-
-
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாட்டில் எம்ஜிஆர், சரோஜா தேவி
-
-
நான் ஆணையிட்டால் பாட்டில் எம்ஜிஆர், நம்பியார், தங்கவேலு
-
-
நான் ஆணையிட்டால் பாட்டில் எம்ஜிஆர்
எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படங்கள் என்று ஒரு ஆறேழு தேறும். ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா, நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், அலிபாபாவும் 40 திருடர்களும் இந்த மாதிரி. பர்ஃபெக்ட் மசாலா. எம்ஜிஆருக்கு ஏற்ற கதை. இன்னும் பார்க்கக்கூடிய படங்கள்.
படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆர் சாட்டையை கையில் எடுத்துக் கொண்டு நான் ஆணையிட்டால் என்று பாட்டு பாடிக் கொண்டே நம்பியாரை விளாசும் காட்சியில் நமக்கும் நம்பியாரை விளாச வேண்டும் என்று தோன்றுகிறது. அதுதான் எம்ஜிஆரின் வெற்றி. இந்த திரைக்கதையின் வெற்றி. இந்த படத்தின் ஹைலைட்டே அந்த காட்சிதான்.
ஹிந்தியில் திலிப் குமார் நடித்து ராம் அவுர் ஷ்யாம் என்றும் தெலுங்கில் என்.டி. ராமராவ் நடித்து ராமுடு பீமுடு என்றும் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆனது. எனக்கு பிடித்தது தமிழ்தான். தெலுங்கும் பரவாயில்லை. ஆனால் ஹிந்தி பிடிக்கவில்லை. திலிப் குமார் ஒரு மாஸ் ஹீரோ இல்லை.
1965-இல் வந்த படம். எம்ஜிஆர், சரோஜா தேவி, நம்பியார், பண்டரிபாய், நாகேஷ், தங்கவேலு, மனோரமா, ரங்காராவ் நடித்தது. இன்னொரு ஹீரோயின் யார் என்று தெரியவில்லை ரத்னா என்று டோண்டு ராகவன் தகவல் தருகிறார். இவர் தொழிலாளி படத்திலும் எம்ஜிஆருக்கு ஜோடியாம். சுரேஷ் இவர் பின்னாளில் இதயக்கனி படத்திலும் நீங்க நல்லாயிருக்கோணும் பாட்டிற்கு ஆடி இருக்கிறார் என்று குறிப்பிடுகிறார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. வசனம் சக்தி கிருஷ்ணசாமியோ? விஜயா ஃபில்ம்ஸ்(நாகி ரெட்டி) தயாரிப்பு.
படம் ஒரு தங்கச் சுரங்கம்தான். அந்த ஓட்டம் ஓடியது. இன்றைக்கும் ரீ-ரிலீஸ் செய்தால் நன்றாக ஓடும் என்று நினைக்கிறேன். ஹிந்தி, தெலுங்கிலும் நன்றாக ஓடியது.
கதை வழக்கமான இரட்டையர்கள், ஆள் மாறாட்ட கதைதான். நம்பியார் ஒரு எம்ஜிஆரை கோழையாக, படிக்காதவனாக வளர்க்கிறார். அவரை மாப்பிள்ளை பார்க்க வரும் சரோஜா தேவி இந்த தத்தியை மணக்க முடியாது என்று மறுத்து விடுகிறார். அக்காவிடமும் அக்கா பெண்ணிடமும் மிகவும் பாசம் இருந்தாலும், அடி தாங்க முடியாமல் எம்ஜிஆர் வீட்டை விட்டு ஓடி விடுகிறார். கொஞ்சம் முரடனாக வளரும் இன்னொரு எம்ஜிஆர் சரோஜா தேவியின் கைப்பையை திருடனிடமிருந்து மீட்டுக் கொடுக்கிறார். சரோஜா தேவி மனம் மாறி எம்ஜிஆருடன் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நீ வர வேண்டும் என்று டூயட் எல்லாம் பாடுகிறார். கோழை எம்ஜிஆர் இடத்துக்கு போகும் இவர் நம்பியாரை சாட்டையால் அடித்து நான் ஆணையிட்டால் என்று பாட்டெல்லாம் பாடி வீட்டையும் ஆலையையும் ஒழுங்கு செய்கிறார். இதற்கிடையில் வழக்கமான ஆள் மாறாட்ட குழப்பம் எல்லாம் நடந்து, இவர்கள் சகோதரர்கள் என்று தெரிந்து, நம்பியார் வழக்கம் போல கடைசி காட்சியில் மனம் திருந்தி, சுபம்!
திரைக்கதை நன்றாக அமைக்கப்பட்டிருந்தது. முரடன் எம்ஜிஆர் ஹோட்டலில் ஒரு வெட்டு வெட்டிவிட்டு பிள்ளை கொடுக்காமல் நழுவிவிட, அங்கே வரும் கோழை எம்ஜிஆர் இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு எல்லாத்துக்கும் பில் அழும் இடம், எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா என்று கோழை எம்ஜிஆர் அப்பா அம்மா படத்தை பார்த்து அழ, வீரன் எம்ஜிஆர் என் இல்லை, நான் இருக்கிறேன் என்று அடுத்த சீனில் என்ட்ரி கொடுப்பது, ஸ்டண்ட் செய்ய சொன்னால் எம்ஜிஆர் ஹீரோவை துவைத்து எடுப்பது, சரோஜா தேவி ரங்காராவை கலாய்ப்பது, ரங்காராவ் ஒன்றும் தெரியாதவர் போல தலையாட்டுவது, வீரன் எம்ஜிஆர் சமையல்காரனை அடிப்பது, தங்கவேலு-நாகேஷ் கூத்துகள், நாகேஷின் ஸ்பூனரிசங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
எம்ஜிஆர் கலக்கிவிட்டார். அவருக்கென்றே அமைக்கப்பட்ட அருமையான திரைக்கதை. அவருக்கேற்ற வில்லன் நம்பியார். அவருடைய நம்பர் ஒன் ஹீரோயின் சரோஜா தேவி. அப்பா ரோலுக்கென்றே அவதாரம் எடுத்த ரங்காராவ். நல்ல நகைச்சுவை டீம். அற்புதமான இசை. அவருடைய இமேஜுக்கு ஏற்ற மாதிரி பாட்டு எழுதும் வாலி. பெரிய தயாரிப்பாளர். படம் பிரமாதம்!
நான் ஆணையிட்டால் பாட்டு படமாக்கப்பட்ட விதம் பிரமாதம். பார்க்க வேண்டிய பாட்டு இது. எம்ஜிஆருக்கென்றே எழுதப்பட்ட வரிகள். வீடியோ கிடைக்கவில்லையே!
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே, நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், மலருக்கு தென்றல் பகையானால் ஆகிய பாட்டுகள்தான் இப்போது நினைவுக்கு வருகின்றன. காலேஜ் நாட்களில் “அவன் காதலுக்கு பின்னால கல்யாணம் என்றே கையடிச்சான்” என்ற வரிகளை கேட்டு சிரி சிரி என்று சிரித்திருக்கிறோம். வாலிக்கு குசும்பு அதிகம்.
பாட்டுகளை இங்கே கேட்கலாம். இங்கே பார்த்த பிறகு பெண் போனால், கண்களும் காவடி சிந்தாகட்டும் ஆகிய பாட்டுகளும் நினைவுக்கு வருகின்றன.
பொதுவாக பாட்டுகளின் தரம் ஒரு எம்ஜிஆர் படத்தில் இருப்பதை விட கொஞ்சம் மட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நான் ஆணையிட்டால் பாட்டு கேட்க மட்டும் இல்லை, பார்க்கவும்தான். அதில் எம்ஜிஆர் மாடி மேல் ஏறுவதும், உடனே இறங்குவதும், ட்விஸ்ட் ஆடுவதும் – பார்ப்பவர்களுக்கு நம்மை காப்பாற்ற ஒரு தலைவன் வந்துவிட்டான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். அதே போல் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாட்டில் அவர் அப்படி ஸ்டைலாக பார்ப்பதும் ஆடுவதும் அபாரம்.
எம்ஜிஆரின் சிறந்த படங்களில் ஒன்று. பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B grade.
அண்மைய பின்னூட்டங்கள்