமான கதைக் களங்கள், அவர் படங்களில் இடம்பெற்ற யதார்த்தமான ஒளிப்பதிவு, இயல்பான வசனங்கள், இனிமையான பாடல்கள், புதுமையான காட்சிகள் போன்றவை இன்றைய இயக்குநர்கள் பலருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை.

    ஸ்ரீதர் இயக்கிய `தேன்நிலவு’தான் முதன் முதலாக காஷ்மீரில் படமாக்கப்பட்ட தமிழ் படம் ஆகும்.

    இப்படி எவ்வளவோ விஷயங்க்ளை கூறிக்கொண்டே போகலாம்..

    புதுமையின் விருட்சம் இன்று பூமிக்குள் புதைந்துவிட்டது. அவரை நெஞ்சம் மறப்பதில்லை. தமிழ்த் திரையுலகின் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் பெயர்-ஸ்ரீதர்.

    வேறு வார்தைகளில்லை….

    http://butterflysurya.blogspot.com

  3. surya says:

    மஞ்சள் மகிமை { 14 – 1 -1959 }

    நாகேஸ்வரராவ் சாவித்ரி நடித்தது.

  4. sridhar says:

    Hi RV,

    chia from chennai. your blog is very interesting.

    -sridhar

  5. RV says:

    அன்புள்ள சியா (ஸ்ரீதர்),

    நீ இந்த தளத்தைப் பார்த்தது pleasant surprise! பேசாமல் நீயும் என்னுடனும் பக்சுடனும் ஜோதியில் ஐக்கியமாகி இங்கே எழுதுகிறாயா?

  6. BaalHanuman says:

    ஸ்ரீதர் பற்றி உமா வரதராஜனின் சில குறிப்புகள்…..
    =========================================
    ஸ்ரீதர் என்றதும் ஒரு நீரோடை இன்னமும் என் மனத்துள் சலசலத்து ஓடிக்கொண்டுதானிருக்கின்றது.

    மங்கிய நிலவில் காஷ்மீரத்து ஏரியின் படகொன்றிலிருந்து “நிலவும் மலரும் பாடுது’ எனக் காதல் வண்டுகள் இரண்டு ரீங்காரமிடுகின்றன. குயிலின் கூட்டுக்குக் குடிவந்த காகத்தின் இறுமாப்புடன் ‘தேடினேன் வந்தது’ என்றொரு பெண்குரல் துள்ளிக் குதிக்கின்றது. சிதிலமடைந்த மாளிகையின் சுவர்களிலே வொவால்களைப் போல நிராசையின் கனவுகள் தாங்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற வரிகள் பட்டு மோதி அலைகின்றன. சிட்டிபாபுவின் வீணையின் தந்திகளில் தத்தித் தத்தி நடக்கின்ற ஒரு குயில் கேட்கின்றது “சொன்னது நீதானா?’ இறுதிக் கணத்தின் ஒளி நடனத்துடன் ஒரு மெழுகுவர்த்தி உருகுகின்றது “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ என.

    ஸ்ரீதர் தன் பெயருக்கு முன்னால் ஏதும் பட்டங்கள் சூடிக்கொண்டதாக ஞாபகமில்லை.
    “கல்யாணப் பரிசு” படம் வெளியாகி வெற்றி பெற்றவுடன் வழங்கப்பட்ட “கலைஞர் திலகம்” பட்டத்தைக்கூட அவர் ஒரு குல்லாபோல் மாட்டிக் கொண்டவரல்ல.

    ஸ்ரீதரைத் தமிழ்த் திரையுலகின் சாதனையாளர்களில் ஒருவர் எனவும் அவருடைய “கல்யாணப் பரிசை’ ஒரு திருப்புமுனைப் படமாகவும் பலர் குறிப்பிடுகின்றனர். இலக்கணத் தமிழைக் கொண்ட புராணப் பட யுகத்திலிருந்து தமிழ் சினிமாவை வேறொரு திசைக்கு நகர்த்தியவர் ஸ்ரீதர்தான் எனக் கூறுவதுமுன்டு. ஆனால் இன்றைய பார்வையில் “பராசக்தி’க்கு இருந்த சமூகக் கரிசனை “கல்யாணப் பரிசு’க்கு இருந்ததாகச் சொல்ல முடியாது. “பராசக்தி’ தர்மாவேசத்தின் வெளிப்பாடாகவும் அதுவரை நிலவிய தார்மீக மதிப்பீடுகளைச் சவக்கிடங்கில் தள்ளியதாகவும் அமைந்தது. ஆனால் “கல்யாணப் பரிசே?’ சற்று நெகிழ்வான இடங்களில் நீரூற்று மேற்கிளம்பும் இள மனங்களின் கனவு பூமி. இன்றைய தினம் “கல்யாணப்பரிசை” புதுமையான ஒரு படைப்பாகக் யாரும் கொள்ளமாட்டார்கள். விக்கல்களுக்கும் கேவல்களுக்கும் மிகைத் தியாகங்களுக்கும் இன்று வரவேற்புக் கிடைப்பதில்லை. தனது குழந்தையை முன்னாள் காதலிக்குக் கல்யாணப் பரிசாக வழங்கிவிட்டு நடையைக் கட்டுவது இன்றைய ரசிகனுக்குப் பெரும் புதுமையாகத் தென்படப்போவதில்லை. மனைவியையே மாற்றானுக்குப் பரிசாக வழங்கிவிட்டு ஸ்லோமோஷனில் நடந்து செல்லும் பரந்த மனம் கொண்ட கதாநாயகர்கள் தமிழ்த் திரைக்கு இன்று வந்துவிட்டார்கள். ஸ்ரீதரையும் அவருடைய படங்களையும் இன்றைக்கு யோசிக்கும்போது தென்படும் பொதுமையான முக்கிய அம்சம் இளமனங்களின் உணர்ச்சிப் போராட்டமும் அவற்றுக்கிடையேயான ஊசலாட்டமும்.

    அவருடைய ஆரம்ப காலப் படங்கள் இன்றைக்கும் கிழடு தட்டாதவை. அவருடைய சமகாலத்தில் வெளியான பானா, பாவன்னா வரிசைப் படங்களின் சந்தை இரைச்சல் ஸ்ரீதரின் படங்களில் சற்று மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இளமையின் சாலையில் அவர் கைவீசி நடந்தவர்.

    இன்னொரு வகையில் அவர் ஒரு Trioligist. முக்கோணக் காதல் ரசத்தை சாறு பிழிந்து தந்துகொண்டிருந்தவர். “கல்யாணப் பரிசு’, “நெஞ்சில் ஓர் ஆலயம்’ தந்த வெற்றிகளால் தன்னைப் பற்றிய பிம்பமொன்றை வடிவமைத்துக் கொண்ட அவர் அதைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியிலேயே பின்னாட்களில் ஈடுபட்டார்.

    “வெண்ணிற ஆடை’, “நெஞ்சிருக்கும்வரை’, “அவளுக்கென்று ஒரு மனம்’, “இளமை ஊஞ்சலாடுகிறது’, “ஒரு ஓடை நதியாகிறது’ போன்றவை இத்தகைய முயற்சிகள்.

    பள்ளிக்கு நான் மட்டம் போட்டுவிட்டு அலைந்து திரிந்த ஒரு காலத்தில் மட்டக்களப்பு பஸ் நிலையத்துப் பெட்டிக் கடைகளில் பால்கன், பொன்மலர் போன்ற காமிக்ஸ்களுடன் “சித்ராலயா’ என்ற பத்திரிகையும் தொங்கிக்கொண்டிருக்கும். அந்நாளில் வெளிவந்த “பேசும் படம்’, “பொம்மை’ போன்ற சினிமாப் பத்திரிகையல்ல “சித்ராலயா’. மேற்கத்திய சினிமா செய்திகளுக்கு அது முக்கியமளித்ததாக ஞாபகம். ஸ்ரீதருடைய ரசனையின் அடையாளமாகவும் நாட்டத்தின் இலக்காகவும் அதைக் கொள்ளலாம். அவர் ஹாலிவுட் படங்களின் நேசராக இருந்திருக்க வேண்டும். உச்சி வெயிலில் மெரீனாக் கடற்கரையில் முத்துராமன் கழுத்துப் பட்டியணிந்து “நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா… தா…’ எனப் பாடுவதற்கு வேறு எந்த விசேஷக் காரணமும் இருந்திருக்காது. அந்நாட்களில் அவர் ஆர்வத்துடன் சந்தித்த ஒரு ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லீன். பாலு மகேந்திராவுக்குப் பிரமிப்பை ஏற்படுத்திய அதே இயக்குனர்.

    ஸ்ரீதர் கதை வசன கர்த்தாவாகவே தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர். 1954இல் “எதிர்பாராதது’ படத்தில் தொடங்கி “அமரதீபம்’, “மாதர்குல மாணிக்கம்’, “யார் பையன்’, “உத்தம புத்திரன்’ போன்ற பல படங்களுக்கு அவர் வசனங்கள் எழுதியுள்ளார். அடிப்படையில் வசனகர்த்தாவான ஸ்ரீதர் திரைப் படமொன்றின் முக்கிய லட்சணமான “காட்சி நிலையை’ முதன்மைப்படுத்தியவரல்ல. காட்சி என்பது அவரைப் பொறுத்தவரையில் விதவிதமான காமராக் கோணங்கள், இயற்கை எழில் என்பவற்றுடன் பின்தங்கிவிடுகின்றது.

    வசனங்களே அவருடைய படங்களில் ஆதிக்கம் செலுத்தி நகர்த்திச் செல்லுகின்றன. நாடக பாணியிலிருந்து முற்றிலும் விடுபடாத, ஆனால் முற்றாக அதில் அமிழ்ந்தும் போகாத ஒரு இடைநிலைப் பாணியை அவர் கையாண்டார். ஒளிப் பதிவாளர் வின்சென்டின் பங்கும் இதில் முக்கியமானது.

    தமிழ்த் திரைப்பட நாயக, நாயகிகளுக்கு நிகராக ஸ்ரீதர் என்ற பெயர் ரசிகர்களைத் தன்பக்கம் ஈர்த்த ஆண்டுகளாக 1959 – 1967களைச் சொல்லலாம் இந்தக் காலப்பகுதியில் வெளியான “கல்யாணப் பரிசு’, “மீண்ட சொர்க்கம்’, “விடிவெள்ளி”, “தேன் நிலவு’, “நெஞ்சில் ஓர் ஆலயம்’, “சுமைதாங்கி’, “போலீஸ்காரன் மகள்’, “நெஞ்சம் மறப்பதில்லை, “கலைக்கோயில்’, “காதலிக்க நேரமில்லை’, “வெண்ணிற ஆடை’, “ஊட்டி வரை உறவு’, “கொடி மலர்’, நெஞ்சிருக்கும்வரை போன்ற படங்களின் உள்ளடக்கங்கள் பல்வகையானவையாக இருப்பினும் இள மனங்களின் ஊசலாட்டம் முக்கோணக் காதல் போன்ற அம்சங்களே இப்படங்களுக்கும் அடிநாதம்.

    ஸ்ரீதர் இயக்கிய உல்லாசமான படங்களாகத் “தேன்நிலவு’, “காதலிக்க நேரமில்லை”, “ஊட்டிவரை உறவு” ஆகியவற்றைச் சொல்லலாம். ஸ்ரீதரின் படங்களிலேயே என்னை மிகவும் கவர்ந்தது “காதலிக்க நேரமில்லை’. தமிழின் நகைச்சுவைத் திரைப் படங்களைப் பட்டியலிடும்போது அது சிகரமாகவும் தமிழின் முக்கியப் பொழுதுபோக்குப் படங்களைக் குறிப்பிடும்போது முன்வரிசையிலும் இன்றுவரை உள்ளது. பிரிவின் துயரத்தையும் ஜென்மங்களை வென்று நிலைப்பது காதல் என்ற ஐதீகத்தையும் உருக்கமாக வெளிப்படுத்திய படம் நெஞ்சம் மறப்பதில்லை. மதுமதியின் சாயலில் அமைந்த இந்தப் படம் ஸ்ரீதரின் கையாளுகையால் மூலத்தையும் சில இடங்களில் மிஞ்சிப் பட்டை தீட்டப்பட்டுள்ளது, ஜெயலலிதா தன் வாழ்நாளில் நடிப்பதற்குச் சற்று முயன்ற மூன்று படங்களில் ஒன்றாக வெண்ணிற ஆடையைக் குறிப்பிடலாம்.

    “ராஜ பார்வையை’ எடுத்து நஷ்டப்பட்ட கதையைச் சொல்லாத கமல்ஹாசனின் பேட்டியை “கலைக்கோயிலை’ ஆதரிக்காத தமிழ் ரசிகர்கள் பற்றிச் சாடாத ஸ்ரீதரின் பேட்டியை சந்திப்பது அபூர்வம். கலைக் கோயில் (1964இல்) வெளிவந்த காலத்தில் பெரும்பான்மைத் தமிழ் ரசிகர்களின் கொட்டாவிகளையும் முகச் சுளிப்புக்களையும் மிக எளிதாகச் சம்பாதித்திருக்கும். பால்முனி நடித்த A SONG TO REMEMBER இன் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம் இது. ஆங்கிலப் படத்தின் பியானோ ஸ்ரீதரின் கலைக்கோயிலில் வீணையாகிவிட்டது. மேடையில் பாடிக்கொண்டோ அல்லது ஆடிக்கொண்டோ சாவை அரவணைக்கும் மிகை உணர்ச்சிப் படக்காட்சிகளுக்கு ஸ்ரீதரும் விலக்களிக்கவில்லை.

    ஸ்ரீதர் பிரம்மாண்டத்தின் திசைநோக்கி நகர்ந்தமைக்கான அடையாளம் 1969இல் வெளிவந்த “சிவந்த மண்’. எளிமையின் அழகை விட்டு அகலத் தொடங்கிய ஸ்ரீதர் GUNS OF NAVARONE பாணியில் எடுத்த இந்தப் படத்தின் அனேகமான பாடற்காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டவை. ஸ்ரீதர் தமிழ்த் திரையுலகில் தொடங்கிவைத்த இந்த “நாகரீகம்’ இன்றும் வழக்கொழியவில்லை. ஏதோ ஒரு தேசத்தின் தெருக்களில் நமது நாயக நாயகிகள் கட்டாக் காலிகள்போல இன்றைக்கும் மேய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

    75க்குப் பின்னர் வெளியான ஸ்ரீதருடைய திரைப்படங்கள் அவருக்கு அவ்வளவாகப் பெருமை சேர்க்கவில்லை எம்.ஜி.ஆர் – சிவாஜி – இளமை – புதுமை என்ற அலைதலினூடாக அவருடைய பயணம் இலக்கற்றதொன்றாக மாறியிருந்தது. 59இலிருந்து 65வரை அவர் உருவாக்கிவைத்திருந்த பெருமிதங்களை இழக்கும் வகையில் பின்னாட்களில் அவருடைய படங்கள் வரத்தொடங்கின. “வைரநெஞ்சம்’, “ஓ மஞ்சு’, “மீனவநண்பன்’, “உரிமைக்குரல்’, சொந்தர்யமே வருக வருக, ‘மோகனப் புன்னகை’, “துடிக்கும் கரங்கள்’, “தென்றலே என்னைத் தொடு’, “நானும் ஒரு தொழிலாளி, உன்னைத் தேடி வருவேன், “இனிய உறவு பூத்தது’, “தந்துவிட்டேன் என்னை’, “ஆலய தீபம்’… இப்படிப் பல அரை அவியல்கள்.

    “அலை கடலில் சிறு தோணி. கலை உலகில் எங்கள் புதிய பாணி’ என்பதே ஸ்ரீதரின் நிறுவனமான சித்ராலயா கொண்டிருந்த அடையாள வாசகம். வியாபார அகோர அலைகளுக்கு மத்தியில் ஸ்ரீதரின் காவிய அணுகு முறையும் அவருடைய தோணியும் பின்னாட்களில் நொறுங்குண்டு போனமை ஒரு துயரமான கதைதான்.

  7. BaalHanuman says:

    இயக்குனர் ஸ்ரீதரின் கிறிஸ்தவ நண்பன்
    ========================================
    http://www.tamilhindu.com/2009/06/director-sridhar-and-coversion/

    • RV says:

      பாலஹனுமான், ஸ்ரீதர் எனக்கு பள்ளியில் சீனியர். எங்கள் பள்ளியில் படித்து பிரபலமானவர் அவர் ஒருவர்தான் என்று அப்போதெல்லாம் சொல்வார்கள். 🙂 சுட்டிக்கு நன்றி!

  8. என் மானசீக இயக்குநர் பதிவுகளுக்கு இன்னும் கமெண்ட் வந்து கொண்டே இருக்கிறதா.. ??

    Nice RV..

  9. BaalHanuman says:

    ஸ்ரீதரைப் பற்றி கடுகு (அகஸ்தியன்) கூறுகிறார்….

    http://kadugu-agasthian.blogspot.com/2010/03/blog-post_2197.html

  10. BaalHanuman says:

    ஸ்ரீதரைப் பற்றி ரஜினி கூறுகிறார்……
    =======================================
    ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் நடிக்க கேட்டார். அப்போ ரொம்ப பிஸியா இருந்த நேரம் அதில் நடிக்க முடியாத சூழ்நிலை. அப்போது ஸ்ரீதரின் உதவியாளர் ஸ்ரீதருக்கு போன் போட்டு பேசுங்கன்னு எங்கிட்ட கொடுத்துவிட்டார். மறுமுனையில் ஸ்ரீதரின் குரல் ‘என்ன ரஜினி சவுக்கியமா நீ என் படத்தில் நடிக்கிறே’ என்றார். உடனே சரின்னு சொல்லிட்டேன். போனை வைச்சபிறகுதான் எப்படி ஒத்துக்கிட்டோம்னு தோணுச்சி. அவர் பேசிய பேச்சிலிருந்த அன்பு என்னை சம்மதிக்க வைச்சது.

    ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலும் ஸ்ரீதரும் பேசிக்கிட்டிருந்தாங்க அந்த நேரத்துல போகக்கூடாதுன்னு ‘கில்டியா பீல்’ பண்ணி ஒதுங்கி நின்னேன். பேசி முடிச்சிட்டு எங்கிட்ட வந்த கமல் சார் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்துல ரஜினி நடிக்கிறார். அவருக்காக சீனை ஜாஸ்தி பண்ணி இருக்கேன். ஹீரோ என்ற முறையில் எங்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தார்’ன்னு கமல் சொன்னார். அப்போதான் அவர் எவ்ளோ பெரிய மனிதர்னு தெரிஞ்சிகிட்டேன்.

    ‘அருணாச்சலம்’ படத்துல நடிச்சப்ப ஸ்ரீதரையும் ஒரு தயரிப்பாளரா சேர்க்கணும்னு நெனச்சு அவரை நேர்ல சந்திச்சி கேட்டேன். உடனே அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு எனக்கு வேலை கொடுன்னு கேட்டார். அதுக்கு பிறகு ஏதாவது செய்யணும்னு நெனச்சேன். ‘படையப்பா’ படத்தோட வசனத்தை எழுதக் கொடுக்கலாம்னு நெனச்சேன்.

    கலைஞர்களுக்கே ஒரு பிடிவாதம் இருக்கும் அவர் எழுதின வசனத்தை ஏதாவது மாத்தணும்னு சொன்னா அவர் ஒத்துக்க மாட்டாரு. அவருக்கு கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு சும்மா இருந்துட்டேன். ரொம்ப நல்லவர். யாருக்கும் எந்த கஷ்டமும கொடுக்க கூடாதுன்னு நினைப்பவர். ஸ்ரீதரோட ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கிறேன்”.

  11. BaalHanuman says:

    அன்புள்ள RV ,

    ஸ்ரீதர் பற்றிய மற்றொரு சுவையான தகவலை சிவாஜியின் 28 படங்களுக்கு வசனம் எழுதி சாதனை புரிந்த ஆரூர் தாஸ் பகிர்ந்து கொள்கிறார்….

    மூன்று வேடங்களில் நடித்த ‘தெய்வ மகன்’ படத்தில் இரண்டாவது அழகிய அப்பாவி இளைய மகன் ஆக சிவாஜி நகத்தைக் கடித்தவாறு வளைந்து நெளிந்து நடந்து நடித்தது, பிரபல இயக்குனர் ஸ்ரீதரின் நடை உடை பாவனைகளைப் பார்த்துத்தான்.

  12. BaalHanuman says:

    R P ராஜநாயஹம் கூறுகிறார்…http://rprajanayahem.blogspot.com

    ஸ்ரீதரும் கல்யாண் குமாரும்
    ==============================
    ஸ்ரீதர் இறந்தது எல்லா தமிழர்களையும் பாதித்திருக்கிறது . அவர் “நானும் ஒரு தொழிலாளி” படம் இயக்கும்போது பார்த்திருக்கிறேன் .( ஆரம்பமே பிசிறு தட்டுகிறதா ? ஸ்ரீதரை பற்றி பேச இந்தப்படம் தான் கிடைத்ததா ?) அவர் சிகரெட் ஊதும் ஸ்டைல் , அந்த பெண்மையான பாவனைகள் , நகத்தை கடிப்பது ( தெய்வ மகனில் சிவாஜி யின் ஒரு கதாபாத்திரம் ஸ்ரீதரை இமிடேட் செய்ததை அறிவீர்கள் . இரண்டாவது மகன் ). ஷூட்டிங் போதுசிந்தித்து கொண்டே திடீரென்று ” டே சக்கி !” என்று கூப்பிடுவது ….( என்.சி . சக்கரவர்த்தி – இவர் ‘உத்தரவின்றி உள்ளே வா ‘இயக்குனர் . சி வி ராஜேந்திரனுக்கு பிறகு ஸ்ரீதரின் வலது கரம் . )

    ‘ நெஞ்சில் ஓர் ஆலயம் ‘ ‘நெஞ்சம் மறப்பதில்லை ‘ இரண்டு ஸ்ரீதர் படத்தின் கதா நாயகர் கல்யாண் குமார் . இவரிடம் நான் பேசும்போது ஸ்ரீதர் பற்றி நிறைய கேட்பேன் . தேவ சேனா புகைப்படம் ஸ்ரீதர் காட்டிய போது ‘ இந்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ளுங்கள் ‘ என்று கல்யாண் குமார் பாசிடிவ் ஆக அவரிடம் சொன்னதை என்னிடம் சொன்னார் .

    ‘சரி . அந்த இரு படத்தில் வேலை பார்த்த பிறகு பிற்காலத்தில் அவரை எப்போதெல்லாம் சந்தித்தீர்கள் ?’- என் கேள்வி !

    கல்யாண் குமார் பதில் ” சந்தித்ததே இல்லை ”

    ‘சந்தித்ததே இல்லை . அவரும் என்னை சந்தித்ததில்லை . நானும் தேடிபோய் சந்தித்ததில்லை ‘

    கல்யாண் குமார் எழுபதுகளில் எல்லாவற்றையும் இழந்து விட்டு சொந்த வீடு கார் எதுவும் இல்லாமல் நான் சந்தித்த தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மிகவும் சாதாரணமாக இருந்தவர் . சாகும் வரை அதே நிலை தான் . நாற்பது வருடங்களுக்கு மேல் சென்னையிலேயே தான் கல்யாண் குமார் வாழ்ந்திருக்கிறார் .

    அதே சமயம் ஸ்ரீதர் அந்தஸ்திலிருந்த பிற கதாநாயகர்கள் ஜெமினி ,சிவாஜி , எம்ஜியார் ஆகியோருடன் மட்டுமல்ல கமல் ,ரஜினி என்ற வரை “Rapport” சரியாக Maintain பண்ணியிருக்கிறார்.

    சினிமாவில் மனித உறவுகள் இந்த அளவுக்கு தான் .

  13. BaalHanuman says:

    விகடன் காலப்பெட்டகம் (1996 )
    ———————————
    இயக்குநர் ஸ்ரீதர், ஜெயலலிதா பற்றிய தன் மனக் குறையைச் சொல்லி விகடனுக்குப் பேட்டியளிக்க, அதற்கு மறுப்புத் தெரிவித்துக் கடிதம் எழுதினார் ஜெயலலிதா. இந்தச் சர்ச்சையில், தயாரிப்பாளர் கோவை செழியனும் தனது கருத்தைச் சொல்ல, பரபரப்பானது விஷயம். இதோ, அந்தக் கட்டுரைகளிலிருந்து சில பகுதிகள்…

    “என்னை ஏமாற்றிவிட்டார் ஜெயலலிதா!”

    புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கிய கையோடு வழக்கம் போலவே சினிமா உலகம் டைரக்டர் ஸ்ரீதரை மறந்துவிட்டது.கமல்ஹாசனின் ‘அவ்வை சண்முகி’ பட பூஜைக்கு இரண்டு பக்கமும் ஆட்கள் கைத்தாங்கலாகப் பிடித்து வர, டைரக்டர் ஸ்ரீதர் வந்திருந்தார்.

    ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் காலையில் படுக்கையை விட்டு எழ முயன்றபோது ஸ்ரீதரின் உடல் இடதுபக்கம் இயக்கமின்றிப் போயி ருந்தது. அன்று தொடங்கி இன்றுவரை பிசியோ தெரபியும் வேறுபல சிகிச்சைகளும் தொடர்ந்தபடியே இருக்கின்றன. தி.நகர் வெங்கட்ராமன் தெருவில், ஸ்ரீதரின் வீட்டில் அவரைச் சந்தித்தபோது, அடக்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேசினார்…

    “என் உடம்பு நிலைமை இப்படி ஆகிப்போச்சுனு தெரிஞ்சதும், நான் எதிர்பார்த்த முக்கால்வாசிப்பேர் வந்து எனக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லிவிட்டுப் போனாங்க. முந்தாநாள் ரஜினி வந்து ரொம்ப நேரம் பேசிட்டுப் போனார். ஆனா, அஞ்சு வருஷம் முதலமைச்சரா இருந்த ஜெயலலிதா போன்லகூட ‘என்ன’னு ஒரு வார்த்தை விசாரிக்கலே!

    ‘வெண்ணிற ஆடை’ படத்துக்காக நிர்மலாவையும் ஜெயலலிதாவையும் ஃபிக்ஸ் பண்ணிட்டோம். கடைசி நேரத்தில், ஜெயலலிதா அந்த ரோலுக்கு சரிப் படாதுன்னு நான் ஒதுக்கிட்டேன். அவங்க அம்மா சந்தியா ஓடிவந்து என்கிட்டே எப்படியெல்லாம் மன்றாடினாங்கனு பசுமையா நினைவிருக்கு! ‘வெண் ணிற ஆடை’ படத்துல ஜெயலலிதாவை நான் அறி முகப்படுத்தியது அவங்களுக்கு ஒரு திருப்புமுனை. அப்புறம்தான் வரிசையான சினிமா வாய்ப்புகள், எம்.ஜி.ஆர். அறிமுகம், அரசியல் வாழ்க்கை எல்லாம் வந்தது!” – தடித்த தனது மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுத் துடைத்துக்கொண்டார் ஸ்ரீதர்.

    “தெரிஞ்சவங்களுக்கு உடல்நலக் குறைவுன்னா நேர்ல போய் விசாரிப்பது எல்லோருக்கும் தெரிஞ்ச நாகரிகம். இதை ஜெயலலிதாகிட்டே எதிர்பார்த்தேன். ஏமாற்றிவிட்டார். ‘கான்வென்ட்’ படிப்பு அவங்களுக்கு இவ்வளவுதான் சொல்லிக் கொடுத்திருக்குபோல!

    தன்னோட வளர்ப்பு மகன் கல்யாணம் நடந்த போது அவங்க எத்தனையோ பழைய நண்பர்களை எல்லாம் நினைப்பு வெச்சுக்கிட்டு அழைப்பிதழ் அனுப்பினாங்க. அப்பவும் எதிர்பார்த்தேன், நமக்கும் பத்திரிகை வரும்னு. ஏமாந்துட்டேன். சிவாஜி சார் வீட்டுலேர்ந்து பத்திரிகை வந்தது. இருந்தாலும், அந்தக் கல்யாணத்துக்குப் போக என் மனசு ஒப்புக்கலே!

    கடைசியா நான் படிச்ச அவங்களோட ஒரு பேட்டியில், ஏதோ ஒரு கன்னடப் படத்தில்தான் அவங்க அறிமுகம் ஆன மாதிரி சொல்லியிருக்காங்க. அந்தக் கன்னடப் படத்தோட அப்படியே விட்டிருந்தா, தமிழ்நாட்டு முதல்வர் பதவி வரை வந்திருப்பாங்களா? ‘வெண்ணிற ஆடை’ படம் பற்றியோ, என்னைப் பற்றியோ அவங்க எங்கேயும் சொல்லலை! அப்படிச் சொல்லணும்னு நானும் எதிர்பார்க்கலை. ஆனா, இப்படிப்பட்ட நாகரிகம் உள்ள ஒருத்தரைத்தான் நாம அறிமுகப்படுத்தினோம்னு நினைக் கறப்ப கஷ்டமா இருக்கு!”

    விடைபெறும்போது ஸ்ரீதர் அழுத்தமாகச் சொன்னார்: “என்மேல் அனுதாபப்படற மாதிரி எதுவும் எழுதிடாதீங்க. நான் தன்னம்பிக்கையோட தைரியமாத்தான் இருக்கேன்!”

    “யூ டூ மிஸ்டர் ஸ்ரீதர்?” – ஜெயலலிதா விளக்கம்!

    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

    உங்கள் 15.9.1996 ஆனந்த விகடனில், டைரக்டர் ஸ்ரீதர் அளித்துள்ள பேட்டியில் உண்மைக்குப் புறம்பான சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேட்டி, உங்கள் வாசகர்கள் மத்தியில் என்னைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதனால் சில விளக்கங்கள் அளிக்கவேண்டியது அவசியமா கிறது.

    பொதுவாழ்வில் 14 ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த போதிலும், நான் அவ்வளவாகப் பிறர் வீடுகளுக்கு விஜயம் செய்யும் பழக்கம் இல்லாதவள் என்பதனை, தமிழகத்தின் முக்கியப் பிரமுகர்கள் அறிவார்கள். அதனாலேதான் எத்தனையோ முக்கிய நண்பர்களின் குடும்ப வைபவங்களுக்குக்கூட நான் போகாமல் இருந் திருக்கிறேன். என்னை நன்கு புரிந்துகொண்ட எவரும் என்னை வற்புறுத்துவதும் இல்லை. சிறு வயது முதல் நான் ஒரு சங்கோஜியாகவும், தனிமை விரும்பியாகவும் இருந்திருக்கிறேன். அது எனது உரிமை. முதலமைச்சர் ஆனதால், எனது வேலைப்பளுவும் 1991-க்குப் பின் அதிகரித்து வந்துள்ளது என்பதையும் மறந்துவிடலாகாது. டைரக்டர் ஸ்ரீதர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரைப் பார்க்க இயலாமல் போனதன் காரணம் வேறேதுமில்லை. எனினும், அவர் தேறி வருகிறார் என்று உங்கள் பத்திரிகை வாயிலாகத் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நான் திரு.ஸ்ரீதரைப் பார்க்கவில்லை என்று அவர் வேதனைப்படலாம்; நியாயம்! ஆனால், தேவையில்லாமல் உண்மைக்குப் புறம்பான சில சம்பவங்களைக் கூறி என்னை வேதனைப்படுத்தியுள்ளாரே திரு.ஸ்ரீதர் என்று வருந்துகிறேன். You too Mr.Sridhar? ‘வெண்ணிற ஆடை’ படத்தில் நடிக்க வாய்ப்பளித்து, என்னைத் தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் திரு.ஸ்ரீதர் என்பதனை நான் மறுக்கவில்லை; மறக்கவும் இல்லை. ஆனால், அதனால்தான் நான் பின்னர் பொது வாழ்வில் பேரும் புகழும் பெற்றேன் என்று அவர் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. திரு.ஸ்ரீதர் அறிமுகப்படுத்திய புதுமுக நடிகை களில் எத்தனை பேர் முதலமைச்சராகி உள்ளார்கள்? எத்தனை பேர் அரசியலில் பிரவேசித்துள்ளார்கள்? எத்தனை பேர் பேரும் புகழும் பெற்றுள்ளார்கள் என்பதனை அவரே கூறட்டும்.

    நான் எனது நடன ஆற்றலால் சிறந்த நாட்டியக் கலைஞராக இருந் தேன்; நடிப்பாற்றலால் சிறந்த நடிகையாக இருந்தேன்; அறிவாற் றலால் நாடாளுமன்ற உறுப்பினராகப் பிரகாசித்தேன்; அரசியல் ஆற்றலால் முதலமைச்சராக வீற்றிருந்தேன் என்பது என் கருத்து. இக்கால கட்டங்களில் எனக்கு உறுதுணையாக, ஆசானாக, நண்பர்களாக, ஊன்று கோலாக, ஆலோசகர்களாக இருந்த வர்கள் எத்தனையோ பேர். அவர்கள் அத்தனை பேர் மீதும் அன்பும், பரிவும், பாசமும், நேசமும் கொண்டு நன்றி மறவாமல் வாழ்ந்து வருகி றேன். ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்பதை நான் நன்கு அறிவேன். திரு.ஸ்ரீதர் போன்றோர் கூறும் கூற்றுக்களில் ‘நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ என்பதனையும் நான் அறிவேன்.

    என் தாயார் அவரிடம் போய் எனக்காக மன்றாடினார் என்று அவர் கூறியுள்ளது மிகப் பெரிய பொய். நடிகை ஹேமமாலினி, அதே படத்தில் வேறு பாத்திரத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின்னர் ஒதுக்கப்பட்ட நேரத்தில், ஹேம மாலினியின் தாயார் திரு.ஸ்ரீதரைப் பார்த்து சந்தர்ப்பம் கேட்டார் என்று திரு.ஸ்ரீதரே என்னிடம் கூறியுள்ளார். அவ்வாறு திரு.ஸ்ரீதரால் உதாசீனப் படுத்தப்பட்ட ஹேமா, பம்பாய் சென்று அகில இந்திய அளவில் பெரிய நடிகையாகப் பேரெடுத்து, பேரும் புகழும் பெற்று வளர்ந்தாரே, அதுவும் திரு.ஸ்ரீதரால்தானா என்பதை அவர் யோசித்துப் பார்க்க வேண்டும்.

    ‘இனிய உளவாக இன்னாத கூறல்’ அவசியமா திரு.ஸ்ரீதர்?

    – ஜெ.ஜெயலலிதா
    பொதுச்செயலாளர், அ.இஅ.தி.மு.க.,
    முன்னாள் தமிழக முதலமைச்சர்.

    ஜெயலலிதாவுக்கு ஸ்ரீதர் பதில்!

    ஜெயலலிதா விகடனுக்கு (29.9.96 இதழ்) எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, “என் தரப்பில் மேலும் சில விளக்கங்கள் சொல்ல விரும்பு கிறேன்!” என்று டைரக்டர் ஸ்ரீதரிடமிருந்து போன். நேரில் சந்தித்தபோது ஸ்ரீதர் சொன்னார்…

    “என் உடல்நிலை பற்றி பத்திரிகை வாயிலாகத் தெரிந்து, பத்திரிகை மூல மாகவே நலம் விசாரித்ததற்கு ஜெயலலிதாவுக்கு என் நன்றி! ஆனால், உண்மைக்குப் புறம்பான தகவல் களைச் சொல்லியிருப்பது அவர் தான்; நான் அல்ல!

    ஜெயலலிதாவின் தாயார் திருமதி சந்தியா, என்னைச் சந்தித்துத் தன் மகளுக்கு வாய்ப்புக் கொடுக்கும்படி கேட்டபோது, தயாரிப்பாளர் கோவை செழியன் என்னுடன் இருந்தார். அவரைக் கேட்டால் உண்மையைச் சொல்வார்!

    மேலும், ஜெயலலிதா சொல்வது போல், ஹேமமாலினியை நான் தேர்வு செய்தது ‘வெண்ணிற ஆடை’ படத்துக்கு அல்ல; ‘காதலிக்க நேர மில்லை’ படத்துக்கு! அப்போது அவர் முகம் குழந்தைத்தனமாக இருந்ததால், அறிமுகம் செய்ய வில்லை. ஆனால், அவர் இந்தியில் ‘ட்ரீம் கேர்ள்’ படத்தில் அறிமுகமாகி நடிப்பதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்.

    ஜெயலலிதாவுக்கு நானும் ஒரு திருக்குறளை நினைவுபடுத்த விரும் புகிறேன் – ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந் நன்றி கொன்ற மகற்கு!”

    தயாரிப்பாளர் கோவை செழியனைச் சந்தித்தோம்.

    “டைரக்டர் ஸ்ரீதருக்கு ஜெயலலிதா பதில் எழுதிய கடிதத்தை விகடனில் நானும் படித்தேன். ஆச்சரியமும் வேதனையும் அடைந்தேன்.

    நான் தயாரித்த ‘சுமைதாங்கி’ படம் வெளியான பிறகு, டைரக்டர் ஸ்ரீதர் முழுக்க முழுக்கப் புதுமுகங்களை வைத்து ‘வெண்ணிற ஆடை’ படத்தை உருவாக்கத் திட்டமிட்டார்.மற்ற தேர்வுகள் முடிந்து கதாநாயகியைத் தேடிக்கொண்டிருந்த சமயத்தில்தான், சிவாஜி தலைமையில் நடிகை சந்தியாவின் மகள் நடன அரங்கேற்றம் நடந்தது. ‘அவரை ஏன் கதாநாயகியாக்க முயற்சிக்கக் கூடாது?” என்று சந்தியாவுக்கு போன் செய்து வரவழைத்துப் பேசி னோம். அப்போது ஜெயலலிதாவுக்கு 14 வயது. கதாநாயகி பாத்திரத்துக்குப் பொருந்திவரமாட்டார் என்ற முடிவில், வேறு கதாநாயகியைத் தேட ஆரம்பித்துவிட்டோம்.

    சித்ராலயா ஆபீஸில் பாடல் கம்போஸிங். டைரக்டர் ஸ்ரீதர், நான், எம்.எஸ்.விஸ்வநாதன், சி.வி. ராஜேந்திரன், சித்ராலயா கோபு அனைவரும் இருந்தபோது, சந்தியா அங்கு வந்தார். ‘வேறு நடிகை தேடுகிறீர்களாமே… நீங்கள் அவசியம் என் மகளுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண் டார். ‘என் மகள் வயது குறைந்தவள் என்றாலும், நல்ல முறையில் நடிப்பாள். அவள் நடிப்பில் திருப்தி இல்லாவிட்டால் பிறகு மாற்றிவிடுங் கள்!’ என்று சொன்னபோது, சந்தியாவின் கண்களில் நீர் பெருகி விட்டது. அதன்பிறகுதான் ஜெயலலிதாவை நடிக்க வைக்க முடிவு செய்து படப்பிடிப்பைத் தொடங்கி னோம்!” என்றார்.

  14. BaalHanuman says:

    பாறையை மோதிய இளங்காற்று — ஸ்ரீதர் : சில குறிப்புகள்:

    http://www.umavaratharajan.com/katturai/Parayai%20Mothiya%20Ilam%20Kattu%20%281%29.html

  15. S.R Subramani says:

    ஸ்ரீதரின் சித்ராலயா கம்பெனியின் புகழ் பெற்ற பின் வரும் வாசகங்களை குறிப்பிடுங்கள்:
    அலை கடலில் தோணி
    கலையுலகில் எங்களது புதிய பாணி
    ஆங்கிலத்தில்:
    We know art is an ocean
    We row for the novel creation

பின்னூட்டமொன்றை இடுக