நெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)
ஒக்ரோபர் 24, 2008 10 பின்னூட்டங்கள்
பல வருஷங்களுக்கு முன் பார்த்த படம். விவரங்கள் எதுவும் துல்லியமாக கொடுக்க முடியாது.
1962இல் வந்த படம். கல்யாண் குமார், தேவிகா, முத்துராமன், நாகேஷ் ஞாபகம் இருக்கிறது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. ஹிந்தியில் தில் ஏக் மந்திர் என்று வந்தது. ராஜேந்திர குமார், ராஜ் குமார், மீனா குமாரி? நடித்தது. மலையாளத்தில் 1970களில் எடுக்கப்பட்டது. ஸ்ரீதரின் சொந்தப் படம். (சித்ராலயா)
ஒரே செட்டில் எடுக்கப்பட்டது என்பது இந்த படத்தின் பெருமை என்று சொல்வார்கள். முதலில் அந்த தகவல் சரி இல்லை. “முத்தான முத்தல்லவோ” பாட்டுஒரு ஃப்ளாஷ்பாக் காட்சி வெளிப்புறத்தில் எடுக்கப்பட்டது. இரண்டாவது இது தயாரிப்பாளருக்கு நல்ல விஷயம். ஒரு கோ-ஆர்டினேட்டராக ஸ்ரீதர் திறமை வாய்ந்தவர் என்று புரிகிறது. பார்க்கும் எனக்கென்ன? ஒரு சுவாரசியமான தகவல் என்று சொல்லுங்கள். அது கலை ரீதியான சாதனை என்றெல்லாம் சொல்லாதீர்கள்.
இப்போது எல்லாருக்கும் தெரிந்த கதைதான். டாக்டர் கல்யாண் குமாரை காதலிக்கும் தேவிகா இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு காணாமல் போய்விடுவார். இப்படி எல்லாம் எழுதுவதை விட பாடல் வரிகளில் சொல்லிவிடலாம்.
வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரை காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க!
கல்யாண் பாடும் இந்த வரிகள்தான் கதை. இதில் முத்துராமனுக்கும் தேவிகாவின் முன்னாள் காதல் தெரிந்து அவரும் “நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்” என்று பாட்டு பாடுவார். தான் இறந்துவிட்டால் தேவிகா மறுபடி கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்வார். தேவிகாவும் தமிழ் பண்பாட்டுபடி “சொன்னது நீதானா” என்று உருகுவார். கான்சர் உள்ள முத்துராமனை காப்பாற்ற இரவு பகலாக படித்து operation success, doctor out!
சுஜாதா ஆயிரம் சொன்னாலும் இது நல்ல கதைதான். எனக்கு பிடித்திருந்தது. இந்த படம் above average தமிழ் படம்தான்.
இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது முத்துராமனின் நடிப்புதான். அலட்டிக்கொள்ளாத, அருமையான நடிப்பு. முன்னாள் காதல் தெரிந்தும் அதை தெரியும் என்றே காட்டிக்கொள்ள மாட்டார். ஒரு உண்மையான gentleman ஆக பிரமாதமான நடிப்பு. கல்யாணும் தேவிகாவும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங், ஆனால் தவறாக தெரியவில்லை.
இது நாகேஷுக்கு முதல் படமோ? நினைவில்லை.
பாட்டுக்கள் அபாரம். ஏ.எல். ராகவன் மிக நன்றாக பாடி இருப்பார். எழுதியது கண்ணதாசனோ? “முத்தான முத்தல்லவோ”, “ஒருவர் வாழும் ஆலயம்”, “சொன்னது நீதானா” எல்லாமே மிக நல்ல பாடல்கள்.
“எங்கிருந்தாலும் வாழ்க” பாட்டில் இரவு நேர சத்தங்கள் எல்லாம் கேட்கும். தவளை கத்தும். எம்எஸ்வி, நீர் ஜீனியஸ் ஐயா!
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு “நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்”தான். தமிழில் எனக்கு மிகவும் பிடித்த பாடகர் பி.பி.எஸ்தான். இந்த பாட்டின் அருமையான வரிகளும், சுகமான குரலும், நம்மை எங்கேயோ கொண்டு சொல்லும்!
கொடுமையாக எனக்கு பாட்டு எங்கேயும் கிடைக்கவில்லை. உங்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள், இங்கே சேர்த்து விடலாம். நிரா சொன்ன சைட்டுக்கு என்னால் போக முடியவில்லை. வேறு ஏதாவது சைட்? மிச்ச பாட்டுகள் கிடைக்குமா?
இது ஸ்ரீதரின் சிகரங்களில் ஒன்று. 10க்கு 7 மார்க். B- grade.
நண்பர் சூர்யா தரும் கொசுறு செய்தி: நெஞ்சில் ஒர் ஆலயம் படத்தில் கல்யாண் குமாருக்காக ரவுண்ட் நெக் ஷர்ட் தைக்கப்பட்டது. பிறகு யூனிட் உள்ள அனைவருக்கும் அவ்வாறு டிரஸ் எடுத்துக்கொடுக்குமாறு ஸ்ரீதர் சொல்லவே அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஆனால் அந்த படத்திற்கு PROவாக பணியாற்றிய பிலிம் நியூஸ் ஆனந்தனை மட்டும் மறதியாக விட்டு விட்டனர். இதற்காக வருத்தப்பட்ட ஸ்ரீதர் அவருக்கும் அந்த மாதிரியே தைத்து கொடுக்க சொல்லவே அதற்குள் ஆனந்தன் அவர்க்ளே அவ்வாறு தைத்து கொண்டதுடன் அன்று முதல் காலர் இல்லாத ரவுண்ட் நெக் ஷர்டையே இன்றுவரை அணிந்தும் கொள்கிறார்.படத்தில் காண்க.
அண்மைய பின்னூட்டங்கள்