நெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)


பல வருஷங்களுக்கு முன் பார்த்த படம். விவரங்கள் எதுவும் துல்லியமாக கொடுக்க முடியாது.

1962இல் வந்த படம். கல்யாண் குமார், தேவிகா, முத்துராமன், நாகேஷ் ஞாபகம் இருக்கிறது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. ஹிந்தியில் தில் ஏக் மந்திர் என்று வந்தது. ராஜேந்திர குமார், ராஜ் குமார், மீனா குமாரி? நடித்தது. மலையாளத்தில் 1970களில் எடுக்கப்பட்டது. ஸ்ரீதரின் சொந்தப் படம். (சித்ராலயா)

ஒரே செட்டில் எடுக்கப்பட்டது என்பது இந்த படத்தின் பெருமை என்று சொல்வார்கள். முதலில் அந்த தகவல் சரி இல்லை. “முத்தான முத்தல்லவோ” பாட்டுஒரு ஃப்ளாஷ்பாக் காட்சி வெளிப்புறத்தில் எடுக்கப்பட்டது. இரண்டாவது இது தயாரிப்பாளருக்கு நல்ல விஷயம். ஒரு கோ-ஆர்டினேட்டராக ஸ்ரீதர் திறமை வாய்ந்தவர் என்று புரிகிறது. பார்க்கும் எனக்கென்ன? ஒரு சுவாரசியமான தகவல் என்று சொல்லுங்கள். அது கலை ரீதியான சாதனை என்றெல்லாம் சொல்லாதீர்கள்.

இப்போது எல்லாருக்கும் தெரிந்த கதைதான். டாக்டர் கல்யாண் குமாரை காதலிக்கும் தேவிகா இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு காணாமல் போய்விடுவார். இப்படி எல்லாம் எழுதுவதை விட பாடல் வரிகளில் சொல்லிவிடலாம்.

வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரை காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க!
கல்யாண் பாடும் இந்த வரிகள்தான் கதை. இதில் முத்துராமனுக்கும் தேவிகாவின் முன்னாள் காதல் தெரிந்து அவரும் “நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்” என்று பாட்டு பாடுவார். தான் இறந்துவிட்டால் தேவிகா மறுபடி கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்வார். தேவிகாவும் தமிழ் பண்பாட்டுபடி “சொன்னது நீதானா” என்று உருகுவார். கான்சர் உள்ள முத்துராமனை காப்பாற்ற இரவு பகலாக படித்து operation success, doctor out!

சுஜாதா ஆயிரம் சொன்னாலும் இது நல்ல கதைதான். எனக்கு பிடித்திருந்தது. இந்த படம் above average தமிழ் படம்தான்.

இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது முத்துராமனின் நடிப்புதான். அலட்டிக்கொள்ளாத, அருமையான நடிப்பு. முன்னாள் காதல் தெரிந்தும் அதை தெரியும் என்றே காட்டிக்கொள்ள மாட்டார். ஒரு உண்மையான gentleman ஆக பிரமாதமான நடிப்பு. கல்யாணும் தேவிகாவும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங், ஆனால் தவறாக தெரியவில்லை.

இது நாகேஷுக்கு முதல் படமோ? நினைவில்லை.

பாட்டுக்கள் அபாரம். ஏ.எல். ராகவன் மிக நன்றாக பாடி இருப்பார். எழுதியது கண்ணதாசனோ? “முத்தான முத்தல்லவோ”, “ஒருவர் வாழும் ஆலயம்”, “சொன்னது நீதானா” எல்லாமே மிக நல்ல பாடல்கள்.

“எங்கிருந்தாலும் வாழ்க” பாட்டில் இரவு நேர சத்தங்கள் எல்லாம் கேட்கும். தவளை கத்தும். எம்எஸ்வி, நீர் ஜீனியஸ் ஐயா!

எனக்கு மிகவும் பிடித்த பாட்டு “நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்”தான். தமிழில் எனக்கு மிகவும் பிடித்த பாடகர் பி.பி.எஸ்தான். இந்த பாட்டின் அருமையான வரிகளும், சுகமான குரலும், நம்மை எங்கேயோ கொண்டு சொல்லும்!

கொடுமையாக எனக்கு பாட்டு எங்கேயும் கிடைக்கவில்லை. உங்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள், இங்கே சேர்த்து விடலாம். நிரா சொன்ன சைட்டுக்கு என்னால் போக முடியவில்லை. வேறு ஏதாவது சைட்? மிச்ச பாட்டுகள் கிடைக்குமா?

இது ஸ்ரீதரின் சிகரங்களில் ஒன்று. 10க்கு 7 மார்க். B- grade.

நண்பர் சூர்யா தரும் கொசுறு செய்தி: நெஞ்சில் ஒர் ஆலயம் படத்தில் கல்யாண் குமாருக்காக ரவுண்ட் நெக் ஷர்ட் தைக்கப்பட்டது. பிறகு யூனிட் உள்ள அனைவருக்கும் அவ்வாறு டிரஸ் எடுத்துக்கொடுக்குமாறு ஸ்ரீதர் சொல்லவே அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஆனால் அந்த படத்திற்கு PROவாக பணியாற்றிய பிலிம் நியூஸ் ஆனந்தனை மட்டும் மறதியாக விட்டு விட்டனர். இதற்காக வருத்தப்பட்ட ஸ்ரீதர் அவருக்கும் அந்த மாதிரியே தைத்து கொடுக்க சொல்லவே அதற்குள் ஆனந்தன் அவர்க்ளே அவ்வாறு தைத்து கொண்டதுடன் அன்று முதல் காலர் இல்லாத ரவுண்ட் நெக் ஷர்டையே இன்றுவரை அணிந்தும் கொள்கிறார்.படத்தில் காண்க.

மேஜர் சந்திரகாந்த் II (Major Chandrakanth)


இந்த போஸ்ட் கிடைத்துவிட்டது. அன்னை கிடைக்கவில்லை, மீண்டும் எழுத வேண்டியதுதான் போலிருக்கிறது. நாளைக்குத்தான்.

1966இல் வந்த படம். பாலச்சந்தரின் புகழ் பெற்ற மேடை நாடகம். ஏவிஎம் தயாரிப்பில் அவரே இயக்கியது. மேஜர், முத்துராமன், ஜெயலலிதா, நாகேஷ், ஏவிஎம் ராஜன் நடித்தது. வி.குமார் இசை. வெற்றி அடைந்திருக்கும் என்று நினைக்கிறேன், நிச்சயமாக தெரியாது.

ஹிந்தியிலும் “ஊஞ்சே லோக்” என்று எடுத்திருக்கிறார்கள். மேஜருக்கு பதில் அசோக் குமார், முத்துராமனுக்கு பதில் ராஜ் குமார், ஏவிஎம் ராஜனுக்கு பதில் ஃபெரோஸ் கான், ஜெவுக்கு பதில் கே.ஆர். விஜயா.

நான் பார்த்து ஒரு இருபது இருபத்தைந்து வருஷம் இருக்கும். அப்போது தமிழில் வந்த மிக நல்ல படங்களில் ஒன்று என்று நினைத்தேன். நேற்று பார்த்திருந்தால் என் கருத்து ஒரு வேளை மாறி இருக்கலாம். நான் இங்கே எழுதுவது அன்றைய கருத்தை வைத்து.

இது பாலச்சந்தர் ஏஜிஸ் அலுவலகத்தில் வேலை செய்யும்போது எழுதப்பட நாடகமாம். முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாம். யாரோ தமிழ் தெரியாத மேலதிகாரி சென்னைக்கு மாற்றலாகி வந்தபோது அவரை வரவேற்க எழுதப்பட்டிருக்கிறது. பிறகு நாடகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு மேஜர் நடித்திருக்கிறார். ஏவிஎம் செட்டியார் நாடகத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆகி படமாக்க முன் வந்திருக்கிறார்.

வி. குமார் பிரமாதமான பாட்டுகளை போட்டிருக்கிறார். “நேற்று நீ சின்ன பாப்பா” என்ற பாட்டில் துள்ளல், “ஒரு நாள் யாரோ” என்ற பாட்டில் இனிமை, “கல்யாண சாப்பாடு போடவா” என்ற பாட்டில் குத்து, “துணிந்து நில்” என்ற பாட்டில் கம்பீரம். “நானே பனி நிலவு” என்பதும் நல்ல பாட்டுதான். இவரை தமிழ் திரை உலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. டிஎம்எஸ், சீர்காழி எல்லாரும் நன்றாக பாடி இருந்தாலும், சுசீலா எல்லாரையும் மிஞ்சிவிட்டார். “துணிந்து நில்” பாட்டு சுரதா எழுதியது. மற்ற எல்லாம் வாலி. “ஜிங்கிடுச்சான் ஜிங்கிடுச்சான் ஜிங்கிடிச்சிச்சான் சிச்சான் சான்” போன்ற காவிய நயம் மிக்க வரிகளை அந்த காலத்தில் எழுதக் கூடியவர்கள் தஞ்சை ராமையா தாசும் வாலியும்தான்.

“நேற்று நீ”, “ஒரு நாள் யாரோ”, “கல்யாண சாப்பாடு” பாட்டுக்களை இங்கே கேட்கலாம்.

மேஜரின் மாஸ்டர்பீஸ் இதுதான். குருட்டுத்தனத்தை வெல்லும் தன்னம்பிக்கை, மன உறுதி, ஒழுக்கத்தின் மீதுள்ள அழுத்தமான நம்பிக்கை எல்லாவற்றையும் மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். இதை விட சிறப்பாக அவர் நடித்ததில்லை. எவ்வளவோ திறமைசாலியான அவர் எப்போதும் ஒரு டம்மி அப்பா ரோலில் வந்து போனது கொடுமை. ஒரு விதத்தில் பார்த்தால் இந்த படத்தில் நடித்தது அவரது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும் – இதற்கு பிறகு முக்கால்வாசி படங்களில் அவர் நடித்தது திருப்பி திருப்பி இதே ரோல்தான்!

முத்துராமன் மிக அருமையாக நடித்திருப்பார். நாகேஷ் முதல் பகுதியில் சிரிக்க வைப்பார். அவர் அழ வைக்கும் இரண்டாவது பகுதி கொஞ்சம் மெலோட்ராமாவாக இருந்தாலும் மோசம் என்று சொல்ல முடியாது.

மேஜரின் நண்பராக வருபவர் யார்? யாருக்காவது தெரியுமா?

நல்ல plot. குருடரான ரிடையர்ட் மேஜர் மே. சுந்தரராஜன் தன் பலவீனத்தை உறுதியுடன் சமாளித்து வாழ்கிறார். அவரது முதல் பையன் முத்துராமன் கடமை தவறாத போலிஸ் அதிகாரி. இளைய மகன் ஏவிஎம் ராஜனோ ஒரு ப்ளேபாய். ஜெயை மயக்கி கைவிட்டுவிடுகிறார். ஜெ தற்கொலை செய்து கொள்ள, அவரது அண்ணன் நாகேஷ் ராஜனை தேடி கண்டுபிடிக்கிறார். ராஜனிடம் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் எதிர்பார்க்கும் அவரிடம் பயப்படும் ராஜன் பணம் தருகிறேன் என்னை விட்டுவிடு என்கிறார். வெறியில் நாகேஷ் ராஜனை கொன்றுவிட்டு தப்பி ஓடி, மேஜரின் வீட்டுக்குள் ஒளிகிறார். குருடராய் இருந்தாலும் மேஜர் நாகேஷ் ஒளிந்திருப்பதை கண்டுபிடித்து விடுகிறார். நாகேஷ் மேஜருக்கு கண் தெரியாது என்று தெரிந்து அதிசயப்படுகிறார். அவரிடம் தான் கொலை செய்ததை சொல்கிறார். மேஜருக்கு அது தவறாக தெரியவில்லை. ஆனால் நாகேஷ் தன் வீட்டில் ஒளிந்துகொள்ளக்கூடது என்று சொல்கிறார். நாகேஷ் மேஜரின் போலித்தனத்தை சாடுகிறார். பிறகுதான் அவருக்கு மேஜரின் மகன் போலீஸ்காரர் என்று தெரிகிறது. தான் கொலை செய்தது மேஜரின் இன்னொரு மகன் என்றும் தெரிகிறது. மேஜர் உடைந்துபோனாலும், நாகேஷ் செய்தது சரிதான் என்று சொல்கிறார். நாகேஷுக்கு இடம் கொடுக்கிறார். முத்துராமன் நாகேஷை கண்டுபிடித்து அவரையும் அவருக்கு இடம் கொடுத்த மேஜரையும் கைது செய்கிறார்.

“ஊஞ்சே லோக்” என்றால் “உயர்ந்த மனிதர்கள்” என்று அர்த்தம். மேஜர், நாகேஷ், முத்துராமன் ஆகியவர்களின் கதாபாத்திரங்கள் உண்மையிலேயே உயர்ந்தவர்கள்தான்.

சில காட்சிகள் பிரமாதமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. மேஜர் தான் குருடனாக இருப்பதால் தனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை என்று நாகேஷுக்கு சொல்வார். வீட்டில் ஒவ்வொரு பொருளும் எங்கே இருக்கிறது என்று தனக்கு ஒரு கணக்கு இருக்கிறது என்று காண்பிப்பார். அடுத்த வினாடி கீழே விழுந்துவிடும்போது என்ன கணக்கு இருந்தாலும் கண் தெரியாத குறை எவ்வளவு பெரியது என்று தெரிகிறது.

“ஒரு நாள் யாரோ” படமாக்கப்பட்ட விதம் – ரேடியோவில் தங்கை ஜெ பாடுவதை தன் அக்கம்பக்கத்தார் கேட்க நாகேஷ் வாங்கும் ஓட்டை ரதியோ சரியாக எல்லாரும் வந்ததும் உடைந்துவிட, ஜெயை லைவ் ஆக பாட வைத்து, சமையல் பாத்திரங்களைக் கொண்டு நாகேஷ் இசை அமைப்பது அமர்க்களம்! காட்சியை அமைத்தவருக்கு ஒரு சபாஷ்! இதை youtubeஇல் தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை. வீடியோ இருந்தால் ரசிக்கலாம், யாராவது நல்ல மனம் upload செய்யுங்களேன்!

மீண்டும் பார்த்திருந்தால் ஒரு வேலை கொஞ்சம் நாடகத்தனம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் வேறு குறைகள் எதுவும் எனக்கு தெரிந்திருக்காது என்று தோன்றுகிறது.

பார்க்க வேண்டிய படம். 10க்கு 7.5 மார்க். B+ grade.

யுனெஸ்கோ லிஸ்ட்


யுனெஸ்கோ ஒவ்வொரு நாட்டிலிருந்தும் படங்களை அந்த நாட்டின் சினிமா மைல் கல்களாக தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்க லிஸ்டிலிருந்து 1980 வரைக்கும் வந்த படங்களையாவது பண்ணி இருப்பார்கள் போல தெரிகிறது.

இந்திய லிஸ்ட்.

  1. 1919, காளிய மர்தன். தாதா சாகேப் ஃபால்கே இயக்கம். ஊமைப் படம். கிருஷ்ணன் காளிங்கன் என்னும் பாம்பை அடக்கிய கதையாக இருக்கும்.
  2. 1925, பிரேம் சாயஸ். ஹிமான்ஷு ராய் இயக்கி நடித்தது. ஊமைப் படம். புத்தரைப் பற்றியது.
  3. 1935, தேவதாஸ். கே.எல். சைகல் நடித்து பி.சி. பரூவா இயக்கியது. ஹிந்தி. சைகலை ஒரு சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்
  4. 1936, அச்சுத் கன்யா. அசோக் குமாரின் முதல் படம். தேவிகா ராணி நடித்தது. ஹிந்தி. பிராமண அசோக் குமார் தலித் பெண்ணான தேவிகா ராணியை காதலிப்பார்.
  5. 1936, சந்த் துகாராம். வினாயக் டாம்லே இயக்கியது. மராத்திப் படம் என்று ஞாபகம்.
  6. 1939, புகார். சோரப் மோடி இயக்கி நடித்தது. சந்திரமோகன் உடன் நடித்தது. ஹிந்தி. ஜஹாங்கீரின் காலத்தில் நடக்கும் கதை.
  7. 1939, தியாக பூமி: கல்கியின் கதை, கே. சுப்ரமண்யம் இயக்கி, பாபநாசம் சிவன், எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா நடித்தது. தமிழ்.
  8. 1948, கல்பனா: உதய் ஷங்கர் நடித்து இயக்கியது. ஹிந்தியா, வங்காளமா என்று தெரியவில்லை. நடனக் கலைஞனின் கதை.
  9. 1948, சந்திரலேகா: டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன் நடிப்பு, எஸ். வாசன் தயாரிப்பு, இயக்கம். தமிழ்.
  10. 1951, ஆவாரா: நர்கிஸ், பிருத்விராஜ் கபூர் நடிப்பு. ராஜ் கபூர் நடித்து இயக்கியது. ஹிந்தி. இந்தியாவுக்கு வெளியே புகழ் பெற்ற படம் இதுதான்.
  11. பதேர் பாஞ்சாலி: சத்யஜித் ரேயின் முதல் படம். வங்காளம். உலக அளவில் தலை சிறந்த படங்களில் ஒன்று எனக் கருதப்படுவது.
  12. ப்யாசா: குரு தத் இயக்கி நடித்தது. வஹிதா ரஹ்மான் உடன் நடித்தது. ஒரு கவிஞனின் போராட்டங்கள்.
  13. மதர் இந்தியா: நர்கிஸ், சுனில் தத், ராஜ் குமார், ராஜேந்திர குமார் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது.
  14. மொகலே ஆஜம்: திலிப் குமார், மதுபாலா, பிருத்விராஜ் கபூர் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது. அனார்கலி கதை.
  15. சுபர்ணரேகா: ரித்விக் கடக் இயக்கியது. வங்காளம்.

யுனெஸ்கோவின் முழு லிஸ்ட் இங்கே.

நான் இவற்றில் சந்திரலேகா, ஆவாரா, ப்யாசா, மதர் இந்தியா, மொகலே ஆஜம் ஆகிய படாங்களை பார்த்திருக்கிறேன். ஆவாரா தவிர மற்ற படங்கள் பார்க்க வேண்டியவைத்தான். ஆவாரா கேட்க மட்டும்தான். ஆனால் தியாக பூமி? இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா? வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா? மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா? யார் இந்த லிஸ்டை தேர்ந்தெடுத்தது?

எனக்கு இன்னும் ஒரு poll set செய்ய தெரியவில்லை. தெரிந்தால் உங்கள் சாய்ஸ் என்ன என்று கேட்கலாம். என்னுடைய ரசனையில், ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள்:

சிறந்த 5 படங்கள்:

  1. கப்பலோட்டிய தமிழன்
  2. தண்ணீர் தண்ணீர்
  3. நாயகன்
  4. தளபதி
  5. தேவர் மகன்

6 மைல் கல்கள்:

  1. சந்திரலேகா
  2. நாடோடி மன்னன்
  3. வீரபாண்டிய கட்டபொம்மன்
  4. பதினாறு வயதினிலே
  5. நாயகன்
  6. ஜென்டில்மன்

5 பொழுதுபோக்கு படங்கள்:

  1. சந்திரலேகா
  2. ஆயிரத்தில் ஒருவன்
  3. தில்லுமுல்லு
  4. மைக்கேல் மதன காம ராஜன்
  5. பஞ்ச தந்திரம்

நான் முன்னமே சொன்ன மாதிரி இது ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள். நாளை நான் மாற்றலாம். உங்கள் சாய்ஸ் என்ன? படிப்பவர்கள் எல்லாம் எழுதினால் உங்கள் கருத்துகளை நான் கூட்டி கழித்து வேறு ஒரு போஸ்டில் பதிக்கிறேன்.