நான் பெற்ற செல்வம் (Naan Petra Selvam)
ஓகஸ்ட் 19, 2008 4 பின்னூட்டங்கள்
முன் குறிப்பிட்டது போல் 1956இல் வந்த படம். சிவாஜி, ஜி. வரலக்ஷ்மி, நம்பியார், சாரங்கபாணி, வி.கே. ராமசாமி, ஏ. கருணாநிதி, எம்.என். ராஜம் நடித்திருக்கிறார்கள். ஜி. ராமநாதன் இசை. ஏ.பி. நாகராஜன் கதை வசனம். ஏ.பி. நாகராஜன் இதிலும் ஒரு தருமி-நக்கீரன்-சிவன் காட்சியை வடித்திருக்கிறார். சிவாஜியே நக்கீரனாகவும் சிவனாகவும் நடிக்கிறார். திருவிளையாடல் படக் காட்சியில் இந்தக் காட்சியின் தாக்கம் தெரிகிறது. ஜி. வரலக்ஷ்மி அரிச்சந்திரா படத்திலும் சிவாஜியுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவரைப் பற்றிய ஒரு கட்டுரை இங்கே.
“காட்டுக்குள்ளே கண்ட பூவு கண்ணைப் பறிக்குது” என்ற lowbrow பாட்டு மிகவும் நன்றாக இருந்தது. சுலபமான சந்தத்தில், நல்ல தாளத்தோடு அமைந்திருந்தது. திடீரென்று வீதியில் இரண்டு பேர் வந்து பாட்டுப் பாடி டான்ஸும் ஆடி பணம் சம்பாதிப்பார்கள். நான் சில பாம்பு பிடாரன்களைப் பார்த்திருக்கிறேன். லேகியம் விற்கும் மோடி மஸ்தான்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் நான் இப்படி எந்த டான்ஸையும் பார்த்ததில்லை. இப்படி உண்மையிலேயே அந்தக் காலத்தில் நடக்குமா? இல்லை உடான்ஸா? யாராவது பார்த்திருக்கிறீர்களா?
“பூவா மரமும் பூத்ததே” என்ற பாட்டு பிரபலமானது. ஜிக்கியின் குரலில் ஒரு துள்ளல் இருக்கிறது.
“வாழ்ந்தாலும் ஏசும்”, “நான் பெற்ற செல்வம்” என்ற பாட்டுக்கள் இன்றும் கேட்கப்படுகின்றன. டி.எம். சவுந்தரராஜன் 50களில் கொஞ்சம் உச்ச ஸ்தாயியில்தான் பாடுவார். இந்தப் பாடல்களில் அதை நன்றாக உணரலாம். அவரது ஆதர்சமான தியாகராஜ பாகவதரின் தாக்கம்தான்.
“மாதா பிதா குரு தெய்வம்” என்பதும் நல்ல பாட்டு.
கொஞ்சமாகவே திரைப் பாடல்கள் எழுதி இருக்கும் கா.மு. ஷெரிப் இந்தப் படத்தில் பல பாட்டுக்களை எழுதி இருக்கிறார். “காட்டுக்குள்ளே கண்ட பூவு”, “பூவா மரமும்”, “. நான் பெற்ற செல்வம்”, “வாழ்ந்தாலும் ஏசும்” அவர் எழுதியவையே.
“நான் பெற்ற செல்வம்”, “வாழ்ந்தாலும் ஏசும்” பாட்டுக்களை இங்கே கேட்கலாம்.
கதை என்னவோ இழுவைதான். அப்பா சாரங்கபாணியை எதிர்த்துக்கொண்டு ஏழை வரலக்ஷ்மியை மணக்கும் சிவாஜி வாழ்க்கையில் உள்ள அத்தனை கஷ்டங்களையும் படுவார். ஏழ்மையிலே தவிப்பார், ஆனால் வேலை கீலை எதுவும் தேடாமல் தன் ஏழ்மையைப் பற்றியும் அப்பாவின் கடின உள்ளத்தையும் பற்றி நீள நீள வசனங்கள் பேசிக்கொண்டிருப்பார். அவருக்கு கஷ்டம் கொடுக்க விரும்பாத அவரது மைத்துனர் நம்பியார் வீட்டை விட்டு ஓடி தற்கொலை செய்து கொள்ள முயற்ச்சி செய்து தலையில் அடிபட்டு பைத்தியமாகிவிடுவார். அவர் வீட்டை விட்டு ஓடியது சிவாஜியின் நீள நீள வசனங்களை தாங்கமுடியாமல்தான் என்று நான் யூகிக்கிறேன். வேலை கிடைக்காத துயரத்தாலோ என்னவோ, சிவாஜி நடுவில் தனது மனைவியை கர்ப்பமும் ஆக்கிவிடுவார். தப்பித் தவறி அவருக்கு ஒரு வேலை கிடைக்கும், ஆனால் அவரது அப்பாவே அந்த வேலையையும் பறித்துவிடுவார். உடனே சிவாஜி “வாழ்ந்தாலும் ஏசும்” என்று பாட்டு பாடிக்கொண்டே நெடுந்தூரம் தன் மனைவியோடு நடந்து செல்வார். மனைவிக்கு மருந்து வாங்கப் பணம் இல்லாமல் திருடப் போவார். ஆனால் அங்கே அவரை மன்னித்து விட்டுவிடுவார்கள். என்னடா ஜெயிலுக்கு போகாமல் தப்பித்துவிட்டாரே, உணர்ச்சி பொங்க வசனம் பேசும் ஒரு வாய்ப்பு போய்விட்டதே என்று நினைத்தால், அந்த செய்தி தெரிந்து அவர் மனைவி அவமானத்தால் இறந்துவிடுவார். அப்போது சிவாஜி தன் சுயரூபத்தைக் காட்டி சிம்மக் குரலில் வசனம் பேசுவார். படம் முடியும் வேளையில் தன் காணாமல் போன மகனை தேடும் போது அவரை போலிஸ்காரர்கள் திருடன் என்று நினைத்து கைது செய்துவிடுவார்கள். அவரும் “நான் இந்த செல்வத்தை அல்ல, நான் பெற்ற செல்வத்தைத்தான் தேடுகிறேன்” என்று நமது கண்களை குளமாக்குவார். அவரும் அழுது, நம்மையும் அழவைத்துவிட்டு, கடைசியில் சிவாஜியும் அவரது அப்பாவும் 2 நாட்களுக்கு முன்னால் காணாமல் போன அவரது மகனும் சிறு வயதில் காணாமல் போன சிவாஜியின் தங்கையும் வீட்டை விட்டு ஓடிப் போய் பைத்தியமாக இருந்து குணமான சிவாஜியின் மைத்துனரும் எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்! செத்துப் போன மனைவியும், முதல் அரை மணி நேரத்திலேயே செத்துப் போன சிவாஜியின் மாமாவும் உயிர் பிழைத்து வந்திருந்தால் இன்னும் முழுமையாக இருந்திருக்கும். Director missed a trick!
பாட்டுக்களை மட்டும் கேட்கலாம்.
பதிவுகளுக்கு நன்றி!
நன்றி bsubra!
you are a anti-sivaji or anti-mokkai movies of sivaji?
I am anti-mokkai movies, period. Most old movies conform to unwritten conventions of the period that look quaint today. Very few old movies have aged well. I believe that entertainers have a higher chance of still being interesting compared to sentimental movies. Sivaji, being the doyen of sentimental movies, comes for a fair share of ribbing. Do note that I have positive reviews of Irumbuth Thirai, Sumathi En Sundhari where he underplays the sentimental angle to some extent. It is not that sentimental movies are never any good – I will give Gowravam a great review any day; but it is harder for them to stand the test of the time.
Anyway, the reason I love to see old movies is not for the acting – but for the songs. :-))
Irumbuth Thirai review here – https://awardakodukkaranga.wordpress.com/2008/08/15/இரும்புத்-திரை-irumbuth-thirai/
Sumathi En Sundari review here – https://awardakodukkaranga.wordpress.com/2008/08/07/டாக்டர்-சிவா-இல்லை-சுமதி/