நாலும் தெரிந்தவன் (Naalum Therindhavan)
செப்ரெம்பர் 3, 2008 2 பின்னூட்டங்கள்
1968இல் வந்த படம். ரவிச்சந்திரன், காஞ்சனா, அசோகன், மனோகர், எம்.ஆர்.ஆர். வாசு, அஞ்சலி தேவி, பண்டரிபாய், வி.கே. ராமசாமி, நாகேஷ், டைப்பிஸ்ட் கோபு நடிக்க, எஸ்.எம். சுப்பையா நாயுடு (டைட்டில்களில் எஸ்.எம்.எஸ். என்று மட்டும்தான் போட்டிருந்தது.) இசையில், ஜம்பு இயக்கி இருக்கிறார். ஷம்மி கபூர் நடித்த ப்ரொபஸர், சவுண்ட் ஆப் ம்யூசிக் இரண்டையும் கொஞ்ச கொஞ்சம் கலக்கி எடுத்திருக்கிறார்கள். படத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை, அதனால் ஓடி இருக்காது என்று யூகிக்கிறேன். படத்தை பார்த்த பிறகு இது சர்வ நிச்சயமாகிவிட்டது.
சொத்துக்காக வி.கே. ராமசாமி தம்பி மனோதரின் மனைவியான அஞ்சலி தேவி மீது பழி சுமத்தி அவளை வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். அஞ்சலி தேவி கஷ்டப்பட்டு தன் மகன் ரவிச்சந்திரனை வளர்க்கிறார். வளர்ந்து பெரியவனாகும் ரவி தாடி ஒட்டிக்கொண்டு தன் அப்பா வீட்டிலேயே காஞ்சனா உட்பட்ட தன் அத்தை மகள்களுக்கு ட்யூஷன் எடுக்கப்போகிறார். காதலை மனோகரும் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அஞ்சலி தேவிதான் ரவிச்சந்திரனின் அம்மா என்று தெரிந்ததும் கல்யாணம் நின்றுவிடுகிறது. ரவி தன் தாய் உத்தமிதான் என்று நிரூபிப்பதாக சபதம் போட்டு அதை நிறைவேற்றுகிறார்.
கொடுமை # 1: மனோகரின் வசனம் – “உலக சமாதானத்துக்காகத்தான் நான் பட்டாளத்துலே சேர்ந்தேன்” – உலக சமாதானத்துக்கு பட்டாளமா? இவர் என்ன ஐ.நா. ராணுவத்திலயா சேர்ந்தார்?
கொடுமை # 2: டைபிஸ்ட் கோபு ரோட்டோரத்தில் ரவிச்சந்திரனுடன் பேசும் ஒரு வசனம். “உங்கம்மாவை மோகன் எங்கேயோ கடத்தி வச்சிருக்கான். அவனுக்கு தெரியாம அவனை நீ பின்தொடர்ந்து போனா எங்கேன்னு கண்டுபிடிசசிறலாம். அதோ மோகன்!” அது எப்படிய்யா அவ்வளவு சரியான நேரத்திலே மோகன் அங்கே வர்றான்?
கொடுமை # 3: டைபிஸ்ட் கோபுவின் அட்வைஸ்படி மோகனை ரவி அவனுக்கு தெரியாமல் பின்தொடர்கிறார். அடுத்த காட்சி – ஹோட்டலில் மோகன் உட்பட எல்லாருக்கும் முன்னால் ரவிச்சந்திரன் யாரோ ஒருத்தியுடன் “ஹஹா! நரி ஒன்று சிரிக்கிறது” என்று ஒரு பாட்டு பாடுகிறார்.
கொடுமை # 4: எல்லா வில்லன்களையும் பூ என்று ஊதிவிடும் ரவி. படம் முடிந்துவிட்டது என்று நினைத்தால் அதற்குப் பின் அஞ்சலி தேவியுடன் 10 நிமிஷம் “தாயை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன், அப்பாவை காப்பற்ற மாட்டேன்” என்று வசனம். இந்த காப்பில் எம்.ஆர்.ஆர். வாசு நுழைந்து இன்னொரு 10 நிமிஷம் சண்டை. என்ன கொடுமை சரவணன் இது?
பாதி கிழிந்த போட்டோவை கண்ணாடியில் பிரதிபலித்து பாதி முகத்தை முழுதாக்கும் ட்ரிக் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருந்தது.
“பூவா பூவா சொரியுதுடி”, “செல்ல மாமா ஒண்ணு சொல்லலாமா”, “நரி ஒன்று சிரிக்கிறது” என்ற பாட்டுகள் இருக்கின்றன. எந்த பாட்டும் உருப்படியாக இல்லை.
10க்கு 2 மார்க். F grade.
ரவிச்சந்திரன் பசங்களுக்கு ட்யூஷன் எடுக்கும் சீன்கள் அப்படியே சவுண்ட் ஆஃப் ம்யூசிக்கிலிருந்து சுட்டது. பாதி போட்டோவை கண்ணாடியில் காட்டி முழு முகத்தையும் அறியும் டெக்னிக் எனக்கும் பிடித்திருந்தது.
இதை நான் இரு மாணவர்களுக்கு கணக்கு டியூஷன் எடுக்கும்போது மிர்ரர் இமேஜ் பற்றிய பாடத்தில் நேரடியாக செய்து காட்டியதில் அவர்கள் அந்தசேப்டரை நன்காக புரிந்து கொண்டதாக மகிழ்ச்சி அடைந்தனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு, சவுண்ட் ஆஃப் ம்யூசிக் நம்மூரில் பாபுலர்தான். சாந்தி நிலையம், பரிச்சய் எல்லாம் கூட இந்த படத்திலிருந்து சுடப்பட்டவைதானே! அந்த கண்ணாடி ட்ரிக்கை நீங்கள் பயன்படுத்திநீர்களா? அப்பாடா, இந்த படத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று நினைத்தேன்…