களத்தூர் கண்ணம்மா
ஒக்ரோபர் 8, 2010 பின்னூட்டமொன்றை இடுக
படம் வந்தபோது (செப்டம்பர் 1960) விகடனில் வந்த விமர்சனம். கமலைப் பற்றி அப்பவே புகழ ஆரம்பித்துவிட்டார்கள்! நன்றி விகடன்!
சண்முகம் – மீனாட்சி
சண்: ஏன் மீனாட்சி, முகமெல்லாம் ஒரே வாட்டமா இருக்குது?
மீனா: களத்தூர் கண்ணம்மா படத்துக்குப் போயிருந்தேன். அநாதைக் குழந்தை ஒண்ணு படற கஷ்டத்தைப் பார்த்து என் மனசு ரொம்பச் சங்கடப்பட்டுதுங்க.
சண்: அப்படி என்ன உருக்கமான கதை அது?
மீனா: களத்தூர் ஜமீன்தாரோட பிள்ளை ராஜா, அவங்க ஜமீன்லேயே வேலை பார்க்கிறவருடைய பெண் கண்ணம்மாவைக் காதலிச்சு, ரகசியக் கலியாணம் பண்ணிக்கறாரு. கலியாணம் ஆனவுடனேயே மனைவியைப் பிரிஞ்சு, சீமைக்குப் போறாரு. கல்யாண விஷயம் ஜமீன்தாருக்குத் தெரிஞ்சு போவுது.
சண்: அப்புறம் மூணு பேரும் தனித்தனியா பிரிஞ்சுடுவாங்க. திரும்பி வந்த ராஜா கண்ணம்மாவைக் காணாமல் தவிப்பான். கடைசியிலே எல்லாம் ஒண்ணு கூடுவாங்க. அவ்வளவுதானே!
மீனா: ஆமாம். அந்தப் பையன் நடிப்புதான் எல்லாரையும் உலுக்கிடுச்சு. ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே‘ன்னு முருகன் படத்துக்கு எதிரிலே நின்னு அந்தப் பையன் பாடியது ரொம்ப உருக்கமா இருந்துதுங்க. சாவித்திரியும் ஜெமினி கணேசனும் கண்ணம்மாவும் ராஜாவுமா வராங்க. காதலியா வரபோதும் சரி, கண் கலங்கித் தவிக்கிற மனைவியா வரபோதும் சரி, கொடுத்த வேஷத்தை நல்லாச் செய்திருக்கு சாவித்திரி.
சண்: ஜமீன்தார் யார்? பாலையாவா?
மீனா: ஆமாம். அவர் நடிப்புக்குச் சொல்லணுமா! சுப்பய்யாதான் வேலைக்காரனா வராரு. கொஞ்சம் ‘ஓவரா’ நடிக்கிறாரு. ஆனால், பிறந்த குழந்தையை அநாதை ஆசிரமத்திலே கொண்டுபோய் விடற இடத்திலே, அந்தக் குழந்தை துணியைப் பிடிச்சுக்குது. அதை அவர் விலக்கிக்கிட்டு வர இடம் ரொம்ப நல்லா இருந்தது.
சண்: டைரக்ஷன் பீம்சிங்கா?
மீனா: ஆமாம். எப்படிச் சரியா சொன்னீங்க?
சண்: மறந்துட்டியா? இதே மாதிரி காட்சியை பாகப் பிரிவினையிலே பார்க்கலியா நீ?
மீனா: இந்தக் குறையெல்லாம் உங்களுக்குத்தான் படும். எனக்கென்னவோ, இதில் அழுகைக்குதான் அதிக இடம் இருக்கு, சிரிக்கவே முடியலேங்கறது ஒண்ணுதான் குறையாகப்பட்டது. நான் பார்த்த நல்ல தமிழ்ப் படங்களிலே களத்தூர் கண்ணம்மாவைக் கண்டிப்பா சேர்த்துக்குவேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்