இரும்புத் திரை (Irumbuth Thirai)


“நெஞ்சில் குடியிருக்கும்” என்ற பாட்டை சின்ன வயதில் கேட்டதிலிருந்தே இந்த படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. பி. லீலாவின் இனிமையான குரலும், டி.எம்.எஸ்.ஸின் வெண்கலக் குரலும், எஸ்.வி. வெங்கட்ராமனின் இசையில் ஒரு சுகமான அனுபவம். சில சமயங்களில் சன் டிவியில் இரவு நேரங்களில் இந்தப் பாட்டைப் போடுவார்கள். அழகான வைஜயந்திமாலாவும், கம்பீரமான சிவாஜியும் பார்க்க அருமையாக இருக்கும். சில வருஷங்களுக்கு முன் இந்தப் படத்தின் Hindi version ஆன “பைகாம்” பார்த்தேன். இவை எல்லாம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டின. பல வருஷங்களாக ஆசைப்பட்டது இன்றுதான் நிறைவேறியது.

படம் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் மோசமும் இல்லை. சிவாஜி ஓவர் ஆக்டிங்தான் நடிப்பு என்று இன்னும் தீர்மானிக்கவில்லை. சாதாரணமாக நடித்திருக்கிறார். வைஜயந்திமாலா அழகாக வந்து போகிறார். சரோஜா தேவி, எஸ்.வி. ரங்காராவ், எஸ்.வி. சுப்பையா, தங்கவேலு, வசுந்தரா தேவி (வைஜயந்திமாலாவின் அம்மா) போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். Hindi-யில் சிவாஜிக்கு பதிலாக திலிப் குமார், எஸ்.வி. சுப்பையாவுக்கு பதிலாக ராஜ்குமார், எஸ்.வி. ரங்கா ராவுக்கு பதிலாக மோதிலால். ஜெமினி பிக்சர்ஸ் படம். எஸ்.எஸ். வாசன் தயாரிப்பு. Hindi பாடல்கள் எதுவும் என் மனதில் நிற்கவில்லை.

தமிழ் பாடல்கள் பிரமாதம். “நெஞ்சில் குடியிருக்கும்”தான் மாஸ்டர்பீஸ். “என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே” என்ற பாட்டை முதல் முறையாக இன்றுதான் கேட்டேன். பாட்டு ஒரு கீர்த்தனைக்கு சமானமாக இருக்கிறது. அப்புறம் பார்த்தால் பாட்டை எழுதியது பாபநாசம் சிவன், பாடியது ராதா ஜெயலக்ஷ்மி. “ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டு” பாட்டும் நன்றாக இருந்தது, வைஜயந்திமாலாவின் ஆட்டமும் சிறப்பாக இருந்தது. “படிப்புக்கும் ஒரு கும்பிடு” என்ற பாட்டும் நன்றாக இருந்தது. “எளிய மக்கள் தலையில் காசு ஏறி மிதிக்குது”, “ஏரு பூட்டுறவனும் இங்கிலிஷ் பேசுபவனும்” என்ற இரண்டு பாட்டுகளும் ஊர்வலத்தில் பாட ஏற்ற பாட்டுக்கள். ஒரு சுலபமான சந்தத்தில் அமைந்திருக்கின்றன. அந்தக் காலத்தில் தொழிலாளர்கள் பாடுவதற்கு பொருத்தமாக இருந்திருக்கும். தங்கவேலு நடிக்கும் lowbrow பாட்டுக்கள் மூன்று – “டப்பா டப்பா டப்பா டப்பா” என்ற பாட்டு தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் “தில்லாண்டோமரி டப்பாங்குத்து” பாட்டை ஞாபகப்படுத்துகிறது. “கையிலே வாங்கினேன் பையிலே போடலே” சில சமயங்களில் சன் டிவியில் போடுவார்கள். ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய பாட்டு அல்ல.

எனக்கு இதெல்லாம் சாதாரணமாக கண்ணில் படாது, ஆனால் “நெஞ்சில் குடியிருக்கும்” பாட்டில் வைஜயந்திமாலா அணிந்திருக்கும் நெக்லஸ் நன்றாக இருந்தது. என் மனைவியிடம் நேற்றுத்தான் இந்த ப்ளாகைப் பற்றி சொன்னேன். அவள் இதைப் படித்தால் இப்போது புன்முறுவலிப்பாள். 🙂 அனேகமாக எனக்கு phone செய்வாள்.

கதையும் சாதாரணக் கதைதான். எல்லாரும் அந்தக் காலத்தில் உள்ள stock காரக்டர்கள்தான். தொழிலாளிகளை ஏமாற்றும் முதலாளி ரங்காராவ், மிகவும் naive ஆன தொழிலாளி எஸ்.வி. சுப்பையா, அநியாயங்களை எதிர்த்துப் போராடும் சுப்பையாவின் தம்பியான சிவாஜி, ரங்காராவால் கைவிடப்பட்ட வசுந்தரா தேவி, ஏழை கதாநாயகியான வசுந்தராவின் பெண் வைஜயந்திமாலா, சிவாஜி கதாநாயகன் என்பதை தவிர அவரைக் காதலிக்க் வேறு காரணம் தேவைப்படாத சரோஜாதேவி – இதற்கு மேல் கதையை விவரிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். எனக்கு பிடித்திருந்த ஒரு காட்சி – வைஜயந்திமாலாவை சிவாஜி தனது பத்து வயதில் தன் அருகில் அமர்ந்த ஒரு பெண்ணைப் பற்றி சொல்லி வெறுப்பேற்றும் காட்சி – சுலபமாக யூகிக்கக் கூடிய விஷயம்தான், ஆனால் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது.

இன்னொரு விஷயம் சுவாரசியமாக இருந்தது. பி.ஏ. படித்து டைப்பிஸ்ட் ஆக வேலைக்கு சேரும் வைஜயந்திமாலாவின் சம்பளம் மாதத்துக்கு 300 ரூபாய். ஆலை நின்று விடாமல் இருக்க தேவையான ஸ்பேர் பார்ட் செய்து கொடுத்து தலைமை மெக்கானிக் ஆக வேலைக்கு சேரும் சிவாஜியின் சம்பளம் 150 ரூபாய்தான். தொழிற்சாலைக்கு இன்றியமையாத மெக்கானிக்கை விட பி.ஏ. பட்டத்துக்குத்தான் மதிப்பு அதிகம். 1960-இல் எடுக்கப்பட்ட படம் என்று நினைக்கிறேன். அன்றைய மதிப்பீடுகள் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அன்றைக்கு வேலைக்குப் போன யாராவது இது அந்தக் காலத்தில் உண்மைதானா என்று எழுதுங்களேன்!

பார்க்கலாம். சில பாட்டுக்களை இங்கு கேட்கலாம்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

பின்னூட்டமொன்றை இடுக